art kamal koria
சீதை
எஸ். ஷங்கரநாராயணன்
அவன் பெயர்
மாரிமுத்து. அவனுக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தம் இல்லை. மாரிமுத்து ஓர் உழவன். ஆற்றுப்
பாசனம் பொய்த்த உழவன். எட்டு ஏக்கர் பூமி. இருக்கிற வயல்வெளியில் அவன் பங்கு அதிகம்
தான். பூமி வறண்டதால் வானம் வறண்டதா, வானம் வறண்டதால் பூமி வறண்டதா தெரியாது. மழை வரும்
வரும் என்று ரேஷன் கடை பாமாயிலுக்குப் போல காத்திருக்க வேண்டியதாகி விடுகிறது. அது
வந்தாமாதிரி வந்து ஒரேநாளில் தீர்ந்துவிட்டதாகச் சொல்லிவிடுகிறார்கள். சிறு தூறல்.
அத்தோடு வானம் கலைந்து விடுகிறது. பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை,
என்கிறாப் போல.
இனியும்
வானத்தை எவ்வளவு நம்புவது. வாய்க்காலை நம்பி இனி பிரயோசனம் இல்லை. நம்ம பேரைச் சொல்லி
மாநிலமும் மாநிலமும் அடித்துக்கொண்டு அரசியல் பண்ணுகிறார்கள். மொத்தத்தில் நமக்கு இனி
ஆற்றுப் பாசனம் இல்லை. மாரிமுத்து இருக்கிற நிலத்தில் கிணறு ஒன்று எடுக்க விரும்பினான்.
அதற்கும் வில்லங்கம் வரும் என்று எதிர்பார்க்கவேயில்லை.
ரெண்டாள்
ஆழம் தோண்டும்போதே ணங்கென்று சத்தம். மேலே கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்த மாரிமுத்துவுக்கே
அந்தச் சத்தம் கேட்டது. ணங்.
ஏய்
நிறுத்து, என்று கத்தினான் மாரிமுத்து. என்ன சத்தம் அது, என்று கேட்டான்.
தெர்லங்களே.
பார்த்து
கடப்பாரையைப் போடுறா. புதையல் கிதையல் இருக்கப் போவுது.
மெல்ல
மண்ணை நெகிழ்த்தி விலக்கிப் பார்த்த முகூர்த்த வேளையில், ஆகா அழகான சிலை. ஐம்பொன்.
விடிந்தும் விடியாத நேரம். பிரசவத்தில் வெளியான சிசு போல. வீறிட்டு சிசு அழுதபடி வெளியே
வரும். இங்கே சத்தமே இல்லை. சீதாப் பிராட்டியா இவள்? கொடிபோல் இடை சிறுத்த, மேலெடுப்பில்
தனம் பூரித்த அம்மன் நாச்சியார்.
ஏய்
கூட வில் கிடைக்குதா பாரப்பா!
லேசாய்
அவளுக்கு கண் கூசினாப் போலிருந்தது. வெளிச்ச பலூன் இன்னும் ஆகிருதி பெருக்கிக்கொள்ளாமல்
ஊருக்குள் புன்னகையுடன் நுழைகிற வாஸ்து வேளை அது. அவளுக்கு ஆச்சர்யத் திகைப்பு. இப்போது
எங்கே இருக்கிறேன், என்கிற குழப்பம். அதைவிட முக்கியம், இப்போது இப்படி விழிப்பு வந்தநிலையில்,
இதுநாள் வரை எங்கிருந்தேன் என்று தெரியாத குழப்பமே அதிகம் இருந்தது. மண்தொட்ட ஜில்லிப்பு
இந்நாட்களில், இத்தனை வருடங்களில், நூற்றாண்டுகளில் பழகியிருந்தது. சட்டென வெளியே காற்றின்
ஸ்பரிசத்துக்கு, தான் வந்தது புது அனுபவம்.
ஏல
பாத்துத் தூக்குங்கடா.
அந்த
மொழி, அது தமிழ்தான். ஆனால் அவள் கேட்டிராத புதிய குரலாக, புதிய உச்சரிப்பாக அது கேட்டது.
தமிழை வேறு மாதிரியாகக் கூடப் பேச முடியுமா, என்கிற முதல் திகைப்பு. கண்விழித் தாமரை
இன்னுமாய் விரியத் திறந்து ஆச்சர்யத்துடன் நாச்சியார் பார்த்தாள். ஆகா, இது பூலோகமா?
பூலோகந்தானா? ஆம் என்றாலும் இது பூலோகம் போல இல்லை. அவள் பார்த்த, புழங்கிய பூலோகம்
இது இல்லை.
அந்தக்
காற்றேயல்லவா புதுசாய் இருந்தது. அவளுக்கு உடம்பு லேசாய் சிலிர்த்து நடுங்கினாப் போலிருந்தது.
ஆமாம், கடைசியாய்... அந்த நடுக்கம். எல்லாரும் அலறியோடுகிறார்கள். கோவிலின் தூங்காவிளக்கு.
கோயில்யானை மணிபோல அது இங்கிருந்து அங்கே, அங்கிருந்து இங்கே ஆடுகிறது. சாளவாய் ஒழுகல்
போல விளக்குகளின் ஊஞ்சல் அசைவில் எண்ணெய் ததும்பிச் சிந்துகிறது. பெரும் குலுக்கல்
தான். கோவிலின் காண்டாமணி நீதி கேட்கும், மன்னனின் மண்டபவாயில் மணி போல தானே அடிக்க
ஆரம்பிக்கிறது. பக்தகோடிகள் கோவிலை விட்டு வெளியே ஓடுகிறார்கள் கூச்சல். குழப்பம்.
பரபரப்பு. பூகம்பம். மரங்களே நடுங்கின. பறவைகள் வில்லின் வாளிகளாய் விருட்டென காற்றில்
வீசினாப் போல எழும்பிப் பறக்கின்றன.
யாரது?
ஞானதேசிகன். அம்மா ஊருக்கே சோதனையா... எல்லாரும் கோவிலை விட்டு வெளியே ஓட, பட்டர்...
உள்ளே பாய்ந்தோடி வருகிறார். பெரும் குலுக்கல் தான். எட்டு வைத்த இடம் பிசகி தள்ளாடி
வருகிறார். பயம் இல்லை. அந்தக் கண்ணில் ஒரு வெறி. தீர்மான வெறி. நான் இருக்கேன் அம்மா.
பாய்ந்து நாச்சியாரை அப்படியே வாரியணைத்துக் கொள்கிறார். துளசி மணி மாலைகளை மீறி அவரது
களபம் பூசிய மார்பில் இருந்து சிறு வியர்வை நெடி. பரபரப்பாய் பதட்டமாய் இருந்தார்.
நிற்க நேரம் இல்லை. யோசிக்கவும் நேரம் இல்லை. நாச்சியாரை அணைத்தபடி அவர் கோவிலுக்கு
வெளியே ஓடுகிறார்.
மழை.
மழை என்றால் சன்ன மழை இல்லை. பேய்க்காற்று. ஊழிதான் இதுவா? ருத்ரமூர்த்தியின் நடனமா
இது, என்னும்படி மரங்கள் பேயாய் ஆடிக் குலுங்கின. உடம்பில் ஒரு சாட்டைபோல் மழை அடித்து,
உள்ளே குளிர் கத்தியென வெட்டியது. எங்கே ஓடுகிறார், அவருக்கே தெரியாது. எதோ சக்தி அவரை
இயக்கி முன்னே தள்ளிச் சென்றது. மூளை கால்களுக்கு வந்திருந்தது. ஓடு. ஓடு. ஓடிக் கொண்டேயிரு.
அவிழ்ந்த குடுமி. பித்துப் பிடித்த ஓட்டம். பத்து இருபது விநாடிக்கொருதரம் பூமி அசைவதை
நிறுத்தும். திரும்ப குலுங்கும். மண் கல் புதர் எதுவும் தெரியாமல் பட்டர் ஓடுகிறார்.
எதோ தடுக்கி... கல்லோ, கட்டியோ, யாரோ விழுந்து கிடக்கும் மனிதரோ, உடைந்து கிடக்கும்
மரக்கிளையோ, தட்டி அவர் விழுகிறார். அப்பவும் நாச்சியாரைப் பிரிய விடவில்லை. அவளைக்
காப்பாற்றிவிடும் ஆவேசத்தில் தன்னுயிர் துச்சமாகி விடுகிறது.
ஞானதேசிகன்
திடீரென்று பார்த்தார். நாச்சியார் தலைப்பக்கம் காயம். ஆ, என்ன இது ரத்தமா? பதறுகிறார்.
அது அவர்உடம்பில் இருந்து சிந்தியது என்பதே அவருக்குத் தெரியவில்லை. ஞானதேசிகன் அப்படியே
காற்று தள்ளியதில் விழுந்தார். அப்புறம் நடந்த விஷயங்கள் அவருக்குத் தெரியாது.
நாச்சியாருக்கும்
தெரியாது.
இந்த
இடம் எல்லாம் அப்ப எத்தனை செழிப்பாய்க் கிடந்தது. பூமி சிரித்த காலங்கள். கைநிறைந்த
வளையல் சிணுங்கல்களுடன் பிள்ளைத்தாய்ச்சி நடமாடினாற் போல காலம். பூமியில் மரங்கள் அல்ல,
விருட்ச ராஜாங்கம். தோப்பும் துரவுமாய் பாதையோரங்கள் கொப்பும் கிளையுமாய் நிழல் விரித்துக்
கிடந்தது. விருட்சப் பந்தல். கோவில் வாசலில் தேர் போல தோப்புகளில் விருட்சங்கள் நிமிர்வுடன்
நின்றன. சூரியன் உத்தரவு வாங்கிக்கொண்டு உள் நுழைந்த காலங்கள் அவை. பிறந்த குழந்தை
யானாலும், பெத்தவளும், அதன் அப்பனும், அதன் சிறு அழுகைக்கும் பதறி பரபரத்து, சிறு சிரிப்புக்கும்
புல்லரித்து புளகாங்கிதப் படுவது போல. பட்சி சூரியனுக்குக் குழந்தை போல.
அங்குசத்துக்கு
யானை கட்டுப்பட்டால், சூரியன் பட்சிகளுக்குக் கட்டுப்பட்டவனாய் இருந்தான். காலையில்
பட்சிகள் முன்னால் சூரியன் உத்தரவு கேட்டு நிற்பதும், ட்விட் ட்விட் என அவை உத்தரவு
வழங்கியபின், சூரியன் புக, விடியும் காலைகள்
எந்தக்
காலத்தியதோ, தெர்லங்களே.
ம்.
உடன்னே நம்ம தாசில்தாருக்குச் சொல்லணும்டா. யாரு கண்டா, இந்தப் பகுதியில் கோவில் கீவில்
கூட அடியில இருக்குதோ என்னமோ.
அவர்களை
விட அவளுக்குத்தான் திகைப்பு அதிகமாய் இருந்தது. அவளால் யூகிக்க முடியாத எதிர்காலத்துக்கு
அல்லவா எப்படியோ அவள் வந்து சேர்ந்திருந்தாள். எந்த வகையிலும், நிகழும் இறப்பும் காண,
எதிர்காலத்தில் ஒரு அபத்த வாசனை, அத்தனை ஒத்திசைவு இல்லாமல் தான் ஆகிவிடுகிறது.
எல்லாம்
புதுசாய்க் கூட அல்ல, புதிராய் அல்லவா ஆகிவிடுகிறது. இந்தப் பேச்சு, இந்த பாவனை, இந்த
உடை பாணியே கூட அவள் அறியாதது. என் நாட்டு மக்கள் புருஷர்களாயினும் ஸ்திரீகளாயினும்
தார் பாய்ச்சிக் கட்டினார்கள். நீள் கூந்தல் நடு வகிடு எடுத்து இரு பாலரும் குடுமி
போட்டார்கள். பெண்கள் தலையிலும், புருஷன்மாரானால் மார்பிலும் பூச்சரமோ, மாலையோ சூடினார்கள்.
அட
மனிதர்களே எத்தனை பேராகுருதியாய் இருந்தார்கள். அவளைக் கடைந்த ஆழ்வான், மலைபோல் இருந்தான்.
சொளகு போன்ற கரங்கள். மேடாய்ப் பொங்கிய புஜங்கள். பட்டறை உலையின் பெருமூச்சுகளுடன்
அவன் உலோகத்தை வாட்டுகையில் முகமெல்லாம் ஜ்வலிக்கும். காட்டெருமைக் கொம்புகளாய் இருபுறமும்
அரைவில் எடுத்த மீசை. தென்னம்பாளை போன்ற உறுதியான மார்பின் வியர்வை நதிகள், நடுவே பாலம்
போல் பூநூல். இந்த மனிதர்கள் வற்றி ஒடுங்கிப் போனார்களே என்றிருந்தது. தேகங்களில் இயற்கையாய்
இருந்த அந்த தேஜஸ், கட்டுமஸ்து, முறுக்கம்.
புலிக்கு
பூனை பிறந்தாப் போலிருந்தது.
கண்
கூசச் செய்கிறதாய் வெயில் உக்கிரமாகி யிருந்தது. யாரோ ஓடிப்போய் தேங்காய் பூ பழம் வாங்கி
வந்தார்கள். அப்படியே தேங்காய் உடைத்து நைவேத்தியம், கற்பூர ஆரத்தி. வயலிலேயே அழுக்கு
பாராட்டாமல் சாஷ்டாங்க நமஸ்காரம். மாரிமுத்து, நீ அதிர்ஷ்டக்காரண்டா. நாச்சியா அனுக்கிரகம்
உனக்கு பூரணமா கெடைச்சிருக்கு. எந்த ஜென்மத்துல புண்ணியம் பண்ணினாயோ.
என்ன
அற்புதக் கலை வடிவம்.
ஹா.
அருவத்தில் உருவத்தைக் கண்டுபிடித்து, உயிரையும் தேடியிருக்கிறான் ஒருவன்.
மாரிமுத்து
கைகட்டி நிற்கிறான்.
நான்
சாமானியன். இப்படி பெரிய விஷயம் எனக்கு நடந்தால் நான் என்ன செய்வது? என்னால் தாள முடியுமா
இதை. அவன் கால்கள் துவண்டன. பரவசத்தை விட பயமே பெரிதாய் இருந்தது அவனுக்கு. குடும்பத்தின்
நெருக்கடிகளிலோ, தொழில் சிக்கல்களிலோ அதிகபட்சம் அவன் கடவுளுக்கு என வேண்டிக்கொள்வதும்,
காரியம் சித்தியானால் போய் பிரார்த்தனையை நிறைவேற்றி வருவதுமாய் எளிய மனிதனே அவன்.
சில பிரார்த்தனைகள் உடனே நிறைவேற்ற முடியாமல் தள்ளிப் போய்விடுகின்றன. சரி, சாமி அதுவா
நம்மை எப்ப அழைச்சிக்குதோ பார்க்கலாம், என விட்டுவிட வேண்டியதாகி விடுகிறது. சில பிரார்த்தனைகள்
மறந்துகூட போகின்றன. வேறொரு சிக்கல் முளைக்கையில், அதை மறந்ததால் இது பிரச்னை, என்பதாக
மனம் கணக்கு பண்ணி அதை ஞாபகத்தில் கொண்டு வருகிறது. இப்போது நாச்சியார் திடுதிப்பென்று
அவன் வயலில் எழுந்தருளியிருப்பதை என்ன மாதிரியாய்க் கொண்டாடுவது என்று தெரியவில்லை.
நாம் இதை சரியாக அணுக வேண்டுமே என்ற கவலையே அவனை பெரிய அளவில் தள்ளாட்டியது.
ஐயோ
நாச்சியார் அம்மையே, என்னால் உன் இந்த சோதனையைத் தாங்க முடியலையே, என நினைக்கவே அழுகை
வந்தது.
ஊருக்கு
நல்ல காலம் பொறக்கப் போறது. அதான் நாச்சியாளே வந்து தர்சனம் தந்திருக்கா.
வெயிலுக்கு
இந்த உக்கிரம் இருக்கும் என்று நாச்சியார் அறியாள். நந்தவனத் தென்றல் கவரி வீசி வாழ்ந்தவள்
அவள். அக்காலங்களில் மரம் சூழாத வீடு உண்டா. மரம் அணிவகுக்காத வீதி உண்டா. தெருவோரப்
பூங்காக்கள். மர சமூகத்தில் கர்ப்பப் பைக்குள் போல இருந்தான் மனிதன். பாதுகாப்பாக.
தேரோடும் வீதிகளில் இரவில் உயர ஸ்தம்பங்களில் விளக்கு ஏற்றுவார்கள். இரவுக்கு தீபப்பொட்டு.
இயற்கை தானே பொட்டு வைத்துக் கொள்வதும் உண்டு. முழுநிலாக் காலங்கள் அற்புதமானவை. அப்படி
தினங்களில் கோவில் பிராகார மண்டபத்தில் பாட்டும் கூத்துமாய் விடிய விடிய கொண்டாட்டம்.
ஊருக்குள் இருள் நுழைய படுத்துறங்க உடம்பைச் சாத்திவிடும் ஜனங்கள் அரைத் தூக்கமும்
குறைத் தூக்கமுமாய் கூத்து பார்ப்பார்கள்.
எந்தக்
காலத்து விக்கிரகம் தெரியலையே.
முதலாம்,
இரண்டாம் என்று மன்னன் பெயர்கள் நாச்சியாருக்குப் புதியவை. விஷயங்களை விட இப்படி விவரங்களையும்
அடையாளங்களையும் தேடி மனிதன் இந்நாட்களில ஏன், எப்படி மாறிப்போனான். எல்லாம் தெரியும்
என்று சொல்ல ஆசை. எல்லாவற்றையும் வெளிப்படையாக்கு. ரகசியம் அற்று இரு. பிய்த்து வீசி
உண்மையை வெளிக்கொணர். வானத்தை சட்டைப் பைக்குள் அடைக்கிற ஆவேசம். அணுவைத் துளைத்து
ஏழ்கடலைப் புகட்டும் யத்தன மோகம். மூர்க்கம்.
யாராரோ
வந்தாப் போலிருக்கிறது. அரசு அதிகாரிகள். அவர்கள் வந்த வாகனம் புதியது அவளுக்கு. குதிரைகள்,
ஆநிரைகள் என்கிற குளம்படிகள் ஒழிந்த காலம், என்பதே ஆச்சரியம் தான். வாங்கக் குடம் நிறைக்கும்
வள்ளல் பெரும் பசுக்கள், சிறு பசுக்களாய், சொம்பு நிறைக்கிற காலமா இது. உழவு படுத்த
காலமா இது? உழவர் இன்று தொழுதுண்டு பின் செல்கிறார்கள். மழை பொய்த்த காலம். பெய்யென
மழை பெய்விக்கிற காலம் காலாவதி ஆகியிருந்தது. என்னாயிற்று. இயற்கையை இப்படி திசைதிருப்பி
விட்டவர் யார்? நாச்சியார் அழுதுவிடுவாளாய் இருந்தது. ஏன் நான் இப்போது இப்படி மீண்டும்
வந்தேன். மீண்டு வந்தேன்.
கையில்
வைத்திருக்கிற பூதக் கண்ணாடியால் விக்கிரகத்தை நெருக்கமாய் சோதிக்கிறார்கள். நரைத்த
தலையும், குறுந்தாடியுமாய் அவர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர். அந்தப் பகுதி ஜனங்கள் அவரையே
ஆர்வத்துடன் உற்றுப் பார்க்கிறார்கள். இந்த விக்கிரகத்தின் வயதை அவரால் சொல்ல முடியுமா?
இது எந்த மன்னனின் காலம் என்று அவரால் கணிக்க முடியுமா?
சார்,
கிணறெடுக்கலாம்னு நல்ல வாஸ்து நாள் பார்த்து நான் வயலைத் தோண்ட ஆரம்பிச்சனுங்க...
அவர்கள்
பேசும் மொழியில் எத்தனையோ விளங்காத வார்த்தைகள் இருந்தன. நாச்சியாருக்கு பல வார்த்தைகள்
புரியத்தான் இல்லை. பல பிரதேச மனிதர்களின் சங்கமத்தில் பல மொழிகள் ஊடறுத்து புழக்கத்துக்கு
என பல மொழிகளின் வார்த்தைகள் கலந்து முயங்குகின்றன. ஆனால் இந்தப் பிரதேச மக்கள் அந்நிய
மொழியின் வார்த்தைகளை தாங்களும் ஏன் கையாள ஆரம்பிக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.
நம்மிடம் இல்லாத சொற்கள் எனில் பரவாயில்லை. அந்நிய சொற்களை இப்படி சகஜமாக, அதாவது தன்னைப்போல
அனுமதிக்கிறார்கள்.
சேதி
மெல்ல காற்றுத் தீபோல பரவி எல்லை விரிகிறது. அடியே உனக்கு விஷயம் தெரியுமா? ஏண்டி நீ
கேள்விப்பட்டியா? (இல்ல, நான் கோவில்பட்டி.) உலை வாயை மூடலாம். ஊர் வாயை மூட முடியுமா?
அவளவள் அடுப்பில் கொதிக்கிற உலையை, விறகை இழுத்து அமர்த்திவிட்டு மாரிமுத்து வயலுக்கு
அணிவகுத்தார்கள். ஊர் சுவாரஸ்யத்துக்குக் காத்துக் கிடந்தது.
யார்
நீங்க?
தினத்தந்தி.
அவன்
பெட்டியில் இருந்து அட மின்னல் வெட்டியது. நாச்சியாருக்குக் கண் கூசியது. என்னதான்
நடக்கிறது இங்கே, என்று கண்ணைச் சுருக்கினாள் நாச்சியார். இடை சிறுத்த தனம் பெருத்த
நாச்சியார், வதங்கிய வெற்றிலையாய்த் தெரிந்த அந்தப் பெண்களையிட்டு இரக்கப் பட்டாள்.
தொடை வரை கால் வரை தொங்கும் கூந்தல் காலங்களை அவர்கள் அறிய மாட்டார்கள். உழைப்பு சார்ந்து
வாழ்க்கை வசதிகளை அவர்கள் மெத்தையாய்ச் சுருட்டி வைத்துவிட்டு வெளியே இறங்கியதாகத்
தெரிந்தது. கட்டாந் தரைப் படுக்கை. மெத்தையே அவர்கள் அறியார்.
வாஸ்தவத்தில்
கோவிலுக்குள் அவர்கள் அனுமதிக்கப் பட்டவர்களே அல்ல. பட்டும் பீதாம்பரமும் உடுத்திய
வணிகர்களும், பெருந் தனக்காரர்களும், பிராமணர்களும், அரசனுமே வந்துபோவதாய் இருத்து
அக்காலம். பூக்களாலும், கற்பூராதி வாசனை திரவியங்களாலும் கோவில் எப்பவும் மணத்துக்
கிடந்தது. வெளிப் பிராகார நந்தவனங்களின் காற்று நாய்களாய் உன்மத்தக் கிறுகிறுப்புடன்
சுற்றித் திரிவதாய் இருந்தது.
பாமர
ஜனங்களைப் பார்க்க வந்ததே நல் அனுபவமாய்த் தோன்றியது நாச்சியாருக்கு. இந்த உழைத்த உடம்பின்
வியர்வை நெடி, இதுவும் இயற்கை பூசிய நெடி தானே. நாம் இதற்கும் பழகிக்கொண்டு தானே ஆகவேண்டும்.
உழைப்பை அறிவிக்கிற இந்தப் புனித நீர் தீர்த்தமே அல்லவா?
புதிர்களைப்
போட்டபடி, புதிர்களை விடுவித்தபடி நகர்கிறது காலம். மாற்றங்களை கணந்தோறும் நிகழ்த்தியபடி
நகர்கிறது அது. சித்திரங்கள் கணந்தோறும் மாறுகின்றன. அதை அறிகிறவர்கள், உணர்கிறவர்கள்
பாக்கியவான்கள். இந்த உலகில் எதுவும் நிரந்தரம் அல்ல. சாஸ்வதம் அல்ல. எதுவும் அற்பமும்,
நிலையற்றதும் அல்ல. சில நம் கண்ணுக்கு முன்னே வருவதும், சில பின்தள்ளப் படுவதுமாய்
வேடிக்கைக் கிலுகிலுப்பை, நம்மைக் குழந்தையாய் ஆக்கி நமக்குக் காட்டுகிறது காலம்.
ஊரில்
தண்ணி இல்லை. வெயில் படு போடு போடுது. ஆறு குளம் வத்திட்டது. மழை பெய்வது அடியோடு குறைஞ்சிட்டது.
தாயே, நாங்க என்ன பண்ணுவது. நீ வந்திருக்கே... எங்களுக்கு என்னமாச்சிம் நல்லது பண்ணிட்டுப்
போ.
அதிகாரி
புன்னகை செய்து கொள்கிறார். திரும்பி கூட்டத்தில் நிற்கிற வேறொரு நபரிடம் பேச ஆரம்பிக்கிறார்.
இப்படித்தான் அம்பாசமுத்திரத்தில்...
எல்லாரிடமும்
கதைகள் கிளைக்க ஆரம்பித்த வேளை அது.
யாருப்பா
வயல் ஆளு?
நாந்தானுங்க,
என மாரிமுத்து முன்வருகிறான்.
நீ
சொன்னதை யெல்லாம் இந்த ஸ்டேட்மென்டுல எழுதியிருக்கோம். கையெழுத்து போடு...
ஐய
நான் கைநாட்டுங்க. விரல் ரேகை...
இப்ப
என்னய்யா பண்றது?
என்
பையன் படிச்சவன். அவன் போடுவான் என்சார்பா. படித்துக் காட்டப்பட்டதுன்னு எழுதிப்பிடுங்க.
உன்
பேர் என்னப்பா?
தம்பிதுரைங்க
சார்.
வெயிலின்
உக்கிரத்தில் ஜனங்களும் மெல்ல ஆர்வம் சுருங்குகிறார்கள். விக்கிரகத்தை நம்ம தாலுக்காபிஸ்
கொண்டுபோயி, வெச்சிறலாம். பிறகு முறைப்படி தொல்பொருள் ஆய்வில் இருந்து கடிதம் கொடுத்து
வாங்கிக்கட்டும், என்கிறார் அதிகாரி. அவர் பேசவே அலுப்பாய் உணர்ந்தார். உடம்பு ரீதியான
அநேக உபாதைகள் அவருக்கு இருந்தாப் போலிருந்தது. ஆனால் பேசினால் அதில் ஒரு அதிகார தொனியைப்
பிரயோகிக்க அவர் தவறவில்லை.
அந்தக்
கூட்டம் மெல்ல வழிவிடுவதாய் இருந்தது. ரெண்டு சாரியிலும் ஜனங்கள். விக்கிரகத்தை யாரோ
எடுத்து அணைத்துக் கொள்கிறார்கள். அவளுக்கு ஞானதேசிகன் ஞாபகம் வந்தது. அந்த ரெண்டு
சாரி ஜனங்கள் வழியே போகையில் தட்டுப்பட்ட அந்த முகம் வித்தியாசமாய் இருந்தது. அவளுக்கு
ஞாபகத்தில் இருந்தது அந்த முகம்.
முகமே
மயிர்ப்புதரான முகம். கண்ணில் அந்த ஆசை வெறி. அட இது இங்க இருக்கிற விவரம் தெரியாமப்
போச்சே... என்பதான ஆதங்கம் அது. காதுகளைத் தீட்டிக்கொண்டாள் நாச்சியார். அவள் எதிர்பார்த்தது
சரி. திரும்பி அவளால் அவனைப் பார்க்க முடியவில்லை. ஆனாலும் காதில் கேட்டது.
நல்ல
ஐம்பொன் சிலை. நான் தேடிட்டிருக்கேன்டா இதை. எப்படியும் கடத்தினால் லட்சத்துக்கு மேல
போகும்..
அன்றைய
ராத்திரி விசித்திரமாய் இருந்தது நாச்சியாருக்கு. அலுவலக அறையின் வாசனைகள் வேறு மாதிரி.
கோவிலின் கர்ப்பகிரகம் அல்ல இது. பழைய காகிதங்களின் நெடி இங்கே. வாசலில் பணியாள் ஒருவன்
தூக்கக் கலக்கத்துடன் உட்கார்ந்திருக்கிறான். பொழுது மெல்ல குளிர்ந்து, சூரியனில் இருந்து
மீண்டு இருட்டு சூழ்ந்துவிட்டது.
அந்தப்
பணியாள் திடீரென்று உள்ளே வந்து விளக்கைப் போடுகிறான். தாயே, என்னால் உன்னைக் கோவிலுக்குள்
வந்து கும்பிட முடியாது. நீயே என்னைத் தேடி வந்துவிட்டாய். அப்படியே விழுந்து வணங்கினான்
அவன். என் பொண்ணுக்கு வயசு 36 ஆயிட்டது. இன்னமும் கலியாணம் ஆகலை. நீதான் மனசு வெச்சி...
வெளி
வராந்தா விளக்குகள் தவிர வேறு வெளிச்சம் இல்லாத நிலை. சாத்தப்பட்ட கதவுகளிலும் ஜன்னல்களிலும்
நிறுத்தி வைத்த நூலாய் வெளிச்சம். உள்ளே கசிகிற வெளிச்சம். திடுதிப்பென்று கதவு மெல்ல
சத்தம் இல்லாமல் திறந்தது கேட்டது. அவள் தூங்கவில்லை. பணியாளா? இல்லை. அவன்... அந்தத்
திருடன். அவனை அவள் எதிர்பார்த்திருந்தாள். அவன் கண்ணின் அந்த வெறி, அது அவனை இங்கேவரை
இழுத்து வந்துவிடும் என்று நினைத்திருந்தாள்.
பணியாள்
எங்கே போனான் தெரியவில்லை. இவன் எப்படியோ அவனை ஏமாற்றிவிட்டு உள்ளே வந்திருக்கிறான்.
அப்படியே நாச்சியாரை அணைத்துத் தூக்கியபடி வெளியே அடிமேலடி வைத்து வந்தான். சுவர்க்
கடிகார ஒலிகளை விட மென்மையாய் அவன் நடந்துபோனான்.
கூட
யாரோ வெளியே காத்திருக்கிறார்கள்.
இப்பவே
வெளியே கொண்டுபோய் வித்தால், போலிஸ் உஷாராய் இருக்கும்டா. மாட்டிக்குவோம்...
அப்ப?
தோட்டத்தில்
கொஞ்சகாலம் இதைப் புதைச்சு வைக்கலாம். ஊர்ப் பரபரப்பு அடங்கியபிறகு வெளிய எடுத்தும்
போயி விக்கலாம்.
அவர்கள்
தோட்டப்பக்கமாய்ப் போனார்கள். இன்னுங் கொஞ்சகாலம் நிம்மதியாய் உறங்கலாமாய் இருந்தது
நாச்சியாருக்கு.
உறங்கட்டும் ... உறங்கட்டும் .
ReplyDelete