இதழ் - சூர்யக்கதிர் / இலக்கியம் / மதுமிதா


பேட்டி பதில்கள் எஸ். சங்கரநாராயணன்
மொழிபெயர்ப்பாளனுக்குக்
குறிக்கோள் வேண்டும்


எண்பதுகளின் தமிழ் இலக்கியவாதியாக அடையாளப்படும் எஸ். சங்கரநாராயணன் 
கதை கவிதை குறுநாவல் நாவல் கட்டுரை மொழிபெயர்ப்பு என்று பல்துறைகளில் 
கால் பதித்தவர். உலகச் சிறுகதைகள் மூன்று தொகுதிகள் உட்பட ஏறத்தாழ 
80 நூல்களின் ஆசிரியர். நிஜம் என்கிற சிற்றிதழ் நடந்தியவர். தற்போது ஆண்டுதோறும் 
இருவாட்சி பொங்கல் மலர் கொண்டு வருகிறார். கச்சிதமான உவமை வீச்சுடனான 
கவிதை நடை இவரது முத்திரை. சொல்லாடல்களில் புன்னகை வரவழைக்கக் கூடிய 
நகைச்சுவை மிளிரும். மொழிபெயர்ப்பு குறித்து இவரது 
கருத்துக்கள் கவனங் கொள்ளத் தக்கவை.

  1. மொழியாக்கம் என்று வரும்போது Translation, Transliteration, Transcreation என்ற வகைகளாக உள்ளனவே. இவை அனைத்தும் ஒன்று இல்லையா. வேறு வேறு definition கோட்பாடுகளா?
இந்த டிரான்ஸ்லேஷன் பாணி என்பது அந்தக்கால மேஜர் சுந்தரராஜன் பாணி. What can I do for you? நான் உனக்கு என்ன செய்யணும்? – என அவர்தான் திரைப்படத்தில் வசனம் பேசுவார்.

டிரான்ஸ்கிரியேஷன் என்பதே சாத்தியம். மொழிபெயர்க்கிற படைப்பாளன் தனது படைப்பாளுமையை அதில் செலுத்தாத பட்சம் அதில் உணர்வுகளை சரியாகக் கைமாற்ற முடியாது. கட்டுரைகளுக்கு வேண்டுமானால் டிரான்ஸ்லேஷன் என்று அதை வகைப்படுத்த முடியும். அதிலேயே கூட மூல மொழியின் சாத்தியப்பாடுகளை ஓர் எழுத்தாளன் நிறுவ முயலும்போது, நாம் நம் மொழியின் வீச்சையும் காட்ட முடியும். பகவான் அரவிந்தரின் ஒரு வாக்கியம். My body is your (God’s) playground என்பார் அவர். இதை நான் தமிழில், ‘என் உடல் உன் விளையாட்டுத் திடல்‘, என்று தந்தேன்.

  1. உங்களின் நீர்வலை படைப்பினை இதில் எந்த வகையில் சேர்க்கலாம். ஹெமிங்வே யின் The Old man and the sea வாசித்த பாதிப்பில் எழுதினீர்களா?
இதை நினைத்துதான் முதல் கேள்வி கேட்டீர்களா? நான் ஹெமிங்வேயின் ரசிகன் என்பது உண்மையே. நீர்வலை நாவலை ஹெமிங்வேக்கு தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். வாழ்க்கையை ஒரு சவால் எனவே அவர் எதிர்கொண்டார். தம் பாத்திரங்களிலும் காட்டினார். அந்த நிமிர்வு எனக்குப் பிடிக்கும். மத்தபடி நீர்வலை நாவல் மொழிபெயர்ப்போ தழுவலோ (திருட்டோ) அல்ல. சுனாமி சமயம் இந்தோனிஷியன் ஒருவன் மரத்துண்டு ஒன்றைப் பற்றியபடி 22 நாட்கள் கடலில் மிதந்து கொண்டிருந்தவன் வழியில் வந்த கப்பல் ஒன்றினால் கரை சேர்க்கப் பட்டான். இது அவன் கதை. அவன் கேஸ் போட்டாலும் பரவாயில்லை. ஹெமிங்வே போட முடியாது. மதுமிதாவும்!

  1. இந்த நூலுக்குத் தமிழக அரசின் விருது  பெற்றிருக்கிறீர்கள். மேலும் உங்கள் படைப்புகளுக்கு பல விருதுகளைப் பெற்றிருக்கிறீர்கள்... விருது படைப்பாளிக்குத் தகுந்த காலத்தில் அளிக்கப் படுகின்றனவா?
நாவல் வெளிவந்த ஓராண்டில் தரப்பட்ட விருதுதான் அது. வலை வீசி மீன் பிடித்தவனை அலை வீசி கடல் பிடித்த கதை. விருதுகள் வரும் போகும். அதை எதிர்பார்த்து படைப்புகள் உருவாக முடியாது. அது எழுதி முடிந்ததும் அடுத்த படைப்பை நோக்கி நகர்வது நல்லது. இன்னும் சொல்லப்போனால் நீர்வலை என் ஆகச் சிறந்த படைப்பு அல்ல. ஆனால் விருது பெற்றது அது.

விருதுகள் திதியெடுக்க வரும் காக்கைகள் அல்ல. காத்திருக்க நேரம் இல்லை.

  1. விருதுகள் சரியான தேர்வுகளில் வழங்கப்படுகின்றனவா?
எனக்கு வருகிற விருதையே சந்தேகிக்கிறீர்கள் போலிருக்கிறதே. இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை.

  1. விருது பெறுவது படைப்பாளிக்கான அங்கீகாரம் தானா... தகுந்த படைப்பூக்கத்தை அளிக்கின்றனவா விருதுகள்?
அப்படியெல்லாம் தனியே எதுவும் இல்லை. விருது பெற்றபின் ஓய்ந்தவர்கள் இருக்கிறார்கள். விருது பெறாமல் உழைக்கிறவர்கள் இருக்கிறார்கள். எழுதுவது என்பது ஒரு மனநிலை. அது ஓங்கினால் படைப்புகள் உருவாகும். அது அடங்கினால் அவன் சாமானியனாக ஆகி விடுகிறான். சமையல்காரர்கள் நாங்கள். வேலை முடிந்து அடுத்த கல்யாணத்துக்கு நகர்ந்து விடுகிறோம்.

  1. எழுத்தாளர் ஜெயமோகன், எழுத்தாளர் பாவண்ணன், நீங்கள்... தொலைதொடர்புத் துறையும் எழுத்தாளர்களும் என்னும் வரிசையில் சிறப்பாகச் செயல்படுகின்றீர்களே.. சூட்சுமமான வேறு காரணம் ஏதும் உள்ளதா?
வேலை அழுத்தம் குறைவு எங்களுக்கு என்பது உண்மையே. தினவை என்ன செய்வது? பால் அதிகம் சுமக்கிற காட்டெருமை பாறைகளில் பாலைத் தீற்றி வெளிப்படுத்தும். தவிரவும் வயிற்றுப் பாட்டுக்கான வேலை, என்பதில் எல்லாம் விடுபட்ட ஒரு மனநிலை அது. எங்கே பணி செய்தாலும் என்ன? மனசின் இயக்கமே படைப்பின் அலையெடுப்பு.

  1. சங்கரநாராயணன் ... ஷங்கரநாராயணன் ... பெயர் மாற்றத்துக்கு பிரத்யேகக் காரணம் உள்ளதா?
முக்கியமான கேள்வி. நான் சங்கரநாராயணன் தான். இடையே இன்னொரு எழுத்தாளர் இதே பெயரில் முளைத்தார். அவரின் படைப்புகளும் வெளியாக ஆரம்பித்தன. அவர் என்னைவிட மூத்தவர். அவருக்கும் இயற்பெயர் இதுவே, என்ற அளவில் நான் ஜகா வாங்கினேன். என்னை ஷங்கரநாராயணன் ஆக்கிக் கொண்டேன். இப்போது அவர் இல்லை. இறந்துவிட்டார். நான் பழைய என் பெயரில் எழுத வந்துவிட்டேன்.

  1. கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல் ,திரட்டு நூல், மொழிபெயர்ப்பு என்று பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறீர்கள். புதிதாக வேறு தளங்களை யோசித்திருக்கிறீர்களா?
படைப்பு அளவிலேயே ஒன்றைப்போல மற்றொன்று உருவாக்குவதை நான் மறுதலிப்பேன். எனது முதல் கவிதைத் தொகுதியே, கூறாதது கூறல். ஒரு முழு திரைப்படம் பார்க்கிற அளவில் ஒரு நாவல், வாசிக்க உருவாக்கி யிருக்கிறேன். வசிகரப் பொய்கள். சற்று முன்தான் வெளி வந்திருக்கிறது. விரைவில் அது திரைப்படமாகவும் ஆகும் என நம்புவோம்.

  1. உங்களின் படைப்புகளிலும் ஒரே theme இல் எழுதுவது என்னும் முயற்சி செய்திருக்கிறீர்களே. அது இயல்பாக நிகழ்ந்ததா.. இப்படி செய்ய வேண்டும் என்று யோசித்து செயல்படுத்தினீர்களா?
கலைஞன் பதிப்பகத்தில் எனது சிறுகதைகளின் பெருங்கொத்து 2 பகுதிகளாக 2007 வாக்கில் வெளியானது. பிறகு பல்வேறு உட்பிரிவுகளில் நான் பரந்துபட்டு இயங்கியிருக்கிறேன் என தற்செயலாகக் கண்டுகொள்ள முடிந்தது. ஒரே பாடுபொருள் அமைந்த என் கதைகளை ஒருசேரத் திரட்டித் தரலாமே, என்று இருந்தது. இதுவரை உலகில் எந்த எழுத்தாளருமே செய்யாத முயற்சி இது, எனவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஷெர்வுட் ஆண்டர்சன் தன் கதைகளை ஒரே இட அடையாளத்துடன் தந்தார். ஜேம்ஸ் ஜாய்ஸ், டப்ளின் ஊர்க்காரர்கள், என அமைத்தார், என்றாலும் இது முற்றிலும் வேறு.
நிலாச்சாரல் இணைய இதழ் மூலம் என் முதல் மின்னூல் வெளியானது. முற்றிலும் அரசியல் சூழல் சார்ந்த என் கதைகளை ஒன்றுதிரட்டி ‘நரஸ்துதி காலம்‘ என வெளியிட்டோம். பெரும் வரவேற்பு கண்ட மின்னூல் அது. பிறகு, கார்கில் யுத்த சமயம் அது. சுதந்திரப் போராட்ட சமயம் நான் பிறக்கவே இல்லை. நான் பிறந்தது 1959. எனது தேசப் பற்று சார்ந்த தினவுகள் விம்ம நான் செய்த சிறுகதைகள் தொகுதி ‘யுத்தம்‘. மறுபதிப்பாக அது ‘இரத்த ஆறு‘ எனவும் வந்தது. இந்தக்கதைகளை நான் எழுதிய ஜோரில் வெளியிட்ட அத்தனை தமிழ் இதழ்களையும், இணைய இதழ்கைளையும் இப்போது நினைக்கிறேன். பெரும் உற்சாகமான முயற்சி அது. ஆகஸ்டு 15 அன்று இதை ஓய்வு பெற்றவர்கள், ஒரு மேஜர் ஜெனரல் வெளியிட, மற்றொரு மேஜர் ஜெனரல் பெற்றுக் கொண்டார். என் வாழ்வின் மறக்க முடியாத கணம் அது.

முற்றிலும் ஏழு எட்டு மாதங்களே ஆன மழலைகள் பின்னணி கொண்ட கதைகளைத் தொகுத்தேன். ‘இருவர் எழுதிய கவிதை.‘ முதுமையின் பிரச்னைகளைச் சுற்றிப் படர்ந்த சிறுகதைகள், ‘இரண்டாயிரம் காலத்துப் பயிர்.‘ இரவு என்பதைப் பாத்திரமாக்கிய கதைகள் ‘காலம் விரித்த குடை.‘ முற்றிலும் பைத்தியக்காரர்களின் உலகமாக விவரணை கொண்டது ‘நாணல் பைத்தியம்.‘ விரல் நர்த்தனம், என்ற தொகுதியின் கதாநாயகர்கள் எல்லாருமே எழுத்தாளர்கள். விலங்குகளைச் சுற்றி வளரும் ‘அஃறிணை.‘ பஞ்ச பூதங்களை வணங்கி ‘பிரபஞ்ச பூதங்கள்.‘ புதுவை ஸ்ரீ அரவிந்தர் அன்னையை வணங்கி ஆசிரம வளாகத்துக் கதைகள் ‘பெண்கொற்றக்குடை.‘ சுவாரஸ்யமான முடிச்சுகள் கொண்ட ‘நன்றி ஓ ஹென்றி.‘

எனது மூத்த மகன் பிரசன்னாவின் திருமணத்தில் நான் பரிசாகத் தந்த தொகுதி ‘கைத்தலம் பற்ற.‘ திருமண வியூகத்தில் அமைந்த கதைகள்!
தற்போது கலைஞன் பதிப்பகத்தில் முற்றும் அரூப அம்சங்களை முன்னிறுத்தி ‘இல்லாததாய் இருக்கிறது.‘ அதென்ன அரூபம்? சொல், என ஒரு கதை. நூலக வளாகத்தில் ஒரு பகுதியின் ஒரு அடுக்கில் ஒரு புத்தகத்தில் இருக்கும் ஒரு சொல், தன் வாசகனுக்காகக் காத்திருந்தது. இதுவே சொல் கதையின் ஒளிபெருகும் புள்ளி.
இவை தவிர பிற எழுத்தாளர்களை ஒன்று திரட்டி நான் தொகுத்த ‘ஜுகல்பந்தி.‘ இசைப் பின்னணியுடனான கதைகள். இரண்டாம் தமிழுக்கு முதல் தமிழின் வணக்கம். உணவு என்கிற அம்சத்தில், ஒரே குடைகீழ் அமைந்த கதைகள், ‘அமிர்தம்.‘ தற்போதைய முயற்சி ‘தருணம்.‘ வாழ்வின் மகத்தான சில தருணங்களை அடையாளப் படுத்தும் கதைகள்.

  1. சாகித்திய அகாதெமிக்காக தமிழாக்கம் செய்த நூல் பெற்ற வாசகர் வரவேற்பு குறித்துச் சொல்லுங்கள். படைப்புகளும் மொழியாக்கப் படைப்புகளும் ஒரே வரவேற்பைத்தான் பெறுகின்றனவா?
தெரியாது. பொதுவாக நல்ல வரவேற்புடன் என் படைப்புகள் வாசகர்களால் முன்கை நீட்டப் படுகின்றன. காரணம் எனது மொழநடை. மற்றும் தலைப்புகள். கதையை நோக்கி வாசகனை வசிகரிக்க தலைப்புகள் உதவ வேண்டும் என நான் நம்புகிறேன். ஒரு கதை மனசில் கருக் கொண்டதும் அதை மனசில் தங்கவைக்கவும், நினைவு கூரவும், அதை யோசனையில் மீட்டி ஆவர்த்தனம் செய்யம தலைப்பாய் அதை நான் நினைவு வைத்துக் கொள்கிறேன். தலைபேப் கதையின் உள்கனலை அடையாளப் படுத்த வேண்டும், என்பது எனது கனவு. என் சில தலைப்புகள். பிரசவ அறைக்கு வெளியே வலியுடன் ஆண்கள். பூமிக்குத் தலை சுற்றுகிறது. மன்மதனிடம் அம்புகள் தீர்ந்துவிட்டன. தோணியும் அந்தோணியும்.

மூலப் படைப்கள் போலவே மொழிபெயப்புகளும் ஒரு மொழிக்கு அவசியத் தேவை. மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியின் விஸதிரணத்தை விரித்துக் கொடுக்க வல்லது. குறிப்பாக இலக்கிய வளர்ச்சிக்கு அவை பெருந்துணை புரியும்.

  1. நீங்கள் வாசித்ததில் உங்களுக்குப் பிடித்த, தமிழாக்கம் செய்யப்பட்ட 5 புத்தகங்கள் மற்றும் 5 படைப்பாளிகள் குறித்துப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அப்படியெல்லாம் யோசிக்க சிரமம். காரணம் ஒருவரைச் சொல்லி, ஒருவரை விட நேரலாம். நாலுக்குப் பின் ஆள் தேட ஆரம்பிக்கலாம். எளிய கிராமத்து இளைஞனான என்னை உலக இலக்கியம் நோக்கி நகர்த்தி வந்தது எங்கள் ஸ்ரீவைகுண்டத்து நூலகத்தில் நான் வாசித்த மொழிபெயர்ப்பு நூல்கள்தான். ஜாக் லண்டனின் கானகத்தின் குரல். ஹெமிங்வேயின் போரே நீ போ மற்றும் யாருக்காக மணியோசை? முத்து பதிப்பகம் என்று அந்தக் காலத்தில் அருமையான மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிட்டார்கள். மொழிபெயர்த்தது யார் என்றே இப்போது ஞாபகம் இல்லை. அப்போதும் ந்தப் பள்ளிக்கூட வயதில் அதை கவனித்திருக்க மாட்டேன்.

இப்போது நினைத்துப் பார்க்கையில் வசிலி சூக்ஷீனின் வாழ விருப்பம் அருமையான சிறுகதைத் தொகுதி. பூ. சோமசுந்தரம் மொழிபெயர்த்தது. தர்மராஜனின் மொழிபெயர்ப்பில் ஜான் ஸ்டீன்பெக்கின் நாவல் ‘நிலவு வந்து பாடுமோ‘ பிடிக்கும். பலமுறை வாசித்திருக்கிறேன். தி. ஜானகிராமனின் ‘குள்ளன்‘ மொழிபெயர்ப்பு ஆச்சர்யப்படுத்தியது. புக்கர் வாஷிங்டனின் ‘அடிமையின் மீட்சி‘ ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அற்புதமான புத்தகம். ம.ந.ராமசாமி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நோபல் பரிசு பெற்ற யோசே சரமாகோவின் போர்த்துக்கீசிய நாவல் ‘பார்வை தொலைத்தவர்கள்‘ அடுத்து தமிழில் வரப் போகிறது. நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.
தமிழில் தற்போது அளவுக்கு அதிகமான மொழிபெயர்ப்புகள் வருகிறதாகவே தோன்றுகிறது. அவற்றில் அநேகம் வாசிக்கவே முடியாதவை.
தவிரவும் மொழிபெயர்ப்பாளன் கொண்ட நோக்கம், குறிக்கோள் நபருக்கு நபர் மாறுபடுகிறது. அதனளவில் அந்தப் படைப்பும் தேர்வு செய்யப் படுகிறது. தற்போது அப்படியெல்லாமான கவனம் இருக்கிறதா? கைக்குக் கிடைத்ததையெல்லாம் யாராவது குமாஸ்தா அளவில் மொழிபெயர்த்து விட முடியுமா? இந்நிலை கவலை அளிக்கிறது.
காலந்தோறும் மொழிபெயர்ப்பு வேறு வேறு தேவைகளை வேண்டி நிற்கிறது. ஒரு காலத்தில் அந்த நிலப் பரப்பு, மக்களின் கலாச்சார விநோதங்களை அறிய மொழிபெயர்ப்பு ஒத்தாசை செய்தது. இப்போது இது வீடியோ யுகம். இன்றைய மொழிபெயர்ப்புத் தேவை மாறியுள்ளது.

என் மொழிபெயர்ப்பில் நான், மனித உணர்வுகள் எல்லா நாட்டிலும் ஒன்றுதான், என மானுடத்தை நோக்கி ஒரு படைப்பை எழுச்யுறச்செய்து காட்டச் செய்வதையே என் குறிக்கோளாக வைத்திருக்கிறேன். நான் தேர்வு செய்யும் படைப்புகளே அத்தகையயவையே.

உதாரணத்துக்கு, ஹெச். ஈ. பேட்ஸ் எழுதிய Go Lovely Rose. சிறுகதை. ஆங்கிலேயக் கதை. Dating என்று பெண் ஒரு வாலிபனைப் பார்க்கக் கிளம்பிப் போய்விடுகிறாள். அந்த ராத்திரி அவளது தந்த தூக்கம் இன்றித் தத்தளிக்கிறதுதான் கதை. உலகின் அத்தனை அப்பாக்களின் பிரதிநிதி அல்லவா அவர். ஆங்கிலேயராக இருந்தால் என்ன, இந்தியராக இருந்தால் தான் என்ன?

  1. வேறு மொழியிலிருந்து தமிழாக்கம் செய்வதில் வேறு தேசம் சார்ந்த, பெயர்கள் தமிழுக்கு உகந்தாற்போல் மாற்றுதல், வட்டார வழக்குச் சொற்கள் அல்லது தமிழுக்கு உகந்தாற்போன்று உரையாடல்களை மாற்றுதல்... இதில் படைப்பாளிக்கு சுதந்திரம் உள்ளதா...
அதில் ஒரு ரகசியம் இருக்கிறது மதுமிதா. கதாநாயகன்., நாயகி அதிகம் புழங்கும் நபர்களை லேசான தமிழ்வாசனையுடன் பயன்படுத்துவோம். Cakes and Ale சாமர்செட் மாம் எழுதிய நாவலை நான் தமிழில் தந்தேன். அதன் கதாநாயகன் Driffield. திரிஃபீல்ட் என அவரை நான் சுட்டுவேன். உள்ளே சிறு சிறு அவளில் வந்து போகும் பாத்திரங்களை ஆங்கில மோஸ்தர் கெடாமல் சொல்கையில், கதையில் வெளிநாட்டு அடையாளங்களும் கவனங் கொள்ளப் படும்.

என்றாலும் ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்றெல்லாம் ஆக்குவது கொஞ்சம் அதிகம் தான்!

உரையாடல்களில் நம்மூர் அடையாளங்கள் பாத்திரங்களோடு ஒரு நெருக்க உணர்வைத் தர வல்லவை. அப்படி அந்தப் பாத்திரங்கள் பேசாது, என்பது படிக்கிற வாசகனுக்குத் தெரியாத விஷயம் அல்ல. காரணம், ஓரளவு தாய்மொழியில் வாசிப்பு ருசி கண்ட பின்தான் அவன் மொழிபெயர்ப்புகளை வாசிக்க வருகிறான். அடுத்த விஷயம், மூலநூல் வாசிக்கக் கிடைக்காதவனுக்காகவே மொழிபெயர்ப்புகள் என நான் நம்புகிறேன். மூலநூல் கிடைத்தால் தயவுசெய்து மொழிபெயர்ப்பு வாசிக்க வேண்டாம்.
அந்த நாட்டுக் கலாச்சார அடிப்படையில் வரும் பழமொழிகள், வழக்குகள் தமிழில் நம் அடையாளங்களுடன் மாத்திரமே விளங்கிக் கொள்ள முடியும். இதில் அடிக்குறிப்புகள் உதவா. அது கதையின் உணர்ச்சிகளை மழுங்க அடித்து விடும். Hamlet without hamlet, என்ற பதப் பிரயோகத்தை, சிறிய கிராமம் ஒன்று, அதை ஹேம்லெட் என்பார்கள். அதன் அரசன். அவன் பெயர் ஹேம்லெட். அவன் இறந்து போனான். அதைத் தான் ஆசிரியர் ‘ஹேம்லெட் வித்தவ்ட் ஹேம்லெட்‘, என்கிறார்… என விளக்குவதை விட, சி. என். அண்ணாதுரை, ‘மணமகன் இல்லாத திருமணம் போல‘ என ஒற்றை வரியில் சொல்லி விடுகிறார்.

இந்த உதாரணம் பாருங்கள். ரோஜாவை விட சிறந்த மலர் வேறு இல்லை. இதை ஒரு கவிஞன் A rose is a rose is a rose, என்கிறான். இதை மேஜர் சுந்தரராஜன் பாணியில் மொழிபெயர்த்தால் என்ன ஆகும்?
மொழிபெயர்ப்பு என்பது டென்னிஸ் இரட்டையர் ஆட்டம் போல என்பேன். மூல ஆசிரியர் சர்விஸ் போட, ஒத்தாசையாக அடுத்தவர் அனுசரித்து விளையாட வேண்டும்.

13, மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்கள் சவால்கள் பற்றி…

முல்க் ராஜ் ஆனந்தின் ‘விடியல் முகம்‘ நான் சாகித்ய அகாதெமிக்காக மொழிபெயர்த்தேன். சீக்கியப் பின்னணி. ஆனால் மதம் மாற்றம் பெற்ற முஸ்லிம்கள் பற்றிய நாவல். சீக்கிய மொழி. இந்தி. உருது… என பல்வேறு மொழி வார்த்தைகள் அதில் கலந்து வந்தன. வட இந்திய மண் அதுவே நமக்குப் புதிது.  தவிர நாவல் நிகழும் கால கட்டம். சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலம். இறுதி சவால் இதை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் கொணர்வது. இதன் ஒவ்வொரு துறைக்கும் நான் உதவிக்காகப் பல்வேறு வித்தகர்களை அணுகி சந்தேக நிவர்த்தி பெற்றுச் செய்ய வேண்டி வந்தது. மகிழ்ச்சியான சவாலாகவே இவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும்.
அதன் உற்சாகமான பகுதி என்ன என்றால், பல்வேறு சூழ்நிலைகளில் தமிழுக்குப் புதிய வார்த்தைகளை உருவாக்க நாங்கள் முயல்வதே. Stretcher என்பதை ஒரு சமயம் நோயாளிக்கிடத்தி, என்று சொன்னேன். Shower என் பார்வையில் புள்ளிக்குழாய். Enlargement தமிழில் உருவோங்குதல். இப்படி நிறைய உதாரணங்கள், மகிழ்ச்சியான தருணங்கள்.

14. மொழிபெயர்ப்பில் நகைச்சுவையாக மாறிப்போன சொற்கள், வாக்கியங்கள் குறித்து ஏதும் ரசனை மிக்க வாசிப்பனுபவங்கள் உள்ளனவா?

ஐயோ. நிறைய இருக்கின்றன. He is a poor translator என்பதை ஒருவர்,  ஏழை மொழிபெயர்ப்பாளர் என்றார். ஒரு மருத்தவரின் lovable patient என்பதை விரும்பத்தக்க பொறுமைசாலி, என்று ஒருமுறை வாசித்தேன். தமிழில் வாசிக்கையிலேயே மூல ஆங்கிலம் விளங்கி விட்டது. Economic Cycle பொருளாதார மிதிவண்டி. பகிர முடியாதவை நிறைய.

15. பல்வேறு மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கங்கள் செய்யப்பட்ட படைப்புகள் அம்மொழியில் முக்கியத்துவம் பெற்றுள்ளனவா?

நிச்சயமாக. பெரியவரைப் பார்த்தால் பெருமாளையே பார்த்த மாதிரி, என்பார்கள். ஆங்கிலத்தில் வந்தால் அகிலத்தில் எல்லா மொழிகளிலும் தன்னால் பின்னால் அது வந்துவிடும். மூல ஆசிரியருடன் அமர்ந்து ஆங்கில மொழிபெயர்ப்புகள் அதிகம் செய்யப் படுகின்றன. அது எத்தனை பெரிய விஷயம்.

16. உங்கள் படைப்புகள் வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளனவே. அவை அந்த மொழிகளில் என்னென்ன மாதிரியான வரவேற்பைப் பெற்றுள்ளன?
இந்தி, ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி மொழிகளில் என் படைப்புகள் வந்திருக்கின்றன. சில சமயம் அந்தந்த மொழி வாசகர்களிடம் இருந்து கடிதம் வரும். எப்படி முகவரி கிடைத்தது தெரியாது. அதில் வாசகரின் புன்னகை இருப்பதாக நினைத்துக் கொள்வேன். திட்டியும் இருக்கலாம். எனக்கு வாசிக்கத் தெரியாது. மற்றபடி இந்த கொடுக்கல் வாங்கல் இந்தியாவில் அத்தனை சிறப்பாக இயங்குகிறதாகத் தெரியவில்லை. தமிழில் இருந்த ஆங்கிலத்துக்குப் போனாலே அதன் மதிப்பே தனிதான். அதற்கே இங்கே திண்டாட்டமான சூழ்நிலை தான்.
ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பதையே ஆயிரம் கிண்டல் செய்ய இருக்கிறது.. இதில் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு குமாஸ்தாக்கள் கிடைத்தால்? கிடைக்காதவரை கடவுள் கருணையுள்ளவர் என்றாகிறது.
Ph 97899 87842
Email storysankar@gmail.com


Comments

Popular posts from this blog