தமிழ்மகனின் புதிய சிறுகதைத் தொகுதி ‘மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்‘ வெளியீட்டு விழா உரை

தமிழ்மகனின் புதிய சிறுகதைத் தொகுதி
‘மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்‘
வெளியீட்டு விழா உரை
எஸ். சங்கரநாராயணன்

கவிக்கோ அரங்கம், மயிலை
28,12,2014 மாலை 06 மணி
நூல் வெளியீடு உயிர்மை பதிப்பகம்


 ஜ ன் ன ல் ம ல ர்
  
தினைந்து இருபது வருடங்களுக்கு முன்பே, தமிழ்மகனின் ஒரு புத்தகத்துக்கு முன்னுரை தந்திருக்கிறேன். ‘தமிழ்மகன் ஆற்றுப்படை‘ என்று அதற்குத் தலைப்பு வைத்ததாக நினைவு. இப்போதும் அதே வேலையை, இரண்டாம் முறையாகச் செய்ய வந்திருக்கிறேன். அவரது ‘மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்‘ நூலை வெளியிடவும், அவரை வாசகருக்கு சிபாரிசு செய்யவுமாக இப்போது இங்கே என் பணி அமைகிறது.

     எனக்கு தமிழ்மகனின் எழுத்து பிடித்திருக்கிறது. ஆகவே இரண்டாம் முறையும வந்திருக்கிறேன். எல்லாருக்கும் தமிழ்மகனின் எழுத்து பிடிக்கும். உறுத்தாத, வாசிக்க சிரமம் இல்லாத எழுத்து அவருடையது. பிரமைகள் அற்றது அது.  தத்துவார்த்த அலட்டல்கள் அவரிடம் இல்லை. ஆகவே அது அவரது எழுத்திலும் இல்லை. அதனால், தன் பாத்திரத்தையும் வாசகனையும் அவர் ஒருபோதும் இவ்விதத்தில் தொந்தரவு செய்வது கிடையாது. வாழ்க்கை ஒருபோதும் தத்துவங்களால் ஆளப் படுவதே இல்லை. சாமானிய வாழ்க்கையில் தத்துவங்களுக்கு இடம் இருக்கிறதா என்ன? அடுத்த நொடி என்னவாகும் என்றறியா எளிய சராசரி வாழ்க்கை, நம்மையும் அது இழுத்துக்கொண்டு ஓடுகிறது. அதை சற்று எட்ட நின்று வேடிக்கை காட்டவும், வேடிக்கை பார்க்கவுமாக ஒரு சராசரி மனநிலையிலேயே கதைகளை எழுத தமிழ்மகன் முடிவு செய்கிறார். அதுவே நியாயம் என அவர் உணர்கிறார். இந்தப் பாத்திரங்கள் உணராத ஆத்ம அழுத்தம், தத்துவ தரிசனம் என்றெல்லாம் அவர் வாசகனைக் குழப்புவது இல்லை. பாத்திரங்களுக்கு அவ்வளவில் பெரிதும், தான் நியாயம் செய்வதாகவும் உணர்கிறார்.

     கடைசிவரி வரை வாசகனை அழகாக சிரமம் இல்லாமல் கூட நடத்திக்கொண்டு வந்து, தன் தெரு வந்ததும் பிரிந்து செல்லும் நல்ல நண்பனைப் போல, அவர் விடைபெற்றுக் கிளம்பி விடுகிறார். சுவாரஸ்யமான கதைகள் இவை. திடுக்கிடும் திருப்பங்கள் இல்லாத கதைகள். எதிர்பாராத முடிவுகள் இருக்கலாம். அவை திடுக்கிடும் திருப்பங்கள் அல்ல.

     எம்.ஏ. இலக்கிய மாணவர் இவர். கல்லூரிக் காலங்களில் ருஷ்யாவின் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள், அன்டன் செகாவ், கோகல், துர்கனேவ் என்று ஒரு வாசிப்பு. பிறகு பிரபஞ்சன், வண்ணதாசன், வண்ணநிலவன்,, அப்புறம் அடடே, சுஜாதா… என வாசிப்பு வரிசையை விரிவுபடுத்தி யிருக்கிறாற் போலிருக்கிறது. இவை எல்லாமான கதைப்போக்குகள் இந்தச் சிறுகதைகளில் காணக் கிடைக்கின்றன.

     சுஜாதாவின் அஸ்திரங்களைக் கையாண்டு, இன்றும் அவரது வாரிசுகளாக எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டே வருகிறார்கள். ‘பத்திரிகைப் பேராளுமை‘, என்று சுஜாதாவைப் பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். அவை இன்றைய இளைஞர்களின் எழுத்தை பாதிக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம். அவரது மேற்கத்திய இலக்கியத் தாக்கமான எழுத்து என்றால் இரவிச்சந்திரன், இரா. முருகன் போன்றோர், மர்மக்கதை என்றால் சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போனறோர் நினைவு வருகிறார்கள். இந்திய சாமான்யன் சார்ந்த எழுத்துச் சுழிப்புகளுக்கு தமிழ்மகன் சுஜாதாவின் அடையாளங்களுடன் எழுதுவதாகச் சொல்ல முடியும். இது ஒன்றும் அபசாரம் அல்ல. மேலை நாடுகளில் ஸ்கூல் ஆஃப் ஹெமிங்வே, ஸ்கூல் ஆஃப் சாமர்செட் மாம் என்று நம்மால் அடையாளங் காட்ட முடிகிறது அல்லவா? கற்றாரைக் கற்றாரே காமுறுவர். அந்த ரகம் இது.

     தவிரவும் இப்படி அடையாளமான எழுத்து, அது சுஜாதாவின் சாதனை. சுஜாதாவின் பெருமை.

     கதைக்களன் என ஒரு தேர்வு நிகழ்த்துகையில், கதைகளில் ஒரு புதிதான முடிச்சைப் போட தமிழ்மகன் முயல்கிறார். ஆனால் அதை சாதாரணத் தளத்தில் நிகழ்த்திக் காட்டுவது தன் சவாலாக அவர் ஏற்கிறார். அ. முத்துலிங்கம் போல ஒரு பளீரென்ற முதல் வரி அமைக்க முயல்கிறார். அந்தக் கதை சார்ந்த பின்னணிக்கு சில செய்திகளை, விவரங்களைத் திரட்டிக் கொள்கிறார். அதுவரை பரவலாக அறியப்படாத தகவலாக அது இருந்தால் சிலாக்கியம். அது, அந்தத் தகவல்கள் படைப்பில் இன்னும் மெருகூட்டும். சுவாரஸ்யம் கூட்டும், ஒரு கொத்துமல்லி, பெருங்காய எஃபெக்ட் தரும். அதை இந்த சாமான்யப் பாத்திரத்தோடு கதைசொல்கையில் இணைக்க, முடிச்சுப் போட கதையில் ஒரு கயிற்று முறுக்கம் அமைகிறது. சம்பவத் தேரை இந்தக் கயிறு கொண்டு இழுக்க வெள்ளைப் பக்கங்களான வீதியில் கதைத் தேர் பவனி காண்கிறது.

     என்றால் கதை சொல்ல அவர் தன்னை தூரத்திலேயே நிறுத்திக் கொள்கிறார். ஜன்னல் மலரை அதோ என்று காட்டுகிறார். இதோ, அல்ல. அதோ. தன் நிழல் போலும் அதில் கலவாமல், ,கவியாமல் காய் நகர்த்தி, கதை நகர்த்துகிறார். ஆகவே தான் இந்தக் கதைகளில், நான் என வரும் பாத்திரங்கள் உட்பட, எங்கேயும் தமிழ்மகன் தட்டுப்படுவதே இல்லை. அதேபோல இவர் தேர்வு செய்யும் பாத்திரங்கள் எதையும் இவர் தன் விமர்சனமாகக் கொச்சைப்படுத்துவதும் இல்லை. பாத்திரங்களுக்கு சக பாத்திரங்கள் சார்ந்து விமர்சனங்கள் உண்டு. அது தமிழ்மகனின் விமர்சனம் அல்ல. கதையின் போக்கு அது.

     தமிழ்மகன் பெரும்பாலும் எளிய உரையாடல்களுடனேயே பாத்திரங்களை நகர்த்திச் செல்கிறார். எழுத்தாளனாக தான், தன் முகம் அடையாளப் படாமல் இருக்க அவர் இப்படியொரு வகைமையை தன்சாதக அம்சமாக நினைத்திருக்கலாம். உரையாடல் இடையிலான பத்திகளில் வரும் விவரணைகளும் பாத்திரங்களின் நினைவு ஓட்டமாகவே மேலும் கதையை விரிப்பது அவருக்குப் பிடிக்கிறது. அப்போது கதையில் ஒரு மகா நம்பகத்தன்மை வாய்த்து விடுவதை நான் முன்பே அவர் கதைகளில் அவதானித்து, அவரை என் முன்னுரையில் வியந்திருக்கிறேன். சட்டென வாசகனை இப்படி கதையில் ஈடுபடுத்த, ஈர்த்துவிட, ஒன்றச் செய்துவிட அவரால் முடிகிறது.

     இதை விளக்குவோம். ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். தினக்கூலி என்று இவன் போய் வரிசையில் நிற்கிறான். இருபது பேர் தேவை, என்றால் வந்திருப்பதோ எண்பது பேர். மேஸ்திரி வந்து அந்தக் கூட்டத்தை நோட்டமிடுகிறான். நீ, நீ - என ஒவ்வொருவராய் ஒருபக்கமாய் ஒதுக்குகிறான். என்னைக் கூப்பிடாமல் விட்டுவிடுவானோ என்று இவன் பதட்டப்படுகிறான். மேஸ்திரி நீ, என்று இவனையும் இப்போது இழுத்துக் கொள்கிறான். உடனே தனக்கு வேலை கிடைத்து விட்டதாக அவன் மகிழ முடியவில்லை. இப்படி தனியே ஒதுக்கியவர்களை வேலைக்கு வேணாம் என்று வெளியே அனுப்பி விடுவானோ, என்று இவன் பயப்பட்டான்… என எழுதிச் செல்கிறார் தமிழ்மகன்.

     இப்படி இடங்கள் இந்தக் கதைத் தொகுதியிலும் உண்டு. தகவல், என்று ஒரு கதை. கண்காணிப்பு காமெரா பொருத்திய அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு சுத்திகரிப்புத் தொழிலாளி. அவனை விசாரணைக்கு அழைத்துப் போகிறார்கள். அந்த அதிகாரி அறையைத்தான் தான் சரியாக சுத்தம் செய்யவில்லையோ, என்று யோசித்தபடியே போகிறான், என எழுதுகிறார் தமிழ்மகன். பக்கத்து வீட்டு அன்க்கிள் சினிமாவுக்கு அழைத்துப் போகிறார். படம் முடிந்து வெளியே வந்தபோது “படம் நல்லா யிருந்ததா?“ என்று கேட்கிறார். செலவு செய்து அழைத்துப் போனவரின் மனம் நோகக் கூடாது, என்று அவன் “நல்லா இருந்தது“ என்று சொல்கிறான். இப்படி நுணுக்கமான பதிவுகள் தான் கதையை நிமிர்த்தி எழுத்தாளுமையை உயர்த்தி வாசகரிடம் காட்டும். வாழ்த்துக்கள் தமிழ்மகன்.

     பளிச்சென்ற வார்த்தை வியூகங்களில் கதை நகர்வது கதையின் சுவாரஸ்யத்துக்கு கட்டுக்கோப்புக்கு அவசியமாகிறது. வார்த்தைச் சிக்கனமும், சுருங்கச் சொல்லி காட்சியை விளக்கி விடுவதும் இவர் அறிந்து வைத்திருக்கிறார். தன் நண்பனுடன் காஷ்மீருக்கு ஊர் சுற்றிப் பார்க்க வந்தவன் அவன். நண்பனின் தங்கை மெஹரின் அழகில் கிறங்கி விடுகிறான். அதை எழுத்தாளர் விவரப் படுத்தும் லாவகம் அருமையானது.

     “சலீம் காட்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் எல்லாம் எனக்கு சாதாரணமாக இருந்தன. பனித் தொப்பி அணிந்த மலைச் சிகரங்கள், ஸ்வெட்டர் போட்ட மனிதர்கள், ஆவி பறக்கும், ஆனால் சூடாக இல்லாத டீ, எல்லாமே சாதாரணமாகத்தான் இருந்தது. “மோதிலால் நேரு படித்த பள்ளி இதுதான்“ என்றான்.“

     அப்போதெல்லாம் ஆச்சர்யப் படாத கதாநாயகன். அந்தப் பெண் மெஹர் படித்த பள்ளியைக் காட்டுகிறான். அதை ஆச்சர்யமாகவும் தவிப்புடனும் பார்க்கிறான் கதாநாயகன், என விவரிக்கிறார் தமிழ்மகன்.

     தி. ஜானகிராமன் ஒரு கதையில் எழுதுவார். கோவில் சந்நிதியில் தேவதாசி சாமி கும்பிட வரும்போது கூட்டம் மொத்தமும் சாமியையா பார்த்தது, அவளைப் பார்த்தது, என எழுதுவார். அதைப் போன்ற நல்ல உத்தி தான் இது.

     நிகழ்காலச் சூழல் சார்ந்த கதைக் கரு தேர்வு இவரது கதைகளின் வெற்றிக்கு முக்கிய அம்சம் என்று சொல்ல முடியும். கதையில் இதுவரை சொல்லாத கோணத்தில் கதையை யோசிக்க முடியுமா என்கிற தேடல் இவரிடம் காண முடிகிறது. முன்பே இவரது வேறு வேறு தொகுதிகளிலும் இந்த அம்சம் இவரை மிகுந்த தனித்தன்மையுடன் அடையாளப்படுத்தி விடுகிறது. அவ்வகையில் இவரது ‘எட்டாயிரம் தலைமுறை‘ எனக்குப் பிடித்த இவரது கதைகளில் ஒன்று. உதயகண்ணன் தொகுதி ‘வானவில் கூட்டம்‘ உலகத் தமிழ்ர் கதைகள் தொகுதியிலும் அது சிறப்பிடம் பெற்றது.

     காதலர் தினம் பற்றிய கதை. காதலைச் சொல்ல ரோஜாப் பூ தரும் வழக்கம் எப்படி வந்திருக்கக் கூடும்? – என தனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டு அதன் விளைவான ஒரு புனைவை அவர் தருகிறார்.

     இந்தத் தொகுப்பின் முதல் கதையான ‘நினைவின் நிழ்ல்‘ கதையே இப்படியான ஒரு மாற்றுக் கோண சிந்தனை வாய்த்த கதைதான். கோமாவில் கிடக்கும் ஒரு மனிதனைப் பற்றிய கதை. எல்லாரையும் போல பிற பாத்திரத்தின் வழியாக கோமாவில் கிடப்பவரைக் காட்டும் நடைமுறைப் பாணியைத் தவிர்த்து, கோமாவில் கிடந்தாலும், நினைவில், புலன்களில் சுற்றுச் சூழலை எப்படி நோயாளி அவதானிக்கிறார் என்று கதையை விரித்துச் செல்கிறார் தமிழ்மகன். புதிய  வாசகஅனுபவமாய் அமைகிற கதை.

     அவர் காதுபடவே “இவருக்கு நினைவு இல்லை. இவர் பிழைக்க மாட்டார்“ என்று மருத்துவர்கள் இவர் மனைவியிடமும், நண்பனிடமும் பேசகிறார்கள், என கதை நகர்கிறது. நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டிய கதை இது.

     மூன்று துண்டுகள் போல தனித்தனியே காட்டி மூணையும் ஒன்றாக்கி கதையை முடிக்கிற உத்தியும் இவருக்கு எழுதப் பிடித்திருக்கிறது. இதில் பாம்பாட்டி பற்றிய ஒரு கதையும், மஞ்சு அக்கா பற்றிய கதையும் இப்படியே வளர்கின்றன.

     பாம்பாட்டி ஒருவனைக் கதாநாயகன் பஸ் நிறுத்தத்தில் சந்திக்கிறான். பாம்புக்கு முட்டை வாங்கிக் கொடுக்கும்படி பணம் கேட்கிறான் பாம்பாட்டி. அவனுடன் அது சிநேகம் பாராட்டிக் கொண்டிருப்பது இவனுக்கு ஆச்சர்யமாய் இருக்கிறது. அது தானாகவே இவனோடு வந்து சேர்ந்துகொண்டது, என்கிற தகவலையும் பாம்பாட்டி சொல்கிறான்.

     அதன்பிறகு பாம்புகள் பற்றிய ஒரு கூட்டத்தில் சில தகவல்கள் அறிகிறான் இவன். பாம்பு திரும்பத் திரும்ப ஒருவனைக் கடித்தால் அவன் அந்த விஷத்தை முறிக்கிற சக்தி பெற்றுவிடுகிறான். பாம்புகள் உடலில் சுரக்கிற ஒரு திரவத்தினால் சோடிப் பாம்புடன் இணை சேர்கின்றன, பாம்பை அடிக்கும் போது அந்த திரவம் வெளியே வரும், அதைத் தேடி சோடிப் பாம்பு, தன்சோடி மரணமடைந்த இடத்துக்கு வரும், போன்ற விவரங்கள் தெரிகிறது.

அந்தப் பாம்பாட்டி பற்றி அறிந்த ஒருவர் கூட்டத்தில் பார்வையாளராக இவனுக்கு அறிமுகம் ஆகிறார். அந்தப் பாம்பாட்டியின் மனைவி பாம்பு கடித்து இறந்து விட்டதாகவும் அவர் சேதி சொல்கிறார்.

     மனைவியைக் கடித்த பாம்பை அவன் கொன்றிருப்பான், எனவும், அதன் சோடிப் பாம்பு அதே இடத்துக்கு வந்தபோது இவன் அதை வளர்க்க ஆரம்பிக்கிறான், எனவும் யூகங்களுடன் கதை முடிகிறது. பாம்புக்கடியால் விஷம் ஏறாத பாம்பாட்டி அவன். ஆதலால் பாம்புகளிடம் அவன் பயமற்று சிநேகம் பாராட்டுகிறான். அவளோ பாம்புக்கு பயந்ததாலேயே ஆபத்து உணர்ந்து பாம்பு அவளைக்  கடித்து அவள் இறக்க நேர்கிறது… எனவும் கதையில் கிளைக்கதைகளை நாமாக யூகிக்க வைக்கிறார் தமிழ்மகன்.

     தொகுப்பின் ஆகச் சிறந்த கதை ‘தகவல்‘ என்பது என் கணிப்பு. ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் துப்புரவுப் பணிக்காரனின் கதை. தெருவில கையை விட்டுவிட்டு சைக்கிளில் போகிற ஒருவனை எச்சரிக்க அவன் சன்னலில் இருந்து வீசியெறிந்த காகிதம் அவன் வேலைக்கே உலை வைக்கிறது. அலுவலக ரகசியங்களைக் கடத்தி வெளியே கொண்டு செல்வதாக அவனைப் போலிசில் பிடித்துக் கொடுத்து விடுகிறார்கள். கச்சிதமாய் இந்தக் கதையில் கதாபாத்திரத்தோடு நெருக்கமாய் காட்சிகளைப் பின்னிச் செல்கிறார் தமிழ்மகன். வீணான விவரங்களோடு, சுவாரஸ்யம் கருதி சேர்க்கலாம் என்கிற விவரங்களோ இல்லை. அது நல்ல விஷயம் தான். ஒரு ஜெர்மானியக் கம்பெனியுடன் இணைந்து பணியாற்றும் கம்பெனி இது. இதன் வேலை நேரமே ஜெர்மானிய நேரம் தான். அதன்படி இவன் காலை 7,28க்கு உள்ளே நுழைந்து மாலை 4,32க்கு வெளியே போக வேண்டும். சந்தேகப் பின்னணியில் மாட்டிக்கொண்ட இவன் போலிசாரால் விசாரணைக்கு என்று அழைத்துப் போகப்படும்போது திரும்பி மணி பார்த்தான். மணி 4,32 என முடிக்கிறார் கதையை.
    
இது தான் சுஜாதாவின் பாணி. கதையில் பயன்படுத்திய ஒரு விவரத்தை சற்றும் எதிர்பாராமல் முடிவில் அவர் பயன்படுத்துவார். எனக்கு அந்த உத்தி பிடிக்கும்.

     ஒரு வேடிக்கை கருதி ஜெர்மன் கதை ஒன்று சொல்கிறேன். ஒரு போர்க்காலப் பின்னணியில் நதிக்கரையில் பாலத்துக்கு கீழே அமர்ந்திருக்கும் ஜெர்மன் சிப்பாய். அந்தப் பாலம், அந்த நதி, என எல்லாவற்றையுமே அவன் ஓவியம் ஒன்றில் பார்த்திருப்பான். யார் அந்த ஓவியர் என்று தனக்குள் முட்டி மோதி யோசித்தபடி இருப்பான். அந்த ஓவியர் பெயர் நினைவுக்கு வராது. இந்நிலையில் அதிகாரி ஒருவர் அந்தப் பக்கம் வந்து அவனது அடையாள அட்டை கேட்பார். அதை எங்கோ தவற விட்டிருப்பான் அவன். நான் ஜெர்மன் படைக்காரன் தான், என அவன் வாதிடுவதை அவர் ஏற்கமாட்டார். பெரும் சிக்கலாகி விடும். பிடிவாதமாக அவனை விசாரணைக்கு என்று வண்டியில் ஏற்றுவார் அவர். அவன் வண்டியில் ஏறும் அந்தக் கணத்தில் அவனுக்கு ஞாபகம் வரும் – அந்த ஓவியர் வான்கோ, என்று முடியும் அந்தக் கதை.
    
ஜான் அப்டைக் எழுதிய ‘வால்ட்டர் பிரிக்ஸ்‘ கதையும் இப்படித்தான். மனைவியின் நினைவாற்றலின் முன் தன்னை பலவீனமாக உணரும் கணவன். ஒரு பழைய சிநேகிதனின் பெயரை அவளுக்கு நினைவூட்டத் திணறுவான். அந்த விஷயத்தையே மறந்து அவள் அவனோடு உரையாடிக் கொண்டிருப்பாள். திடீரென்று அந்த உரையாடல் இடையே புன்னகையுடன் கணவன் “அவன் பெயர் வால்ட்டர் பிரிக்ஸ்“ என்பான், என்று முடியும் அந்தக் கதை.

தமிழ்மகனின் எழுத்து சமத்காரமான, உத்தி பூர்வமான எழுத்து. தன்னை பிற எழுத்தாளர்களில் முழுக்க வித்தியாசப்படுத்திக் காட்டிக்கொள்ள அவர் முயல்கிறார். பாம்பாட்டி, ஐ.டி. போன்ற கதைகளில் அவர் வெற்றியும் பெறுகிறார். ஒரு கதைக்கும் மற்றொரு கதைக்கும் அவர் வேறுபட்ட தளங்களை கையெடுத்துக் கொள்கிறார். அலுப்பூட்டாத நடையில் சுவாரஸ்யமான தகவல்களுடன் அவர் கதையை உரையாடல் பாணியில் அடுக்கிச் செல்கிறார். பாத்திரங்களும் இயல்பாய், அதிதங்கள் அற்று உரையாடுகின்றன.
    
அப்புறம், திருக்குறளை, எழுதுகையில் ஞாபகம் வந்தால் கதைகளில் இயல்பாகப் பயன்படுத்தி விடுகிறார். கச்சிதமான புதிய உவமை வீச்சுகள். இந்தக்காலக் கதை என அவற்றை உணர்த்த உவமைகளின் வாசனை அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கிறது. சம்பவத்தைக் காட்சிப் படுத்த உவமைகள் எப்பவுமே பேருதவி செய்கின்றன.
    
அழகு பிம்பம் சார்ந்த மஞ்சு அக்காவை பின்னாளில் நினைப்பதைப் பற்றி எழுதுகிறார் தமிழ்மகன்.

“நினைவின் ஆழத்தில் நிறம் மங்கி, சாயம் இழந்த மயில் தோகைபோல் . . .“

இன்னொரு இடம் – அதிகாரியின் தொந்தி பற்றிய வர்ணனை. தொந்திக்கு மேல் அரிசி மூட்டைக்குப் பட்டை கட்டிய மாதிரி பெல்ட்.“

அவள் சிரிக்க எத்தனிக்கும் போது முன் இரண்டு செவ்வகப் பற்கள் மட்டும் கார்ட்டூன் முயலுக்கானது போல் வெளியே தெரியும்.“ (நாங்கள் அணில் பற்கள், எனறோ வாழைப்பூ போல என்றோ தான் எழுதுகிறோம்.)

போலிசிடம் சிக்காமல் தப்பித்து சுவாமி சத்தியானந்தா நேபாளுக்கு, அங்கிருந்து வெளிநாட்டுக்குத் தப்பித்துப் போக முயற்சிக்கிற கதை ஒன்று இருக்கிறது. கல்யாண அலங்காரத்துடன மாப்பிள்ளை யார் என்றே தெரியாமல் காத்திருக்கும் மணப்பெண் பற்றிய கதை இருக்கிறது. அதிகாரியைச் செருப்பால் அடிக்க என்று சந்தர்ப்பம் தேடி அவர் கூடவரும் தொழிலாளி கதை இருக்கிறது.

அவரது இளம் வயதிலேயே ‘ஆறறிவு மரங்கள்‘ போன்ற கவிதைத் தொகுதிகளை வாசித்திருக்கிறேன். ‘முப்பது வயதில் விதவைகள் இருக்கலாம். முதிர் கன்னிகள் இருக்கிறார்கள் இங்கே‘ என்று கோபம் தெறிக்க எழுதியவர் அவர். இன்னுமான அதே வேகமும் ஆத்திரமும் கோபமும இவரிடம் மிச்சம் இருக்கின்றன. ‘நியாயச் சங்கிலி‘ என்ற கதையில் திடுதிப்பென்று இப்படி ஒரு வாக்கியம் குதிக்கிறது.

“கோடி கோடியாக ஊழல் செய்கிறவர்கள், ஆயிரக் கணக்கில் ஊழல் செய்கிறவர்களை வேலையை விட்டு அனுப்புவது என்ன நியாயம்?“

வித்தியாசமான கதைக் களங்களுக்காகவும், சுவாரஸ்யமான வாசிப்புக்காகவும் தமிழ்மகன் தனக்கான கவனம் பெற்று விடுகிறார்.

மஞ்சு அக்கா பற்றிய புத்தகம் இது. அடுத்து தன் அண்ணன் பற்றியும், தம்பி தங்கை பற்றியும் அவர் எழுத வேண்டும், என்று காத்திருக்கிறேன்.
    
·        *

Mob 91 97899 87842

Comments

Popular posts from this blog