காலக்கனல்

எஸ்.சங்கரநாராயணன்

‘இலக்கிய வீதி’ இனியவன் மறைந்து போனார். ஜுலை இரண்டாம் நாள் இரவு அவருக்கு விடியவே இல்லை. எழுபதுகளின் இறுதி, எண்பது துவக்கத்தில் விநாயகநல்லூர் வேடந்தாங்கலில் இருந்து இலக்கியப் பறவைகளை வரவேற்று ஒன்றிணைக்கும் முயற்சியாக இலக்கிய வீதி பெரும் புகழுடன் விளங்கியது. இளம் எழுத்தாளர்களின் எழுச்சிப் பாசறை அது. அந்தப் பட்டறைவாசிகளில் நானும் ஒருவன். இது எனது பெருமை.

               இலக்கிய வீதி சார்பாக மாதம்தோறும் இளம் எழுத்தாளர் ஒருவரின் சிறுகதை தேர்வு செய்யப்பட்டு ஆண்டு இறுதியில் தனி சிறுகதைத் தொகுப்பாக வெளியாகும். ஐந்தாறு வருடங்கள் இப்படி தொகுப்பு நூல்கள் வெளிவந்தன. ஓரு வருடத்தில் என் கதையும் அதில் இடம் பெற்றது.

பிற்காலங்களில் சென்னை கம்பன் கழகத்தின் செயல்வீரராக அவர் சிரமேற்றுக் கொண்டார் என்றபோதிலும், தகுதிசால் இலக்கிய முகங்களுக்கு இலக்கிய வீதியின் ‘அன்னம்’ விருது மாதந்தோறும் வழங்கி மகிழ்ந்ததைக் குறிப்பிட வேண்டும். புதிய புதிய ஆற்றல்களைக் கண்டறிந்து ஊக்குவித்து பாராட்டி புன்னகையுடன் கௌரவிக்கும் பெரும் பண்பு அவரிடம் இருந்தது. சிலர் தம் வாழ்நாளெல்லாம் பிறர் நலமும் மகிழ்ச்சியுமே பேணி, அதைத் தம் வாழ்வின் கடமையாகக் கொண்டு வாழ்ந்துழ்ழ்ஙதஙத

.முடித்தும் விடுகிறார்கள். இனியவன் அவர்களில் முதலில் நினைவில் வந்து விடுகிறார்.

உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில் – என்பார் வள்ளுவர்.

 

மதுராந்தகத்தில் மாதாமாதம் இலக்கியக் கூட்டங்கள் நடத்துவார் இனியவன்.  பணி என்று எண்பதுகளில் நான் சென்னைக்கு இடம் பெயர்ந்தேன். தபால் தந்தித் துறையில் வேலை. கல்லூரி தாண்டும் போதே அப்போது எழுத்தில் ஒரு கிறுக்கு வந்திருந்தது. என்அடிப்படை குணமே நான்குபேர் ரசிக்கும்படியாகப் பேச வேண்டும் என்பதாக இருந்தது. எழுத்து உள்ளேயே கனல் போல மூச்சு விட்டுக்கொண்டு இருந்திருக்க வேண்டும். கல்லூரியில் இளநிலைப் பட்டம் முடிக்குமுன்னே சில கதைகள் வேறு பிரசுரம் ஆகி யிருந்தன. அப்போதே இலக்கிய வீதி இனியவனுக்குக் கடிதம் போட்டு இலக்கிய வீதி அமைப்பைப் பற்றி அறிந்து கொண்டேன்.

ஞாயிறு மாலைகளில் இலக்கியக் கூட்டங்கள் மதுராந்தகத்தில் ஒரு பள்ளிக்கூட வகுப்பறையில் நடத்துவார் இனியவன். அநேகமாக நான் கலந்து கொள்வேன். மதியம் மூன்று மணிக்கு ஆரம்பித்து ஆறு ஆறரை அளவில் முடியும் கூட்டங்கள்.

இளம் எழுத்தாளர்கள் உட்பட ஐம்பது பேர் அளவில் கூடுவோம். அப்போது முன்னணியில் இருக்கும் அநேக எழுத்தாளர்களை அங்கே மாதாந்திரக் கூட்டங்களின் சிறப்பு அழைப்பாளர்களாக சந்திக்க வாய்த்தது. பிரபலங்கள், பிரபலமாகப் போகும் மணம் மிக்க எழுத்ததாள மொட்டுகள் என கலவையான வாசக, எழுத்தாளக் கூட்டமாக பார்வையாளர்கள். அதில் நானும் உண்டு. எங்கள் பிரமைகளை அல்லது தன்முனைப்பை வளர்த்து விட்ட கூட்டங்கள் அவை.

சில சமயம் விமரிசனக் கூட்டங்கள் கூண்டில் ஏற்றி விசாணைக் கூட்டங்களாகி விடும். காரசாரமான விவாதங்கள். எல்லாம் ஆறு ஆறரைக்கு அடங்கியாக வேண்டும். மதுராந்தகத்துக்குப் பக்கத்துப் பக்க்த்து ஊர்களில் இருந்தெல்லாம் வந்திருப்போம். நான் சென்னை திரும்ப வேண்டும். இலக்கியத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

துடிப்பான இளைஞர் கூட்டம் அது. அந்த இளமை துள்ளும் வயதில் எனக்கு அப்படி அது இணக்கமாய் அமைந்தது. என் கழுத்து சற்று அதிக நிமிர்வாய் என் முகத்தைத் தூக்கிப் பிடித்த பிரமை இருந்த காலம். நாம கதை எழுத வந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. இன்னமும் இந்த சமுதாயத்தில் மாற்றம் எதையும காணவில்லை. அது ஏன் என்று புரியாக ஆத்திரமும் அலுப்புமாய் இருந்தது.

நான் மாத்திரம் அல்ல எங்கள் கூட்டத்துக்கே அப்படியொரு மிதப்பு இருந்தது. இதில் ஜெயந்தனின் இரு புத்தகங்களை நான் அரங்கேறி விமரிசனம் செய்து கெட்ட பெர் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சி யடைந்தேன். ஒரு நபரைச் சீண்டினால் பதிலுக்கு அவரிடம் இப்படி எதாவது வாங்கிக் கொண்டால்தான் நமக்கே திருப்தியாய் இருக்கும்.

எங்கள் குழுமத்தில் வெங்கடேச ரவி, தாரா பாரதி போன்ற கவிஞர்கள் இருந்தார்கள். அப்போதெல்லாம் அரசியல் தெறிக்கிற காரசாரமான கவிதைகளை மேடையில் ஒவ்வொரு வரியையும் ரெண்டு முறை சத்தமாய் வாசிக்க வேண்டியது நடைமுறை. சில பேர், யாரும் கை தட்டவில்லை என்று மூன்றாவது முறை கூட வாசிப்பது உண்டு.

கதை எழுத  வநத புதிது என்ற அளவில் எனக்கு என் கதைகளில் சில நகாசு வேலைகள் வைத்திருற்தேன்

அப்பா ரொம்ப ஒல்லி. அவர் கையில் கைத்தடி அவரைவிட குண்டாய், என எழுதுவேன்.

உலகத்தில் இந்திய கரன்சியின் மதிப்பு குறைந்துகொண்டே வந்தாலும் அந்த வீட்டில் அதன் மதிப்பு அதிகமாகி வந்தது.

வனஜா பார்க்க சுமாராய் இருந்தாள். வனஜா அலங்காரம் பண்ணிக் கொண்டாள். அப்போதும் அவள் சுமாராகவே இருந்தாள்.

சுத்து வட்டாரத்தில் அந்த ஆஸ்பத்திரி பிரபலமானது. பக்கத்து ஆஸ்பத்திரியில் கைவிட்ட கேசுகள் அங்கே வந்துதான் செத்துப் போகும்.

இவை எல்லாமே என் கல்லூரிப் பருவத்துக் கதைகள். இளமையின் மதமதப்பேறித் திரிந்த காலம். தெருவில் ஒரு கல் கிடந்தால் கூட வீடு வரை எத்திக்கொண்டே வரும் வயது. நான் மாத்திரம் அல்ல. இப்படி ஒரு குழுவாகவே இலக்கிய வீதி இருந்தது. லா.ச.ரா. எழுதுவார். “பிள்ளையா இது. அம்மான்னு  வந்து அடிவயித்துல பாய்ஞ்சு முட்டினா அடிவயிறே கலங்கறது…”

சிறுகதையாளர்கள் கவிஞர்கள் என இந்த தினவெடுத்த குழுவுக்கு என்று மாதாமாதம் மதுராந்தகத்துப் பள்ளியில் கூட்டம். அதில் புத்தக விமரிசனங்கள், பிரபல எழுத்தாளர்களுடன் சந்திப்புகள், உரையாடல்கள், விவாதங்கள். பெரும் சத்த களேபரங்கள். ஆனால் இதையெல்லாம் இனியவன் ரசித்திருக்க வேண்டும். எங்களை அவர் கடிந்து கொண்டதே இல்லை. எங்களையிட்டு அவர் முகம் சுளித்ததே இல்லை.

இன்னொரு விஷயம் கூட நினைவு வருகிறது. நான் புகுமுக  வகுப்பு (பியுசி) சேர்ந்தபோது, நாங்கள் எல்லாம் சுத்துவட்ட கிராமத்தில் இருந்து வந்தவர்கள் என நினைத்தாரோ என்னவோ, எங்கள் ஆங்கில ஆசிரியர் பெரும்பாலும் ஆங்கிலப் பாடத்தையே தமிழில் தான் நடத்துவார். அந்தக் காலத்தில் அதற்கு மேஜர் சுந்தரராஜன் பாணி என்று பெயர். அதாவது படம் பார்க்கிறவனுக்காக மேஜர் சுந்தரராஜன் “வேர் ஆர் யூ கோயிங்? எங்க போறே?” என்று கேட்பார்.

எங்கள் கல்லூரி ஆங்கில ஆசிரியரும் பாதி ஆங்கிலமும் பாதி தமிழும் கலந்து பேசுவார். பாடத்தை நடத்தி முடித்துவிட்டு, “எனி டவ்ட்? எதும் சந்தேகம் இருக்கா?” என்று கேட்டபோது நான் எழுந்துகொண்டு கேட்டேன்.

“சார் நீங்க எம்.ஏ. இங்கிலீஷ் தமிழ் மீடியமா?”

கிட்டத்தட்ட இலக்கிய வீதி குழு இளைஞர் கூட்டம் இப்படியேதான் தினவெடுத்துத் திரிந்தது. இலக்கியக் கூட்டங்கள் எங்களைக் கொம்பு சீவி விட்டாற் போல இருந்தது. நாங்களும் அப்படித்தான் நடந்து கொண்டோம். இனியவன் அதையெல்லாம் ரசித்திருக்கிறார். துள்ளுவதே இளமை என அவர் ஒரு புன்னகையுடன் புரிந்து கொண்டார்.

இலக்கிய வீதி சார்பில் ஒரு கவியரங்கம் நடந்தது. தாராபாரதி என்ற கவிஞரும் அதில் கவிதை  வாசித்தார். “வெறுங்கை என்பது மூடத்தனம் / உன் விரல்கள்  பத்தும் மூலதனம்” என்பது அவரது முத்திரைகளில் ஒன்று.

பேச்சாளர் குமரி அனந்தன் அந்தக் கவியரங்கத்துக்கு வந்திருந்தார். அப்போது அவர் அரசியலில் தத்தளிப்பாக இருந்தார். புதுக் கட்சி துவங்கி உடனே அதைக் கலைத்து விட்டர். அப்படியே காங்கிரசிலும் இணைந்து விட்டார். கீழே பார்வையாளராக அமமர்ந்திருந்த குமரி அனந்தனைப் பார்த்ததும் தாரா  பாரதி கவியரங்க மேடையில் கவிதையெடுப்பாய்ச் சொன்னார்.

“காலையில் ஒரு கட்சி

மதியத்தில் இன்னொன்று

மாலையில் ஒரு கட்சி

மறுபடியும் தாய்க் கட்சி”

 

மொத்தக் கூட்டமும் ஹோவென்று ஆர்ப்பரித்து கைதட்டி குமரி அனந்தனை வெளியேற்றியது மறக்க முடியாத அனுபவம்.

இளமைக் கொப்பளிப்பு.

 ஜெயந்தனின் இரு நூல்கள் (சம்மதங்கள், அரும்புகளை) பற்றி நான் விமரிசனம் செய்து பேசினேன். அதில் அலட்டலான போலி எ’ழுத்தாளர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது “இவர்கள் பேனாமினுக்கிகள்” என்று ’குறிப்பிட்டேன்.

அன்றைய நிகழ்ச்சியின் தலைமை டாக்டர் ஔவை நடராசன். சிறப்பு விருந்தினர் கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி. நிகழ்ச்சி முடிந்து டாக்டர் ஒளைவையுடன் காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தோம். எனது ‘பேனாமினுக்கிகள்’ என்கிற சொல்லாடல் ஔவையைக் கவர்ந்தது. எனது இளமையும் குறும்புகளும் அவருக்குப் பிடித்திருக்க வேண்டும்.

கடவுள் என்ற வாழ்வியல் அம்சத்தை நம்பாத வயது அது. அப்போது மாற்றிச் சொல்வதிலும் இளக்காரமாய் மறுத்துப் பேசுவதிலும் என்னில் திமிரான மயக்கம். போதை. திமிர். தினவு. உள்ளே கடல் ஆர்ப்பரித்தவாறே இருந்தது.

மனிதன் பிறந்தபின் கடவுள் பிறந்தார், என எழுதி யிருக்கிறேன். நாமார்க்கும் குடியல்லோம். சிவனை அஞ்சோம். தூணிலும் இல்லை. துரும்பிலும் இல்லை… என்றெல்லாம் எழுதி யிருக்கிறேன். அந்த இளமையின் கதுப்பு ருசியை எல்லாரும் ரசித்தார்கள். (என நினைக்கிறேன்.)

அந்த இளம் துள்ளலில், ‘இயேசுவின் சிலுவையை இறக்கி வையுங்கள்’ என நான் எழுதிய சிறுகதை தீபம் இலக்கிய இதழின் இருபதாண்டு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. அந்தக் கதையில் என் ஒரு  வரி. “அம்மா புதியாய் எந்த ஆண் எதிரில் வந்தாலும் இழுத்துப் போர்த்திக் கொண்டு அவனை அவமானப் ப டுத்துவாள்.” கவிஞர் வைரமுத்துவுக்குப் பிடித்த வரி இது.

ஒளவை என்னுள் அருவியாய் முட்டி மோதும் என் இளமையை ரசித்ததாகத்தான் தெரிகிறது. பிற்காலங்களில் அவரிடம் இதே என் பாணியை நிறையப் பகிர்ந்திருக்கிறேன். ஒருமுறை ஔவையிடம் “இளம் வயதில் கோபியர்களிடம் உடைகளைத் திருடிக் கொண்ட கண்ணன், திரௌபதிக்கு மானம் காக்க உடைகளை அளித்தான்” என்றேன். ஒளவை சிரித்துக் கொண்டே “அதை அப்படிச் சொல்லக் கூடாது.. உடைகளை இங்க வாங்கி அங்க கொடுத்தான்….னு சொல்லணும்” என்றார்.

ஜெயந்தனின் கூட்டம் முடிந்து காரில் ஒளவையும், நானும், கலைஞன் பதிப்பகம் மாசிலாமணியும் சென்னை திரும்புகிறோம். ஔவை மாசிலாமணியிடம் “பையன் நல்லா முன்னுக்கு வருவான். இவனது புத்தகம் நீங்க போடுங்க” என சிபாரிசு செய்த கணம் மறக்க முடியாதது. அதற்கு உடனே மாசிலாமணி தலையாட்டினார். “நீ ஒரு நாவல் எழுது தம்பி. நான் போடறேன்…” என எழுத எனக்கு ஊக்கமும் அளித்தார்.

ஒரு பொறி காட்டுத் தீ என வளர வைக்கப் பட்டாற் போல இருந்தது.

எனது முதல் நாவல் ‘நந்தவனத்துப் பறவைகள்’ என் எழுத்து வாசலை விரியத் திறந்தது. அதுவரை நான் பத்திரிகைகளில் அவ்வப்போது சிறுகதைகள் எழுதி வந்தேன். சில பிரசுரம் ஆகும். பல திரும்பி வரும். திடீரென்று மாசிலாமணி தந்த தெம்பில் ஒரு நாவல் எழுதி உடனே அது அச்சு வாகனம் ஏறியது நல்லூழ் என்றே கொள்ளலாம்.

அது அல்ல விஷயம்.

கல்லூரிக் காலத்தில் இருந்தே எழுத்து கிறுக்கு முற்றி நான் எழுத வந்தவன். என் அம்மா ஆனமட்டும் வேப்பிலை அடித்துப் பார்த்தார்கள். நான் அடங்கவே இல்லை. கடைசியில் அவர்கள் பயந்தபடியே ஆயிற்று. நான் கல்லூரி இளநிலை பட்டப் படிப்பில் தோற்றுப் போனேன்.

அதுவும் அல்ல விஷயம்.

எனது முதல் நாவல் ‘நந்தவனத்துப் பறவைகள்’ நான் இளநிலை பட்டப்படிப்பு தோற்றுப் போன அதே மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் படிப்பு மாணவர்களுக்கு நவீன இலக்கியப் பாடநூலானது. இந்த விசித்திரம் யாருக்கு வாய்க்கும்?

என் தாய்க்கு எப்படி இருக்கும், என புன்னகை செய்து கொண்ட நேரம் அது.

சர் ஐசக் நியூட்டனுக்கு அடுத்து எனக்குதான் இந்தப் பெருமை என நான் அடிக்கடி வியப்புடன் நினைத்துக் கொள்வது உண்டு. கணிதத்தில் கால்குலஸ் எனப்படும் ஒரு கிளைப் பிரிவை நியூட்டன் 1680ல் தான் கல்லூரி மாணவனாக இருந்தபோது கண்டுபிடித்தார். கல்லூரி வகுப்புகளின் போது அவர் மாணவனாக அமர பேராசிரியர்கள் பாடம் நடத்துவார்கள். மாலை கல்லூரி நேரம் முடிந்ததும் பேராசிரியர்கள் அமர அவர் மேடையேறி கால்குலஸ் நடத்துவார். எத்தனை பெருமையான விஷயம்.

இளநிலை பட்டப் படிப்பில் தேறாத நான். இரண்டாம் முயற்சியில்தான் தேறி வந்தேன். ஆனால் என் முதல் நாவல் அதே பல்கலைக் கழகத்தில் முதுநிலை மாணவர்கள் தற்கால இலக்கியமாகப் பயிலப் பட்டது வெற்றி வரலாறு. முதல் புத்தகம் எழுதி யிருந்தேன். மறுநாள் நான் பிரபலமாகி யிருந்தேன்… என்று ஆங்கிலத்தில் சிலரைப் பற்றிச் சொல்வார்கள்.

எழுத்து என்னை ஆள ஆரம்பித்திருந்தது. தற்போது நூறு புத்தகங்களைத் தாண்டியிருக்கிறேன். திரும்பிப் பார்த்தால் எனக்கே வியப்பு. நான் இலக்கிய வீதிக்காரன். எனது வம்புகள் அடங்கி விட்டன. பணியுமாம் என்றும் பெருமை, என்று வள்ளுவர் சொல்லி யிருக்கிறார்.

பிறந்த குழந்தைக்கு திருநீறு பூசி ஆசி வழங்கி என்னை உச்சி முகர்ந்திருக்கிறார் இனியவன். என் வேருக்கு நீரூற்றி வளர்த்தெடுத்தது தமிழ் உலகம். எனது ஞானகுரு இனியவன் தமது எண்பத்தி ஒன்றாம் வயதில் காலமானார். அவரது உடல் மருத்துவமனைக்கு தானமாக  வழங்கப் பட்டது.

எனது முதல் நாவல் ‘நந்தவனத்துப் பறவைகள்’ சென்னை எஸ்பினனேடு ஒய் எம் சி ஏ அரங்கில் சிறப்பாக வெளியிடப் பட்டது. ஔவை அவர்கள் தலைமை. இனியவனும் இருந்தார். அப்போது மேடையில் “எனது ஒவ்வொரு வெற்றி அடிக்குப்  பின்னும் இனியவன் இருக்கிறார். இன்னும்  பல வெற்றிகளும் எனக்கு அமையும். காரணம் என்னுடன் இனியவன் எப்போதும் இருப்பார்” என்று கூறினேன்.

இனியவன் என்கிற எங்கள் ஆலமரம் சரிந்து விட்டது. என்றாலும்  வளர்ந்து சிறந்தோங்கி நின்ற ஆலமரம். அவரது வாழ்க்கையே நமக்கு வழிகாட்டிச் செல்லும். இனியவன் விட்டுச் சென்ற இலக்கியப் பணிகளைத் தொடர வேண்டும். அதன் ஒரு பகுதியாக அவரது நினைவைப் போற்றும் விதமாக ஒரு சிறுகதைப் போட்டி அறிவிக்கிறேன். விவரங்களைத் தனியே தெரிவித்திருக்கிறேன்.

தமது பிந்தைய காலங்களில் இனியவன் தொண்டையில் இருந்து குரல் எழும்பாமல் மௌனமாகிப் போனார். எப்போது நான் அவரைப் போய்ச் சந்தித்தாலும் விவரங்களை, விசாரிப்புகளை எழுதிக் காட்டுவார். சதா எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்கப் பழகிய எழுத்தாள மனது. சாளரங்கள் அடைபட்டுப் போனாப்போல தனிமைக்குள் தள்ளப் பட்டார் என்று தோன்றுகிறது. சில வருடங்களாகவே அவர் பேசுவதே இல்லை என்று ஆகியிருந்தது.

என்னைப் போன்ற நூறு எழுத்தாளர்களை உருவாக்கி யிருக்கிறது இலக்கிய வீதி. இனியவன் போன்றவர்கள் பிறக்கிறார்கள். இறப்பதே இல்லை.

•••

Comments

Popular posts from this blog