Short story / iruvatchi pongal malar 2023

 


அவரவர் கடவுச்சொல்

எஸ்.சங்கரநாராயணன்

 

பிரியம்வதா அலுவலகம் கிளம்பினாள். இடுப்புவரை காட்டும் நிலைக் கண்ணாடியில் முன்னே நின்று ஒருமுறை நேர்ப் பார்வை, பிறகு பக்கவாட்டு நோட்டம் பார்த்துக் கொண்டாள். புடவை ‘ஃப்ளீட்ஸ்’ அலைமடிப்புகளை ஒழுங்கு செய்து கொண்டாள். உதட்டுச் சாயம் தீற்றியது கலைந்து விடாமல் கவனம் பண்ணிக் கொண்டாள். புடவைதான் அவளுக்குப் பிடிக்கும். கஞ்சிபோட்ட மொடமொடப்பான பருத்திப் புடவைகள் வயதுக்கு ஏற்ற கௌரவத்தை, கம்பீரத்தை… மரியாதையையும் தருகின்றன. அவளுக்கு என்னவோ சுடிதாரை விட புடவை ஒரு பெண்ணுக்குப் பாந்தமாய் அமைவதாக ஒரு ‘இது.’ ஒரு வயது தாண்டியபின் சுடிதாரும் நைட்டியும் உவப்பனதாய்ச் சிலருக்குத் தோன்றுவது இல்லை.

            பெர்ஃபியூம் எடுத்து கையைத் தூக்கி உட்புறம் அடித்துக் கொண்டாள். அந்த அறையே வாசனை வியூகம் வகுத்தாற் போல இருந்தது. முகத்தில் பவுடர் அளவு அதிகமா… என ஒரு சரிபார்ப்பு. மேல்நெற்றியில் இந்திரா காந்தி சாயலில் மேல்முடி மாத்திரம் இரண்டு முடி நரை விட்டுவிட்டு மற்றதைச் சாயம் பூசி யிருந்தாள். அவள் கையில் ஆண்கள் மாடல் பெரிய வாச். அவள் தயார். அலுவலகம் எனக் கிளம்புகையில் அவள் நடையில் ஒரு தீர்மானமும் அழுத்தமும்… தோரணையும் வந்து விடுகிறது.

அலுவலகம் என்பது தனி உலகம். அதில் இளையவர் மூத்தவர், ஜுனியர் சீனியர் இல்லை. எல்லாருக்கும் அவரவர்க்கான வேலை இருக்கிறது அங்கே. அந்தந்த வேலையுடன் அவர்கள் பிணைக்கப் பட்டிருக்கிறார்கள். அத்தனை சக்கரங்களுடனான அலுவலக யந்திரம், இதில் மொத்த அலுவலகத்துக்கு என்று ஒரு செயல்வேகம் இந்தக் கண்ணிகளின் சீரான இயக்கத்தைப் பொருத்து அமைந்து விடுகிறது. ஒரு போக்குவரத்து சிக்னலில் இருந்து புறப்படும் அத்தனை வாகனங்களுக்கும் தன்னைப்போல ஒரு பொதுவேகம் அமைகிறதைப் போல…

அவள் நினைக்க ஆரம்பித்த விஷயம் வேறு. அலுவலகத்தில் அவள் இளம் பெண்களோடு ஈடுகொடுத்த வேகத்துடன் செயல்பட வேண்டி யிருந்தது. முந்தி நிற்பது அல்லது ‘செகண்ட் டு நன்’ என்ற நிலை. அது அவளுக்குப் பிடித்திருந்தது. மேனேஜரின் செக்ரட்டரி, காரியதரிசி அவள். இதுசார்ந்து அசூயை கொண்ட விமரிசனங்கள் அலுவலகத்தில் அவள் காதுபடாமல் வளைய வரும். அது பிரயம்வதாவுக்குத் தெரியாமல் இல்லை.

அங்கிருக்கும் பிற ஊழியர்களைப் பற்றி அவள் மேனேஜரிடம் தன்கருத்தாக எதுவும் பேசுவாள்… அல்லது, குறைந்தபட்சம் மேனேஜரே அவர்கள் ஒவ்வொருவர் பற்றியும் அவளிடம் அபிப்ராயம் கேட்பார், என எல்லாரும் நினைத்தார்கள். அவர்களாக அப்படி நினைத்துக் கொண்டார்கள். அதற்கு பிரியம்வதா என்ன செய்ய முடியும்? தவிரவும் மேலதிகாரி அவருக்கு அவள் என்ன சொல்லித் தருவது? சொல்லி அவர் கேட்கப் போகிறாரா என்ன? ஒவ்வொருவரைப் பற்றியும் அவருக்கே தெளிவான அபிப்ராயம் இருக்காதா… இருக்க முடியாதா என்ன? இருக்கும். இருக்க வேண்டும். இருந்தால் தான் அவர் அதிகாரி.

அம்மா கிளம்புவதைப் பார்த்தபடி ராதிகா பிரியம்வதாவின் இருசக்கர வாகனத்தை நகர்த்தி வாசலைப் பார்க்க நிறுத்தி வைத்திருந்தாள். அப்பாவுக்கு பைக். ஸ்பிளண்டர்.  அம்மாவின் வாகனம் ஆக்டிவா. அம்மா வீட்டில் இருந்தால் ராதிகாவும் அதை எடுத்துக்கொண்டு வெளியிடங்களுக்குப் போய்வருவாள். ராதிகாவுக்கு இன்னும் லைசன்ஸ் எடுக்கிற வயது ஆகவில்லை. ஆனாலும் வண்டி ஓட்டுகிறாள்.

அம்மாவின் வளர்ப்பு அது. மகளின் சந்தோஷங்களுக்கு, சுதந்திரத்துக்கு அம்மா தடை சொன்னது இல்லை. ராதிகாவின் இளமையை அழகை சுறுசுறுப்பை அவள் தன்னளவில் ரசித்தாற் போல இருந்தது. மாத்திரம் அல்ல. ராதிகாவுக்குக் கல்லூரி இருக்கும் நாட்களில் நிலைக் கண்ணாடி முன்னால் அவளுக்கும் அம்மாவுக்குமே அழகிப் போட்டி நடக்கிறாற் போல இருக்கும். கிருஷ்ணதாஸ் பார்த்திருக்கிறார். இருக்கட்டும். ராதிகாவானால் என்ன, பிரியம்வதாவின் அலுவலகத்தில் அவளுடன் பணி புரியும் தீட்சணாவானால் என்ன? பெண்ணுக்குப் பெண் போட்டிதான். ஹா ஹா உலகம் அப்படி. உலக நடைமுறை அப்படி.

பிரியம்வதா எப்பவுமே அலுவலகம் போகவும், வீடு வரவும், ஒரே பாதையை வைத்துக் கொண்டாள். இப்படியாய் சில ஒழுங்குகள் அவளிடம் இருந்தன. நேர ஒழுங்கு அதில் பிரதானம். கால தாமதமாய் அவள் அலுவலகம் வருவது இல்லை. ஒரு ஐந்து நிமிடம் முன்னமேயே அவள் அலுவலகம் வந்து தன் இருக்கையில் இருப்பாள். அவள் வந்தபின் ஒவ்வொருவராக மீதிப்பேர் அலுவலகம் வருவார்கள். வருகைப் பதிவேடு அவள் மேசையில் தான் இருக்கும். வந்து அவளுக்கு அவர்கள் வணக்கம் சொல்லிவிட்டு பதிவேட்டில் கையெழுத்து போடுவார்கள்.

அவளுக்குக் கீழே வேலை செய்கிறவர்கள் யாராய் இருந்தாலும் அவளைப் பார்த்து அவர்கள் வணக்கம் சொல்கிறபோது அந்தப் புன்னகையில் சிறு தயக்கமும் பயமும் அந்தக் கண்களில் அவளுக்கு, பிரியம்வதாவுக்குத் தெரியும். இதை ஒன்றும் செய்வதற்கு இல்லை.

அந்த பயத்தின் எதிரொலியாகத்தான் அந்தப் பணியாளர்கள் அவளைப் பற்றி பொறாமையுடன், அசூயையுடன் அவதூறு பேசுகிறார்கள். அவள், பிரியம்வதா நல்லவள் அல்ல. அழகிதான். ஆனால் படம் எடுத்தாடும் அழகு அது. மேனேஜரிடம் அவள் என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாகப் போட்டுக் கொடுப்பாள்… என நினைத்துக் கொள்கிறார்கள். ஏன் அப்படி யெல்லாம் நினைத்துக் கொள்கிறார்கள்? அவர்களது தாழ்வு மனப்பான்மை அது. ஓரளவு அது அவளுக்கு ‘இருக்கட்டுமே’ என்றுகூடத் தோன்றியது.

மேனேஜர் அறைக்கு வெளியில்தான் அவள் இருக்கை இருக்கிறது. யாரையாவது மேனேஜர் கூப்பிட வேண்டும் என்றால் அவளை, காரியதரிசியைத் தான் அழைத்துச் சொல்கிறார். “சுந்தரேசன், உங்களை மேனேஜர் கூப்பிடறாரு…” என காரியதரிசி பின்பு தகவல் சொல்கிறாள். அதனால்தானோ என்னவோ அவர்கள் அவள் எதுவும் உள்ளே ‘வத்தி’ வைத்திருப்பாளோ என்று சந்தேகப்பட, சந்தேகப் பரிதவிப்புடனேயே மேனேஜர் அறைக்குள் புக நேர்ந்து விடுகிறது. மேனேஜர் அறை புலிக்கூண்டு போல அப்போது மாறி விடுகிறது…

அவள் அவர்களுக்கு ஒருபடி மேல் என்கிற அலுவலக பாவனை ஓரளவு, ஓர் சிறு அளவு இருக்கவே செய்கிறது. அவள் மேனேஜருக்குக் காரியதரிசி. வீடுகட்டும் ஆட்களுக்கு மேஸ்திரி போல. மேலே மேனேஜருக்கும், கீழே ஊழியருக்கும் இடையே அவள்... பாலம் என்று சொல்லலாமா? அப்படி அவர்கள் நினைத்துக் கொண்டால் நல்லது. நந்தி… என்று அவர்களில் நினைப்பு இருக்கலாம். மேனேஜரைப் பார்க்க வேண்டுமானால் அவர்களுக்கு அவள் தயவு வேண்டி யிருக்கிறது. குறைந்தபட்சம் உள்ளே மேனேஜர் அறைக்குள் போய்ப் பேச அவர்கள் அவளிடம், “சார் எப்பிடி? நல்ல மூடில்தானே இருக்கிறார்?” என விசாரித்துக் கொள்கிறார்கள். ஹா ஹா அப்படி அவர்கள் விசாரிக்க இவள் நல்ல மூடில் இருக்கிறாளா என்று அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.

மேலதிகாரிக்கு அவள் பணியாள் போலவும், மற்ற ஊழியர்கள் முன்னால் அவளே அவர்களின் ‘இம்மீடியட் பாஸ்’ போலவும் தோற்றம் தருவதைத் தவிர்க்க முடியவில்லை. தங்களது அவநம்பிக்கைகளை அவ்வளவு நம்புகிற உலகம் இது. நாலுமுக்கு சிக்னலில் வண்டிகள் நிறைய நின்றன. அவர்கள் சிவப்பு மாற காத்திருந்தார்கள்.

ஆனால் அலுவலகம் சார்ந்து தேவைப்படும் புள்ளி விவரங்கள், இதர தகவல்கள் சார்ந்து அவளுக்கு மனதளவிலேயே நினைவாற்றல் இருந்தது. 13ம் தேதி இந்தக் கடிதத்துக்கு  நாம இந்த மாதிரி பதில் எழுதினோம் சார்… என்பாள் அதிகாரியிடம். அந்த விவரங்களைக் கையாளும் ஊழியருக்கே அத்தனை துல்லியமாய் அதைச் சொல்லத் தெரியாது. நிறையப் பேர் ஃபைல்களை எடுத்துக் கொண்டு அதைப் பற்றி அவளிடமே வந்து யோசனை கேட்டுப் போவார்கள். அவளும் தனக்குத் தெரிந்த விவரங்களைத் தவறாமல் அவர்களோடு பகிர்ந்து கொள்வாள். இது அலுவலக நடைமுறை தான். இதில் பெருமை கொள்ள எதுவும் இல்லை.

பஸ் நிலையம் தாண்டும் இடத்தில் கோமதி பூக்கடை போட்டிருப்பாள். கடை என தனியே என்ன? சின்ன மரப்பெட்டியைக் கவிழ்த்துப் போட்டு பந்து பந்தாய் பூக்கள் அடுக்கி யிருப்பாள். நடுவில் சிறு பிரமிட் குவியல் போல கனகாம்பரமோ, வெள்ளை மலர்க் குவியலோ… பூவை ஒவ்வொன்றாய் எடுத்து அவள் கட்டுவது அழகு. பிரியம்வதா அவளது வாடிக்கையாளர். அவள் வண்டியைப் பார்த்ததுமே ஒரு முழம் மல்லிகைப் பூ, நடுவில் ஒரேயொரு ரோஜா கோர்த்துக் கட்டிய சரத்தை அவளிடம் நீட்டுவாள். எந்த சீசன் என்ன விலை என்றாலும் பிரியம்வதாவுக்கு பத்து ரூபாய் தான் அதன் விலை. அப்படி காலங் காலமான பழக்கம் இருந்தது அவர்களுக்குள். பூவை அலுவலகம் போனதும் அறைக்குள் நுழையுமுன் ஹெல்மெட்டைக் கழற்றிவிட்டு கூந்தலில் வைத்துக் கொள்வாள்.

குளிர்கண்ணாடி கண்ணுக்கு இதமாய் இருந்தது. வெயில் தெரியவில்லை. பசார்ப் பக்கம் திரும்புகையில் நேர் வெயில் முகத்துக்கு நேரே வரும். அலுவலகம் விட்டு வரும்போது அந்தத் தொல்லை இராது. நகரத்து தூசிப் பாடுகளை அனுசரித்து கையுறைகளும் அணிந்திருந்தாள். வாகனத்தின் வயிற்றுக்குள் மழைக்கோட்டும் தயாராய் இருந்தது.

ரோம் நகரில் ரோமானியனாக வாழ், என்பார்கள். அது அவளுக்குப் பொருத்தமானது. எந்தச் சூழ்நிலைக்கும் தன்னைத் தகவமைத்துக் கொண்டாள் அவள். எல்லாவற்றைப் பற்றியும் அவளிடம் ஒரு முன்யோசனை இருந்தது. மேனேஜர் திடீரென்று எதாவது கேட்டால் அவளிடம் விரல் நுனியில் அந்த விவரங்கள் இருந்தன. மற்ற ஊழியர்களுக்கு அவளது அந்தத் தயார் நிலை ஆச்சர்யமாகவும் பயமாகவும் இருந்தது. அதனாலேயே அவர்கள் அவளை ஒரு பயம் கலந்த மரியாதையுடன் பார்த்தார்கள். அது நல்லது தான்… என்றுதான் அவளுக்கும் இருந்தது.

பிரியம்வதா இருக்கையை அடைந்தபோது அவள் மேசையில் வந்திருந்த கடிதங்கள் காத்திருந்தன. அவர்கள் கம்பெனிக்கே தனி தபால் பெட்டி எண் இருந்தது. காலை ஒன்பது மணிக்கெல்லாம் சேவகன் ஒருவன் தபால் நிலையம் போய்க் கடிதங்களை அஞ்சல் பெட்டியைத் திறந்து எடுத்து வந்து விடுவான். மாலை ஐந்து மணிக்கு அலுவலகம் விட்டுத் திரும்பிப் போகும்போது, அன்றைக்கான பதில் கடிதங்களைத் தபால் பெட்டியில் போட்டுவிட்டு அவன் வீட்டுக்குப் போவான்.

இப்போதெல்லாம் அவசரக் கடிதங்கள் என்றால் ‘கூரியர்’ மூலம் அனுப்ப ஆரம்பித்து விட்டார்கள்.

அன்றைக்கு உடனே பதில்போட வேண்டிய கடிதங்கள் எதுவும் இருக்கிறதா என்று பார்த்தாள் அவள். கடித உறையைப் பிரிக்க வேண்டியது இல்லை. கடிதம் எங்கே யிருந்து வந்திருக்கிறது என்று பார்த்தாலே அந்தக் கடிதத்தின் முக்கியத்துவமும், அவசரத் தன்மையும் அவளால் சொல்லிவிட முடியும்.

பிரியம்வதாவிடம் ஒரு ‘மினிட்ஸ்’ நாள்க் குறிப்பு இருந்தது. அன்றாடம் நடந்த, நடந்து முடிந்த அலுவல்களைப் பற்றி உடனே உடனே தேதியிட்ட நேரமிட்ட நினைவுக் குறிப்புகள் எழுதி விடுவாள் அவள். அது அன்றியும் அவள் நினைவில் விவரங்கள் இருந்தன என்றாலும், நாளை ஒருவேளை நான் இருக்கையில் இல்லாத நிலையிலும் யாராவது தேவைப்படுகிற நபர் அந்த நாட்குறிப்புகளைப் பார்த்து விவரங்களோ தகவல்களோ அறிந்துகொள்ள முடியும் அல்லவா?

பத்து மணிக்குத் துவங்கும் அலுவலகம். பத்து பத்தேகால் வரை ஒவ்வொருவராக வேலைக்கு வருவார்கள். சில பேர் தாமதமாக வர நேர்ந்தால் அவளுக்குத் தொலைபேசித் தகவல் சொல்வார்கள். தொலைபெசி அவள் மேசையில் தானே இருந்தது.  “இந்த மாதம் ரெண்டாவது பெர்மிஷனா?” என்று கேட்டாள் பிரியம்வதா. அவர்கள் மறுக்க முடியாது. அவள் மேசையில் ‘மினிட்ஸ்’ குறிப்பு இருக்கிறது…

மேனேஜர் தினசரி பத்தரை மணிக்கு வந்தார். அலுவலக விஷயமாக சில சமயம் வெளியூர் போய்வருவார் அவர். அப்படி சந்தர்ப்பங்களில் இன்னும் கூட தாமதமாய் அவர் அலுவலகம் வருவார். அது அவருக்கான சலுகை மாத்திரம் அல்ல. அது அவருக்கு ஒரு பந்தா. அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது… என்ற நடைமுறை அது.

மேனேஜர் வெளியூர் போயிருக்கும் நாட்களில் ஊழியர்கள் சற்று சாவகாசமாக அலுவலகம் வந்தார்கள். என்றாலும் அவளுக்கு மேனேஜர் எந்த ஊரில் இருந்தாலும் போன் செய்வார், என்பதால் அவள் தன் இருக்கையில் பத்து மணிக்கு இருப்பாள். இல்லாவிட்டாலும், தாமதமாக வருவதை அவள் விரும்புவது இல்லை.

பொதுவாக பணியாள் யாரையும் அவர் உள்ளே அழைத்து விசாரிக்கும்போது அவர்அறையில் கூட அவள் நிற்பது இல்லை. ஏற்கனவே அவர்கள் எல்லாருக்கும் அவள் சொல்லித்தான் மேனேஜர் நம்மை அழைத்து விசாரிக்கிறாரோ என்று இருந்தது. இதில் அவர்கள் சந்தேகத்தை நாம் அதிகப்படுத்தி விடக்கூடாது என நினைத்தாள்.

அப்படியும், அந்த நபர் அவர் கேட்ட தகவல்களுக்கு பதில் தெரியாமல் விழிக்க நேர்ந்தால் அவளை அவர் உள்ளே அழைத்துக் கேட்கிற போது என்ன செய்வது? அவள் அந்தத் தகவலை மேனேஜரிடம் பகிர்ந்து கொள்வாள். அப்போது அந்த ஊழியர் அவளை நக்கீரப் பார்வை ஒன்று பார்ப்பார். அதையும் அவள் பொறுத்துக் கொள்ள வேண்டி யிருக்கிறது.

இதில் இன்னொரு விஷயம், காரியதரிசி என்று அவர், மேனேஜர் அவளை முழுவதுமாக நம்பி யிருந்தார் என்பது தான். இது ஓரளவு ஆபத்தானது அல்லவா? அவருக்கே தன்னளவில் அலுவலக விவரங்கள், நிலைமை, தன்யோசனை இருக்க வேண்டும். அவள் அவரது வலது கை. வலது கையின் கட்டைவிரல். அது அவரது நம்பிக்கை. அவரது நம்பிக்கையே அவரது பலவீனமுமாக ஆகி விடுகிறது… என நினைத்துக் கொண்டாள் பிரியம்வதா.

அதிகாரி என்ற பிரமை சூழ்ந்த அவரது செயல்பாடுகள். சிறிய பெட்டி ஒன்றை எப்பவும் எடுத்து வருவார் அவர். சட்டையை பேன்ட்டுக்குள் ‘இன்’ பண்ணி டை கட்டிக் கொண்டிருப்பார். பியூனைக் கூப்பிட்டு குடிக்கத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி வாங்கிக் குடிப்பார். தனது அதிகாரத்தை அடிக்கடி அவர் குறிப்பால் உணர்த்திக்கொண்டே இருந்தாற் போல இருந்தது. ‘பில்டிங் ஸ்ட்ராங். பேஸ்மென்ட் வீக்’ என்ற கதை. இந்த ராட்சஸனின் உயிர் அந்த மரத்தின் மேல் இருக்கிற அந்தக் கிளியிடம் இருக்கிறது… என்றெல்லாம் கதை சொல்லிக் கேட்டிருக்கிறோம்.

அவர் செயல்பாடுகளில் அவள் மீதான நம்பிக்கை… அது முக்கிய விஷயமாய் இருந்தது. ஆனால்… என நினைத்துக் கொண்டாள் பிரியம்வதா. என் வேலை இது. என் கடமைகள் இவை. இதுகுறித்து நான் அதிகம் பாத்யதை எடுத்துக் கொள்ள முடியாது. கூடாது… என தன்னை அவள் கட்டுப் படுத்திக் கொண்டாள். பிரமைகள் நமக்குத் தேவை இல்லாதவை. கூட இருந்தே அவை உன் காலை வாரிவிட்டு விடக்கூடியவை, என அவள் அறிவாள்.

வழக்கம்போல அமெரிக்கையாய் அலுவலகத்துக்குள் நுழைந்தார் மணவாளன். மேல்கோட்டைக் கழற்றி தோள்மேல் போட்டுக் கொண்டு யாருடனோ அலைபேசியில் பேசியபடி உள்ளே வந்தார். கலகலப்பான மனிதர் அவர். எதாவது நகைச்சுவையாய்ப் பேசிவிட்டு உடனே நாம் சிரிக்கிறோமா என்று நம் முகத்தைப் பார்ப்பார். பிரியம்வதா எப்போதுமே புன்னகை பூசிய முகத்துடன்தான் இருப்பாள். அவளுக்குப் பிரச்னை இல்லை. மற்றவர்கள் அவர்முன் திடீரென புன்னகை காட்ட திகைத்தார்கள். விளையாட்டு போல அவர் மற்றவர்களிடம் “உங்களுக்கு சிவாஜியோட நடிப்பு பிடிக்குமா?” என்பது போல மையமாய்க் கேட்டால் கூட அவர்கள் திகைத்துப் போனார்கள்.

சுதந்திரமாய் எளிமையாய் இதற்கு பதில் சொல்லிவிட முடியாது. உனக்கு சிவாஜி பிடிக்குமா என்பது அல்ல விஷயம். உனக்கு சிவாஜி பிடித்து அவருக்குப் பிடிக்கவில்லை என்று ஆகிப்போனால், பிடிக்கும் என்ற பதில் மேனேஜரை திருப்திப் படுத்தாது. உனக்குப் பிடிக்காமல் அவருக்கு சிவாஜி பிடித்து விட்டாலும் அப்போது வெளிப்படையாய் நம் கருத்தைச் சொல்ல முடியாது…

ஒரு கணினியின் கடவுச்சொல் போல சில கேள்விகள் அமைந்து விடுகின்றன. அந்தக் கேள்விகளால் எதிராளியை ஊடுருவும் ரகசிய வேலைகள் ஒவ்வொரு உரையாடலிலும் நிகழவே செய்கின்றன.

அன்றைக்கு மணவாளன் உற்சாகமாய் இருந்தார். இப்படி வெளிப்படையாக அதிகாரி தன்னைக் காட்டிக் கொண்டது பிரியம்வதாவுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அன்றைக்குதான் அவளது பெர்ஃபியூமை கவனித்தாற் போல அவரிடம் சிறிய சலனங்களை கவனித்தாள். ‘திடீரென்று அவளைப் பார்த்து மணவாளன் புன்னகையுடன் “என்ன விசேஷம், இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்கே?” என்றார் திடீரென்று. அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அவள் அந்தப் பாராட்டை அமெரிக்கையாய் ஏற்றுக் கொண்டாள். “ஏன் நேத்தி முந்தாநாள் எல்லாம் நான் எப்படி இருந்தேன்?” என்று கேட்டாள்.

ஆண்கள்… எப்பவும் பெண்களிடம் அவர்கள் பேசுகையில் நம் மனசைத் திறக்கிற கடவுச்சொல்லை ரகசியம் போல பிரயோகித்துக் கொண்டே இருக்கிறார்கள், என நினைத்துக் கொண்டாள் பிரியம்வதா. என்றாலும் இரண்டு மூன்று வருடங்களாக அவரும் அவளும் ஒரே அறையில் கூட ஒருமணி நேரத்துக்கு மேல் அலுவலக விஷயங்களை விவாதித்திருக்கிறார்கள். சட்டென விகல்பமாக அவர் பேச்சை அவள் எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லைதான். என்றாலும் ஒரு பெண் உடை உடுத்துவதை ஓர் ஆண் ரசிப்பது என்பதில் அவளுக்கு அது மகிழ்ச்சிதான்.

அத்தனை அருகில் அவள் நிற்பதில் அவள் போட்டுக்கொண்டிருந்த வாசனைத் திரவியமும் அவரை எட்டி யிருக்கும், அவள் புன்னகை செய்து கொண்டாள். ஒரு கடிதத்துக்கு பதில் அனுப்ப வேண்டி யிருந்தது. அதைக் கேட்கத்தான் அவள் உள்ளே வந்திருந்தாள். மணவாளன் அவள் தந்த கடிதத்தை ஒரு தரம் வாசித்தார். “இந்தாள் ஒருத்தர்தான் சரக்கு அனுப்பினா உடனே நாலுநாளில் பணம் கேட்டு கடிதம் போடறான்…” என்று புன்னகைத்தார். “இன்னும் ஸ்டாக் வித்துத் தீரலய்யான்னா கூட, அப்ப கம்மியா வாங்கலாம்ல? எதுக்கு இத்தனை ஆர்டர் போடறேன்னுவான்…” என்று சிரித்தார் அவளைப் பார்த்து.

“பிசினஸ்ல எதுவும் எந்த நேரமும் மாறும். ஓடம் ஒருநாள் வண்டியில் ஏறும். வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்னு சொல்வாங்க. அதைப்போல ஒருசமயம் அவன்கிட்ட ஸ்டாக் தேங்கிட்டா நம்ம கிட்ட அதிக ஸ்டாக் கடனாக் கூடத் தருவாங்க…” என அவள் புன்னகைத்தாள்.

பிறகுதான் சொன்னார். “என்ன விசேஷம் இன்னிக்கு நீ அழகா இருக்கே?”

அதை அவர் முன்னமேயே சொல்ல நினைத்தும் இருக்கலாம், என நினைக்க புன்னகை வந்தது அவளுக்கு. நிறைய ஆண்கள் உடனே சொல்ல வந்ததை மனதை அடக்கி மென்மையாக புதிதாய் அப்பதான் யோசித்தாற் போல வெளிப்படுத்துகிறார்கள். பெண்ணின் அழகு அவர்களை சிறிது தடுமாற வைக்கவும் செய்யலாம். அது பெண்களுக்கு… பிடிக்காமல் என்ன?

எனினும் பெண்களுக்கும் சில சுதாரிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆண்களைக் காயப்படுத்தாத சுதாரிப்புகள். அவர் சொன்ன பதிலைக் குறித்துக் கொண்டு கிளம்புமுன் அவள் புன்னகையுடன் விசாரித்தாள். “உங்க மனைவி சங்கீதாவுக்கு உடம்பு சரியில்லைன்னீங்களே சார். டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போய்ப் பார்த்தீங்களா? இப்ப எப்பிடி இருக்காங்க?...”

அவரது குடும்பம் சார்ந்த அந்தக் கேள்வி அதுவும் ஒரு கடவுச்சொல் போல வேலை செய்திருக்கலாம். அவர் தலையாட்டினார். “பரவால்ல. நேத்து மதியமே காரை அனுப்பினேன், போயி டாக்டரைப் பார்க்க. மருந்து குடுத்திருக்கார். மைக்ரேன்றா மாதிரி ஒற்றைத் தலைவலி. கண்ணாடி போட வேண்டி யிருக்கலாம்…” என்றார்.

“இன்னிக்கு என் வீட்டுக்காரர் பிறந்தநாள் சார். சாயந்தரம் அஞ்சரை மணிக்கெல்லாம் வரேன்னு சொல்லி யிருக்கேன். கோவிலுக்குப் போறோம்…” என்றாள் அந்தச் சூழலின் இளக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு.

பிரியம்வதா ஐந்து மணிக்கெல்லாம் தன் இருக்கையை விட்டு எழுந்து கொள்வதை எல்லாரும் சிறிது ஆச்சர்யமாய்ப் பார்த்தார்கள். என்றாலும் யாரும் எதுவும் கேட்கவில்லை. பிரியம்வதா வீடு திரும்பியபோது  கிருஷ்ணதாஸ் வந்திருந்தார். அவளைப் பார்த்ததும் “ஹலோ” என்றபடி வந்து கதவைத் திறந்தார். சிறிது அலுத்துக் களைத்து வந்திருந்தாள் பிரியம்வதா. “ஒரே நிமிஷம்… காபி எதும் குடிச்சீங்களா? போட்டுத் தரணுமா?”

“ஆயிட்டது…” என்றார் அவர்.

“ரைட்” என்றபடி பிரியம்வதா குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள். ராதிகா வர இன்னும் நேரம் ஆகும். அலுவலக அலுப்பு தீர பிரியம்வதா வெளியே வந்தபோது கிருஷ்ணதாஸ் அவளைக் கிட்டே வரச் சொல்லி அவள் கன்னக் குளுமையில் வாசனை பிடித்தார். சோப்பு வாசனை. காலையில்… அது அலுவலக வாசனை. இது? வீட்டு வாசனை… என்று நினைத்துக் கொண்டார் கிருஷ்ணதாஸ். “என்ன பாக்கறீங்க? ஐயாம் அட் யுவர் சர்வீஸ்…” என்றாள் பிரியம்வதா.

கிருஷ்ணதாஸ் பைக்கை வெளியில் எடுத்தார். “உனக்கு அலுப்பா இல்லையா இவளே?” என்றவர் பக்கமாக முன்சரிந்து அவரது இடுப்பை அவள் அணைத்தாள். ‘‘உங்க தொப்பை கட்டிக்க வசதியா இருக்கு…” என்றாள் பிரியம்வதா. கிருஷ்ணதாஸ் வண்டியைக் கிளப்பினார்.

Comments

Popular posts from this blog