Posts

Showing posts from September, 2019
Image
சிறுகதை - இந்தியா டுடே • பெயரே இல்லாத மனிதன் எஸ்.சங்கரநாராயணன் • எ ப்பேர்ப்பட்ட வித்வான் அவர்... ரவிப்பிரகாஷ். என்ன குரல். என்ன குழைவு. என்ன ஜாலம்... இசைக்கருவிகளின் சாகசங்களையும் அநாயாசமாய் எட்டமுடிந்த குரல் அல்லவா அது? குரல் அல்ல, குரல் அலை. குரல் அருவி. குற்றாலக் குளிர் சாரல். பெயர் சொல்லவே வாய் மணக்கும். இசை மணக்கும். அவனுக்குக் குரலே இல்லை. பெயரே இல்லை. பெயர் எதற்கு? யார் அவனைக் கூப்பிடப் போகிறார்கள்? கூப்பிட்டாலும் எப்படி அவனால் அதைப் புரிந்துகொள்ள முடியும்? அவன் ஒரு செவிட்டு ஊமை. தொட்டே அவனைக் கூப்பிட வேண்டி யிருந்தது. மொழி அவனிடம் எடுபடவில்லை. கைகளாலும் சமிக்ஞைகளாலும் அவனோடு பேச வேண்டும். லேசாய் மழை தூறிக் கொண்டிருந்த வேளையில் அவன் அவரிடம் வந்து சேர்ந்தான். ஏனோ அவர்வீட்டு வாசலில் வந்து நின்றான் அவன். காத்து நின்றான். அருமையான பொழுது அது. காலையின் சிறு வெளிச்சம். சோம்பல் முறித்து எழுந்துகொள்ளும் குதிரை.   ஒலிகள் இன்னும் திரள ஆரம்பிக்கவில்லை. சிறு மழைக்கு உலகம் இன்னும் சோம்பி ஒடுங்கிக் கிடந்தது. தாவரத்துப் பசுமையில் அடர்வண்ணம் தீற்றும் மழை. காட்சி துவங்
Image
அதோ பூமி எஸ்.சங்கரநாராயணன் (தினமணிகதிர் 1999) வா ழ்க்கை பற்றி அவனிடம் சில தீர்மானமான அபிப்ராயங்கள் இருந்தன. சதா துறுதுறுவென்று எதைப் பற்றியாவது சிந்திப்பதும் அதை உரக்க விவாதிப்பதுமாய் இருந்தான் அவன். படிக்கிற காலத்தில் இருந்தே அவன் படிப்பில் கெட்டிக்காரன். முதல் இரண்டு இடங்களுக்குள் அவன் கட்டாயம் வருவான். இலக்கியத்தில் அவனுக்கு ஆர்வம் இருந்தது. ஆங்கிலத்தில் சரளமாய் வாசித்துத் தள்ளுவான். பொடிப்பொடி எழுத்துக்களை இரவின் சிறு வெளிச்சத்தில் படுக்கையில் படுத்தபடி வாசித்து வாசித்துத்தான் கல்லூரி முடிக்குமுன்னே சோடாபுட்டி கண்ணாடி போட வேண்டியதாகி விட்டது. அவன் ஒல்லியாய் ஆளே ஒடிந்து விழுகிறாற் போல இருப்பான். முருங்கை மரம். ஆனால் பேசினாலோ எங்கிருந்தோ அத்தனை அழுத்தம் வந்தது. கண்ணுக்குத் தெரியாத ஒரு குறி வைத்துக்கொண்டு அதைநோக்கி அவன் ஆவேசப் பட்டாற் போலிருந்தது. “சாமெர்செட் மாம் ஒரு சினிக். இருந்திட்டுப் போட்டுமேய்யா. சடையர் இலக்கிய வகை ஆகாதா என்ன?” என்பான். “யாரைப் பற்றியாவது பொய்யா, தப்பா அவர் கிண்டலடிச்சிருக்கிறாரா?” என்று கேட்பான். “நம்ம தமிழிலேயே வசை பாடுதல்னு இருக்கே. காளமேகப