குறுந்தொகை
காட்சியும் மாட்சியும்
எஸ்.சங்கரநாராயணன்

ங்க இலக்கிய வரலாற்றில் பாடல்களைத் தொகுக்கும் முயற்சி, கடைச்சங்க காலத்தில் தோன்றிய எழுச்சி எனலாம். எட்டுத்தொகை, அகநாநூறு, புறநாநூறு என பாடல்களின் வரிக்கணக்கை வைத்துக் கொண்டு ஒழுங்கு செய்தார் எனக் கருத இடம் உண்டு. எட்டுத்தொகையில், குறுந்தொகைப் பாடல்கள் நான்கு முதல் எட்டு அடிகள் வரை அமைந்தவை. பிற தொகைநூல்களுள் அளவில் சிறியவை இவை.
தொகுக்கப்பட்ட பத்தொன்பது பாடல்கள், ஆசிரியர் பெயர் அறியப்படாமல், பாடலின் சிறப்பு தோன்ற புனைப்பெயரால் சுட்டப் பட்டன. குறுந்தொகைப் பாடல்களின் காலமும் வரைதற்கரியது, எனினும் கி.பி. மூன்றாம் áற்றாண்டுக்கு முற்பட்டவை எனவே வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.
குறுந்தொகைப் பாடல்கள் திணைக் குறிப்பும், பாடலில் பேசும் பாத்திரம் யார் என்பதறிவித்தும், காட்சிப்படுத்துமுகமான சிறு குறிப்பும் கொண்டு தொகுக்கப் பட்டுள்ளன. இக்குறிப்புகளால் பாடல்கள் மேலும் ஒளியூட்டப்பெற்றுத் திகழுகின்றன. குறுந்தொகைப் பாடல்கள் எல்லாமே உரையாடல் வகைமை கொண்டவை. தன்னெஞ்சோடாயினும் அவை கிளத்தல் வகையினவே.
இறைவாழ்த்தையும் இணைத்து நாநூற்றியொரு பாடல்கள் அமைந்த தொகைநூலாகக் குறுந்தொகை அமைகிறது. சமூக வாழ்க்கை சார்ந்தும், ஆண் பெண் உறவுகளை விவரணப் படுத்தியும், இயற்கையினைப் பாராட்டியும் பாடல்கள், திணையொழுங்குகளின் உத்தி நேர்த்தியுடன் சிறப்பான நுகர்வனுபவம் தரவல்லவை.
செம்புலப் பெயனீரார், எழுதிய 'யாயும் ஞாயும்' என்ற பாடல் உலகளாவிய புகழ்சுமந்து நிற்கிறது. பேராசிரியர் ஏ.கே.இராமனுசர் அந்தப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது, அதன் சிறப்புவமை, செம்புலப் பெயல் நீர் போல, அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே, என்கிற வெளிப்பாடு, வெளிநாட்டாரையும் மனங் கொள்ள வைத்து, அதையே தலைப்பாகக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கியப் படைப்புகள் தோன்றியதாக அறிகிறோம். தமிழின் பெருமை அது.
செம்புலப் பெயனீரார் பாடலுடன் குறுந்தொகைப் பாடல்களை வாழ்க்கைக் காட்சிப் படிமங்களாகத் தொகுத்து சம்பவ முறைப்படுத்தி தனிக் கதைபோலும் நாட்டியவடிவில் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. திணைப்பாங்குகளைப் புலப்படுத்தியும் தமிழின் தொல்லிலக்கணச் சிறப்புகளை எடுத்தியம்ப அவாவுற்றோம்.
யாயும் ஞாயும் யாராகியரோ, பாடலை ஏ.கே.ராமானுசர் கீழ்க்கண்டவாறு மொழிபெயர்க்கிறார்.
      What He Said
        What could my mother be
        to yours? What kin is my father
        to yours anyway? And how
        did you and I meet ever?
                But in love our hearts are as red
        earth and pouring rain:
        mingled beyond parting.               
               Cembulappeyani:ra:r (kurunthokai 40)
திணை - குறிஞ்சி / தலைவன் கூற்று
      யாயும் ஞாயும் யாராகியரோ
      எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
      யானும் நீயும் எவ்வழி அறிதும்
      செம்புலப் பெயல்நீர் போல
      அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே
என் தாயும் உன் தாயும் எவ்விதத்திலும் அறிந்தவர் இல்லை. என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவு கொண்டாருமிலர். நானும் நீயும் இதுவரைகாலம் ஒருவரை யொருவர் முன்னறிமுகம் எனவும் ஆயிலேம், எனினும் என்ன வியப்பு, நம் இருவருடைய இதயங்களும் சிவந்த நிலத்தில் பெய்த மழைநீர் எங்ஙனம் உருமாறி பிரித்தறிய வொண்ணாதபடி, மண்ணின் தன்மையை அடைந்து விடுமோ அதுபோல ஒன்று கலந்து விட்டன.

(குறுந்தொகைப் பாடல் எண் நாற்பது. ஆசிரியர் செம்புலப்பெயனீரார்.)
ராகம் சுத்தநாட்டை
2
கண்ணுங் கண்ணுங் கலந்ததால் அன்புடை நெஞ்சம் தாம் ஒன்றிணைந்த மெய்ம்மையில், தலைவி இரவில் உறங்கக் கொள்ளாமல் தவிக்கிறாள். இரவின் சிறு சிறு குறிப்புகளும் அவள் கவனத்தில் பதிகின்றன.
(பாடல் 138. திணை மருதம். தோழி கூற்று)
      கொன்னூர் துஞ்சினும் யாம் துஞ்சலமே
      எம்மில் அயலது ஏழில் உம்பர்
      மயிலடி இலைய மாக்குரல் நொச்சி
      அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
      மணிமருள் பூவின் பாடு நனி கேட்டே
 கொல்லன் அழிசி எழுதிய பாடல். குந்தளவராளி ராகத்தில் இசையமைப்பு பெறுகிறது.
பெருமை மிக்க ஊரோ உறங்கிக் கிடக்கிறது. என்னால் மட்டும் உறங்க முடியவில்லை. என் வீட்டுக்கு அருகே மயிலின் பாதத்தைப் போல இலையமைப்பு கொண்ட நொச்சியின் வரிசைமிக்க அழகான மெல்லிய கிளைகள் உதிர்க்கிற பூக்களின் சிற்றோசையும் என் காதில் துல்லியமாய்க் கேட்கிறது.
3
(பாடல் 113. மருதம். தோழிகூற்று)
தலைவியைக் காணாக் காதலன் தோழியிடம் தலைவியைச் சந்திக்கும் வகைமை பற்றி ஆவலுந்தப் பேசுகிறான். தலைவி கூந்தலுக்குச் சூடி மகிழ மலர்கள் நாடி, ஊரெல்லைத் தோட்டத்துக்கு வரும் வழக்கம் உள்ளவள், எனச் சொல்லி தோழி சந்திக்குமுகமன் தருகிறாள்.
      ஊர்க்கும் அணித்தே பொய்கை
      பொய்கைக்குச் சேய்த்தும் அன்றே
      சிறுகான் யாறே
      இரைதேர் வெண்குருகு அல்லது யாவதும்
      துன்னல் போகின்றால் பொழிலே யாம் எம்
      கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்
      ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே
நிரஞ்சனி ராகத்தில் பாடப்படும் இந்தப் பாடலின் ஆசிரியர் மாதீர்த்தன்.
ஊருக்கு எல்லைப் பக்கமான ஊற்று. அதன் சற்றே தூரமான சிறு காட்டாறு அறிவாய்தானே? அப்பக்கமாக இரையைத் தேடியலையும் கொக்கும் நாரையும் தவிர வேறு யாரும் நிச்சயம் வர மாட்டார்கள். ஆளரவம் எதுவும் இராது. அப்பக்கத்துப் பூங்காவில் எங்கள் கூந்தலுக்கு மணம் சேர்க்கிற செங்குவளை செங்கழுநீர் மலர்கள் கொய்ய, நாங்கள் தவறாமல் வருவோம். உன் தலைவியும் வருவள். நீங்கள் சந்திக்கலாம், என்கிறாள்.
4
இவ்வாறு கூடி மகிழ்ந்த காலத்தில் ஒரு சமயம் காதலி வராமல் போகவே அல்லறுகிறான் காதலன். அவளைக் காணாத பிரிவில் தவித்தேங்குகிறான். எங்ஙனமாயினும் அவளைச் சந்திக்க மனம் உந்த கொட்டும் மழையும் பாராது, சொட்டச் சொட்ட நனைந்தபடி, வலிய யானைபோல் தலைவி வீட்டு வாயிலில் வந்து நிற்கிறான். மலர் உதிர்ந்ததும் அறிகிற அளவில் பெருவிழிப்பு கொண்டவள் அல்லவா அவள். அவன் வந்து நிற்கிற ஓசையும், கொட்டும் மழையும் கேட்டு மனம் கலங்கினாள் தலைவி. எழுந்து சென்று அவனைப் பார்க்க உள்ளம் துடித்துப் பரபரக்கிறது. முடியவில்லை அவளால். அவளின் தாய் தூக்கத்திலும் அவளைப் பிரியாமல் கட்டித் தழுவிப் படுத்திருக்கிறாள்.
(பாடல் 161. குறிஞ்சித் திணை. தலைவி கூற்று. நக்கீரர் இயற்றியது.)
      பொழுதும் எல்லின்று பெயலும்,
      ஓவாது கழுது கண்பனிப்ப வீசும்,
      அதன்தலை புலிப்பல் தாலி புதல்வர்ப் புல்லி
      அன்னாய் என்னும் அன்னையும்,
      அன்னோ என்மலைந்தனன் கொல்,
      தானே தன்மலை ஆரம் நாறும் மார்பினன்,
      மாரி யானையின் வந்து நின்றனனே
வசந்தா ராகத்தில் ஒரு பாடல்.
பகல் பொழுது வீணாகி இரவே வந்து விட்டது. என் காதலனைக் காணவொழியவில்லை. அடாத மழையும் விடாத மழையுமாய் வெளியே கொட்டி முழக்குகிறது. அதுபோதாதென்று புலிப்பல் கட்டிய தாலியணிந்த என் தாய் அழுத்தமாய் என்னைக் கட்டிக் கொண்டு ''அம்மையே'' என விளித்துப் படுத்திருக்கிறாள். தன் மலையில் விளைந்த மலர்களை மாலைதொடுத்து அணிந்து வந்திருக்கும் தலைவன் வாயிலில் பெருமழையில் வந்து, நனைந்த யானையாய் நிற்கின்றான். என்னால் எழுந்து வர இயலவில்லை. என்ன நினைத்துக் கொள்வானோ அவன்?...
5
 பாடல் 171. திணை மருதம். தலைவி கூற்று.
 பூங்கணுத்திரையார் இயற்றியது ஹிந்தோள ராகத்துக்கு மயங்காதோர் யார்?.
      காணினி வாழி தோழி
      யாணர்க் கடும்புனல் அடைகரை
      நெடுங்கயத்து இட்ட
      மீன்வலை மாப்பட்டாஅங்கு
      இதுமற்று எவனோ நொதுமலர் தலையே.
காதலன் காணாத் தலைவி தன் இடத்தையே வேற்றிடமாக உணர்தலாயினள். தன் அயலாரையே தனக்கு ஒட்டாதவராய்க் கண்டனள். புது வெள்ளம் பாய்ந்து வரும் பேராறு. அதில் மீன்வலை இட்டபோது பெரு விலங்கு அகப்பட்டு விட்டது. நானே அப் பெரு விலங்கு. என் தவிப்பு அறியாமல் ஊரே கூடி என்னை வேடிக்கை பார்க்கிறாப் போல உணர்கிறேனடி தோழி...
6
தனிமையில் காமநோய் கண்டு பசலை பூத்த மேனியளான தலைவி கண்டு தோழி, ஊரறிந்து கொள்ளும் உன்னை. ஆகவே உன் காமம் பொறுத்துக் கொள் என வேண்டினள். பொறுக்கவொண்ணத் தவிப்பினாகித் தலைவி புலம்பலுற்றாள். ஆற்றாமையான் வாய்வெதும்பி யுரைக்கிறாள் வருமாறு.
(பாடல் 290. திணை நெய்தல். தலைவி கூற்று)
      காமம் தாங்குமதி என்போர்
      தாம் அஃது அறியலர் கொல்லோ
      அனைமது கையர்கொல்
      யாம் எம் காதலர் காணேம் ஆயின்
      செறிதுளி பெருகிய நெஞ்சமொடு
      பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல
      மெல்ல மெல்ல இல்லாகுதுமே
கல்பொருசிறுநுரையார் இயற்றியது. சாருகேசி ராகத்தில் வடிவமைக்கப் பட்டது.
காமத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும், எனப் பிறருக்குச் சொல்கிறவர்கள், அக் காமத்தின் தன்மையை அறிந்து வைத்திருக்கிறார்களா? அல்லது அவர்கள் அக்காமத்தைப் பொறுத்துக் கொள்ளும் வலிமை மிக்கவர்களா என்ன? யாம் எம் காதலரைக் காணாமல் பெருந்துயர் உற்றோம். பெருகியோடி வரும் வெள்ளத்தில் கல் இடைப்பட்டு, நீர்மோதியதால் உருவாகும் சிறு சிறு நுரைகள் மெல்ல அழிந்து விடுவது போல யாம் அழிவுற்றவராவோம்.
7
பொருளீட்டுமாறு வெளிப்போந்தனன் தலைவன். தனிமையில் உழலும் தலைவிக்கு. பொழுதுதப்பி வந்த கோடைமழை. அதன் இடியும் மின்னலுமான துன்பம் வாழ்வின் அல்லலை அதிகப் படுத்துவதாயிற்று.
பாலைத் திணையில் ஒரு பாடல். பாடல் எண் 216. தலைவி கூற்றாக, கச்சிப்பேட்டு காஞ்சிக் கொற்றன் தந்தது. ராகம் மதுவந்தி.
      அவரே,
      கேடு இல் விழுப் பொருள் தருமார் பாசிலை
      வாடா வள்ளிஅம் காடுஇறந் தோரே
      யானே,
      தோடுஆர் எல்வளை ஞெகிழ,
      நாளும் பாடுஅமை சேக்கையில் படர்கூர்ந்திசினே
      அன்னள் அளியள் என்னாது மாமழை
      இன்னும் பெய்ய முழங்கி
      மின்னும் தோழி என் இன்னுயிர் குறித்தே
தோழி, என் காதலரோ குற்றமற்ற பெரும் பொருள் திரட்டுவான் வேண்டி, வாடாத பசிய இலைகள் கொண்ட வள்ளிக் கொடி மண்டிய காட்டு வழி பெயர்ந்தோராயினர். யான் இங்கே இக்கட்டில், இக்கட்டிலில் உறங்கக் கொள்ளாமல் தத்தளிக்கிறவள் ஆயினேன். என் துன்பம் பாராட்டாமல், என் மீது இரக்கங் காட்டாமல் மின்னலும் இடியுமாய்க் கொட்டி முழக்குகிறது மழை. என் உயிர் துடிக்கத் துடிக்க அது பெய்தவாறிருக்கிறது....
8
பொழுதுகள் உருள நற்காலம் என உண்டாகாமலும் இருக்குமோ? காதலன் வரவைப் பாணன் ஒருவன் வந்து அறிவிக்கிறான். மகிழ்ச்சி தாள முடியவில்லை தலைவிக்கு. கணவன் மீண்டதை அறிவித்த பாணர்க்குத் தன் நகரான பாடலிபுத்திரத்தையே பரிசாய்த் தரச் சித்தமானாள். நீ பார்த்தாயா? பார்த்தவர் வாய் அறிந்தாயா? என் உள்ளம் துடிக்கிறது, உண்மையைச் சொல்.
      நீ கண்டனையோ, கண்டார் கேட்டனையோ
      ஒன்று தெளிய, நசையினம் மொழிமோ
      வெண்கோட்டு யானை சோணை படியும்
      பொன்மலி பாடலி பெறீஇயர்
      யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே.
எழுபத்தியைந்தாம் பாடல். தலைவி கூற்றாக மருதத் திணையில், படுமரத்து மோசிகீரனார் எழுதியது. உற்சாகத்துக்குப் பேர்போன சுருட்டி ராகம். பலமான பரிசுப் பொருள்தான் அல்லவா? காதலர் பெரும்பொருள் திரட்டி வருகிறார் என இறும்பூது எய்தினள் போலும்!
நற்செய்தி கொணர்ந்தாய் பாணா. காதலர் வரவை விரைந்து வந்து சொன்னாய். எம் காதலரை நீயே பார்த்தாயா? அல்லது பார்த்தவர் சொல்லக் கேட்டு வந்து சொன்னாயா? தெளிவாகச் சொல் உண்மையை. ஆகா எப்பேர்ப்பட்ட செய்தி இது. வெண்தந்தங்கள் உடைய யானைகள் நடமாடும் சோணையாறும், பொன்னும் பொருளும் மிக்கதுமான இந்தப் பாடலிபுரத்தையே உனக்குப் பரிசாகத் தரலாம், உன் செய்தி அந்தப் பெரும் பரிசுக்குத் தகுதிசார்ந்ததே... எனக் களிகொண்டாடினள்.
9
பெரும் பொருள் ஈட்டி மீண்ட தலைவனும் தலைவியும் கடிமணம் கொண்டு வாழ்க்கைத் துணையாயினர். செல்வம் மிக்க அவர்கள் வாழ்வு இனிமை பயப்பதாய் இருந்தது. தனித்த நல்லிரவில் தலைவியைக் கூடிய காதலன் நயம்பல உரைத்து அவளை உடலாட்சி செய்தனன். மேலும் மேலும் அவள் மனம் உவக்குமுகமாக கற்பனை பலவும் கலந்து கொண்டாடி புகழ் மொழிகள் உகுத்தனன்.
பாடல் 2. இறையனார் உரைத்தது. குறிஞ்சித் திணையில் தலைவன் கூற்று.
      கொஞ்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
      காமம் செப்பாது கண்டது மோழிமோ
      பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
      செறிஎயிற்று அரிவை
      கூந்தலின் நறியவும் உளவோ
      நீ அறியும் பூவே
 ராகம் மாண்டு.
10
காதலர் இருவர் கருத்தொருமித்த இல்வாழ்க்கைப் பேணிய கதையை செவிலித்தாய் நற்றாய்க்கு மகிழ்ந்துரைத்தனள். மகளைப் பிரிந்து நீ வருந்தற்க. அவர்கள் மகிழ்ச்சிசோடு நலம்பாராட்டி மகிழ்கிற குடும்பக் காட்சியை நான் கண்ணாரக் கண்டு தெளிந்தேன்... என்றாள்.
அருமைக் காதலனுக்கு பெரு விருப்புடன், கவனம் சேர, உணவு படைத்தும் பரிமாறியும் அவன் பாராட்டைக் கேட்டு முகம் ஒளிர நிற்கிறதாயுமான உன் மகளைக் கண்டேன். கவலற்க நீயும்.
      முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
      கழுவுறு கலிங்கம் கழாது உடீஇக்
      குவளை உண்கண் குய்ப்புகை கழும
      தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
      இனிது எனக் கணவன் உண்டலின்
      நுண்ணிதின் மகிழ்ந்தன்று, ஒண்ணுதல் முகனே.
மத்யமாவதி ராகத்தில் அமையப் பெறுகிறது. கூடலூர் கிழார் பாடியது.
காந்தள் மலர் போலும் மென்மையான விரல்களால் கெட்டித் தயிர் விட்டுப் பிசைந்த எச்சிற் கையை, சுத்தமான தன் ஆடையையும் பொருட்படுத்தாது, வேலைகவனத்தில் அதிலேயே துடைத்துக் கொண்டாள் அவள். குவளை மலர் போலும் அவளது அழகிய கண்களில் சமையல் புகை படிந்திருந்தது. அதையும் உணர்ந்தாளில்லை. தான் வைத்த புளிக்குழம்பை தயிர்சோற்றில் ஊற்றி இனிது என மகிழ்ந்து தன் கணவன் உண்ணுவதைப் பார்த்ததுக்கொண்டே அவள் முகம் பூரிக்க நின்றாள்!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
---
பின்குறிப்பு

பத்து குறுந்தொகைப் பாடல்களை வரிசையிட்டு ஒரு கதை போல அமைத்த என் கற்பனை, ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சிக்கான இந்த எனது சொற்சித்திரம். அரங்கேறியது. பாடல்களுக்கு இசை - லஹரி. அவரே தமிழ் ஆசிரியர் என்பதால் மிகச் சிறப்பாக வார்த்தைகளைப் பொருள் புரிந்து பிரித்துக்காட்டி பாடகரைப் பாட வைத்தது அருமையான அனுபவம். இசையமைத்த பின், பாடல்கள் சபையேறுமுன், டாக்டர் ஔவை நடராசனார் அவர்களிடம் இசைத்துக் காட்டி அவரது ஒப்புதலும் மகிழ்ச்சியும் பெற்றோம்.
*
storysankar@gmail.com
91 97899 87842

Comments

Popular posts from this blog