கல்கி தீபாவளி மலர் 2011 - சிறுகதை
உறவுப்பாலம்
மாணவர்கள் தேர்வெழுதிக்
கொண்டிருக்கிறார்கள்.
அபூர்வமான இப்படி நாட்களில் தான்
வகுப்பில் நமக்கு ஓய்வு வாய்க்கிறது. தொண்டை வறள கத்த வேண்டியது இல்லை. (''கடைசி
பெஞ்சுவரை கேக்கல்ல சார்.'') நமக்குத்
தலைவலி என்று பாடம் நடத்த முடியாமல்,
''நேத்து நடத்தியதை சத்தம்போடாமல் படிச்சிட்டிருங்கடா,'' என்று
விட்டாலும், அஞ்சே
நிமிடத்தில் சளப் சளப்பென்று மழைத் தண்ணியில் அளைகிறாப் போல பசங்கள் பேச
ஆரம்பித்து விடுவார்கள்.
அவர்கள்உள்ளே வார்த்தைகள் முட்டிமோதிக்
கொண்டிருக்கின்றன. உற்சாகம் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. அடக்க அவர்கள்
சிரமப்படுகிறார்கள். பொங்கிவரும் தண்ணீர்க் குழாயில் கைவைத்து மூட, பீரிட்டுச்
சிதறுகிறது தண்ணீர். வயசு அப்படி. ஒலிகளை ரசிக்கிற வயசு... மௌனத்தில் எதையோ
இழந்தாப் போல அவர்கள் உணர்கிறார்கள். ஒலிகளற்ற நிலை மரணத்தின் ஒத்திகை
அவர்களுக்கு.
என்னில் ஒலிகள் அடங்க ஆரம்பித்து, மௌனம்
ஆட்சிக்கு வந்துவிட்டது என்று பட்டது கிரிதரனுக்கு. கைச்செலவில் சிக்கனம்
வந்துவிட்டாப் போல, வார்த்தைகளையும்
குறைவாக, தேவைப்படி
பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறேன். வடிகட்டி சாறெடுத்துத் தர ஆரம்பித்திருக்கிறேன்.
அரைக்கைச் சட்டை தவிர்த்து இப்போது முழுக்கைச் சட்டை, உடம்பை அதிகம்
மூடிக்கொள்கிறேன். ஆசைப்படி அல்ல,
நான் தேவைப்படி
செலவு செய்ய ஆரம்பித்திருக்கிறேன்...
வயது அதிகம் என்பது அல்ல. ஆனால் நான்
இப்போது இளைஞன் அல்ல என்பதன் அடையாளம் அன்றி இது வேறென்ன, என நினைத்துக்
கொண்டான். பார்ப்பது ஆசிரியர் உத்தியோகம். இதில் பசங்களுக்கு ஒன்றைச் சொல்லிக்
கொடுக்குமுன் நான் அதை நம்ப வேண்டும். நான் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். பசங்கள்
ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதை மாத்திரம் அல்ல, அவரையும் தானறியாமல் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்... என்கிற
பிரமை நமக்கு இருக்கிறது. மாதா,
பிதா, குரு, தெய்வம்... என
அவர்கள் உலகம் விரிகிறதாக ஐதிகம்.
தனக்குள் நிர்ப்பந்தித்துக் கொண்ட நியதிகள்.
ஒழுங்குகள் என்ற சட்டத்துக்குள் அடைபட்ட ஆசிரியர் உத்தியோகம். அதிராத சிரிப்பு.
பெரியோரைக் கண்டால் வணங்குதல். கூடிய அளவு எளிமை. சுடுசொல் தவிர்த்தல். இனிய
முகம். பாடத்துக்கு இடையே இடையே மெலிதான நகைச்சுவை, யாரையும் காயப்படுத்தாத அளவில்... சில ஆசிரியர்கள் வீட்டுப்
பிரச்னைகளை மனசில் இருந்து வெளியேற்ற முடியாமல் உருமியபடி வகுப்புக்குப் போய் மாணவர்களிடம்
மூர்க்கமாய் கெடுபிடி காட்டுகிறார்கள். ''வீட்டுப்பாடம்
எழுதல்லியா, போ வெளிலபோயி
மண்டி போடு'' என அவனை
அவமானப்படுத்தி சுருங்க வைக்கிறார்கள்.
கிரிதரன் வீட்டிலேயே சாதுதான். அவனது
சைக்கிள் கூட வருத்தப்பட்டு நொடித்துக்கொண்டு முனகியது இல்லை. அப்பாகாலத்து பழைய
ஹெர்குலஸ். எண்ணெய் போட்டு துடைத்து பளபளவென்று வைத்திருப்பான். அவனையும்
சைக்கிளையும் பிரிக்க முடியாதபடி அடையாளம் வந்திருந்தது. சைக்கிள் இல்லாமல் அவன்
தெருவில் வந்தால், பஸ் பிடித்து
வெளியூர் போகப்போகிறான் என்று அர்த்தம்.
மாணவர்கள் மும்முரமாய்த் தேர்வு
எழுதிக்கொண்டிருக்கிறார்கள். வகுப்பே மகா அமைதியாய் இயங்கிக் கொண்டிருக்கிறது.
கேள்வித்தாளை, விடை எழுதும்
தாளைப் புரட்டுகிற சரசரப்பு தவிர வேறு ஒலிகள் இல்லை. கேள்விகள் புரிந்த அளவில்
அல்லது புரியாத அளவில் அவர்கள் முகத்தில் ஆசுவாசம் மற்றும் விசனக் குறிகள்.
நான் மாணவனாக இருந்தபோது எப்படி
இருந்தேன், என கிரிதரன்
நினைத்துப் பார்த்தான். அபார பயம் இருந்தது எல்லாத்திலும். வாத்தியாரிடம் பயம்.
அப்பாவிடம் பயம். அதனாலேயே அம்மாவிடம் பயம் இல்லை. புதிய எந்தச் செயலுக்கும்
தயக்கம். எந்தப் புது நபரோடும் சட்டெனப் பழகிவிடாத சபைக்கூச்சம்.
அந்தக் கூச்சமே இடைஞ்சலான தருணம் ஒன்று.
பள்ளியிலேயே சூட்டிகையான அம்சவேணி. விலுக்கென்ற நொடிப்புடன் அவள் நடை... குதிரை
தோற்றது. வேணி என்றாலே குதிரை தானே?...
என நினைக்க
புன்னகை வந்தது. தான் புன்னகைத்ததை பசங்கள் பார்த்திருப்பார்களோ என்று படபடப்பாகி
விட்டது. ஆனால் பையன்கள் தேர்வு மும்முரத்தில் இருந்தார்கள்.
அம்சவேணி ஊரில் இருந்து
வந்திருக்கிறாள்...
கேட்ட கணம் உடம்பில் ஒரு சிலீர் ஓடியது
பார்த்து எத்தனை வருடங்கள் ஆயிற்று... கல்யாணம் என்றே அவளுக்கு மதுரையில்வைத்து
நடந்தது. அப்படியே புனே போய்விட்டாள்,
மாப்பிள்ளைஊருக்கு.
சிவப்பாய் அழகான ராஜகுமாரன்,
என்றார்கள்
பார்த்தவர்கள். அவன் கல்யாணத்துக்குப் போகவில்லை. அம்மா அப்பாவும் போகவில்லை.
பக்கத்து சாமியாண்டவர்புரத்தில் கல்லூரி
படிக்கையிலேயே வரன் குதிர்ந்து,
சட்டென அவள்
அந்த கிராமத்து எல்லைகளைத் தாண்டி சிறகை விரிச்சாச். உலகம் துச்சமாய்ப் பட்டிருக்க
வேண்டும். இளைஞர் கூட்டம் விக்கித்துத் திகைத்தது.
கிரிதரன் மொட்டைமாடியில் இருந்து அந்த
எதிர்வரிசை வீட்டை, அம்சவேணியின்
வீட்டைப் பார்த்தபடி அப்படியே நின்றான். திருப்பதி வரிசையாய் 'ஜரகண்டி ஜரகண்டி' என, காலம் என்னதான்
எல்லாரையும் நெட்டித் தள்ளி நகர்த்திப் போனாலும், சில கணங்கள் அப்படியே மனதில் உறைந்து, ஆணியடித்து
நின்று விடுகின்றன. நினைவுத் தடங்கள்,
சில சமயம்
தழும்புகள். தணலாய் உள்ளே கிடக்கும் நினைவுகள் திரும்ப வேறொரு தருணத்தில்
குபீரென்று பற்றிக் கொள்ளவும் நேர்கிறது.
யாருமே இல்லை கூட. மொட்டை மாடி. இருள்.
தனிமை. அதோ அம்சவேணி ஓடி ஆடித் திரிந்த வீடு. இருளில் கிடக்கிறது. வாசலில்
வாழைமரம். அவர்கள் எல்லாரும் கல்யாணத்துக்குப் போயிருக்கிறார்கள்... திடீரென்று
தன் உடம்பு குலுங்குவதை உணர்ந்தான் கிரிதரன். அவனுக்கே விசித்திரமாய் இருந்தது.
உள்ளே என்னவோ புரள்கிறாப் போலிருந்தது. வாயை விரித்து ஓவென அழ ஆரம்பித்தான்
கிரிதரன்.
எந்தக் கூட்டத்திலும் தனியே
அடையாளப்படும் அம்சவேணி. தோழிகளோடு ஆற்றுக்குத் தண்ணீர் எடுக்க குடம் தூக்கி
வந்தால் அவள் மாத்திரம் தனியே கண்ணில் படும் மர்மம் என்ன? மனம் அவளை
மாத்திரம் குறித்துக் கொள்ள,
கண் அவளை
மாத்திரம் பின் தொடர, என்று வேடிக்கை
பண்ணுகிறது. சாயங்கால பூஜையில் ஈஸ்வர சந்நிதியில் கற்பூரங் காட்டுமுன் கணீரென்று
அவள் பாடக் கேட்கவே கூட்டம் சேரும். ஈஸ்வரனைப் பார்க்க அல்ல அந்தக் கூட்டம்.
ஈஸ்வரனே அவள் பாட காத்திருக்க வேண்டும்,
என்றெல்லாம்
ஊரில் வேடிக்கையாய்ப் பேசிக்கொள்வார்கள். அவளுக்குப் பின் ஓதுவார் ரெண்டு பதிகம்
பாடுவார். நன்றாகத்தான் பாடுவார். என்றாலும் கற்பூர ஆரத்திக்குள் பிராகாரம்
சுத்திவிட்டு வந்துவிடலாம் என்று கூட்டம் கரையும். ஆனால் இளைஞர் கூட்டம் அப்படியே
தங்கி நிற்கும். அவர்கள் அம்சவேணியுடன் பிராகாரம் சுத்த காத்திருந்தார்கள்.
பையன்களிடத்தில், அம்சவேணி
யாருக்கு, என்கிற ஒரு
ரகசியக் கேள்வி, பரபரப்பு
இருந்தது. யாரும் நேரடியாக கேட்டுக் கொள்ளாவிட்டாலும் இருந்தது. எனக்குத்தான், என்று சொல்ல
எவனுக்கும் நாக்கு உள்ளே இழுத்துக்கொள்கிறது. அம்சவேணி ஒரு கிராமத்தின் கனவு...
அவள் கல்யாணம் என்பது ஊர்த்திருவிழா போல,
அது ஒரு
வைபவம்...
அவன் வசிக்கும் தெருவில்தான் அவளும், அப்பா, அம்மா, ஒரு தம்பி...
குடியிருந்தார்கள். அவள் தம்பியிடம் பழக,
அவனுக்கு
மிட்டாய் சாக்லேட் என்று வாங்கிக்கொடுக்க,
மற்ற
பையன்களிடையே போட்டா போட்டி.
இதில் கிரிதரன் பாடுதான் சிக்கல்.
அவளிடம் பேச அவனுள் துடிப்பாய் இருந்தாலும். கூச்சம் அவனைப் பின்னுக்கு இழுத்தது.
அதே தெரு, நாலு வீடுதள்ளி
எதிர்வாடையில் அவள் வீடு. தண்ணீர் எடுக்க,
போக வர அவள்
அவன்கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தாள். தற்செயலாக வாசல்பக்கம் வந்தாப்போல
கிரிதரன் வந்து நிற்பான். சட்டென அவள் வீட்டுப்பக்கம் பார்ப்பான். ரொம்ப நேரம்
பார்க்க முடியாது. கூச்சமாய் இருக்கும். உள்ளேயிருந்து அப்பாவோ அம்மாவோ அவனை
கவனித்துவிட்டு, ''ஏய் கிரி...
என்ன பண்றே?'' என்று
கேட்டுவிடுபார்களோ என்ற நினைப்பே வெருட்டி விடும். அவர்கள் தப்பாய் நினைக்கா
விட்டாலும், இது தப்பு, என்கிற
உள்குரலை என்ன செய்ய?
நல்ல பையன் எல்லாரும் அத்தனை நல்ல
பையன்கள் அல்ல, என
புன்னகையுடன் நினைத்துக்கொண்டான். வெளிப்பார்வைக்குத் தெரியாவிட்டாலும்
எல்லாரிடமும் உண்டு குடல் வால்,
பரிணாமத்தின்
மிச்சம்... அதனால்தான் வாத்தியார் சொல்கிறாரே என்று கொஞ்ச நேரம் அமைதி காக்கிற
பையன்கள் சட்டென வெடித்துச் சிதறுகிறார்கள். பள்ளிக்கூடம் விட்ட ஜோரில்
அவர்களிடம் தான் என்ன விடுபட்ட உற்சாகம்...
ஒருவேளை எனக்கு ஒரு தங்கை
இல்லாதிருந்தால் நான் இன்னும் அவளுடன்,
அம்சவேணியுடன்
நெருங்க முயற்சி செய்திருப்பேனோ என்னவோ?
அட போடா, என தலையை
உதறிக் கொண்டான்... நல்லவேளை பையன்கள் யாரும் இப்பவும் கவனிக்கவில்லை. மனசை
கொஞ்சம் அடக்கினால் நல்லது. பையன்கள் சப்தமிட்ட காலங்களில் அவர்கள் நம்மை
கவனிக்கக் கூட மாட்டார்கள். அவர்கள்உலகத்தில் உற்சாக நீச்சல் போட்டுக்
கொண்டிருப்பார்கள். இத்ந அமைதிதான் எனக்கு யோசனை. என்னை அவர்கள் கவனிக்கக்
கூடும். எனக்கே இந்த அமைதிதான் இப்போது சிக்கல். மனம் தன்னைப்போல விடுபட்டுத்
துள்ளுகிறது.
கையைப் பின்னால் கட்டிக்கொண்டு
நடந்தான் கிரிதரன். அம்சவேணி. அம்சவேணி... யாரோ பையன் விடைத்தாள் கேட்டான்.
மளமளவென்று எழுதித் தள்ளுகிறான் போல. போய்த் தந்துவிட்டுத் திரும்பினான். ம்
என்ன நினைத்தோம்... அவனவன் தங்கச்சியை வைத்தே அடுத்த பெண்ணுக்கு பிராக்கெட்
போடத் தயங்குவதே இல்லை.
அன்னிக்கு பத்தாங் கிளாஸ் ரமணி பற்றி
அவன் சிநேகிதன் கிருஷ்ணன் இவனிடம் வந்து பிராது கொடுத்தான். ''சார் இந்த
ரமணியைக் கண்டிச்சி வெய்ங்க. என்னைப் பார்க்க வரதாச் சொல்லி, நான் இல்லாத
சமயம் எங்க வீட்டுப் பக்கம் வரான். எந் தங்கச்சிகிட்ட எதும் பேசறான்.'' அவனைக்
கூப்பிட்டுக் கேட்டால், ''அட அதொண்ணில்ல
சார்'' என்று அசட்டுச்
சிரிப்பு சிரிக்கிறான் ரமணி. ''இனிமே அவங்க
வீட்டுப் பக்கமே நீ போகக்கூடாது. இந்த விவகாரத்தை இப்பிடியே விட்றலாம். ஹெச்.
எம். வரை போக வேண்டாம்...'' என்றான் கிரிதரன்.
''எம்மேல ஒண்ணும் தப்பு கிடையாது சார்'' என்று ரமணி
அவள் எழுதிய காதல் கடிதத்தை எடுத்துக் காட்டினான்.
''டேய் படிங்கடா முதல்ல. இதெல்லாம்
என்ன....'' என்றான்
கிரிதரன். ''இந்தா உன்
கையினால இதைக் கிழச்சிப் போடு. நல்லா படி,
நல்ல வேலைன்னு
உக்காரு. அப்பறம் அந்த வயசில் இதெல்லாம் வெச்சிக்கலாம்... கேட்டுதா?'' என்றான்
கண்டிப்புடன். என்றாலும் சட்டென அப்போதும் மனதில் அம்சவேணி மின்னல் போல
வெட்டியதைத் தவிர்க்க முடியவில்லை.
சில பெண்கள் எப்படி தைரியசாலிகளாய்
இருக்கிறார்கள் என நினைக்க ஆச்சர்யம் ஏற்பட்டது. முடிவு என்று எடுத்துவிட்டால்
இந்தப் பெண்கள் அதில் காட்டுகிற தீவிரம். எதிர்ப்புகள் மேலும் மேலும் அவர்களை
முறுக்கிக் கொள்ளத்தான் வைக்கிறது. யாரையும் சட்டை பண்ணாத நிமிர்வு, துணிச்சல்.
அம்சவேணியின் தைரியம் ஊரில் யாருக்கு
வரும்? ஏண்டி பொண்
கொழந்தையாடி நீ? இப்படி கலீர்னு
சிரிக்கிறியே,,, என அவளைக்
கட்டுப்படுத்துவார் யார். ஊரே அவளைக் கொண்டாடியது. அவளுக்கு யார் காதல் கடிதம்
எழுத முடியும்?
கடிதம் அல்ல அது, மனு...
அத்தனைக்கு வசதியான குடும்பம் என்றுகூட
இல்லை. அவள் அப்பா பஞ்சாயத்து அலுவலகத்தில் குமாஸ்தா. ஆட்சி மாற கட்சி மாற
எல்லாருக்கும் சலாம் போட்டே அவர் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. இருந்த
சம்பளத்தில் தினசரிகாலை முந்தினநாள்ச் சாதம் தண்ணியூத்தி, பழையது தான்.
என்றாலும் அவள் உடம்பில் என்ன தேஜஸ்,
எப்படி வந்தது
அந்த மினுமினுப்பு. வாளிப்பு. படிப்பிலும் அத்தனை சூட்டிகை என்று சொல்ல முடியாது.
என்றாலும் எப்படி வந்தது இந்தப் பெருமை. அவள் வயசுக்கு வந்ததை ஊரே கொண்டாடின்£ப்போல
இருந்தது. அடுத்த ரெண்டு வருஷத்தில் அவள் மூக்கு குத்திக் கொண்டபோது, கிராமத்தில்
தலைப்புச் செய்தி அதுதான்.
அவளோடு பேச சந்தர்ப்பங்கள் வராமல்
இல்லை. ஆ, அவளே பேசினாள்
ஒருமுறை. ''கிரி?'' என்று
கூப்பிட்டாள் அவனை. இடுப்பில் தண்ணீர்க்குடம். தெற்குத் தெரு தாண்டி ஆற்றை
நோக்கிக் குளிக்கப் போய்க்கொண்டிருந்தான்.
''கிரி?...''
காது நிறைய ஹாவெனத் திரும்பினான்.
''அந்த வெள்ளைச் செம்பருத்திப் பூ...
எத்தனை அழகா யிருக்கு இல்ல?''
உன்னை விடவா, என்று
நினைத்தபடி தலையாட்டினான். படபடப்பாய் இருந்தது. உடம்பில் ஒரு ஜிவ். பறக்க
யத்தனிக்கும் இதயம். தீயின் சுடராய் இருந்தாள் அவள். தள்ளிநின்று ரசிக்கலாம்.
வணங்கலாம். கையில் பிடிக்க முடியுமோ?
''அந்தப் பூ...'' என்றாள். ''ரொம்ப
உசரத்தில் இருக்கு. பறிச்சித் தருவியா கிரி?''
உடம்பெல்லாம் பரவசப்பட்டுப் போனான்.
சராசரியை விட அவன் கொஞ்சம் உயரம். அதற்குப் பெருமைப்பட்ட கணம் அது. இடுப்பில்
குடம் இல்லையென்றால், அவளே ஒரே
துள்ளலில் கிளையை எட்டி இழுத்துப் பறித்திருப்பாள்.
முன் குனிந்து கவனமாய்த் தன்னுலகில்
இருந்தான் அந்த ரமணி. இப்போது பிளஸ் டூ. அந்த கிருஷணனின் தங்கை, அவள் பேரே
மறந்து விட்டது. அவளை இந்நேரம் மறந்திருப்பானா?
கேட்டால், அவள் எனக்கு
இன்னொரு பரிசு தந்தாள், என்று சொல்லக்
கூடும். சிலாட்களுக்கு அப்படி அதிர்ஷ்டம் வாய்க்கத்தான் செய்கிறது.
எத்தனையோ தரம் அம்சவேணி வீட்டைத்
தாண்டி சைக்கிளில் போயிருந்தாலும் ஒருமுறை கூட கிணிங் கிணிங் என்று அடித்தது
இல்லை. மற்ற பசங்கள் மணியடித்தால் ஆத்திரமாய் வரும் அவனுக்கு.
''தேங்ஸ், சாமிக்குப் போடுவேன்''
என்று அந்தச்
செம்பருத்திப் பூவை அவள் வாங்கிக் கொண்டபோது சின்னதாய் ஒரு குண்டூசி அளவு
அவன்கைமேல் அவள் கை பட்டபோது,
சடசடவென்று
கோபுரத்துப் புறாக்கள் எழும்பிப் பறந்தன.
நீயே ஊர் தேவதை, உனக்கு
அளித்தேன் பூவை... என மனசில் நெகிழ்ந்த கணம் அது.
எப்படியோ எனக்கு இந்த ஊரே
லபித்துவிட்டது. ஆற்றங்கரை சுப்பிரமணியர் கோயிலில் அப்பா குருக்கள். பிரசாதம்
வரும். சம்பளம் என்று பேருக்கு. கற்பூரத் தட்டை நம்பிய ஜீவனம். ஒரு தங்கைவேறு
குடுகுடுவென்று எட்டாங்கிளாஸ் படிக்கும் போதே குதிர்ந்து நின்றாள். இவன் கல்லூரி
வாசித்து, பி.எட். படிக்க
என்று குமரன்நகர் போய்வந்தான். எல்லா இடமுமே ஊருக்குப் பக்கத்திலேயே தினசரி
போய்வருகிற அளவிலேயே அப்பா பார்க்க வேண்டி வந்தது. சைக்கிள் தான் எல்லா
இடத்துக்கும். இந்த பழைய காலத்து சைக்கிளைப் பார்த்தாலே எந்தப் பெண் கிட்ட வரும், என்றிருக்கும்.
சைக்கிளிலேயே அவனவன் எடையற்ற வண்ண வண்ண
மாடல் எல்லாம் பார்த்தாகி விட்டது. கைப்பிடியிலேயே ஆயிரம் அலங்காரங்கள்
வந்துவிட்டன.
ஆனாலும் சைக்கிள் எப்பவும் கூடவே
இருந்தது. அதைப் பழிப்பது தகாது. தினசரி காலை அதைத் துடைத்து எண்ணெய் போட்டு
பளபளவென்று வெயிலில் நிறுத்தி வைப்பான். ஆற்றங்கரையில் குளியல் போட எடுத்துப்
போவான். பாலம் தாண்டி பள்ளிக்கூடம் போக அதில்தான் சவாரி. அம்சவேணி ஒருநாள் அவன்
காதுபட கேலி செய்தது ஞாபகம் வந்தது.
''பெரியவனானா நம்ம கிரி என்னவா
ஆகப்போறானோ?''
''அவனா? அவன் பத்துநாள் பதினைந்து நாள் இறங்காமல் சைக்கிள் ஓட்டி
பரிசு வாங்குவான். திருவிழால,
ராத்திரி
பதினோரு மணியானால் தலைல டியூப் லைட்'டெல்லாம்
உடைச்சி வித்தை காட்டிட்டே ஓட்டறாங்களே,
அந்த மாதிரி...''
பளிச்சென்று அவளுக்கு எதும்
பதில்சொல்லத் தெரியாமல் வந்தாயிற்று. அப்புறம் எத்தனையோ பதில்கள் ஞாபகம் வந்தன.
அவள்முன் ஆண்கள் பேச்சற்றுப் போனார்கள். துணிச்சலாய் அவள் மாத்திரம் வார்த்தைகளை
வீசியெறிந்தாள்.
பழகிய சைக்கிள் என்பதில் நல்ல பாலன்ஸ்
வந்திருந்தது. வாஸ்தவத்தில் கைப்பிடியைப் பிடிக்காமலேயே கால்களாலேயே பாலன்ஸ் பண்ணி
அவன் தெருவில் போக முடியும். முன்னால் அப்படி. கையை விட்டுவிட்டு ஓட்டி வந்தான்.
ஆனால் வாத்தியார் ஆனதும் அந்தப் பழக்கத்தை விடவேண்டியதாகி விட்டது.
சாதாரணமாகவே பேச்சு என்று
வெளிப்படையாய்ப் பேசாதவன் அவன். வாத்தியார் உத்தியோகத்தில் வந்திருந்த அடக்கம்.
ஒரு புயலைப்போல அவள் அவனைக் கடந்துபோகையில் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க
மாத்திரமே முடிந்தது அவனால். ஒரு பாட்டிலின் தொடமுடியாத உட்பக்கமாய் அவள்
இருந்தாள்.
ஆசை விருட்சமாய் உள்ளே வளர்ந்துவந்த
நிலையில் அதன் இலைகள் கிளைகள் வாய்க்கு வெளியே வந்துவிடுமாய் அவனுக்குத் திணறலாய்
இருந்தது. என்னால் அவளைக் கைப்பிடிக்க முடியுமா? முதலில் நான் போய் அவளிடம் பேச வேண்டும்... எனக்கு ஒரு
தங்கை. அவளுக்கே நான்தான் வேலைக்குப் போய் கல்யாணம் பண்ணிவைக்க வேண்டும். அதுவரை
காத்திரு, என்று நான்
எப்படிச் சொல்ல முடியும்? எப்படி
எதிர்பார்க்க முடியும்?
முளையிலேயே கருகிப்போன நினைவுகள், ஆளை
இருட்டியது.
ஆனால் அப்பாவின் மரியாதைக்கு அவன்
பி.எட். முடிக்க உள்ளூர்ப் பள்ளியிலேயே வேலை கிடைத்ததைச் சொல்ல வேண்டும்.
''பரவால்லடா, உனக்கு இங்கியே
வேலையாச்சு. சைக்கிள்லயே போய் வரலாமில்லே?''
என்றார் அப்பா.
அவன் அப்பாவைத் திரும்பிப் பார்த்தான்.
பின் சுதாரித்துக் கொண்டு அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.
''வேற ஊரானாக் கூட என்ன, சைக்கிளையும்
எடுத்திண்டு போனா ஆச்சு, இல்லையா இவனே?'' என்றாள் தங்கை.
விஜயலெட்சுமி.
திரும்பி சைக்கிளைப் பார்த்தான். அதை
இனி அவனால் பிரிய முடியுமோ?
இவர்களை விடு, அது
வருத்தப்படும் போலிருந்தது.
பாண்டியராஜபுரத்தில் கோவாப்ரேடிவ்
சொசைட்டியில் ராமச்சந்திரன் வேலை பார்க்கிறான். அவனுக்குப் பேசி பத்து பவுன்
போட்டு கோவில் கல்யாணம். விஜயலெட்சுமி கிளம்பிப் போனபோது நன்றியில், அண்ணா, அண்ணா என்று
அழுதாள். அடுத்து சீமந்தம், ஆடி என்று
செலவுகளுக்கு அவன் தயாராக வேண்டும்,
என்று
நினைத்துக்கொண்டபடியே அவனும் அழுதான். விஜயலெட்சுமிக்காக அழுகிறானா, தனக்காக
அழுகிறானா என்றே தெரியவில்லை.
ஆ அம்சவேணிக்காக அழுதான்.
அவளை யாரோ வேறொரு கல்யாணத்தில்
பார்த்துவிட்டுப் பிடித்துப்போய் அங்கேயே நிச்சயதார்த்தமும் பண்ணிவிட்டதாக
கேள்விப்பட்டிருந்தான். விஜி கல்யாணம் சீக்கிரமே முடிந்ததில் சின்னதாய்
ஆசுவாசப்படக் கூட முடியாமல் சேதி. சகாக்கள் எல்லாரும் அவனிடம் விசாரிக்கிறார்கள், என்னடா
அப்பிடியா, என்று. அதையே
ஒவ்வொருத்தரிடமும் சொல்லவே சுணக்கமாய் இருந்தது.
... கல்யாணம் முடிந்து அம்சவேணி ரெண்டுதரம் ஊர்
வந்திருந்தாள். அவள் தம்பி கல்யாணம் என்று ஒருமுறை வந்தாள். அடுத்து அவள்
பிள்ளையாண்டிருந்தாள். சேதி கேள்விப்பட்டு அப்பா போய் அவளை அழைத்து வந்தார். வந்த
கொஞ்சநாள் அவர் புனே புராணம் தான். அவரிடம் போய் ''புனே முன்சிபாலிட்டி குப்பை வண்டில்லாம் எப்பிடி, போய்ப்
பார்த்தேளா?'' என்று கேட்க
நினைத்தான் கிரிதரன்.
இப்போது அவள் எதிரே வர அந்தக் கூச்சம்
குறைந்திருந்தது அவனுக்கு. ஓரிரு முறை காற்றாட அவள் வாசலில் வந்து நாற்காலி
போட்டு உட்கார்ந்திருந்தபோது அவனைப் பார்த்து புன்னகைக்கக் கூட செய்தாள். அடியே
உனக்காக நான் அழுதிருக்கிறேன் தெரியுமோ... என்று லேசாய் உள்ளே துடித்தது
அவனுக்.கு.
இப்போது ஆண் குழந்தை பிறந்து அதற்கே
ஏழெட்டு வயசாகி யிருந்தது. பையனுக்கு கோடை என்று பள்ளி விடுமுறை. பத்திருபது நாள்
இருப்பாள் போலிருந்தது.
கிரிதரனுக்கு வயது 28 ஆகிறது.
என்னடா, உனக்கு ஜாதகம்
பார்க்க ஆரம்பிக்கலாமா... என்று அப்பா கேட்கவில்லை என்பதில் அவனுக்கு வருத்தம்
உண்டு. அம்மா போனபின்னால் வீட்டில் எதுவுமே ஒழுங்கு இல்லாமல் போனது. அத்தை
ஒருத்தி பக்கத்துத் தெருவில் இருந்தாள். அவள்வந்து சமையல் என்று எதையோ
பண்ணிவிட்டுப் போகிறாள்.
காலையில் குளிக்கப் போனபோது
ஆற்றங்கரைக்கு அந்தப் பையனும் வந்திருந்தான். அம்சவேணியின் பிள்ளை. செவேலென்று
இருந்தான். உடமபில் எலும்புகள் தெரிந்தன. ஆற்றங்கரை அவனுக்குப் பரவசமாய் இருந்தது.
பிள்ளைகள் நீரில் அடித்துத் துளைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு
நீச்சல் தெரியாது. கரையோரமாய் மேட்டில் நின்றபடி சொம்பு சொம்பாய் மேலே ஊற்றிக்
குளித்துக் கொண்டிருந்தான்.
கிரிதரன் அவனிடம் அம்சவேணியின் சாயல்
தெரிகிறதா என்று உற்றுப் பார்த்தான். அவளேபோலப் பெரிய கண்கள். மைதீட்டமலேயே
பளிச்சென அடர்த்தியாய் இமைகள். நல்ல உயரம் இருந்தான். அதில் அப்பாவைக்
கொண்டிருக்கலாம்.
சைக்கிளை நிறுத்தி மேற்சட்டையைக்
கழற்றிவிட்டு கிரிதரன் ஆற்றில் இறங்கினான். மேம்பாலத்தில் வாகனங்கள் சத்தமிட்டபடி
நகர்ந்து கொண்டிருந்தன. சட்டென அவன் பக்கம் திரும்பிக் கேட்டான். ''உன்
பேரென்னப்பா?''
''கணேஷ்'' என்றான் அவன்.
''நீச்சல் தெரியாதா?''
ம்ஹும், என அவன் தலையாட்டினான்.
''வா,
அதொண்ணும்
பெரிய பிரமாதம் இல்ல... வா''. என்று அவனைக்
கூப்பிட்டான்.
கணேஷ் தயக்கத்துடன் கிட்ட வந்தான்.
நீட்டிய அவன் கையில் குப்புறப் படுத்தான் கணேஷ். ''சும்மா கையையும் காலையும் அடி. மெல்ல மெல்ல நீச்சல்
பிடிபடும். விடாமல் அடிடா'' என்றான்
கிரிதரன்.
கணேஷ் உற்சாகமாய் அடிக்க ஆரம்பித்தான்.
அன்றைக்கு வகுப்பில் பாடம் நடத்தவே
உற்சாகமாய் இருந்தது. நல்ல சுருட்டை முடி கணேஷுக்கு. சிரிக்கையில் கன்னத்தில் குழி
விழுந்தது. அம்மா போல. அவளிடம் அம்சவேணியைப் பார்க்கிற சாயலை அவனால் தவிர்க்கவே
முடியவில்லை. அவனைப் பார்க்கவே மனம் பொங்கியது.
''சார் இந்தப்பாடம் நேத்திதான்
நடத்தினீங்க...''
கணேஷ் உற்சாகமாய்ப் பேசிக்கொண்டே
வந்தான் தினசரி. அவனுடன் ஆற்றில் குளிக்க அனுப்பி வைக்க அம்சவேணி தடை சொல்லவில்லை, என்பதே
ஆசுவாசமாய் இருந்தது அவனுக்கு.
''அன்க்கிள், இது...'' என்று விரலைக்
காட்டினான். ''இது பாபா.'' இப்போது விரலை
சரித்துக் காட்டினான். ''அப்ப இது என்ன?'' என்று
கேட்டான்.
''தெர்லயே.''
''ஹா ஹா'' என்று சிரித்தான் கணேஷ். ''பாருங்க அன்க்கிள். இந்த விரல் நேரா இருக்கா. இது பாபா.
இப்ப சாய்ஞ்சி இருக்கா, இது சாய் பாபா!''
கிரிதரனும் கூடச் «4சர்ந்து
சிரித்தான்.
''இப்ப சொல்லுங்க அன்க்கிள்.'' விரலைக்
காட்டினான். ''இது சேலை.''
விரலை எடுத்து உதடுக்குள் மூடிக்கொண்டான். ''இது என்ன?''
''தெரிலயே.''
''வாயில் சேலை!''
''ஐயோ இப்பிடி அறுவை ஜோக்கா
அடிக்கிறியேடா...'' என்று
சிரித்தான் கிரிதரன்.
''இப்ப நான் சொல்றேன். மாடிப்படி
இறங்கிட்டே வந்தது குழந்தை. ஏ பி சி டி ஈ எஃப்-னு சொல்லிட்டே வந்த குழந்தை தவறி
விழுந்துட்டது.''
''ஐயோ அப்றம் என்னாச்சி?''
''ஜி ஹெச்சுக்குக் கூட்டிட்டுப் போனாங்க!''
''இது நல்லாருக்கு, நான் போயி
எங்கம்மாகிட்டச் சொல்றேன்...''
கணேஷுக்கு
உடம்பெல்லாம் சிரிப்பு பொங்கி வழிந்தது.
இப்போது ஓரளவு நீச்சல் கற்றுக்
கொண்டிருந்தான். கிரிதரன் பார்க்கையிலேயே சிறு வட்டமாய் உள் ஆழம் வரை போய்த்
திரும்பினான். ''இனிமே நானே
நீச்சல் அடிப்பேன் அன்க்கிள்...''
கிரிதரன் எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்று
நடந்தது. பள்ளிக்கூடம் விட்டு பாலம் வழியாக சைக்கிளில் திரும்பி
வந்துகொண்டிருந்தான் கிரிதரன். தற்செயலாகக் கீழே பார்த்தால், யாரோ
ஆழப்பகுதிக்கு தவறிப் போயிருக்க வேண்டும். ரெண்டு கையும் மேலே வந்தது. அப்படியே
திரும்ப மூழ்கிவிட்டார்கள் சைக்கிளை வாயுவேகம் மனோவேகமாக மிதித்து ஆற்றங்கரையில்
சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு தண்ணீரில் குதித்து ஆழம்வரை முங்குநீச்சலில்
போய்த் துழாவினான். ரெண்டுமுறை எதுவும் தட்டுப்படவில்லை. மூணாம் முறை தம்பிடித்து
உள்ளேயே கைகளால் அளைந்து தேடித் துழாவினால்... இதோ ஒரு உடம்பு. தலைமுடியைப்
பிடித்து மேலே இழுத்து தரதரவென்று கரையேற்றிப் போட்டான்.
அவன் எதிர்பார்த்தது சரி. அது கணேஷ்.
அசட்டு தைரியத்துடன் தனியாகவே குளிக்க வந்திருக்கிறான். வாயில் வைத்து ஊதி, வயிற்றை
அமுக்கி குப்புறத் திருப்பிப் போட்டு அவன் குடித்த தண்ணீரை வெளியேற்றினான்
கிரிதரன். ரெண்டு நிமிடத்தில் மெல்ல அவன் மூச்சு சீரானது.
கணேஷ் கண்ணைத் திறந்து பார்த்தான்.
''என்னடா இப்பிடிப் பண்ணிப்பிட்டே?'' என்று அவனைக்
கட்டிக்கொண்டான் கிரிதரன்.
''ஆகா,
நான் செத்துப்
போயிட்டேன்னே நினைச்சேன் சார்... நல்ல சமயத்ல வந்து என்னைக் காப்பாத்தினீங்க. மறு
பிறவி தான் எனக்கு. இப்ப எனக்கு உயிர் குடுத்தவரே நீங்கதான்...'' என்று
படபடப்புடன் சொன்னான் கணேஷ்.
உயிர் கொடுத்தவன்...
ஆகாவென்றிருந்தது அந்தக் கணம்.
திருப்பதி வரிசையாய் 'ஜரகண்டி
ஜரகண்டி' என, காலம் என்னதான்
எல்லாரையும் நெட்டித் தள்ளி நகர்த்திப் போனாலும், சில கணங்கள் அப்படியே மனதில் உறைந்து, ஆணியடித்து
நின்று விடுகின்றன.
''பயப்படாதடா, இனி ஒண்ணும்
கவலை இல்லை. தோட்டிக்கோ. வா வீட்டுக்குப் போலாம்'' என்றான் கிரிதரன் நெகிழ்ச்சியுடன்.
சைக்கிளில் பின்-இருக்கையில் ஏறி
உட்கார்ந்துகொண்டான் கணேஷ். ''அம்மாகிட்டச்
சொல்ல வேணாம் அன்க்கிள்'' என்றான்.
''நீ சொல்லலையின்னா நானும் சொல்லல.
ஆனால் நீ இனிமே இப்பிடித் தனியா குளிக்க வர்ற வேலை வெச்சிக்காதே... சரியா?''
''ம்.''
சைக்கிள் அவர்கள் தெருப் பக்கம்
திரும்பியது. ''ரொம்ப அழகா
சைக்கிள் ஓட்டறீங்க அன்க்கிள் நீங்க. எனக்கு சைக்கிள் விட சொல்லித் தரீங்களா?'' என்று கேட்டான்
கணேஷ்.
storysankar@gmail.com
– mob 91 97899 87842
பால்ய கால நினைவுகள் என்றாலே அதில் ஒரு பெண் நிச்சயம் இடம் பெற்றிருப்பாள். அதை ஒரு ஆசிரியர் பாத்திரத்தின் மூலம் அழகாக விவரித்துள்ளீர்கள் எழுத்து நடை அற்புதமாக உள்ளது.
ReplyDeletesaw your email - and i think i hae taken the hurdles ... now anybody can post comment here
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete