வண்ணச்சீரடி
எஸ். சங்கரநாராயணன்
ஆனந்தி இப்போது நடக்க ஆரம்பித்திருந்தது.
வீட்டு வராந்தாவில் நடைவண்டி வைத்து அதை நடத்தினால் என்ன வேகம். வேகம் அதிகரிக்க அதிகரிக்க
நடை தறிகெட்டு ஒரு ஓட்டம். ‘பாத்து. மெதுவா மெதுவா’ என்று பிடிக்க வந்தால் கையைத் தட்டிவிட்டு
விடுகிறது.
அந்த விளையாட்டுக்கு அம்மா ஐஸ்வண்டி
என்று பேர் சொல்லிக் கொடுத்திருந்தாள். ‘ஸ்’ என்று உயரத்தில் வைத்திருக்கும் நடைவண்டியைக்
காட்டும் அது. தடதடவென்று தொடையெல்லாம் அதிர ஒரு நடை, நடையோட்டமாகி, நேரேபோய் சுவரில்
டமாரென்று முட்டி, வண்டியைத் திரும்ப இழுக்கத் தெரியாமல் நிற்கும். வண்டியைத் திரும்ப
இழுத்தால் டப்பென்று தரையில் உட்காரும். தானே எழுந்துகொள்வதாக வண்டியைப் பிடிக்க, வண்டி
அதன்மேல் கவிழும்.
அவள் குழந்டிதயைப் பார்த்துச் சிரிக்க
வேண்டும். எல்லாவற்றுக்கும் அவளிடம் பாராட்டை எதிர்பார்த்தது அது. தவறி விழுந்தால் கூட சிரிக்க வேண்டும் என்றால் எப்படி?
என்ன ஒரு அராஜக ராஜாங்கம் நடத்துகிறது, என்று ஆச்சர்யமாய் இருக்கும் அவளுக்கு.
நன்றாக ஓடிச்சாடும் வயது. இந்நேரம்
சாப்பாடு விஷயத்தில் நாம் சரியாக ஈடு கொடுக்க வேண்டாமா?... என்று கவலையாய் இருக்கும்.
ஃபேரக்ஸ் ஆரம்பித்திருந்தாள். பருப்பை மையாய்ப் பிசைந்து நெய்யூற்றி கைபொறுக்கும் சூட்டில்
ஊட்டினாள். காரட் மாதிரி மென்மையான காய்கனிகள் சேர்த்துக் கொண்டாள். காரம் அதிகம் இல்லாதபடி
கொஞ்சம் ரசத்தெளிவு. எல்லாம் சனி ஞாயிறுகளில் மாத்திரமே வாய்க்கிறது பாவம். மற்ற நாட்களில்
ஹாட்பேக் இட்லிதான் என் கண்மணிக்கு. அதையும் அது துப்பத் துப்ப போக்கு காட்டி ஊட்ட
வேண்டும். நாலு திசைகளிலும் அதை கவனப்படுத்தி சுவாரஸ்யப்படுத்தி, ராத்திரிப்போது என்றால்
நிலா காட்டி, உம்பாய் காட்டி… குனிய நிமிர முதுகு கடுத்து மூச்சு விட்டுப்போகிறது.
அப்போதுதான் வயிற்றை நிரப்ப முடியும். வயிற்றை அமுக்கிப் பார்த்து (குழந்தை கண் வரியோட
கூச்சத்தில் சிரிக்கும்.) வயிறு நிறைய எந்த ஆயா சோறூட்டுகிறாள்?
ஆனந்தி நல்லவேளை படுக்கையில் மூச்சா
போவதை நிறுத்திவிட்டது. பாதிக் குழந்தைகளை ஆயா அப்படியே நீந்த விட்டிருப்பதை அவளே பார்த்திருக்கிறாள்.
அதைப்பற்றிக் கேட்க பயம். என் குழந்தையை ஒழுங்கா கவின்சிக்கோடி தாயே அது போதும், என்றுதான்
மனதில் படுகிறது. இப்படி ஈரத்தில் விடுவது எத்தனை கிருமிகளை உற்பத்தி செய்யும், பரவச்
செய்யும், என்று கூடவே கவலை வருகிறது. இதெல்லாம் பார்க்க சனியன் வேலையும் வேணாம், ஒண்ணும்
வேணாம் என்று உதறியெறியத் துடிப்பாய் இருக்கிறது. எல்லாம் தக்கணத்து சிந்தனைகள். மறுநாள
காலை வழக்கம் போல குழந்தையை இடுப்பில் தூக்கிக்கொண்டு ஓடி கிரீச் போக, குழந்தை அழ அழ,
(அங்க பார் ஐஸ் வண்டி. ஐ சூப்பர்! இந்த ஆயா.) பஸ் பிடிக்க ஓடியாகிறது.
சில நாட்களில் அவள் கிரீச்சுக்கு
வரும்போது ஆனந்தி தூங்கிக்கொண்டிருக்கும். தூங்கும் குழந்தைகள் அதிக கனமாய் இருக்கின்றன
ஏனோ. தூங்கினாலும் திடீரென்று விசும்புவதும், வாயில் விரல் போட்டு சர்ர் சர்ரென்று
சப்புவதுமாய் சலனப்படும். கூர்ந்து பார்த்தால் அதன் கண்ணுக்குள் ‘பாப்பா’ அசைவதைக்
காணலாம். இதும் மனசுல என்ன நினைப்பு ஓடுது, அது என்ன கனவு காணுது என்று தெரிந்துகொள்ள
ஆசையாய் இருக்கும் அவளுக்கு.
அப்போதுதான் தூங்கி எழுந்து கொண்டிருந்தது போலும்.
ஆனந்தி உற்சாகமாய் இருந்தது. ஜன்னல் பக்கம் எக்கி நின்றபடி ஜன்னலில் கன்னத்தை அழுத்தி
வைத்துக்கொண்டு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தது.ஜன்னல் கம்பியின் ஈர ஜில்லிப்பு அதற்குப்
பிடித்திருக்க வேண்டும். எத்தனை முறை அந்த ஜன்னலை நக்கிச் சுவைக்கிறதோ, என்ற கவலை வந்தது.
இது எதைப் பார்க்கிறது என்று கவனித்தாள். காம்பவுண்டுச் சுவரின் அந்தப் பக்கம் வேலிக்குள்
இருந்த பசுந்தழையை எட்டிப் பிடிக்க முயன்ற ஆட்டை கவனித்துக் கொண்டிருந்தது குழந்தை.
முன்காலை உயர்த்தி நின்றபடி ஆடு குழையைக்
கடிக்க முயன்றது.
‘‘ஏய் பப்ளிமாஸ்!”
அம்மாவின்
குரல் அதற்கு நன்றாகத் தெரியும். சட்டென்று சிரிப்புடன் அது திரும்பித் தேடியது. அம்மாவைக்
கண்டதும் அது ஜன்னல் பக்கமிருந்தே விரலை நீட்டி “தூ…” என்று கை நீட்டியது.
“இரு வரேன்”
என்று அவள் உள்ளே வந்தாள். குழந்தை ஜன்னலில் நிற்கையில் அது உயரம் கொடுத்திருப்பது
தெரிந்தது.
அவள் குழந்தையுடன்
வெளியே வந்தாள். வெளியே வந்த ஜோரில் அது அந்த ஆட்டை எட்டித் தொட முயன்றது. “ஏய் முட்டும்
அது…” என்று அதைப் பின்னால் இழுத்தாள் அவள்.
இன்றைக்கு
அலுவலகத்தில் வேலை கொஞ்சம் அதிகம் தான். ஐந்து
மணி பார்த்து அவள் எழுந்து கொண்டதில் மேனேஜருக்கு சிறு வருத்தம். “நான் போய் குழந்தையையும்
எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போகணும் சார்” என்றாள் சித்ரா. “நல்ல சாக்கு கிடைச்சது
உங்களுக்கு. ம். போங்க போங்க” என்றார் அவர். அவர் குழந்தைகள் வளர்ந்து ஆளாகி விட்டன.
இந்தக் கவலைகள் அவருக்கு இல்லை.
அடடா க்ரீச்சிலேயே
உட்கார்ந்து இதற்குத் தாய்ப்பால் கொடுத்துவிட்டு வந்திருக்கலாம் என்று பட்டது. குழந்தையின்
வயிற்றை அமுக்கிப் பார்த்தாள். (கெக் கெக் என்று சிரிக்கிறது அது.) பசியாய் இல்லை.
நல்லவேளை. தவிரவும் பசித்தால் அதுவே முந்தானைக்குள் முகத்தைத் தேய்த்து கேட்டு வாங்கிக்
கொள்ளும்.
பஸ் நிறுத்தத்தில்
கூட்டம் அதிகம் இருந்தது. ஆட்டோவும் டூ வீலர்களுமாய் இங்கே அங்கே என்று தெருவே பரபரத்துக்
கிடந்தது. இடையே ஒரு நாய் அடிபடுகிறாப் போல ஓடியது. வண்டிகள் நெருங்கி வந்து பிரேக்
போட்டதில் கிரீச் என்று பிரேக் பிடிக்கும் சத்தம். (கிரீஸ் இல்லை என்கிற சத்தம்.)
கூட்டம்
பார்த்ததும் குழந்தை பரபரப்படைந்தது. அதன் மூச்சிலேயே ஒரு சுறுசுறுப்பு. எல்லாவற்றையும்
ஒரு மலர்ச்சியேடு அது பார்த்தது. நின்றுகொண்டிருந்த ஒரு ஆட்டோவின் ஹாரனை அது அடிக்க
முயன்றது. அதற்கு கை எட்டாத அளவில் தள்ளி நின்றுகொண்டாள் சித்ரா. அவளை எத்தி உந்தித்
தள்ளி குழந்தை கீழே இறங்க முயன்றது.
“அஸ்ஸோ…
அந்த மாமா அடிப்பா” என்று அவள் ஆட்டோ டிரைவரைக் காட்டினாள்.
சட்டென்று
குழந்தை ஒரு விரைப்புடன் ஆட்டோ டிரைவரை நோட்டம் பார்த்தது. பின் திரும்பி இவளைப் பார்த்தது.
“கீய.”
“ஐய. கீழெல்லாம்
ஒரே ஆய்” எனறாள் அவள். “அதோ அக்கா பார்.”
“க்கா.”
“ம்.”
பஸ் நிறுத்தத்தில்
வேறொரு சிறுமி நின்றிருந்தாள்.
சிறுமி அவள்
கைப்பையையே பார்த்தது. குழந்தையை விட சிறுமி படபடப்பாய் உணர்ந்தாள்.
கைக்குள்
தட்டுப்பட்டது டியோடரன்டா பாப்பின்ஸ் ரோலா தெரியவில்லை. வெளியே எடுத்துப் பார்த்தாள்.
போலோ.
தா, என்று
கை நீட்டியது குழந்தை.
சிறுமி குழந்தயையே
பார்த்துக் கொண்டிருந்தாள்.
குழந்தை
இடது கையை நீட்டியது. “அந்தக் கை” என்றாள் அம்மா. அந்தக் கைக்கு ஒரு போலோ கொடுத்தாள்.
அதை வாங்கிக் கொண்டு குழந்தை திரும்பவும் இடது கையை நீட்டியது. “அடிச் சமத்தே” என்று
அம்மா சிரித்தாள். அதன் இடது கையில் இன்னொரு போலோ கொடுத்தாள். “ஒண்ணொண்ணாச் சாப்பிடணும்”
என்றாள் அம்மா.
ஒன்றை வாயில்
போட்டு சாப்பிட்டபடி குழந்தை சிறுமியைப் பார்த்தது. அதன் கண்ணைப் பார்த்தது. சட்டென்று
அவசரமாய் இன்னொன்றையும் அது வாயில் போட்டுக் கொண்டது. சிறுமி முகத்தை மாற்றிக் கொண்டாள்.
இனி குழந்தையிடம் அவள் பார்க்க எதுவுமில்லை.
பஸ் நிறுத்தத்தில்
கூட்டம் சேர்ந்துவிட்டது. வரும் பஸ்சே கூட்டமாய் வரும். இங்கே வேறு கூட்டம். என்ன செய்ய,
எப்படி வீ5ட்டுக்குப் போய்ச் சேர,திகைப்பாய் இருந்தது. இந்தக் கூட்டத்தின் நடுவே ஒரு
மாடு புகுந்து இடையே சுவாதீனமாய்க் கடந்தது. எல்லாரும் பதறி ஒதுங்கி வழிவிட்டார்கள்.
குழந்தை கை நீட்டி எக்கி அதன் கொம்பைப் பற்றி இழுக்க முயன்றது. மாடு தலையை இயல்பாய்
ஈயை விரட்டும் முயற்சியிலோ என்னமோ இடப் பக்கமாய் ஒரு வீசு வீசியது. சட்டென்று பயந்து
அம்மா குழந்தயை இழுத்துக் கொண்டாள்.
“பாத்தியா.
உம்பாய் முட்டும் தொடப்டாது.”
“கீய” என்றது
குழந்தை. வாயில் பெப்பர்மின்ட்டை அது நறுக்கென்று கடித்த சத்தம் கேட்டது. முழு வாயில்
ஊற வைத்து சாறை உறிஞ்சும் பொறுமையை அது இழந்திருந்தது. என்ன இந்த அம்மா, நம்மை டபாய்க்க்கிறாள்,
என்று அஇதற்குத் தோன்றியதோ என்னவோ.
குறைந்தபட்சம்
ஷேர் ஆட்டோ மாதிரி கிடைத்தால் நல்லது. ஓரளவுக்கு வசதியாய்ப் போகலாம். இந்த நெரிசலில்
பஸ்சேறி குழந்தையுடன் அவள் நிற்க முடியாது. ஒருத்தியும் எழுந்துகொண்டு அவள்உட்கார என
இடம் விட்டுத்தர மாட்டளுகள். ஆண்களாவது சிலர் இரக்கப் படுகிறார்கள். பெண்களோ எனோ இரக்கப்
படுவதேயில்லை.
இவள் வழிக்கு
வரமாட்டாள், என்கிறதாய் குழந்தை அம்மாவிடம் நம்பிக்கை இழந்தது. தானே கீழே இறங்க அது
முன்பக்கமாகக் குனிந்தது. அம்மாவின் புடவை சரிந்து சேலை விலகியது. தோள்ப் பக்கம் புடவையை
பிளவுசுக்குள் செருகியிருந்தாள். அவள் பின் போடவில்லை. சட்டென்று புடவை விலகி உருவிக்கொண்டு
வெறும் ஜாக்கெட்டும் தோள்களும் தெரிந்தன. “எய் அம்மா அப்றம் அடிப்பேன்” என்று அம்மா
திரும்ப குழந்தையை மேலேற்றிக்கொண்டே திரும்ப புடவையை ஜாக்கெட்டுக்குள் சொருகிக்கொண்டாள்.
குழந்தை
சுற்றுமுற்றம் பார்த்தது. யப்பா. எத்தனை கூட்டம். இவர்கள் அத்தனை பேரையும் ஒருசேரப்
பார்க்க அதற்கு சந்தோஷம் கிறுகிறுவென்று போதையேறியது.
யாரோ ஒரு
சிறுவன் சைக்கிளில் குரங்குப் பெடல் போட்டபடி மணியை கிணுங் கிணுங்கென அடித்தபடியே போனான்.
குழந்தை அந்த ஒலியால் உற்சாகப்பட்டு சைக்கிள் போவதையே பார்த்தது. அது அம்மாவைப் பார்த்தபடியே
“ஸ்” என்றது.
“ஆமாண்டி
குஞ்சலம்” என்றாள் அம்மா.
பஸ் நிறுத்தத்தில்
இளைஞன் ஒருவன் குழந்தை அவனைக் கைகாட்டி அம்மா முகத்தைத் திருப்பி “ஜ” என்றது. அம்மா
திரும்பிப் பார்த்தாள். பின் குழந்தை முகத்தைப் பார்த்துச் சிரித்தாள். “ஐய அது ராஜா
மாமா இல்லடி.”
நல்லவேளை.
ஷேர் ஆட்டோ ஒன்று வந்து நின்றது.
வீடுவரை
அந்த ஆட்டோ வருவதில்லை. திருமண மண்டபத்தோடு ஆட்களை இறக்கி விட்டுவிட்டுத் திரும்பி
விடுகிறது. சிறிது தூரம் அவள் உள்ளே நடக்க வேண்டியிருந்தது.
அவள் ஆட்டோவில்
இருந்து இறங்கினாள்.
குழந்தையைத்
தூக்கிக்கொண்டு நடந்தாள். ஒருபக்கம் கைப்பை. உள்ளே டிஃபன் பாக்ஸ்,விகடன். குழந்தையின்
சிறு தேவைகளுடன் கர்ப்பமான பசு வயிறாய் கூடவே தனிப் பை ஒன்று. கூடவே குழந்தை. நடக்க
சிரமமாய் இருந்தது.
தெரு நடமாட்டம்
இல்லாமல் காலியாய் அமைதியாய்க் கிடந்தது. இரவு துவங்கிய வேளை. வெயில் மஞ்சளோடு தெருவில்
சோடிய விளக்குகளின் மஞ்சள் பூச்சு வேறு.
கை வலித்தது.
முன்னே குனிந்து குழந்தயை இறக்கியவாறே “கீய” என்றாள்.
“நானாம்“
என்றது குழந்தை. திமிறி விரைத்து அவளோடு சாய்ந்துகொண்டது.
* *
91 97899 87842 storysankar@gmail.com
Comments
Post a Comment