குறுந்தொடர் / நன்றி ‘கல்கி’ வார இதழ்
ஆ கா ய த் தி ல்
முட்டிக் கொண்டேன்
எஸ்.சங்கரநாராயணன்
2
சாராயக்கடை. காயம்
பட்டவர்கள் முதலுதவி தேடும் இடம். உடல் காயம் அல்ல. மனக் காயம்.
மக்கள் திட்டுத்
திட்டாய் உட்கார்ந்திருந்தார்கள். எழுந்தால் கூட அந்த சுமைகள் அவர்களை நடக்க விடவில்லை.
வளாகமே மிரண்டு கிடந்தது. சுற்றிலுமானதோர் கருங்கோட்டை. வார்த்தைகள் விக்கிய, சப்தங்கள்
சுடப்பட்ட மௌனம்.
லேசான இருட்டு.
சற்று அழுத முகமான மழையிருட்டு. புயலுக்கு முன்பும் அமைதி. பின்பும் அமைதி. அங்கே வந்திருந்தவர்கள்
வாழ்வில் புயல் அடித்து ஓய்ந்திருக்க வேண்டும். அல்லது புயல் வரும் அறிகுறிகளில் அவர்கள்
திகைத்திருக்க வேண்டும்.
நாடியில் அடி
பட்டிருந்தது ஒருவனுக்கு. என்ன நடந்ததோ. நாடிச் சில்லில் இருந்து ஒழுகிக் காய்ந்த சிவப்பு
அடையாளம். எங்கியாச்சும் குத்திக்கிட்டானோ. கீழே விழுந்துட்டாப்லியா? இல்லை, வம்பை
விலைக்கு வாங்கிக்கொண்டு யாருடனாவது மோதி தோற்று வந்தனா? வலியின் தெறிப்பு தெரியாமல்
போதையில் சரிந்து கிடந்தான். அருகே பாட்டில், அவனது உற்ற துணைபோல. குழந்தை போல. கல்லாவில்
இருந்தவன் “அந்த நாயைத் தூக்கி ஓரமாப்போடு” என்கிறான்.
ரெண்டுபேர் அவனைத்
தரதரவென்று இழுத்து ஓரமாய்த் தள்ளுகிறார்கள். நல்ல வெள்ளை வேட்டி. வெள்ளைச் சட்டை.
கைமடிப்பு துறுத்தலாய். உள்ளே பணம் இருக்கலாம். ஹ்ரும்... என விநோத சப்தம் அவனிலிருந்து
அவ்வப்போது எழுந்தது. வலியின் முனகலா, கனவுகளின் ஏமாற்றமா, அதிர்ச்சி தாள முடியாத,
நம்பிக்கை துரோகம் தாளாத துவண்ட மருட்சியா. ஹா ஹா என மூச்சுப் படபடப்பு. நெஞ்சு ஏறியேறி
இறங்குகிறது.
பெஞ்ச்சில் உட்கார்ந்திருக்கிற
மற்றொருவன் பாட்டிலையே உறுத்துப் பார்த்தபடி இருக்கிறான். அடிக்கடி உதட்டை உதட்டைப்
பிதுக்குகிறான். கண்கள் தன்னைப்போல் அழுகின்றன. பேச்சு இல்லை. அவன் மகன் செத்துப் போயிருக்கலாம்.
கோர்ட்டில் அவன் வழக்கு தோற்றுப்போய் நஷ்டப்பட்டு வந்திருக்கலாம். அவன் வியாபாரம் படுத்திருக்கலாம்.
போச்சே, எல்லாம் போச்சே, என்கிறாப் போல கையைக் கையை விரிக்கிறான்.
பக்கத்தில் இருக்கிறவனோ,
பெஞ்ச்சில் குனிந்த தலை நிமிரவேயில்லை. புதுச்சட்டை கிழிந்திருக்கிறது. சுத்தபத்தமாய்க்
கிளம்பியிருப்பான் வீட்டை விட்டு. இடையே அபத்தமாய் என்னவோ அசம்பாவிதம். சட்டைக் கிழிசல்.
யாரோ காலரைப் பற்றி இழுத்திருக்கிறாப் போல கசங்கல். காலர்ப்பட்டை பாதி தூக்கி யிருந்தது,
குட்டிக்கரணம் அடித்த மீனின் வால் வெளித் தெரிவது போல. வாரியதலை கலைந்து கிடக்கிறது.
எங்கோ ரகளையில் மாட்டிக்கொண்டு கைகலப்பாகி இருக்கலாம்.
ஏற்கனவே குடித்திருந்த
ஒருவன் உள்ளே நுழைந்தான். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக ஒரு நடை. வேட்டி தடுக்கத்
தடுக்க ஒரு நடை. அவன் முட்டாழம் வரை வந்திருந்தது துயரம் வாய்க்கால் தண்ணி போல. சற்று
நின்று சுற்று முற்றும் பார்த்தான். யாரைப் பார்க்கிறான். யாரைத் தேடுகிறான். யாரையும்
பார்க்காத வெற்றுப் பார்வை. சிவந்த வெறியேறிய கண்கள். பெரிய தோள்த்துண்டு. மனசில் அரசியல்வாதியான
தோரணையில் அவன் ஆவேசப் பட்டிருக்கலாம். மாறுவேசப் போட்டி என நினைத்து உள்ள புகுந்திட்டானா!...
அல்லது அவனே அடிமட்ட அரசியல்வாதி தானோ என்னவோ. ஒருவழியாய் சாராயம் ஊற்றுகிற மேடையைக்
கண்டுகொண்டாற் போலத் தெரிகிறது. மீண்டும் வாய்க்கால் கடந்து வந்து ஓரத்தில் அடுக்கி
யிருந்த கண்ணாடித் தம்ளர்களில் ஒன்றை ஆவேசமாய் டக்கென்று நிமிர்த்தி வைத்து “ஊத்து”
என்கிறான்.
“துட்டு வெச்சிருக்கியா?”
என்று கேட்கிறான் கடைப்பையன்.
“துட்டா?”
“ம்.”
“எதுக்கு துட்டு?”
“பின்ன, சரக்குக்குத்
துட்டு? எவன் தருவான், ஙொப்பனா தருவான்?” என்கிறான் கடைக்காரன். இப்போது பல்லக்கு அங்கேயிருந்தே
ஆடியபடி கல்லாப் பக்கம் திரும்புகிறது. “ஏய் காசுதான வேணும்... நாளைக்கு வாங்கிக்க.”
மீண்டும் பல்லக்குச் சாமியின் தலை இந்தப் பக்கம் திரும்புகிறது. “நீ ஊத்துறா...” பையனிடம்
இருந்து பதில் இல்லை.
வந்தவனுக்கோ
நிற்க முடியவில்லை. தள்ளாட்டம். மூச்சுத் திணறல். எருமைமூச்சு. திடீரென்று அழுதாற்போல
பையனைப் பார்க்கிறான். “தம்பி உன்னியக் கெஞ்சிக் கேட்டுக்கறேன். நான் ஏற்கனவே நொந்து
நொம்பலமாய் வந்திருக்கேன்...” என்றவன் தள்ளாடி அப்படியே நெஞ்சு துடிக்க “பூட்டா அவ.
ஆரு... என் சம்சாரம். அந்தத் தெருநாய்... கோவிந்து. நண்பனா அவன். தூ... போ. போயிரு...
நல்லாயிரு. வராதே...” என்று கையால் விரட்டி ஆசிர்வதித்தான். “தம்பி. புண்பட்ட மனசுக்குப்
புனுகு தடவி ஆத்தணும்டா. என்னக் கை விட்றாதே. நீ ஊதது.”
“துட்ட எடு.”
“ஆர்ட்ட இருக்கு
தம்பி துட்டு...” என்றவன் கல்லாப் பக்கம் திரும்பி, “என்ட்ட துட்டு இருந்தா அவ ஏன்
ஐயா ஓடிப்போறா...” என்கிறான். “ஹா. துட்டு இருந்தா, ஒரு பெண்டாட்டி என்ன, ஆயிரங் கட்டலாம்.
நீ ஏண்டா பையா வேடிக்கை பாக்கற. நீ ஊத்து.”
கொஞ்சநேரம் வெட்டியாக
நின்றபடி அவன் சாமியாடுகிறான். பெரிசு பெரிசான சீறல் மூச்சுகள். திரும்பி வாய்க்கால்
நடை நடந்து ஏமாற்றமாய்ப் போனவன் பெஞ்ச்சில் கவிழ்ந்திருந்தவனைப் பார்க்கிறான். அவனை
என்றால் அவனை அல்ல. அவன் தம்ளர். திரும்ப முட்டாழத் தண்ணீரில் நடை. யாருமே எதிர்பாராமல்
அந்தத் தம்ளரின் மிச்ச சாராயத்தை அப்படியே எடுத்து உயரத் தூக்கிக் கவிழ்த்துக் கொள்கிறான்.
கடைக்காரச் சிப்பந்திகள் பாய்ந்து வந்து தம்ளரைப் பிடுங்கி வைக்கிறார்கள். அதில் ஒருவன்
நாக்கைத் துருத்தி ஆத்திரத்துடன் அவனை ஓர் எத்து விடுகிறான். வாய்க்கால் தண்ணீரில்
பொத்தென விழுந்தான் வந்தவன்.
••
வண்ணை சிங்கராஜ்
உள்ளே நுழைகையில் நிலைமை சிலாக்கியமாய் இல்லை. அது எப்பவுமே அங்கே சிலாக்கியமாய் இருந்தது
இல்லைதான். சிங்கராஜ் நாயைக் கூட மறந்து குடிக்கிற பரபரப்பில் உள்ளே வந்திருந்தான்,
அவன் போகுமுன் சரக்கு அத்தனையும் விற்றுத் தீர்ந்துவிட்டால்... என பயந்த மாதிரி.
நாய் உள்ளே எட்டிப்
பார்த்தது. கூரைக்கு முட்டுக் கொடுத்து மூங்கில் கழியில் சாய்ந்தபடி மேலே பார்த்துக்
கொண்டிருந்தான் ஒருத்தன். அருகே தட்டில் என்னவோ அசைவப் பதார்த்தம் சிவப்பாய் நெளி நெளியாய்.
வெளியே தயங்கி
நின்ற நாய் ஒரு விநாடி சுற்று முற்றும் கவனித்துக் கொண்டது. சட்டென உள்ளே பாய்ந்துவந்து
அந்தக் குடல் கறியை ஒரே கவ்வலில் கவ்வி, சீன மந்திரவாதியின் நீளமான மீசை தாடியைப் போலத்
தொங்கும் குடல்... வெளியே பாய்ந்தோடு முன் எதிர்பாராமல் நாய் கடையாளுகளால் சுற்றி வளைக்கப்
பட்டது. எங்கேயிருந்து, அதுவும் கம்புடன் முளைத்தார்கள்... திணறிவிட்டது நாய். சரியான
அடி. நச்செடுத்து விட்டார்கள். வாள் வாள் என்று கதறித் துடித்தது நாய்.
“ஐய்ய, வாயில்லா
ஜீவனுங்க...”
“திருடித் திங்கத்
தெரியுதில்ல...?”
எப்பிடியோ யார்
தொடையடியிலேயோ பாய்ந்து புகுந்து வெளியே அது ஓடினாலும், வெளியே சக நாய்களுடன் இன்னொரு
மோதல். கல்லெறி பட்டு ஓட்டமெடுத்தன நாய்கள்.
அசைவக் குடல்
கடைவாசலில் கிடப்பதைக் காகம் ஒன்று சாவகாசமாய் இறங்கி வந்து எடுத்துப் போனது. அதிர்ஷ்டக்காரக்
காகம். அதனால் உள்ளே புகுந்து குடலை எடுத்துப் போக முடியுமா?
ஏற்கனவே போதை
இல்லாமலே போதை மயக்கத்தில் இருந்தான் வண்ணை. இப்போது அழுகை முட்டியது. ஒரு அப்பாவி
நாயை இப்படி அவன் கண்முன்னே ஆளாளுக்கு போட்டு அடி நச்சிப்பிட்டார்கள். கோபமாய் எகிற
முடியவில்லை. ஒவ்வொருத்தனும் கிங்கரனாட்டம் இருக்கிறான். பல ரௌடிகளைச் சமாளிக்கிற ரௌடிகள்
இவர்கள். ராஜாவுக்கு, சக்கரவர்த்தி... என்பார்கள். அதைப்போல. மீசையும் கம்புமாக நிற்கிறான்கள்.
வாயைத் திறந்தால் உன்னையும் உதைப்பான்கள்.
“டாய் ஊத்துறா”
என்றான் மேடைக்குப் போய். “நல்ல சரக்கா உடை. போன வாட்டி நீ குடுத்தது கிக்கே பத்தல...”
“அண்ணே வர்றப்பவே
மப்பு போல...”
“என்னா விசயம்?”
என்று ஒரு கிங்கரன் கம்புடன் கிட்டே வந்தான்.
“ஒண்ணில்லண்ணே...”
என வாயை மூடிக் கொண்டான்.
தலையைக் குனிந்தபடி
அப்படி பெஞ்ச்சில் கிடந்தவனின் அருகில் போய் உட்கார்ந்த கணம் அவனிடம் திடீர் அசைவு.
பூகம்பக் குலுக்கல். உவ்வேயென்று எதிர்த்து வந்தது அவனுக்கு.
“வாந்தியெடுத்துத்
தொலைக்கப் போறான். அவனை எழுப்பு எழுப்பு...”
கடைப்பையன் ஓடிவந்து
அவனைத் தூக்குமுன் ஓங்கரித்து அவன் வாந்தி யெடுத்துவிட்டான். சட்டையெங்கிலும் சிதறியது
வாந்தி. கிழிந்த பகுதி வழியே உள்ளே உடம்பெங்கும் வழிந்து... பெஞ்ச்சில் வழிந்து...
எதைத் தின்னு
தொலைஞ்சானோ!... கெட்ட நாற்றம். இனி இதை வேற சுத்தம் செய்யணும்... என பையனுக்கு எரிச்சல்.
தம்ளருடன் சடரென்று
எழுந்து கொண்டான் வண்ணை. சுற்று முற்றும் தேடினான். வேறிடம், பாதுகாப்பான இடம் எதுவும்
இருக்கிறதா?... யாரையும் நம்புவதற்கில்லை. எப்போதும் எந்த அபாயமும் நிகழலாம், என்றான
பூமி இது. எதற்கும் உத்தரவாதம் கிடையாது இங்கே.
போனமுறை சரக்கு
வாங்கிக்கொண்டு வந்து உட்கார்ந்தான். திடீரென்று நான்கு பேர் உள்ளே பாய்ந்து வந்தார்கள்.
இவனை நோக்கி கையில் கம்பும் கத்தியும். கண்ணில் வெறியும் ஆத்திரமும். நேரே இவனை நோக்கி
ஓடிவரவும் பகீரென்றது.
இவன் அருகே உட்கார்ந்திருந்தவனைப்
பாய்ந்து சட்டையைப் பிடித்து இழுத்து அடி. அடியான அடி. கொட்டையைப் பிதுக்கிட்டாங்க.
கடையாட்கள் சுதாரித்து அவர்களைப் பிரித்திழுத்து விலக்குவதற்குள் பெரும் ரகளையாகி விட்டது.
சமாதானத்துக்குத்
தான் என்று பார்த்தால் அடி பெற்றவனையும், அடி நன்கொடை வழங்கியவனையும் “வெளியே போங்க.
வெளியே போங்க...” என்று தள்ளிக்கொண்டு போனார்கள். அவர்கள் அக்கறை அவ்வளவே. ரெண்டு பார்ட்டியுமே
நாளை திரும்ப உள்ளே அவர்களின் வாடிக்கையாக வருவார்கள், என்ற எதிர்பார்ப்பு. யாரையும்
பகைத்துக்கொள்ளக் கூடாது, என்கிற சாக்கிரதை.
அட அது என்ன
எழவா வேணா இருக்கட்டும். இந்த விவகாரத்தில் வண்ணை வாங்கிய சரக்கு முழுதும் தரையில்
வீணாகி விட்டது. தம்ளர் உடைந்து அதற்கும் தண்டம் அழ நேர்ந்தது. பெரிய மீசையைப் பார்த்தபடி
எடுத்துக் கொடுத்தான்.
••
கூடம் முழுசும்
விரக்தியில் கிடந்தது. பெண்டாட்டி செத்து பிணம் வந்து சேராத அந்த இரவின் வெறுமையை நினைவூட்டியது
சூழல். என்ன மோசமான இரவு. பயம். திகைப்பு. அழுகை வராத உள்மூட்டம். பூகம்பம் வந்து எல்லாமே
சிதறிக் கிடந்தது. எதுவுமே மிச்சமில்லை போல. சிற்றெறும்பைக் கிண்ணத்துக்குள் கவிழ்த்து
அடைத்தாற் போலிருந்தது.
தாளவியலாத் தனிமை.
எனக்கு யாருமே யாருமே இல்லவே இல்லை. கூட கட்டிக்கொண்டு அழ யாராவது தேவை தேவை என்கிறது
மூளை அரித்தாற் போல. இந்த நாய்ங்களில் யாரை நம்ப?
“ஏம்பா அழுகற?”
என்று வந்தவன் “ஒம் பொண்டாட்டி அழகா?...” என்று கேட்கிறான். “எம் பொண்டாட்டிய விடவா?”
என்று அடுத்த கேள்வி. இவன் பெண்டாட்டிய நான் எங்க பார்த்தேன். பார்க்க வேண்டும் போலிருந்தது.
பின் ஏன் குடிக்க வந்தான், என்றிருந்தது. அடேய் அது அவம் பிரச்சினை. நம்ம கதி இன்னா.
அத்த யோசி.
பாட்டிலைப் பார்த்தான்.
தம்ளரைப் பார்த்தான். பசுவும் கன்றும். அந்தக்கால காங்கிரஸ் சின்னம். இப்ப இதையே சின்னமா
வைக்கலாம். பாட்டிலும் தம்ளரும். சட்டென்று பாட்டிலை உடைத்து ஊற்றிக் கொண்டான். அப்படியே
முழு ஆவேசமாய்க் கொட்டிக் கொண்டான். டங்கென்று தம்ளரை வைத்தான். எரிந்தது. தொண்டை யெல்லாம்
எரிந்தது. கடும் புளிப்பு. ஏவ்... என எக்களித்து வந்தது. நெஞ்சைத் தடவிக் கொண்டான்.
கூடம் ஈ மொய்த்துக்
கிடந்தது. தரையில் ஒரு மிக்சர் பொட்டலம். ஒரு பாட்டில் உருண்டு கிடந்தது. சற்று தள்ளி
சற்று நீள சைஸ் பாட்டிலைப் போலவே ஒரு இந்நாட்டு மன்னன். குழல் விளக்கு ஒன்று எரிந்தும்
எரியாமலும் மக்கர் செய்கிறது, குடிகார மூளை போல.
••
அப்போதுதான்
அந்தக் கிழவியைப் பார்த்தான்.
சிக்கு பிடித்த
உடை. எண்ணெய் காணாத தலை. வெறுமையான கண்கள். தலையை வறட் வறட்டென்று சொறிகிறதைப் பார்த்தால்
நம்ம தலையே புண்ணாயிரும் போல. அத்தனை வெறுப்பு இருந்தது அந்தச் சொறியலில். தலை மயிரின்
வெண்மை கற்றாழை நார் போல.
சிங்கராஜ் அவளை
நோக்கித் தள்ளாடிப் போனான். அவள் எதிரே நின்றான். அவளைப் பார்த்தான்.
“துன்றதுக்கு
எதுனா வேணுமா?” என்றான் சிங்கராஜ்.
“வேணா.”
“வேணாமா!” என்றான்
சிங்கராஜ் ஆச்சர்யத்துடன். “பின்ன ஏன் இங்க நிக்கற... வீட்டுக்குப் போ.”
“வீடு இல்ல”
என்றாள் அவள். தூக்கிவாரிப் போட்டது.
போதையே அடங்கிவிட்டாற்
போல உணர்ந்தான்.
அவளையே பார்த்தான்.
வற்றி உலர்ந்த, ஈ மொய்க்கிற கண்கள். உடம்பெங்கும் காலம் உழுத வரிகள். பாயைச் சுருட்டினாற்
போல உடம்பு.
“உனக்கு இன்னா
வேணும்?”
“சாராயம் வாங்கிக்
குடு.”
“என்னா சொல்றே?”
என்றான் அவன் அயர்ந்துபோய். அவள் ஈயென்று இளித்தாள்.
“மாட்டேன்” என
தலையாட்டி மறுத்தான்.
“போ பின்ன பேசாம.
பெர்சாப் பேச வன்ட்டான்...”
“வா. இட்லி வாங்கித்
தர்றேன்.”
“வேணா. நீ போ.”
“ஏ கிழவி நான்
சொல்றதைக் கேளு...”
“போடா.”
“சரி உனக்கு
சரக்கு வாங்கித் தாரேன்...” என்றான் சிங்கராஜ்.
அவள் திரும்பவும்
சிரித்தாள். சந்தோஷமாக இருந்தது அவள் சிரிப்பதைப் பார்க்க.
ரொம்ப பழகியவள்
போல அவள் தம்ளரைக் கூட எடுத்துக் கொள்ளாமல் பாட்டிலோடு அப்படியே கடகடவெனக் கவிழ்த்துக்
கொண்டாள். ஆச்சர்யமாக இருந்தது.
என்ன உக்கிரம்!
சரக்கும்தான். அவளும்தான்.
“நீ மவராசனா
இருக்கணும்...” என்றாள் வாயைத் துடைத்தபடி. “நீ பாக்க எம் மவன் மாறிக் கீறே.”
“உம் மவன் என்ன
செய்யிறான்?”
“செத்துட்டான்”
என்றாள் அவள். அவள் குரலில் கசப்பு வழிந்தது.
அதிர்ச்சியாய்
இருந்தது அதைக் கேட்க. “அப்ப சோத்துக்கு என்ன பண்ணுவ?”
“அதை ஏன் நீ
கேக்குற? நீ நாஷ்தா வாங்கித்தரப் போறியாங் காட்டியும்?”
சட்டென்று திரும்பி
அவளைப் பார்த்தான். “தரேன்” என்றான்.
“நீயென்ன எம்ஜியாரா?”
அவள் திரும்பவும் சிரித்தாள். சிரிக்கையில் அவள் எவ்வளவு அழகாய் இருந்தாள்!
“என் கூட வரியா?”
என்றான் திடீரென்று.
“எங்க?”
“என் வீட்டுக்கு.”
“வேணாம்.”
“ஏன்?”
“ஒம் பொஞ்சாதி
திட்டும்.”
“எனக்கு யாருமே
இல்ல” என்றான் அவன். அதற்குள் அழுகை வந்துவிட்டது. அவள் அழவில்லை. அவனையே பார்த்தபடி
நின்றிருந்தாள்.
“நான் ஒன் மவன்தானே?”
என்றான் அவன். அவள் பதில் சொல்லவில்லை. “அப்ப என்கூட வா...” என்று அவள் கையைப் பிடித்து
இழுத்தான்.
**
storysankar@gmail.com
91 9789987842 / 91 94450 16842
வெள்ளிதோறும் தொடர்கிறது
Comments
Post a Comment