நன்றி / பே’சும் புதிய சக்தி

சிந்தனைத் தொடர் – நிசப்த ரீங்காரம் / பகுதி 6

 

மழைக்குள் நுழைந்த குடை

ஞானவள்ளல்

 லைஞனுக்கு நயம்பட உரைத்தல் முக்கியம். அவனது கூறுதிறனாலேதான் அந்தப் படைப்பு வாசக மனதில் பீடமிட்டு அமர்கிறது. சிறப்பாகச் சொல்லப்பட்ட ஓர் உவமை, அல்லது சிறப்பான ஓர் இசை என்றுகூட வைத்துக் கொள்ளுங்கள், மனதில் தங்கி ரீங்காரம் செய்ய வல்லது. அதன் கூறுதிறன் அவனது கலையெழுச்சி எனலாம்.

சில நல்ல ஸ்வரக் கோர்வைகளை மனது திரும்பத் திரும்ப பாடிப்பாடி ரசிக்கும் அல்லவா?

எதுகை மோனை என்கிற சொல் அலங்காரங்களுடன் தமிழ் இலக்கியம் கலையின் எழுச்சியைக் கொண்டாடியது. சங்க இலக்கியம் முதல், போன நூற்றாண்டு வரை இந்தச் சொல்லாளுமை பெரும் ஆட்சி செய்தது. செய்யுள்கள் தாண்டியும் உரைநடையிலும், திரைப்படங்களிலுமே கூட அடுக்குமொழி பெரும் வரவேற்பு கண்டதை நாம் அறிவோம். திரைப்படங்கள் என்றால், ‘மகாதேவி’ படத்து வசனம் உடனே நினைவு வருகிறது.

இணங்க மறுத்த பெண்ணை மூட்டையில் அடைத்துக் கொண்டுவரச் சொல்வான் பி.எஸ்.வீரப்பா. அவர்கள் தவறுதலாக அவனது மனைவியையே தூக்கிவந்து விடுவார்கள். மூட்டையைத் திறந்ததும் வெளியே வருவாள் அவனது மனைவி.

“அத்தான்…”

“அப்படிச் சொல் கண்ணே. இந்த சத்தான வார்த்தையிலே செத்தான் கருணாகரன்” என வீரப்பா அலுத்துக் கொள்ளும்போது திரையரங்கமே விசிலும் கைதட்டுலுமாய் அதிர்ந்தது.

பத்து இருபது வருடங்களுக்கு முந்தைய ‘புது நெல்லு புது நாத்து’ படத்தில் நடிகர் நெப்போலியன் பேசும் ஒரு வசனம். “என்னடி, இலைல இட்டிலியைப் போட்டுட்டு தலைல இடியைப் போடறியே?”

ஒரு சோகமான வசனம். வில்லன் பாத்திரம் அவதிப்படும்போது அதை ரசித்தார்கள் மக்கள்.

அரசியலிலும் இப்படி அடுக்குமொழி பேசுவது ஒரு மோஸ்தர், என்றான காலம் ஒன்று இருந்தது அல்லவா?

அளபெடையாகவும், இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் என்றும் எத்தனை வசிகர உத்திகளைக் கையாண்டார்கள். பொழுது பலபலவென விடிந்தது. அவன் விறுவிறுவென்று நடந்து போனான். நடந்து நடந்து கால் தேய்ந்தான்… என்றெல்லாம் உணர்ச்சிக் கேந்திரங்களை வடிக்க எத்தனை வழி வகைகள்.

இன்றைக்குப் பரவலாக வந்து கொண்டிருக்கிற புதுக்கவிதைகளிலுமே கூட எதுகை மோனை நயம் இருந்தால் தனி ருசிதான். தணிகைச்செல்வனின், ஆறு வறண்ட கதை பற்றிய எள்ளல் கவிதை,

“காவிரியைக் கடக்க

ஓடங்கள் எதற்கு

ஒட்டகங்கள் போதுமே”

என்ற வரிகளின் கவர்ச்சிக்கு அதன் மோனைநயம் காண்க.

கவிதைகளில் கச்சிதத்தன்மையான சொற்கட்டு எப்போதுமே உயர்தரம். வள்ளுவரின் இந்தச் செய்யுள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

“செய்தக்க அல்ல

செயக்கெடும்

செய்தக்க

செய்யாமையானும் கெடும்.”

ஆனால் வள்ளுவர் இந்த ஒண்ணே முக்காலடி பாணியில் கூட சில சொல் விரயங்கள் தந்திருக்கிறார்… என்பதையும் கூறிவிட்டு தாண்டிச் செல்லலாம்.

“நாடென்ப

நாடா வளத்த

நாடல்ல

நாட வளந்தரும் நாடு.”

 

ஒரு தரம் சொன்னால் போதாதா என்ன?

அதே சமயம் இந்தக் கவிதை பாருங்கள். என்ன சொல் அழுத்தம்…

“இருவேறு

உலகத்து இயற்கை

திரு வேறு

தெள்ளியர் ஆதலும் வேறு.”

அதேபோல உவமான உவமேயங்களில் காட்சிரீதியான தாக்கத்தை ஏற்படுத்த வல்ல திருக்குறள் செய்யுள்கள் அழகானவை.

தினைத்துணை

நன்றி செயினும்

பனைத்துணையாகக் கொள்வர்

பயன் தெரிவர்.

இங்கே தினை பனை என்கிற உருவக் காட்சிகள் மனதில் தன்னைப்போல விரிகின்றன.

இலங்கையில் சீதையைச் சந்தித்துவிட்டு வந்த அனுமன், ராமனிடம் சீதையைப் பார்த்த கதையைச் சொல்லும்போது, சீதையைக் கண்டேன், என்று சொல்லாமல், முதலில் கண்டேன் என்று ஆரம்பித்து சீதையை, என பின்னால் சேர்ப்பதைக் கம்பர் காட்டுகிறார். கம்பராமாயணப் பட்டிமன்றங்கள் தோறும் இந்த விவரம் கொண்டாடப்படும்.

தூத்துக்குடியைச் சார்ந்த என் எழுத்தாள நண்பன் மோகனன் ஒரு நாவல் எழுதினான். அதன் தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

‘கொக்கு பூத்த வயல்.’

என் நினைவுக்கு எட்டியவரையில் ஒரு நில வரைபட அளவில் இப்படி காட்சிப் படுத்திய வேறு நாவல்தலைப்பை நான் கேட்டதே இல்லை.

வயல் வரப்பில் இருந்து யாரோ பார்க்க, தூரத்தில் வயலுக்குள் கொக்குகள் அமர்ந்திருக்கின்றன… என காட்சி மனதில் வரவில்லையா?

இவரது குறுநாவல் தொகுதியை நாங்கள் பதிப்பித்தபோது அதற்கு ‘மோகனராகம்’ என தலைப்பு வைத்தோம். இவரது பெயரே மோகனன் அல்லவா.

இந்தத் தலைப்பில் மனம் லயித்து நான் எழுதிய ஒரு சிறுகதைத் தலைப்பு ‘அதோ பூமி.’ என்றாலும் இந்த ‘அதோ’ என்று சுட்டல் அமைந்து விட்டதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்!

ஆமாம், திருப்பூர் தமிழ்ச் சங்கம் பரிசு பெற்ற என் நாவல், அதன் தலைப்பு ‘தொட்ட அலை தொடாத அலை.’ இதிலும் ஒரு நிகழ்வு அல்லது காட்சிப் பதிவு இருக்கிறது.

காட்சிகளைக் கற்பனையில் விரித்து நம் மனதில் முழுமையடையும் கவிதைகள் சிறப்பானவை.

இதைப்போலவே காட்சியம்சம் மிக்க இன்னொரு கற்பனை, உதயகண்ணனின் ‘மழைக்குள் “நுழைந்த” குடை.’

தேவதேவனின் ஒரு கவிதை இப்படிக் காட்டுகிறது.

“கட்டியணைத்து

முத்தமிடவா முடியும்

வா காபி சாப்பிடலாம்.”

இங்கே கவிதை அது நிகழும் இடத்தை நினைவுபடுத்தி தன் இருப்பை அமைத்துக் கொள்கிறது. காதலன், காதலி உணவு விடுதிக்குப் போகிறார்கள். அங்கே ‘குடும்ப அறை’யில் போய் அமர்கிறார்கள்… என்கிற விவரம் மனதில் சித்திரமாக வரும்போது, இந்தக் கவிதை ரசிக்கிறது அல்லவா?

இதில் கட்டியணைத்து முத்தமிடுதல் என்பது அதிகக் காம வேட்கையைக் குறிக்கிறது. வா காபி சாப்பிடலாம், என்பது ‘யானைப் பசிக்குச் சோளப் பொறி’ என்பார்களே அந்த ஆதங்கத்தையும் குறிக்கிறது அல்லவா?

விக்கிரமாதித்தனின் இந்தக் கவிதையும் அதேபோல நம் மனதில் சித்திரம் வரைந்து பொருளைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய நல்ல முயற்சி.

‘இக்கரைக்கும் அக்கரைக்கும்

அலைகிறான் ஓடக்காரன்

அமைதியாய்

ஓடிக் கொண்டிருக்கிறது நதி.”

இவர் நம் மனதில் வரையும் சித்திரம் என்ன? ஒரு பொதுக் கோணத்தில் இந்தக் கவிதை வாழ்க்கை சார்ந்த தேடல், என்று கொள்வோம். காலம் என்னும் ஓடத்தில் நாம் வாழ்க்கையைக் கடக்கிறோம்.

ஓடக்காரன் இக்கரைக்கும் அக்கரைக்கும் கடக்கிறான்… என்பது அவனது தேடல், என்பது சரி. அவன் எந்த திசையில் நதியைக் கடக்கிறான்… என காட்சியாக நினைத்துப் பார்த்தால், இடம் வலமாக அவன் கடக்கிறான். அவனது தேடல் ஒரு குறுக்குவெட்டு அளவில் நிகழ்வதை அவதானிக்கலாம்.

ஆனால் வாழ்க்கை? அது ஒரு நதிபோல ஓடிக் கொண்டே யிருக்கிறது. நதி எப்படி ஓடுகிறது? அதன் காட்சி வடிவம் என்ன?

நதி கீழிருந்து மேலாக… ஒரு நெடுக்குவெட்டுத் தோற்றமாக அல்லவா அது ஓடுகிறது.

அதாவது, நமது வாழ்க்கை சார்ந்த புரிதலும் தேடலும் சிறு அளவுதான். வாழ்க்கை நம் பிடிக்குள் சிக்காத அளவில் பெரியது, பிரம்மாண்டமானது என்கிறார் கவிஞர்.

மென்மையிலும் மென்மையை முன்னிறுத்தி ’பீலிபெய் சாகாடும் அச்சு இறும்’ என்கிறார் வள்ளுவர். மெல்லிய மயிற்பீலிதான் என்றாலும் சால மிகுத்துப் பெய்தால், வண்டியின் அச்சு முறிந்து விடும், என்பதன் அழகு காண்க.

மோப்பக் குழையும் அனிச்சம், நோக்கக் குழையும் விருந்து… என்பதெல்லாம் எத்தனை மென்மையான விவரம்.

மெல்லிய விவரங்களை அடுக்க ஹைகூ போல வேறு வடிவம் கிடையாது, எனலாம்.

‘‘காலைப் பனியில்

காணாமல் போயின

வெள்ளை நாரைகள்.”

வானத்தில் பறக்கும் நாரைகளின் உடல் நிறமும் காலைப் பனியின் நிறமும் ஒன்றுகலந்து முயங்கிய நிலை.

‘சிட்டுக்குருவி

சற்றே கால் தூக்க

சேறு துடைக்கும் மாம் பூ.’

என்பது மனதுக்குப் பிரியமான அடையாளமாகி விடுகிறது.

இதில் சோகத்தை மென்மையாகச் சொல்லும் இந்தக் கவிதை தனி ருசி.

“கல்லைறைக்கு

வழிகாட்டுகிறது

குடும்பத்துக் கிழட்டுநாய்.’’

இதில் ‘கிழட்டு’ நாய், என்கிற அடையாளம் கனமாகி விடுகிறது.

இப்படி மெல்லிய உணர்வுகளைக் கிளர்த்தும் விதமாக நான் ஒருமுறை எழுதினேன்.

“தாழ இறங்கிவந்த பறவை

பொத்தெனக் கீழே போட்டது

நிழலை.”

இதைப்பற்றி பிறகு ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கையில் அந்த நண்பர், இதே கருத்தை கம்பர் வேறு மாதிரி சொல்லி விட்டார், என்றார். என்ன சொல்கிறார் கம்பர்?

எத்தனை உயரம் பறந்த போதும் அந்தப் பறவையால் தன் நிழலைக் கீழே போட முடியவில்லை.

ஆகா என்றிருந்தது அதைக் கேட்க. கம்பர் கவிதையிற் பெரியவர் அல்லவா?

தமிழுக்கே கதி, கம்பரும் திருவள்ளுவரும் என்று சொல்வார்கள்.

நவீன விருட்சம் அழகியசிங்கரின் புதுமனை புகுவிழா, என்று போயிருந்தேன். பழைய நிகழ்ச்சி. விருந்தின் போது என் அருகே ஞானக்கூத்தன். இரண்டு கலைஞர்கள் சேர்ந்தால் என்ன பேசிக்கொள்ளப் போகிறோம்…

எனது ஒரு கதையைப் பற்றி அவரிடம் பேசினேன். வீட்டைக் காலிசெய்து போவதின் துக்கம் சார்ந்து ஒரு கதை. இந்த துக்கத்தை மேலதிக அழுத்தமாய் உணர்த்துகிற விதமாக, அந்த வீட்டில் பார்வையற்ற பெண் ஒருத்தி இருந்ததாகவும், அந்த வீட்டை அவள் தப்படிகளால் அளந்து வைத்திருந்த நெருக்க உணர்வு கொண்டவள் என்றும் விவரித்து, அந்த வீட்டைப் பிரிதல் பிரத்யேகமாக அவளுக்கு எத்தனை துக்ககரமானது, என நான் விவரப்படுத்தியதைச் சொன்னேன்.

கதையின் தலைப்பு. ‘புள்ளும் சிலம்பின காண்.’

ஞானக்கூத்தன் சட்டென தன் கவிதையில் காட்டிய காட்சி ஒன்றைச் சொன்னார்.

வீட்டைக் காலி செய்துகொண்டு துக்கத்துடன் கிளம்பும் ஒரு குடும்பத்தினர். அவர்கள் வீட்டு பீரோ நகர மறுக்கிறது. ஒருவர் இருவராய் அதை இழுத்து அசைத்து நகர்த்தப் போராடுகிறார்கள். நகர மறுத்த பீரோ கோபப் பட்டு ஒருவனின் காலைக் கிழித்து விடுகிறது!

ஒரு செய்தி கதையாகவும், கவிதையாகவும் உருமாறிய விதம் ஆச்சர்யமானது தானே?

கவிதையில் கவிஞனின் பார்வை சாமானியனின் பார்வையில் இருந்து மாறுபடும் போது அந்தக் கவிதை நம்மை ஆச்சர்யப்படுத்தி விடுகிறது.

கந்தர்வன் எழுதிய ஒரு கவிதையில், ஒரு வீட்டு வாசலில் உரித்துப்போட்ட ஆரஞ்சுப்பழத் தோல் கிடக்கும். தெருவில் போகிறவர் “ஐயோ, வீட்டில் யாருக்காவது உடம்பு சரியில்லையா?” என்று பதறி விசாரிப்பதாக எழுதுவார்.

வறுமையின் சித்திரம். ஏழை வீட்டில் ஆரஞ்சு சாப்பிடுவது நோயுற்று இருக்கும் போது மாத்திரமே.

எங்காவது சென்ட் வாசனை வந்தால் சிலருக்கு ‘பிணம்’ நினைவு வரும்! இந்தப் பகுதியை எழுதிக் கொண்டிருக்கும் போது உதித்த யோசனை இது.

கணவனுடன் கருத்து மாறுபாடு காரணமாக அழுது கொண்டிருப்பாள் மனைவி. அருகில் இருக்கும் அவளது குழந்தை, “ஏம்மா அழுகிறாய்? பசிக்குதா?” என்று கேட்பதாக நான் ஒரு கவிதை எழுதினேன்.

ஒரு மந்தகாச மனநிலையில் நான் எழுதிய இன்னொரு வரி.

‘மெரினா கடற்கரை

முறுக்கு வியாபாரம்

கண்ணகி சிலை.’

எஸ். வைதீஸ்வரனின் ஒரு கற்பனை எப்போது நினைத்தாலும் புன்னகையை வரவழைக்கும்.

சென்னையின் அசோக்நகரின் பிரதான சாலை. உதயம் திரையரங்கப் பக்கம், நாற்சந்தி. சிக்னலில் ஸ்தூபி. அதில் உயரத்தில் நமது தேசியக் கொடியை நினைவு படுத்தும் விதமாக நான்கு சிங்கங்கள் அமைத்திருப்பார்கள்.

வைதீஸ்வரன் கற்பனை செய்கிறார் இப்படி.

போக்குவரத்து நெரிசலுக்கு பயந்து இப்படி ஸ்தூபியின் உச்சிக்கு ஏறிக்கொண்டதா இந்தச் சிங்கங்கள்.

என்ன ஆச்சர்யமான கற்பனை!

Comments

Popular posts from this blog