சிறுகதை – நன்றி பரணி காலாண்டிதழ்
Art Jeeva
மொழிசாராத் திரைப்படங்கள்
எஸ். சங்கரநாராயணன்
குளிக்கப்
போகிறோம், என்றுதான் நினைத்தாள், என்றாலும் முகத்துக்கு ரோஸ் பவுடர் போட்டுவிட்டான்
சிங்காரம். லிப்ஸ்டிக் வேறு. கருப்பு முகத்துக்கு அது பாந்தமாகவும் இல்லை. காட்சிக்கான
உடை... உள்ளாடையின் எலாஸ்டிக் நாடாக்கள் அதிக நீளமாய் வைத்திருந்தார்கள். ஆம்பிளை உடைக்கு
இந்த மெனக்கெடல் கூடக் கிடையாது. வெறும் இடுப்புத் துண்டு. அதுவே போதும். லைட். கேமெரா.
ரோலிங். ஸ்டார்ட் ஆக்ஷன்... “நல்லா ஈடுபாடா முகத்தில் பாவனை பண்ணும்மா.” அந்த வெளிச்சத்தில்,
அத்தனை சூட்டில் பாவனையாவது... கண்ணே கூசும். இப்போது பரவாயில்லை. பழக்கம் வந்துவிட்டது.
இது எத்தனாவது படம் என்பதே நினைவில்
இல்லை. என்றாலும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பது வேடிக்கை! அல்லது அது வருத்தமாகவும்
இருக்கலாம். ஆனால் அவள் வருத்தப்படுவது இல்லை. வருத்தப்பட்டு ஆவது என்ன? அவள் வருத்தப்பட்டால்
அதைக் கரிசனமாய் விசாரிக்க யார் இருக்கிறார்கள்? கரிசனப்பட ஆள் இல்லாமல் போனால் அழுகை,
சிரிப்பு ரெண்டுக்குமே அர்த்தங் கிடையாது.
ஆனால் ஒண்ணு. அவளைப் பற்றிய அநேக
விஷயங்கள் ஊரில் நிறையப் பேருக்கு, அவள் வீட்டில் யாருக்குமே, தெரியாது. அவள் சென்னையில்,
குடும்பத்தில் எல்லாரும் மதுரையில். அப்பா இல்லை. குடிகார அண்ணன். தங்கைக்கு அவளே கல்யாணம்
பண்ணி வைத்தாள். அவளை அவர்கள் முற்றுமாக அறிய மாட்டார்கள். வீட்டின் நடுவே முற்றம்
என்றோ, காட்டின் நடுவே பொட்டல் என்றோ, தலையின் மத்தியில் சொட்டை என்றோ கூட... அதை உருவகப்படுத்தலாம்,
அவள் நிலைமையை.
கூட யார், என்று பார்த்தாள். காளிமுத்து.
அப்ப பரவாயில்லை. அனுசரணையானவன். சில சமயம் வெளிநாட்டில் இருந்து வந்து படம் எடுப்பார்கள்.
பாடாய்ப் பாடுபட வேண்டியதாகி விடும். கதை திரைக்கதை வசனம் எதுவும் அற்ற படங்கள் அவை.
மொழிசாராத் திரைப்படங்கள். நாயகன் வெளிநாடு, நாயகி லோக்கல் என்பதே சகஜம் இங்கே. அநேகப்
படங்களுக்கு டைட்டிலே கிடையாது. நடிக நடிகை பேர் கூடக் கிடையாது. ஆம்பளை. பொம்பளை.
அவ்வளவே. மகா அடையாளம் அது. அந்த வேறுபாடுகளை நாங்களே இதோ தெள்ளத் தெளிவாக அடுத்து
விளக்கப் போகிறோம் படத்தில். அது போதாதா?
அதில்கூட பெண் பெண் வகை தனி. அலிகளும்
சிலசமயம் இடம் பெறுவது உண்டு. ஒரு ஆண், ரெண்டு பெண். ரெண்டு ஆண், ஒரு பெண், நிறைய ஆண்கள்
நிறையப் பெண்கள், என வகை வகையாக எல்லாம் படங்கள் வந்தாயிற்று. கடலை மாவில் எத்தனை விதவிதமாக
பட்சணங்கள் செய்கிறார்கள். அதைப்போல. விதம் விதமான ருசிகள் மனுசனுக்கு வேண்டித்தான்
இருக்கிறது. பிரதான படம் ஓடுகையில் குபீரென்று தியேட்டர் உள்ளே குதிக்கிற படங்கள்.
அதுவரை சளசளவென்று சப்தமாய் இருந்த சனங்கள் கப் சிப். வாயைப் பிளந்து ஒரு பார்வை. கூட்டத்தில்
நடுத்தர வயசும், கிழவர்களும் அதிகம்.
இப்படி பிட் ஓடும் படக்காட்சிகளுக்கு
பெண்கள் முற்றாக அனுமதி இல்லை. சில இலக்கியக் கூட்டங்கள் கடைசி சனிக்கிழமை, ரெண்டாவது
ஞாயித்துக்கிழமை என்று குறிப்பிட்ட நாளில் நடப்பது இல்லையா. அப்படி ஏற்பாடுகள் இதற்கும்
உண்டு. அந்நாட்களில் ஊரே பரபரத்தது. எப்படியோ காதுங் காதுமாக எல்லாம் பரவியது. இலக்கியக்
கூட்டத்துக்கும் இதற்கும் முக்கியமான வித்தியாசம் உண்டு. இலக்கியக் கூட்டங்களுக்கு
டீ பிஸ்கெட் போண்டா என்று தந்தாலும் கூட்டமே வராது. இதற்கு? அந்தாக்ல அப்புதுய்யா!
தனியே முழுப் படமாகவும் சில பிரத்யேகத்
திரையிடல்கள், தீவிர ரசிகர்களுக்காக, அவர்களது ஆத்ம திருப்திக்காக என உண்டு. சென்சாருக்கே
போகாத திரைப்படங்கள். சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகளும் திரும்பச் சேர்ந்துகொள்ளும்
படங்கள். காமெராவில் ஆன் ஆஃப் தெரிந்தால் அவன் ஒளிப்பதிவாளன். இயக்குநர் தேவையே இல்லை.
அல்லது தயாரிப்பாளரே இயக்குநர். நாயகரும் கூட சில சமயம் அவரே.
கதை? அந்த நிமிஷம் தோன்றிய கதை தான்.
அங்க அவன் உட்கார்ந்திருக்கான். நீ கைல பால் சொம்பு, அல்லது தம்ளர். (எது இருக்கோ அது.)
எடுத்திட்டுப் போறே. உள்ளே பால் இல்லாட்டியும் பரவாயில்ல. அவன்கிட்டே நீ போனதும் உன்
முந்தானை சரியுது. நல்ல சினிமாவில் இது சிம்பாலிக் ஷாட்! இப்படி முதல் நான்கு நிமிடங்கள்
தாண்டியதும் எல்லாப் படங்களும் ஒரேமாதிரி ஆகிப் போகின்றன.
அவன் உட்கார்ந்திருப்பான். கதவு தட்டப்படும்.
போய் அவன் திறந்தால் அவள் நிற்பாள். பிறகு அதே சம்பவங்கள். அவள் உடைமாற்றிக் கொண்டிருப்பாள்.
சன்னல் வழியே ஒருவன் பார்ப்பான். கதவைத் தாளிடாமல் ஏன் அவள் உடைமாற்றினாள் தெரியவில்லை.
அவன் உள்ளே நுழைந்துவிடுவான். அவனைப் பார்த்து அவள் அதிர்ச்சி யடையவேண்டும். முகத்தில்
சலனமே இல்லாத ஒரு நடிப்பு. பிறகு அதே சம்பவங்கள். இம்மாதிரி திரைப்படங்களில் குளிக்கும்
போது கூட யாரும் கதவைத் தாளிடுவது இல்லை. அதைத்தான் வள்ளுவர், அன்பிற்கும் உண்டோ அடைக்கும்
தாள்... என்கிறாரோ என்ன கண்றாவியோ?
கொங்குதேர் வாழ்க்கை, என ஓர் 'இறையனார்
பாடல்'. பெண்ணின் கூந்தல், அதற்கு இயற்கையிலேயே மணம் இல்லை, என்று பொருள், பரவலான வெளிப்படையான
பொருள் உண்டு. தேர்ந்த வித்தகர்கள், தும்பியிடம் நாயகன் யோசனை கேட்கிறானே? ஆகவே பெண்ணின்
கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் இல்லை, என்பது பூடகப் பொருள், என்று வாதிடுவார்கள்.
அதைப்போல?...
பெண் கதவைத் தாளிடாமல் குளிக்கப்
போனால், அவள் இவன் உள்ளே வருவதை எதிர்பார்த்தாள், விரும்பினாள், என்றும் ஆன்றோர் பொருள்
கொள்ளக் கூடும்.
கல்யாண வீடியோக்கள் பார்த்தால் காட்சிகளுக்கு
சம்பந்தம் இல்லாமல் எதாவது இன்ஸ்ட்ருமென்ட்டல் இசை அல்லது பிரபல சினிமாப் பாடல், பின்னணியில்
ஓடும். கல்யாணப் பெண் திரும்பத் திரும்ப நாலா திசையிலும் பார்த்துச் சிரிக்கிறதை பின்னணி
இசை இல்லாமல் பார்க்க சகிக்காது. அதை எவ்வளவு நேரம் பார்ப்பது? சில வீடியோக்களில் பின்னணி
இசையுடனேயே பார்க்க சகிக்காது. அதற்காக இளையராஜாவைப் போய் யாரும் தொந்தரவு செய்வது
இல்லை. அதைப்போல இதிலும், இந்தப் படங்களுக்கும் இளையராஜா கட்டுப்படி ஆகாது.. இதிலும்
இசை அல்லது ஒட்டாத ஒலிகள் (உதடு ஒட்டிய ஒலிகளும்) சேர்ப்பு உண்டு. இளையராஜா இசையமைத்த
சினிமாப் பாட்டு எதாவது எடுத்துப் போட்டுக் கொண்டால் ஆச்சு. (அப்போது அது மொழிசார்ந்த
திரைப்படமும் ஆகிவிடும்.) ஒருவகையில் இதுவும் கல்யாண வீடியோ என்று சொல்லலாம். பார்ட்
ட்டூ. அதாவது பார்ட் ஒன்னின் மிச்ச சொச்சம். அல்லது தொடர்ச்சி.
பார்ட் ட்டூ என்றாலும் சில வேறுபாடுகள்
உண்டு. எந்தக் கல்யாண வீடியோவிலும் குளியல் காட்சிகள் இடம்பெறா. முழு அலங்காரமும் தலை
நிறையப் பூவூம் வெட்கமுமாகவே பெண்ணைப் பார்க்கலாம், அதாவது கல்யாணத்தில். அதேபோல இந்த
பார்ட் ட்டூ - இடுப்பில் வெறுந் துண்டுடன் மாப்பிள்ளை. இப்படி கல்யாண வீடியோ? வாய்ப்பே
இல்லை. பார்ட் ஒன், விதவிதமான ஆடைகள் அணிவது. பார்ட் ட்டூ, அவற்றை அவிழ்ப்பது. அன்றைக்கு
ஒரு கலைப்படத்தில், பாவ மன்னிப்பு பாடலே சேர்த்திருந்தார்கள். ஆடை யின்றிப் பிறந்தோமே,
ஆசை யின்றிப் பிறந்தோமா?
அவர்கள் ஆசையுடன் ஆடையின்றிக் கிடந்தார்கள்.
·
ஊருக்கு ஒதுக்குப்புறமாக காலியான
வீடு. பெரிய விளக்குகள் எல்லாம் கட்டுப்படி ஆகிறது இல்லை. அதிகபட்சம் ஜுனியர் விளக்குகள்.
500 வாட், 1000 வாட் பல்புகள். இந்தப் பக்கம் ஒண்ணு. அந்தப் பக்கம் ஒண்ணு. விளக்கு
நிற்கிறதோ, படக்குழுவின் கையோ விரலோ வேலைசெய்கையில் படத்தின் ஃப்ரேமுக்குள் வரக் கூடாது.
அநேகமாக வந்துவிடுகிறது. அதுகூடப் பரவாயில்லை. படப்பிடிப்பு நடக்கிறது. குளிக்கப் போன
பெண் ஷவரைத் திருகினால் தண்ணீர் வரவில்லை. காமெராவைப் பார்த்து கையால் 'இல்லை' என உள்ளங்கையை
மேல்பக்கமாகத் திருப்பிக் காட்டுகிறாள். அதெல்லாமும் நடந்தும் கட் பண்ண முடியாமல் போகிறது.
எடிடிங் கூட அற்ற திரைப்படங்கள்.
இம்மாதிரிப் படங்களில் நடிக்கவும்
சிறு அனுபவம் தேவையாய்த்தான் இருக்கிறது. எது நடந்தாலும் கலவரப்படாமல் முகத்தில் புன்னகை
மாறாமல் நடிக்க முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. காமெரா பக்கம் இருந்து இப்படிச் செய்,
அப்படிச் செய், என கட்டளைகள் வரும், அதை முகத்தில் நடிப்பில் காட்டாமல் அதன்படி செய்ய
வேண்டும். அத்தனை வெக்கையில் உடம்பில் வியர்வை ஆறாகப் பெருகி ஓடுவதைப் பொருட்படுத்தாமல்
நடிக்க வேண்டியிருக்கிறது. காமெராவுக்கு மறைக்காமல் ஒத்துழைப்பு தர வேண்டியிருக்கிறது.
கூச்சப்பட்டால் அத்தனையும் வீண். அந்த வகையில் அவளுக்கு நல்ல பேர் இருந்தது. நல்ல அனுபவம்
இருந்தது. என்றாலும் பாவம் கல்யாணம் தான் ஆகவில்லை.
அவர்களுக்கு என்ன தேவை என்பது அவளுக்குத்
தெரியும். அதை சிறிது மிகையாகச் செய்து, தன்யோசனையில் அவள் இன்னும் சிறப்பாக்கிக் காட்டினாள்.
அதாங்க அனுபவம்ன்றது. தனியே முகம் மாத்திரம் காமெராவில் வரும்போது உதட்டைக் கடிப்பதில்
அவள் தேர்ச்சி பெற்றிருந்தாள். அவளது முத்திரை அது என இந்நாட்களில் ஆகியிருந்தது. அதற்காகவே
அவளுக்கு லிப்ஸ்டிக் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. லேசாக முன் பின் ஆடியபடியே
முகத்தை இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திருப்பி உதட்டைக் கடித்தல். படம் பார்க்கிறவன்
பேஜாராயிற மாட்டானா?
காட்சி சிறப்பாக வந்தால் எடிடிங்
செய்து இன்டர்கட்டில் இதை அடிக்கடி காட்டினால் இன்னும் ஆவேசக் கிளர்ச்சியாய் இருக்கும்.
சில சமயம் காட்சியில் தவறுகள் நிகழ்ந்து விடும்., வெளிச்சம் குறைந்து, விளக்கு அணைந்து
தகராறு செய்தாலோ, மினசாரமே துண்டிக்கப் பட்டாலோ, இந்த இடைக்காட்சியைக் காட்டி, பின்
சம்பவத்தைத் தொடரலாம்! ஆக இந்த அளவில் அது சினிமாவின் நுணுக்கமான உத்தியும் ஆகிறது.
உத்தி தப்பாகிப் போவதும் உண்டு. அவர்கள் சல்லாபத்தில் இருக்க, மெல்ல சுவருக்கு நகர்ந்தது
கேமெரா. சுவரில் ஒரு கடவுள் படம். கையை உயர்த்தி ஆசி வழங்கும் கடவுள்.
ஒளி ஏற்பாடுகளை முடித்து படப்பிடிப்பு
துவங்க, சில படங்களில் 'அவன்' சரியாக ஒத்துழைக்காமல், ஒத்து வராமல் படப்பிடிப்பு திகைத்து
விடுவதும் உண்டு. அப்போது படக்குழுவில் யாராவது நாயக அந்தஸ்து திடீரென்று அடைவர். மணக்கோலம்
பார்க்க வந்தேன். மணமகன் ஆனேன், என நம்மில் ஒரு பாட்டு உண்டு. அதைப்போல. படத்தின் தயாரிப்பாளர்,
அநேகமாக அவரே பல சந்தர்ப்பங்களில் நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்வதும் உண்டு.
ஆனால் 'அவள்' சரியாக ஒத்துழைக்கா விட்டால் தான் விஷயம் இன்னும் கடுமையாகி விடும். எடுபடாமலே
போய்விடும். மாற்று நடிகையை உடனே தேடிக் கொண்டுவர முடியாது. படப்பிடிப்பை ரத்து செய்யவும்
முடியாது.
“சனியன் இவ காமெரா இல்லாமல் நல்லா
ஒத்துழைச்சாளேன்னு கூட்டியாந்தேன்” என்பார் தயாரிப்பாளர்.
·
அவள் இடத்தில் இருந்து படப்பிடிப்பு
நடக்கும் இடத்துக்கு வரவே ஒண்ணரை மணி நேரம் எடுக்கிறது. நாலு தெரு தள்ளி பஸ்சில் இறங்கி,
பஸ்சின் ஆண்களின் பார்வைகளைத் தவிர்த்த மாதிரியும், தவிர்க்காத மாதிரியும் கடந்து போவாள்.
சில ஆண்கள் அவள் பின்னால் வருவார்கள். வந்தபின், தெருநாயை அப்படியே விட்டுவிட்டு வீட்டுக்குள்
போய்விடும் சிறுவனைப் போல, அவளைத் திகைக்க வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். அவள் எப்படி,
என அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பினார்கள். அவ்வளவுதான், என அறிய அவளுக்கு ஆயாசமாய்
இருக்கும். இந்த ஆண்கள் விவரமானவர்கள் தான். இப்படிப் பெண்களை அவர்களுக்கு மோப்பம்
பிடிக்கத் தெரிகிறது. இழுத்திப் போர்த்திக் கொள்ளலாம். அதற்காக இத்தனை தடவையா?
நாலு தெரு கடந்து இந்த வீட்டுக்கு
வந்தாள். வீடு வெளியே பூட்டியிருந்தது. அதை அவள் எதிர்பார்த்திருந்தாள். பின் வழியாக
உள்ளே வந்தாள். உள்ளே என்ன நடக்கிறது யாருக்குமே தெரியாது. ஒருநாள் முழுக்க அங்கே உள்ளறையில்
விளக்கு எரியும். என்றாலும் வெளியே எதுவுமே தெரியாது. மகா அமைதியாகக் கிடந்தது தெரு.
பசித்தது வரும்போதே. நேற்றே கூட அவள்
சாப்பிட்டிருக்கவில்லை. கொஞ்சம் வெளியே போய் வந்தாள். எதுவும் சிக்கவில்லை. யாரும்
அவளைப் பின்தொடரவில்லை. ஒருத்தன்... கிழவன். அவளுக்குப் பிடிக்கவில்லை. ஹ்ம். அவனை
விட்டிருக்க வேண்டாம், என இப்போது மறுநாள் நினைத்தாள். உள்ளே மணி டிபன் பாக்சில் இருந்து
அவசர அவசரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்ததும் சாப்பாட்டுக் குரலில்
“வாக்கா” என்று தலையாட்டினான். அவனைப் பார்த்ததும் அவளுக்கு இன்னும் பசித்தது.
காளிமுத்துவும் அப்பதான் வந்திருந்தான்.
“என்னடா லேட்டு?” என்று சாமியப்பன் அவனைக் கோபமாய்க் கேட்டார். “பிள்ளைக்கு உடம்பு
சரியில்லை சார்” என்றான் அவன் தயக்கத்துடன். “எதாவது சாக்கு உங்களுக்கு...” என்றார்
அவர் எரிச்சலுடன். எனக்குக் கல்யாணம் ஆகவில்லை, என்பது என் பிரச்னை என்றால், கல்யாணம்
ஆனது இவன் பிரச்னை, என நினைத்துக் கொண்டாள் அவள். காளிமுத்து அவளைப் பார்த்துப் புன்னகை
செய்தான். அவளும் புன்னகைத்தாள்.
சாமியப்பன் மணி சிங்காரம் என்கிற
இந்த காம்பினேசன் அவளுக்குப் புதிது அல்ல. ரெண்டு வாரத்துக்கு ஒரு படம் எடுக்கிறார்கள்.
இதில் நடிக்க அவ்வப்போது புதுசாயும் ஆள் கொண்டு வருகிறார்கள். ஒருமுறை கனகா என்கிற
புதிய பெண்ணுடன் அவளே நடித்திருக்கிறாள். கனகாவுக்கு அது புது அனுபவம். “சொல்லிக் குடுங்கக்கா,”
என்று அவளைப் பார்த்துச் சிரித்தாள். “கேள்விப்பட்டது இல்லியா நீ? சொல்லித் தெரிவதில்லை
மன்மதக் கலை” என்றாள் இவள். கனகாவுக்கு அத்தனை படிப்பு கிடையாது. இவள் சொன்னது அவளுக்குப்
புரிந்ததா தெரியவில்லை. ஹ்ம். படிப்பு என்ன? அவள் பத்து வரை படித்தாள். அதனால் என்ன
பயன்? இந்த ரெண்டு பேருக்கு இடையே என்ன வித்தியாசம்? அதொண்ணுங் கிடையாது தான்.
தொலைக்காட்சி பேட்டி என்று போனால்,
அரைமணி நேரக் கணக்கு. பேட்டி சிறப்பாக இருந்தால் அப்படியே அடுத்த அரைமணிக்கும் ஷுட்
பண்ணி, ரெண்டு பகுதிகளாக ஒளிபரப்புவார்கள். அதைப்போல, சின்னப் படங்களாக முடிந்துவிடும்
படங்கள் சில. சில படங்கள் ஒரு மணி அளவில் கூட நீளும். அதற்கேற்ப சம்பளம் கூடத் தருவார்களா
இங்கே? மாட்டார்கள். என்ன நீ, சரியாவே பண்ணல?.. என்று புலம்பியபடியே தான் கணக்கு பைசல்
பண்ணுவார்கள். சில குடிகார ஆட்களையும் சமாளிக்க வேண்டும். (கனகா, ஆள் கில்லாடி. அவளே
குடிக்கிறாள். அவளே இவளுக்குப் பாடம் எடுக்கலாம் சில விஷயங்களில்.)
தெரியாத இடங்களில் நடிக்கவோ, கூப்பிட்டால்
போகவோ அவள் தயங்கினாள். எல்லாம் நல்லபடியா போயிட்டே இருக்கிறாப் போல இருக்கும். திடீரென்று
எல்லாமே குழம்பி ஸ்தம்பித்து விடும். ஒருநாள் ரெய்ட் என்று பயமுறுத்துவார்கள். ஒருநாள்
போலிஸ்காரனே இளித்தபடி உள்ளே வருவான். ஹா, படம் எடுக்கிற ஆள் ஒவ்வொருவனும் ஒவ்வொரு
ரகம். ஒவ்வொரு ருசி. அதைப்போலவே படங்களிலும் சம்பவங்கள் அமைகின்றன. மென்மையான கடுமையான
வக்கிரமான... என பலவகைக் காட்சிகள்.
மணி நல்ல பையன். அவனுக்கு ஒரு விதவை
அக்கா. எப்ப அவன் வேலை என்று போனாலும் சாப்பாடு கட்டிக் கொடுத்து விடுகிறாள். “ஒருநாள்
வீட்டுக்கு வாங்கக்கா” என்றுகூட அவன் பிரியமாய் அழைத்தான். எப்ப வாய்க்குமோ தெரியவில்லை.
மணி அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான். “என்னக்கா?” அவன் காதில் “பசிக்குதுறா” என்றாள்.
“ஐயோ முன்னாடி சொல்லியிருக்கக் கூடாதா? இப்பதான் நான் கொண்டுவந்ததைச் சாப்பிட்டேன்”
எனற்வன் “ஃப்ளாஸ்க்ல டீ இருக்கு... கொண்டுவரேன்” என்று போனான்.
“என்ன?” என்றார் சாமியப்பன். மணி
ஃபிளாஸ்க்கைத் திறப்பதைப் பார்த்துவிட்டு “அதுக்குள்ளியா? இன்னும் வேலை ஆரம்பிக்கவே
இல்லை?” என முகம் மாறினார். “அதைக் கண்டுக்காதீங்கக்கா” என்றபடி ஒரு பாலிதின் கப்பில்
டீயை நீட்டினான் மணி. சின்னப் பலகையில் த்ரீ பின் பிளக் பாயிண்ட்டுகள் எடுத்து அதில்
இருந்து பெரிய பல்புகளுக்கு இணைப்பு தந்திருந்தது. விளக்கை அவன் ஆன் செய்ய அந்த அறையே
மகா வெளிச்சமாகிப் போனது. சுவரின் காரை உதிர்ந்த பகுதிகள் இன்னும் விகாரமாய்த் தெரிந்தன.
அவள் உடைகளை, நீள எலாஸ்டிக் ப்ரா
வகையறா, வாங்கிக்கொண்டு உடைமாற்ற பக்கத்து அறை தேடினாள். “இங்கியே மாத்திக்க. என்ன
இப்ப?'' என்றார் சாமியப்பன். இடுப்பில் துண்டுடன் காளிமுத்து. கையில் வாட்ச், “இருக்கட்டும்”
என்றார் சாமியப்பன். உடைகள் இல்லாவிட்டாலும், பெண்ணுக்கு தங்க அரைஞாண் மாதிரி ஏதாவது,
காதில் குண்டலங்களோ வேறு கழுத்து நகைகளோ இருக்கட்டும், என அவர் நினைத்தார். சில சனியங்கள்
முழுசாய் உரித்துப் பார்க்க சகிக்காது. எத்தனை படம் எடுத்திருக்கிறார்.
இவள் பரவாயில்லை. கனகா எல்லாம் சுட்டுப்போட்டாலும்
கேமெரா முன் லாயக்கே இல்லை. பின்? லாயக்கு... என்றாலும் நம்ம தேவை இதுதானே? கேமெரா
'முன்' தானே? வயசு என்னாவுது? இருபத்தி நாலு அஞ்சி இருக்கும் கனகாவுக்கு. அப்பறம் என்ன
“சொல்லிக் குடுங்கக்கா?” எரிச்சலாய் வந்தது அவருக்கு. “அவளுக்கே கல்யாணம் ஆகல்ல. நாங்கதான்
சொல்லிக் குடுக்கணும்...” என்றார் சாமியப்பன்.
படப்பிடிப்பு ஆரம்பிக்கு முன் காளிமுத்துவுக்கு
வயிர்க்க ஆரம்பித்திருந்தது. அந்த அறையே புழுங்கித் தள்ளியது. விளக்குகள் ஒளிரும் வெளிச்சம்
வேறு. அவனுக்கு சம்பந்தம் இல்லாமல் புது டர்க்கிடவல் அவன் இடுப்பில். அவளுக்கும் புதிய
உடைகள். உடனே நனைக்கப் போகிறார்கள் அதை. நீள எலாஸ்டிக் பட்டி வைத்த உள்ளாடை. அவளைப்
பார்த்தான். அங்கேயே உடை மாற்றிக் கொண்டிருந்தாள் அவள். அவள் கூச்சப் படுகிறதைப் பார்த்து
முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவனும் அவளுமாய் முன்பே நடித்திருக்கிறார்கள். அவள்வீடே
கூட போரூர் தாண்டி எங்கேயோ. எப்படி இதில் வந்து ஜோதியில் கலந்தாள் தெரியவில்லை.
அவன் வந்தது விபத்து போலத்தான். அவன்
ஒரு எலெக்ட்ரிஷியன். இம்மாதிரி ஒரு படத்தில் மின்சார வேலைக்கு என வந்தவன், நாயகன் சரியாக
நடிக்காததில், இவனுக்கு ஒரு இது. “நான் வேணா நடிக்கட்டுமா சார்?” என அவனே வாயை விட்டான்.
ஆளும் நல்லா 'பாடி'யா இருந்தான். அன்றிலிருந்து அவனைக் கூப்பிட்டு விட ஆரம்பித்தார்கள்.
நாலைந்து கம்பெனிகளை அவன் அறிவான்.
அவள் தயாராகி விட்டாள்.
·
போய் உட்காரும்மா. நீ எதோ புத்தகம்
படிக்கிறே. (அது ஒரு மாதிரியான புத்தகம், என தனியே சொல்ல வேண்டியது இல்லை.) அப்படியே
உணர்ச்சிவசப் படறே. (உதட்டை அவள் கடிக்கப் போகிறாள். லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ள வேண்டும்,
என நினைத்தாள் அவள்.) அடுத்த ரெண்டாவது நிமிஷம், மொபைலை எடுத்துப் பேசறே. அப்பறம் கதவு
தட்டப்படுகிறது. அவன் உள்ளே வருகிறான். (துண்டோடவா?... என அவன் கேட்கவில்லை. இந்தப்
படத்தில் எல்லாம் லாஜிக் ஏது? உடையை அவிழ்க்கிறதே நேர விரயம் என்கிற கட்சி உண்டு இங்கே.)
நல்லவேளை டீ கிடைத்தது, என நினைத்தாள்
அவள். கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது. அல்லாமல் வயிற்றுப் பகுதியைத் தடவித் தடவி அவள்
உதட்டைக் கடித்தால் பசி என்றுதான் பாவனை வந்திருக்கும். குஜிலி என்று போட்ட ஒரு புத்தகம்
வைத்திருந்தார்கள். கையில் எடுத்து பிரித்து வாசிப்பதாக பாவனை செய்ய ஆரம்பித்தாள்.
என்ன பக்கம், என்ன வாசிக்கிறாள் கேமெராவில் தெரியாது. அதன் வெளி அட்டை, யாரோ குஜிலி,
அதுமாத்திரம் தெரியும் ஃப்ரேமில்.
காளிமுத்து காத்திருந்தான். குழந்தைக்கு
உடம்புக்கு இப்ப எப்பிடி இருக்கிறது தெரியவில்லை. பக்கத்து வீட்டு உமாபதியிடம் அம்பது
ரூபாய் வாங்கிக்கொண்டு வந்து மனைவியிடம் தந்திருந்தான். “24 மணிநேர ஆஸ்பத்திரி எங்கயாச்சும்
காட்டுடி,” என்றுவிட்டு வந்தான். காட்டினாளா தெரியவில்லை. ஊரில் எளிய சனங்களைப் பார்க்கும்
பாதிபேர் கம்பவுண்டர்களாக இருக்கிறார்கள். இல்லாட்டி போலி டாக்டராகக் கூட இருக்கிறார்கள்.
குடுக்கற அம்பது ரூபாய், மருந்துடன் சேர்த்து, அதற்கு சர்ட்டிஃபிகேட்டை வெரிஃபை பண்ண
முடியுமா?
“கதவுக்கு அந்தப் பக்கமாப் போயி நில்லுப்பா”
என்றார் சாமியப்பன்.
அந்தக் காட்சிகள் முடிந்துவிட்டன
என்பதையே அவன் கவனிக்கவில்லை. நீள எலாஸ்டிக் நன்னாதான் வேலை செய்யுது. “அக்கா இன்னொரு
டீ?” என்று கேட்டான் மணி. நல்ல பையன் அவன். வேணாம், என்று மறுத்தபடி மேலே துண்டால்
போர்த்திக் கொண்டாள். அவளே தன் உடைகளை நெகிழ்த்திக் கொள்வதாகக் காட்சி முடிந்திருந்தது.
மொபைலில் அழைத்துப் பேசியும் ஆயிற்று.
விளக்குகளை வாசல் பார்க்கத் திருப்பி
வைத்தார்கள். அதற்கு சிறிது நேரம் பிடித்தது. உடம்பில் வழிந்த வியர்வையைக் கைக்குட்டை
எடுத்துத் துடைத்துக் கொண்டாள். சீக்கிரம் குளித்துவிட்டால் நல்லது. ஒவ்வொரு படமும்
ஒவ்வொரு மாதிரி. சாமியப்பன் கண்டிப்பாகக் குளியல் காட்சி எடுப்பார். என்ன சோப் வாங்கி
வைத்திருக்கிறார் தெரியவில்லை. சாண்டல் சோப் எல்லாம் கிடைக்காது. ஹமாம் இல்லாட்டி சந்திரிகா.
வாசல் கதவைப் போய்த திறந்தாள். அவன்
காளிமுத்து. இடுப்பில் துண்டுடன். அவனே பாத்ரூமில் இருந்து வந்தாப்போல இருந்தது. அவள்
அப்படியே சுவரைப் பார்ககத் திரும்பி திகைப்டன் நெஞ்சை, உஙளளாடைக்கு மேல் பிடித்துக்
கொள்கிறாள். அவன் வந்து அவள் கூந்தலை சற்று விலக்கிக் கன்னத்தில் உதடுகளால் உரசுகிறான்.
குண்டலங்கள் ஆடின. இளையராஜாவுக்கு வேலை. சாமியப்பன் மேலும் கதையைச் சொல்லித் தரத் தேவையில்லை.
அதுக்கப்புறம் வழக்கமான படமாக அது மாறிவிட்டது.
கைகளோட கைகள் பிணைகின்றன. விரல்களோடு
விரல்கள் சேர்கின்றன. அவனிடம் இருந்து ஒரு
சூயிங்க வாசனை. சில ஆட்களுடன் சாராய நெடியுடன் நடிக்க வேண்டியிருக்கும் அவளுக்கு. அவளது
மேக்அப் பவுடர் அவனுக்கு நெடியடித்தது. காதில் குண்டலங்கள் அணிந்திருந்தாள். அவள் அசையுந்தோறும்
குண்டலங்கள் ஆடின. சிவப்பான அதரங்கள் துடித்தன. சாமியப்பன் எல்லாவற்றையும் உற்றுப்
பார்த்தபடி யிருந்தார்.
“ரைட்” என்றார் அவர் திருப்தியுடன்.
அப்படியே அவளை நடத்தி கட்டிலுக்கு அழைச்சிக்கிட்டு வரே...”
காமெராவை லேசாய்த் திருப்பினார்.
திரும்ப விளக்குகளை அணைத்து இடம் மாற்ற வேண்டியிருந்தது. திரும்பப் போர்த்திக் கொண்டாள்
அவள். காளிமுத்து “உன்னை மதுரையில பார்த்தேனே?” என்றான். ஆச்சர்யத்துடன் அவனைப் பார்க்கத்
திரும்பினாள். “அப்பிடியா? எப்ப?” என்றாள். “போனவாரம்...”
“ஆமா. தங்கச்சி பொண்ணுக்குக் காது
குத்து. போயிருந்தேன்” என்றாள் அவள். “எங்க பாத்தீங்க?” என்று கேட்டாள். “மேல மாசி
வீதில” என்றான். “நீங்க எங்க அந்தப் பக்கம்?” என்று அவள் கேட்டாள். அவர்கள் பேசியதைக்
கேட்டபடியே விளக்குகளை சிங்காரம் மாற்றிக் கொண்டிருந்தான். “என் மனைவியோட மீனாட்சி
அம்மன் கோவிலுக்கு வந்திருந்தேன்” என்றான் அவன்.
“கூப்பிட்டுப் பேசியிருக்கலாமே?”
“கூட இவ இருந்தா” என்று அவன் சிரித்தான்.
“அவகிட்ட உன்னை எப்பிடி அறிமுகப் படுத்தறது... அப்டின்னு ஒரு யோசனை” என்றான். அவளுக்கு
வருத்தமாய் இருந்தது. “தெரிஞ்சவங்கன்னு சொல்லலாம் இல்லே?”
“அவளுக்கு நான் சினிமாவுல நடிக்கிறதாத்
தான் தெரியும். என்ன சினிமா என்ன விவரம், தெரியாது” என்றான் அவன். “நான் எப்பிடிச்
சொல்றது?” என்றான். “ஒருநாள் என்னையும் ஷுட்டிங் கூட்டிட்டுப் போங்கன்றா அவ!”
ஹ்ம்” என்றாள் அவள். “அன்னிக்குப்
பாத்தா... கனகா, அவ தங்கச்சியையே கூட்டியாந்திட்டா” என்றாள்.
சிரித்தார்கள். சிங்காரம் தலையாட்டினான்.
பீடி குடிக்காமல் அவனால் இருக்கவே முடியாது. அறையெங்கும் பீடி நெடி அடித்தது. சாமியப்பன்
காமெராவில் படுக்கையைப் பார்த்தார். கோணமும் வெளிச்சமும் சரியாக இருந்தது. “நான் வேணா
சம்பளத்துல பாதி தரட்டுமா?” என்றாள் அவள். அவனுக்குப் புரியவில்லை. “என்னது?“ என்று
அவளைப் பார்த்தான். “இல்ல, பிள்ளைக்கு உடம்பு சரியில்லைன்னீங்களே. அதான் செலவுக்கு...”
அவனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. “இல்ல பரவால்ல. தேங்ஸ்” என அவள் கையைப் பிடித்துக்
கொண்டான்.
“அப்படியே அவளைக் கூட்டிட்டு படுக்கைக்குப்
போ” என்றார் சாமியபப்பன். அவள் மேல்துண்டை உதறிவிட்டு உள்ளாடைகளுடன் நின்றாள். அவன் அவளைக் கிட்டேவந்து அணைத்தான். போன காட்சியில் கை
எங்கே யிருந்தது நினைவு இல்லை. ஷாட் கன்டினியூட்டி செட் ஆவுமா தெரியவில்லை. அதைப் பத்தி
சாமியப்பன் கவலைப்படப் போவது இல்லை என்றும் தெரியும் அவனுக்கு.
லைட், என்றார். வளிக்குகள் பளீரென
எரிந்தன. காமெரா. ஸ்டார்ட். ரோலிங். ஆக்ஷன்... என்றார் சாமியப்பன்.
இதன் தொடர்ச்சியை வெள்ளித்திரையில்
காண்க.
·
storysankar@gmail.com 91 97899 87842
Comments
Post a Comment