குறுந்தொடர் / கடைசிப் பகுதி
ஆகாயத்தில் முட்டிக்கொண்டேன்
எஸ்.சங்கரநாராயணன்
4
திரேஸ் கிழவி அவனிடம்
காட்டிக் கொண்டதே இல்லை தன் உள் காயங்களை.
அவனும்...
தேவையும் இல்லை.
காயப் படாதவனுக்கு சாராயக் கடையின் முதலுதவி எதற்காக?
இவர்கள் முதலுதவி
என நம்பி, மனக் காயங்களை உடலுக்கு ஏற்றிக் கொள்கிறார்கள்.
உள் காயம் படாத
உயிர் உண்டா?
சந்தோஷ கணங்களை
விட, தோற்றுப் போன, வெருண்ட இருண்ட கணங்களையே வாழ்க்கை பதிவு கொள்கிறது. எதிர்காலத்தில்
அவை பாடங்களாக வழிகாட்டலாம், என்கிற சிற்றாசை. எதிர்பார்ப்பு.
ஆனால் பெரும்பாலும்
அவை பயன்பட வேண்டிய நேரம் பயன்படுத்த லாயக்கு இல்லாத, திருமண கூரைப் புடவையாக, கல்யாணக்
கோட்டுகளாக... நைந்தோ அளவு சிறுத்தோ போய்விடுகின்றன.
திடீரென்று கண்ணை
இருட்டிக்கொண்டு வரும் திரேஸ் கிழவிக்கு. மூச்சிரைக்கும். பசியோ என நினைப்பாள். தானாய்
சரியாய்ப் போகும் என நினைப்பாள். உள்ளே உருளும் வலி. வலிகள். கண்கள் தாமாக அழும்.
உடல் உறுப்புகள்
ஒன்றையொன்று எவ்வளவு நேசிக்கின்றன!
சாவு நினைவு
அடிக்கடி வரும் கிழவிக்கு. செத்துப் போய்விட்டால் நல்லதுதானே? இருந்து சாதிப்பதென்ன?
என்ன அனுபவம் தட்டுக் கெட்டுப் போகிறது?
ஹா, சாராயக்
கடைக்கு சாவைத் தேடித்தான் போனாள். வேடிக்கை. அங்கே வாழ்க்கை பட்டுப்பாய் விரித்து
வரவேற்றது அவளை. இதுவரை, அவளது அறுபத்துச் சொச்ச வயதுவரை, அவளுக்கு வாய்க்காத வாழ்க்கை.
தன் சொந்தப் பிள்ளைக்கும் மேலான சிங்கராஜ்!
வாழ்க்கை. அதன்
சீரற்ற, அபத்தமான உணர்வுக் கலவைகள்...
மகன் மீது அலாதி
ஆசையும் பிடிப்பும் நம்பிக்கையும் வைத்திருந்தாள். அவனுக்கு ஒரு கல்யாணங் கட்டி பேரக்
குழந்தைகளைக் கண்ணாறப் பார்த்து, பேசி கொஞ்சி விளையாடி, உச்சி முகர்ந்து சீராட்டி வளர்த்து...
மகன் இறந்து
போனான்.
மனசின் கிளை
விரித்தலில் முறிவு. நச்சென்று கோடரி வெட்டு.
இன்னொரு கையை
நீட்டினால், கிட்டியதோ தங்க வளையல்!
மீண்டும் வாழ
ஆசை ஆசையாய் இருந்தது. மனம் புத்துயிர்ப்பு கண்டு துளிர் அசைக்கிறது உற்சாகமாய். சிங்கராஜ்
எத்தனை அருமையான பிள்ளை. தினசரி நேரத்துக்கு வீட்டுக்கு வருகிறான். கடை கண்ணி பார்த்து
சாமான் செட்டு வாங்கிப் போடுகிறான். அவளைக் கிண்டலடித்து என்னமாச்சும் வாயாடிக்கொண்டே
யிருக்கிறான்.
சோகக் கடலில்
இருந்து மீண்டு புதிய தீவில் கரையொதுங்கினாற் போல அவளுக்கும் இருக்கிறது.
தனியே வாழ்க்கையில்
சிரிப்பு என்றும் அழுகை என்றும் கிடையாதோ!
சிரிப்பின் விளிம்பில்
கண்ணீர் வந்து விடுகிறது.
பாறை. பாறையடியில்
நீரூற்று. என்ன குளுமையாய் இருக்கும் அது!
தலை சுற்றச்
சுற்ற நடமாடியபடி வீட்டு வேலைகள் செய்கிறாள். வயதை, ஆமாம், நான் மறந்துவிட வேண்டும்.
ஆ, இவனுக்காகவாவது அவள் வாழ வேண்டும்.
யார் இவன். என்ன
ஜாதி. இவனுக்கும் எனக்கும் என்ன விதத்தில் சம்மந்தம். ஒட்டும் இல்லை. உறவும் இல்லை.
ஒரே மதக்காரனும் கிடையாது,
ஒரே இரவில் பெரும்
மாற்றங்கள். மாயாஜாலம்.
கல்லறை மேட்டில்
வாசனை மலர்கள் பூத்துச் சிரிக்கின்றன.
அவன் வரும்போது
எப்போதும் போலக் கதவைத் திறக்கிற கிழவி சற்று கலவரத்துடனே அவன் கையைப் பிடித்துக்கொண்டு
“எய்யா, நீ இனிமே குடிக்கக் கூடாது” என்றாள்.
“இப்ப நான் நேரா
சாராயக் கடைலேர்ந்து தான் வரேன் ஆயா” என்கிறான் அவன்.
“எந்தக் கடைலய்யா
காய்கறி விக்குறாக...” என்று சந்தேகங் கேட்டாள் அவள்.
குடல் அரித்து,
வெந்து போய், குடல் செத்துப்போனதை அறிவிக்கும், தண்டோரா போடும் வலி நடமாட்டம்.
அவன் சாப்பிட
உட்கார்ந்தான். உள்ளேயிருந்து சிப்பலில் சோற்றை எடுத்து வருகையிலேயே எப்படியோ நிகழ்ந்து
விட்டது. கண் இருட்டி, தலை சுற்றி, சுடப்பட்ட பறவை போல...
ஆகாயத்தில் முட்டிக்
கொண்டதா பறவை.
அவன் முன்னே
பொத்தென வீழ்ந்தாள். பதறிப் போனான் அவன்.
சுவரைப் பிடித்துக்
கொண்டு வந்திருக்கலாம், என நினைத்துக் கொண்டாள். மயக்கம் தெளிந்து அவன் மடியில் படுத்திருந்த
கணம் அது. அப்படியே செத்துப் போயிருக்கலாம், என்றிருந்த கணம்.
“என்னாச்சி உனக்கு?”
“வயசாச்சி.”
“சரி வா. வைத்தியராண்ட
காட்டிட்டு வரலாம்.”
“எதுக்கு, எனக்கு
இளமை திரும்பவா?”
“சிரிக்காதே
நாயே!” என்று கத்தினான் அவன்.
“நான் சிரிச்சா
அழகா இருக்குன்னு நீதானே சொல்வே?”
“நீ சிரிச்சா
இப்ப அழுகை வருது...” என்றவனை விசித்திரமாய்ப் பார்த்தாள். வரியோடிய நடுங்கும் விரல்களால்
அவன் முகத்தைத் தடவிக் கொடுத்தாள்.
“சரி. நீ சிரி.
நானும் சிரிக்கறேன்...” என்றாள் கிழவி. “நீ அழக்கூடாது. உனக்கு அழத் தெரியாது. நீ எம்ஜியார்.”
“எம்ஜியார் படத்துல
முடிவும் சுபமாத்தான் இருக்கும்.”
“நாயே நாயே...”
என்றாள் கிழவி. “என்னடா இருக்கு இந்தக் கிழவிகிட்ட. என்மேல இவ்ளவு பாசம் வெச்சிருக்கே.”
“ஒருவேளை உங்கிட்ட
எதுவும் இருந்திருந்தா இந்தப் பாசமே போலியாக் கூட ஆயிருக்கும்...” என்றான் சிங்கராஜ்
தோரணையாய். மாப்ள, நீ அறிவாளிதான்டா, என்று தன்னைத் தானே பாராட்டிக் கொண்டான்.
“வா. டாக்டராண்ட
போயி என்ன ஏதுன்னு பாத்திட்டு வருவம்.”
அவள் அவனைப்
பார்த்தாள். விடமாட்டான் போலிருந்தது. “சரி சாப்பிடு மொதல்ல” என்றாள்.
ரொம்ப நாளைக்கு
அப்புறம் மனம், யேசுவே, என அரற்றியது. கர்ப்பப் பை கூசினாற் போல உள் கிளுகிளுப்பு.
குரூஸ் கோவில் மணியடித்தது. கடல் அலையில் நிற்கிறாற் போல ஒரு தள்ளாட்டம்.
“ஏண்டா நான்
செத்துருவேன்னு பயமா இருக்கா?”
“என்னா சொல்ற
நீயி? அறை வாங்காதே” என்று கத்தினான் அவன். அவன் உடம்பு நடுங்கியது.
உண்மையில் அவளுக்கு
அப்போது செத்துப் போக ரொம்ப ஆசையாய் இருந்தது. “மவனே“ என்று புன்னகை செய்தாள். “ரொம்ப
நாளாவே எனக்கு ஒரு ஆசைடா. உன்கூட சைக்கிள்ல வரணும்னு...”
அவர்கள் சைக்கிளில்
போவதை ஊரே சிரிப்பாய்ப் பார்த்தது.
மருத்துவர் கிழவியின்
வயிற்றை அமுக்க ஆ ஆவென அலறித் துடிக்கிறாள். டாக்டர் உதட்டைப் பிதுக்கினார். “உள்ள
குடலே இல்லியேய்யா. எல்லாம் அரிச்சிப் போச்சி. எக்ஸ் ரே, ஸ்கேன், டெஸ்ட்லாம் எழுதித்
தரேன். பாத்திரணும்...” என்றவர் அவளைப் பார்த்து “கிழவி குடிக்குமா?” என்கிறார்.
ஒருவரை யொருவர்
பார்த்துக் கொண்டார்கள். முதலில் அவள் சிரித்தாள். தயங்கி பிறகு அவனும் புன்முறுவல்
பூத்தான். பிறகு அழுதான்.
“யார் இந்தக்
கிழவி?” என்கிறார் டாக்டர் சிங்கராஜைப் பார்த்து.
“தெர்ல” என்றாள்
கிழவி, முந்திக்கொண்டு சிரித்தாள். அவனுக்குச் சிரிப்பு வரவில்லை.
வரும் வழியில்
மருந்துக் கடையில் டாக்டர் சீட்டு காட்டி மருந்துகள் வாங்கினான்.
“மருந்து வேணா.
சாராயம் வாங்கிக் குடு...” என்று அவனைப் பார்த்தாள் திரேஸ்.
“ஏன் என்னியப்
போட்டு இப்பிடி வதைக்கறே?” என்றான் அவன்.
“உன்னியப் பாத்தா
காத்து போன சைக்கிள் டயர் மாதிரி இருக்குடே” என்று சிரித்தாள் அவள்.
“சிரிக்காதே.”
”முந்தில்லாம்
என்னைச் சிரி சிரின்னுவே. இப்ப சிரிக்காதே சிரிக்காதேன்றியே...”
ஒருமுறை அப்படிச்
சிரித்த போதுதான் சட்டென்று ரத்த வாந்தி எடுத்தாள் அவள்.
உண்மையில் அவள்
மனம் யேசுவே, யேசுவே, இதுவே நல்ல தருணம். என்னியக் கூட்டிட்டுப் போ, எனப் பிரார்த்தனை
செய்து கொண்டிருந்தது.
அன்றிரவு மருந்து
குடித்ததும் அவள் சொன்னாள். “ஏல உனக்கொரு பொண்ணு பாத்திருக்கேன்.”
அவன் திரும்பிப்
பார்த்தான். “நிசந்தான். பூக்காரி கிட்ட சொல்லி வெச்சிருந்தேன். ஒரு துப்பு கொண்ட்ட்டு
வந்தா.”
பரிசோதனை முடிவுகள்
வருமுன் அது நிகழ்ந்து விட்டது. கிழவி செத்துப்போனாள்.
அவனுக்கு குளிக்க
என்று சுடுதண்ணி வைக்கப் போனவள் தள்ளாடினாள். குடத்து நீர் சிதறச் சிதற நடக்கும் போதே
ஊவென்று வாயில் ரத்தம். அப்படியே முன்னால் விழுந்தாள். சுருக்கமாய்ச் செத்துப்போனாள்.
அவன் தலையில்
தலையில் அடித்துக் கொண்டு அழுதான். நிஜமான, சிவாஜி அழுகை.
நம்ப இயலாத கனவுதானா
வாழ்க்கை. கனவு கண்டால் குதிரைத் தள்ளல் தள்ளி, பின்காலால் எத்தி, விடுகிறது உதை. அழும்போது
மிட்டாய் தருகிறது. கிலுகிலுப்பை காட்டுகிறது.
••
இருட்டில் தனியே
வீட்டுக்குள் படுத்திருந்தான். புரள்கிறான். கிழவியின் சிரித்த முகம். தானறியாமல் சிரிக்காதே,
என்று கத்தி எழுந்து கொள்கிறான். உடம்பு நடுங்கி வியர்த்து வழிகிறது.
அழுகிறான்.
“அழாதே” என்கிறாள் கிழவி. சுற்றுமுற்றும் பார்க்கிறான். யாருமில்லை.
எழுந்துகொண்டான்
சிங்கராஜ். “எங்க போற?”
“வழியை விடு
கிழவி.”
“நீ எங்க போறேன்னு
எனக்குத் தெரியும்...”
“தெரியுதில்ல.
வழியை விடு.”
ஆச்சர்யம்.
“சரி போ” என வழியை விட்டாள் கிழவி.
வெளியே வந்தான்.
தெருவே இருட்டாய்க் கிடந்தது. டிரைனேஜுக்குள் அடைபட்ட உலகம். கிழவி சிரிக்கிறாப் போல
இருந்தது. திரும்பிப் பார்த்தான். யாரும் இல்லை. “போ” என்று காதில் குரல். வேண்டாம்,
என்று மறிக்கும் மனது. போவேன்... எனப் பிடிவாதம் பிடித்தான். அழுகை குமுறியது. எனக்கு
யாரும் இல்லை. யாருமே இல்லை.
நான் அழ விதிக்கப்
பட்டவன். வேணாம், போகாதே, என மறித்தது மனது. தன்னையே பிடித்துத் தள்ளிக்கொண்டு நடந்தான்.
கால் தயங்கியது. காலையும் இழுத்து நகர்த்திக் கொண்டு போனான். எனக்கு யாருமே யாருமே
இல்லவே இல்லை.
சாராயக் கடையில்
கூட்டம் இல்லை. “வாங்க தம்பி” என்று கல்லாவில் இருந்து சிநேகிதக் குரல். “பாத்து நாளாச்சுதே...”
என்கிற கரிசனமான விசாரிப்பு வேறு.
வண்ணை பேசவில்லை.
நேரே பொய் பாட்டிலை வாங்கிக் கொண்டான். வேணாம், என மறித்தது மனது. பாட்டிலையே பார்த்தான்.
குடி, என ஒரு குரல் சிரிப்புடன். ஏ கிழவி, இந்தக் கிண்டல்லாம் வேணா. நீ சொன்னாலும்
சொல்லாட்டியும் நான் குடிக்கத்தான் போறேன்.
கடகடவென்று பாட்டிலை
கவிழ்த்துக் கொண்டவன் திகைத்துப் போனான்.
போதை ஏறவேயில்லை.
என்ன செய்வது?
இன்னோர் ரவுண்டு அடிப்பமா... “எட்றா” என்றான் ஆவேசமாய்.
ராத்திரி தூங்க
வேண்டும்.
பாட்டிலைத் தூக்கிப்
பார்த்தான். குடி, என்று கிழவி பாட்டிலுக்குள் இருந்து சிரிக்கிறாள்.
கிழவி, நீ ஜெயிச்சிட்டே.
என்னால குடிக்க முடியல்ல... என்றான் சத்தமாய்.
அவன் வைத்துவிட்டுப்
போன பாட்டிலை யாரோ வந்து அவசரமாய் எடுத்துக் கொண்டார்கள்.
வீடு திரும்பிய
போது போதையே இல்லை. மழை விட்டாப் போலிருந்தது. “சந்தோஷம்” என்று ஒரு குரல். சுற்று
முற்றும் பார்த்தான். பிறகு சிரித்தான். சந்தோஷமாய் இருந்தது.
சிங்கராஜ் மறுநாள்
காலை கண் விழித்துப் பார்த்தபோது உலகம் வேறு மாதிரி இருந்தது.
•••
(முடிகிறது)
நன்றி கல்கி வார இதழ்
storysankar@gmail.com
91 97899 87842 / 91 94450 16842
Comments
Post a Comment