short story - japan


வங்க வேங்கையின் 
கடைசி கணங்கள்
யோகோ ஒகாவா (ஜப்பான்)
* * *
தமிழில் எஸ். சங்கரநாராயணன்


புறவழிச் சாலையை விட்டு நதியோரமாய் தெற்காக... பாலத்தைத் தாண்டுகையில் சின்னதாய்த் தயக்கம். திரும்பி... ஊருக்குள்ளே நுழைந்திருந்தேனானால்... ஒரு சில நிமிடங்களில்... 'அவளது' அடுக்ககத்தில் இருந்திருக்கலாம்.
     மகா புழுக்கமான மதியம். காற்றே இல்லை. சாலையோர மரங்களெல்லாம் விதிர்விதிர்த்து நின்றன. கொதிக்கும் கல்த்தரையின் அனல் கானல். எதிர்ப்பக்கமிருந்து வரும் கார்களின் மீது பட்டுத் தெறித்து வரும் சூரியன் கண்ணைக் குருடாக்கியது. காரின் குளிர்சாதனத்தை முழுசாய் முடுக்கியும் ஜன்னல்வழியே பீரிட்டுப் பாயும் சூட்டை வேட்டை ஆட இயலவில்லை. கார் ஸ்டீயரிங்கே கொதித்தது. கைகள் கொதித்தன.
     வீட்டில் இருந்து கிளம்பியதிலிருந்தே எனக்குள் பைத்தாரக் கணக்குகள். அடுத்த நிறுத்தத்தில் சிவப்பு கிடைத்தால் யூ டேர்ன் அடி. வீடு திரும்பு. எதிரே வெள்ளி வண்ணத்தில் பந்தயக் கார் வருகிறதா, பயணத்தைத் தொடர். வளர்ப்புப் பிராணிகள் கடையில் நேற்று பார்த்தேனே, டெரியர் நாய்க்குட்டி, போகையில் அது விற்கப்பட்டிருந்தால் வந்த வழி திரும்புவேன். வரும் பஸ் ஸ்டாண்டு, வரிசையாய் மூணு பஸ், அப்படியானால் அவளது அடுக்ககம் நான் போவேன்.
     எதிரே பந்தயக் கார் வருகிறதா என நான் எதற்காக எதிர்பார்க்கிறேன், நாய்க்குட்டி வித்திருந்தா என்ன, வித்திருக்காட்டா என்ன? இப்பகூட ஒண்ணுமில்லை, திரும்பிவிடலாம். ஆ அவளோடு நேருக்கு நேர் இன்னிக்கு மோதிப் பார்த்து விடலாம்... என்றும் உள்ளே பொங்கிய ஆத்திரம். அதுவும் இருக்கிறது.
     பாலத்தை எட்டுமுன், போக்குவரத்து மந்தமானது திடீரென்று. எதுவும் விபத்தாய் இருக்கலாம். பாதிவழி மடக்கப்பட்டு ஒருபாதி வழியே விடப்பட்டிருந்தது. வானொலியைப் போட்டேன். கர்ர் புர்ரென்று சத்தம். அணைத்து விட்டேன். அங்குலம் அங்குலமாய் நகர வேண்டியிருந்தது. காலில் வேக அடக்கியை, அழுத்தியபடி உருட்டினேன் காரை.
     அவளைப் பார்த்த கணத்தில், நான்... என்ன செய்யப் போகிறேன்? ஆயிரம் முறை இதையே கேட்டுக் கொண்டாயிற்று. ஓங்கி பளார். ஒரு அறை? ஏண்டி சக்காளத்திச் சனியனே... என மாறி மாறி... வசைமாரி? மரியாதையா என் புருஷனை என்னாண்ட திருப்பிக் கொடுத்திரு. சீச்சீ... என்ன அபத்தம். இந்தக் கேவலத்தை விட பேசாமல் அவனை விட்டுவிட்டு தேமேன இருந்துவிடலாம்.
     இனிய மதிய வணக்கம்.... முட்டாள்த்தனமாய் வாழ்த்தலாம். என்னவோ அவள்தான் என் எல்கேஜி மகளின் வாத்திச்சி போல!
     இவன், என் கணவன் அமெரிக்காவுக்கு மூணு நாள் முன்னால் ஒரு மருத்துவ மாநாடு என்று கிளம்பிப் போயிருக்கிறான். இந்த வாய்ப்பினால் நான் சட்டென மும்முரப் பட்டிருக்கிறேன். அல்லாமல், நேரே அவள்வீட்டுக்குப் போய் அவனையும் அவளையும் ஒருசேர நான் எதிர்கொள்ள எனக்கு தைரியமே, அதற்கான யோசனையே கிடையாது. அவன் போகட்டும் ஊருக்கு, என நான் பொறுமை காத்தேன். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை தான்.
     ஒருவரை யொருவர் அணைத்தாப் போல அவர்களை நான் நிர்வாணமாகப் பார்த்திருந்தால் கூட நான் அதிர்ச்சி அடைந்திருப்பேன் என்று சொல்ல முடியாது. இத்தனை காலமும் அந்தரங்க கணங்களில் அவர்கள் அப்படித்தான் இருந்திருப்பார்கள், எனக்குத் தெரியாதா என்ன? அவர்கள் ஏற்கனவே ஏடாகூடமான நிலையில் இருக்கையில், நானும் போய் இன்னும் அதை அதிகம் குழப்பணுமா என்ன? அதெல்லாம் வேணாம். அவன் இல்லாத வேளையில் நான் அவளைச் சந்திக்கலாம் என்றிருந்தேன். ஆறஅமர, ரெண்டு பேருமே ஒத்துப்போகிறாப் போல சமதையாப் பேசி சமாதானத்துக்கு வரலாம்...
     இவன், எங்க வீட்டு ஆத்மா போயிருக்கிறானே, என்ன மாநாடு அது? அதே என் ஞாபகத்தில் இல்லை. சுவாசம் சம்பந்தப்பட்ட மருந்துகளில் இவன் ஈசன். ஈசனோஃபிலியோவில் எதோ சொல்வார்கள், பல்மானரி இன்ஃபில்ட்ரேட்ஸ், அதன் அறிகுறிகளைக் கையாள்வதில் சமர்த்தன். எனக்கு இதைப்பத்தியெல்லாம் விளக்கிச் சொல்வதில் அவனுக்கு அக்கறையும் கிடையாது... எனக்கும் கிடையாது, அதையும் சொல்லவேண்டும். ம். ஆனால், அவளுக்கு இதுபற்றித் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு பல்கலைக்கழக மருத்துவமனையில் அவள் மதிப்புமிக்க காரியதரிசி.
     அந்த மாநாடு, அது என்ன மாநாடு தெரியவில்லை, என்பதில் ஆற்றாமைகொள்ளத் தேவையில்லையோ? அவள் ஒண்ணாய் நிர்வாணமாய்... அதைப் பற்றியும் அலட்டிக்... ஆனால் அது அப்படியாய்த் தானே இருக்கிறது. எப்படியெப்படி யெல்லாமோ என் பொறாமையும் பொருமலும் என்னை உருக்குலைக்கிறது.

**
போக்குவரத்து ஊர ஆரம்பிக்கிறது. பாலத்தடியில் ஒரு குடும்பத்தின் சமையல் நடந்துகொண்டிருக்கிறது. இறைச்சி வேகிற மணம் எழுந்து சூழலை நிறைத்தது. வீதியின் வெப்பம் இன்னுமாய் உணர்கிறாப் போல இருந்தது இப்போது. மணல்தரைக் கம்பங்களில் சீகல் பறவைகள் அந்த வாசனையில் கிறங்கி யமர்ந்திருந்தன. நதியில் புள்ளிகளாய் நீர்விளையாட்டில் திளைத்தபடி மனிதப் புள்ளிகள். சிறு உருவில் மீன்பிடி படகுகள். வாகன நெரிசல் பொறாத ஓர் உருமலில் அவை சற்று அதிர்ந்தபடி எழும்பிப் பறந்து திரும்ப அடங்கின. கண்கூசுகிற பிரகாசத்தில் தூரத்து நீர்ப்பரப்பு மினுங்கியது.
     எதோ சரக்குவாகனம் பாலத்தில் குப்புறக் கவிழ்ந்திருந்தது. கண்ணுமண்ணு தெரியாத வேகத்தில் நிதானம் இழந்து  நடுச்சுவரில் டமால் பண்ணியிருப்பான். ஓட்டுநன் இருந்த பக்கம் சிதைந்து, ஒரு டயர் கழண்டு பாலச்சுவரையே துள்ளித் தாவிவிட்டது. கொண்டைவிளக்குகள் ஒளிர ஒரு அவசரவூர்தி, காவல்துறை ஊர்தி மற்றும் மீட்பு ஊர்தி என்று இடம் பரபரப்பாகி யிருந்தது.
     இத்தனை அமர்க்களத்தில் அதன் ஓட்டுநன் உயிரோடு பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை. ஸ்டீயரிங்கே ஆளைக் குத்தி எலும்பை சதையைக் குதறியிருக்கும். ஆனால் அந்தத் திகில் தீவிரத்தை தெருவில் சிந்தியோடியிருந்த தக்காளிகள் மாற்றின. மீட்புப்ணிகளின் அவசரமும் பரபரப்பும் எனக்குப் புரிகிறது. ஐய எதும் வயலுக்குள்ள புகுந்துட்டமோ, இது என்ன அபூர்வமான சிவப்பு புஷ்பம்... என்று காட்சி வந்தது மனசில். ஐய ஓட்டுநனின் ரத்தம்தான் இப்படி தெருவில் தீவுகளாய்...
     இல்லை. அவை தக்காளிகள். மழுமழு பளபள கனிகள். யாரோ வேலையாள் ஒரு வாருகரண்டியால் அவைகளை ஒதுக்கித் திரட்டுகிறான். அவை கரண்டிக்குள் அடங்காமல் வழுகி யோடுகின்றன. விபத்துப் பகுதியில் நிறைய சனம் திகிலுடன் வேடிக்கை பார்க்க, யாரோ விபத்தான வாகனக் கதவை ஒரு மின்சாரரம்பம் கொண்டு அறுக்கிறார்கள்.
     என் கார்முன்னாலும் சில தக்காளிகள். என் டயரடியிலும் சில நசுங்கியிருக்கலாம். மளுக்கென அவை அமுங்குவதை என்னால் உணரமுடியவில்லை. அவைகள் எதிர்ப்பாய் முரண்டாமல் அப்படியே தரையோடு சப்பளிந்துவிட்டன போலும்.
     மத்த கார்கள் அந்தத் தக்காளிகளை நசுக்காமல் போக முடியுமா பார்த்தார்கள். நானோ விடாதே, எத்தனை தக்காளிகளை நசுக்க முடியுமோ பார்க்கலாம் என செயல்பட்டேன். பத்துக்கு மேல் நசுக்கிவிட்டால், நான் பயணத்தை மேலே தொடர்வேன். இப்படியே வீதி எதுவரை போகிறதோ அதுவரை போகலாம். கண்ணாடி வழியே பின்பக்கம் பார்க்க, சிவப்புக் குழம்பு தரையில் பீரிட்டு நீள்ப்பட்டையாய்... ஒராளைத் தாக்கும்போது எப்படி இருக்கும்? இந்தத் தக்காளியை நசுக்கினேனே அப்படியா இருக்கும்? நசுக்கிய தக்காளிகளை எண்ண ஆரம்பிக்கிறேன். ஒண்ணு ரெண்டு மூணு நாலு ஐந்து...

**
அவளை ஒரே ஒருதரம் தான் நான் பார்த்திருக்கிறேன். அதுவும் தொலைவில் இருந்து. சில ஆராய்ச்சிக் குறிப்புகளை இவன் மறந்து வைத்துவிட்டுப் போயிருந்தான். அவனுக்காக அதை எடுத்துவர நான் அங்கே போகநேர்ந்தது. வழியில் தான் காரியதரிசியின் ஒதுக்கிடம். சட்டென எட்டிப் பார்த்தேன். பார்த்த ஜோரில் அவள்களில் யார் இவனது சிநேகிதி என்று கண்டுகொண்டேன். அவளுகளில் யாரையுமே நான் அதுநாள் வரை பார்த்தது கிடையாது. என்றாலும் இவன் ஆள்... அது 'அவள்' தான். அவளைப் பற்றி, அவர்களைப் பற்றி. அவன் வீடுதிரும்பாத நாட்களில் நான் யூகித்த கற்பனைக் காட்சிகளுக்கு அவளே பொருந்திவந்தாள். ஒரு அடுக்கக அறை. அடிக்கடி போகும் விடுதியின் உணவுமேசை. அப்புறம் ஆஸ்பத்திரியில் நடமாட்டம் இல்லாத பின்கட்டு.
     ஆனாலும் அன்னிக்குப் பார்த்த அந்தப் பெண்ணின் முகம் அத்தனை துப்புரவாக ஞாபகம் இல்லை தான். அந்த சிகையலங்காரமோ, ஒப்பனையோ... ப்ச். நினைவுக்கு வரவில்லை. ஒரு சிக்கலான வேலை மும்முரம் அவளுக்கு. பரபரப்பாய் இருந்தாள் அன்றைக்கு, அவ்வளவே நினைவில். தன் மேசைப்பக்கம் நின்றிருந்தாள். கைநிறையக் காகிதங்களை உலைத்து அடுக்கியபடி யிருந்தாள். அவள் விரல்கள் காகிதக் குவியலுக்குள் பொறுமையின்றி அலைந்தன. சிலவற்றில் குறிப்பு எழுதி, சிலவற்றைக் கிழித்து எறிந்தபடி, சிலவற்றில் மேல்கொம்பாய்க் காகிதம் குத்தினாள். நெகிழ்ந்த கசகச கேசம் முகத்தில் பாதியை மறைத்திருந்தது.
     மேசைத் தொலைபேசி ஒலி. ஏய் யாராவது இந்தச் சனியனை எடுத்துத் தொலைங்கடி... என இரைகிறாள். ஹா ஒருவழியாக காகிதங்களைச் சீரமைத்திருந்தாள். என்றாலும் முதுகுக்குப் பின்பக்கம் யாரோ விரட்ட, திரும்ப பயத்துடன் அவற்றை சரிபார்க்க ஆரம்பிக்கிறாள். ஆனால் எத்தனை தடவை அடுக்கினாலும் விஷயம் சரியாய் வரவில்லை போல. எதோ சரியாக வராததாக அவளுக்கு அவநம்பிக்கையாய் இருந்தது. அப்பதான் எழுதியிருந்த குறிப்புகளை யெல்லாம் சரசரவென்று அழிக்கிறாள். மடிக்க பிரிக்க, அங்கங்கே ஸ்டாம்ப் அடிக்க, மனம்சொன்னதை யெல்லாம் செய்கிறாள் போல. இப்படியே காலம் பூராவும் அவள் திக்கித் திணறுவாளாய் இருந்தது. ஆனால் அவள் பதட்டப்பட பட வேலை இன்னும் இன்னுமாய்க் குழம்பி, காகிதங்கள் மேலும் கசங்கி... அவளுக்கு உதவவும் யாரும் வரவில்லை.
     நான் கடைசியில் அவளை அப்படியே விட்டுவிட்டு ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறிவிட்டேன். அழகாய் நறுவிசாய் அவள் வேலை செய்கிறதைப் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். இவன் தந்த காகிதங்களை அட்டகாசமாய் தட்டச்சு செய்து அவன்மேசையில் வைப்பாள், என்பதாய் நினைத்து வந்தேன். ஆனால் இப்படி அவளே தன் காரியங்களைக் கோணாமாணா ஆக்கிக்கொண்டிருந்தாள். இவளிடம் போய் நான் பொறாமைப் படுவதா?

**
நகரக் கூடத்தின் பக்கமாக நிறுத்துமிடம். அங்கேயிருந்து அவள் அடுக்ககம் வரை கொஞ்சம் நடக்கலாமாய் இருந்தது. அவள் வீட்டுப்பக்கமாகவே இடம் பார்த்து வண்டியை விட்டிருக்கலாம் தான். இம்மாதிரி நாளில் கார் நிறுத்தக்காசு தருவதே அதிகப்பிரசங்கித்தனம் என்று தோன்றியது. அடுக்கக எண் ஐந்நூத்தியெட்டு. அஞ்சி. பூஜ்யம். எட்டு. எண்ணைச் சொல்லிக்கொண்டே காரைவிட்டு வெளியேவந்தேன். ஸ்ஸப்பா. காளவாய்ச் சூடு. வெளியே இறங்கிய கணம் குப்பென பொங்கிய வியர்வை. முகத்தில் பார்த்துப் பார்த்துச் செய்திருந்த அலங்காரமும் பௌடரும் உருகிக் கரைந்தன.
     நடை. நாளிது வரை எப்படியெல்லாம் நான் புறக்கணிப்பட்டு, நிராகரிக்கப்பட்டு வந்திருக்கிறேன் என ஒண்ணொண்ணாய் மனசில் ஏற்றிக்கொண்டேன். என் கணவனுக்கு இன்னொரு தொடுப்பு என ஆரம்பித்த நாள் முதலே இந்தப் பொருமலும் புலம்பலும் ஆரம்பித்துவிட்டன, ஒரு சடங்கு போல. கசப்புகளை நான் என் குழந்தைப் பருவத்தில் இருந்தே தேடி என் புண்களைக் கீறிக் கொள்கிறவளாய் இருந்தேன். எப்போதெல்லாம் எப்படியெல்லாம் யார் யாரெல்லாம் என்னைத் துன்புறுத்தினார்கள். இப்படியாய்... நான் அவஸ்தைப்படவே பிறந்தவள். இதற்கு என் கணவன் ஒருவனையே குற்றப்பத்திரிகையில் தாக்கீது செய்து தாக்குவது தகாது. இதில் மற்ற சிகாமணிகளுக்கும் குறைவில்லாத பங்கு இருக்கிறது... என எனக்குள் சொல்லிக்கொண்டேன். அதாவது என் இந்த இம்சை எனக்கு மாத்திரமானது என்றோ, இவனால் எனக்கு மாத்திரம் நிகழ்த்தப்படும் கொடுமை என்றோ கொள்ளவேண்டியது இல்லை, என எனக்குள் சிறு ஆறுதல்.
     முதலில் எனக்கு ரெண்டோ மூணோ தான் நிகழ்வுகள் ஞாபகத்தில் தட்டின. ஆயினும் மெல்ல நினைவுகள் இன்னுமாய் தெளிவாகவும் ஆழமாகவும் என்னுள் உருவாக ஆரம்பித்தன. நான் சுத்தமாய் மறந்தே போன நிகழ்வுசுளே கூட உற்பத்தியானாப்போல மேல் அடுக்குக்கு வந்தன.
     கின்டர்கார்டன் பருவம். நடனம் ஆட என நாங்கள் ஜோடி சேர்கிறோம். எல்லாருக்கும் ஜோடி அமைய நான் மாத்திரம் துணை கிடைக்காமல் தனியே. கடைசியில் ஆசிரியருடன் சேர்ந்து நான் நடனம் ஆட வேண்டியிருந்தது. ரொம்ப அவமானமாய் இருந்தது. மத்ததை விட, ஒரு பள்ளி, அதில் ஒத்தைப்படை எண்ணிக்கையில் தான் பிள்ளைகள் படிக்குது, என்றால் என்ன ...த்துக்கு ஜோடி ஜோடியா ஆடுங்கன்னு சொல்லணும்? பள்ளிக்கூடத்தில் இன்னொண்ணு கூட நடந்தது. கல்விசுற்றுலான்னு கிளம்பிப் போகையில், போய்த் தங்குகிற விடுதியில் எனக்கு அறை எடுக்கவே விட்டுவிட்டார்கள். அட நாமதான் தப்பா பார்க்கிறோமா, என திரும்பவும் என் பெயரைத் தேடுகிறேன். அந்தப் பட்டியல், அதில் என் பெயர், ம்ஹும் இல்லை. ஆனால், இதை யாரும் வேணுன்னு பண்ணியிருப்பார்களா என்ன, அதெல்லாம் இருக்காது, என்று சொல்லிக்கொண்டேன்... ஆனால் மனம் சமாதானம் ஆக மறுக்கிறது. நான் அந்தச் சுற்றுலாவுக்கே போகாமல் விட்டுவிட்டேன். என் பேர் இல்லை என்பதானாலா? அல்ல. அன்றைக்குக் காலையில் நான் எழுந்தபோது... எனக்கு தொண்டை வலி!
     பதினைந்து வயதில்... அதிகமாய் தூக்க மாத்திரை சாப்பிட்டு... தற்கொலைக்கு எனக்கு வேண்டியஅளவு துக்ககரமான காரணம் இருந்தது அப்போது. என்ன அது, அது இப்போது ஞாபகம் வரவில்லை. வாழ்க்கையில் விரக்தி தட்டியிருக்கலாம். எது எப்படியோ, அன்றைய தினம் நான் மொத்தமாய் 18 மணி நேரம் தூங்கினேன். திரும்ப எழுந்துகொண்ட போது முழுசாய் நான் துக்கத்தில் இருந்து ¢மீண்டிருந்தேன். உடம்பே எடையற்றிருந்தது. கழுவிவிட்ட சுத்தமாய் இருந்தது மனம். அட நான் இறந்துவிட்டேனோ, என்ன மாற்றம் இது, என்றே நினைக்க வேண்டியிருந்தது. இதில் என்ன விஷயம் என்றால், என் குடும்பத்தில் நான் தற்கொலை முயற்சி செய்தேன் என்பதே யாருக்கும் தெரியாது!
     இது நேற்றைக்கு நடந்தது. சிகையலங்காரத்துக்கு நான் போயிருந்தேன். கூந்தல் பின்பகுதியை லேசா டிரிம் பண்ணுடின்னு அவளிடம் நான் சொன்னேன். அவளுக்கு நான் சொன்னது பிடிக்கவில்லை போல, வேண்டா வெறுப்பாய் க்ளிக் க்ளிக் என்று கத்திரியை சத்தம் பண்ணினாள்... எல்லாம் எனக்குத் தெரியும், என்கிறாப் போல. ரொம்ப வயசானவள் கூட இல்லை. குட்டி. தொழிலிலும் கத்துக்குட்டியாட்டம் தெரிந்தது. என்றாலும் என்ன ஆங்காரம்.

**
திரும்ப சுதாரிக்கிறேன். ஆகா, வழியை எங்கோ தவற விட்டிருக்கிறேன். நகர வரைபடத்தை நன்றாகப் பார்த்துவிட்டுத் தான் வந்தேன். இந்த கொதி வெயிலில் நகரமே கலைந்து கிடந்தாப் போலிருந்தது. ஒரு முக்கில் நான் திரும்பும் தோறும் அது எனக்குப் புதிய சந்தாகவே, ஞாபகத்தில் இருந்த சந்தின் அடையாளங்கள் அற்றிருந்தது. நடைபாதையின் சனங்கள் தெளிவற்றுக் கடந்தார்கள். பூனை ஒன்று பாதை நிழலில் சோம்பல் முறித்தது.
     கூரைகளின் வரிசை அப்படியே நீண்டு தூரத்தில் மணிக்கூண்டின் பின்பகுதி வரை போயிற்று. மணிக்கூண்டின் மணி ரெண்டு முறை அடித்தது கேட்கிறது. காற்றே அசையாத நாள் தான் என்றாலும் அந்த அதிர்வு ஒலி என் தலைக்குமேலே சுழன்று வந்து என் காதுக்கு இறங்கியது. அது அடங்கிய ஜோரில், என்ன இது நெடி. லேசான இனிப்புச் சுவையின் கடும் மணம். ஆனால் மூக்கைச் சுளிக்க வைக்கிற மணம் அல்ல அது. மூச்சை நன்றாக உள்ளிழுத்தேன். அப்படியே அந்த வாசத்தைப் பிடித்தபடி நடந்தேன். என்னவோ பாசி போல, என முணுமுணுத்துக் கொண்டேன்.
     அது ஒரு பெரிய கல்வீடு. இரும்பு மகாக் கதவு பாதி திறந்து கிடந்தது. பெரிய ஓக் மரத்தின் அபார நிழல்க் குளுமை. யோசிக்காமலேயே நான்பாட்டுக்கு உள்ளே நுழைகிறேன். வீட்டின் சன்னல்களைப் பார்த்தபடியே வீட்டைப் பார்க்க நடக்கிறேன். வீட்டைத்தாண்டி மேலப் பக்கமாய் வீட்டின் பின் கட்டை நோக்கி - வாசம் என்னை அழைத்துப் போனது.

     அருமையாய்ப் பராமரிக்கப்பட்ட அழகானதோர் தோட்டம். பாதையின் இரு மருங்கும் அழகாய்க் கத்தரிக்கப்பட்ட செடிகளின் அணிவகுப்பு. கொடிகளில் சில புஷ்பங்கள் இன்னும் பறிக்கப்பட்டாமல் மிச்சமிருந்தன. அரங்க நடுவே சுத்தத் தண்ணீர் ஊற்றாய்ப் பொங்கிச் சிதறுகிறது. ஜல ஜாலம். அந்த ஊற்றுக்கு அருகில்... தரையில் அப்படியே கால் அகட்டிப் படுத்தவாக்கில் ஒரு வேங்கை. அதன் முன் குனிந்தவாக்கில் பெரியவர் ஒருவர்.
     'என்ன பண்றீங்க ஐயா?'
     'வா வந்து பார்...' என்றார் அவர். அங்கே என்னைப் பார்த்ததில் அவர் வியப்பு எதுவும் காட்டவில்லை.
     'அது இறந்துட்டதா?'
     'இன்னும் இல்ல'. அவர் என்னைக் கிட்டே கைகாட்டி அழைக்கிறார்.
     ஊற்றுப் பக்கத்தில் காற்று ஜிலுஜிலுத்தது. சிறு பட்சிகளின் இசைக்குரல். நகரத்தின் அத்தனை வெக்கையும் திடுமென்று காணாமல் போனாப் போல.
     பெரிய வேங்கை அது. கல்திண்ணைக் குழிவில் அப்படியே நீட்டிக் கிடந்தது. கால்கள் துவண்டு கிடந்தன. பாதி திறந்த வாய். சிரமத்துடன் பலவீனமாய் மூச்செடுத்தது அது.
     'உடம்பு முடியல்லியா இதுக்கு?'
     'ம். இன்னும் ரொம்ப நேரம் இது தாளாது.' பெரியவர் மண்டியிட்டு அதன் பாதத்தைத் தன் கையில் வைத்துக்கொண்டார். அதன் அருகில் நான் நிற்பதில் எனக்கு பயமோ பதட்டமோ இல்லாத அளவில் அவர் இயல்பாய் நடந்துகொண்டார். இன்னுமாய் கிட்டத்தில் என்னை அழைத்தார். அந்த கடுங் கோடையில் முழுச் சொக்காய் சராய் போட்டிருந்தாலும் அவருக்கு வயிர்வைப்பாடே இல்லை போலிருந்தது. அந்த மேல்கோட்டு அழகாய்   இருந்தது. ஒரு கழுத்திறுக்கமான போ-டை. முத்துக் கங்கணங்கள். படிய வாரிய வெண்சிகை.
     அவர்பக்கமாய் நானும் மண்டிபோட்டேன். அந்த வேங்கையின் முதுகைத் தொடுகிற உந்துதலை என்னால் தவிர்க்க முடியவில்லை. அந்தப் பாசி நெடி... அது இதனிடம் இருந்துதான் வருகிறது போல. அந்த உடம்பின் கதகதப்பு. அந்த உயிரின் கதகதப்பு அது. இது வைக்கோல் கன்றுக்குட்டி போல இல்லை. நிஜம். கற்பனை வஸ்து அல்ல இது. என் உள்ளங்கையில் அதன் துடிப்பு தெரிகிறது.
     'யப்பா பெரிய உருவம் தான்...' கிசுகிசுத்தேன்.
     ம். ம்... என்றபடி அவர் தொடர்ந்து அதை வருடித் தந்தார். மரங்களில் கசியும் வெளிச்சத்தில் அதன் மஞ்சள், கரும் பட்டைகள் மினுங்கின. அழகழகான வரிகள், அதன் ஆகுருதி... எல்லாமே 'கன' கச்சிதம். சாய்ந்து சுருண்டிருந்தாலும் இதோ எழுந்து தாக்கிவிடுமாய்த் தோற்றம். அழுத்தமான பாதங்கள். அரைவை அரசனான தாடைகள். எட்டிப்பார்க்கும் கடவாய்ப் பற்கள். அதன் ஒவ்வொரு இம்மியும் ஒரு வேலைக்கானதாய்த் தெரிந்தது. வேட்டையாட அதற்கு உதவவென்றே வடிவமைக்கப் பட்டிருப்பதாய்த் தோன்றியது.
     'இது நீங்க வளர்த்ததா?'
     'ஆமாம்,' என்றார் அவர். மெலிதாய் அது முனகியபோது உடம்பெங்கும் ஒரு துடிப்பு அலை.
     'பாவம்' என்றேன் நான். அதை முதுகில் வருடுவதையே நான் கவனமாய்ச் செய்துகொண்டிருந்தேன். கெட்டித் தோல். மிருது. தொட சுகம். அதை வருடுந் தோறும் அதனிடமிருந்து அந்த பாசி நெடி உயர்ந்து காற்றில் பரவியது.
     'ம்... இப்ப பார்...' அவர் என்பக்கமாய் முதன்முறையாய்த் திரும்பி, புன்னகைத்தார்.
     வேங்கையின் காதுகள் தொய்ந்து விழுந்தன. நாக்கு தள்ளியது. அது மெல்ல அடங்க ஆரம்பித்தது. கடைசியாய் மிச்சமிருந்த சிறு தெம்புடன் மெல்ல பெரியவரின் பக்கமாய் அது அசைந்தது.
     'ம். இப்ப ஆயிரும்' என்றார் அவர். அதன் கழுத்தைக் கட்டிக்கொண்டார். தன் முகத்தோடு அதை அப்படியே உரசிக்கொடுத்தார்.
     தோட்டத்து ரோஜாக்கள் அசைந்தாடின. புல்வெளியில் பூச்சிகளின் கொட்டம். ஊற்றில் இருந்து பனித்தூவலாய் எங்கள் மேல் சிதறும் துளிகள்.
     அவர்களிடையேயான கடைசித் தருணங்களின் அந்தரங்கத்தில் நான் என்னை இடைஞ்சலாய் உணர்ந்தேன். 'நான் உங்களுக்கு....'
     'ஏன் அப்பிடிச் சொல்றே?' என்றார் அவர். நான் சொன்னதில் அவர் கொஞ்சம் வருத்தப்பட்டாப் போலிருந்தது. 'நீ கட்டாயம் எங்ககூட இருக்கணும். எங்ககூட வேணும் நீ.' அப்படியே அந்த வேங்கையை இரக்கம் சுரக்கப் பார்க்கிறார் ¢அவர்.
     அது மூச்சுவிட மேலும் திணற ஆரம்பித்தது. அதன் தொண்டைக்குள் கடமுடா. உலர்ந்த சொர சொர நாக்கு. அதை முதுகில் வருடித் தருவதை நான் நிறுத்தவேயில்லை. என்னால் செய்ய முடிந்தது அவ்வளவுதான்.
     அப்படியே அதை அவர் தன் முகத்தோடு தழுவிக்கொள்கிறார். வேங்கையின் கண்கள் திறந்து அவரைப் பார்த்தன. அவர் அருகிலேயே இருக்கிறார் என்று சிறு ஆசுவாசம் அதற்கு. கண்கள் திரும்ப மூடின.
     அந்த இரண்டு தேகங்களும் ஒன்று கலந்தன. அவர் கன்னம், அதன் தாடை. அவர் மார்போடு அதன் கழுத்து. பாதங்கள். கால்கள். அந்த போ-டையும் அதன் வரிகளுமாய்க் கலந்து கரைந்து ஓருருவாய். வேங்கை ஒருமுறை உருமியது. அதன் அதிர்வு அடங்க என் கைக்குக் கீழே அதன் துடிப்பும் அடங்கியது. கடவாய்ப் பற்களின் கிட்டிப்புகள் நின்றன. உள்ளாழத்தில் இருந்து இறுதி மூச்செடுத்தது வேங்கை. எங்கள் மேல் கவியும் மௌனம்.
     பெரியவர் இன்னுமாய் அதைக் கையில் வைத்திருந்தார். எத்தனைக்கு முடியுமோ அத்தனைக்கு சத்தமில்லாமல் நான் எழுந்தேன். மெல்ல அடிமேல் அடி வைத்து தோட்டத்தை விட்டு வெளியேறினேன்.
     கார்ச்சாவியைத் திருகுகிறேன். அப்படியே ஒரு விநாடி என் உள்ளங்கைகளைச் சோதித்துப் பார்க்கிறேன். நானும் அவருமாய் என்ன செய்தோம், நினைத்துப் பார்க்கிறேன். சாவியை முடுக்குகிறேன். திரும்பும் வழியில்... தக்காளிகள்... இல்லை. ஒன்றுகூட இல்லை.


*
The Last Hour of the Bengal Tiger
By Yoko Ogawa,
translated from the Japanese by Stephen Snyder


Comments

Popular posts from this blog