சைலபதியின் புதினம் - தேவன் மனிதன் லூசிஃபர்


*
மனிதத்தைத்
தேடிப் புறப்பட்டவனின்
கதை:
*

முனைவர் கு. ஞானகுரு
துணைப்பேராசிரியர் தமிழ்த்துறை, 
தாகூர் கலைக்கல்லூரி, புதுச்சேரி-8.
 * *
காலத்தின் அவசர கதிக்குள் அறங்கள் முகமிழந்துவிட்டன. சக மனிதர்கள், அவர்களின் உணர்வுகள், அவர்களுடனான உறவுக் கலப்புகள் இவை எல்லாவற்றிலிருந்தும் ஏதோ ஒரு காரணத்தைக் கண்டறிந்து விலகிவிடத் துடிக்கிறது மனித மனம். தனக்குள் தன்னைக் குறுக்கி தனக்கான உண்மைகளை நியாயப் படுத்தியபடி முன் நகர்கிறான் அவன். ஏற்கனவே சொல்லப்பட்ட பேருண்மைகளைக் கடந்து, தனக்கான வழிகளை உருவாக்கிக் கொள்கிறான் அவன். சமூகம் சிறக்க அவனிடம் எந்தத் திட்டமோ, அவாவோ, முயற்சியோ இல்லை. அவன் அதை விரும்பவும் இல்லை. நிறைவின்மையின் விளிம்பில்தான் எப்போதும் அவனின் நிற்றல் தொடர்கிறது. எல்லாத் தருணங்களிலும், எல்லாவற்றையும் விமர்சிப்பதனூடாக தேவனாகிவிட முடியும் என்கிற நம்பிக்கையில் திளைக்கிறான் அவன். ஆனால், அது எப்போதும் சாத்தியமாகாது. காலம் அவனுக்குப் பொறுப்பை உணர்த்தும் என விடை பகர்கிறார் சைலபதி.
* *


முன்னுரை:

இப்பெருவெளிப் பரப்பை நிர்க்கதியாக விட்டுச் செல்ல மனமில்லாத தேவன், மனித இனத்தைப் படைத்து, தனது பாவக் கணக்கைத் தொடங்குகிறார். உண்மையாக இருந்த லூசிஃபரை பாதாளத்தில் தள்ளியதன்மூலம், இப் பூவுலகில், நிரந்தரமாகப் பாவத்தை விதைக்கிறார். பல்கிப் பெருகிய பாவங்களுக்குத் தானே முன்வந்து, ரத்த சாட்சியாக மரித்து, மூன்றாம் நாள் உயிர்ப்படைந்து, மானுடம் மீண்டெழ, ஒரு நெடிய பயணத்தைத் தனது சீடர்களினூடாகத் தொடங்கி வைக்கிறார். ஆழமாக வேரூன்றி, பல கிளைகளாக விரிந்து, பலமாகக் கட்டப்படுகின்றன திருச்சபைகள். ஆனால், தேவன் நினைத்திருந்த தூய ரட்சிப்பும், மானுட அன்பும் இத்திருச்சபைகளாலேயே நசுக்கப்பட்டு, கேலிப்பொருளாகிவிடும் என்பதை அவர் ஒருபோதும் எண்ணிப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்த அசாதாரணமான வெளியில், மனிதத்தைத் தேடிப் புறப்படுகின்றான் ஒருவன். அவனின் தேடலும், கண்டடைவுமே, ‘தேவன் மனிதன் லூசிஃபர்’ என்னும் படைப்பாக்கம்.

தூத்துக்குடி மாவட்டத்தைப் பின்புலமாகக் கொண்டச் சைலபதி, சமூகத்தின் இடுக்கில் கோரைப் பற்களுடன் ஒளிந்துகொண்டு, கணத்திற்குக் கணம் மனித நேசிப்பைக் குதறிக் கொண்டிருக்கிற சமூக அவலத்தை, அதன் சூட்சுமங்களை, ஆரவாரமற்ற முறையில் அவிழ்க்க எத்தனித்ததன் வெளிப்பாடே இப்படைப்பு. நிறைவற்று, நிலையில்லாது நீண்டுகொண்டிருக்கும் மனிதத் தேடல்கள் இறுதியாகச் சென்றடைய வேண்டிய இடத்தைச் சுட்ட முனைகிறது இப்புதினம். அவன் தேட விழைவது எது? அது கண்டடையப் பட்டதா?... என்கிர வினாவிற்கு விடை பகர்வதை மைய நோக்கமாகக் கொள்கிறது இக்கட்டுரை.

மதம் என்கிர மனித எதிர்மை:

நிகழ்கால சமூக அரசியலில், மிகப்பெரிய மனித அழிவைக் கட்டவிழ்த்துள்ளவை மதமும் மத போதனைகளுமே. இறைவன் போதித்தவைகளாகச் சொல்லப்படுகிறவைகளுக்கு எதிரானவற்றையே மதவாதிகள் செய்கின்றனர். மனித நேயத்தைக் கிஞ்சிற்றும் தங்களின் வாழ்வில் கடைப்பிடிக்க அவர்கள் தயாராக இல்லை. போலித்தனங்களையும், பொய் புரட்டுகளையும் அங்கிகரித்து, மெய்களை, தங்கள் அருகில் அண்டாமல், கவனமாகப் பார்த்துக் கொள்கின்றனர். இந்நிறுவனம் வலுப்பெற, எல்லோரும் சகலவற்றையும் தியாகஞ் செய்யத் துணியவேண்டும். கேள்வி கேட்க எவருக்கும் உரிமை இல்லை. அவரவர்களின் காணிக்கைகளுக்கேற்ப அளக்கப்படுவார்கள். பாவக் கணக்கு குறையும். இத்தகு சூழலில்தான், ஒரு பண்பாட்டுக் கலப்பினைக் கட்டமைப்பதனூடாக, மனித மீட்சியை மீட்டுவிட இயலும்  என்கிற உந்துதலை பக்குவமாக, பக்கச் சார்பற்றநிலையில், தன் புதினத்தின் மைய இழையாக்கியிருக்கிறார் சைலபதி.

உச்சபட்ச அவமானங்களை, ரணங்களை, வேதனைகளை, வலிகளைக் கடந்து, சகித்து தங்களின் வாழ்தலினூடாக மேம்பட்ட தேடல் உடையவனாக மனிதனை மாற்றிவிட வேண்டும் என்கிற முயற்சியில் இறுதிவரை போராடிப் பார்க்கிறார்கள் சைலபதியின் கதை மாந்தர்கள். ஆனால், வருவாய்ப் பெருக்கம் அதனூடான ஆலய விரிவாக்கப் பணிகளை முதன்மைப் படுத்தி, மனிதப் பண்படுத்தலை புறந்தள்ளுகிறது மதம். அதிகாரம் மிக்க தலமை பீடத்தைக் கைப்பற்ற, சாமானியர்கள், குற்றவாளிகளாக்கப்பட்டு, திருச்சபைகளுக்கு வெளியே தூக்கி எறியப்படுகிறார்கள். உண்மையை உரத்துப்பேச ஆலயங்களினுள் அனுமதி இல்லை. வெற்றுச் சடங்குகள் முன்னிலைப்படுத்தப்பட்டு, மனித இறைநாட்டம் கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது. இந்த சமூக ஒழுங்கின்மைகளை, மனித இருப்பின் அவலங்களை அம்பலப்படுத்த, பாஸ்டர் ஜீவானந்தம் என்கிற லட்சியக் கதைமாந்தரை, சாத்தான் என்கிற கற்பனைக் கதைமாந்தரை, ஹரி என்கிற யதார்த்தக் கதைமாந்தரை வார்க்கிறார் சைலபதி. இம் மூவரோடும் பிணைக்கப்பட்டிருக்கிற உறவுகளுடனான அவர்களின் ஊடாட்டங்கள், எதிர்கொள்ளும் பிரச்சனைகள், கண்டடையப்படும் தீர்வுகள் என விரிகிறது இப்புதினம்.

தேவன் எழுப்ப நினைத்த ஆலயம்:

மனிதனுக்குள் அன்பை விதைத்துச் சமாதானத்தை மலரச் செய்து, அதனூடான சமூக ஈடேற்றத்தினை எதிர்பார்த்தார் தேவன். ஆனால், அவரையே சிலுவையில் ஏற்றியது மனிதகுலம். இந்த இயேசு காவியத்தை எழுதிக் கொண்டிருக்கும் சாத்தான், தேவன் எழுப்ப நினைத்த ஆலையத்தின் உண்மைப் பொருளை உணர்ந்த மனிதராக பாஸ்டர் ஜீவானந்தத்தைப் பார்க்கிறான். நியாயமான உபதேசத்தின் காரணமாக திருச்சபையிலிருந்து குற்றவாளியாக தண்டிக்கப்பட்டு வெளியேறும் பாஸ்டர் ஜீவானந்தம், புதுச் சபை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவருடன் பலமுறை உரையாடி, உண்மை ஊழியத்தின் மறைபொருளையும், அதன் இன்றைய தேவையையும்  அறிகிறான் அவன்.

“சாத்தான் தெரிந்தோ தெரியாமலோ நீ உண்மை ஊழியத்தின் சபைன்னு சொன்னியே! அதுதான் என் கனவு. ஆரம்பத்துல நிச்சயமா ஒருத்தர்கூட என்னோட போராட வருவாங்கன்னு நான் நினைக்கல. ஆனா இன்னைக்குப் பாத்தியா ஆறு பேரு! ஆறுபேரும் ஆர்வமா இருக்காங்க. என் ஜெபம் எல்லாம் ஆண்டவர் இவங்க கூட இருந்து இவங்க நல்ல மாதிரிகளா வரணும். இவங்களால அநேகம்பேர் நல்வழிக்குத் திரும்பணும். இந்த ஆறு பேர் ஆறாயிரம் பேரா மாறணும். இந்த நகரமே நல்லவர்களைக் கண்டு பயப்படணும். அதுதான் என் லட்சியம். நிச்சயம் இதை முன்வைச்சு ஒரு சபை வரணும். ஏன்னா ஏற்கனவே இருக்கிற அமைப்புகள்ள சில மாற்றங்கள் வேணும். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில இருக்கிற மதத்தைக் கொஞ்சம் பழுது பார்க்கணும். மதவாதிகளோட சட்டங்களைக் கொஞ்சம் கழட்டி ரிப்பேர் செய்யணும்.’
{பக் : 204.}

பாஸ்டர் ஜீவானந்தத்தின் மொழிகளோடு, தன் தந்தை கூறியவற்றையும் நினைவுபடுத்திப் பார்க்கிறான் சாத்தான்.


“மனுஷன மனுஷன் அன்பா நடத்துறதுதான் பிரதானம். மக்கள் மேல அன்பாயிருக்கிறது தான் ஊழியம்! சுயநலமில்லாம இருக்கிறதுதான் கிறிஸ்துவோட வழி! அநியாயத்தக் கண்டு பொறுத்துக்காம இருக்கிறது ஆண்டவரோட குணம்! அன்பு அன்புங்கிறோமே இயேசு சாமியே, சாட்டையை எடுத்து அடிச்சு விரட்டீயிருக்கார்! யார? அவரோட கோயில தன்னோட பிழைப்புக்காகப் பயன்படுத்தினவங்கள! அது மாதிரி  அக்கினியா இருக்கணும்.”
{பக் : 152.}

மேலும், பாஸ்டர் ஜீவானந்தம் விரும்பிய சமூக மாற்றத்தினை நிகழ்த்த, மனிதனை எவ்வாறு நகர்த்திச் செல்வது என்பதையும் பின்வரும் பகுதிகள் உணர்த்துகின்றன.

“இன்றைய காலத்தின் தேவை அன்பு ஒன்றுதான் சாத்தான். சகமனிதன் மேலான அன்பு. இந்த உலகத்தில் ஒருவன் பசியால் சாகையில் மற்றொருவன் சுகபோகங்களில் திளைக்கின்றானே! இது என்ன மாதிரியான மனநிலை. காட்டுவிலங்குகளுக்குச் சொல்லும் வலியதில் வலியது வாழும் என்கின்ற சித்தாந்தத்தை மனிதர்கள் கைக்கொண்டு உலகை ஒரு சுடுகாடாக மாற்றுவது எப்படி சரியாகும்?’ {பக் : 218.}

“மனிதர்களுக்குள்ளாக தேவனின் தன்மையும் லூசிஃபரின் தன்மையும் சாத்தானின் தன்மையும் இருக்கிறது. இந்தக் காலத்து ஊழியம் என்பது, மனிதருக்குள்ளாக இருக்கும் சாத்தானுக்கு எதிராக அவனுக்குள்ளாக மறைந்திருக்கும் தேவனை அறிமுகப்படுத்துவதுதான். சாத்தானிலிருந்து லூசிஃபர், லூசிஃபரிலிருந்து கர்த்தர் என ஒவ்வொரு கட்டமாக மனிதனை மாற்றுவது.’ {பக் : 219.}

இப்படியாக, மனிதருக்குள் இருக்கிற மனிதத்துவத்தைக் கட்டி எழுப்புகிற ஒன்றாகத்தான் மதம் செயலாற்றவேண்டும் என்கிற சலபதியின் எண்ணம் புலனாகிறது.

நெருக்கடியும் தேர்வும்:

வாழ்க்கையைச் சிக்கலில்லாமல் நகர்த்திச் செல்ல மனிதன் மேற்கொள்கிற முயற்சிகள், பல நேரங்களில், நெருக்கடிகளையே அவனுக்குத் தந்துவிடுகின்றன. நிரந்தர தப்பித்தலுக்கு வழிதேடி, அதில் தோற்று, அப்போதைக்கு மட்டுமான மார்க்கம் ஒன்றைக் கண்டறிந்து ஆசுவாசமடைகின்றான். மீண்டும் அச்சிக்கல் தலைதூக்க, அவன் அதுகாறும் பற்றியிருந்த அடையாளங்களை விடுத்து, இன்னொன்றைப் பற்றிக் கரையேற எண்ணுகின்றான். தேர்ந்தெடுப்பின் பிந்தைய விளைவுகள் குறித்த எந்தச் சலனமும் அற்றவனாக வாழ, தன்னைத் தயார் செய்துகொள்கிறான் அவன். ஆனாலும், நின்று நிதானிக்க, காலம் அவனுக்கு வாய்ப்பளிக்க மறுக்க, அங்குமிங்கும் முட்டிமோதி, உடைந்துநொறுங்கி, சுற்றிச்சுழன்று, தன்னிலையிழந்து தனக்கான மீட்பரைத் தேடுகின்றான். தனக்கான வழிகள் தன்னால்தான் அடைக்கப் பட்டன என்பதை அப்போதுதான் அவன் உணரத் தொடங்குகிறான். ஆனால், அவனை அவ்வாறு செய்ய ஊக்குவித்தவை, சமூக விழுமியங்களே என்பதை நாம் ஈண்டு சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. அவற்றுள், சக்தி மிக்கதாகவும், கொடூரமானதாகவும் திகழ்வது மதம். தான் பற்றிய கொழுகொம்பினூடாக ஒரு லட்சிய வாழ்க்கையை வாழ்ந்துவிடத் துடிக்கும் மனிதனைத் தொடர்ந்து காயடித்துக் கொண்டிருக்கிறது அது.

மனிதக் கடைத்தேற்றலுக்காக அவனாலேயே உருவாக்கப் பட்ட அது, சத்தமின்றி அவனைக் கொன்றழித்துக் கொண்டிருக்கிறது. அன்பையும், நேர்மையையும், இரக்கத்தையும் தன்னுள் விதைத்து, தூய இருதயத்தை உறுதிப் படுத்துகிற ஒரு செயலியாக அது இருக்கப் போகிறது என்கிற நம்பிக்கை, அதன் உள்ளீடுகளால் தகர்க்கப் படுகையில், மனிதன் துவண்டு விடுகிறான். பிராமண இளைஞன் ஹரி, தனது வாழ்க்கயை ஏற்றமிக்கதாக அமைத்துக்கொள்ள, பழைய அடையாளங்களைத் துறந்து, கிறிஸ்துவத்தைத் தழுவுகிறான். அவன் எதிர்பார்ப்பு பூர்த்தியாகிறது. ஆனாலும், அவனின் வறட்டுத்தனமான இறை நம்பிக்கை, தூய காதலை நிராகரிக்க உந்தித் தள்ள, நாளடைவில் மனப்பிறழ்வடைகிறான். அவன் அதுகாறும் நம்பியிருந்த ரட்சிப்போ, திருச்சபையோ அவனைக் காப்பாற்றவுமில்லை; கண்டுகொள்ளவுமில்லை. இந்நிலையில், உண்மையான மானுட அன்பைப் புரிந்துகொள்ள இயலா நிலைக்கு ஹரி தள்ளப்பட்டதன் பின்புலத்தை, மிக நேர்த்தியாகப் பதிவு செய்கிறார் சைலபதி.

“ஹரியிடம் நம்பிக்கையிருக்கிறது. காரணம் அவனிடம் இப்பொழுது பணம் இருக்கிறது. அவன் இவையெல்லாம் கர்த்தர் தந்தது என்று  நம்புகிறான். அவனுக்குச் சொல்லப்பட்ட போதனைகளும் அதுதான். கர்த்தர் அதைத் தருவார், இதைத் தருவார் என்று வளர்ந்த வைராக்க்கியக்காரன் ஹரி. ஆனால், கர்த்தர் மீதான அன்பு என்பது தனியான ஒன்று அல்ல. நாம் பார்க்கின்றவர்கள் மேல் செலுத்துகிற அன்பு. பழகுகிறவர்களிடம் வைக்கிற பாசம். இதெல்லாம்தான் என்பதை அவனிடம் யார் சொல்வது?” {பக் : 174.}

“பிரச்சனை ஹரியுடையதுமல்ல! கர்த்தருடையதுமல்ல! சபை என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஊழியர்களுடையது! ஒரு சபையின் உறுப்பினன் அந்தச் சபையின் குடும்பத்து உறுப்பினன் இல்லையா? அவன்மேல் அக்கறையும் அடையாளமும் கொண்ட ஊழியக்காரர்கள் இருக்க வேண்டாமா! ஏற்கனவே இருக்கும் கிறிஸ்தவர்களையே கவனித்துக் கொண்டிருந்தால் புதிதாய் வருபவர்களை யார்தான் வழிப்படுத்துவது? வெளிப்படையாகப் பேசி சிக்கல்களைத் தீர்க்கும் அமைப்புகள் சபையில் வேண்டும். அப்படி ஒன்று வரும்போது ஹரி போன்றோரின் சிக்கல்கள் குறையலாம்.’
{பக் : 190.}

இவ்வாறு, மதத்தைத் தாண்டிய மனிதத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் சைலபதியின் தேடல்/விருப்பம் புதினம் முழுமையும் ஓங்கி ஒலிக்கிறது.

கண்டடைவின் நிறைவின்மை:

காலத்தின் அவசர கதிக்குள் அறங்கள் முகமிழந்துவிட்டன. சக மனிதர்கள், அவர்களின் உணர்வுகள், அவர்களுடனான உறவுக் கலப்புகள் இவை எல்லாவற்றிலிருந்தும் ஏதோ ஒரு காரணத்தைக் கண்டறிந்து விலகிவிடத் துடிக்கிறது மனித மனம். தனக்குள் தன்னைக் குறுக்கி தனக்கான உண்மைகளை நியாயப் படுத்தியபடி முன் நகர்கிறான் அவன். ஏற்கனவே சொல்லப்பட்ட பேருண்மைகளைக் கடந்து, தனக்கான வழிகளை உருவாக்கிக் கொள்கிறான் அவன். சமூகம் சிறக்க அவனிடம் எந்தத் திட்டமோ, அவாவோ, முயற்சியோ இல்லை. அவன் அதை விரும்பவும் இல்லை. நிறைவின்மையின் விளிம்பில்தான் எப்போதும் அவனின் நிற்றல் தொடர்கிறது. எல்லாத் தருணங்களிலும், எல்லாவற்றையும் விமர்சிப்பதனூடாக தேவனாகிவிட முடியும் என்கிற நம்பிக்கையில் திளைக்கிறான் அவன். ஆனால், அது எப்போதும் சாத்தியமாகாது. காலம் அவனுக்குப் பொறுப்பை உணர்த்தும் என விடை பகர்கிறார் சைலபதி.

பாஸ்டர் ஜீவானந்தம் தாக்கப்பட்டு இறக்குந் தருவாயில், தனது புதிய லட்சிய சபையை சாத்தானிடம் ஒப்படைத்துவிட்டு இறக்கிறார். அவனால்தான் அந்தச் சபையை வலுவாக வளர்த்தெடுக்க இயலுமென நம்புகிறார். கேள்விகளோடு தன் வாழ்க்கயை அதுகாறும் நடத்திவந்த சாத்தான், பெரும் பொறுப்பைச் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறான். எதிர்பார்க்காத இந்த நிகழ்வு, அவனை தேவனாகும் முயற்சியில் கண்டிப்பாக உந்தவே செய்கிறது. அவனே இனி வெளிச்சமாகப் போகிறான் எனும்போது, நமக்கு ஏற்கனவே பழகிப்போன, சாத்தான் வேதம் ஓதுதல் என்கிற கருத்தாக்கம், இப்புதினத்தினூடாக சுக்குநூறாக்கப் படுகிறது.

காலம் காலத்துக்கான ஒரு மாதிரியை அவர் உருவாக்குகிறார். அவர்களோடு இருக்கிறார். அவர்கள் மரணத்திற்குத் துணிந்து மக்களின் விடுதலைக்காய் பாடுபடுவதற்குத் துணை செய்கிறார். அவர்கள் காலத்தில் அவர்கள் சாகவும் சாகிறார்கள். ஆனாலும் அவர்களுக்குப் பின் அவர்கள் போட்டுவைத்த வழியில் அநேகம்பேர் நடக்கிறார்கள். அது தேவனில் வழியாக இருக்கிறது.’
{பக் : 210.} என தனது இயேசு காவியத்தை நிறைவு செய்கிறான் சாத்தான்.


“சாத்தான் முடிந்தவரைக்கும் தான் மாறாமல் தன் இயல்பு மாறாமல் இருக்கப் பார்க்கிறான். எப்போதும்போல காலம் மட்டும் தான் தொடர்ந்து ஜெயிக்கும் ஆட்டக்காரன். சாத்தான் கேள்விகள் மட்டும் கேட்டுக் கொண்டும் பொறுப்புக்கள் ஏற்காமல் விமர்சித்துக் கொண்டும் வாழ்க்கை முழுமைக்கும் இருந்துவிட நினைத்தால் அது நடக்குமா?’ {பக் : 220.}

எல்லோருக்குமான வினாவாக இதை முன்வைக்கும் சைலபதி, தவறுகளிலிருந்து திருந்த ஒரு ‘மாதிரி‘ கிடைத்து அவன் முதல் அடி எடுத்து வைக்கிற பட்சத்தில், கண்டிப்பாக அவனைப் பின்தொடர மனித குலம் தயாராகும் என நம்பிக்கை வித்தைப் பதியமிடுகிறார். அத்துடன், கூர்ந்து அவதானித்துக் களையப்பட வேண்டிய மதத்தின் பின்னுள்ள அரசியலையும் தோலுரித்துக் காட்டுகிறார் சைலபதி.

முடிவுரை:

சமகால சமூக ஜனநாயகத்தில், அதிகார மையப் புள்ளியாகிப்போன மனிதத்தை நிராகரிக்கிர மதவாதத்தை, தனது புதினத்தின் கருவாக்கிக் கொண்டதன்மூலம், கவனிக்கப்பட வேண்டிய படைப்பாளியாகி விடுகிறார் சைலபதி. அவரின் ஆர்ப்பரிப்பற்ற சனாதனத்தின் குரலை புதினம் நெடுகிலும் கேட்க முடிகிறது. யதார்த்த வாழ்வின் இருண்ட தருணங்கள், கடக்கப்பட வேண்டிய, கிழிக்கப்பட வேண்டிய, எதிர்நீந்தி மீண்டேற வேண்டிய திறவுகோலாக மாறும் என்பதை உரத்துச் சொல்கிறார் சைலபதி. மனிதனுக்குத் தேவன் தரவந்த விடுதலயை லூசிஃபர் அளித்து அரவணைக்கிறான். அறிவாகிய வெளிச்சத்தை எல்லோருக்குள்ளும் கடத்திவிட வேண்டும் என்பது அவனது விருப்பமாக இருக்கிறது.

அவனது பயணம் நெடியது; முடிவற்றது. மனிதம் மனிதனைத் தாண்டி எங்கும் போய்விடவில்லை. அவனுக்குள்ளே அவன் அறியாதவாறு ஒளிந்துகொண்டுள்ளது. மதத்தின் பிடியிலிருந்து அதை மீட்டெடுக்க முயன்றதன் வெளிப்பாடே இப்புதினம். நேர்மையை, அன்பை, இரக்கத்தை முதன்மைப் படுத்திய பாஸ்டர் ஜீவானந்தத்தின் புதிய சபைக்கு வருபவர்களின் அதிகரிப்பு, மகத்தான மனிதத்துவம் மீளவும் மலரும் என்பதையே காட்டுகிறது.


புதினம்: தேவன் மனிதன் லூசிஃபர்,
எழுத்தாளர் : சைலபதி,
*
விலை : ரூ.150/பக்கங்கள் : 224. பதிப்பகம் : இராசகுணா பதிப்பகம்,
எண். 28, முதல் தளம், 36வது தெரு, பாலாஜி நகர் விரிவு, சின்னம்மாள் நகர்,
புழுதிவாக்கம், சென்னை-600 091.


Comments

Popular posts from this blog