(நன்றி பேசும்புதிய சக்தி, டிச.
2017)
எஸ். சங்கரநாராயணன்
சிறிய ரயில்
நிலையம். நிலையத்துக்கு இடதும் வலதுமாக பூனை மீசை போல தண்டவாளங்கள் போகின்றன. ஊருக்கு
வெளியே இருந்தது நிலையம். தண்ணி கஷ்டமான ஊர். சனங்கள் ஊரில் இருந்து இடுப்பில் ஒரு
குடமும், குஸ்திக்காரன் போல் கையை உள்ளே விட்டபடி எடுத்து வரும் குடங்களுமாக வருவார்கள்.
தினசரி ரெண்டு லோக்கல் பாசஞ்சர் ரயில்கள் வரும் அங்கே. மத்தபடி மகா அமைதி. மதுரை போகிற
ரயில்கள் அங்கே நிற்காது. கடன் கொடுத்தவனைப் பார்த்தாப் போல ஒரே ஓட்டமாய் ஓடும். பரந்த
செவ்வக வெளி அது. மல்லாக்கக் கிடத்ப்பட்ட ஏணியாய் தண்டவாளம். ரோடு போடும் கருங்கல்
குவித்துக் கிடத்தப் பட்டிருக்கும்.
பரந்த விஸ்தீரணத்தில்
சிமென்ட் எடுத்த நடைமேடை. பள்ளத்தில் ரயில் பாதை. பெரிய பெரிய வேப்ப மரங்கள் புளிய
மரங்கள் மகா நிழலளிக்கும் இடம். தாவரங்களை விட நிழல்கள் வேகமாக வளரவும் சுருங்கவும்
செய்கின்றன. ஆடுகள் மாடுகள் புல் மேய்ந்துவிட்டு அங்கே வந்து கால்பரப்பி அமரும். இடையன்
அவன்பாட்டுக்கு ஸ்டேஷனில் துண்டு விரித்துப் படுத்துக் கிடப்பான். மேற் கூரை தேவைப்படாத
ஸ்டேஷன். உருப்படாத வாலிபர்கள் அங்கே ஒதுக்குப் புறமாய் கல்லாட்டம் சூதாட்டம் ஆடுவார்கள்.
பொதுவாக ஆள் நடமாட்டம் என்று அதிகம் இராது.
வரும் ரயிலுக்கு,
போகும் ரயிலுக்கு என இரண்டு தண்டவாளப் பாதைகள், எக்ஸ்பிரஸ் ரயில் போக மூன்றாவது பாதை.
தவிர ஒரு எக்ஸ்ட்ரா தண்டவாளம் இருக்கிறது. ஷண்டிங் தண்டவாளம். அது மற்ற போக்குவரத்துத்
தண்டவாளத்துடன் தூரத்தில் ட்ராக் சேர்ந்து கொள்ளும். வண்டிப்பெட்டிகளை ஒதுக்கி அங்கே
போட்டு வைப்பார்கள். ஸ்டேஷனுக்கு இப்புறமும் அப்புறமும் ஒரு அம்பது மீட்டர் வரை இவை
இருந்தன. இந்த ஸ்டேஷனில் அந்தத் தனி தண்டவாளத்தில் ரயில்பெட்டி ஒன்று விட்டுவைக்கப்
பட்டிருந்தது.
ராமையா ஓய்வு
பெற்றுவிட்டார். உடலில் ஒரு கோளாறுமில்லை. அந்த நிமிர்வு கூன் போடக் கூட இல்லை. பேன்ட்
பிடிக்காது. எப்பவும் வேட்டி சட்டைதான். மணிக்கட்டில் பட்டன் போட்ட முழுக்கைச் சட்டையை
சிறிது உள் நகர்த்தி மணி பார்ப்பது அவரது தோரணை. அரசாங்க உத்தியோகம் தான். சற்று ஏமாளி.
சாதியைக் காட்டியும் திகிடு தத்தம் பண்ணியும் காக்கா பிடித்தும் காசு நகர்த்தியும்
அவனவன் விரும்பிய இடம் மாற்றல், பதவி உயர்வு என வாங்கிக் கொண்டான். அதெல்லாம் அவருக்கு
ஒப்பவில்லை. தெரியவும் தெரியாது. ஒரு மாதிரி அசடு என்று ஊரில் அவருக்கு நல்லபெயர்.
ராமையா, சரியான ஆமைய்யா அவரு, என்பார்கள்.
நெற்றி நிறைய
திருநீறு பூசிக் கொள்வார். நீறில்லா நெற்றி பாழ். தூங்கி யெழுந்ததும் மனசில் சிவ சிவா…
என முணுமுணுத்தபடி இழுத்துப் பூசிக் கொள்வார். உடம்புக்குச் சட்டை போல. நெற்றியில்
திருநீறு. பிரதோஷ சமயம் கோவிலுக்குப் போவார். ஓதுவார் பதிகம் பாடுகையில் கடவுளைப் பார்த்தபடி
பரவசப் படுவார். இதில் இந்தப் பதவியே, இதுவரை அவர் இதில் விக்னமில்லாமல் காலத்தை ஓட்டியதே
அந்த சிவ பெருமான் அருள், என நினைத்தார் ராமையா. தான் பிறந்ததே தெய்வ கடாட்சம் என நம்பினார்.
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா… என அப்பர் பாடியதை எண்ணி நெகிழ்ந்தார். பணி ஓய்வு
பெறும் நாளும் வந்து விடைபெற்றுக் கொண்டார்.
அலுவலகத்தில்
வேலை என்று எதையாவது, இல்லாவிட்டாலும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தார் அவர். அடிக்கடி
மணிக்கட்டில் மணி பார்ப்பதே வேலை தானே. யாரிடமும் அதிகம் பேசும் பழக்கம் இல்லை. தேவைக்கு
குறைவாகப் பேசுவார். இரு காதால் கேட்க வேண்டும். ஒரு வாயால் பேச வேண்டும். அவர் வரை
வந்த அத்தனை பொன் மொழிகளையும் ஞாபகம் வைத்துக் கொண்டு அதன்படி நடக்க முயன்றார். கற்றபின்
நிற்க வேண்டும். வள்ளுவர் சொன்னாரா இல்லையா? ஆனால் சரியா படிக்காதவனை வாத்தியார் வகுப்புக்கு
வெளியே நிறுத்துகிறார் என்பது வேறு கதை.
இந்த வாழ்க்கை
நிலையற்றது. இகவுலகம் முக்கியம் இல்லை. பரவுலகம்… சொர்க்கபுரி அதை அடைய ஆத்மா முயற்சி
செய்ய வேண்டும். கதா காலட்சேபங்களில் எல்லாம் போய் உட்கார்ந்து முழுக்கக் கேட்டார்
ராமையா. அவர்கள் சொன்ன நகைச்சுவையை திடீர் திடீரென்று நினைத்துச் சிரிப்பு வரும் அவருக்கு.
(வீட்டுக்கு வந்த விருந்தாளி கிட்ட சில பேர் “இன்னிக்கு எங்க வீட்ல விரதம்” அப்டிம்பான்.)
வாரியார், கீரன் கேட்பார். இரா. கணபதியின் ‘தெய்வத்தின் குரல்‘ வீட்டில். வாங்கி வைத்திருக்கிறார்.
படிக்க வேண்டும். எப்போது படிப்பார் தெரியாது.
கோவிலுக்குப்
போவது, கதா காலட்சேபம் கேட்பது… இப்படி இல்லாத வேலைகளை இழுத்து விட்டுக்கொண்டும் ராமையாவுக்கு
நாள் மிச்சம் இருந்தது. பொழுது சண்டித்தனம் செய்யும் மாட்டைப் போல அப்படியே நின்றது.
அதிலும் ஓய்வு பெற்றபின் ரொம்ப சிக்கலாகி விட்டது. வேலையே இல்லை. மூச்சு விடுவது மாத்திரமே
அவர் செய்கிறதாகப் பட்டது. ஒரே பெண் அவருக்கு. மனைவி சிவ பதம் அடைந்தாயிற்று. சுமங்கலியாய்ப்
போய்ச்சேர கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவளுக்கு அந்த அதிர்ஷ்டம் இருந்ததாய் நினைத்தார்.
எல்லாம் அவன் செயல், நம்ம கைல என்ன இருக்கு? நாம எல்லாரும் பிறவிப் பெருங் கடலை நீந்திக்கிட்டிருக்கோம்.
பெண்ணுக்கு
ஒரு மகள். சிவதர்சினி. ரெண்டாம் வகுப்பு படிக்கிறாள். அவள் கண்கள் டார்ச் போல அபாரமாய்
இருக்கும். மகள் சுந்தரவல்லி நல்ல சுறுசுறுப்பு. வேலைக்கு எங்கேயும் போகவில்லை அவள்.
வாசலில் தொழுவம். பசு மாடு இருக்கிறது. ரெண்டு ரெண்டரை லிட்டர் கறக்கும். சனி செவ்வாயில்
வீட்டை பசுஞ் சாணத்தில் அவள் மெழுகுவாள். மாடு அந்த நெடிக்கு முகம் சுளிக்கலாம். அவள்தான்
பால் கறக்க வேண்டும். அவர் அதன் கிட்டேயே போக மாட்டார். நீல்லா ஒரு ஆளா, என்கிறாப்
போல அவரை அது ஒரு பார்வை பார்த்தது. பசு மாட்டுக்குக் கோபம் வருவது ஆச்சர்யமான விஷயம்
தான். அதற்கு ஒரு ஆம்பளை பயப்படுவது அதைவிட ஆச்சர்யம். பசும் பால் வியாபாரம் காலை மாலைகளில்.
அதற்கு 190 மில்லி, 490 மில்லி அளவைகள் வைத்திருக்கிறாள் சுந்தரவல்லி.
காலையில்
கிடுகிடுவென்று அவள் வேலை செய்வதைப் பார்க்க அதிசயமாய் இருக்கும். வேப்பங்குச்சி ஒடித்து
காலையில் பல் துலக்கும் போதே மாட்டுக்கு தீவனம் இருக்கிறதா என்று பார்ப்பாள். பசு அடுத்த
ஈனுக்குத் தயாராய் வயிறு பெருத்து நிற்பதை ஒரு திருப்தியுடன் பார்ப்பாள். ஏற்கனவே அது
ஈனி அடுத்த பசு மாடு தயாராகி வருகிறது. விரைவில் 950 மில்லி அளவை வாங்க நேரலாம். வீட்டில்
பசும் பால் காபி தான். குளித்து விட்டு தான் சமையல் கட்டுக்குள் புகுவாள். எதற்கு இந்த
அவசரம் என்று நினைப்பார். ஏழு ஏழரை மணிக்குள் அவள் கணவன் தொழிற்சாலைக்கு ஷிஃப்ட் டூட்டி
என்று பைக்கில் கிளம்ப டிபன் கட்டித் தர வேண்டும். ஆனால் எட்டரை, சிவதர்சினி பள்ளிக்கூடம்
போய்விட்டால் வீடு மகா அமைதியாகி விடும். அது என்னவோ தெய்வக் குத்தம் போல டி.வியைப்
போடுவாள் சுந்தரவல்லி. என்னவோ மூலிகை மருத்துவம்னு யாராவது தாடி வெச்சிக்கிட்டு பேசிக்
கிட்டிருப்பார்கள்.
ராமையா காலை
இள வெளிச்சத்துக்கு எழுந்துகொள்வார். தினசரி செய்தித்தாள் வாசிப்பார். வீட்டில் அவரைத்
தவிர செய்தித்தாள் வாசிப்பார் இல்லை. பேப்பரின் பயன் மாவு சலிக்க என்று சுந்தரவல்லி
நினைத்தாள். ஹோட்டலில் ஆர்டர் செய்த பேப்பர் ரோஸ்ட் போல காம்பவுண்டுக்குள் விழுந்து
கிடக்கும் பேப்பர். எடுத்துவந்து உள் திண்ணையில் அமர்ந்து கடமை போல் வாசிப்பார். ஒரு
முழு பக்கம் நகை விளம்பரம் போடறானுங்க. அவ்வளவு வியாபாரம் ஆவுதா? இதுல செய்கூலி இல்லை
சேதாரம் இல்லைன்றானுங்க. தங்கமாவது உண்டுமா?
அவருக்கு
அரசியலில் ஈடுபாடு என்று சொல்ல முடியாது. முதல் அமைச்சர் யார் தெரியும். மத்த அமைச்சர்கள்
யார் யார் தெரியாது. நீதிமன்றத்தில் தமிழை ஆட்சிமொழி யாக்குவோம், என முதல்வர் ஆவேசப்
பட்டால், இங்கிலீஷ் இருந்தா என்ன என்று தோன்றும். அந்தச் செய்தியைத் தாண்டி அடுத்த
பக்கம் திருப்புவார். துக்க செய்திகளுக்கு ச் கொட்டுவார் மனசுக்குள். எத்தனை விபத்து
நடக்குது இப்பல்லாம். கலிகாலம். வேறென்ன, என நினைப்பார். கணவனை அனுப்பி விட்டு எட்டு
மணி வாக்கில் அவருக்கு காபி தருவாள் மகள். ஆகா என்றிருக்கும். காபி குடித்தால் தான்
அன்றைய நாளே துவங்குது. ஆயே வருது… காபி என திண்ணையில் வைத்துவிட்டு பரபரப்பாய் உள்ளே
ஓடுவாள் சுந்தரவல்லி. தினசரி மஞ்சள் பூசிக் குளிப்பதில் அவள் கருத்த முகத்தில் பசுஞ்சாணப்
பொலிவு காணும். தலையில் துண்டுடன் வாயில் ஸ்லோகங்களுடன் அவள் வீட்டுக்குள் கபடி ஆடுவதாய்ப்
படும்.
அவள் அப்படி
பம்பரமாய்ச் சுழல ராமையா வெறும் பொம்மையாய் நின்றார் வீட்டில். வேலையே இல்லை. கொடுத்தாலும்
செய்யத் தெரியாது. பணி ஓய்வு வேறு பெற்றுவிட்டார். குழந்தையைக் கொண்டுவிடலாம் என்று
நினைத்தால், தாத்தா வேணாம், எதுவும் வாங்கித் தர மாட்டறார், என்கிறது குழந்தை. காய்கறி
மாதிரி, கடைக்குப் போய் வரும் வேலையும் இல்லை. சுந்தரவல்லி கணவனையே நம்ப மாட்டாள்.
இதுநாள் வரை இல்லாமல் புதிதாய் வேலை ஏற்படுத்திக் கொள்ள சிரமமாய் இருந்தது. தெருவில்
போய் நின்று போவோர் வருவோரிடம் நாலு வார்த்தை பேசவும் தெரியாது. எதிரே வரும் நபர் புன்னகை
செய்தாலே, நமக்கா, நம்ம பின்னால் யாருக்குமா, என்று திரும்பிப் பார்க்கிறார்.
பேப்பர்
படிச்சாச்சி என்றாலும் ராமையா யாரோடும் செய்தி பற்றி பேச மாட்டார். அலுவலகத்திலும்
ஊரிலும் அவருக்கு சிநேகிதாள் இல்லை. சிவன் கோவில் குருக்களிடமே கூட தலையை மாத்திரம்
ஆட்டுவார். சிவன் கோவில் அர்ச்சகர் ஒருநாள் ஜலதோஷம் என்று இன்ஹேலர் பயன்படுத்தியது
ராமையாவுக்குப் பிடிக்கவில்லை. அட அது சிவ லிங்கம்லா, என்று இருந்தது. என்றாலும் சொல்லவில்லை.
பக்தியும் நேர்மையும் வாழ்க்கையை ஒருமாதிரி தயக்கமாகவும் பயத்துடனுமே வாழ வைத்து விடுகிறது.
நாமார்க்கும் குடியல்லோம்… மனுசன் தூக்கத்தில் சொல்லிப் பிட்டாரா?
வீட்டில்
வேலையே கிடையாது. முன்னாலாவது டவுண் பஸ்சில் ஏறி மணி பார்த்தபடி உட்கார்ந்தால் இருபது
நிமிடத்தில் அலுவலக வாசலிலேயே இறங்கி உள்ளே போகலாம். இறங்கும்போதும் மணி பார்ப்பார்.
முதல் ஆளாய் அவர்தான். வருகைப் பதிவில் கையெழுத்து போட்டால் வேலை செய்தாப் போல. சில
ஆட்கள் மறுநாள் வந்து கையெழுத்து போட்டார்கள். இப்போது ஊரை விட்டே வெளியே போக வேலை
இல்லாமலாச்சி. இந்த நேரக் கொடுமை தாள முயலாமல் ஆயிற்று.
போகாத பொழுதை
என்ன செய்ய. காலை மாலை இரண்டு வேளையும் நடைப்பயிற்சி என வழக்கம் வைத்துக் கொண்டார்
அவர். ஊர் ஆடுகள் மாடுகள் கால் போனபடி அலைந்து திரிகின்றன. நிழல் கண்ட இடம் ஒதுங்கி
அமர்ந்து ஓய்வு கொள்கின்றன. ஒரு மாலையில் பிரதோஷம் முடிந்து கோவிலை விட்டு நேரே வீடு
திரும்பாமல் இப்படி காலாற நடப்போமே என நினைத்தார். நண்பர்கள் என்று யார் வீட்டுக்கும்
அவர் போனது கிடையாது. காலை வீசி நடந்தார். முழுக்கைச் சட்டை மணிக்கட்டு பகுதியை சற்று
பின் தள்ளி மணி பார்த்துக் கொண்டார். நீறு இல்லாமல் நெற்றி இல்லை. வாச் இல்லாமல் கை
இல்லை. ஊர் எல்லை தாண்டி ரயில்வே ஸ்டேஷன் வரை வந்தார். ஸ்டேஷன் கிட்டே வர வர, முதலில்
மாமிச வாடையும் பிறகு ஜிலு ஜிலுவென்று காற்றும் வந்தது. அவருக்கு இந்த நடை பிடித்திருந்தது.
ஆமைகளும் மீன்களும் கூட அமைதியான நேரம் நீரின் மேல் மட்டத்துக்கு வருகின்றன.
வாழ்க்கையில்
என்ன இருக்கிறது? ஒரு அர்த்தமும் இல்லை. மகளுக்கே இவள், அவர் மனைவி தான் மாப்பிள்ளை
பார்த்து கல்யாணம் பண்ணி வைத்தது. வீடு வாங்கி, மாடு வைத்துக்கொண்டு… அதெல்லாம் சுந்தரவல்லியின்
சாமர்த்தியம். அவரைத் தவிர எல்லாருமே எப்படியோ சாமர்த்தியமாய் வாழ்கிறார்கள். தனியே
பக்கத்துத் தெருவில் இருந்தவர், மனைவி இறந்ததும் மகளோடு வந்து சேர்ந்து கொண்டார். வேளை
தவறாமல் உணவு தந்து விடுகிறாள். காலைக்கு இட்லி. தோசை. உப்புமா… என எதாவது. ருசி தெரியாமல்
சாப்பிடுவார். ஊருக்குள் அவர் வீட்டுப்பக்கம் கேட்காத தேவாரம் அந்த வெளியில் கேட்டது.
மைக் செட் உண்டு கோவிலில். ஊர் எல்லையைத் தாண்ட தன்னைப் போல ரயில் நிலையம் வந்துவிடும்.
நிறையப் பேர் குடத்தில் நீர் பிடித்துப் போய்க் கொண்டிருந்தார்கள். சிலர் சைக்கிள்
ஸ்டாண்டில் கயிறு முடி போட்டு ரெண்டு பக்கமும் குடம் கட்டிவைத்து எடுத்துப் போனார்கள்.
நடுத் தெருவில் மாடுகள் உட்கார்ந்திருந்தன. ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி காய்கறி மார்க்கெட்.
அதிகாலையில் அங்கே வியாபாரம் களை கட்டி பரபரத்துக் கிடக்கும். ஒரு சந்து காய்கறி. ஒரு
சந்து மீனும் கோழியும் ஆடும் விற்பார்கள். மூக்கைப் பிடித்துக் கொண்டு தாண்டிப் போனார்.
ரயில்வே.ஸ்டேஷனில்
முதல் முதலாக அந்த ரயில்பெட்டியைப் பார்த்தார் ராமையா. பள்ளிக்கு லேட்டா வந்த மாணவனை
கேட்டுக்கு வெளியே நிறுத்திவைத்தாப் போல தனியே நின்றிருந்தது அந்த ரயில்பெட்டி. ஸ்டேஷன்
தாண்டி ஓரத் தண்டவாளத்தில் தனியே நின்றிருந்தது அது. கிட்டே போய் நின்றார் அவர். தரையில்
இருந்து அந்த உயரம் ஏற முடியாது அவரால். கற் குவியலுக்குள் தண்டவாளம். குறுக்கே ரீப்பர்
கட்டைகள். ரயில்பெட்டி பெரிய கோவில்யானை போல இருந்தது. அவருக்கு நினைவு தெரிந்த நாளில்
இருந்தே அது அங்கே தான் நிற்கிறது என நினைத்துக் கொண்டார் அவர்.
இதுநாள்
வ5ரை இல்லாமல் இப்போது தான் நான் அதை இத்தனை விஸ்தாரமாகப் பார்க்கிறேன், என நினைத்தார்.
யாரும் கவனிக்காமல் தனியே இப்படி அநாதையாய் நிற்கிறது அது… அவருக்கு அது வருத்தம் அளிப்பதாக
இருந்தது. திரும்பி நடக்க ஆரம்பித்தார் வீட்டை நோக்கி. இனி காலையிலும் மாலையிலும் உலா
என நடை கிளம்பி அந்த ரயில்பெட்டி, அதை அடையாளமாய் வைத்துக் கொண்டு அது வரை வந்துவிட்டு
வீடு திரும்பலாம் என ஒரு பழக்கம் அன்று முதல் ஏற்பட்டது அவருக்கு.
இரவுகளில்
அந்த ரயில்பெட்டி ஞாபகம் கூட சில சமயம் வரும் அவருக்கு. ஒருநாள் நின்று நிதானமாய் அதை
ஒரு சுற்று சுற்றி வந்தார். ஒரு காலத்தில் உற்சாகமாய் எந்தெந்த ஊருக்கெல்லாம் அது போய்
வந்திருக்கும். சனங்கள் பரபரப்பாக அதில் ஏறி இறங்கி யிருப்பார்கள். கடைசியாக அது எந்த
ஊர் போனதோ. எப்படி இங்கே வந்தது. எப்படி இங்கே இந்தப் பெட்டியை மாத்திரம் ஒதுக்கி வைத்து
விட்டார்கள். இனி அது என்றைக்கு இந்த ஊரை விட்டுக் கிளம்பும்? கிளம்புமா? அதுவே தெரியவில்லை.
திடீரென்று அதனால் பயன் இல்லாமல் ஆகிப் போனது… எத்தனை பெரிய துக்கம் அது. அவருக்கு
அதை நினைக்கப் பாவமாய் இருந்தது.
இப்படி யாருக்கும்
வேண்டாதவனாய் ஆகிப் போய்விட்டதாக அது வருத்தப் படுகிறதா தெரியவில்லை. இறந்த காலம் நிகழ்
காலம் எதிர் காலம், என அதற்கு, முன்பு இருந்தன. இப்போது எல்லாவற்றையுமே அது இழந்திருந்தது.
காலமே அங்கே உறைந்து நின்று விட்டாப் போல. திகைத்து நிற்கிறது பெட்டி. அடாடா. பாவம்…
என வருத்தப் பட்டார். வாழ்க்கையில் எதையிட்டும் முனைப்போ பிடிப்போ இல்லாமல் கோவிலுக்கு
நேர்ந்துவிட்ட காளையாய் அவர் இருந்தார். ரயில்பெட்டி சார்ந்த நினைவுகள் இப்படி அவருள்
பொங்குவது அவருக்கே வியப்பாய் இருந்தது.
தன் வாழ்க்கையிலும்
எல்லா அலையுமே ஓய்ந்து தான் விட்டது, என நினைத்துக் கொணடார். முன்னமேயே அவர் ஒண்ணும்
பிறவிப் பெருங் கடல் எல்லாம் நீந்தினார் இல்லை. கரை ஓரமாய் ஒரு செம்பில் அள்ளி தலையில்
ஊற்றிக் கொண்டது தான். பணி ஓய்வு என்றான பின் அவரும் அப்படியே நீர்க் குட்டையாய்த்
தேங்கி விட்டார். தனித்து விடப்பட்ட ரயில்பெட்டி அவரேதான்… என்று தோன்றியது.
காதலுக்கு
தாஜ்மகாலாமே? அந்த ரயில்பெட்டி, அது தனிமையின் சின்னம் என நினைத்துக் கொண்டார். தினசரி
காலையிலும் மாலையிலும் அதைப் போய்ப் பார்த்து வருகிற மாதிரி அவர் நடைப் பயிற்சி வைத்துக்
கொண்டார். அவருக்கு மாத்திரமேயான உலகம் அது. அந்த அனுபவம் பூராவும் அவருக்கே சொந்தம்.
அதில் யாரும் பங்குபெற முடியாது. அவர்களுக்கு அது புரியவும் புரியாது. அவர் அதைப் புரிய
வைக்கவும் முடியாது.
என்னிக்காவது
ஒருநாள் அந்த ரயில்பெட்டி தேவைப்பட்டு அதை அந்த இடத்தை விட்டு அகற்றி விட்டால்?...
என்னால் அதைத் தாங்கிக்கொள்ள முடியுமா, என்று கூட நினைத்தார். தனது ஓர் அடையாளம் அது.
அந்த இடத்தில் அது நிற்பது அவர் மனதில் முழுசாகவே ஒரு சித்திரமாய்ப் பதிந்து போய் இருந்தது.
அதில் அந்தப் பெட்டி இல்லாமல் சித்திரம் ஏது? அந்தச் சித்திரத்துக்குத்தான் அர்த்தம்
ஏது? ஹா. ஹா. தினசரி அந்த ரயில்பெட்டி அங்கே இருக்கிறதா, என்று பார்க்கக் கூட காலையிலும்
மாலையிலும் நான் அங்கே போய் வருகிறேனா, என்றுகூட தன்னையே கேட்டுக் கொண்டார்.
அந்த ரயில்பெட்டியின்
கதவு ஒருநாள் உடைத்துத் திறக்கப் பட்டிருந்தது. இருட்டில் அதற்குள்ளே எட்டிப் பார்க்க
முடியவில்லை அவரால். யாராவது அதை உள்ளே பயன்படுத்துகிறார்களா தெரியவில்லை. பூட்டப்பட்டே
இதுநாள் வரை இருந்தது அது. அதைப் பயன்படுத்த என்று யாரோ முயற்சி செய்திருக்கவும் கூடும்.
காலையில் நல்ல வெளிச்சத்தில் அதை உள்ளே எட்டிப் பார்த்தார். உள்ளே யாரும் இல்லை.
அந்த ரயில்பெட்டி
இப்படி தன்னைப் பயன்படுத்துவதைப் பற்றி என்ன நினைக்கும் தெரியல்லை. ஒருவேளை இப்போது,
தான் பயன்பாட்டுக்கு வந்ததையிட்டு அதற்கு மகிழ்ச்சி வந்திருக்கவும் கூடும். இத்தனை
நாள் அதை உடைக்காமல் இருந்ததே பெரிய விஷயம் தான். யார் உடைத்திருப்பார்கள். ஒருநாள்
அதில் ஒருவன் படுத்துக் கிடப்பதைப் பார்த்தார் அவர். மீசையும் தாடியுமாய், அந்த ஊர்
ஆசாமி போல் தெரியவில்லை. எங்கே யிருந்து வந்தான். இங்கே என்ன செய்கிறான்… எங்கோ வெறித்தபடி
பீடி குடித்துக்கொண்டு, சொறிந்துகொண்டு படுத்துக் கிடந்தான். அவர் எட்டிப் பார்த்ததை
அவன் கவனிக்கவில்லை. அவன் யாரையுமே கவனிப்பதாக சட்டை செய்வதாக இல்லை. தனியே தவம் செய்யும்
அந்த ஒற்றை ரயில்பெட்டி. அதைப்போலவே அவன் தன் உலகில் மூழ்கிக் கிடந்தான்.
தனித்து
விடப்பட்ட அந்த ரயில்பெட்டி, அவனுக்கு அது ஒருவித அடையாளத்தைத் தந்ததோ என்னவோ… என நினைத்தார்.
எனக்கு என் வாழ்வின் இந்த தேங்கிய நிலை போலவே, அவன் வாழ்க்கையும் தேங்கிப் போயிருக்கலாம்.
அதில் ஏமாற்றங்கள். வலிகள், துக்கங்கள், இருக்கலாம். அவனே தனித்து பிரித்துக் கொண்டு
வந்திருக்கலாம். விரட்டப் பட்டிருக்கலாம். அவனே ஒதுங்கியும் இருக்கலாம். காயங்கள் சுமக்கிறானா
இவன், என்றிருந்தது. யாரோடும் அவன் பேசுவானா என்றே தெரியவில்லை. அவனைப் பார்க்கப் பாவமாய்
இருந்தது. என் நிலைமை அவனுக்கு மோசம் இல்லை. இந்த ரயில்பெட்டி? அதன் நிலைமையும் இவனுக்கு
மோசம் இல்லை தான்.
என் வாழ்க்கையிலும்
தான் என்ன அர்த்தம் இருக்கிறது? இனி புதிதாகவோ சுவாரஸ்யமாகவோ என்ன நிகழப் போகிறது?
விதி வந்தால் சாக வேண்டிதான். தனித்து நிற்கிறேன் இந்த ரயில்பெட்டி போல. ஒருவேளை எமன்
வந்து என்னை அழைத்துப் போகலாம். ஆனால் சாவு அது எப்படி எப்போது வரும். யாருக்குத் தெரியும்.
அதுவரை இந்த ஏமாற்றமான, புதுசாய் எதுவுமே நிகழாத இந்த வாழ்க்கையின் அலுப்பை என்ன செய்வது…
என நினைத்தார். நொடி நொடியாய் இந்த வாழ்க்கையை எப்படித் தள்ளிப் போவது? காலம் என் தோள்
மேல் ஏறி அழுத்திக் கொண்டிருக்கிறது. இந்த உலகில் நான் யாருக்குமே தேவைப்படவில்லை என்ற
துக்கம் பெரிய விஷயம் தான். இதுநாள் வரை அது அவருக்குத் தோன்றவே இல்லை. தெரியவே இல்லை.
காரணம் வேலை இருந்தது. அலுவலகம் போய் வந்தார். அவருக்கான அடையாளம் அது. அது போய்விட்டது.
இப்போது அவர் நிர்வாணப் படுத்தப் பட்டுவிட்டார். ஹா. என மணி பார்த்துக் கொண்டார்.
அன்றைக்கு
காலையில் செய்தித்தாள் வாசிக்கவே மனம் லயிக்கவில்லை. உலா கிளம்பும் போதே மனசை என்னவோ
செய்தது. ஏன் தெரியவில்லை. சிவ சிவா என்று திருநீறை அள்ளிப் பூசினார். மணி பார்த்துக்
கொண்டார், என்னவோ நேரப்படி செய்கிறாப் போல. நடையில் சிறு பரபரப்பு கண்டது. மார்க்கெட்
தாண்டும் போது சிறிது நெஞ்சைப் பிடித்து நின்றார். இப்படியே திரும்பி விடலாமா என்றுகூட
இருந்தது. பரவாயில்லை என நடந்தார். தனித்து விடப்பட்ட ரயில்பெட்டி, அது கிளம்பிப் போயிருந்தால்
கூட நல்லது என்று ஏனோ நினைத்தார். தூரத்திலேயே அது கண்ணில் பட்டது. அதுவரை நடக்கவே
கால்கள் பலமே இல்லாதது போல் இருந்தன.
ரயில்பெட்டி
அருகே வருகையிலேயே அவருக்குத் தெரிந்துவிட்டது. அவன், பெட்டிக்குள் படுத்துக் கிடப்பானே
அவன்தான் அது… தூக்கில் தொங்கி யிருந்தான். எப்படி இப்படி ஒரு முடிவு எடுத்தான். இந்த
ஏமாற்றமான வாழ்க்கையை, மாற்றமே இல்லாத துயர கரமான வாழ்க்கைக்கு விடுதலை தேடிக் கொண்டானா
அவன். தைரியமாய் தன் வாழ்க்கு ஒரு முடிவு எடுத்துக் கொண்டான் அவன். எப்போது தெரியவில்லை.
தானறியாமல் வாச் பார்த்தார். அவன் கழுத்தில் கயிறு இறுக்கி நீலம் பாரித்துக் கிடந்தது.
இரத்த நதி. இருந்த வலிப் பிரளயத்தில் கால்கள் வழியே மலமும் மூத்திரமாய்ப் பீய்ச்சி
யிருந்தான். மேலும் பார்க்க முடியாமல் சட்டெனத் திரும்பினார். உடல் நடுங்க நடுங்க வீடு
திரும்பினார். மீன் கடை தாண்டுகையில் வயிற்றைப் புரட்டி வாந்தி வந்தது. கோவிலில் இருந்து
மைக்கில் தேவாரம் கேட்டது. நாமார்க்கும் குடியல்லோம். ஓதுவாரின் பௌருஷக் குரலும் ஜால்ராத்
தாளமும் கேட்டன. நமனை அஞ்சோம்… என முணுமுணுத்தார்.
வீடு வரை
எப்படி வந்து சேர்ந்தார் அவருக்கே தெரியாது.
SUPER.. :-)
ReplyDelete