(1998ன் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற நாவல்) cover illustration JEEVA

(1998ன் இலக்கியத்திற்கான 
நோபல் பரிசு பெற்ற நாவல்)

பார்வை 

தொலைத்தவர்கள்

யோசே சரமாகோ
தமிழில் எஸ். சங்கரநாராயணன்
•••
நாவலின் பகுதி
•••
அதிகாலை மணி மூணுக்கு மேல் இருக்கும். முட்டியால் தாங்கி சிரமப்பட்டு திருடன் எழுந்து உட்கார்ந்தான்.
      அவன் காலில் உணர்ச்சியே இல்லை. ஆனால் அந்த வலி மாத்திரம் இருந்தது. மற்றபடி அந்தக் கால், அது அவனுடையதே அல்ல. கால் முட்டி விரைத்திருந்தது. தனது நல்லநிலையில் இருக்கிற மற்ற கால் பக்கமாக உடம்பைத் திருப்பிக்கொண்டான். அதைக் கட்டிலில் இருந்து தொங்கப் போட்டிருந்தான். இப்போது தன் ரெண்டு கையாலும் காயம் பட்ட காலைப் பற்றி அதை முன் கால் வாட்டத்துக்கு நகர்த்த முற்பட்டான்.
      சுரீர் என்று ஓநாய்கள் ஒன்றாய்ப் பாய்ந்தாப் போல அவனுள் வலி ஆளையே புரட்டியெடுத்து விட்டது. காயத்தின் கிண்ணத்தில் இருந்து பொங்கி எழுந்துவந்த அலையாய் வலி.
      கைகளை ஊன்றியபடி உடம்பை மெல்ல படுக்கையில் நகர்த்தி வார்டின் நடு நடைபாதைப் பக்கமாய் நகர முயன்றான். கட்டிலின் கால்பக்க இரும்புத் தண்டை அடைந்தான். ஹா என ஆஸ்த்மா கண்டாப்போல கடுமையான மூச்சிறைப்பு. கழுத்தில் நிற்காமல் தலையே கிறுகிறுத்தது. அதை அப்படியே நிமிர்த்திவைக்க அவன் போராடினான். சில நிமிடங்களில் மூச்சு சீர்ப்பட்டது. மெல்ல அப்படியே எழுந்துநிற்க ஓரளவு முடிந்தது. நல்ல காலில் அத்தனை பாரத்தையும் அழுத்தி நின்றான். மத்த காலால் பிரயோசனம் எதுவும் இல்லை என்று தெரிந்திருந்தது. எங்காவது போனால் நல்ல காலால் நகர்ந்து இந்த சொத்தைக்காலை இழுத்துக்கொண்டே கூட்டிச்செல்ல வேண்டும்.
      திடீரென நினைவுகள் மயங்கின. பாதாதி கேசம் ஒரு நடுக்கம் பரவியது. அந்தக் குளிரும் காய்ச்சலுமாய் பற்கள் கிட்டித்து தடதடவென்று தந்தி வாசித்தன. கட்டில்களின் இரும்புக் கிராதிகளைப் பிடித்துக் கொண்டபடியே, ஒரு சங்கிலியைப் பற்றியபடி போகிறாப்போல தூங்கிக் கொண்டிருக்கிறவர்களைக் கடந்து நடந்தான். சாக்குப்பை போல அந்த காயம்பட்ட காலை இழுத்தபடி போனான். யாரும் அவனை கவனிக்கவில்லை. எங்க போறீங்க, அதும் இந்த ரெண்டுங் கெட்டான் நேரத்தில், என்று கேட்கவும் இல்லை. அப்படி யாரும் கேட்டால் பதில் தயாராய் வைத்திருந்தான். ஒண்ணுக்கடிக்க.
      டாக்டரின் மனைவி அவனைப் பார்த்துக் கேள்வி கேட்பதை அவன் தவிர்க்க விரும்பினான். அவளை ஏமாற்றவோ, அவளிடம் பொய் பேசவோ அவனால் முடியாது. அவன் மனசில் என்ன இருந்ததோ அதை அவளிடம் பேசிவிடுவான். ஐய இந்தப் பாழில் இப்படியே உழன்று கிடக்க என்னால் ஆகாது. உங்க கணவர் எனக்கு எவ்வளவு உதவ முடியுமோ செய்துவிட்டார். இன்னாலும் ஒரு காரைக் களவாட வேண்டியிருந்ததுன்னால், இன்னொருத்தரிடம் போய், எனக்காக ஒரு காரைக் களவாடி வாருங்கள்னு நான் எப்பிடிக் கேட்க முடியும்? நானேதான் என்னுடைய அந்த வேலையைச் செய்ய முடியும். அதைப் போலத்தான் இதுவும், என் வலி, என் உடல்நோவு, அதை நானே பார்த்துக் கொள்ளுவேன். நானே வாசல் வரை போய் சிப்பாயிடம் பேசுவேன். என்னை அவர்கள் பார்த்துவிட்டு, என் மோசமான நிலைமையை உணர்ந்து, ஆம்புலன்ஸை வரவழைத்து என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போவார்கள்.
      பார்வையற்றவர்களுக்காக என்று தனியே ஆஸ்பத்திரி வேண்டும். கூட ஒரு ஆஸ்பத்திரி, அவ்வளவுதானே? நான் ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டால் இந்தப் புண்ணை சரியாகக் கையாள்வார்கள். என்னை சொஸ்தப்படுத்துவார்கள். நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தூக்கு தண்டனைக் கைதிகளைக் கூட, உடம்பு சரியில்லை என்றால் அதை முதலில் குணப்படுத்தவே முயற்சி மேற்கொள்வார்கள். குடல்வால் புண் அவனுக்கு என்றால் குடல்வாலை ஆபரேஷன் மூலம் அப்புறப்படுத்திவிட்டு, பிறகே தூக்கில் போடுவார்கள். அவன் ஆரோக்கியமாகச் சாக வேண்டும் என்பது நியதி. என்னைப் பொறுத்தமட்டில், என்னை முதலில் குணப்படுத்திய பின், அவர்கள் விரும்பினால், என்னைத் திரும்ப இங்கியே கொண்டுவந்து விட்டாலும் சரி. அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை.
      தொடர்ந்து நடந்தான். பல்லை இறுகக் கடித்து வலியை வெளியே சத்தம்வராமல் பொறுத்துக் கொண்டான். கட்டில்களின் வரிசை வரை கையால் பற்றியபடியே வர முடிந்தது. அதன் எல்லை முடிந்ததும் சட்டென நிலைகுலைந்ததில் தானறியாமல் ஓர் அலறல் வெடித்தது. கட்டில்களை எண்ணியதில் என்னவோ பிசகு. இன்னொரு கட்டில் இருக்கிறதாக எண்ணி நகர்ந்து கைநீட்ட திடுக்கென லாத்தி விட்டது. தரையில் அசையாமல் கிடந்தபடி கவனித்தான். இந்த கலாட்டாவில் யாரும் விழித்துக்கொள்ளவில்லை என உறுதி செய்து கொண்டான்.
      அட ஒரு குருடனுக்கு நகர்ந்து போக வேண்டுமானால் இந்தக் கிடக்கை தான் சரியானது. தவழ்ந்தவாக்கில் நகர்தல் அதிக சுலபமாகவே இருக்கும். வெளி முற்றம் வரை தன்னை நகர்த்திக்கொண்டே உடம்பை இழுத்து வந்திருந்தான். ஒரு நிமஷம் நிறுத்தி இனி எப்படிப் போவது, என தனக்குள் யோசித்தான். ரேழிக் கதவருகில் இருந்தே யாரையாவது கூப்பிடுவதா, அல்லது காம்பவுண்ட் வாயில் வரை போய்விடுவதா?
      கடைசிவரை வெளியே போக கைத்தண்டவாளம் போல வடக் கயிறுகள் இருக்கின்றன. நான் அங்கேயிருந்து உதவி என்று கோரினால், உடனே அவர்கள் அவனைத் திரும்பிப் போகும்படிதான் ஆணையிடுவார்கள்... அது தெரியும் அவனுக்கு. இரும்புக் கிராதிகளின் இறுக்கமான பிடிபோல அல்லாமல், இப்படித் தொய்ந்து ஆடும் கயிற்றைப் பிடித்தபடி நகர்வது சௌகர்யமாக இல்லை. அத்தனை தைரியமாக இதைப் பற்றிக்கொண்டு நகர முடியவில்லை. தயங்கினான்.
      சில நிமிட யோசனைக்குப் பின், ஆ ஒரு யோசனை!
      கயிறை ஒட்டியே நாம தவழலாம். அப்பப்ப கையை உயர்த்தி கயிறைத் தொட்டு புரண்ட ஜோரில் பாதைக்கோடு விலகாமல் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளவேண்டும். இதுவும் கார்த் திருட்டு போலத்தான். வழிகளையும் உபாயங்களையும் அவ்வப்போது நாமளே கண்டுபிடிச்சி காரியம்ஆற்ற வேண்டும். திடுதிப்பென்று அவன் மனசாட்சி விழித்தாப் போல ஒரு உள் குறுகுறுப்பு... ஒரு பாவப்பட்ட குருடன் கிட்டேயிருந்து, நான், காரை ‘திருடி’ விட்டேன்...
      டே இப்ப என் இந்த நிலைமை... அவன் காரை நான் திருடியதற்கா? இல்லை, அவனுடன் வீடு வரை நான் கூடப் போனேனே, அதனால் தான். அட தப்பு எங்கேயடா? காரைத் திருடியதில் இல்லை. அவன் கூடப்போனேனே அதுதான் தப்பு. பெரிய தர்ம பரிபாலன வாத விவாதம் எல்லாம் அவனிடம் அப்போது கிடையாது. அவன் யோசனை வெகு எளிமையானது. துல்லியமானது. குருடனாகப்பட்டவன் புனித ஆத்மா. குருடனிடம் நீ திருட்டு வேலை வெச்சிக்கக் கூடாது. ஸ்பஷ்டமாகச் சொன்னால், நான் அவனைக் கொள்ளை யடிக்கவில்லை. அவன் என்ன சட்டைப்பைக்குள் காரை வைத்துப்போய், அதை நான் துப்பாக்கி காட்டி மிரட்டிப் பறித்தேனா என்ன?... என்றெல்லாம் தனக்குத் தானே சாதகமான வாதங்களை உள்ளுக்குள் புரட்டிக் கொண்டிருந்தான். வெட்டி வாதங்களை நிறுத்து அப்பா. வேலையைப் பார்.
      வைகறையின் குளிர்ந்த காற்று முகத்தை வருடியது. அந்த வெளிக்காற்றே மூச்சுவிட அத்தனை சுகமாய் இருந்தது அவனுக்கு. இப்ப கால் வலி கூட அவ்வளவுக்கு இல்லை. இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. அவனுக்கே ஒன்றிரண்டு முறை இப்படி ஆகியிருக்கிறது. கதவுக்கு வெளியே இப்போது வந்திருந்தான். இனி படிகளை எட்டிவிடலாம்.
      ஆனால் படிகளில் தவழ்வது, தலையை முன்சரித்து நகர்வது தான் ஆக அவலட்சணமான காரியம். ஒரு கையை உயர்த்தி வடக்கயிறைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். நகர்வதைத் தொடர்ந்தான். ஒரு படியில் இருந்து கீழ்ப் படிக்குப் போவதே, அவன் எதிர்பார்த்ததுதான், திண்டாடியது. அந்த உதவாக்கரைக் கால், அதனாலேயே இத்தனை பாடும். அது இழவு கூடவருவதையே உணர அவனால் முடியவில்லையே. நடுப்படியில் ஒரு கை வழுகி உடம்பே ஒருவாட்டாய்ச் சரிந்தது. காலெனும் முண்டின் கனம் அவனை இழுத்துத் தள்ளிப்போனது. காலை யாரோ ரம்பத்தால் அறுப்பது போல் அபார வலி உள்ளே மின்னிப் பொங்கியது. அறுத்து குடைந்து ஆணியடித்தாப் போன்ற வலிப் பிரளயம். ஆனால் அவன் கத்தவேயில்லை, அது எப்படி என்று அவனுக்கே தெரியாது. அப்படியே பல யுகமான நிமிடங்கள் எதுவும் செய்ய முடியாதது போல் குப்புறக் கிடந்தான்.
      குப்பென்று கிளம்பிய காற்று அவனை நடுக்கியது. ஒரு சட்டை, டிரௌசர் மாத்திரமே அணிந்திருந்தான். காயம் தரையில் அழுந்திக்கொண்டிருந்தது. ஐயோ இன்ஃபெக்ஷன் இன்னும் அதிகமாகப் போகிறது. என்ன மடத்தனமாய் நான் யோசிக்கிறேன். இத்தனை தூரம் இந்தக் காலைத் தரையோடு தேய்த்து வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் இந்த அழுக்குசேர்கிற கவலை இல்லை. அந்த யோசனையே இல்லை.
      அதைப்பற்றி ஒன்றும் இல்லை. இது சீழ் பிடிக்கு முன்னால் அவர்கள் எனக்கு சிகிச்சை ஆரம்பித்து விடுவார்கள்... என மனதை அடக்க முயன்றான். பக்கவாட்டில் இப்போது கயிறை எளிதாக எட்ட முயன்றான். எங்கே கயிறு? அட கயிறுக்குத் தலைகீழாய் குப்புற நீ விழுந்திருக்கிறாய்.
      ஆனால் உள்ளுணர்வு திரும்ப அவனை நிதானப்படுத்தியது. மிகுந்த கவனத்துடன் மெல்ல மெல்ல உட்காரும் நிலையில் உடலை மாற்றிக்கொண்டான். அவன் இடுப்பு முதல்படியை, இறங்குவரிசையில் கடைசிப்படி, உணர்ந்தது இப்போது. ஆ வெற்றி! உயர்த்திய முஷ்டியின் சொரசெரப்புடன் அவன் ஒரு யோசனை செய்தான். நகர்வதில் புதிய எளிய வழி இது. நொண்டிகளை அங்கஹீன குஷ்டரோகிகளைப் பார்த்திருக்கிறான். உதவாக்கரைக் கால் தரையில் இழுபட வேண்டாம். வாயிலுக்கு முதுகு காட்டி அப்படியே கையால் ஊன்றி ஊன்றி இடுப்பை ஊஞ்சலாய் நகர்த்தி பின்நகர்வது எளிதோ எளிது.
      சின்னச் சின்ன அலைவுகளில் மெல்ல முதுகு காட்டி வாயிலை நோக்கி நகர்ந்தான். காலைத் தள்ளுவது அல்ல, இழுப்பது இன்னும் எளிதாய் இருந்தது. காலுக்கும் அலுப்பு குறைவு. வாயில் வரை போடப்பட்டிருந்த சாய்தளம் அவனுக்கு ரொம்ப உதவிகரமாக இருந்தது. அந்தக் கயிறு, அதை எட்டிப் பிடிப்பதில் இப்போது கணக்கு பிசகாது. தவிரவும் அந்தக் கயிறு அப்போது லேசாய்த் தலையில் உரசவும் செய்தது. காம்பவுண்டு வாயிலை இதோ எட்டிவிட்டோம், என்றே அவனுக்கு இருந்தது.
      சாதாரண நடையில் ஒன்று இரண்டு தப்படிகள். பின்பக்கமாய் இப்படிப் போவது என்பது வேறு. இது கை கையாய் அல்லது அங்குலக் கணக்கில் நகர்ச்சி. தனக்குக் கண் இல்லை என்பதையே மறந்துபோய் திரும்பி, இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என பார்க்க முற்பட்டான். ஆனால் அவன் கண்ணில், அப்பியிருந்தது வெண்படலம், காட்சி எதுவும் இல்லை.
      இது ராத்திரியா, விடிந்து விட்டதா என்று தெரியவில்லை. வெளிச்சம் வந்திருந்தால் அவர்கள் இந்நேரம் என்னைக் கண்டுகொண்டிருப்பார்கள். அத்தோடு இன்றைக்கு இரவுஉணவு மாத்திரம் தான், எப்பவோ வழங்கியிருக்கிறார்கள், அது எப்பவோ எத்தனையோ மணிகள் முன்னால். அதை நினைத்துப் பார்ப்பதே, ஃப்ளாஷ்பேக் தான். தனது துல்லியமான வேகமான நடவடிக்கைகளிலும் சூட்சுமத்திலும், அவனே தன்னை வியந்துகொண்டான்.
      எத்தனை தெளிவாக அலசி ஆராய்கிறேன். தனக்குள்ளே புதிய வெளிச்சம். நானே இப்போது புது மனிதன். இந்தக் கால் அது என் உடம்பின் முக்காலேமாகாணி என்று முக்கியத்துவம் அற்றுப் போனதில், செயலாற்ற இற்றுப் போனதில் அறிவு பார் என்னமாய் சுதாரித்து விட்டது. தன் வாழ்நாளிலேயே அடைந்திராத இத்தனை கூர்மை, இந்த விபத்து இன்றி வாய்ப்பே இல்லை!
      பின்பக்கமாய் இரும்பு வாயிலை நெருங்கியிருந்தான். பின்புறம் இப்போது இரும்பை இடித்த ஜில் தட்டியது. ஆ எட்டி விட்டேன்.

*
வாயில் காவலனுக்கு என தனி காபின் இருந்தது. கொட்டும் பனிக்கு உள்ளொடுங்கி சுருண்டு அதற்குள் உட்கார்ந் திருந்தான் சிப்பாய். தெளிவற்ற சரசரப்புகளை அவன் கேட்டான். என்ன சத்தம் தெரியவில்லை. ஆனால் இருந்த தூக்கக் கலக்கத்தில் அந்த ஒலிகள் உள்ளேயிருந்து என அவன் அனுமானிக்கவே இல்லை. சிறு காற்று மரத்தை உசுப்பி இரும்புக் கதவோடு உரசியிருக்கலாம்.
      இன்னொரு சத்தம். எதோ இரும்போடு மோதுகிறாப் போல... காற்றுரசல் அல்ல.
      உடலெங்கும் ஓடிய நடுக்கத்துடன் காபினைவிட்டு, தானியங்கி ரைஃபிளை தன்னியல்பாய் முடுக்கியிருந்தான்... உள் வராந்தா கதவை உன்னித்தான். கண்ணில் எதுவும் தட்டுப்படவில்லை. ஆனால் சத்தம் இப்போது இன்னும் ஓங்கி ஒலித்தது. யாரோ சொரசொரப்பான பகுதியைச் சுரண்டுகிறார்களா?
      வெளி வாயில் கதவின் அடி இரும்பு, என்று உடனே பட்டது. சற்று தள்ளி கூடாரத்தில் சார்ஜென்ட் உறங்கிக் கொண்டிருக்கிறான். எழுப்பி விஷயம் சொல்லலாமா. ஆனால் உப்பு பெறாத விஷயத்துக்கு தப்பா அவனை எழுப்பினால் பளார்னு விழும் கன்னத்தில். இருந்த மன அழுத்தத்தில் சார்ஜென்ட்கள் தானறியாத அசதியில் தூங்குவார்கள். அதைக் கலைப்பது, சரியான காரணத்துக்கு எழுப்பினாலும் கூட, அவர்களுக்கு மகா எரிச்சலைத் தந்துவிடும்.
      வராந்தா வாயிலைப் பார்த்தபடி கூர்த்த விரைப்புடன் காத்திருந்தான்.

      மெல்ல, இரு செங்குத்துப் பாங்கான இரும்புச் சட்டங்களின் ஊடே, பிசாசு போல, ஒரு வெள்ளை முகம் ... ஒரு குருடனின் முகம். குபீரென்ற திகில்ப் பாய்ச்சல். ரத்தமே உலர்ந்து விட்டாப்போல. அத்தனை கிட்டத்தில் தெரிந்த அந்தக் குறியைப் பார்த்து ரைஃபிளை சிப்பாய் சடசடவென இயக்கினான்.
*
storysankar@gmail.com
91 97899 87842 

Comments

Popular posts from this blog