மக்கள்
தேவர்
நரகர்
எஸ்.
சங்கரநாராயணன்
அவளுக்கு வலி விட்டு விட்டு வந்தது. வயிறு நன்றாக சூல்
இறங்கியிருந்தது. மழை பொழிய மேகம் தயாராவது போல. இன்று நாளைக்கு எப்படியும் பிரசவம் ஆகிவிடும் என்றிருந்தது.
இறங்கியிருந்தது. மழை பொழிய மேகம் தயாராவது போல. இன்று நாளைக்கு எப்படியும் பிரசவம் ஆகிவிடும் என்றிருந்தது.
அவனுக்குத் தூக்கம் வரவில்லை. அம்மாவின் பக்கத்தில் வெறுமனே
கண்மூடிப் படுத்துக் கிடந்தான். இந்த நெருக்கடியில் அம்மா, கூட இருப் பது தெம்பாய்
இருந்தது. பிரசவம் அறிந்த ஒரு ஜீவன். அவளை அணைத்துக்கொண்டு படுத்துக் கிடந்தான். என்றைக்கும்
அவன் அவள் குழந்தை தான். எத்தனை வயதானால்தான் என்ன?
ஸீரோ வாட் பல்பில் ஒளி குதித்துக் கொண் டிருந்தது. கண்ணைத் திறந்து
பார்க்க அவன் படபடப்பை அது அதிகரித்தது. எப்போதும் எழுந்து கொண்டாக வேண்டி நேரலாம்
என்ற தயாருடனே அம்மாவும் அவனும் படுத்துக் கிடந்தார்கள்.
பூமாவால் கால்களைச் சேர்த்து நடக்க முடியவில்லை. நடந்தவாக்கில்
திடீர் திடீரென நின்றாள். உள்ளே வலித்திருக்க வேண்டும். அப்படியே ஆசுவாசப் படுவாள்.
சுவரைப் பிடித்துக் கொள்ளுவாள். உதட்டைக் கடித்துக் கொள்ளுவாள். அவன் உதவிக்கு ஓடிவந்து
அவனைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொள்வான். சிறிது கழிந்ததும் புன்னகையுடன் அவள் தொடர்ந்து
நடப்பாள், எதுவுமே நிகழாதது போல.
அவள் துடிப்பதைக் கண்டு அவனுக்குப் பதறியது. இந்த வலியிலும்
வேதனையிலும் அவனைக் குற்ற உணர்வு வாட்டியது. தன்னால் உதவ முடியாதா என்றிருந்தது. அம்மா
அவனைப் பார்த்து புன்னகைத்தாள். அவனுக்கு வெட்கமாய் இருந்தது.
“இந்த வலிதாண்டா உனக்கும் எனக்கும் பலமா முடிச்சிப் போட்டு வெச்சிருக்கற
பந்தம்...” அவனுக்குச் சிரிப்பு வரவில்லை. அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு எதுவும்
பேசத்தோன்றாமல் நின்றாள்.
மணி என்ன தெரியவில்லை. இரண்டுமுறை வலி வந்து தன்னைப்போல அடங்கி
விட்டது. உள்ளே குழந்தை வெளியே வர முண்டிவிட்டு, ஏதோவொரு அசதியில் மீண்டும் தூங்க ஆரம்பித்து
விட்டது போல. திடீரென்று அது மறுபடி விழித்துக் கொள்ளும். படுத்துக் கொண்டிருக்கிற
பூமா எழுந்து கொள்ள முடியாமல் படுக்கையைக் குடைவாள். தலை நசுக்கப்பட்ட பாம்பு போல அவள்
உடம்பைக் குறுக்கி விரிப்பாள். அவனுக்குப் பரிதாபமாய் இருக்கும். அழுகை வரும். சிறிது
கழிந்ததும் வலி அடங்கி தண்ணீர்ப்பம்பாய் உள்ளே அமுங்கிக்கொள்ள, அவள் அயர்ச்சியோடு தூங்க
ஆரம்பிப்பாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பான்.
வெளியே கும்மிருட்டாய்க் கிடந்தது. மழையிருட்டு. உள்ளேயிருந்த
நீர்த்த ஒளியை ஒரு விரோதத்துடன் அந்த இருட்டு முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதாய்த்
தோன்றியது. இந்த அகால வேளையின் அமைதியே அவனைக் கலவரப்படுத்தியது. வலி அதிகமாகி அவள்
ஆஸ்பத்திரிக்குப் போக விரும்பினால் இந்நேரம் ஆட்டோ கிடைக்க வேண்டும். கிடைத்தாலும்
வரவேண்டும். அவன் தலையை உதறிக் கொண்டான் - வீணே பிரச்னை பலூனை நாமே ஊதிவிட்டு வெடித்துவிடுமோ
என்று பயந்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
அருமையான டாக்டர். விஜயலெட்சுமியின் கை ராசியான கை. காசு பிடுங்கும்
ஆவேசம் கிடையாது அவளிடம். “குழந்தை உள்ள சுறுசுறுப்பா இருந்தாப் போதும்.. ஸ்கேன் அது
இதுவெல்லாம் வேண்டாம்” என்று புன்னகைத்த டாக்டரை அம்மாவுக்குக்கூட பிடித்திருந்தது.
“ஸ்கேன் பார்த்தா அப்பறம் குழந்தை ஆணா பொண்ணான்னு தெரிஞ்சிக்கத் தோணும்...”
“எந்தக் குழந்தையானாத்தான் என்ன?” என்று அம்மா திரும்பி அவனைப்
பார்த்தாள். மனைவியிடம் இல்லாமல் அம்மாவும் பிள்ளையுமாய் அதைப் பகிர்ந்து கொண்டது டாக்டருக்கு
வேடிக்கையாய்க்கூட இருந்தது.
டாக்டர் சொன்ன சேதிப்படி நாளைதான் பிரசவ நாள். அவள் கணக்கு ஏறக்குறைய
சரியாகவே இருக்கும். அதிகம் போனால் ஒருநாள் ரெண்டுநாள் முந்தலாம், பிந்தலாம். குறித்திருந்த
நாளுக்கு ஒருவாரம் முன்னால் ஒருமுறை அவளைப் போய்ப் பார்த்தால் வயிற்றைப் பார்த்தே பிரசவ
தேதியை அவளால் தப்பில்லாமல் சொல்ல முடிந்தது - அனுபவம்! ஒரு நாளைக்கு மூன்றுக் குக்
குறையாமல் பிரசவம் செய்வதில்லை. பிரசவ அறையில் பெரிய சுவாமி படம் வைத்து அங்கே எப்பவும்
விளக்கு எரிந்து கொண்டிருக்கும். கோவில் போல இருந்தது. பிரசவ அறை. அம்மாவுக்கு அந்த
டாக்டரைப் பிடித்துப் போய்விட்டது. நம்பிக்கைதான் டாக்டர்களின் பெரிய பலம், என்று நினைத்துக்
கொண்டான்.
பூமா அவன் தோளைத் தொட்டாற் போலிருந்தது. தன்னை மறந்து மன்சு
எங்கெங்கோ சஞ்சரித்தாலும் உள்ளூற இந்தக் கணத்தை அது எதிர்பார்த்திருந்தது. திடுக்கென்று
விழித்துக் கொண்டான். அவளுக்குத் திரும்பவும் வலியெடுத்திருந்தது. எழுந்து காலை விரித்துக்
கொண்டு உட்கார்ந்து கொண்டாள். ஒரு கையால் இடுப்பைப் பிடித்துக் கொண்டபடி பெரிசு பெரிசாய்
மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். இடுப்பு எலும்புதான் விரிந்து கொடுக்க வேண்டும்....
வில்லிலிருந்து அம்புபோல இடுப்பு எலும்புகளை விரித்து குழந்தை வெளிவர வேண்டும். “போலாமா,
கொஞ்சம் பாக்கலாமா பூமா?” என்று கேட்டான். அவள் மறுப்பதுபோலத் தலையாட்டியபடியே கண்ணை
மூடிக்கொண்டாள். அதற்குள் அம்மா விழித்துக் கொண்டாள். கூந்தலை அள்ளி முடிந்தபடியே
“இப்டி வாடா நான் பாத்துக்கறேன்..” என்று அவனை ஒதுங்கச் சொல்லி பூமாவின் வயிற்றை அமுக்கிப்
பார்த்தாள். “நல்லா நெகிழ்ந்திருக்கு... டாக்டர்ட்டப் போயிர்லாம்... அப்புறம் லேட்டானாலும்
ஆஸ்பத்திரிலயே இருக்கலாம்....
போ ஆட்டோ கூட்டிட்டு வா.”
வெளியே வந்து அந்த அந்தகாரத்தில் திகைத்துப் போனான். வாஸ்தவத்தில்
கருஞ்சாந்தாய் அப்பிக் கிடந்தது இருள். துளிக் காற்று இல்லை. மரங்கள் அசைவின்றி உறுத்துப்
பார்த்துக் கொண்டிருந்தன. அச்சுறுத்தியது அந்த அமைதி. என்ன இது, என்று திணறலாய் இருந்தது.
இந்த இரவில் ஆட்டோ கிடைக்குமா தெரியவில்லை. இவனது பரபரப்பான நடை பார்த்து நாய் ஒன்று
குரைத்தபடி கிட்டவந்து, உடனே சமாதான உடன்படிக்கையாய் வாலை ஆட்டியது. வேறு நேரமாய் இருந்தால்
அது கடித்துவிடுமோ என்று பயந்திருப்பான். அங்கே அவளுக்கு வலி எடுத்து விட்டது. அதுமட்டுந்
தான் ஞாபகத்தில் இருந்தது.
நர்ஸ் பூமாவை அழைக்க வாசலுக்கே வந்தாள். நர்சும் அம்மாவுமாய்
பூமாவைக் கைத்தாங்கலாய் இறக்க அவன் என்ன செய்ய என்று தெரியாமல் கையைப் பிசைந்தபடி நின்றான்.
நர்ஸ் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவனும் சிரிக்க நினைத்தபோது உதடு இழுத்துக்
கொண்டது.
நேரே பிரசவ அறைக்கே பூமாவை அழைத்துப் போனார்கள். ஸோ தட்ஸிட்
- அவன் திரும்பிப் பார்க்கும் போது டாக்டர் விஜயலெட்சுமி வந்து கொண்டிருந்தாள். மாடியில்
தான் அவள் குடியிருந்தாள். அதற்குள் எப்படி அவளுக்குத் தகவல் போனது, எப்படி அவள் எழுந்து
கொண்டாள் தெரியவில்லை. ஆச்சரியமாய் சந்தோஷமாய் இருந்தது. அவன் அவளுக்கு வணக்கம் சொன்னான்.
தலையசைத்தபடியே டாக்டர் பிரசவ அறைக்குள் போனாள். அவனுக்கு எல்லாம் துரிதமாய் சரியாய்
நடப்பதாய் தைரியமாய் இருந்தது. போய் பெஞ்சில் அம்மா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான்.
“நல்லவேளை, இப்ப சத்தைக்கி வேற கேஸ் எதுவும் இல்ல” என்றாள் அம்மா.
அதுகூட நல்ல விஷயமாய்த் தான் பட்டது. “எல்லாம் நல்லபடியா ஆவட்டும்... திருப்பரங்குன்றம்
போயி சுவாமிக்கு விளக்கு போட்டுட்டு வர்லாம்...” இவன் தலையாட்டினாள்.
உள்ளே என்ன நடக்கிறது தெரியவில்லை. உள்ளே யிருந்து பொட்டு சத்தம்
வெளியே சிந்தவில்லை. கதவுகளை இறுக்கமாக சத்தம் வெளிப்புகாமல் அமைத் திருந்தார்கள்.
கொஞ்ச நேரம் இருந்து விட்டு உட்கார முடியாமல் எழுந்து கொண்டான். கொஞ்சம் இப்படி நடந்து
கொண்டிருக்கலாம். சும்மா உட்கார்ந்தால் மனசு எதையாவது நினைத்துக் கலவரப் பட்டது. இங்குமங்குமாய்
நடைபழகினால் சற்று ஆசுவாசமாய் இருந்தது. நீள வராந்தாவில் பத்து பதினைந்து தப்படிகள்
நடந்து நடந்து திரும்பினான். சுவரில் மாட்டியிருந்த குழந்தைப் படங்கள் அவனைப் பரவசப்
படுத்தின. அழகழகாய் ஆங்கில வாக்கியங்கள் வேறு.
MY TOMORROWS ARE WITH YOU!
பைக்குள்ளிருந்து ஏதோ சுலோகப் புத்தகத்தை எடுத்து அம்மா வாசிக்க
ஆரம்பித்திருந்தாள். ரொம்ப நிதானமான அம்மா. மிகப் பெரும் பிரச்னைகளைச் சமாளித்த அம்மா.
அப்பா இறந்தபின் இரண்டு பிள்ளை களையும், ஒரு பெண்ணையும் பராமரித்து ஆளாக்கி கரையேற்றியவள்
அவள். ஒருவேளை முதல் பிரசவம் என்றால் அவளும் பதட்டப் பட்டிருக்கக் கூடும், என நினைத்துப்
புன்னகைத்துக் கொண்டான்.
திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருப்பது அலுப்பாய் இருந்தது.
கொஞ்சம் வெளிக்காற்றுக்கு ஆசுவாசமாய் இருக்கும் என்று தோன்றியது.
அமாவாசை வருகிறதா
என்ன தெரியவில்லை. வெளியே அப்படி இருட்டிக் கிடந்தது. நட்சத்திரங்கள் இல்லாத உம்மென்ற
வானம் ஆளை மிரட்டியது. அதைப் பார்க்க வாய்க்குள் பெரிய கல்லை வைத்து அடைத்தாற் போல
அவனுக்குத் திணறியது. ஒருவேளை நான்தான் எதையாவது போட்டு குழப்பிக் கொள்கிறேனா தெரியவில்லை.
மழை வரக் கூடும், அதுதான் இத்தனை இருட்டாய் இருக்கிறது, என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
ஒரு நட்சத்திரம் கூட இல்லை. பொட்டில்லாத நெற்றி போல அவனுக்கு அதைப் பார்க்க என்னவோ
போலிருந்தது. திரும்ப உள்ளே வரும்போது பரபரப்பு அதிகமாயிருந்தது. நேரே அம்மாவிடம் போய்
உட்கார்ந்தான், ஏதும் விஷயம் இருந்தால் சொல்வாள் என்று. அவள் ஒரு விநாடி நிமிர்ந்து
பார்த்து விட்டு திரும்பவும் சுலோகம் படிக்க ஆரம்பித்தாள்.
காத்திருந்தான். காத்திருத்தல் பெரிய இம்சையாய் இருந்தது. எதிர்பாராததை
எதிர்பார்த்துக் காத்திருத்தல். உள்ளேயிருந்து சத்தமேயில்லை. ஏன் இல்லை? ஒரு வேளை குழந்தை
அழும் சத்தம் கேட்டால் முகமெல்லாம் பூரிக்க வெளியே காத்திருக்கிறவர்கள் ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொள்ளலாம். நர்ஸ் வந்து சொல்லும் வரை எல்லாம்
பூடகமாய் இருந்தது. மூடுமந்திரமாய்
இருந்தது.
மழை இன்னும் வரவில்லை. மழை மூட்டத்துக்கு ஒரேயடியாய்ப் புழுங்கியது.
அத்தனையில் அம்மாவைப் பார்க்க ஆச்சரியமாய் இருந்தது. அம்மா இருக்கிறாள் என்பதே தெம்பாய்
இருந்தது. அப்பாவிடம் அவனுக்கு இத்தனை ஒட்டுதல் இல்லை. அப்பா அதிகம் பேசாதவர். ஆனால்
மென்மையானவர். அதிகம் பேசாதவரானதினாலேயே அவர் கண்டிப்பானவராய்த் தோன்றும். ஏதாவது பேசினால்
மென்மையாய் அவர் பதில் சொல்லுவார். இந்த சந்தர்ப்பத்தில், அப்பா, கூட இருந்திருக்கலாமாய்
இருந்தது அவனுக்கு.
நேரமாக நேரமாக அவனுக்கு பயம் குடைய ஆரம்பித்தது. இதென்னடா வம்பாகி
விட்டது, எங்கே போனாலும் கூடவே தொடர்கிற தெருநாயைப் போல, மூக்கைச் சுற்றி காதைச் சுற்றி
இம்சிக்கிற ஈயைப் போல..... திரும்ப எழுந்து கொள்வோமா... என நினைக்கையிலேயே நர்ஸ் வெளியே
வந்தாள். ஆகாவென அலையைப் போல எழுந்து கொண்டான். நர்ஸ் முகம் சிரிப்பாய் இல்லை. ஏன்?
என்னாயிற்று? பூமாவுக்கு என்னாயிற்று? குழந்தைக்கு என்னாயிற்று? என்னென்னவோ கேள்விகள்
உள்ளே, அந்த விநாடிக்கும் குறைவான நேரத்தில் உள்ளே பனிக்கட்டியைத் தூளாக்கிக் கொட்டினாற்போல
சிலிரென்றது.
அம்மா எழுந்து கொண்டாள். நர்ஸ் அம்மாவைப் பார்க்காமல், அவனிடம்
“நீங்க மட்டும் டாக்டரம்மா ரூம்ல இருங்க.... இப்ப வந்திருவாங்க” என்றபடி மீண்டும் பிரசவ
அறைக்கதவைச் சார்த்திக் கொண்டாள். அந்த சிறு திறப்பில் உள்ளிருந்து எதும் சத்தம் கேட்கிறதா
என்று காதைத் தீட்டிக்கொண்டு கேட்டான். சத்தம் எதுவுமில்லை. குழந்தை பிறந்து விட்டதா,
இல்லை, பிறப்பதற்கே சிக்கலா, ஒருவேளை குழந்தை இறந்தே பிறந்திருந்தால்... நினைக்கவே
நடுங்கியது. அம்மாவைப் பார்த்தான். அம்மா தலையாட்டி ஒப்புதல் அளித்துவிட்டு, திரும்பவும்
புத்தகம் வாசிக்க ஆரம்பித்தாள். அவளும் பயந்திருக்க வேண்டும். என் முன்னால் காட்டிக்
கொள்ளாமல் புத்தகத்துக்குள் மறைந்து கொள்கிறாள், என நினைத்துக் கொண்டான்.
மருத்துவர் அறைக்குள் அவன் புக, கதவு தானே சாத்திக் கொண்டது.
உள்ளே மாட்டிக் கொண்டாற் போலிருந்தது. என்னவோ விபரீதம். என்ன அது தெரியவில்லை. நீங்க
மட்டும் காத்திருங்கள், என்று நர்ஸ் அம்மாவைப் பிரித்து விட்டாள் அவனிடமிருந்து. அது
ஏன் தெரிய வில்லை. அவனுக்கு ரொம்ப பயமாய் இருந்தது.
தன்னை நிதானப் படுத்திக் கொள்ள முயன்றான். இப்போது என்ன ஆகிவிட்டது?
விவரம் என்ன தெரியாமல் கலவரப் பட வேண்டியதில்லை. எதானாலும் சமாளித்துத்தான் ஆகவேண்டும்.
அந்த மட்டுக்கு ஒரு விஷயம் புரிந்தது.... குழந்தை இறந்தே பிறக்கவில்லை. அதை அப்போதே
தாதி சொல்லியிருப்பாள். ஆனால்… ஆனால் இதில் அம்மாவிடம் மறைக்க ஒன்றும் இல்லை... அல்லவா?
டாக்டர் சீக்கிரம் வாருங்கள்.... என்னால் தாள முடிய வில்லை.
உள்ளேயே இருப்பது கலவரமாய் இருந்தது. வெளியே அம்மாவுடன் இருந்திருக்கலாம். மனிதர்கள்
கூட-இருப்பதே ஆறுதல். தனியே, இங்கே, நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? இங்கே என்ன
நடக்கிறது? மயங்கி விடுவான் போலிருந்தது. மூக்கில் ஓங்கி குத்து வாங்கினாற் போல தலை
கிறுகிறுத்துச் சுற்றியது. டாக்டர் வந்து என்னையே அட்டென்ட் பண்ண வேண்டியிருக்குமோ?
திடீரென்று கதவைத் திறந்து கொண்டு டாக்டர் வந்தாள். அவனுக்கு
அவள்
திடீரென உள்ளே நுழைந் ததே பகீரென்றிருந்தது. சட்டென்று ஒரு துள்ளலில் எழுந்து
நின்றான். டாக்டர் அவனது பதற்றம் கண்டு புன்னகைக்கக் கூட இல்லை. அவள் யோசனையாய் இருந்தாள்.
தலையாட்டி அவன் உட்காரச் சொல்லிவிட்டு அவள் அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.
“எஸ் டாக்டர்....” என்றான்.
“ம்” என்றாள் அவள். “மனசைத் தேத்திக்கணும் நீங்க... இட் மேநாட்
பீ எ குட் நியூஸ் பார் யூ...” என்றபடி ஆழமாய் அவனைப் பார்த்தாள். அவனுக்கு இதயம் எகிறிக்
குதிக்க ஆரம்பித்து விட்டது. குப்பென்று அந்த ஏ/சியிலும் வேர்வை கொப்பளித்தது. மரத்தைப்
புயல் உலுக்கினாற் போல. அவளுக்கு என்ன பதில் சொல்ல தெரியவில்லை.
“பிரசவம் ஆயிட்டதா டாக்டர்?” என்றான் மெல்லிய பயந்த குரலில்.
அவள் தலையாட்டினாள்.
“என்ன குழந்தை?”
“பெண்....” என்று திரும்பவும் அவள் பேசுவதை நிறுத்திக் கொண்டாள்.
பேசுங்கள் டாக்டர். விஷயம் என்ன, பிரச்னை என்ன, என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை...
அவள் சொல்லத் தயங்கத் தயங்க அவனது பயம் அதிகமானது. சாதாரணமாய் எந்த டாக்டரும் விபரீதத்தை
எடுத்துச் சொல்ல இத்தனை தயங்குவார்களா தெரியவில்லை.
”தாயும்’ சேயும் நலம்தானே?”
”நலம்தான்.... ஆனால்...” என்றவள், “என்கூட வாங்க” என்று திடீரென்று
எழுந்து கொண்டாள். அவனுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பைத்தியக்காரன் மாதிரி
அவள் பின்னால் ஓடினான். அம்மா எழுந்து நின்றாள். அவளைப் பார்க்க கூட நேரமில்லை. டாக்டர்
விறுவிறுவென்று முன்னால் போக, அவன் பிரசவ அறைக் கதவைத் திறந்துகொண்டு பின்னால் போனான்.
பூமா பிரசவ மயக்கத்தில் இருந்தாள். அந்த அறையும், அதில் மாட்டியிருந்த
கடவுள் படங்களும், ஊதுபத்தி சந்தன மணமும் அவனைத் திரும்பவும் சாதாரண மன நிலைக்கு இழுக்க
முயன்றன. “பிரச்னை என்னன்னா.... அதை எப்படிச் சொல்றதுன்னே புரியல எனக்கு.... ஐம் சாரி....
நீங்களே புரிஞ்சிக்கலாம்.... நர்ஸ்? சார் கிட்ட குழந்தை யைக் காமி” என்றாள் டாக்டர்.
பதறித் திரும்பிப் பார்த்தான்.
ஆ, என்று அந்த ஈட்டியைக் கண்ணில் செருகிக் கொண்டு நிற்கவே தடுமாறினான்.
தலைக்குமேல் ஐந்துமாடிக் கட்டடம் மடமடவென்று சரிந்து ஆளை அமுக்கினாற் போலிருந்தது.
என்ன குரூரமான காட்சி அது... அந்தக் குழந்தை... அதற்கு இரண்டு கையும் இல்லை. தோளிலிருந்து
கைகள் சிறு காரட் அளவுக்கே வளர்ந்திருந்தன. காரட் இலைகளைப் போல சிறுசிறு வளர்ச்சியற்ற
விரல்கள்.
நர்ஸ் நீட்டிய அந்தக் குழந்தையை அள்ளியெடுத்துக் கொள்வது என்றில்லை,
தொட்டுப் பார்க்கவே அவனுக் குச் சட்டென்று ஓர் அருவருப்பு வந்தது. கண்ணெல்லாம் தீப்பற்றி
எரிந்தது. திரும்பவும் அந்தக் குழந்தையைப் பார்க்கவும் அவனுக்குத் திராணியில்லை. அங்கே
நிற்கவே அவனுக்குக் கூசியது. உயிர் ஸ்தானத்தில் அடிவாங்கிய மாதிரி, உள்ளபடி மயக்கத்தில்
இருக்கிறானோ என்றே தெரியவில்லை.
“உக்காருங்க மிஸ்டர் பாலு” என்று அங்கிருந்த சிறு ஸ்டூலை நகர்த்தினாள்
நர்ஸ்.
டாக்டர் அவனைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டாள். “குழந்தை
இப்பிடி ஊனமாப் பொறக்கும்னு யாரால எதிர்பார்க்க முடியும்?” என்றாள். “ஐம் ரியலி சாரி....”
கண்ணில் துளிர்த்த நீருடன் அவன் தலையாட்டினான்.
“இவங்களுக்கு இன்னும் மயக்கம் தெளியல.... கொஞ்சம் மெதுவாத்தான்
கண்ணைத் திறப்பாங்க... செடேடிவ்வோட எபெக்ட் இருக்கும்” என்றாள் டாக்டர். “இங்க நீங்கதான்
இந்த விஷயத்தைப் பத்தி ஒரு முடிவு எடுக்கணும்..”
அவனுக்கு என்ன பதில் சொல்ல தெரியவில்லை.
“உங்க அம்மாவுக்குத் தெரியுமுன்னால், உங்க கருத்தைத் தெரிஞ்சிக்க
நான் ஆசைப்படறேன்...”
அவன் தலையாட்டினாள்.
“நான் சொல்றது உங்களுக்குப் புரியும்னு நினைக்கறேன். புரியுதா?...
இந்தக் குழந்தையை என்ன பண்ணப் போறீங்க?... உங்களுக்கு ஓரளவு சௌகரியமா இருக்கும்னுதான்
நான் பேசறேன்” என்று அவனைப் பார்த்தாள். அவனுக்கு என்ன பேச என்றே திணறலாய் இருந்தது.
இந்தக் குழந்தை பற்றி எத்தனை கனவுகள், ஆசைகள் அவனும் அவளும் வைத்திருந்தார்கள். இப்போது,
ஏதோ விபரீதம் என்ற யோசனையில், தானறியாமல் குழந்தையைப் பற்றி யோசிக்காமல், மனசுக்குள்
மனைவியைப் பற்றித்தான் பதறியது.
அந்தக் குழந்தையைத் திரும்பிப் பார்க்கவே அவனுக்குக் கூசியது.
அறிவால் அவன் தன் செயலுக்கு வெட்கப் பட்டான். பிரச்னை என்று பூதாகரமாய் வருகையில்,
பிய்த்துக்கொண்டு ஓடிவிடும் நினைப்பே, பிரதானமாய் என்னை ஆக்கிரமிக்கிறது, கூட அம்மாவேறு
இல்லை.
இந்தக் குழந்தை... அதன் எதிர்காலம் என்ன?
கட்டிலில் மூர்ச்சையாய் கிடக்கிறாள் பூமா. அவளுக்கு இன்னும்
விஷயம் தெரியாது. அவள் இதைத் தாங்குவாளா? ஒருவேளை அவள் அறியுமுன், நான் இந்தக் குழந்தைபற்றி
ஒரு முடிவு எடுக்க விரும்பலாம், என்று டாக்டர் எதிர்பார்த்திருக்கிறாள்... ஆ, அதுதான்
விஷயம். அவள் அறியாமல் எனக்கு மாத்திரமே தெரிந்த ஓர் இரகசிய முடிவு... குழந்தையை நான்
கொன்று விட்டு, (திடுக்கென்றது.) அவளிடம் குழந்தை இறந்தே பிறந்ததாகச் சொல்ல நான் ஒருவேளை
நினைக்கலாம், என்று டாக்டர் வாய்ப்பு அளிக்கிறாள்.
அவன் உடம்பில் ரத்தமே இல்லாத பலவீனத்துடன் டாக்டரைப் பார்த்தான்.
அந்தக் குழந்தை.... அதைத் திரும்.... ம்ஹூம், அதை மறுபடியும் பார்க்கவே அவனுக்கு தைரியம்
இல்லை. அதை வளர்த்தால் எப்போதும், கால காலத்துக்கும் எல்லாவற்றுக்கும் அது யாரையாவது
எதிர்பார்த்தே வாழ வேண்டியிருக்கும். முகஞ் சுளிக்கிற நபர்களையும், அது உதவிகேட்டு
இறைஞ்ச வேண்டி நேரிடலாம். அப்போது அது, என்னை ஏன் பெற்றார்கள், என்று எங்களை சபிக்கவும்
கூடும்..
ஐயோ, அவள் விழித்துக் கொள்ளுமுன் நானே ஏதாவது முடிவெடுத்து விட்டால்
நல்லது, என்று டாக்டர் நினைப்பது எவ்வளவு உண்மை. இருப்பினும் ஓர் உயிர், இப்போதுதான்
இந்த பூமியைப் பார்த்திருக்கிற உயிர், அதைக் கொல்வது... அவனுக்கு அந்த நினைப்பே குமட்டியது.
தவறு அது, கண்டிப்பாகத் தவறு. அம்மா, என் நிலைமையைப் பாத்தியா அம்மா?.... என்று அவள்
மடியைத் தேடி ஏக்கமாய் இருந்தது. அம்மா.... செய்தி அறிந்தால், நீ இதை எப்படி எடுத்துக்
கொள்வாய்?...
“வேற வழியில்லை மிஸ்டர் பாலு... நீங்கதான் முடிவெடுக்கணும்.
சீக்கரம் முடிவெடுக்கணும். இதுல நீங்க எந்த முடிவெடுத்தாலும் தப்பு கிடையாது. ஏன்னா,
பிரச்னை முழுக்க முழுக்க, உங்க சொந்தப் பிரச்னை...” என்றாள் டாக்டர்.
“குழந்தை பிறந்து சந்தோஷமா வாழப் போறதில்லை. ரெண்டு கையுமே இல்லை
அதுக்கு..” என்று நிறுத்தினாள். “பரவால்ல அதை நான் வளர்த்துக்கறேன்...னு நீங்க சொன்னா
வெல் அன்ட் குட். ஆனா காலம் பூராவும், அதோட காலம் பூராவும் அது யார் தயவுலயாவதுதான்
வாழணும்ன்றதை, நாம மறந்துறக் கூடாது....”
அவன் வேறெங்கோ பார்த்தபடி அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
டாக்டர் தொடர்ந்து பேசினாள். “எங்காவது அநாதை ஆசிரமத்துக்குக் கொடுத்திட்டு, மாசாமாசம்
பணம் கட்டலாம்..”
அவன் அவளைப் பார்த்தான். “பிரச்னை என்னன்னா, அந்தக் குழந்தை
நாளைக்கு இதை எப்பிடி எடுத்துக்கும்னுகூட யோசிக்கணும். உங்க சார்புலயும், உங்க மனைவி
சார்புலயும், இந்தக் குழந்தை சார்புலயும்.... நீங்க ஓராளே இப்ப அவசரமா முடிவெடுக்கணும்...”
“இது ரீதியா நீங்க தெளிந்த மனசோட எந்த முடிவு எடுத்தாலும், அதுதான்
சரியான முடிவா இருக்கும்... ஏன்னா, பிரச்சனையை நாளைக்குச் சமாளிக்கப் போறவர் நீங்கதான்.”
ரெண்டு கையையும் கன்னங்களுக்கு அண்டக் கொடுத்து உட்கார்ந்திருந்தான்.
வாயை அசைத்து, நாக்கைச் சுழற்றித் தன்னால் பேச முடியுமா என்பதே திகைப்பாய் இருந்தது.
டாக்டர் என்னென்னவோ பேசுகிறாள். பாதி புரிந்தது. ஆனால் அவள் பேசுவது ஏனோ அவனுக்கு வேண்டியிருந்தது.
அவள் பேசுவதை நிறுத்தி விட்டாளானால், அந்த மௌனம், அதுவே அவனைப் பாய்ந்து அமுக்கிவிடும்.
பேசாமல் குழந்தையைக் கொல்லச் சொல்லிவிட்டு, பூமாவிடம் குழந்தை
இறந்தே பிறந்ததாய்ச் சொல்லி விட்டால்... ஆயுசுக்கும் அது எனக்குள்ளேயே ரணமாய்க் கிளறிக்
கொண்டிருக்கும்.
“இதுல முக்கியமாக விஷயம் என்னன்னா,” என்றாள் டாக்டர். அவன் திரும்பிப்
பார்த்தான். “அடுத்தவங்க கிட்ட யோசனை கேட்டு இந்த விஷயத்துல நீங்க முடிவுக்கு வர முடியாது.
அது கூடவும் கூடாது...
ஏன்னா வேற யாராவது சொல்லி, பிறகு அந்த முடிவு உங்க முடிவு
இல்லன்னு,
நாளைக்கு நீங்க வருத்தப்பட வேண்டி யிருக்கலாம்...
இல்லியா?”
இவள் என்னைத் தெளிவாக்குகிறாளா, குழப்புகிறாளா என்றே தெரியவில்லை.
“இந்த விஷயத்துல யோசனை கேக்கறதுல ஒரு முக்கியமான ஆபத்து இருக்கு...
பிரச்னையைச் சாராதவங்க இது விஷயத்துல முடிவு சொல்றது சுலபம்... அவங்க பாரம்பரியச் சரடைக்
காபந்து என்ற பாவனையில், உதாரணமா.. உங்க அம்மாகிட்ட யோசனை கேப்போம்னு வெய்ங்க...”
அவன் கவனித்தான்.
“அவங்க ஒருவேளை அம்மாங்கற ஸ்தானத்தைத் தக்க வைச்சுக்கற பாவனையோட
வெறும் சென்ட்டி மென்ட்டலா உங்க கிட்ட பேசிறலாம்... திஸ் ஷுட் நாட் பி சிம்ப்ளி சென்ட்டிமென்ட்டல்....
ஆம் ஐ ரைட்?”
தலையாட்டினான். இத்தனை பெரிய பிரச்னைக்கு முடிவு சொல்ல, அவசரப்
பட வேண்டியிருக்கிறதே என்றிருந்தது. தனியே கண்ணை மூடிக்கொண்டு யோசிக்க வேண்டி இருந்தது.
அம்மாகூட இல்லாமல், மனைவிகூட இல்லாமல்… அவன் மாத்திரமேயான உலகம். அதில் ஒரு கேள்வி.
அதற்கு அவன் ஒரு பதில் சொல்ல வேண்டி யிருக்கிறது. உடனே. இப்போதே.... இதை நான் மட்டுமே
சமாளித்தாக வேண்டும். பயந்து ஆகப் போவது ஒன்று மில்லை. நான் யார், என் குணம் என்ன,
காலகாலத்துக்கும் ‘எனக்குப்’ பொருந்தும் படியாக இது குறித்து ‘என்’ தீர்வு என்ன? ஐயோ
எனக்கு ஏன் இதெல்லாம் நடக்கிறது... என்று நினைத்து நினைத்து மயங்குகிறதே தவிர, அறிவு
எந்த முடிவையும் தர மறுக்கிறது.
அம்மாவிடம் யோசனை கேட்பதில், டாக்டர் சொன்னாற்போல, “அடப்பாவி,
குழந்தையைக் கொல்றதா, சிவசிவா...” என்பதுபோல ஏதாவது சொல்லி, என்னை அவள் குழப்பி விடும்
ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. அவளா வளர்க்கப் போகிறாள், நான்தானே?... அவனுக்கே தான்
நினைப்பது பற்றி ஆச்சரியமாய் இருந்தது. டாக்டரைப் பார்த்தான். “அவளுக்குத் தெரியாமல்
இதுபத்தி முடிவெடுக்க நான் விரும்பல டாக்டர்..” என்றான். டாக்டர் தலையாட்டினாள்.
உங்க இஷ்டம், என்பதுபோல டாக்டர் கையை விரித்தாள். அவளே அயர்ந்திருந்தாள்
பாவம். குழந்தை கைகள் இல்லாமல் பிறக்கும் என்று அவளே எதிர்பார்த்திருக்க மாட்டாள்.
பூமாவிடம் சிறு அசைவு தெரிந்தது. ஓடிப்போய் அவளருகில் நின்றான்
அவன். தானறியாமல் கண்ணிலிருந்து கண்ணீர் ஆறாக வழிந்தோடியது. பாவம் இவள்... இவள் எப்படி
இதைத் தாங்கப் போகிறாள்.
பூமா விழிகளைத் திறந்தாள். முதல் பார்வைக்கு இவனைப் பார்த்ததும்
புன்னகைத்தவள், இவன் கன்ணீரைப் பார்த்து முகத்தைச் சுருக்கினாள்.
“என் குழந்தை எங்க?”
என்று பலவீனமாய்க் கேட்டாள்.
எழுந்துகொள்ள முயற்சித்தவளை, வேண்டாம் என்று சைகையாய் ஆசுவாசப்
படுத்திவிட்டு, நர்ஸ் குழந்தையைக் கொண்டு வந்து காட்டினாள். அவன் முகத்தைத் திருப்பிக்
கொண்டான். கொஞ்ச நேரம் யாருமே அங்கே பேசவில்லை. திடீரென்று பெருங் குரலெடுத்து அவள்
ஓவென்று அழ ஆரம்பித்தாள். அவனுக்கும் அழுகை கரையுடைத்துப் பொங்கியது.
டாக்டரும் நர்சும் காத்திருந்தார்கள். நர்ஸ் குழந்தையைத் தொட்டிலில்
கிடத்திவிட்டு வந்தாள். இன்னும் அம்மா மார்பில் முதல்பால் குடிக்காத
சிசு... நர்ஸ்
வருத்தமாய்த் திரும்பி வந்து நின்று கொண்டாள்.
அவன் கண்ணைத் துடைத்துக்கொண்டு பூமாவுக்காகக் காத்திருந்தான்.
அழுகை வற்றி பூமா நெஞ்சுப் படபடப்பு அடங்கும்வரை கண்ணையே திறக்காமல் கிடந்தாள். மெதுவாக
அவன் அவள் கையைத் தொட்டான். அவள் கண்ணைத் திறந்து பார்த்தாள். யாரும் பேசிக் கொள்ளவில்லை.
பேசவும் முடியவில்லை அவர்களால்.
அவள்தான் பிறகு கேட்டாள். “என்ன குழந்தை?”
“பொண்ணு”
“ஐயோ” என்றாள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, உடம்பு ஒருமுறை தூக்கிப்
போட்டது அவளுக்கு. “எப்பிடிங்க... அடுத்தவர் உதவி இல்லாம அதால... வயசாக ஆக ஆக... அவ
என்னங்க பண்ணுவா? அதுலயும் பொண்ணு ‘பெரியவளா’ ஆயிட்டா... முகஞ் சுளிக்காம யாருங்க அவளுக்கு
ஹெல்ப் பண்ணுவா? அதை அவளும் எப்பிடிங்க ஏத்துக்க முடியும்?...“
திடீரென்று அவள் குரல் வேறு மாதிரியாய் ஒலித்தது.
“கொன்னுருங்க” என்றாள் அவள். திரும்பி டாக்டரைப் பார்த்துக் கைகூப்பினாள். “டாக்டர்,
என் பொண்ணைக் கொன்னுருங்க... மாசாமாசம் அவகிட்ட சாபம் வாங்க முடி யாது என்னால.... என்
பொண்ணைக் கொன்னுருங்க.”
Comments
Post a Comment