மாயபிம்பம்
அமர்நாத்
(நாவலின் பகுதி)
'ப்ரணவ்! இந்த வாரத்துக்கு என்ன?”  
'என் ஜெர்மன் பாடத்தில் வந்த ஒரு கவிதை.  ஹெர்மன் ஹெஸ்ஸேயின் கற்பனை. படித்தவுடனே பிடித்துவிட்டது. அதை ஆங்கிலத்தில் எழுதிப்பார்த்தேன்.”  
'எங்கே, காட்டு!”
அவன் நீட்டிய காகிதத்தில்.
வாழ்க்கைக் கட்டங்கள்
அரும்புகட்டி மலர்ந்து வாடும் பூக்கள்
முதுமையைத் தேடிப்போகும் இளமை
ஒவ்வொரு முடிவும் இன்னொன்றின் ஜனனம்.
ஒரு பருவத்தின் அறிவும் பெருமையும்
தொடர;ந்து நம்முடன் வருவது நியாயம் இல்லை.
நிகழ்காலத்துடன் பிரிவு எதிர;காலத்தின் வரவேற்பு.
நாளை புதிய வார்ப்புகள், புதிய இணைப்புகள்.
ஒவ்வொரு ஆரம்பமும் ஒரு ஜாலம்.
அதுவே வாழ்க்கையின் சுவாசம்.

பழகிவிட்ட இல்லம் நமக்குச் சிறை.
தினசரி வழக்கங்கள் கைகால் விலங்குகள்.
நிரந்தரம் நம்மைக் கட்டிக்காக்கும் காவல்.
வீட்டுக்கு வெளியே கைநீட்டி அழைக்கும்
முடிவற்ற தொடுவானம், அதோ! 
ஒரு கட்டம்
அதில் அடுத்த கட்டத்தின் நுழைவாயில்
வழிகாட்ட பிரபஞ்ச சக்தி.
பரிச்சயங்களுக்கு விடைசொல்லி
பயணத்தைத் தொடர ஏன் தயக்கம்?

இறப்பும் ஒரு விடுதலை. 
முடிவற்ற பயணத்துக்கு முன் வரும்
பிரியாவிடை. 

ரஞ்சனி மேலோட்டமாகப் பார்வையை ஓட்டினாள். பிறகு, ஒவ்வொரு வார்த்தையாகப் படித்தாள். கடைசியில் ஒட்டுமொத்தமாக ரசித்தாள். அப்படிச் செய்தபோது ஓரக்கண்ணால் ப்ரணவை அளந்தாள். பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் இடுப்பைக் கட்டிக்கொண்ட சிறுவன். ஏழாம் வகுப்புவரை அவளிடம் கணிதம் கற்ற மாணவன். இப்போது பெரியவர்களுக்கு சரிசமமாக வாழ்க்கைப் பிரச்சினைகளை விவாதிக்கும் பதின்பருவப் பையன். ப்ரபாவுக்கு மட்டும் அல்ல, அவள் தோழிகளுக்கும் இளகிய மனமுடைய அண்ணன். பெருமிதத்தில் நெஞ்சு விம்மியது. ‘முகம்கொடுத்துப் பேசுவது இல்லை’, ‘அவன் அறையில் நாள்முழுக்க அடைந்துகிடக்கிறான்’, ‘வீட்டுப்பொறுப்பு கொஞ்சமும் கிடையாது’ என்று மற்ற பெற்றோர்கள் குறைசொல்வதைக் கேட்கும்போது தனக்கு வரும் மனத்திருப்தி. ஏழு கல்லூரிப் பாடங்கள் எடுத்து படிப்பே குறியாக இருக்கும் சீனப்பெண் முதல் எழுத்துக்கூட்டிப் படிக்கத்தெரிந்தால் போதும் என நினைத்த கால்பந்து ஆட்டக்காரன் வரை எல்லாரும் அவன் தோழர்கள். 'இத்தனை புத்திசாலியாக இருந்தும் ப்ரனவ் ‘நெர்டா’க இல்லையே” என்று தெரிஸா ஆச்சரியப்படுவது உண்டு. எல்லாவற்றையும் போல இதிலும் பெற்றோர;களின் முயற்சி பாதி, அதிருஷ்டம் பாதி. 
'எளிய வார;த்தைகள், ஆழ்ந்த தத்துவம். நீ அனுபவிச்சுப் படிச்சிருக்கேன்னு தெரியறது. கவிதை எதைக் காட்டறது?”
'உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதனால், வாழ்வின் ஒரே கட்டத்தில் உட்கார முடியாது. நகர்ந்துகொண்டே தான் இருக்கவேண்டும்.” 
'ரொம்ப சரி. அதனாலதான் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு என்று பாடங்களை உன்மேல திணிக்கல. வாழ்நாள் முழுக்க பயன்படும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.” 
'தாங்க்ஸ், மாம்! குழந்தைகளுக்கும் இது பொருந்தும். ப்ரபா ஒருவார்த்தை பேசினப்ப நமக்கு ஒரே ஆச்சரியம். அந்த அதிசயத்திலேர்ந்து நாம் விடுபடுவதற்குள் அவள் முழு வாக்கியமே பேசிவிட்டாள்.”  
'அப்புறம்...”
'நம் முன்னோர்கள் ஒரு இடத்தில் நிலைத்து வாழாமல் நாடோடிகளாகத் திரிந்தார்கள். ஒருநாள் போல இன்னொரு நாள் இராது. புதிய சூழல்கள், புதிய சவால்கள். அவர்கள் வாழ்க்கையே இக்கவிதை. ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப செய்து ஒரு இடத்தில் நிலையாக வீடுகட்டி வாழ்கிற நமக்கு இந்த அறிவுரை மிக அவசியம்.” 
'நீயும் பிரபாவும் காலேஜ் போனதும் இந்த வீட்டை எங்க ரெண்டு பேர் உபயோகத்துக்கு மாத்தறதா இருந்தேன். இந்த இடத்தில தையல் மெஷின், அந்த மூலையில படங்களுக்கு ஃப்ரேம் போடற வேலை, கீழ் அறையில் அப்பாவின் பூஜைக்கு விக்கிரகங்கள், இப்படித் திட்டம் போட்டிருந்தேன். நீ சொல்றபடி பார்த்தா, இந்த வீட்டில நிலைச்சு நிற்காம தாற்காலிக வாழ்க்கைக்கு நாங்க மாறணும்…”  
கல்லூரி நூலகத்தின் புதுப்புத்தக அலமாரியில் ராஜேந்திர பிரசாதின் கவனத்தை ஈர்த்த ‘அன்வீவிங் த ரெய்ன்போ’எடுத்துவந்து ப்ரணவிடம் கொடுத்தார் அப்பா. ஒருவாரம் போனதும்...
'எப்படி இருக்கு?”
'ரிச்சர்ட் டாகின்ஸின் வார்த்தைப் பிரயோகம், வாக்கிய அமைப்பு இரண்டும் பிரமாதம். பரிணாமத்தின் கடினமான தத்துவங்களை எல்லாரும் புரிந்துகொள்ள அவர் எழுதிய புத்தகங்கள் பிரபலமானவை.” 
'இது...” 
'பிரதான கருத்து எனக்குப் பிடித்தது. வானவில் நீர்த் திவலைகளில் சிதறும் சூரியவொளி என்ற அறிவியல் விவரம் தெரிந்தால் அதை ரசிக்க முடியாது என்ற கீட்ஸின் கவிதை சரியில்லை, சொல்லப்போனால், நம் ரசனை இன்னம் கூடுகிறது. வானவில் ஒளித்தோற்றம் என்பதால் அது முடிகிற இடத்தில் தங்க நாணயங்கள் நிறைந்த பானை இருக்குமோ என்று தேடவும் வேண்டாம்.”
மத இலக்கியத்தில் பற்றுவைத்த சரித்திரப் பேராசிரியர் தந்தைக்கும் அறிவியலில் ஆர்வம் பிறந்த மகனுக்கும் சிலகாலமாக கருத்து வேற்றுமை. 
'வாழ்க்கையில் புதிர் இருக்கத்தான் வேண்டும். இயற்கையின் எல்லா ரகசியங்களையும் நாம் புரிந்துகொள்ள முடியாது. மனித உணர்ச்சிகளுக்கு அறிவியல் விளக்கம் சொல்ல முடியுமா?” என்று சவால் விட்டார்.
'உண்மைதான். டாஸ்டயாவ்ஸ்கியும் டால்ஸ்டாயும் செய்ததை எந்த விஞ்ஞானியும் செய்ய முடியாது. ஆனால், நிச்சயமாகத் தெரிந்த விஷயங்களை அலட்சியம் செய்வது அறிவீனம். மில்டனின் ‘பாரடைஸ் லாஸ்ட்’டை எடுத்துக் கொள்வோம். பூமியை மையமாகக் கொண்ட பிரபஞ்சமும், வற்றாத கந்தகம் எரியும் நரகமும் எவ்வளவு அழகாக வர்ணிக்கப்பட்டாலும் எனக்கு பிரமாதமாகப் படவில்லை” என்று அவன் அவரை வம்புக்கு இழுத்தான்.
'அறிவைவிட கற்பனாசக்தி முக்கியம் என்று ஐன்ஸ்டைன் சொல்லி இருக்கிறார்.” 
'இரண்டையும் ‘எ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம்’ போல அளவோடு கலக்கினால் ரசிப்பேன்.”
'சரி, நியூட்டனின் விதிகளைக் கவிதையில் வடிக்கமுடியுமா?” என்று அவர; அவனை மடக்கினார;. 
'அதற்கு கணித சமன்பாடுகள் தேவை. ஆனால், ‘உயிரினங்களின் தோற்றம்’ ஒரு உரைநடைக் காவியம்.” 
'சரி, இந்தப் புத்தகம் எப்படி?” 
'பல இடங்களில் பிரதான கருத்தில் இருந்து விலகிப் போகிறது. அவற்றை நீக்கியிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.”    
'நாவலோ கட்டுரைத் தொகுப்போ கையில் கணிசமாக முன்னூறு நானூறு பக்கம் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்கள். ராபின் குக் நாவல்களில் பாதியை தள்ளிவிட்டுத்தான் நான் படிப்பேன். அந்த நல்ல காரியத்தை அவரே செய்திருக்கலாம்.”  
விவாதம் சமரசமாக முடிந்தது.
••

amarnakal@gmail.com

Comments

Popular posts from this blog