குறுந்தொடர் / கடைசிப் பகுதி ஆகாயத்தில் முட்டிக்கொண்டேன் எஸ்.சங்கரநாராயணன் 4 தி ரேஸ் கிழவி அவனிடம் காட்டிக் கொண்டதே இல்லை தன் உள் காயங்களை. அவனும்... தேவையும் இல்லை. காயப் படாதவனுக்கு சாராயக் கடையின் முதலுதவி எதற்காக? இவர்கள் முதலுதவி என நம்பி, மனக் காயங்களை உடலுக்கு ஏற்றிக் கொள்கிறார்கள். உள் காயம் படாத உயிர் உண்டா? சந்தோஷ கணங்களை விட, தோற்றுப் போன, வெருண்ட இருண்ட கணங்களையே வாழ்க்கை பதிவு கொள்கிறது. எதிர்காலத்தில் அவை பாடங்களாக வழிகாட்டலாம், என்கிற சிற்றாசை. எதிர்பார்ப்பு. ஆனால் பெரும்பாலும் அவை பயன்பட வேண்டிய நேரம் பயன்படுத்த லாயக்கு இல்லாத, திருமண கூரைப் புடவையாக, கல்யாணக் கோட்டுகளாக... நைந்தோ அளவு சிறுத்தோ போய்விடுகின்றன. திடீரென்று கண்ணை இருட்டிக்கொண்டு வரும் திரேஸ் கிழவிக்கு. மூச்சிரைக்கும். பசியோ என நினைப்பாள். தானாய் சரியாய்ப் போகும் என நினைப்பாள். உள்ளே உருளும் வலி. வலிகள். கண்கள் தாமாக அழும். உடல் உறுப்புகள் ஒன்றையொன்று எவ்வளவு நேசிக்கின்றன! சாவு நினைவு அடிக்கடி வரும் கிழவிக்கு. செத்துப் போய்விட்டால் நல்லதுதானே
Posts
Showing posts from January, 2021
- Get link
- Other Apps
குறுந்தொடர் / நன்றி கல்கி வார இதழ் ஆகாயத்தில் முட்டிக்கொண்டேன் எஸ்.சங்கரநாராயணன் 3 சி ங்கராஜ் காலை கண் விழித்தபோது உலகம் வேறு மாதிரி இருந்தது. வாழ்க்கையே ஒரு விசித்திர நிஜம். இரவில் தெரிகிற வாழ்க்கை முகம் வேறாகவும், பகலில் முற்றிலும் புது விதமாகவும் அல்லவா அமைந்து விடுகிறது. வெளிச்சம் மனிதனை மிருகமாக, சற்று மதங் கொண்ட யானைத்தனமான ஆக்கி விடுகிறது. இரவு நல்லமைதியின் வாசனை நிரம்பியது. சற்றே இணக்கமான நெகிழ்ந்த மனது, ஈர மனது அப்போது நமக்கு வாய்க்கிறது. கனவுகளைப் பூக்கூடையில் எடுத்து வந்து கொட்டினாற் போலக் கொட்டுகிறதே இரவு. பகலில் அப்பூக்கள் சூடு தாளாமலோ என்னவோ, வாடி விடுகின்றன. அருகில் கிழவி ஒருத்தி படுத்திருக்கிறாள். யாரிவள்! அவள் திரேஸ். மகன் இறந்து அத்தோடு அவளது வாழ்க்கை பஞ்சு சிதறடிக்கப்பட்ட தலையணையாகி விட்டது. எல்லாம் கடந்ததோர் விரக்தி. அவள் ஊரைவிட்டு, திருச்செந்தூர்ப் பக்கம் எதோ ஊர் சொன்னாளே... எங்கெல்லாமோ சுற்றி அலைந்து திரிந்து... உறவுப் பிடிகள் கழன்று, இற்று வீழ்ந்த நிலைதான். எனினும் காலப்போக்கில் அதுவும் பழகிவிட்டது. தினசரி மணித்துளிகளைக் கடப்பதுகூட சாதனை என்ற அள
- Get link
- Other Apps
குறுந்தொடர் / நன்றி ‘கல்கி’ வார இதழ் ஆ கா ய த் தி ல் முட்டிக் கொண்டேன் எஸ்.சங்கரநாராயணன் 2 சா ராயக்கடை. காயம் பட்டவர்கள் முதலுதவி தேடும் இடம். உடல் காயம் அல்ல. மனக் காயம். மக்கள் திட்டுத் திட்டாய் உட்கார்ந்திருந்தார்கள். எழுந்தால் கூட அந்த சுமைகள் அவர்களை நடக்க விடவில்லை. வளாகமே மிரண்டு கிடந்தது. சுற்றிலுமானதோர் கருங்கோட்டை. வார்த்தைகள் விக்கிய, சப்தங்கள் சுடப்பட்ட மௌனம். லேசான இருட்டு. சற்று அழுத முகமான மழையிருட்டு. புயலுக்கு முன்பும் அமைதி. பின்பும் அமைதி. அங்கே வந்திருந்தவர்கள் வாழ்வில் புயல் அடித்து ஓய்ந்திருக்க வேண்டும். அல்லது புயல் வரும் அறிகுறிகளில் அவர்கள் திகைத்திருக்க வேண்டும். நாடியில் அடி பட்டிருந்தது ஒருவனுக்கு. என்ன நடந்ததோ. நாடிச் சில்லில் இருந்து ஒழுகிக் காய்ந்த சிவப்பு அடையாளம். எங்கியாச்சும் குத்திக்கிட்டானோ. கீழே விழுந்துட்டாப்லியா? இல்லை, வம்பை விலைக்கு வாங்கிக்கொண்டு யாருடனாவது மோதி தோற்று வந்தனா? வலியின் தெறிப்பு தெரியாமல் போதையில் சரிந்து கிடந்தான். அருகே பாட்டில், அவனது உற்ற துணைபோல. குழந்தை போல. கல்லாவில் இருந்தவன் “அந்த நாயைத் தூக்கி ஓரமாப்போட