வாழ்த்துரை

மக்களும் கலையும்

எஸ். சங்கரநாராயணன்

றிவிற் சிறந்த இந்த அவையை வணங்கி மகிழ்கிறேன். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இந்த சிறப்பு அரங்கில் வாழ்த்துரைக்க என்னை அழைத்தது எனக்குப் பெருமை தரும் விஷயம் ஆகும்.
வாழ்க்கையில் இருந்து கலை பிறக்கிறது. கலை வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. என்றால் அது மற்ற பௌதிகப் பிரதிபலிப்புகளைப் போல அல்ல. கலையானது காலத்தை, மனிதனின் உள்ளப் பாங்குகளை, சந்தர்ப்ப சூழல்களை யெல்லாம் ஒருசேரப் பிரதிபலிக்கிறது. முக்காலத்தையும் கலை உணர்த்தி நிற்கிறது. நேரடியாகவோ குறிப்பாகவோ. நிகழ்காலம் பற்றியோ எதிர்காலம் பற்றியோ அது பேசலாம். ஆனால் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு கலை மனிதனை, எதிர்காலத்தை நோக்கி வழிநடத்த வல்லதாய் இருக்கிறது. ஒரு ரயில்வே ஊழியனைப் போல, தண்டவாளம் அமைக்கும் பணியை அது, தொடர்ந்து செய்ய அலுத்துக் கொள்வதே இல்லை.
கலை என்பது முரண். முரண் என்பது கலகம். கலகம் என்றால் பெரும் பொருள் கொள்ள வேண்டும் என்பது இல்லை. மாற்றுக் கருத்தே கலகத்தின் முதற்படி, அடிப்படை அல்லவா? ஒரு விஷயம் பற்றி ஒரு கருத்து உள்ளத்தில் கிளர்த்தப்படும் போது, அதை மற்றவர்கள் மனங் கொள்ளும் விதத்தில் எப்படி வியூகப் படுத்துவது, என்பது கலையின் கவலையாக, பொறுப்பாக இருக்கிறது. தன்னையும் பிறனையும் ஒருசேரப் பார்க்கும் மனிதனின் யத்தனமே கலை என்று சொல்லலாம்.
வாழ்க்கையில் ஒரு ஒளியைப் பாய்ச்ச வல்லதாய் இருக்கிறது கலை.
ஒரு படைப்பு உருவாகிறது. அதில் ஒரு சம்பவம் காட்சிப் படுத்தப் படுகிறது. அந்தக் காட்சி படிக்கிற வாசகனுக்கு, ‘தான்‘ அற்ற, தனது பங்களிப்பு அற்ற, புதிய ஒரு நிகழ்வை முன் நிறுத்திக் காட்டுகிறது. அதை அவன் முன் நிறுத்தும் காட்டுகிறது. அந்த நிகழ்வின் சாதக பாதக அம்சங்கள் அப்போது பரிமாறப் படுகின்றன. அந்தப் படைப்பாளன் சொன்னதை நாம் ஏற்கலாம். மறுக்கவும் மறுக்கலாம். என்றாலும் அந்த விஷயம் பற்றி கலை ஒரு பேச்சை எடுத்துக் கொடுக்கிறது. ஒரு மண்ணை உழுகிற ஏர் செய்கிற வேலையைக் கலை செய்கிறது. கலை விஷயங்களை அசைபோட ஒரு பயிற்சிக் களத்தை உருவாக்கித் தருகிறது. நிற்கிற குழந்தையை நடக்கச் சொல்லி சொல்லித்தருகிறது கலை. திசைகளை அது அறிமுகம் செய்கிறது. வழிகளைத் துலக்கப் படுத்துகிறது. படைப்பாளன் போட்ட பயிர் வேறு தான். அதன் விளைச்சலும் வேறுதான். உங்கள் நிலம் அப்போது பண்படுகிறது, என்பது தான் ஆக வியப்பான செய்தி. உங்கள் விதைகளை நீங்கள் அதில் தூவிக் கொள்ளலாம். தூவி விளைவித்துக் கொள்ளலாம்… அதுதான் கலையின் மகத்துவம். கலை வாழ்க.
கலைஞன் என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு. வாழ்க்கை அழகானது. நாம் அதை அவலட்சணமானது என்று பார்க்கத் துணிந்தால் இழப்பு நமக்குதான். சிறியது வாழ்க்கை. அதாவது வாழ்க்கையின் சம்பவ முடிச்சுகளின் ஓயாத அலையடிப்பு பிரம்மாண்டத்தில், நான் சிறு துளி,, என்கிற அளவில் ஆகி விடுகிறேன். என்றானால் இந்தச் சின்னஞ் சிறிய வாழ்க்கையில் கவலைப் படுவது எனக்குக் கட்டுப்படி ஆகாது. வாழ்வைப் பாட வந்தவன் நான். கானம்பாடி வரும் வானம்பாடி நான். உலகம் அழகானஎது என உரத்துச் சொல்கிறேன் நான். BEAUTY WILL SAVE THE WORLD – என உரத்துச் சொன்னான் தாஸ்த்தயேவ்ஸ்கி. எனக்கு சொந்தம் அவன். ‘தாத்தா‘ யேவ்ஸ்கி!
வாழ்க்கை என்றால் அதில் பிரச்னை இல்லையா? கஷ்டங்கள் இல்லையா? துக்கங்கள், துயரங்கள் இல்லையா? இருக்கின்றன. இருக்கின்றன. பிரச்னைகளும் இருக்கின்றன. கஷ்டங்களும் இருக்கின்றன. துக்கங்களும் துயரங்களும் இருக்கத்தான் இருக்கின்றன. அதைத் தாண்டி இருக்கிறது உலகம்.
வாழ்க்கை என்பது ஒரு நதி போல ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் இரு கரைகளாக துக்கங்களும் சந்தோஷங்களும் இருக்கின்றன. நீந்துதல் உங்கள் வேலை. எந்த திசையில் நீந்திச் செல்கிறீர்கள் நீங்கள், என்பது முக்கியம். கலை அதைச் சொல்கிறது. வழி நடத்திக் காட்டுகிறது கலை.
கலைஞர்கள் நிறைந்த இந்த அவையை வணங்கி மகிழ்கிறேன். வாழ்த்தி மகிழ்கிறேன். கலை கலைக்காக, என்கிறார்கள். கலை மக்களுக்காக என்கிறார்கள். இரண்டுமே சரி என்பது தான் உண்மை. அது ஒரு பாணி. இது மற்றது. இரு கரைகள் கொண்டது நதி. நாம் இரு கரைகள். இங்கே அவரவரும் பிடிக்க, மீன்கள் கிடைக்கவே செய்கின்றன.
மதம் தனி மனிதனுக்கான விழுமியங்களை போதிக்கிறது. அரசியல் பொது மனிதனை முன்னிறுத்திப் பேசுகிறது. கலையின் பங்களிப்பு இங்கே முக்கியமானது. அது தனி மனிதனுக்குள் இருக்கும் பொது மனிதனை அடையாளப் படுத்தியும், பொது மனிதனில் தனி மனிதனை உரித்துக் காட்டியும் மிளிர்கிறது. வாழ்க்கையில் இருந்து, ஒரு சந்திரனைப் போல கலை ஒளி பெற்று மிளிர்கிறது. வளர் பிறை தேய் பிறை படைப்பாளியின் அறிவு சார்ந்த சொந்த விவகாரம்.
வாழ்க்கை முக்கியம். கலை வாழ்க்கையில் இருந்து பிறக்கிறது என்பதால்.
ஆனால் வாழ்க்கையை முக்கியம் என்று காட்ட கலை வேண்டியிருக்கிறது.
வாழ்க்கை கலையில் தன் முகம் பார்த்துக் கொள்கிறது. கலையில் பார்த்து வாழ்க்கை தன் முகம் திருத்தி மறு ஒப்பனை செய்து கொள்கிறது. ஆகவே ஒரு வாழ்க்கை கலையாக மாறும போது, கலைக்கு முன், கலைக்குப் பின் என வாழ்க்கையில் இரு பகுதிகள் அமைகின்றன. கன்னிப் பெண் தாயானது போல என்று கூடச் சொல்லத் தோன்றுகிறது.
மக்கள் கலை இலக்கியப் படைப்பாளிகள் சொல் வீரர்கள் மாத்திரம் அல்ல. செயல் வீரர்கள். நாக்கில் இருந்து கரங்களுக்கு அவர்கள் சிந்தனைகள் இடம் பெயர்ந்து பயணம் செய்கின்றன. அவர்களை வாழ்த்துவது என் கடமை. இந்தத் தேரோட்டத்தில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வணக்கம்.

(06 09 2015 அன்று சென்னை அம்பத்தூரில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சிறப்பு நிகழ்வில் பங்கேற்று அளித்த வாழ்த்துரை.)

S. Sankaranarayanan
91 97899 87842

storysankar@gmail.com

Comments

Popular posts from this blog