சௌ ந் த ர் ய ல க ரி
எஸ். சங்கரநாராயணன்
நீலுவைப் பற்றி
வித்தியாசமாய் அவளால் எதுவும் நினைக்க முடியவில்லை. தெளிவாய் அழகாய் அதுவும் நல்ல
திருத்தமான உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசும் நீலு. இவள் புருஷன் வரதனுக்குக் கூட
அத்தனை சுபாவமாய் ஆங்கிலம் வராது.
‘அவரப் பாத்தா அப்பிடி
ஒண்ணும் தெரிலயே!’ என்றாள் மாயா.
‘‘அதான் சொல்றேனே.
பார்த்தா தெரியாது. அண்ணா நல்லவன்தான். இருந்தாலும் நீ ஜாக்ரதையா இருன்னு சொல்லி
வைக்கறேன்’ என்று வரதன் சொன்னான்.
மீசை இல்லாத நீலு. தாடி
மழித்துக் கொள்கையில் பொறுமை இல்லாமல் காயம் ஏற்படுத்திக் கொள்கிற நீலு.
கல்யாணத்துக்கு முன்பே வரதன் அவளிடம் சொல்லியிருந்தாள். பாவம் அண்ணாவுக்கு முன்
பண்ணிக் கொள்வதில் அவனுக்கு வருத்தம்தான்.
நல்ல பையன் அவன்.
குழந்தைபோல. ஐந்தாவது செமஸ்டர் வரை எப்படி அருமையாய்ப் படித்தான். ‘ஓ’ வாங்குவான்
என்று எல்லாரும் எதிர்பார்த்திருந்தார்கள். அவனும் அருமையாய்ப் படித்தான். விடிய
விடியப் படித்தான். இரவு. ஊரே அடங்கி மூச்சொடுங்கிக் கிடந்தது. அவன் மட்டும்
விளக்கைப் போட்டுக் கொண்டு படித்துக் கொண்டிருந்தான். கண் கலங்கி எரிச்சல்
எடுத்தது. அச்சு எழுத்துக்கள் பூச்சிகளாய் ஊர்ந்தன. கறுப்புக் கட்டெறும்புகள்.
மாமரத்துப் பாலுக்கு ஏறித் திரியும் கட்டெறும்புகள். ஒன்றின் மீது ஒன்று
முட்டிமோதிச் சென்றன அவை. கும்பலாய்ப் பக்கம் பூராவும், ஐயய்ய, எத்தனை எறும்புகள்.
வெள்ளைத் தாளைச் சர்க்கரைக் கட்டியாய் அவை நினைத்துவிட்டனவா? அடையடையாய்
எறும்புகள் சூத்திரங்களை இழுத்துச் செல்கின்றன. சட்டென்று தட்டி விட்டான். ம்ஹூம்.
அவைகளைக் கலைக்க முடியவில்லை.
அடையடையாய் எறும்புகள்,
அவனுக்குச் சட்டென்று ஓர் அருவருப்பு ஏற்பட்டது. புத்தகத்தை உதறிப் போட்டுவிட்டு
எழுந்தான். புத்தகம் விரிந்து காலடியில் குப்புற விழுந்தது ஐயோ எறும்புகள் காலைக்
கடித்து விடப்போகிறது... சட்டென்று காலை இழுத்துக்கொண்டான்.
சுற்றிலும் இருள். அமைதி.
தனிமை. அவன் மட்டும் விழித்திருக்கின்றான். இருட்டுக் கடலில் வெளிச்சத் தீவு.
தீவில் ஒரு தனி மனிதன். இருட்டு என்னைச் சிறை வைத்திருக்கிறதா? சுற்றி
வளைத்திருக்கிறதா? என் அருகில் யாருமே இல்லை அப்பா, அம்மா, வரதன், மீனாட்சி...
யாருமே இல்லை. நான் இப்போது அநாதை.
சட்டென்று அவன் தன்னைக்
கட்டுப்படுத்திக் கொண்டான். கண்களை மூடி, துடைத்துக் கொண்டான். ஒரு வாரமாக அவன்
மிகக் குறைந்த நேரமே தூங்குகிறான். ஒரு மணிக்குப் படுத்துக் கொண்டு, அலாரம் வைத்து
நாலுமணிக்கு எழுந்து கொண்டு விடுகிறான். விழுந்து விழுந்து படித்தான் அவன்.
மூளையில் புத்தகம் மேல் புத்தகமாக அடுக்கிக் கொண்டே இருந்தான். பரீட்சை ஹாலில்
நடக்கவே முடியவில்லை. கால்களில் தரையில் நடக்கிற ‘பா’வனையே இல்லை. உடம்பில் ஒரு
வழக்கமில்லாத சூடு.
நீலு, எழுந்து போய்த்
தண்ணீர் குடித்தான். பாதிச் சொம்புத் தண்ணீரைத் தொண்டை நனைய நனையக் குடித்து
விட்டு மீதியை முகத்தில், அக்குளில், பிரத்யேகமாக கண்களில் வாரியடித்துத்
கொண்டான். குனிந்து, நிமிர்கையில் தடுமாறியது. களைத்திருந்தான். நினைவுகள்
ஆலவட்டமடித்தன. குழல்விளக்கின் குச்சி வெளிச்சம் கண்ணைக் குத்தியது. இதுவரை என்ன
செய்து கொண்டு இருந்தோம் என்பதே அவன் நினைவில் குழம்பியது. ஆ, படித்துக்
கொண்டிருந்தோம். எஸ், நாளை பரீட்சை. நாளை என்ன கிழமை? நான் என்ன படித்துக்
கொண்டிருந்தேன்? இதென்ன - புத்தகம் ஏனிப்படிக் கீழே கிடக்கிறது. இனார்கானிக்
கெமிஸ்ட்ரி. 320 ரூபாய். ஏன் கீழே போட்டேன்? எனக்கென்ன ஆகிவிட்டது?
என்னவோ ஆகிவிட்டது.
விபத்து. என் மூளையில் மூலகங்களும், சூத்திரங்களுமான இடிபாடுகள். பூகம்பம்,
குழப்பமாய் இருக்கிறது. புத்தக வரிகள் கோடைகாலத் தந்தி வயர்கள் போலத் தொய்ந்து
தொங்கின. பக்கங்கள் தேனீ மொய்க்கும் தேன்கூடு. படிக்க முடியவில்லை. மனதில்
பதியவில்லை. கவனமாய் மூடி வைத்து எழுந்து கொண்டான். இனி அவனால் படிக்க முடியாது
என்று தோன்றியது. மெல்ல நடந்தான். அமைதியான இரவு. யாவரும் தூங்கிக்
கொண்டிருந்தார்கள். தூக்கத்தின் ஒட்டு மொத்தத்தில் ஆளுக்குக் கொஞ்சம் பிட்டுக்
கண்மூடிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஜீவ அப்பமா’ அது? அவன் கத்தோலிக்கக்
கிறிஸ்துவன் அல்ல என்பதால் அவனுக்குக் கிடையாதா?
அப்பா கட்டிலில். தொந்தி
ஏறியேறி இறங்கிக் கொண்டிருந்தது. இறங்கி மீண்டும் காற்று புடைக்கிற பலூன். கீழே
அம்மா. கன்னத்தில் கையழுத்தி உறங்குகிறாள் எத்தனை வெக்கைக்கும் போர்த்திக்கொண்டு
தூங்கும் மீனாட்சி. கண்ணாடி இல்லாமல், கைதட்டித் தூங்கும் வரதன்.
துரோகிகள், என்
குடும்பத்தில், கடவுளின் ரேஷன் கோட்டாவான என் தூக்கத்தைப் பறித்துக் கொண்ட
துரோகிகள். புரண்டு படுத்து வரதன் சிரிக்கிறான். ராஸ்கல்.
மெல்ல மாடியேறினான்.
காலையில் பரீட்சை. படித்ததெல்லாம் சுத்தமாக அவனுக்கு மறந்துவிட்டது.
தூக்கமுமில்லை. இனி தூங்கவும் முடியாது. இனி நான் என்ன செய்வது? நான் என்ன
செய்யப்போகிறேன்?... நேற்றே சற்று சிரமமாக இருந்தது. முந்தாநாள் பரீட்சையில்
ஞாபகம் வராத பதில்கள் எல்லாம் நேற்றுப் பரீட்சையில் நினைவு வந்தன. நேற்றைய
கேள்விகள் படித்தவை போலவும் படிக்காதவை போலவும் இருந்தன. சில எளிய வினாக்களைக் கூட
தவறாக அர்த்தம் பன்ணிக்கொண்டான். கேள்விகள், பதில்கள், தேர்வறை, புத்தகங்கள்
எல்லாவற்றையும் விட்டுவிட்டு, பிய்த்துக்கொண்டு ஓட வேண்டும் போலிருந்தது.
அன்றிரவு அவன்
புத்தகத்தையே தொடவில்லை. மறுநாள் என்ன தேர்வு என்பது பற்றிக்கூட அவன் நினைத்துப்
பார்க்க வில்லை. அறிவு ஓர் அற்புதம். பரீட்சைக்காகவும் மதிப்பெண்களுக்காகவும் அதை
இப்படிக் கசக்கிப் பிழிவார்களா? புரியாத விஷயங்கள் எப்படி பயமுறுத்துகின்றன.
தேர்வுக்குமுன் படித்த பகுதிகளைப் பற்றி எவ்வளவு எதிர்பார்ப்பும் பதட்டமும். ஒரு
வருடப் படிப்பை சில மணிகளில் நாடி பார்ப்பது எவ்வளவு கொடுமை.
தேர்வுக் காலங்கள் ஓர்
இளைஞனைக் கலவரப் படுத்துகின்றன. காட்டுக் குதிரையை வண்டியில் பூட்டினாற் போல.
நீலு எழுந்து நின்றான்.
எல்லாரும் தூங்கிக் கொண்டு இருந்தார்கள். வரதன் தேர்வில் நல்ல மதிப்பெண்கள்
வாங்கினான் என்று சொல்ல முடியாது. அவனுக்குப் புரியாத பாடங்களை நீலு போதிக்க
எடுத்துக் கொண்ட முயற்சிகள் தோல்வி ‘கண்டன ஆர்வமில்லை. படிப்பு எவ்வளவு அருமையான
விஷயம். தேர்வுக் காலங்களில் தொற்றுநோய் போலல்லவா ‘புத்தக வைரஸ்.’
மீனாட்சி எஸெல்சி. பிறகு
படிக்கவில்லை என்று விட்டாள். இடுப்பில் பிள்ளை தூக்க ஆசை வந்துவிட்டது என்றான
நிலையில் அப்பா அவன் மீது அதீத நம்பிக்கைகளைச் சுமத்த ஆரம்பித்து விட்டார். தன்
சுடரைத் தன்னை விட மேலான உயரத்துக்கு இவன் ஒருவனே எடுத்துச் செல்வான் என்கிற
எதிர்பார்ப்பு.
எதிர்பார்ப்பு சார்ந்த
வாழ்க்கை. பிறத்தியானைத் தோளேறும் பிரகிருதிகள். அடுத்தவன் வயலை வரப்பைத்
தள்ளிப்போட்டு ஆக்ரமிக்கிறார்கள். ஹா - என்று சிலிர்த்துக் கொண்டான். அவனுக்கு
நரம்புகள் முறுக்கேறிய ஆக்ரோஷம். மூத்த பையன் என்பதால் விட்டுக் கொடுக்க வேண்டுமா?
தப்பாய் அப்பா சொன்னாலும் தலையாட்ட வேண்டும். ஏனெனில் சின்னவர்களுக்கு அப்பாமேல
மரியாதை தட்டிப் போய்விடும்.
அடக்குமுறைகள் ஒழிக! ஹ -
என்று சிலிர்த்தபடி ஓர் ஆவேசத்துடன் போய் அப்பாவை எழுப்பினான்.
‘எந்திருங்கோ.’
‘என்னது?’
‘மொதல்ல எந்திருங்கோ
சொல்றேன்...’
பதறித் தடுமாறி எழுந்து
கொண்டார் அப்பா. வேட்டியை அவசரமாய்ப் பிடித்துக்கொண்டார். வெளிச்சத்துக்குக் கூசிய
கண்கள் மேலும் தடுமாறச் செய்தன.
அவன் அப்பாவைப்
பார்த்தான். அவனுக்குப் பாவமாய் இருந்தது. ரிடயரான அப்பா, பென்ஷன் பற்றி கனவு
காண்கிற அப்பா. அவனுக்கு எதற்காக அப்பாவை எழுப்பினோம் என்பதே மறந்து விட்டது.
‘என்னடா?’
‘ஒண்ணுமில்லப்பா.’
‘எதுக்குடா என்னை
எழுப்பின?’
‘ஞாபகம் இல்லப்பா.
‘ஞாபகம் இல்லையா?...’
அவன் உதட்டைக் கடித்தபடி
அவரைப் பார்த்தான்.
‘நீலு, பூச்சிபொட்டு
எதையும் பாத்து பயந்திண்டியா?’
‘-ம்ஹும்.’
‘பின்ன?’
‘சரிப்பா. நீங்க
படுத்துக்கங்க.’
‘சரி நீலு, உள்ள பாபா விபூதி இருக்கு பார்.
இட்டுண்டு படி, போ. மனசக் கொழப்பிக்காதே.’’
அப்பா படுத்துக்கொண்ட
பின் மெல்ல அவனுக்கு நினைவுகள் மீண்டன. ஒரு மனிதன் வயிறு வளர்த்துத் தூங்குகிறான்.
அவனுக்காக, அவனது சமுதாயக் கடமைகளுக்காக, இன்னொருவன் இரவுகளில் கடுமையாய்த்
தூக்கம் முழித்துப் படித்துக் கொண்டிருக்கிறான்.
கொத்தடிமையா நான்?
வீட்டுக் காவலுக்காய் வளர்க்கப் படுகிற நாயா நான்? அடி வாங்கினாலும் போலி
விஸ்வாசத்துடன் வாலாட்ட வேண்டுமா நான்?
சுரண்டல் ஒழிக!
அடக்குமுறை ஒழிக!’ - ஹா, என்று சிலிர்த்துக் கொண்டான். ஒரு நாள் அடையாள
உள்ளிருப்பு வேலை நிறுத்தம்.
மீண்டும் போய் அப்பா
அருகில் நின்றான்.
‘என்னதுடா?’ என்று
மீனாட்சி இப்போது எழுந்து கொண்டாள்.
‘பாத்து மீனு, கொழந்தை
முழிச்சிக்கப் போறது...’ என்றான் ஆத்திரத்துடன்.
‘என்ன கொழந்தை?’
‘ஒண்ணுமில்ல’ என்ற போது
அழுகை வந்தது.
‘நீலு?’
‘நீ தூங்குடி’ என்று
நகர்ந்தான். முதுகில் அவள் பார்வை பின்தொடர்ந்து உறுத்தியது.
காலையில் அம்மா எழுந்து
கொண்ட போது அப்பாவைச் சுற்றிலும் புத்தகங்கள் இறைந்திருப்பதைக் கண்டாள். அவளுக்கு
ஆச்சரியமாய் இருந்தது. பயமாய் இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தாள். நீலுவைக்
காணவில்லை. காலை ஐந்தரை மணி. உள்விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. நீலு
இல்லை. அப்பாவை எழுப்பினாள். அழாமல் முடியவில்லை அவளால். ‘நீலு?’ என்று அப்பா
கூப்பிட்டார். பதில்லை. தேடினார். எந்த அறையிலும் இல்லை. மொட்டைமாடிக் கதவு
படாரென்று காற்றுக்கு அடித்துக் கொண்டது. அப்பா மாடிக்குப் போய்ப் பார்த்தார்.
நீலு வெறுந்தரையில் படுத்துக் கிடந்தான். காற்றுப்போன பலூன்போல பக்கத்தில் பனியன்.
‘அப்ப பரீட்சையே அவர்
எழுதலையா?’ என்று மாயா கேட்டாள். கை வளையல்களின் சங்கீதம். புதுக் கல்யாணப்
பொலிவு. ஒரு தளும்பாத மந்தகாச முகம். மஞ்சள் முகத்தில் பூனைமயிர். நதிக்கரை வண்டல்
சித்திரம் போல, வரதன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தது அவளுக்கு ‘சந்தோஷக்
கன்றுக்குட்டி’ முட்டிய மாதிரித் திணறிற்று.
‘-ம்?’
‘அதாவது...’ என்று
தடுமாறி வெட்கத்துடன் சிரித்தாள்.
‘இல்ல எழுதினான்...’
என்றான் வரதன். ‘அப்பதான்...’
பரீட்சை ஹாலில் நீலு
திடீரென்று எழுந்துகொண்டு, மேற்பார்வையாளரைக் கூப்பிட்டு, பதில் எழுதும் தாளைக்
கிழித்து அவர் தலையில் போட்டதையும், ‘ஹா ஹா ஹா’ வென்று பெரிதாய்ச் சிரித்ததையும்,
மாணவர்களைப் பரீட்சை எழுத வேண்டாமென்று கத்தியதையும், சகலரும் இங்கே
ஏமாற்றுக்காரர்கள் என்று பிரசங்கம் செய்ததையும்...
‘ஐயய்ய அப்றம்?’ என்றவள்
அவன் கைகளை மெல்ல விலக்கி ‘அப்றம் என்னாச்சி?’ என்றாள்.
‘பிரின்ஸி ரூம்ல மடக்கி
வெச்சிருந்தாங்க. ‘கதவத் தெற - கதவத் தெற’ன்னு ஒரே சத்தம். அப்பா போனதும், நேராப்
பாஞ்சி அவர் கழுத்தப் புடிச்சிட்டான். வசவு நாறிப்போச்சு...’
‘பாவம் அப்பா’ என்றாள்
மாயா. ‘எவ்வளவு பவர் உங்க கண்ணாடி?’
‘மைனஸ் ஒன். டாக்டர்
வந்து ஊசி போட்டுத் தூங்கப் பண்ணினாரு. அதோட அவன் படிப்புக்குப் புள்ளி
வெச்சாச்சி.’
வரதன் அலுவலகம்
கிளம்பினான். வீட்டில் மாயாவும், அப்பாவும், நீலுவும் இருந்தார்கள். நீலு
கடைக்குப் போயிருந்ததால், வரதன் கிளம்புகையில் மாயாவைக் கிட்டே இழுத்து,
‘வரதன்?’ என்று குரல்
கேட்டது. திரும்பினால் நீலு. ‘ஆபிஸ் கிளம்பியாச்சா...?’
‘-ம்... ம். கரன்ட் பில்
கட்டணும் மறந்துறாதே’ என்றபடி வரதன் ஸ்கூட்டரை மிதித்தான். இவன் டாடா காட்டிய போது
நீலுவும், அவன் பின்னாலிருந்து மாயாவும் கையாட்டினார்கள்.
மாயா ஒனக்காக ஸ்வீட்
வாங்கிண்டு வந்திருக்கேன்’ என்றபடி நீலு திரும்பினான்.
‘என்னத்துக்கு, கல்யாண
பட்சணங்களே கொள்ளையாக் கெடக்கே’ என்றபடி மாயா வாங்கிக் கொண்டாள்.
‘துணிக்குப் போடற
சோப்பு...’
‘இல்லையா?’ என்று
கேட்டான் நீலு.
‘ஏண்டி ஒரேதரியா எல்லாம்
சொல்லி விடப்படாதோ?’ என்றாள் அம்மா உள்ளேயிருந்து.
‘பரவால்ல’ என்று ஒரு
புன்னகையுடன் நீலு திரும்பவும் தெருவில் இறங்கினான்.
‘ஏம்மா, இந்த ஆறு
வருஷத்துல ஒண்ணுங் கொணந் தெரியலையா?’’ என்று மாயா உள்ளே வந்தபடி அம்மாவைக்
கேட்டாள்.
‘என்னமோம்மா நல்லாதான்
இருக்கான்னு படறது நேக்கு. எப்பவாவது நெனச்சிண்டா மாதிரிக் கன்னாபின்னான்னு கத்துவான்.
ஒரு ரெண்டு தரம் கரண்ட் வெச்சிண்டு வந்தம்னா சரியாய்டும்,’ என்றாள் அம்மா.
‘புரோக்ராம் முடிஞ்சி ர்ர்ர்-ங்கறது பார். ரேடியோவை அணை, அப்பா சாப்பிடறாளா கேளு.
எல்லாம் ஆச்சி...’
‘சாப்ட வரேளாப்பா?’
‘அவனும் வரட்டும். ஒண்ணா
உக்காந்துடலாம்.’
‘சில சமயம் பழைய பாடம்லா
உக்காந்து படிக்கறாரே திருப்பியும் பரீஷை எழுதப் போறாரா?’
‘நாந்தா
வேணான்னிட்டேம்மா’ என்றார் அப்பா. ‘திருப்பியும் எதாவதாச்சின்னா... சிலர் கல்யாணம்
பண்ணினாச் சரியாய்ப் போயிடும்னுகூடச் சொல்றா, எதநம்பி இவனுக்குக் கல்யாணம் பண்றது
சொல்லு...’
‘மாயா?’ என்று குரல்
கேட்டது.
‘ரின் கெடைக்கலை. டெட்
பரவால்லியா!’ என்றபடி நீலு நின்றிருந்தான்.
‘ஏதோ ஒண்ணு.’
‘ரைட்’ என்று நீலு
திரும்பினான்.
‘ஓ! இன்னும் வாங்கிண்டே
வரலியா? அப்றமா வாங்கிக் கலாம். விடுங்கோ.’
‘தோ ஒரு நிமிஷம்...’
‘சாப்பிட்டுட்டுப்
போங்கோ. ஒரு அவசரமும் இல்லை.’
‘வந்துர்றேன்’ என்று
திரும்பவும் இறங்கிப் போனான்.
‘என்ன வெயில்! எங்கூர்
எப்பவும் ஜில்லுனு இருக்கும். ஆத்து வாசல்ல ரெண்டு மாமரம் நிக்கறதுக்கும்
அதுக்கும் காத்து பிச்சிண்டு போகும்...’
‘நாங்க சொன்னா ஒரு வேலை
செய்யறதில்லை இவன். நீ சொன்னா எத்தனை தரம் கடைக்கு ஓடறாம் பாரு,’ என்று அப்பா
சிரித்தார்.
கல்யாணக் கலகலப்பு… மாயா
மும்முரமாய் இருந்தாள். தலையாட்டலும் சிரிப்பும் வணக்கமுமாய் இருந்தவள் தற்செயலாய்
அவனைப் பார்த்தாள். முழுக்கைச் சட்டை. கைகளை மடித்துக் காட்டியபடி நீலு அவளையே
பார்த்துக் கொண்டிருந்தான். அவள் சிரித்து ‘சாப்டாச்சா?’ என்று ஜாடையாய் கேட்டாள்.
கண்ணை அழுத்தமாய் மூடித் திறந்து நீலு ‘ஆச்சு’ என்று பதில் சொன்னான்.
‘அக்கா?’
‘என்னடி?’
‘ஓம் பிரதரின்லா
கெமிஸ்ட்ரியா?’
‘ஏன்?’
‘இல்ல. நீ மாயாவோட
தங்கையான்னு கூப்ட்டு வெச்சி, பாலிமரைசேஷன் பத்தி அறுஅறுன்னு அறுத்துட்டார்.’
‘சே, பாவண்டி அவரு.
என்னாச்சின்னா...’
‘ஏதோ ஆச்சி. ரொம்பப்
பாவந்தான். ஒன் பிரதரின்லா வாச்சே!...’
அவர்கள் தேனிலவு போய்
வந்தபோது நீலு ஸ்டேஷனுக்கே வந்தான்.
‘என்னடாது?’
‘பரவால்ல. நா வீட்ல
சும்மாதான இருக்கேன்... ட்ரிப் எப்டி இருந்தது மாயா?’
‘ம்.’
‘எல்லாஞ் சுத்திப்
பாத்தீங்களா?’
‘ஓ.’
‘எங்க-? ஒருத்தரை
யொருத்தர் பாத்துக்கவே சரியா இருந்திருக்கும்!’
‘ஆட்டோ இருந்தாக்
கூப்பிடு நீலு’ என்றான் வரதன்.
குளியல் ரூமில் மாயா ஒரு
வரி பாடினால் சட்டென்று பிரகாசமாகி நீலு அடுத்த அடி பாடினான். கரகரப்பிரியா!
நல்லாப் பாட்றியே?’’ என்றான் நீலு கதவைப் பார்த்து.
‘அப்றமாப் பேசேண்டா’
என்றாள் அம்மா.
‘ஒனக்கு யேசுதாஸ்
பிடிக்குமா?’
‘எங்க நீலு ‘மரிமரி
நின்னே’ அப்டியே பாடுவாந் தெரிமோ!’ என்றார் அப்பா.
‘சிந்து பைரவி இல்ல?’
அவள் தலைதுவட்டியபடியே வெளியே வந்தாள்.
‘மூணு தடவை பார்த்தேன்!’
மாயாவுக்கு எந்த
வித்தியாசமும் அவனிடம் தெரியவில்லை. காலையில் பால் வாங்கி வருகிற நீலு. ஆங்கில
நாவல் படிக்கிற நீலு. டி.வியில் செய்திகள் கேட்கிற நீலு.
‘பெனாசிர் ரெண்டு
ரெகார்டு பண்ணீர்க்கா தெரிமோ?’
‘என்ன?’
‘முஸ்லீம் நாட்டின் முதல்
பெண் பிரதமர்...’
‘தெரியும். இன்னொண்ணு?’
‘பதவில இருக்கறச்சயே
கொழந்தை பெத்துண்டது,’ என்று நீலு சிரித்தான்.
மதியம் 12-45க்கு யூ ஜி
சி நிகழ்ச்சி பார்க்கிற நீலு - புதுக்கவிதை ரசிக்கிற நீலு.
‘மாயா ஒனக்கு ‘நீலமணி’
தெரியுமா?’
‘யாரு?’
‘கவிஞர்! ஒரு கவிதை
சொல்லட்டா?’
‘ஒண்டுக் குடித்தனக்
கூட்டுக் குடும்பி’
கண்டு பிடித்தது
ரப்பர் வளையல்.
நல்லா இருக்கா?’
‘அப்படின்னா? ஓகோ!...’
என்று மாயா சிரித்தாள். அவளுக்கு முகம் சிவந்து வெட்கமாயிருந்தது.
‘வரதன் வாங்கிக்
குடுத்திருக்கானா’’ என்றான் நீலு அவளையே பார்த்துக்கொண்டு.
“என்னது?“
“அதான்… ரப்பர் வளையல்!“
என்று நீலு சிரித்தான்.
‘சும்மா என்னடா.
தொணதொணன்னுண்டு. பாவம் நீ உள்ளபோய் ரெஸ்ட் எடுத்துக்கோம்மா’ என்றார் அப்பா.
மாயா பக்கத்து அறைக்குப்
போய்க் கட்டிலில் உட்கார்ந்தாள். ‘கொஞ்ச நேரம் வேணாத் தூங்கு. கதவ வேணாச்
சாத்திக்கோ... நீலு வெத்தல பாக்கு வாங்கிண்டு வரயா?’
‘போப்பா ஒனக்கு வேற
வேலையில்ல’
ஆபிஸ் விட்டு வந்ததும்
வரதன் ‘மாயா?’ என்று வாசலில் இருந்தே கூப்பிட்டான்.
‘எதித்தாத்ல
பேசிண்டிருக்கா. ஏன்?’ என்று நீலு எழுந்து வந்தான். ‘நா போயி...’
‘வேணாம். நானே போறேன்...’
‘போய்ட்டு வரேம் மாமி.’
‘குங்குமம்
எடுத்துக்கோம்மா.’
‘மாயா சினிமாவுக்கு
டிக்கெட்...’
‘சினிமாவா?’ என்று நீலு
எழுந்து வந்தான்.
‘என்ன படம்?’
‘மோதல்.’
‘சத்யராஜா?’ என்றான்
நீலு.
‘கௌம்பு மாயா.’
‘நானும் வரேண்டா, என்றான்
நீலு.
‘மாயா இருவரையும்
பார்த்தாள்.
‘நீலு?’ என்று அப்பா
கூப்பிட்டது கேட்டது.
‘இருப்பா வரேன்!’ என்றான்
நீலு. திரும்பி வரதனைப் பார்த்தான்.
‘இன்னொரு நாப் போலாம்.
ரெண்டு டிக்கெட்தான் கெடச்சதுடா...’
மாயா நீலுவைப்
பார்த்தாள். ‘அப்பனா நீங்க ரெண்டு பேரும் வேணா-’
‘காபி கொண்டா இவளே
அவனுக்கு’ என்றபடி அப்பா வந்தார். ‘டேய் அவா போட்டும். நம்ப அப்றமாப் போலாம்,’
என்றார் நீலுவைப் பார்த்து.
‘எப்றமா?’
‘புதுப்படந்தானே. இன்னும்
ரொம்ப நாள் ஓடுண்டா.’
‘ஓடாது!’
‘சரி, ஓடாத படத்தப் போயி
எதுக்குப் பாக்கணும்?’ என்று அப்பா சிரித்தார்.
‘இவா போறாளே?’
‘நீலு, அவா படம் பாத்துட்டு
வந்து சொல்லட்டும், நல்லார்ந்தா நாம அப்றம் போலாம். நிதானமாகக் குடிடா புரையேறப்
போறது...’
வரதன் வாயைத்
துடைத்தபடியே ‘போலாமா?’ என்றான். அவர்கள் கிளம்பிப் போவதையே நீலு பார்த்துக்
கொண்டிருந்தான்.
இரவு அவர்கள் திரும்பி
வரும் போது வீடு இருட்டிக் கிடந்தது. கதவைத் தட்டினார்கள். நீலு வந்து திறந்தான்.
‘ஏண்டா, அப்பா அம்மா?’
என்று வரதன் கேட்டான்.
‘தூங்கியாச்சி.
ஒங்களுக்கு ஏன் இவ்ள லேட்டு?’
‘சாப்ட்டே வந்துட்டோம்.’
‘போ. உங்களுக்காக இங்க
எல்லாம் பண்ணி வெச்சிருக்கு?...
‘வந்து படுடா’ என்று
அப்பா குரல் உள்ளிருந்து கேட்டது.
வரதனும் மாயாவும்
உள்ளறைக்குப் போனார்கள்.
‘படம் நல்லார்ந்ததா
மாயா?’
அவள் தலையாட்டியபடியே
கதவைச் சாத்திக் கொண்டாள். நீலு படுத்துக் கொண்டான். கொஞ்ச நேரம் அப்படியே
கிடந்தபின் மெதுவாய் ‘தாயே யசோதா’ என்று யேசுதாஸ் குரலில் பாட ஆரம்பித்தான்.
‘டேய் தூங்குடா.’
‘எனக்குத் தூக்கம்
வர்லப்பா.’
‘எல்லாம் வரும். வரும்.
தூங்கு!’
‘அப்பா.’
‘-ம்...’
‘ஏம்ப்பா இவ்ள நேரமா உள்ள
லைட் எரியுது?’
‘நீ தூங்குன்றேன்ல...’
‘இல்லப்பா. மறந்துபோயி
அணைக்காம...’ என்றவன் அப்பா எதிர்பார்க்காமல் சட்டென்று எழுந்து விறுவிறுவென்று போய்க்
கதவைத் தட்டினான்.
‘யாரது?’
‘நீலு!’
‘நீலு இங்க வா.’
‘இருப்பா’ என்னுமுன்
பளாரென்று பெல்ட்டால் அடி விழுந்தது. ‘படவா ராஸ்கல். வாடான்றேன்’ என்று இன்னொரு
அடி.
‘ஐயோ அடிக்காதப்பா. லைட்
எரிஞ்சாத் தூக்கம் வர்லப்பா. ஐயோ அடிக்காதப்பா...’ என்று நீலு கத்தினான்.
கதவைத் திறந்து கொண்டு
வரதன் வெளியே வந்தான். மேலே பனியனில்லாத உடம்புக்கு டாலர் செய்ன் தெரிந்தது.
அப்பாவுக்கு எப்படி
அத்தனை ஆத்திரம் வந்தது தெரியவில்லை. அதுவரை அவர் அவனை அடித்தது இல்லை. இப்போது
வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தார்.
‘ஐயோ விடுங்கோ விடுங்கோ’
என்று அம்மா குறுக்கே வந்தாள்.
‘விடறதா,
நொறுக்கிப்பிடறேன் இவனை!’
‘ஹா - அப்பா இனிமே
அடிச்சா மாடிலேந்து, குதிச்சிருவேன்...’
‘குதி... போ - சாவு போ!’
யாரும் எதிர்பார்க்குமுன்
நீலு பாய்ந்து மாடியேறினான்.
‘ஐயோ பிடிங்கோ பிடிங்கோ’
என்றாள் மாயா.
அப்பாவும் வரதனும்
பின்னால் ஓடி எட்டிப் பிடிக்கும் முன் நீலு மொட்டைமாடி விளிம்பிலிருந்து...
குதித்தே விட்டான்.
இரண்டு காலிலும் சரியான
அடி. எலும்பு முறிவு இருக்கும் என்று டாக்டர் அபிப்ராயப்பட்டார். எக்ஸ்ரே
வந்தால்தான் தெரியும்.
நீலு சுயநினைவின்றிக்
கிடந்தான். குளுகோஸும் இரத்தமும் ஆக்ஸிஜனும் ஏறிக்கொண்டிருந்தன. கண்ணே
திறக்கவில்லை... நல்ல உயரமான மாடி. நல்லவேளை, தலைகுப்புறக் குதித்திருந்தால்
அப்போதே இறந்திருப்பான்.
அம்மா நீலு பக்கத்தில்
உட்கார்ந்து கண்ணைக் கண்ணைத் துடைத்துக் கொண்டிருந்தாள். அப்பாவும் வரதனும்
நின்றபடி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
லேசாய் நீலுவிடம்
அசைவுகள் தெரிந்தன. ‘நீலு?’ என்று அம்மா எழுந்து கிட்ட வந்தாள்.
நீலு பஞ்சான கண்களால்
சுற்றிலும் பார்த்தான். ஆஸ்பத்திரி. தொங்கிக் கொண்டு இரத்தம். அம்மா. அப்பா.
வரதன்...
‘-ம்மா.’
‘நீலு?’ என்று அம்மா
குனிந்தாள்.
‘மாயா வரலையாம்மா?’
என்றான் நீலு.
தொகுப்பில் படித்தபோதே மனம் இறுகிப் போய் விட்டது . இப்போது மீண்டும் அதே இறுக்கம் . நீலுக்களின் உலகம் எப்போதுமே மனதை எதோ செய்துவிடத்தான் செய்கிறது . - சுப்ரா http://subra56.blogspot.in/
ReplyDeleteஇந்தக் கதையைப் படித்திருக்கக் கூடாதோ.. ? ஏன் ஸார் இத்தனை இயல்பாய் எழுதி வச்சிருக்கீங்க ..
ReplyDeleteமனதை உருக்கியே விட்டது. மிகவும் இயல்பான எழுத்தும் நடையும்! மனம் நகர மறுக்கிறது!
ReplyDelete