குறுந்தொடர் / நன்றி கல்கி வார இதழ்
எஸ்.சங்கரநாராயணன்
3
சிங்கராஜ் காலை
கண் விழித்தபோது உலகம் வேறு மாதிரி இருந்தது.
வாழ்க்கையே ஒரு
விசித்திர நிஜம். இரவில் தெரிகிற வாழ்க்கை முகம் வேறாகவும், பகலில் முற்றிலும் புது
விதமாகவும் அல்லவா அமைந்து விடுகிறது. வெளிச்சம் மனிதனை மிருகமாக, சற்று மதங் கொண்ட
யானைத்தனமான ஆக்கி விடுகிறது. இரவு நல்லமைதியின் வாசனை நிரம்பியது. சற்றே இணக்கமான
நெகிழ்ந்த மனது, ஈர மனது அப்போது நமக்கு வாய்க்கிறது. கனவுகளைப் பூக்கூடையில் எடுத்து
வந்து கொட்டினாற் போலக் கொட்டுகிறதே இரவு. பகலில் அப்பூக்கள் சூடு தாளாமலோ என்னவோ,
வாடி விடுகின்றன.
அருகில் கிழவி
ஒருத்தி படுத்திருக்கிறாள். யாரிவள்!
அவள் திரேஸ்.
மகன் இறந்து அத்தோடு அவளது வாழ்க்கை பஞ்சு சிதறடிக்கப்பட்ட தலையணையாகி விட்டது. எல்லாம்
கடந்ததோர் விரக்தி. அவள் ஊரைவிட்டு, திருச்செந்தூர்ப் பக்கம் எதோ ஊர் சொன்னாளே... எங்கெல்லாமோ
சுற்றி அலைந்து திரிந்து...
உறவுப் பிடிகள்
கழன்று, இற்று வீழ்ந்த நிலைதான். எனினும் காலப்போக்கில் அதுவும் பழகிவிட்டது. தினசரி
மணித்துளிகளைக் கடப்பதுகூட சாதனை என்ற அளவில் நெருக்கடிகள். பசி அவளை வாட்டி யெடுத்தது.
புரட்டி யெடுத்தது. உடம்பே சருகென வற்றி உலர்ந்து விட்டது. பிறந்த நாளுக்கு சுருள்
சுருளாய்ச் சுருட்டிக் கட்டிய காகித தோரணம் போல, எண்ணெயில் சரியாகப் பொறிபடாத அப்பளம்
போல, உட் சுருண்ட சருகு மேனி. அதன் உட்பக்க சிறு ஈரமாய் உயிரின் மிச்சம்.
மகனின் சாவு
எனக்கு வந்திருக்கலாம் என்று கிழவி நேற்று அலட்சியமாய்ப் பேசினாள். அவளது ஒவ்வொரு பேச்சும்
அவனை அயர்த்தியது. மிக அபூர்வமானது அவளது சிரிப்பு. எளிய நேர்மையான சிரிப்பு அது.
பார்த்த கணத்தில்
அவனைக் கவர்ந்து விட்டாள். தனக்கான சிறு தேவைகளை, ஆ... அதில் சாராயமும் அடக்கம். யாரிடமும்
கெஞ்சாமல் கூசாமல் கேட்டு அவளால் பெற முடிந்தது.
எப்போது குளித்தாளோ.
முகங் கழுவிக் கொள்வாளோ இல்லையோ. பல் விளக்குவாளோ என்பதெல்லாம் சந்தேகம்தான். என்றாலும்
அந்தக் கண்களின் அசாதாரணத்தன்மை, சுதந்திரம் அவனுக்குப் பிடித்திருந்தது.
ஒரு புலப்படாத
ஒளி தன்னை வந்தடைந்ததைப் போல, விளக்கவொண்ணா பிடிப்பு அவனுள். மனைவி இறந்தபின் இத்தனை
நெருக்க உணர்வு, பிணைப்பு, அன்பின் கிரணம் அவனைத் தீண்டியதே இல்லை. மனசு பாரமற்று இருந்தது.
••
அவளை எழுப்பாமல்
வெளியே வந்தான். இரவின் காட்சிகள் மெல்ல, தூரத்தில் போல, ரயிலின் மிச்ச சொச்ச படபடப்பாய்
அலை தளும்புகின்றன.
இருவரும் குடித்திருந்தார்கள்.
தள்ளாடி ஒருவரை யொருவர் சாரைப் பாம்புகள் என உறவைப் பின்னிக் கொண்டபடி வீடு நோக்கி
வந்தார்கள். நினைக்கவே வேடிக்கை.
“இதா ஓ வீடா?”
“நம்ம வீடு...”
என்றுவிட்டு அவளைப் பார்த்து பிரியமாய் சிங்கராஜ் சிரித்தான். சிரித்து எத்தனை காலம்
ஆயிற்று!
“இனிம நீ யார்ட்டயும்
கைநீட்டி காசு கேக்கக் கூடாது.”
“எம்ஜியார்!”
பித்தம் தலைக்கேறிப்
போனது அதைக் கேட்க. புதிய வானம். புதிய பூமி. புதிய வீடு. புதிய மனிதன். ராத்திரி கிழவி
ஒருத்தியுடன் நடனமாடியபடி வீடு நோக்கி. அவனாலேயே நம்ப முடியவில்லை.
“உனக்குள் நான்
இருக்கேன். தாய் இல்லாமல் நான் இல்லை... தானே எவரும் பிறப்பதில்லை. வெற்றி மீது வெற்றி
வந்து என்னைச் சேரும்.”
“என்னா சிங்கம்
பாட்ல எறங்கிட்ட?” என்கிறாள் அவளும் ஆனந்தக் கிறுகிறுப்புடன். அவளது சிரிப்புக்காகவே
அவன் மேலும் மேலும் உளர ஆசைப்பட்டான்.
உலகத்தில் விருப்பம்
போல உளர ஆசைப்படாதவர் யார்?
குழந்தை எத்தனை
ஆசை ஆசையாய் உளரி தன்னை, தன் சந்தோஷத்தை எத்தனை அழகாய்க் கொண்டாடுகிறது.
சாராய போதையை
விட இந்த உறவு தரும் போதை,.. அதுவும் இழந்தபின் மீண்டும் கிடைக்கும் மடி. தலையணை. ஆறுதல்.
அவள் முகக் குறிப்பு
பார்த்தே அவள் கேட்டதை வாங்கிக் கொடுத்து விட்டால், சாமந்தி அன்றுபூரா உற்சாகமாய் இருப்பாள்.
அதைப் பார்க்கவே மனசில் எம்ஜியார் பாட்டு வரும்.
கிழிஞ்ச வேட்டி,
பழைய சோறு... என்ற பாடல் மாறி, புதிய வானம், புதிய பூமி...
டேய் சாமந்தியும்
இந்தக் கிழவியும் ஒண்ணா... என்றது மனம். இல்லைதான். இல்ல்ல்வே இல்ல்லைதான். எந்த உறவும்
எதற்கும் நேரானது அல்ல. ஒவ்வொன்றுக்கும் அதன் அதன் பிரத்யேக அம்சங்கள் அழகுதான்.
பால் மேலாடைவிலகினாற்
போல அவனில் என்னென்னவோ யோசனை. மாப்ள நீ கூட அறிவாளிதானோ என்னமோ.
அர்த்தமற்றுத்
தெரிகிற திரிகிற வாழ்க்கை. சிறு அலைச்சல். பிறகு திசைகள் மாறுகின்றன. கலங்கித் தெளிந்து
நியதிகளின் நீரோட்டம் மட்டுமல்ல, ஆடி ஓய்ந்த மனம் பிறகு புதுப்பித்த மனநிலையில்...
நெல் போகம் முடிந்து தானியப் பயிர்கள் விளைவிப்பதைப் போல.
இயக்கங்கள்.
மாற்றங்கள். காட்சிகளின் தாயக்கட்டைகள் உருண்டபடி.
வெளியே டீ குடித்துவிட்டு
சிங்கராஜ் திரேஸ் கிழவிக்கு என பார்சல் டீ வாங்கி வந்தான். “என்னா சிங்கை, வீட்ல விருந்தாளியா?”
என்கிறான் கடைக்காரன்.
கிழவி எனக்கு
உறவா விருந்தாளியா?
“தெர்ல” என்கிறான்
சிங்கராஜ். சிரிப்பு வந்து விட்டது. அவனுக்குச் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்
போலிருந்தது. மனம் மிதந்து கொண்டிருந்தது. போதை தாண்டிய மயக்க நிலை இது.
தூரத்திலேயே
தெரிந்துவிட்டது. கிழவி வாசல் தெளித்து கோலம் போடுகிறாள்.
“எங்க போயிட்டே?”
என்கிறாள் அவனைப் பார்த்து.
“ஏன்?” என்கிறான்
ஆனந்தமாய். எலேய் ஒன்னியத் தேடக்கூட லோகத்ல ஆள் இருக்குடா... தெரு நாய்களுக்கும் வேண்டும்
வேண்டும் துணை.
“இல்ல, சாராயக்கடைக்குதான்
சவாரி வுட்ட்டியோன்னு பாத்தேன்.”
அவனும் உற்சாகமாய்
“உனக்கும் வாங்கிட்டு வந்திருக்கேன்...” என்கிறான் பார்சலை நீட்டி.
“வீட்லயே போடலாம்டா.
பக்கத்துல... மீனு கீனு கிடைக்குமாடே?”
அவள் சுவாதீனமாய்
நடமாடியது பிடித்திருந்தது. ஈரக்குளுமை வீட்டிலும் மனசின் உள்ளிலும் வந்திருந்தது.
புல்லின் தலை என அவனில் எதோ எட்டிப் பார்க்கிறதா? தாய் கங்காருவின் மடிப்பையில் இருந்து
எட்டிப் பார்க்கும் குட்டியின் ஆச்சர்யப் பார்வை. வண்ணை புதுப்பாட்டு பாடுறா...
அப்பிடிப் போடு
போடு போடு, அப்பிடிப் போடு தன்னானே!
மாப்ளை இருப்பதில்
நல்ல சட்டை போட்டுக்கொண்டு அலுவலகம் கிளம்பினான்.
“ஏன் ராசா, சைக்கிள்
வெச்சிருக்கியே. அதுல போறதுதானே?” என்றாள் திரேஸ்.
சாமந்தி இறந்தபின்
அதைத் தொடுவதே யில்லை. சினிமா என்றும் வெளியிடங்களுக்கு என்றும் அவளைப் பின்னால் அமர்த்திக்கொண்டு
போய்வந்த பொற்காலங்களை எப்படி மறக்க முடியும். சைக்கிள் மிதியே தெரியாது. தெரு திரும்ப
பூக்காரி. வண்டி தன்னைப்போல நிற்கும் அங்கே. இவர்கள் வருகையைப் பார்த்ததுமே அவள் கைகள்
தன்னைப்போல பூவை எடுத்து முழம் போடும்.
சாமந்தியின்
உடலை அறுத்துக் கொடுத்தார்கள்.
ச். உன் சிசுவாவது
பிழைத்திருக்கலாம். ஆ, அது பிழைக்காததும் நல்லதுதான். அவள் இல்லாமல் அதை வைத்துக்கொண்டு
அவன் என்ன பண்ணுவான்.
தெருவே வீட்டில்
கூடிவிட்டது. எந்தப் பாதகத்தி கண்ணு போட்டாளோ... என்று எல்லாப் பொம்பளைகளுமே அழுதார்கள்.
உங்கள்ல ஒருத்தி தாண்டி... என ஆத்திரம் குமுறிய கணங்கள்!
கண்ணீர்க் கதை,
என தினத்தந்தியில் போட்டதற்கு அத்தனை கூட்டம்.
அவனுக்கே அழுகை
வரவில்லை. சிவாஜி அழுகை அழ நினைத்து எம்ஜியார் அழுகை அழுதான்.
கிழவி என்னவோ
அதைப் பார்த்தாப் போல அவனை எம்ஜியார் என்று கிண்டல் அடிக்கிறாள்!
தெருமுனைப் பூக்காரி
பூ கொண்டு போட்டுவிட்டு அவளும் அழுதபடி காசுக்கு நின்றாள்.
நாலு வீடு தள்ளிய
ராமாஞ்சம், அவனும் வந்து அழுதான். அவன் பெண்டாட்டியும் விபத்தில் செத்ததுதான். தினத்தந்தி
கண்டுக்கவே யில்லை. எதுக்கும் கொடுப்பினை வேணுண்டா, என்று சொல்லிச் சொல்லி அழுதான்
ராமாஞ்சம்.
நீ சாவு மாப்ள.
உனக்கு கொடுப்பினை இருக்கா பாப்பம்.
••
திரேஸ் மறநாள்
தூங்கி யெழுந்து பார்த்தபோது சிங்கராஜ் வண்டியை எண்ணெய் கிண்ணெய் போட்டு துப்புரவாகத்
துடைத்துக் கொண்டிருந்தான். “எலேய் என்னிய வண்டில உக்கார வெச்சிட்டுப் போவியா?” என்று
சிரித்தாள் திரேஸ்.
“பூவும் வாங்கித்
தரேன்” என்’று கிண்டலடிக்கிறான் வண்ணை.
வீட்டில் ஜன்னல்கள்
திறந்துவிடப் பட்டுள்ளன. தரை பெருக்கி சுத்தமாய். புதுக் காற்றின் குளுமை. அடுப்பங்கரையில்
ஒலிகளின் சங்கீதம்.
சாப்பிட்டு விட்டுக்
கிளம்பினான். ஒருவரை யொருவர் சீண்டிக் கொள்வதில் குறைச்சல் இல்லை.
திடீரென்று கிழவி
பேசினாளே இப்படி. “யப்பா, இந்தக் குடிய விட்ருப்பா...” என அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“அப்பிடிப்போடு.
இத்தினி நாள்ல ஒரேயோரு தரம் இந்த வார்த்தைய ஒனக்குச் சொல்லிக்கிடக் கூடாதா நீ?”
“எனக்கு எம்
மவன் கிடைச்சிட்டான் இப்ப.”
“ஒம் மவன் குடிப்பானா?”
“சே” என்றாள்
பெருமையாக. “தொட மாட்டான். எந்தக் கெட்ட பழக்கமுங் கெடையாது அவனுக்கு.”
“பின்ன ஏன் அவனைத்
தேடி சாராயக் கடைக்குப் போனே?”
“அட சும்மா இருவே.
கடைசில அங்கதானே எனக்கு எம் மவன் கெடைச்சான்?” என்றாள் அவள் விடாமல்.
சைக்கிள் அலுவலகம்
நோக்கி ஓடிக் கொண்டிருக்கையிலேயே மனசெல்லாம் பூ பூத்தபடி இருந்தது. தெக்கத்தி ஆளுகளுக்கே
லொள்ளு கொஞ்சம் அதிகம் தானப்போவ். படிச்சாளு படிக்காதாளு என்றெல்லாம் இல்லை. காசுப்
பிரச்னை கடந்து சந்தோசமாய் வாழ்கிற சனங்கள்.
“ஒனக்குத் தெரியாம
நான் சாராயக் கடைக்குப் போய்ட்டு வந்தா என்னா பண்ணுவே கிழவி?”
“நீ போகமாட்டே.
எனக்குத் தெரியும்” என்றாள் அவள். “எம் மவன் போக மாட்டான்” என்றாள். “உன்னை நான் நம்பறேன்”
என்றாள்.
“நீ வேற, என்னை
நானே நம்ப மாட்டேன்” என்றான் அவன்.
என்றாலும் கிழவிக்கு
எதோ சக்தி இருக்கத்தான் செய்கிறது.
அவள் எனக்கு
ஆதரவா, அவளுக்கு நானா?...
கோழியா முட்டையா,
எது முதல்... அதே போல.
எல்லாம் நன்றாய்த்தான்
இருந்தது.
கிழவி ரத்த ரத்தமாய்
வாந்தி எடுத்த அந்த நாள் வரை.
••
வெள்ளிதோறும் தொடர்கிறேன்
storysankar@gmail.com
Mob 91 97899 87842 / 91 94450 16842
Comments
Post a Comment