2006ம் ஆண்டின் சிறந்த நாவல் - தமிழக அரசு பரிசு
நீர்வலை
எஸ்.சங்கரநாராயணன்
படிப்பு வராதவர்கள்
என்று ஒதுங்கியவர்களே அங்கே ஒர்க்ஷாப்பில் இருந்தார்கள். அப்பாவுக்கு இராணுவ பென்ஷன்
என்று வந்தபோதிலும், மருந்துகளுக்கே பத்தாத நிலை. நாலுபேரை நம்பி, கடன் கொடுத்து வாங்கி,
ஏகப்பட்ட சிக்கல்களில் அப்பா மாட்டிக்கொண்டு, கடனை அடைக்க வட்டியே ஆளை வீழ்த்தி...
வாழ்க்கை திசைதடுமாறிய படகாக திணறிப்போனது. அப்பா உடம்பு மிலிடரி உடம்பு என்று சொன்னால்கூட
நம்ப முடியாதிருந்தது. மிலிடரி ஓட்டல் சர்வர் உடம்புடா - என்று கிண்டல் செய்யும்படியாய்
ஆகியிருந்தது!
அப்படி அவனுக்கும்
ஒண்ணும் படிப்புதாகம் என்றெல்லாம் இல்லை. சரி, என்று பாடப்புத்தகத்தை எடைக்குப் போட்டான்.
சோன்பாப்டி கிடைத்தது. அவன் புத்தகத்தையே கிழித்து, கட்டிக்கொடுத்தான் வண்டிக்காரன்.
நாலு பக்கமும்
கோட்டைபோல் நெளி நெளியாய் தகரமறைப்பு கண்ட பெரிய வளாகம்தான். மணி டிரான்ஸ்போர்ட். தனியார்
பஸ் டவுண்பஸ் சர்வீஸ் ஒன்று முதலாளிக்கு இருக்கிறது. தனியே வேறு தெருவில், லாரி பார்சல்
ஆபிஸ். ரெண்டு மூணு லாரிகள் லோடு அடித்தன. ஒரு லாரி அண்ணன் கையில். தவிர வேறு கனவாகனங்களில்
பழுது, என்றுவந்தால் பார்த்துக்கொடுத்தார். எப்படியும், யானைக்கொட்டடி போல ஒன்றிரண்டு
பெரிய வாகனம் - பஸ் - தண்ணி லாரி - லோடு எடுக்கும் லாரி, என உள்ளே நின்றது.
ஒரு விபத்தான
லாரியின் முன்நெற்றி மாத்திரம் எப்போதும் ஓரத்தில் கிடக்கும் அங்கே. லாரிக்குப் பேர்
வைத்திருக்கிறார்கள் - யாமிருக்க பயமேன் - அதை நம்பிய ஆள் என்ன ஆனோனோ அந்த விபத்தில்?
யாமிருக்க, வேறு
பயமேன்!
அந்தத் தரையே
கிரீசும், டீசல், பெட்ரோல், கீல் எண்ணெயுமாய்ப் படிந்து கருப்பாய் பளபளத்து வழுக்கியது.
செதுக்கியெடுத்தால் எள்ளுப் புண்ணாக்கு போல கட்டியாய் மண் பெயர்ந்துவரும். மழைக் காலமானால்
ஜாக்கிரதையாய்த்தான் நடக்கணும். இப்பவே ஜாக்கியில் தூக்கிய வண்டிக்குத் தண்ணீர் அடிக்கையில்
சிந்தினால் காயும் வரை சிரமம்தான். உட்கார்ந்து வேலை செய்ய பலகை போட்டுக்கொள்வார்கள்.
சிறு சிறு சுற்றுவட்ட
வேலைகள்தான் கஷ்டமாய் இருந்தது அவனுக்கு. டயர்பஞ்ச்சர் என்றுவந்தால் எட்டு நட்டு போலக்
கழற்றி எடுக்க வேண்டிவரும். காலகாலமாய் மண் படிந்து இறுகிப்போன நட்டுக்கள். அவற்றைக்
கழற்ற என்றே எக்ஸ் போல உபகரணங்கள். அதில் ஏறி, வயலில் ஏற்றம் இறைக்கிறாப்போல மிதித்து,
நட்டை ஊப் என தம் பிடித்து, மூச்சடக்கி, அமுக்கி, அசைத்துக் கழற்ற அபாரசக்தி தேவை.
அதேபோல் டயரைத் திரும்ப மாட்டுவதும் பெரும்பாடு.
கனவாகனங்களில்
முன்பக்கம் ரெண்டு டயர், பக்கத்துக்கு ஒன்றாக - என்றாலும் பின் பக்கம் பக்கத்துக்கு
ரெண்டு, என மொத்தம் ஆறு டயர்கள். உள்டயரில் பஞ்ச்சர் என்றாகிப் போனால் கழற்றுவது இன்னும்
சிரமமான வேலை.
ஊ..ப்ப்ப்!
அவன் உடம்பில்
தெம்பே இல்லை. மூச்சு வாங்க வாங்க வேலைசெய்ய வேண்டியிருந்தது. சில கனமான சாமான்களைத்
தூக்கவே சிரமப்பட்டுப் போயிற்று. ஒவ்வொரு டயரும் என்ன கனம். ணங் கென்று டயரைக் கீழேபோட
தரையே பாளம் பாளமாய்த் தெறித்தது. காலில் விழுந்தால், என நினைக்கவே பயமாய் இருக்கும்.
போகப்போகச் சரியாகிவிடும் என்று தேற்றிக்கொண்டான்.
போகப் போக எது
சரியாகி விடும்? கால் புண்ணா!
லாரியாபிசில்
மற்ற பையன்களுடன் படுத்துக் கொண்டான் முதலில். கமலாதான் வற்புறுத்தி அழைத்தது. கிருட்டினமணியும்
தலையாட்டி விட்டான்... ராத்திரி பத்தோ பத்தரையோ ஆனாலும் பரவாயில்லை. வேலையைமுடித்த
கையோடு வீடு வந்து சேர், என்றான் அண்ணன்.
நல்லா திருத்தமா
அழகா குண்டு குண்டான கையெழுத்து கமலாவுக்கு. வீட்டுப்பாடங்களை முன்குனிந்து கவனமாய்ப்
பென்சிலில் அழுத்தி எழுதும்போது நாக்கை ஏனோ சேஷ்டைகள் செய்யும். வீட்டில் அதற்குப்
பாடம் சொல்லித் தர ஆள் இல்லை. பள்ளிக்கூடம் விட்டு வழியில் டீச்சர் வீடு. அங்கே போய்ப்
படித்துவிட்டு வரும். மாலையில் டீச்சர் வீட்டுக்குப்போய் சிவஜோதி கூட்டிவருகிறாள்.
என்னமாச்சும் பாலோ, கூட நொறுக்குத்தீனியோ எடுத்துக்கொண்டு, டீச்சர் வீட்டில் சாப்பிடக்
கொடுத்துக் கூட்டிக்கொண்டு வருவாள். அம்மா முதுகில் பள்ளிக்கூடப் பைக்கட்டு. கையில்
தண்ணீர் பாட்டில் மதியச் சாப்பாட்டு டப்பி எல்லாம் வைத்த லன்ச்பேக். பார்க்க அம்மா
பள்ளிக்கூடம் போய்வருகிறாப் போல இருக்கும்! கைவீசி வீசி லெஃப்ட் ரைட் நடை நடந்து வரும்
கமலா.
தினசரி சிவாஜிமேல்
கால் போட்டுக்கொண்டு தூங்குகிறாள் கமலா. அண்ணன் எங்க ஓடிப்போயிருவானோ, என்று பயந்தமாதிரி
இருக்கிறது அவள் செயல்! காலை சீக்கிரம் கிளம்ப வேண்டிய சந்தர்ப்பங்கள் சிரமமானவை. அவன்
மெல்ல, அவள் அறியாமல், அவள்காலை சலனப்படுத்தாமல் நகர்த்த முற்பட்டால், சட்டெனத் திரும்பி,
கையால் அவனை அணைத்துப் படுத்துக்கொள்வாள் குழந்தை. பிரித்துக்கொண்டு கிளம்ப மனசு சங்கடமாய்
இருக்கும்.
பட்டறையில் வேலை
ஒரே மாதிரி அமையும் என்று சொல்ல முடியாது. சில நாட்கள் வேலையே இராது. கம்பெனி பஸ்,
கம்பெனி லாரியில் வழக்கமான செக் அப் முடித்து விட்டால் வேறுவேலை இல்லாமல் காலியாக இருக்கும்
வளாகம்.
முதலாளி இல்லை
என்றால் கொட்டம் அடிக்கலாம்... எறிபந்து விளையாடலாம். எவனாவது அப்பிராணி சுப்ரமணியை
தெருநாய்போல நடுவில் மாட்டி பந்தால் நச்சி எடுத்துறலாம்.
துப்புரவா வேலை
இல்லாத சந்தர்ப்பத்தில், எப்படியோ தெரிந்துகொண்டு, பெரியாள் நம்பிக்கு யாரோ பெண் ஃபோனில்
பேசும். லவ். பேசியபடியே பெரியாள் நம்பி தன்னைப் போல தலையைத் தடவி, முடி ஒதுக்கி விட்டுக்குவான்.
சீப்பால் வாரிக் கொள்வான். இன்னும் கொஞ்சநாளில் பவுடர் கூட அடிக்கக் கூடும்!...
ஃபோனில் பேசிக்கவே
இந்த அமர்க்களம் அப்பா!
காதல் வந்துவிட்டால்
இந்த மனுஷாள் - ஆணாயினும் பெண்ணாயினும் கொஞ்சம் பைத்தியசாயல் கொண்டு விடுகிறார்கள்.
சிலசமயம் அந்த பெரியாள் நம்பி ஸ்பேனர் எடுத்து வந்திட்டிருக்கிற போதே தானே சிரிச்சிக்கிறான்.
நடையில் இடுப்புவலி கண்டாப்போல ஒரு வெடுக் ஒடிப்பு. நொடிப்பு... என்னடான்னா ... ஒண்ணில்ல
ஒண்ணில்ல, என்று ஆனால் தொடர்ந்து சிரிக்கிறான். சில சமயம் அவனிடம் தனி பரபரப்பு காணும்.
உடம்பு இங்கே, மனசு வேறெங்கோ எனத் தெரியும்.
அவளிடம் இருந்து
ஃபோன் எதிர்பார்க்கிற நேரங்களாக அவை இருக்கலாம். அழைப்புவரத் தாமதம் ஆகும் ஒவ்வொரு
நிமிஷமும் இவாள் படற பாடு. தலையைத் தலையை எத்தனையோ தடவை வாரிக்குவான். பட்டறைக்குள்ளேயே
நடையா நடை... ஃபோன் மணி அடித்தாலே இவனுக்குதான் என்கிறாப் போல உடம்பு சிலிர்த்து தூக்கிப்
போடுகிறது. அவனுக்குதான் ஃபோன்-னா ஒரே சிரிப்பாணிதான்!
வந்த கால்...
அதனால் செலவுக் கணக்கில் மணி ஐயா - வைகறையார் - பார்வைக்கு வராது. சிரிக்கச் சிரிக்கப்
பேசுவான். என்னதான் பேசுவார்களோ தெரியாது...
எலேய் லாரி ஆபிசில்
கழட்டாமலே தானே கழண்ட நட்டுறா நீயி... என்பான் மனோகரன் அவனை.
இல்லாவிட்டால்
நம்ப மோகன்பாபு - இருக்கிற ஆள்களில் அவன்தான் கொஞ்சம் பொம்பளைசாயல் - அவனுடன் கூட்டாளி
ராமசுப்பு... ரேடியோப் பொட்டியில் பாட்டு பாடப்பாட, ஆட்டம் போடுவார்கள். மோகன்பாபு
குத்தாலத் துண்டு எதும் எடுத்து இடுப்பில் முந்திசொருகி உடலைமூடிக் கட்டிக்கொள்வான்
புடவையாட்டம். இருவரும் டூயட் ஆட்டம். ஏ மன்மத ராசா.... என்று பாடினால் சுத்தி அதை
வேடிக்கைபார்க்க என ஒரு ரசிக மகாக் கூட்டம்.
தேசிங்குராஜன்
பலகுரல் மன்னன். சத்யராஜ் பாணியில் அப்படியே பேசிக் காட்டுவான். ராமநாதன் டிரங்குப்
பெட்டியில் அபாரமாய்த் தாளம் போடுவான். டண்ட டக்கர டண்ட டக்கர... அவன் தாளத்துக்கு
சிகாமணியின் பாட்டு எடுப்பாய் இருக்கும். எளிய, லம்பாடித்தனமான, தாளவெறியான பாடல் கள்.
காற்று வாங்கப்
போனேன் - ஒரு கவிதை வாங்கி வந்தேன்...
ஏன் காத்து கிடைக்கலியாக்கும்...
என்னத்தையோ பண்ணப் போயி, வேறெதையோ பண்ணிட்டு வராங்கய்யா! லூசுப் பசங்க.
எல்லாம் வைகறையார்
இல்லாத பட்சம்தான். அவர் முன்னே எல்லாருமே அத்தனை அடக்கம் காட்டினார்கள் - ஆச்சர்யம்.
போன வாரம் சரஸ்வதிபூஜை,
ஆயுதபூஜை, என அமர்க்களப்பட்டது வளாகம். கிருட்டினமணி அண்ணன்கூட வந்திருந்தான்... ஷெட்டே
சீரியல்பல்ப் மினுங்க அம்சமாய் இருந்தது. சவுண்ட் சர்வீஸ்காரனிடம் சொல்லி, ஒலிபெருக்கி
கட்டி, சினிமாப் பாட்டு, என சப்த இம்சை.
எலே சரஸ்வதிக்கு
பூஜையாடா இது... பூரா கெட்ட வார்த்தைப் பாட்டா வருது, என்றான் அண்ணன்!
பெரிய முழு முழு
வாழையிலைகளில் அவல் - பொரி - பொறிகடலை - தேங்காய், என வைத்து கற்பூரங்காட்டி பூஜை.
வரிசையாய் சாமி படம். எங்கிருந்தோ கொண்டு வந்தார்கள்.
நேற்றுவரை அங்கே
- ஜோதிகா, ரம்பா, த்ரிஷா, சிநேகா - என்று ஒட்டியிருந்தன. சந்திரமுகி படம் வந்தபிறகு
ஜோதிகா படத்தைக் கிழித்து விட்டார்கள். ஒரு பயந்தான்!
ரா ரா.... சரசுக்கு
ரா ரா...
ஐய நா வர்ல!
தொழிலாளி எல்லாரையும்
நிற்க வைத்து திருஷ்டிப் பூசணி சுற்றிப் போட்டார்கள். வடிவேலுக்கு ஒண்ணரைக் கண்.. இவன்
கண்ணைப் பார்த்து எவன் கண் போடப் போறான்!...
வாகனங்களுக்கு
சந்தன குங்குமம் பூசினார்கள்.
எதுக்கு பொரி
வைத்து பூசை, எப்படி அந்தப் பழக்கம் வந்தது தெரியவில்லை. எல்லார்க்கும் அள்ளிக் குடுக்க
விலை மலிவு - சவுகர்யம் என பெரியவர்கள் நினைத்திருக்கலாம்.
பொரியைவிட மலிவா,
எதாவது லோகத்தில் உண்டா?
குழந்தைக்கு
எட்டரைக்குப் பள்ளிக்கூடம். கிருட்டினமணியிடம் இப்போது சைக்கிள் இருந்தது. சிவாஜி பட்டறைவரை
போகவும், குழந்தையைப் பள்ளிக்கூடத்தில் விடவும், என சௌகர்யம். எலேய், பாவமன்னிப்பு
படம் பாத்திருக்கியா? - என்று கேட்டான் கிருட்டினமணி. அதுல, நீயில்ல... நடிகர் திலகம்
சிவாஜி, சைக்கிளில் பாடிட்டே போவாரு... வந்தநாள் முதல், இந்தநாள்வரை, வானம் மாறவில்லை...
சூப்பர் பாட்டு.
'ஏன் மாறவில்லை?
மழைக்காலமே வரல்லியாமா?' என்றான் நம்மாள் தேசிங்குராஜன்.
சைக்கிளில் முன்பக்கம்
கமலாவுக்கு என தனி சிறிய சீட். பைக்கட்டை பின்கேரியரில் வைத்துக்கொண்டு கூட்டிப்போகிறான்
சிவாஜி.
அவளுக்குப் போனமுறை
செருப்பு பிய்ந்து போனபோது அண்ணன் ஊரில் இல்லை. இவனிடம் கையில் பணம் இல்லை. அண்ணி வைத்திருப்பாள்.
என்றாலும், அவளுக்கு செருப்பு பெரியவிஷயமாய்த் தோணவில்லை போல. அண்ணன் வரட்டும் எனக்
காத்திருக்கக் கூடும்... இவனுக்கு அப்படி விட்டுவிட முடியவில்லை. தன்னால் வாங்கித்தர
முடியவில்லை, என நினைத்தபோது அழுது விட்டான் சிவாஜி.
அன்றைக்குத்
தற்செயலாக முதலாளி வந்து விட்டார். என்ன தோணியதோ, துணிச்சலாய், ஒரு அம்பது ருவ்வா வேணும்
முதலாளி... என்று கேட்டு விட்டான்.
அவர் முகம் சுருங்கியது.
தப்பா நினைச்சுக்கப்டாது
முதலாளி. அண்ணன் ஊர்ல இல்ல. பிள்ளை கால்ல செருப்பு இல்லாமப் பள்ளிக்கூடம் போவுது...
பேசும்போதே குரல் தாழ்ந்து குழைந்தது.
சரி, என்று மறு
வார்த்தை பேசாமல் எடுத்துக் கொடுத்தார். அட்வான்ஸ் கிட்வான்ஸ்னு பேசாதே... அதெல்லாம்
இங்க வழக்கம் கிடையாது, என்றார்.
நீ திருப்பித்
தரண்டாம். பரவால்ல - என்றார் புன்னகையுடன்.
அடடா, நூறு ருவ்வா
கேட்ருப்பேனே... என்று தோழர்களிடம் சொல்லிச் சிரித்தான் வைகறையார் போனபின்னால்.
10
சிவாஜி எதிர்பாராத
திருப்பம் நடந்தது. நல்ல பேச்சுஅடாவடி இருந்தது அவனிடம். அவனைத் தற்செயலாக முதலாளியின்
இரண்டாவது மகன் ரத்னசபாபதி பார்த்தான். படபடவென பைக்கில் வந்து பட்டறை ஆட்களில் ஒருத்தனை
உதவிக்கு எனக் கேட்டான். பிரஸ் உதவிக்கு என இருந்தவன் கல்யாணம் என்று ஒரு வாரம் மட்டம்.
விஷயம் அவசரம். சுத்து வட்ட வேலைகளுக்கு ஆள் கிடையாது.
ஊரில் கல்யாணம்
என்றால் அச்சகத்தில் வேலை நெரிசல். இப்ப நம்ம அச்சாபிஸ் ஆளுக்கே கல்யாணம்! மட்டம் போட்டு
விட்டான்!
பிரஸ் நபர்கள்
ஏனோ இடம் இடமாய் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருநாள் ரெண்டுநாள் என்று மட்டம் போட்டால்,
அச்சகத்தில் தாக்கு பிடிக்க முடியாத நிலையில், வேறு ஆளை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.
அடுத்த அச்சகத்தில் இருந்து ஆட்களை சுவீகரித்துக் கொள்வது வாடிக்கையாகி விடுகிறது.
அச்சக ஆர்டர்கள்
எப்பவுமே பரபரப்பானவை. ஒண்ணுக்கு போல. அவற்றைத் தள்ளிப்போட முடியாது!
கிராமங்களில்,
பிள்ளையார் கோவிலுக்குப் பிரதிர்ஷ்டை செய்ய, என்று பிள்ளையார் விக்கிரகங்களைத் திருடி,
இடம்பெயர்த்து விடுவார்கள். அது என்னவோ அப்பிடி ஒரு சம்பிரதாயம் அந்தக்காலத்தில் இருந்ததாகச்
சொல்கிறார்கள். அதைப்போல, அச்சகக் கதையும்!
வைகறையார் சிவாஜியை
அனுப்பிவைத்தார்.
வைகறை அச்சகம்
நல்ல பிரதானப் பிரதேசத்தில் இருந்தது.
வைகறைவாசல் அப்படி
ஒன்றும் சிறிய ஊர் அல்ல. தமிழ்நாட்டின் தென்கோடி. கடல் பிரதேசம். காலை சூர்யன் உதித்தது
அங்கே. சூர்ய உதயம் பார்க்க, என்று வெளிநாட்டுக்காரர்கள் கூட, வந்து குழுமினார்கள்.
ஏன் அவங்க ஊர்ல
சூர்யன் கிடையாதாமா...
வீட்ல சீக்கிரம்
எழுந்து கொள்ளாமல், பத்தரை பதினொன்று என்று படுக்கையில் பொரண்ட ஆட்களுக்கெல்லாம் இந்த
சூர்ய உதயம் சுவாரஸ்யமாய் இருந்தது. வெளிநாட்டுக்காரனுக்கு நம்ம நாட்ல எல்லாமே வேடிக்கை.
அங்கேர்ந்து வந்து... இருக்கறதை எல்லாம் விட்டுட்டு, குழந்தை சர்ர்ரடிக்கிறதைப் படம்
எடுக்கிறாங்கள். ஏன் அவங்க ஊர்ப் பிள்ளைங்க சர்ர் அடிக்காதாமா?...
இல்லாட்டி, பிச்சைக்காரன்
வரிசையா கோவிலாண்டை உக்காந்திருப்பான்... அதைப் படம் எடுக்கிறார்கள். வீடியோப்படம்.
அதற்கு நம்மாட்கள் திருநீறு ஸ்பெசலாப் பூசி பவுடர் அடிச்சி போஸ். சில ஆளுகள் காரியத்தில்
கண் - வந்த வெளிநாட்டுக்காரனை, சுரண்டல் லாட்டரி டிக்கெட், என நினைச்சி, சுரண்டிச்
சுரண்டி பிச்சை கேட்கிறார்கள்...
ஒரு நம்பர் சுரண்டல்
டிக்கெட் போல, பிச்சை கிடைக்கிறதும் அதிர்ஷ்டம் சம்பந்தப் பட்டதுதானே!
வாட்டிஸ் திஸ்...
இதா மாமா, இது
திருவோடு...
திசிஸ் நைஸ்...
என அதை ஒரு ஃபோட்டோ! இது எங்க கிடைக்கிறது, எல்லாரும் வெச்சிருக்கானுங்களே , என அவனுக்கு
ஆச்சர்யம்! உனக்கெதுக்கு இது? நீ வாங்கிட்டுப் போயி, உங்க ஊர்ல பிச்சை எடுக்கப் போறியா...
லாரி வேலையைவிட
இந்த மிஷின்வேலை, பேப்பரை அழகாக வசம் பார்த்து மடித்து நறுக்கி பைன்டிங் வேலை அவனுக்குப்
பிடித்திருந்தது. வண்ண வண்ணக் காகிதங்கள். வண்ண வண்ண அச்சுகள்.
யந்திர யானைக்குட்டியாட்டம்
அச்சடிக்கிற மிஷின். மாவுத்தன் சிங்காரம்தான்... ஃபோர்மேன் அண்ணன் தண்டபாணி...
வாடிக்கையாட்கள்
நிறைய வந்துகொண்டே இருந்தார்கள். வர்ற ஆள் போற ஆள் எல்லாருக்கும் - தரம் பார்த்து,
டீயோ குளிர் பானமோ, வெறும் டம்ளர் தண்ணியோ தந்தான் ரத்னசபாபதி. இவன் எதும் தாராவிட்டால்
தரும்வரை பேச்சை நீட்டி, விடாக்கண்டனாக வாங்கி, வாயில் ஊற்றிக்கொண்டு செல்லும் பார்ட்டியின்
வருகையும் உண்டு.
ரத்னசபாபதி ஆள்
காசில் கெட்டி. அவனிடம் லேசில் காசுதேத்த முடியாது. கணக்கு கணக்கு என்று உயிரை வாங்கி
விடுவான். பிளஸ் டூ-வரை பள்ளிக்கூடம் போயிருக்கிறான். அப்புறம் போகவில்லை. கணக்கில்
ஐயா அவ்ட். இங்கே கணக்கு பார்த்து பிரயோஜனம் என்ன?
ஆனால் மனுஷன்
புகழ்ச்சிக்கு அடிமை.
உங்க தலை அலங்காரம்
மகேஷ்கௌதம் மாதிரியே இருக்கு சார்... என்றான் விளையாட்டாக. அவன் எந்த நடிகனைக் கண்டான்.
அச்சக எதிரில் சுவரில் நோட்டிஸ் ஒட்டாதே எழுத்தின் பக்கத்தில், எதோ பட போஸ்டர். அந்தக்
கதாநாயகன் மகேஷ்கௌதம் என்று ஃபோர்மனைக் கேட்டுத் தெரிந்து கொண்டான்...
எப்பிடி கரெக்டாக்
கண்டு பிடிச்சே?... என்றான் ரத்னம் மகிழ்ச்சியுடன். ‘ரஞ்ஜினி என்னைக் கொஞ்சு நீ’ -
படத்தில் இதே கெடப்லதான் வருவான்! நீ அந்தப்படம் பார்த்திருக்கியா?
சினிமா தியேட்டரே
உள்ளேபோய்ப் பார்த்ததில்லை அவன்.
பார்த்தேன்.
ஆனா நீங்க சொன்ன பிறகுதான் படம் பேர் ஞாபகம் வருது, உங்களுக்கு நல்ல ஞாபக சக்திண்ணே,
(டீ மாட்டுமா?) என்றான் சிவாஜி. அதே படம்தான்.
எலேய், மொதலாளியவே
கவுத்திட்டியேடா - என்கிறார் ஃபோர்மேன் தண்டபாணி.
அடுத்த படத்துல
மகேஷ்கௌதம் முழு மொட்டையா வர்றாப்டி... இவரையும் கெட் அப்பை மாத்திக்கச் சொல்லு.
உமக்கு வேலை
கொடுத்திட்டாரில்ல... மாத்திற வேண்டிதான்! - என்றான் சிவாஜி.
இவனது கலகலப்பும்
சுறுசுறுப்பும் ரத்னசபாபதிக்குப் பிடித்து விட்டது. உதவி ஒத்தாசைக்கு என, இவனைத் தன்னுடனேயே
வைத்துக்கொள்வதாக அப்பாவிடம் சொல்லிவிட்டான்.
ரத்னசபாபதியும்
இவனுமாய் ஒரு படம் போனார்களே. மகேஷ்கௌதம் படம் என்று தனியே வியாக்கியானம் வேண்டியதில்லை.
ஒழுங்கா நடந்து வர்றாளுகள் பாட்டு வரும்போது தண்டு ஒடிஞ்சாப்போல என்னமோ ஆகிப் போகிறார்கள்.
காலைக் காலைத் தூக்கி வீசுகிறார்கள். எலேய் ஷூ பர்றந்திறப் போவுதுடா... பூ எங்காவது
பூத்திறப்டாது. பக்கத்தில் நின்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு காலை சகதியை உதறுகிறாப்
போல தட்டித் தட்டி - ஓ அது டான்ஸ் ஸ்டெப். பொம்பளையாள் இப்படி தண்ணிக் குடம் எடுத்து
வரும். பலூன்காரனிடம் வேலை மெனக்கிட்டு ஏகப் பட்ட பலூன் வாங்கி - ஆச்சர்யம் பறக்க விட்டு
விடுகிறார்கள். அதற்கு வாங்குவானேன்?
ஒரு சின்னப்
பையன் தெருவில் நடந்து போகிறான். திடீர்னு அவன்மேல சக்கரம் உருளுது. சர்த்தான், விபத்தாகி
செத்தே போனானே பாவி, என்று பார்த்தால் பெரியாள் ஒருத்தனைக் காட்டுகிறார்கள்...
அவனேதான் இவன்.
பெரியாளாயிட்டான். சிம்பாலிக் ஷாட், என்று சிரிக்கிறான் ரத்னசபாபதி.
என்னத்தை சிம்பாலிக்...
அப்ப ஒராள் செத்துப்போனா, தென்னை ஓலை விழறாப்ல கூட காட்டுவாங்களா? ஒரு பீடிக் கம்பெனி
படத்துல பார்த்தேன்.
ஆமாம்!
ஐய, அந்தாள்
தென்னை மரத்துல ஓலையை வெட்ட ஏறினப்ப கீழே விழுந்து செத்தான்னு நான் நினைச்சேன்... என்றான்
சிவாஜி.
ஒரு பக்கம் காசு
காசு எனக் கணக்கு பார்க்கிற ஆள். இந்த மாதிரி சினிமா பந்தாக்களுக்குச் செலவழிப்பான்
போல.
நீலா என் நிலா
- படத்தை மாத்திரம் பத்து தரம் பார்த்தானாம். சும்மா கிண்டலுக்கு, ஏண்ணே அதில் மகேஷ்கௌதம்
பிரஸ்காரனா வர்றானான்னு கேட்டா...
அட - ஆமாம்னு
தலையாட்டுறான்!
அண்ணே சட்டையை
இன் பண்ணிக்கங்க. உங்களுக்கு அம்சமாய் இருக்கும்.
மறுநாள் வந்து
''நல்லா இருக்கா?'' என்று நிற்கிறான் ரத்னசபாபதி. அவன் முதுகுப் பக்கம் இருந்து ஃபோர்மேன்
சிரிக்கிறார்.
ஏலேய் கூடிய
சீக்கிரம் அவனைப் பைத்தியமாக்கிருவ போலுக்கே... என்கிறார்.
கூடிய சீக்கிரம்
என்ன... இப்பவே! - என்கிறான் சிவாஜி.
முன்னைப்போல்
இந்த வேலை கடுமையானதாய் இல்லை. சைக்கிள் இப்போது வெகு உபயோகம். நாலுஇடம் வெளியிடம்
போய்வர வேண்டியிருந்தது. இந்தப் பணத்தை பாங்கில் போடு... என சலான் எழுதி பணமும் தருவான்.
பேப்பர்கடைக்குப் போய் பேப்பர் வாங்கிவரச் சொல்வான். கல்யாண முகூர்த்தப் பத்திரிகைக்
காகிதம்... ஒருபக்கம் மஞ்சள் ஒருபக்கம் குங்கும வண்ணம், என ஐதிக வண்ணங்கள். மஞ்சள்த்
தாளில் கருப்பு எழுத்துகள் அடிக்க, பச்சை வண்ணம் வந்தது. ஆச்சர்யம்!
வெத்திலைப் பச்சை.
சுண்ணாம்பு வெள்ளை... இரண்டையும் மடக்கி வாய்ல போட்டா, வர்ற வர்ணம்?
சிவப்பு!...
அதைப் போலத்தான் இது!
அச்சிட்டவற்றை
டெலிவரி கொடுக்கவும் அவன் போகவேண்டும். விதவிதமான அனுபவங்கள். அச்சடிக்க வந்த வேலைகளும்
எத்தனையோ ரகம். இயேசுவை நம்பு... ஆட்டோ காணவில்லை. நாய் படம் போட்டு, நாய் காணவில்லை,
என்றுகூட வந்தது. காணவில்லை என்று சொல்லி படம் போடுகிறார்கள். காணவில்லை என்றால், படம்
எப்படி எடுத்தார்கள் தெரியவில்லை!...
சில நல்ல வாசகங்களே
அச்சுப் பிழையில் நாராசமாகி விடுகின்றன. பம்பு பாம்பாகி விடுகிறது...
கண்ணீர் அஞ்சலி.
நீத்தார் காரிய அறிவிப்பு. பிறந்தநாள்... கல்யாணம்... என வைபவ சிறப்பு அழைப்புகள்.
ஒரு கல்யாணப் பத்திரிகை அடிக்க வந்திருந்தது. அந்தப் பெண் அவளது காதலனைப் புறக்கணித்து
வேறு மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டுகிறாள்... அவன் தற்கொலை செய்து கொண்டான். காதலி
கல்யாணப் பத்திரிகை மை காயவும், கண்ணீர் அஞ்சலி பத்திரிகையும் அங்கே அச்சானது...
வெளிநாடு போகிறதுக்கு...
டாட்டா டாட்டா! நன்றி நன்றி - என நாய் வாலாட்டும் படம் போட்ட சுவரொட்டிகள். புதியகடை
திறப்பு விழா... அமைச்சர் - பிரமுகர் என யாரும் வந்தால் வருக வருக - அது வேறு.
இப்போது எல்லாத்துக்கும்
போஸ்டர் அடிக்கிறார்கள். இனி வந்துவிட்டுப் போகும்போது போங்க, போங்க - போஸ்டர்கள் வரலாம்!
ஃபோர்மேன் அண்ணே,
நம்ம முதலாளி பிறந்தநாளுக்கு, நாம ஒரு போஸ்டர் அடிச்சிருவம்!
வெளிநாடு சென்றுதிரும்பும்
பிரமுகர்கள், என்று வரவேற்பு போஸ்டர்கள். விமானம் ஓட்டற ஆள் எத்தனை தரம் போயிட்டு வரான்...
அவனை வரவேற்க ஆள் கிடையாது!
சங்கங்கள் மாபெரும்
கண்டனப் பேரணி. தார்ணா... என அச்சிட அடிக்கடி வருவார்கள். சிலாளுகள் சும்மா உட்கார்ந்திருந்தாக்
கூட காலை ஆட்டிட்டே கிடப்பான். அதைப்போல இவர்கள், சும்மாவாச்சும் எதாவது நோட்டிஸ் அடித்து
விநியோகம் செய்து கொண்டே இருக்கிறார்கள். பஸ் ஸ்டாண்டு பக்கம் விநியோகிக்கப்படும் நோட்டிஸ்களில்
அவனவன் பஜ்ஜி எண்ணெயைத் துடைக்கிறான்... அவர்களுக்கு சிவப்புமையில் அத்தனை இஷ்டம்.
ஏன் சிவப்பு மை தெரியவில்லை. ஒருவேளை, வாத்தியார் பேப்பர் திருத்தும் மை சிவப்பு மை.
இவர்கள் சமுதாயத்தைத் திருத்துகிறார்கள் அல்லவா?
முதலாளிகள்தான்
சிவப்புத் தோல்காரர்கள். தொழிலாளிகள் வண்ணம் கறுப்பே!...
போஸ்டர் அடிக்க
காசு குறைவாய் இருக்கிறது, என்று சின்னதாய் அடிக்கச் சொல்வார்கள். அதில் /மாபெரும்
தார்ணா!/
ஒருநாள் ஒரு
தொழிற்சங்க நோட்டிஸ் தந்துவிட்டு, எங்க முதலாளி சரியா சம்பளம் தர மாட்டேங்கறாருங்க,
என்றான்.
நோட்டிஸ் பெற்றுக்
கொண்டவன் நிமிர்ந்து உட்கார்ந்தான்...
எனக்குச் சம்பளம்
தரணும். நீங்க பாக்கி வைக்காம பில்லைக் குடுங்க... என்றான் சிவாஜி.
வைகறைவாசல் வித்தியாசமான
ஊர். ஊரில் என்னமாவது பரபரப்பாக நடந்து கொண்டேயிருந்தது. பஜார்ப்பக்க நாய்களே பரபரப்பாகத்
திரிந்தன. லாரிப் பட்டறை ஒதுக்குப் புறம். ஆனால் அச்சகம் நல்ல சென்டர். அதே தெருவில்
மூலையில் நடுவீதியை மறைத்து அரசியல் கட்சிகள் பந்தல் போட்டு பொதுக்கூட்டம் நடத்தின.
தெரு விளக்குக் கம்பத்தில் இருந்து திருட்டு மின்சாரம் எடுத்து கூட்டம். விழாவில் கலந்துகொண்டவர்
யார் தெரியுமா? அப்பத்திய மின்வாரியத் துறை அமைச்சர்!
மனுஷர் கண்டுக்கவே
யில்லை!
மைக் இருந்தும்,
இந்த அரசியல் பேச்சாளர்கள் கத்து கத்தென்று கத்துகிறார்கள். அவர்கள் பேச்சில் பாலும்
தேனும் ஓடியது... தெருவில்? மூச்சாதான் ஓரங்களில் இருந்து ஒடுகிறது.
ஒருமுறை வைகறையார்
கூட அந்தத் திடலில் பேசினார். நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக ஆவேசப் பட்டார்.
அவர் வண்டி எதும் செக் போஸ்டில் மாட்டியிருக்கலாம்.
அத்தான் தேர்தலில்
போட்டியிடும், போட்டியிட்டுத் தோற்றுப் போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை - என்று தோன்றியது!
---
சனிக்கிழமை தோறும் தொடர்கிறேன்
storysankar@gmail.com
91 97899
87842 / 91 94450 16842
Comments
Post a Comment