பொன்கூரை வேய்ந்த வானம்

எஸ்.சங்கரநாராயணன்

***

 ப்பா அலுவலகத்தில் இருந்து வந்து விட்டார். சந்திரசேகரன். மணி ஏழரை தாண்டி விட்டது. வெளியே போன பத்மராஜன் இன்னும் வீடு திரும்பவில்லை. அப்பா வந்தவுடன் அவனைத்தான் கேட்பார். பெற்றவளுக்குக் கவலையாய் இருந்தது. பிள்ளைக்கு ரெண்டுங் கெட்டான் வயது. பெற்றவர்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்துதான் போக வேண்டும். காலம் அப்படி. அத்தோடு, இந்தக்காலப் பிள்ளைகளுக்கு நம்மைவிட வெளி உலகம் தெரிகிறது… என நினைத்தாள் அவள். மைதிலி. அம்மா. பையனைப் பற்றி அத்தனை கோபிக்கிறார் இவர். “எல்லாம் நீ கொடுக்கிற இடம்…” என்பதாகக் கத்துகிறார். இவருக்கு ஏன் இத்தனை கோபம் வருகிறது தெரியவில்லை. அது தன் வார்த்தை மதிக்கப் படவில்லை என்கிற ஆத்திரம்.

எங்கே போகிறான், என்று அவனும் சொல்லிவிட்டுப் போகலாம். என்றாலும் தோளுக்கு வளர்ந்த பிள்ளை வெளியே இறங்கும்போது விசாரணை தொனியில், எங்க போறே? எப்ப வருவே… என்றெல்லாம் கேட்பது பாந்தமாய் இல்லை. இவனும் சற்று அப்பாசொல் கேட்கலாம். அல்லது கேட்பதாக சிறிது பாசாங்காவது செய்யலாம். அவனும் கண் சிவக்க பதில் பேசுகிறவனாய் இருந்தான். அவளுக்கு அவனை ஆதரித்துப் பேசுவதா, கணவருக்குப் பரிந்து பேசுவதா என்று எப்பவுமே குழப்பம்தான். என்னவோ சொல்வார்களே, உலக்கைக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி. அந்த வீட்டைப் பொறுத்த மட்டில் அவள் அந்த வீட்டின் மத்தளம்.

முன்பெல்லாம் இத்தனை பிரச்னை இல்லை. இப்போது பத்மராஜன் ஒன்பதாம் வகுப்பு வந்து விட்டான். சிறிது தன் தேர்வாய் உலகத்தைப் பார்க்க ஆரம்பிக்கிற பதின் வயசு அது. பத்மராஜன் மகா அழகாக ஆகி வந்ததாக அவளுக்குப் பட்டது. இளங் குருத்துப் பளபளப்பு அது. வாழைக் குருத்து இலையின் மினுமினுப்பு. கனவு சுமந்த சிவந்த முகத்தில் மெல்லிய பூனை மயிர் ரேகையாய்க் கிளைக்கிறது. அவன் குரல் மிருது மாறி சற்று கரகரக்கிறது. கிடுகிடுவென்று உயரங் கொடுக்க ஆரம்பித்திருந்தான். பொதுவாகப் பெண்பிள்ளைகள் தான் இப்படி ஒடிசலாய் நெடுநெடுவென்று வளரும். உயரம் தராத ஆண்கள் பருமனாக ஆவார்கள். உலகத்தை அவன் பார்க்கிற பார்வையில் ஒரு கூர்மையை எட்டியிருப்பதாக அவன் நம்புவதாகப் பட்டது. அதுசார்ந்த உள்யோசனையும் நிமிர்வும் அழகாகத்தான் இருக்கிறது. லொளகிகம் அல்லாமல், அறிவுப்புலம் சார்ந்த உள்கனல் வழிகாட்டும் வெளிச்சம். தானே யோசிக்க, தன் காரியங்களில் தானே முடிவெடுக்க… என தன்னியல்பாய் அவன் இயங்க விரும்பினான். அது ஆச்சர்யமானது அல்ல. எதற்கெடுத்தாலும் அப்பாஅம்மாவிடம் யோசனை கேட்கிற பிள்ளைகளை நாமே கூட அத்தனை விரும்புவோமா என்ன?

பையனை சற்று எட்டி நின்று ரசிக்கலாம் இவர், இவன்அப்பா, என்றிருந்தது. அவர் கருத்துக்கு மாற்றுக் கருத்து என்பதே இதுவரை இல்லாத இந்த வீட்டில் புதிதாய் அவன் குரல் கிளம்புவது முதலில் அவருக்கு. சந்திரசேகரனுக்கு எரிச்சலைத் தந்திருக்கலாம். பிறகு, தான் அலட்சியப் படுத்தப் படுவதாக அவர் கலவரமும் அடைந்திருக்கலாம். இது தேவையற்ற பயம் என்றுதான் அவளுக்குப் பட்டது. என்றாலும் அதிகார பிரமை சுமந்து திரிபவர்களுக்கு யார் இதையெல்லாம் எடுத்துச் சொல்ல முடியும்? ஒரே உறையில் இரண்டு கத்திகள் எப்படி வைக்க முடியும், என்பதைப் போல… இந்த இரண்டு ஆண்களுமே, அப்பாவும் பிள்ளையும் சுய அதிகார பிரமை கொண்டாடும் போது… சிக்கலாகத்தான் இருக்கிறது.

இவனுக்கு அடுத்தவள் பானு. தங்கை. இவனைப் பார்த்து அவளும் தன்னை அலட்சியப் படுத்தி விடுவாளோ என்று அப்பா பயப்படுகிறாரா தெரியாது. எல்லாவற்றையும் எல்லாரும் வெளிப்படையாகப் பேசிக்கொள்ள எப்படி முடியும்? மனம். அதன் விசித்திர முடிச்சுகள். இவன், இந்தப் பிள்ளை, பத்மராஜன்… நான்தான், என ஒரு புன்னகையுடன் அம்மா நினைத்துக் கொண்டாள். அதேசமயம் இவன் முழுசாய் நானும் அல்ல. இனிப்பு கூட்டி செய்யப்பட்ட வேறு வேறு பதார்த்தங்கள் போல, நானும் அவனும்! பார்க்கிறவர்கள் “ஜாடையில் அப்படியே இவன் அம்மாமாதிரி” என்று சொல்கையில் அவளுக்குப் பூரிப்பாக இருக்கும். நான் நானாகவும், நான் அவனாகவும்… அவன் நானாகவும், அவன் அவனாகவும்… என்று வாழ்க்கை வசிகர வண்ணக் கலவையாய் இருக்கிறது. கல்யாணப் பத்திரிகையில் சிவப்பும் மஞ்சளும் போல… ஒரே பத்திரிகையின் கலப்பு வண்ணங்கள். திருமணப் பத்திரிகை அச்சடிக்க எடுத்துக் கொண்ட மை மயில் கழுத்து நீல நிறமானது. காகிதத்தின் மஞ்சள் பரப்பில் அச்சிடும்போது அச்சாவதோ பச்சை நிறம்!

காற்றலைத்த நாணலின் சிறு துவாரங்கள் (புலன்கள்) வழியே காற்று சங்கீதத்தை வழிய விடுவது போல இளமை இயல்பாய்த் தன் பாதையைத் தேர்வு செய்துகொள்ள விரும்புகிறது. சொல்லிக் கொடுப்பதில் எடுத்துக் கொள்வது என்பது இளமையின் தேர்வுதானே? குதிரையை நீர்நிலைக்குக் கொண்டு தண்ணீர் காட்டலாம். தண்ணீரை அது தானே குடிக்க வேண்டும்… என நினைத்துக் கொண்டாள் மைதிலி.

பத்மராஜன் அத்தனைக்கு அசட்டுத்தனமான பிடிவாதமோ, திமிரோ உள்ள பிள்ளை இல்லை. நேரத்தை வீணடிக்கிற, பொழுதுபோக்கு அம்சங்களில் நேரம் போக்குகிறவனும் அல்ல. அப்பாவின் நிதி நிலைமையோ, கை வீச்சோ மீறிய ஆடம்பரத்துக்கு அவன் ஆசைப்பட்டதோ, அது இல்லை, இது கிடைக்கவில்லை, என ஏக்கப் பட்டதோ கிடையாது. இவள், பானுவாவது சில சமயம் சக்திக்கு மீறி எதையாவது செய்ய விரும்பி பயமுறுத்துவாள். ஒருதடவை சிநேகிதியின் நெக்லேசை இரவல் என்று கேட்டு வாங்கி போட்டுக்கொண்டு வந்து நின்றாள். அப்பா அதைப் பார்த்து வெலவெலத்து விட்டார். “ஏன்டி உங்க அப்பா கையாலாகாதவன்னு சொல்லிக் காட்டறியா?” என்று ஒரே கத்தல். அவர் உடம்பெல்லாம் நடுங்கித் துடித்தது… பல்லியின் அறுந்த வால் போல.

“இல்லப்பா. திருப்பிக் கொடுத்திர்றேன்ப்பா…” என்று கரகரவென்று கண்ணீர் விட்டாள் பானு. “நம்ம ஐவேஜுக்குத் தக்ன நீங்க ஆசைப்படுங்கோ போதும். இல்லாட்டி…” என நிறுத்தினார் அப்பா. “இல்லாட்டி… ஆசையே உன்னைத் தப்பான இடத்துல கொண்டுபோய் நிறுத்திரும். புரிஞ்சதா?” என்றார் அப்பா. பானுவுக்கு என்ன புரிந்ததோ, தலையாட்டினாள்.

அவனைவிடச் சின்னவள். ஆறாம் வகுப்பு படிக்கும்போதே நகையில் ஆசை எப்படி வந்தது தெரியவில்லை. “நீ வேணா போட்டுப் பாக்கறியா?” என்று அந்த விஜயா, கேட்டிருக்கலாம். அதைப் போட்டுப் பார்த்தவள், தன் அம்மாவிடம் அதைக்காட்ட ஆசைப் பட்டிருக்கலாம். இளம் பிள்ளைகள் என்னென்ன பேசிக் கொள்வார்கள், அதுவே நமக்கு என்ன தெரியும்? ஆனால் அப்பா கவலைப் படுவது சரி, என்றுதான் மைதிலிக்குத் தோன்றியது. பிள்ளைகளையிட்டு பொறுப்புகள் சுமந்து திரிகிறார் அப்பா. அதைப் பிள்ளைகள் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார்… அதுவும் நியாயம்தான். ஒரு நல்லநாள், விசேஷம் என்று நாமும் பெண் பிள்ளைகளை அழகு படுத்திக் கொண்டாடுகிறோம். அதனால்தான் அவர்களும் அந்த ஆசையை வளர்த்துக் கொள்கிறார்ள்.

அப்பா நினைப்பது அல்லது கவனித்தது சரி. பத்மராஜனிடம் மாறுதல்கள் தெரிந்தன. வளர்கிற வயதில் மாற்றங்கள் தானே முறை.  சற்று அவன் முகம் பிரகாசமாய்த் தெரிந்தது. அது கனவுகள் வளரும் பருவம். சிறகைக் கோதியபடி தானே மேலெழும் காலகட்டம் அது. வேரில் இருந்து நீரை உறிஞ்சி பூ பூக்கும் பருவம். இதுகுறித்து அப்பா சந்தோஷப் பட்டிருக்க வேண்டும். அவன் சொல்லாமல், அவனைக் கேட்காமல், அவனிடம் எப்படி இந்த மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என தானே யூகத்தில் அறிய மைதிலி விரும்பினாள். வாழ்க்கை இப்படியான சுவாரஸ்ங்களைப் பொதிந்து வைத்திருக்கிறது.

அத்தனைக்கு அந்த வாலிபத்தின் ஆரம்ப வயதில் வேறு பெண் பிள்ளையிடம் நாட்டம்… என்கிற உசுப்பல்களுக்கு அவன் இலக்காகி விட மாட்டான், என்றுதான் நினைத்தாள். அவளுக்கு அவனைத் தெரியும். வயதும், ஒன்பதாம் வகுப்பு, சின்ன வயதுதானே? தவிரவும் தங்கை பானுவின் சிநேகிதிகளைக் கண்டதும் அநாவசியக் கிளர்ச்சியோ மயக்கமோ அவன் அடையவில்லை. விட்டு விலகியும் போகவில்லை. சாதாரணமாகவே அவர்களுடன் அவன் உரையாடினான்.

பத்மராஜன் முட்டாள் அல்ல. சிரத்தை யெடுத்துப் படித்தால் அவனால் நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியும் என அவள் அறிவாள். ஆனால் அந்த வயதிலேயே அவனுக்கு பாட நூல்கள் தவிர வேறு கதை, இலக்கியப் புத்தகங்கள் வாசிக்க இஷ்டம் இருந்தது. பொதுநூலகத்தில் இருந்து புத்தகங்கள் வாங்கிவந்து படித்தான். படித்தால் என்ன? நல்ல விஷயம்தான்… ஆனால் படிக்கிற நேரத்தை அது விழுங்கிவிடும் என்று அவன்அப்பா கவலைப் படுவதாகத் தெரிந்தது. எப்பவும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவன் பாடப் புத்தகமும் கையுமாக இருந்தால் அவருக்கு சந்தோஷம் போல இருந்தது. நாளைக்குப் பரிட்சையில் ‘புயலிலே ஒரு தோணி’ எழுதியவர் யார், என்று கேட்க மாட்டார்கள்.

பத்மராஜனுக்குள் என்ன நிகழ்கிறது? அதிகம் பேசாவிட்டாலும் அவனிட,ம் எதோ உள்யோசனை ஓடிக் கொண்டிருந்தது. அதிகாலை சீக்கிரமே எழுந்து கொள்கிற பிள்ளைதான். வானத்தின் பொன் கூரையைப் பார்த்தபடியே எழுந்துகொண்டு வயல்வெளித் தோட்டக் கிணறு என்று வெளியே போய்க் குளித்துவிட்டு வருவான். அதிகாலை இருட்டு பிரிகிற அந்த வேளை அவனுக்குப் பிடித்திருந்தது. இயற்கையோடு அவன் தன்னை இழைத்துக் கொள்கிறதாக இருந்தது அந்த வேளை. அம்மா மெல்ல தன் குழந்தையைப் பிரித்துக் கொண்டு எழுந்து கொள்வது போல இருளில் இருந்து எழுந்து கொண்டது உலகம். உதயம் என்பது திசைகளுக்கு தீபாராதனை போல இருந்தது அவனுக்கு.

இதெல்லாம் ஏன், எப்படி அவனுக்குத் தோன்றுகிறது தெரியவில்லை. வாழ்க்கை வெற்றி அல்ல. தோல்விகளும் அல்ல. அது ஓர் அனுபவம். அறிவுக்கு அது உதய காலம். வாலிபப் பருவம். இயற்கை என்பது ஒரு பெரும் பரவச அனுபவம் என்று அவன் உணர்ந்து கொண்டான். சிறு குளிருடனான காற்றின் தழுவல் உடலின் சோம்பேறித் தனங்களை அப்பால் தள்ளியது. பறவைகள் விழித்துக் கொள்ளும் அதிகாலை. பகலை இந்தப் பறவைகள் தான் எத்தனை ஜோராய் ஆராதனை செய்கின்றன. நாத ஆராதனை. அவற்றின் ஒழுங்கற்ற ஒலிக் கோர்வையிலும் ஓர் உற்சாக இசை கேட்கிறாற் போல அவனால் உணர முடிந்தது. மகிழ்ச்சி என்பதே ஓர் இசை ஆர்ப்பரிப்புதான்! ஒழுங்கற்றதில் இருந்து ஓர் ஒழுங்கு நிர்மாணிக்கப் படுகிறது. ஒழுங்கு என்பது மனதின் அடங்கல். மனதின் அமைதி… ஒன்றுபோல் அற்ற மற்றொன்று சேர்ந்த இந்த வாழ்வின் பிசிர்த் தன்மையை, கூந்தல் பிரிகளை ஒன்றுகூட்டி முடிச்சிட்டுக் கொள்வதைப் போல, நாம் ஓர் கட்டுக்கோப்பை ஸ்தாபிக்கப் பிரியப்படுகிறோம், என நினைத்துக் கொண்டான் பத்மராஜன்.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. உலகம் பாடப் புத்தகங்களில் இல்லை. அது இதோ வெளியே இருக்கிறது. அனுபவங்களை விட சிறந்த ஆசிரியர் எது, என்று சொன்னால் அப்பா திகைத்து விடுவார் என நினைக்கவே அவனுக்குப் புன்னகை வந்தது. குழந்தைப் பிராயத்தில் காலம் நமக்கு தினசரி வாழ்வைக் காட்டித் தந்தது. கற்றுத் தந்தது. இப்போது இந்த வாலிப வயதில் அது காட்டித் தரும் பாடங்கள் மேலதிக சூட்சுமம் சுமந்தவை. நரம்புகளே வேர்களாய், உறிஞ்சத் தயாராய் நாம். தேடலும், சில சமயம் தேடாமல் மனதை வெறுமையாக்கி வைத்திருத்தலும்… என காலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக் காத்திருப்பது, கண்டடைவது என்பது வாழ்வின் பேரனுபவம்.

இதையெல்லாம் அம்மாவிடமும் அப்பாவிடமும் அவன் பகிர்ந்துகொள்ள முடியாது. அப்பாவுக்கு அவன், பாடங்களில் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும். அது போதும். அது முக்கியம். அது தவிர மற்றது எல்லாம்… எத்தனை உயர்ந்ததாக இருந்தாலும், நேர வீணடிப்பு தான். இப்போது அது அவனுக்குத் தேவை இல்லாதவை. அவரிடம் அவன் புரிய வைக்க முடியாது. ஹா ஹா, அவருக்கு அவன் புரிய வைப்பதே நேர வீணடிப்புதான்!

அவனுக்கு இசையில் ஆர்வம் இருந்தது. ஒலிகளின் ஒழுங்குபட்ட வடிவம் அல்லவா இசை. தெருவில் கடந்து போகையில் எல்லார் வீடுகளிலும் ரேடியோ சிலோன் கேட்கும் காலம். தெருவில் நடந்தபடியே ஒவ்வொரு வீடாகத் தாண்டி முழுப் பாடலையும் கேட்டபடி போகலாம். ஒவ்வொரு பாடலையும் மிகுந்த ரசனையுடன் ஒலிபரப்புவார்கள். பொங்கும் பூம்புனல், என்பது நிகழ்ச்சியின் பெயர்.

காலையில் பத்மராஜன் சீக்கிரம் எழுந்து கொள்கிறான் என்பது குறித்து அப்பாவுக்கு மகிழ்ச்சியே.  என்றாலும் காலை வெளியே வயல்கிணற்றில் போய்க் குளிக்கிறேன், என்று கிளம்பி விடுகிறான். காலையில் பாடம் படித்தால் நன்றாக மனதில் பதியும் அல்லவா? காலை நேரம் முழுவதையும் அவன் வீணடிப்பதாய் நினைத்தார். வீட்டில் அவன் படிக்க வேண்டும் என்பதற்காக ரேடியோ வைப்பது இல்லை. பக்கத்து வீட்டில் சத்தமாய் சிலோன் வைத்தாலே அவருக்குக் கோபம் வந்தது.

பானு கொஞ்சம் அப்பாசொல் கேட்பாள். இதுவரை பெரிதாய் அவளையிட்டு அவர் கவலை கொள்ளவில்லை. பெண் என்ற அளவில் கூட அவள் படித்து பெரிய மதிப்பெண் எடுத்து… என்றெல்லாம் அவர் ஆவேசப் படவில்லை. அவளுடைய இனியான பதின் வயதுகள் எப்படியோ தெரியாது. காலையில் எழுந்ததும் வாசல் பெருக்கி கோலம் போடுகிறாள். அறைகளை சுத்தம் செய்கிறாள். தன் துணிகளை தானே அயர்ன் செய்து கொள்வாள். வீட்டுப் பாடங்கள் முடிப்பாள். அவள் கையெழுத்து அத்தனை அழகாய் இருக்கும். காதில் பக்கத்து வீட்டு ‘பூம்புனல்’ கேட்டபடியே பாடமும் படிப்பாள். பெரிய மார்க் எல்லாம் வாங்கா விட்டாலும் அப்பா பார்க்க அவள் சமர்த்து தான். சொல்பேச்சு தட்டாதவள் பானு.

பத்மராஜன் வீட்டில் இருந்தால் அப்பா கூடஇருப்பதை வெறுத்தாற் போல இருந்தது. இருவரிடத்திலும் ஓர் ஒவ்வாமை, முள் துறுத்தல் எப்படியோ உருவாகி யிருந்தது. இது இப்பதான் ஓரிரு வருடங்களாக வெளிப்படையாகவே தெரிந்தது. ஒருவர் பக்கத்தில் மற்றவர் வந்தாலே ஒரு வெப்பம் அங்கே உருவானாற் போல இருந்தது. ஏன், எப்படி அப்படி ஆனது. இதற்கு என்ன செய்ய மைதிலிக்குத் தெரியவில்லை. அப்பா அவனைப் புரிந்து கொள்ளவில்லை, என்பது அவனது ஆதங்கம். பணம் சார்ந்த அலைச்சல் கொண்ட அப்பா. அப்பா அவனைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை. அவனது ஆசைகளை, விருப்பங்களை அவர் அலட்சித்தார். அவன் அவர் விரும்பிய அளவில் வளர அவர் விரும்பினார். இதில் அவனது அபிலாஷைகள் புறக்கணிக்கப் பட்டதாக அவனுக்கு ஏமாற்றமும், சிறிது கோபமும் இருந்தது. கட்டுப்படுதல் என்பது பிரியம் சார்ந்தது. ஆனால் கட்டுப்படுத்துதல்?… அங்கேதான் சிக்கல் உருவாகிறது.

பத்மராஜன் ஊர்க் கோவில் திருவிழா கலை நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் பார்த்தான். இராத்திரி கொண்டாட்டங்கள் அவை. பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள், சிறப்புச் சொற்பொழிவுகள், கச்சேரிகள், நாட்டியம்… என தினசரி ஊரே களை கட்டியது. சினிமா சங்கீதத்திலேயே சாஸ்திரிய சங்கீதம் சார்ந்த பாடல்கள் அவனுக்கு ரொம்ப இதமளித்தன. இசை என்பது ஓர் நுட்பமான கலை. பாடப் புத்தகம் அதைச் சொல்லித் தரவே முடியாது. அதற்கு நல்ல குரு வேண்டும். நல்ல குருவுக்கு நல்ல மாணவன் வேண்டும். உண்மையில் ஒரு கலைஞனுக்கு அவனது ஞானாசிரியனே தான் தந்தை என்று சொல்ல வேண்டும்.

இசை… ஒலிகளை ஸ்வரங்களாக வரிசைப் படுத்தி, பிறகு அவற்றை விதவிதமாக அடுக்கி வேறு வேறு ராகங்களை ஒரு வித்தை போல உருவாக்கி அதில் உணர்ச்சிகளைப் பத்திரப்படுத்தி விட முடியும் என ஒருத்தன் யோசனை செய்திருக்றான். சின்னச் சின்ன தீபங்களை அடுக்கு தீபாராதனையாகக் காட்டுவது போல. கலை என்பது வாழ்வின் ஒத்திசைவற்ற, ஒழுங்கற்ற தன்மையில் இருந்து ஓர் ஒழுங்கை, வரிசைக் கிரமத்தை, ஆ… லயத்தை உருவாக்கி, அலைபாயும் மனதை அமைதிப்படுத்த முயற்சி செய்கிறது. இசை என்பது என்ன? அமைதியின் ஒலி வடிவம் அது.

மனது அமைதியடைய விரும்புகிறது. கால காலத்துக்கும் அதன் யோசனைகளில் அந்த ஒழுங்கு சிதைவு கொள்கிறது. அமைதியை மீட்டெடுக்க வேண்டி யிருக்கிறது. கலை அதற்கு ஒத்தாசை செய்கிறது. இசை என்று எடுத்துக் கொண்டால், நாதம் மற்றும் லயம். நாதம் அதன் ஸ்வர அடுக்கில் கொண்டிருக்கும் சுதந்திரத் திரிதலை, லயம்… என்கிற தாளம் கட்டுப் படுத்தி ஓர் ஒத்திசைவுக்குள் வைக்கிறது. நாதம் பட்டம் என்றால் லயம் அதன் நூல் அல்லவா?

•••

ந்த ஊரில் ஒரு வித்வான் இருந்தார். பரம்பரை பரம்பரையாக அவர்கள் சாஸ்திரிய சங்கீதம் அறிந்த குடும்பம். அதிகாலைகளில் அந்தத் தெரு வழியாகப் போனால் சாஸ்திரிகள் மடியில் குழந்தை போலும் தம்புராவைப் போட்டுக் கொண்டு அதைக் கொஞ்சுவதைப் போல எதும் பாடிக் கொண்டிருப்பார். ஒருதரம் தற்செயலாக அந்த வழி போனவன் அந்த நாத அபிஷேகத்தில் திகைத்துப் போனான். அந்த வீட்டு வாசல் திண்ணையில் அப்படியே உட்கார்ந்து விட்டான். நேரம் போனதே தெரியவில்லை. தெருவில் போவோர் வருவோர் அவனைப் பார்த்துக் கொண்டே போனார்கள். ஒரு சிறு ஆசுவாசத்துக்கு பெரியவர் வெளியே வந்தார். அவன் திண்ணையில் உட்கார்ந்திருந்தான். அவர் போய் வெற்றிலையைத் துப்பி விட்டு வந்து அவனைப் பார்த்து நின்றார். என்ன தோன்றியதோ, அவரை நமஸ்கரித்தான். “இருக்கட்டும். இருக்கட்டும்… என்ன இது?” என்றார். “உங்ககிட்ட சந்கீதம் கத்துக்கணும் ஐயா...” என்று கை கூப்பினான்.

அவர் புன்னகை செய்தார். “எப்பிடி உனக்கு இப்பிடி ஒரு ஆர்வம் வந்தது?” என்று அவன் தலையைத் தடவித் தந்தார். அவர் மறுக்கவில்லை என்பதே அவனுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. “நான் இப்ப என்ன பாடினேன், தெரியுமா?” என்று கேட்டார். “தெரியலை. சமஸ்கிருதமா?” என்று கேட்டான். “இல்லை. தெலுங்கு” என்றார். “ம்” என்று தலையாட்டினான். “பாஷை தாண்டியது இல்லையா சங்கீதம்…?” என்று கேட்டான். ம், என்று தலையசைத்தார்.

அப்பாவிடம் எப்படி அனுமதி கேட்பது என்றுதான் முதல் கவலை வந்தது. உலகம் எளிமையானது. ஆனந்த மயமானது. இதில் கவலைப்பட ஏதும் இல்லை. எதிர்பாராமல் எனக்கு இசையில் ருசி கண்டது. எப்படி வந்தது தெரியவில்லை. இங்கேயே எனக்கு ஒரு குரு அமைவார்… என்பதையும் என் அதிர்ஷ்டம் இது, என்பதைத் தாண்டி எப்படிப் புரிந்துகொள்ள முடியும். இதை அப்பா புரிந்து கொள்வாரா, என்று யோசனையாய் இருந்தது.

பாடப் புத்தகங்களைத் தொடுகிறானில்லை. என்னவோ பிரமை பிடித்தவன் போல் இருந்தான் பத்மராஜன். அப்பாவிடம் பேச நா வரவில்லை. இரண்டு நாட்களாய் ஒரு தயக்கம். சந்திரசேகரன் கவனித்தார். மாதா மாதம் பள்ளியில் தேர்வுகள் உண்டு. தினசரி கொஞ்சம் படித்தால் அதில் மதிப்பெண் பெறுவது ஒன்றும் கடினம் அல்ல. இவன் கடைசி நேரம்வரை புத்தகத்தை விரித்து படிக்க உட்கார்வதில் அசிரத்தையாய் இருக்கிறான். தேர்வுக்கு முந்தைய நாள்தான் புத்தகத்தைக் கையில் எடுக்கிறான். அவர் அலுவலகத்தில் ஓவர்டைம் செய்துவிட்டு சைக்கிளை மிதித்தபடி வீடு திரும்பினார். வழக்கமான சம்பளம் பற்றவில்லை. அவருக்கு இரண்டு குழந்தைகள். பானு திரும்பிப் பார்க்குமுன் கிடுகிடுவென்று வளர்ந்து விடுவாள். அடுத்து இவனுக்குக் கல்லூரிச் செலவு, அது உள்ளூரிலா வெளியூர் ஹாஸ்டலிலா… போன்று மேலும் செலவுகள் சார்ந்து அவர் முன்தயாரிப்புகள் செய்துகொள்ள வேண்டி யிருந்தது. ஒவ்வொரு வீட்டில் கணவன் மனைவி இரண்டு பேருமே வேலைக்குப் போகிறார்கள். அவர் வீட்டில் ஒரே இன்ஜின்தான். செலவுகள் செய்ய அவர் தயங்கவில்லை. என்றாலும் பிள்ளைகள்… அவரது பொறுப்பை, அன்பை உதாசீனம் செய்தால் அவரால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?

பத்மராஜன் அப்பாமுன் நின்று பேசியதே இல்லை. தயங்கி தன் முன் நிற்பவனை ஆச்சர்யத்துடன் பார்த்தார். “என்னடா?” என்று கேட்டார். “நம்ம மாடத் தெருவில்… ஒரு சங்கீத வாத்தியார் அப்பா…” என்று தொண்டையைச் செருமிக் கொண்டு ஆரம்பித்தான். உள்ளே சமையல் கட்டில் இருந்து அம்மா ஆச்சர்யமாய்ப் பார்த்தாள் அவனை. “சங்கீதமா?” என்றார் அப்பா. “என்ன சங்கீதம்?”

“யாரு தட்சிணாமூர்த்தியா?” என்று கேட்டாள் அம்மா. அவன் தலையாட்டியபடியே அப்பாவைப் பார்த்தான். “கர்நாடக சங்கீதம்” என்றான். “அதிருக்கட்டும். நாளைக்கு என்ன பரிட்சை?” என்று கேட்டார் அப்பா. அவன் பேச்சை அவர் தவிர்ப்பதாக அவனுக்கு சுர்ர் ரென்று மூளைக்கு ரத்தம் ஏறியது. “எனக்கு சங்கீதம் கத்துக்க ஆசை அப்பா” என்றான் முக மாற்றத்துடன். “இப்ப பாட்டு கத்துக்கிட்டு நீ என்ன பண்ணப்போறே?” என்றார் அப்பா. “எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான். படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்...னு பழமொழி.”

“எனக்கு அதுதான் இஷ்டம் அப்பா…” என்றான் அவன் விரைப்புடன். “அம்மா அப்பாட்டச் சொல்லு. நான் பாட்டு கத்துக்கணும். இசைன்றது ஒரு நுட்பமான கலை வடிவம். அது அப்பாவுக்குத் தெரியாது...” என்றபோது அப்பாவின் உடம்பு நடுங்கியது. “என்னடா சொன்னே?” என்று எழுந்தார். அவர் எழுந்த வேகத்தில் வேட்டி நெகிழ்ந்தது. திரும்பவும் கட்டிக் கொண்டார். “எப்ப பாரு வாயும் வயிறும் பத்தியே நினைச்சிகிட்டு இருக்க முடியாதுப்பா. அம்மா, அப்பாட்டச் சொல்லு” என்றபடி பத்மராஜன் வெளியே போனான். அவனுக்கு ஆத்திரத்தில் கண்ணீர் வந்து விட்டது.

வீட்டில் வாக்குவாதம் உக்கிரமானதைப் பார்த்தபடி பிரமித்துப் போய் நின்றிருந்தாள் பானு. அண்ணாவுக்கு இத்தனை கோபம் வரும், அவனுக்கு இத்தனை பிடிவாதம் இருக்கும், என அவள் எதிர்பார்க்கவில்லை. என்னிடம் எத்தனை இதமாக தன்மையாகப் புன்னகை செய்கிறான் இவன், என்று இருந்தது அவளுக்கு. அண்ணாவை அவளுக்குப் பிடிக்கும். அசட்டுத்தனங்கள் இல்லாத அண்ணா.

“என்ன சொல்லிட்டுப் போறான் பாத்தியாடி இவன்? நான் முட்டாள்னு சொல்லாமல் சொல்லிட்டுப் போறான். அஞ்சும் பத்தும் இதுங்களுக்காகச் சேக்கறதுக்கு நான் ராவும் பகலுமா அல்லாடறேன். எதுக்கு… இவன்ட்ட முட்டாள் பட்டம் வாங்கவா?” என்று படபடப்பாய்க் கத்தினார். “திடீர்னு என்ன இவனுக்கு இப்பிடி சங்கீதக் கிறுக்கு பிடிச்சிட்டது?” என்றார். “எங்க வீட்ல யாருக்குமே இந்த சங்கீதப் பித்து கிடையாதே…” என்றார்.

“பணம் வசதி எல்லாம் எதுக்கு, நம்ம சந்தோஷத்துக்கு தானே?” என்றபடி மைதிலி புடவையில் கையைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தாள். “இப்ப என்ன, நீ அவனுக்கு சப்போர்ட் பண்ண வந்தியா?” என்றார் அவர் அவளைப் பார்த்து. “நம்ம குடும்பத்தில் சங்கீதப் பித்து அவனுக்கு எப்பிடி வந்ததுன்னு கேட்டீங்களே…” என்று புன்னகைத்தாள் மைதிலி. “என்னை உங்கம்மா எங்க பாட விட்டா?” என்றாள் புன்னகை மாறாமல். சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தார். அவள் இப்போது ஆளே புதிதாய்த் தெரிந்தாள். நீங்க மாத்திரம் இல்லை, உங்க குடும்பத்துக்கே கலை நுட்பம் என்றால் தெரியாது… என்று சொல்வது போல இருந்தது.  அவளுக்கு தன் மகன் சார்ந்த பெருமிதம் இருந்தது. “நீங்க அவன் பிற்காலத்துல வசதியா வாழணும்னு யோசிக்கறீங்க. அது தவறு இல்லை. ஆனா, வசதி வாய்ப்புகளை விட சந்தோஷம், அது முக்கியம்னு அவன் முடிவு செய்யறான். அவன் வாழ்க்கை அது.”

“இருக்கட்டும். அவன் சந்தோஷத்தை யார் கெடுக்கறா…” என்றார் அப்பா. “ஆனால் பாரு, பத்தாயிரம்… பத்தாயிரத்தில் ஒருத்தர்தான் கலைஞனா வெற்றி உலா வர முடியும். அதைத் தெரிஞ்சிக்கோ…” என்றார். “அதுக்குக் காரணம் ஒரு கலைஞனுக்கு இந்த லோகத்தில் பத்தாயிரம் பேர் தடை சொல்லறாங்க” என்றாள் அவள் அவர் முகத்தைப் பார்க்காமல். பிறகு இப்போது அவரைப் பார்த்துப் பேசினாள். “அவனுக்கு சுதந்திரமான சந்தோஷம் வேண்டி இருக்கறாப்ல இருக்கு. வெற்றி, தோற்றுப்போறது அப்டின்ற கணக்கே அவன் வாழ்க்கைல வெச்சிக்க விரும்பலைன்னா?” என்று கேட்டாள் மைதிலி.

அவளையே பார்த்தார் அப்பா. திடீரென்று இப்படி இவள் தன் முன்னே ஆகுருதி பெருகி நிற்கிறாள். “குழந்தைகளை சுதந்திரமா சந்தோஷமா வளர்க்கணும். நம்ம கடமை அது. கெட்ட பழக்கம் எதுவும் இல்லாமல், லாகிரி வஸ்து பழகிக்காமல், அசட்டுக் கேலியாவும் ஜாலியாவும் பொறுப்பு இல்லாமல் திரியாமல், அதுங்க நல்ல மனுசாளா வளர்ந்தா அதுதான் முக்கியம்…” என்றாள் மைதிலி. அப்பா அவளையே பார்த்தார். நான் அனுபவிக்காத சந்தோஷங்களை என் பிள்ளை அனுபவிக்க வேண்டும், என அவள் நினைத்திருக்கலாம். அவளது சந்தோஷமே மகனின் சந்தோஷத்தில் இருப்பதாக வந்து அவள் நிற்கிறாள். “எனக்கு அவன் சந்தோஷம் முக்கியம் இல்லையா மைதிலி?” என்றார் அப்பா நா தழுதழுக்க.. அவள் முகம் மலர்ந்தது. “நீங்க எல்லாம் பண்றீங்க. குழந்தைகளுக்காக நல்லதுதான் பண்றீங்க. அது நம்ம பிள்ளைங்களுக்குத் தெரியும்…” என்றாள் அம்மா. “நாளைக்குப் பிள்ளைங்க நான் ஆசைப்பட்டது எதுவுமே நடக்கல… எங்க அப்பாம்மா எதையுமே அனுபவிக்க விடலைன்னு நம்மளைக் குறை சொல்லக் கூடாதுங்க” என்றபடி அம்மா உள்ளே போனாள்.

 ••

(பேசும் புதிய சக்தி / அக். 2021 இதழ்)

  

Comments

  1. எஸ். சங்கரநாராயணன் எழுதியுள்ள "பொன்கூரை வேய்ந்த வானம்" சிறப்பாக உள்ளது. கதையின் நடை ஆற்றொழுக்காக வாசிக்கக் களைப்பின்றிச் செல்கிறது. தளவருணனைகள் மிகவும் பொருந்தி உள்ள்ன. உரையாடல்கள் அளவோடு உள்ளன. பத்மராஜன் பதின்பருவத்தை அடைந்தபோது அவன் தாய் அவன் உரு கண்டு மகிழும் இடம் அருமை. வாழைக்குருத்து இலையின் மினுமினுப்பு என்பது அனுபவித்தவர்களால்தான் உணரமுடியும். அதேபோல "அம்மா மெல்லத் தன் குழந்தையைப் பிரித்துக் கொண்டு எழுந்து கொள்வதைப் போல இருளில் இருந்து எழுந்து கொண்டது உலகம்" எனும் வருணனை சிறப்பான ஓர் இலக்கிய நடைக்கான எடுத்துக் காட்டு. அப்பா திடீரென மனம் மாறுவது சற்று சினிமாத்தனமாக இருந்தாலும் மைதிலி திடீரென்று ஆகிருதி பெருகி நிற்பதே அதற்குக் காரணம் என்று நாம் முடிவு செய்யலாம். "குழந்தைங்க நல்ல மனுசாளா வளர்ந்தா அதுதான் முக்கியம்; நாளைக்குப் பிள்ளைங்க நான் ஆசைப்பட்டது எதுவுமே நடக்கலன்னு...நம்மளைக் குறை சொல்லக்கூடாதுங்க" என்னும் மைதிலியின் குரல்தான் கதையின் மையமாகத் திகழ்கிறது எனலாம்.
    வளவ.துரையன், கடலூர்
    93676 31228

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog