short story


மெ ழு கு வ ர் த் தி
*
எஸ். சங்கரநாராயணன்


ப்ளஸ் பி - என்று அண்ணன் படிப்பான். குடுவையில் ஏதாவது வாயு சேகரிக்கும் முறை பற்றிப் படிப்பான். அக்பரின் சாதனைகள் படிப்பான். சர்க்கரை அதிகம் கிடைக்கும் ஏதோ நாடு, பற்றிப் படிப்பான்... அடுத்த வீட்டுக்காரன் பற்றித் தெரியாது. அட்டையே பார்த்திராத புத்தகமும் அதன் ஆசிரியரும் பற்றித் தெரிந்து கொள்வான். அறிவை விருத்தி செய்கிறான். வகுப்பில் முதல் ஐந்துக்குள் இடம். அண்ணன் பற்றி ஐயாவுக்குப் பெருமை  உண்டு.

இவன் கிரிக்கெட்டில் டென்டுல்கர் எத்தனை ரன் எடுத்தான் என்பதில் கவலை காட்டுவான். ‘அதெல்லாம் பரிச்சைல கேக்க மாட்டங்கடா’ என்பான் அண்ணா.

கேட்கத்தான் இல்லை. பரிட்சை முடிவு செய்தித்தாளில் வந்தபோது இவன் எண் இல்லை. ‘என்னா சிவநேசா, முன் நம்பர் இருக்கு. அடுத்த நம்பர் இருக்கு. உன் நம்பரை அச்சுப்போட மறந்துட்டானா?’ என்கிறார் அப்பா. சிரிக்கிறாப்போலப் பேசினாலும் முகம் சிவந்து கிடந்தது.

சர்வீஸ் கமிஷனோ எதோ எழுதி அண்ணனுக்கு தமிழ்நாடு அரசு வேலை. மின்சார வாரியத்தில். வீட்டில் எல்லாரும் சந்தோஷமாய் இருந்தார்கள். இவனுக்கும் சந்தோஷம்தான். அந்தப் பரிட்சையிலும் ஏ பிளஸ் பி சூத்திரங்களும், சத்ரபதி சிவாஜி தாயார் பெயரும் கேட்டிருக்கலாம். சிவநேசனுக்கு நடிகர் திலகம்தான் தெரியும்.

‘உனக்கு செய்யாத வேலைக்குச் சம்பளம் தர்றாப்ல ஆயிப் போச்சே அண்ணே’.

‘என்னடா சொல்றே?’ என்றான் அண்ணன். நகைச்சுவை வாசனை அற்றவன் அவன்.

‘மின்சார வாரியத்துல ரிப்பேர் கிப்பேர்னு வேலை இல்லாமல் இருந்தாதான் ஊருக்கு நல்லது. அதுக்கு உங்களுக்கு நீங்க வேலை செய்யாம இருக்கிறதுக்கு சம்பளம்...’

‘ஏல, இந்த அறிவு பாடம் படிக்கறதுல உனக்கு இல்லாமப் போச்சே’ என்றார் அப்பா குடையை மடக்கி உள்ளே வந்தபடியே.

சிறு சிறு கைவேலைகள் வந்தன. டி.வி. மெக்கானிக் ஒருவனோடு கூடப் போனான் சிவநேசன். அவனிடம் இல்லாத கெட்ட பழக்கம் இல்லை. சதா கெட்ட வார்த்தை பேசினான். சிலாள் வெத்திலை போடுவதைப்போல அவன் கெட்டவார்த்தையை உள்ளே அதக்கியபடி இருந்தாப் போலிருந்தது. வெத்திலைச் சாறைத் துப்புகிறாப்போல அவன் வார்த்தைகளைத் துப்பினான். அவனையே பிடிக்காமல் போனது. தனி வேலை என்று நாமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றிருந்தது. அதிகாலை பால் பாக்கெட் போடுவது முயற்சி பண்ணிப் பார்த்தான். வருமானம் பத்தாத வேலை. சில நாள் ஒழுகும் பாக்கெட் என்று திருப்பிக் கொடுத்தார்களானால் அன்றைய சம்பளத்துக்கு வேட்டு. அதிகாலை அவன் மணியடித்தபோது வந்து வாங்க எரிச்சல் பட்டார்கள். காலையில் கடைவரை வரத்தான் முடியவில்லை. மாடியில் இருந்து கீழே யிறங்கிவரக் கூட முடியாவிட்டால் எப்படி?

தூங்கி எழுந்த ஜோரில் திட்டு வாங்குவதா என்றிருந்தது.

திடீரென்றுதான் கிரி ஞாபகம் வந்தது. கிரி வீட்டில் மெழுகுவர்த்திகள் செய்வார்கள். அவன், அவங்க அக்கா எல்லாருமே வீட்டிலேயே அச்சு வைத்து மெழுகை ஊற்றி நடுவில் திரி பதித்து வண்ண வண்ண மெழுகுவர்த்திகள்  வித வித நீள அகலங்களில் செய்வார்கள்.

மெழுகுவர்த்தியே பார்க்க அழகுதான். சின்ன மெழுகுவர்த்திகள் குச்சி மிட்டாய் போல பார்க்கவே கடித்தத் தோணும். மரக்காலில் நெல் கும்பாச்சியாய் அளந்தாற்போல, உச்சியில் மயிர் கோர்த்த குழந்தை போன்ற மெழுகுவர்த்திகள். சில சற்றே உள்குழிந்து பளபளவென மினுங்கும். வெடித் திரி போன்ற உயர நீட்சியில் லென்ஸ் போன்ற தீபம். சில சடசடவென சப்தம் எடுக்கும். சாக்பீஸ், வாழைத்தண்டு என பல பல வடிவங்களில் சின்னதும் பெரிசுமான மெழுகுவர்த்திகள், சர்ச்சுகும் கடைகளில் கரண்ட் கட் சமயங்களில் பயன்படுத்தவும் தேவாலயங்களில் பிரார்த்தனை செய்யவும் வீட்டில் இருட்டில் ஏற்றி வைக்க எனவும் தேவைப்படி சின்னதும் பெரிதுமான வர்த்திகள். ஆகச் சிறியவற்றை பிறந்தநாள் கேக்குகளின் மேல் ஏற்றி வைத்து உடனே அணைத்து விடுகிறார்கள்.

இவன் கவிதை என அவ்வப்போது மனசில் ஏதாவது கிறுக்குவது உண்டு.

பிறந்த நாளில்
அழுகின்றன
மெழுகுவர்த்திகள்

பிறந்த நாளிலும் இறந்த நாளிலும் மெழுகுவர்த்திகளை ஏற்றும் பழக்கம் எப்படி வந்தது?

செய்யட்டும் செய்யட்டும். நல்ல பழக்கம். எனக்கு வியாபாரம் ஆக வேண்டுமே... என நினைத்துக் கொண்டான் சிவநேசன்.

இன்னொரு கவிதை எழுதிருவம்.

குருடனின்
கல்லறையில்
மெழுகுவர்த்திகள்

தீபாவளி வர வர டெய்லருக்குக் கொண்டாட்டம். ராப்பகலாய் மிஷின் சடசடக்கும். தீடீரென மழை வந்தாற் போல விட்டுவிட்டு மிஷின் சத்தம். மழைக்காலம் குடைக்கு டிமாண்ட்.

அமோக வியாபாரம்
குடை வியாபாரி வீடு திரும்பினான்
நனைந்தபடி

கிறிஸ்துமஸ் சந்தர்ப்பங்களில் கிரிக்கு வேலை இருந்தது. டீக்கடையில் கூட்டம் பார்த்துப் போன்டா, பஜ்ஜி, சமோசா என்று போடுகிறதைப் போல சீசனுக்குத் தக்கபடி தேவைப்படி அவனது மெழுகுவர்த்தி அளவுகளும் மாறின. சர்ச் ஆர்டர் உலக்கை உலக்கையாய்ச் செய்ய வேண்டியிருந்தது. விதவித வண்ணங்களில் ஸ்கெட்ச் பேனா பொதிந்தாற்போல பேக் செய்யப்பட்ட மெழுகுவர்த்திகளை கடைகளில் விற்கலாம். போலீஸ் லத்தி ரூல்தடி அளாவிலானவை விலை அதிகம் என்று மெதுவாகவே தள்ள வேண்டியிருந்தது. அதே விலையில் சிறியவை ஒரு பாக்கெட் வாங்கி வெவ்வேறு இருட்டறைகளில் வீட்டில் பொருத்திக் கொள்ளலாம் என ஜனங்களின் கணக்கு.

வண்ண வண்ணங்களில் மெழுகுவர்த்திகள் வந்தாலும் சிலர் நீள அங்கிப் பாதிரிமார் போல வெள்ளை வர்த்திகளையே ஏனோ விரும்புகிறார்கள்.

சைக்கிள் இருந்தது வீட்டில். திறந்த அட்டைப் பெட்டி கட்டிக் கொண்டான். விதவிதமான பொட்டலங்களில் மெழுகுவர்த்திகள் வரிசையாய் அடுக்கிக் கொண்டான். பார்க்கவே அழகாய் இருந்தது. ராக்கெட் வெடிகள் போல.

தெருத் தெருவாய் அலைந்து கதவு கதவாய்த் தட்டி விற்பது புது அனுபவம். அதிர்ஷ்டம் சார்ந்த அனுபவம் அது. திடுதிப்பென்று ஒருநாள் ஏகப்பட்ட விற்பனை என்றிருக்கும். ஒருநாள் வியாபாரம் படியவே படியாது. செத்த ஆத்மாக்கள் வீடு மாட்டினால் லாட்டா விற்கலாம். அட கவிதை எழுதுவம்.

தீக்குளித்துச் செத்தாவள்
தலைமாட்டில்
தீபம்

கதவு திறக்கும் முதல் முகம் ஆணோ பெண்ணோ, வாலிபமோ வங்கெழடோ, சிரிக்குமோ எரிந்து விழுமோ... மனிதர்கள் அத்தனை வகையும் சந்திக்கலாம் போலிருந்தது.

‘அம்மா?’ எனக் கூப்பிட்ட ஒரு வீட்டில் ஜன்னல் வழியே நாய் ஒன்று எட்டிப் பார்த்தது. பெண் நாயோ? சிறு பெண் குழந்தை ஜன்னல் கம்பியோடு ஒட்டியபடி எட்டிப் பார்த்தது பிறகு.

‘ம்மா டாட்டா’

‘உன்னைக் கூட்டிட்டுப் போவலியா?’ - என்று கேட்டான் சிவநேசன். அதற்கு அழுகை வருகிறதா என்று ஒரு நிமிடம் நின்று பார்த்தான். ‘வா, டாட்டா, நா தூ’ (என்னைத் தூக்கிக்கொள்) என்று இவனைக் கூப்பிட்டது குழந்தை.

திருடன் தூக்கிக் கொள்ள
அடம் பிடிக்கும்
குழந்தை

மெழுகுவர்த்தீ... என, விநோத இழுப்புடன் குரல் கொடுத்தான் சிவநேசன். விசித்திரமான குரல் எடுப்பு காதுகளை ஈர்க்கும் என்பது ஐதிகம். தீ - என்ற வார்த்தையே பார்க்க பற்ற வைத்த மெழுகுவர்த்தி போல உச்சியில் கொண்டை போட்டதாய் இருக்கிறது. என யோசனை வந்தது.

கிறித்தவர்களுக்கு கிறிஸ்துமல் போல நம்மாளுகள் தீயை வழிபட கார்த்திகை கொண்டாடுகிறார்கள். தீயை துண்டு துண்டாய் நறுக்கினாற் போல அடுக்கிப் பார்ப்பது, என ஒருவன் யோசித்திருக்கிறான்!

கோபி வைத்த மாதிரி - சாந்துப் பொட்டு வைத்தாற்போல் தீ சூடும் வர்த்திகள்.

வெள்ளை நாலுக்கு
உயிர் வந்தது
தீயின் நடனம்

‘மெழுகுவர்த்திஈஈ...’

ஒரு பெரியவர் அவனை நிறுத்தினார். மொதல் போணி முகம் சுளிக்கக் கூடாது, என நினைத்துக் கொண்டான். சைக்கிளில் இருந்து இறங்கினான்..

‘‘என்ன அது?’

சொன்னான் அடக்கமாய், ‘காதுல விழுகல, அதான் கேட்டேன்’ என அவர் தாண்டிப்போனார்.

‘எங்க போறீங்கய்யா?’

‘தெருக்கோடி பெட்டிக்கடை... பொடிமட்டை வாங்கணும்...’

‘கடை பூட்டிக் கெடக்கு’ என்று பொய்யை அவிழ்த்து விட்டபடியே சைக்கிளில் ஏறினான்.

மெழுகுவர்த்தி நிரந்தரமாய்த் தேவைப்படுகிற வஸ்து அல்ல. முன்ஜாக்கிரதைக் காரர்கள் மாத்திரம் வாங்கிப் பத்திரப்படுத்தி வைத்து தேவைக்கு, திருவிளையாடல் சிவாஜி போல ‘இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி, எங்கெங்கோ அலைகிறார் ஞானத் தங்கமே...’ என்று பின்னணிப் பாடலுடன் தேடோ தேடென்று தேடுவார்கள்.

தேர்வு முடிவு
தேடினான் எண்ணை
நண்பனும் தோல்வி

எதிரில் தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்த பெண் - ஓ.கே - அழகாய் இருந்தாள். மெழுகுவர்த்தீ.... என்று கத்தினான் ஒரு நம்பிக்கையுடன். அவள் தலையைத் தூக்கிப் பார்த்தாள். (உனக்குக் கல்யாணம் ஆயிட்டதா) ‘வர்த்தி வேணுமா?’ என்று கேட்டான்.

‘இருக்கு’ என்றாள் அவள். கிணற்றில் தண்ணிதான் இல்லை போல... என நினைத்துக் கொண்டான்.

நல்ல வெயில். காய்கறியும் மீன் இறால் நண்டு எனவும் தெருவில் எதிர்பார்க்கிறவர்கள் மெழுகுவர்த்தியை எதிர கொண்டார்கள் இல்லை போல. அவன் குரலை யாருமே சட்டை செய்யவில்லை. பத்து, தெருக்கள் சுற்றி வந்து விட்டான். தெரு வாசலில் கும்பலாய் கதைபேசி முடி சிக்கெடுத்துக் கொண்டிருந்த பெண்கள் கூட பழைய பேப்பர்காரனையோ, ஈயம் பித்தளைக்குப் பேரிச்சம்பழத்தையோ எதிர்பார்த்திருந்தார்கள். ‘அம்மா மெழுகுவர்த்தீ...’. என்று நின்றால்கூட, ‘வேணாம்’ என்று முகம் திருப்பிக்கொண்டு, ‘வடிவேலு பார்த்திபன் சேர்ந்தாலே ஒரே சிரிப்பு...’ என்று ஆரம்பித்து விடுகிறார்கள்.

நாலு பொம்பளையாட்கள் சேர்ந்தாலே சிரிப்புதான்.

வெயிலுக்கும் அதுக்கும் முகமே எரிந்தது. தொண்டையில் சத்தஎடுப்பு வேகமடங்கினாப் போல இருந்தது. வர்த்-/தீ/  என்று சத்தமாய்க் கத்த தொண்டைக்குள் / தண்ணீ / வேண்டியிருந்தது.

எதிரே வரும் ஐஸ்வண்டி, பலூன்காரன் எல்லார் மீது எரிச்சலாய் வந்தது. ஒருவேளை மெழுகுவர்த்தி விற்க வந்தது தப்போ, என்றிருந்தது. காய்கறி என்றும் பழம் என்றும் வண்டிகள் கடந்து விற்பனையாகிக் கொண்டே போயின. பக்கத்துத் தெருவில் அந்த வண்டியில் சரக்கு அளவு கணிசமாய்க் குறைந்திருந்தது.

ஒரு வீட்டில் குட்டி மெழுகுவர்த்தி கேட்டு, அதுவும் ரெண்டே ரெண்டு. பாக்கெட் உடைத்துக் கொடு, என்றார்கள்.

‘பாக்கெட்டா வாங்கி வெச்சிக்கிடப்படாதா? உபயோகமாகுமில்லே?’

‘யாருக்கு? பக்கத்தூட்டுக்கு!’ என்றாள் அந்தப் பெண்மணி. ‘ஓசி கேட்டு வந்துருவாளுக... எந்த ஜாமானையும் வாசல்ல நின்னு வாங்கினாவே ஓசிக்கு நல்லா ஞாபகமா கேட்டு வந்துர்றாளுக’ என்றாள்.

‘கோகிலாக்கா...’ இருவருமாய்த் திரும்பிப் பார்த்தார்கள்.

‘ஒரே தலைவலிக்கா. அமிர்தாஞ்சன் கெடைக்குமா?’ என்றாள் வந்தவள்.

சரி மொதல் போணி என்றாவது ஆகட்டும் என்றிருந்தது. ‘இந்தாங்க,’ என்று பாக்கெட்டை உடைத்து, இரண்டு சிறிய மெழுகுவர்த்திகளை நீட்டினான்.

‘ஒண்ணு போதும்’ என்றாள் கோகிலாக்கா.

லேசாய் இருட்டத் துவங்கிய மாலை வரை அலைச்சலாய் அலைந்தும் பெரிதாய் ஒன்றும் விற்க முடியவில்லை. பத்திருவது ரூபாய், சில்லரை வியாபாரம் தான். அதிலும் பசிக்கு என ஒரு டீக்காசு எடுத்திருந்தான். கால்கள் வலித்தன. வெயிலை விரயமாக்காமல் சுற்றித் திரிந்தாகி விட்டது.

அட, இந்தப் பக்கம்தானே அண்ணன் அலுவலகம் என்று தோன்றியது. அவன் நண்பர்கள் யாரும் இரக்க அடிப்படையில் வாங்கக் கூடும். சைக்கிளை ஓட்டிப் போனான் அலுவலகப் பக்கம். அண்ணன் விரும்புவானா?

‘என்னடா’ என்றான் அண்ணன் ஆச்சரியத்துடன்.

‘வேலை முடிச்சிக் கிளம்பிட்டியோன்று யோசனையா வந்தேன்,’ என்றான் சிவநேசன் புன்னகையுடன். சட்டென்று வியாபார அறிமுகம் செய்து வைக்கக் கேட்கத் தயக்கமாய் இருந்தது. லேசாய் மழை இருட்டுக் கொடுத்த வேளை, இருந்த வெயிலுக்கு மழை வரும் போலத்தான் தெரிந்தது... ஆகா, என்று யோசனை வந்தது.

‘அண்ணே எனக்கு ஒரு உபகாரம் செய்யணுமே. உன்னால முடியுமா,’ என்று கேட்டான்.


மனசில் ஒரு வைராக்கியம் வந்தது. முதல் நாள் வியாபாரத்தில் அவநம்பிக்கைப் படவே கூடாது என்றிருந்தது. உற்சாகப் படுத்திக் கொள்ள கவிதை எழுதினான் உள்ளே.

வெள்ளையடித்து சாமிபடம்
வரைந்துவிட்டுக் கிளம்பினான்
ஒண்ணுக்கடித்து விட்டு

‘மெழுகுவர்த்...தீய்...’

இருட்டு மெழுகுபிடித்தாற் போல மேலிருந்து ஒழுக ஆரம்பித்திருந்தது. தெரு விளக்குகள் மெல்ல ஒளிர ஆரம்பித்தன. அதே தெருக்களில் பரிச்சயப்பட்ட முகங்களைத் தேடியபடி மெல்ல வண்டியைச் செலுத்தினான்.

‘மெழுகுவர்த்தீ...ய்’

சட்டென விளக்கு அணைந்து கும்மென உள்க் கலவரத்தை ஏற்படுத்தியது. தெருவே வீடுகளே சட்டென்று அழிந்து போனாப் போல இருந்தது. என்ன நாள் இது. அமாவாசை தாண்டியா முந்தியா தெரியவில்லை. எங்கோ சிறுவர்கள் ஊய்யென ஊளையிட்டார்கள்.

சட்டென விளக்கணைவது ஊருக்கு தீய சகுனம். எனக்கு நல்ல சகுனமா என்று தெரியவில்லை. ஆ முதல் குரல். கேட்ட குரலாட்டம் இருந்தது. அந்த கோகிலா அக்காவிடம் அமிர்தாஞ்சனம் கேட்டவள்.

‘மெழுகுவர்த்தி...’ என்றான் நம்பிக்கையாய்.

பாக்கெட்டாக வாங்கிக் கொண்டாள். பெரிய வர்த்தியாய்த் தந்தான். ‘சின்ன வர்த்தி போதும்’ என்றவளிடம். ‘அது வித்துப் போச்சு,’ எனப் பொய் சொல்ல வேண்டியிருந்தது. கரெண்ட் வந்துவிடக் கூடாதே என்று இருந்தது.

‘தீப்பெட்டி இருக்கா?’ என்றாள். ‘இல்லை,’ என்றான். ‘ரெண்டு குச்சு கூடப் போதும்’ - ‘நான் சிகரெட் குடிக்கறதில்லை,’ என்றான் பவ்யமாய்.

ஆனால் மெழுகுவர்த்தியுடன் தீப்பெட்டி விற்பது நல்ல யோசனையாத்தான் இருந்தது.

தண்ணீர்ப் பாக்கெட் வாங்கிய கடைவாசலில் நிறையப் பேர் மெழுகுவர்த்திகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள் அவன் அருகேபோய் நின்று கொண்டு விறுவிறுவென்று அங்கேயே நிறைய விற்றான். கடைக்கார்ன ஒரு பார்வை பார்த்தான்.

‘மெழுகுவர்த்தி வேணுமா அண்ணே? மொத்தமா வாங்கி வெச்சிக்கிட்டா நல்லா வியாபாரம் ஆகும் இல்லே?’ - என்று நட்புடன் புன்னகைதான்.

‘எவ்வளவு இருக்கு?’

‘பாதிக்கு மேல் வித்திட்டேன்,’ என்று இன்னொரு பொய்யும் சொன்னான்.

‘மீதி மொத்தமும் குடு’ என்றான் கடைக்காரன்.

‘நம்ம கிட்ட கடன் கிடையாது அண்ணாச்சி.’

‘அட இந்தா’ என்று விற்பனை விலையில் தன் லாபத்தைக் கணக்குப் பண்ணி குறைத்து முழு சரக்கும் வாங்கிக் கொண்டான் அண்ணாச்சி.

உற்சாகமாய் இருந்தது. சைக்கிளை மிதித்தபடி வண்டியை வேகமாய் மிதித்தான்.

வீட்டுக்குள்
பாடம் படிக்கிறது குழந்தை
நிலா நிலா ஓடிவா

ரெண்டு தெரு தாண்டியதும் பொதுத் தொலைபேசி. நின்றான்.

‘மெயினை ஆன் பண்ணலாம் அண்ணே’ - என்றான் சிவநேசன்.


Comments

  1. அருமையான நடை . [ கேட்கவா வேண்டும் ? ] இன்று அத்தனை வியாபார அசுரர்களும் இதையேத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள் ? - சுப்ரா

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே
      அந்த உத்தி மாத்திரம் தான் சாப்ளின்... கதை என் பாணியில் ...
      வாழ்க

      Delete
  2. விழிகள் வலித்தன.
    குருடனின்
    கல்லறையில்
    மெழுகுவர்த்திகள்.

    ReplyDelete
    Replies
    1. ஏண்ணா. ரொம்ப உணர்ச்சிவசப் படறீங்களே? ஜாலியான கதை தானே?... பிறந்தநாள் / அழுதன / மெழுகுவர்த்திகள் என ஒருதரம் எழுதினேன்

      Delete
  3. Replies
    1. கடைசி வரி இன்னொன்று சேர்த்து எனது ஃபேஸ் புக் டைம் லைனில் எழுதியிருந்தீர்களே...
      இந்த மட்டில் நிறுத்துவது குபீரென்ற புன்னகையை வரவழைக்கும் அல்லவா? இதை வாசித்த ஜோரில் நாஞ்சில்நாடன் எழுத்தாளர் அலைபேசியில் வந்து பாராட்டியது ஞாபகம் வருகிறது...

      Delete
  4. சார்லி சாப்ளின் இந்தக் கதைக்கு காரணமாக இருந்தாலும் சொல்லும் நடை . இடம் பெற்ற கவிதைகள் இவற்றால் வேறொரு கதையாகவே தெரிகிறது

    ஐயா! முகநூல் சுவற்றில் பதிவின் முகவரியையும் காப்பி செய்யவும். அதனால் இணைப்பின் மூலம் எளிதாக இப்பக்கத்திற்கு வர முடியும். தாங்கள் உங்கள் டைம் லைனில் இணைப்பு இல்லாததால் உங்கள் இணைப்பை உங்கள் டைம் லைனில் மீண்டும் ஓட்டினேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog