பட்டம்
(நன்றி பேசும் புதிய சக்தி மாத இதழ்)
எஸ். சங்கரநாராயணன்
 மலவல்லி குளத்தின் படித்துறையில் கால் வைத்தபோதே லேசாய் விடியல் வெட்க முகம் கொண்டு விட்டது. இன்று அவள் சற்று தூங்கிவிட்டாள். அதுகுறித்து அவளுக்கே வெட்கம். இந்நிலையில் வானம் வேறு அவளைக் கெக்கலி கொட்டிக் கேலி செய்கிறாப் போலிருந்தது. குளிர் பிரியாத காலை தான். முதல்படியில் அந்தக் குளிர் அவளைத் தயங்க வைத்தது. கட்டைவிரலின் நுனியை நீருக்கு நீட்டியபோது சிற்றூசிகள் பாய்ந்தாப் போலிருந்தது. நேரமாகி விட்டது. சட்டென காலை முழுசுமாய் நீரில் இறக்கினாள். வாயை விரித்து உதடுகளால் அவள் பாதங்களைக் கவ்விப் பதறடித்தன மீன்கள். கணவனின் சிறு ஸ்பரிசங்களும் முத்தங்களுமான கிளுகிளுப்பை ஊட்டின மீன்கள். கடந்த ராத்திரியின் நினைவுகளில் அவள் முகம் மேலும் சிவந்தது. கை தானறியாமல் அதரங்களை வருடிக் கொடுத்தது.
அப்பாவு என்ன செய்கிறான் தெரியவில்லை. அவள் எழுந்து கொள்ளுமுன்னே அவன் எழுந்து கோவிலுக்கு வந்துவிடுவான். அகலமான வீதிகள். இருமருங்கும் எண்ணெய் விளக்குகள் ஒன்று விட்டு ஒன்று விடிய விடிய எரிந்தபடி யிருக்கும். காற்றில் அதன் சுடர் சதா துடித்துக் கொண்டிருக்கும். உஷத் கால பூஜையில் அவனது நாதஸ்வர இசைதான் ஊருக்கு விடியலின் அடையாளம். முதல் நாலு ராஜ வீதிகள் வரை அந்த நாதம் அதிகாலையில் கேட்கும். ஊரே கோவிலை வைத்து அடையாளப் பட்டிருந்தது. கோவிலை வைத்தே பிரசித்தி பெற்றிருந்தது. பராமரிப்பு என்று மன்னர் மானியம் வழங்கிய ஸ்தலம்.
காலந் தவறாமல் பூஜைகள் அரங்கேறின அங்கே. கோவிலுக்கு என்றே நிலம் நீச்சு குளம் தொழுவம் என்று இருந்தது. குளத்து நீரில் சிவனுக்கு குட முழுக்கு. தொழுவத்துப் பசுக்களின் நெய் கோவில் தீபங்களுக்கானது. பால் அபிஷேகத்துக்கானது. நிலத்தில் இருந்து வரும் நெல் கோவில் அர்ச்சகர், பரிசாரகர், நாதஸ்வர ஜமா, தொழுவம் நிர்வகிக்க என சம்பளமாகவும், அதன் ஒரு பகுதி அன்னதானம் என பக்தர்களுக்கும் வழங்கப்பட்டது.
கோவிலுக்கு என நாதஸ்வரக்காரனும் தவில்காரனும் இருந்தார்கள். திருவிழாக் காலங்கள், எப்பவாவது மன்னர் கோவிலுக்கு வந்து போகும் தருணங்களில் ஊரே களை கட்டியது. அம்மன் உலா வரும் வைபவங்களும் உண்டு. அப்போது அப்பாவுவுக்கும் தவில்கார மகேஸ்வரனுக்கும் ஒரு நிமிர்வு கண்டுவிடும். வியர்க்க விறுவிறுக்க தெரு மூலைகளில் விஸதாரமாய் வாசித்து அமர்க்களப் படுத்துவார்கள். கஷ்டமான பிடிகளையும் அப்பாவு அநாயாசமாக வாசிப்பான். கூடி யிருக்கும் சனம் ஹ்ரும், என உருமும். ரசிக்கத் தெரிந்த மிருகங்கள்.
கமலவல்லி குளித்துக் கரையேறியபோது வானத்தின் கண் இன்னும் விரியத் திறந்து கொண்டது. வீதிகளின் எண்ணெய் விளக்குகளை விளக்குக்காரன் ஜம்பு அணைத்துப் போனான். அந்தி சாய அவற்றை தீப்பந்தம் கொண்டு ஏற்றுவதும் அவன் வேலைதான். மற்ற நேரங்களில் அவன் கோவில் கைங்கரியங்களில் ஒத்தாசைக்காரன். பட்டருக்கு தீபங்களைத் தேய்த்து சுத்தம் செய்து தருவான். அப்பாவு பூஜை நேரம் நாதஸ்வரம் வாசிக்கையில் ஜால்ரா அவனது கையில். அக்கிரகாரம் வரை விளக்குகள் இருந்தன. அவன் கையில் இருந்த துணிசுற்றிய முன்வளைந்த கழியால் விளக்குகளை அணைத்துக்கொண்டே வேகமாகப் போனான். திரும்ப வந்து அவன் அப்பாவுவுடன் இணைந்துகொள்ள வேண்டும்.
அப்பாவு பற்றி கமலவல்லிக்கு சிறு பெருமை உண்டு. நல்ல ஞானக்காரன். அவளுக்கு சில ராகங்கள் தெரியும். அவன் சாதகம் பண்ணுகிற சமயங்களில் அவள் கேட்டபடி உள்ளே வேலை செய்வாள். சில சமயம் வாய் தன்னைப்போல கூடப் பாடவும் செய்யும். அவர்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. அவளுக்கு அதுசார்ந்து சிறு கவலை உண்டு. “கோடி ஒரு வெள்ளைக்கு குமரி ஒரு பிள்ளைக்கு...” என அவன் சிரிப்பான். தன் அழகை அவன் எப்பவுமே ஆராதிக்கிறான், என அவள் அறிவாள். வெட்கம் பூக்க சிறு பெருமிதத்துடன் மார்பை அழுத்திக் கொள்வாள் அவள்.
அவனது சங்கீத ஞானத்துக்கு இன்னும் அவன் பிரகாசிக்கலாமாய் இருந்தது கமலவல்லிக்கு. இன்ன ராகம் என்று இல்லாமல் எல்லா ராகத்தையும் அவன் முழு ஈடுபாட்டுடன் வாசித்தான். வாசிக்கிற அந்தக் கணத்தில் ராக ஸ்வரூபத்தை மனசில் பிடிக்கிறவனாக இருந்தான். கண்மூடி அந்த ராகத்தை காற்றில் வரைகிறாப்போல அவனது நாதஸ்வரம் தூரிகையாய் அலைவதைப் பார்க்க அவளுக்குப் பிடிக்கும். நாத அசுரன் அவன்... என்பாள் செல்லமாக. “ஒருநாள் ராஜா பார்வையில் பட்டால் போதும் நீங்கள்” என்பாள். “பட்டம் பதவி புகழ் என்று எல்லாமே உங்கள் வசம் வரும்” என்பாள் கமலவல்லி. “அந்த நாள் சீக்கிரம் வரட்டும்” என அப்பாவு சிரிப்பான்.
கோவிலில் இருந்து நாதசுரம் கேட்க ஆரம்பித்திருந்தது. நாட்டைக் குறிஞ்சி. காலைகளை அழகாக்கி விடுகிறது. அதுவும் அன்றைய வாசிப்பில் அவனிடம் தனி லயிப்பு தட்டியதை தற்செயலாக ஒரு வியப்புடன் கவனித்தாள். ஜம்பு திரும்பி விட்டான் போல. ஜால்ரா, தவிலோடு தாளக்கட்டை அது இன்னும் துலக்கமாக்கிக் காட்டியது. ஈரப்புடவையை நீவி சரிசெய்து கொண்டபடி கோவிலுள் நுழைந்தாள். சந்நிதி தாண்டி பிராகாரம் முழுக்க நாதம் இறையருளாய் நிரம்பித் ததும்பியதை அவள் நாடியில் உணர்ந்தாள். குளிர் பிரியாத காலை. ஈரத்துக்கு உடம்பு சிறு உதறல் உதறியது. பிராகார மூலைகளில் இன்னும் தீப்பந்தங்கள் எரிந்தபடி இருந்தன. இரும்பு சாளர வழியே தூரத்தில் குளத்தில் அந்த திகுதிகுத்த நெருப்பு தெரிந்தது... நீரே தீப்பிடித்தாப் போல.
சனங்கள் வரத் தொடங்கி யிருந்தார்கள். ஊர் ஆரம்பிப்பதே அந்த உஷத் கால பூஜை தாண்டிதான். எருதுகள் வயலுக்குக் கிளம்புவதும், வண்டிகள் பூட்டி ஊருக்கு வெளியே ரஸ்தாக்களுக்கு நடப்பதுமாய் ஊர் இயக்கங்கள் துவங்கும். அந்தி சாய கோபுரத்தில் உச்சி விளக்கு ஏற்றி விட்டால் ஊர் அடங்கி விடும். மக்கள் அதற்கு அப்புறம் வியாபாரம் வர்த்தகம் செய்ய மாட்டார்கள்.
ஈஸ்வர சந்நிதியில் அர்ச்சகர் அவளைப் பார்த்து தலையாட்டி புன்னகை செய்தார். “அப்பாவு வாசிப்பு... இன்றைக்கு எப்படி?” என்று கேட்டார் வேடிக்கையாக. “எனக்கும் அது வியப்பளித்தது” என்றாள் அவள். அவரிடம் இருந்து பூ பிரசாதத்தை வாங்கித் தலையில் அவள் வைத்துக்கொண்டபோது அர்ச்சகர் சொன்னார். “நாளை காலை உஷத் கால பூஜைக்கு ராஜா வருகிறாராம். இப்பதான் தாக்கல் வந்தது.”
“அதற்கு?”
“ராஜாமுன்னால் என்னென்ன வாசிக்க வேண்டும் என்று இப்போதிலிருந்தே அப்பாவு சாதகம் ஆரம்பித்தாகி விட்டது!” என்று அர்ச்சகர் சிரித்தார். அவளுக்கும் சிரிப்பு வந்தது. திரும்பி அவள் நடந்தபோது அந்த நடையில் இருந்த உற்சாகத்தை அர்ச்சகர் கவனித்தார். அவன் இன்னும் கீர்த்தியடைய வேண்டும் என்பதில் அவனைவிட அவளுக்கு ஆர்வம் இருந்தது. அதை அவர் அறிவார்.
அப்பாவு அவளை கவனிக்கவே யில்லை. கண்மூடியபடி அவன் ஸ்வர அடுக்குகளின் ராக எல்லைக்குட்பட்டு தன் கணக்குகளும் பிடிகளுமாய் இருந்தான். அவள் நிற்கவில்லை. மகேஸ்வரன் மாத்திரம் அவளைப் பார்த்துத் தலையாட்டினார். கோவிலுக்கு வெளியே வந்தபோதும் அவளுக்கு எல்லாம் பரவச நிலையாய் இருந்தது. வாசலில் நின்றபடி உள்ளே சந்நிதியைப் பார்த்துக் கும்பிட்டாள். ஆண்டவேனே, வாஸ்தவமாகவே நல்ல காலம் என்று ஒன்று பிறக்க இருக்கிறதா? அவர் வாழ்வில், அதன் மூலம் என் வாழ்வில் ஏற்றம் எதுவும் வர இருக்கிறதா?
வீட்டுக்கு வந்தபோதும் அப்பாவு தளும்பலாய்த் தான் வந்தான். “நாளை...” என அவன் ஆரம்பித்தான். “தெரியும்” என்று அவள் புன்னகைத்தபடி அவனுக்கு குவளையில் குடிநீர் கொண்டுவந்து தந்தாள். “ராஜா வருகையை உங்களை விட நான் எதிர்பார்க்கிறேன்,” என்றாள் அவள். “தெரியும்” என அவன் அவளைத் தன்னருகே இழுத்து அணைத்துக் கொண்டான். “இன்னிக்கு உங்க வாசிப்பில் தனி வசிகரம் இருந்தது. அர்ச்சகர் குருநாதன் கூட கண்டுபிடித்துச் சொன்னார்!”
அந்திக்கால பூஜைக்கு தான் இனி அப்பாவு போக வேண்டும். மதியத்தில் பூஜை, மணியோடு சரி. உணவு கொண்டுவிட்டு சாதாரணமாக சிறிது சயனங் கொள்வான். அன்றைக்கு அவன் ஓய்வு கொள்ள நினைக்கவே இல்லை. அந்த வெறி யுக்கிரம் அவளுக்கு மலைப்பாய் இருந்தது. ஆனால் அவனை அவள் அறிவாள். எடுத்த காரியத்தை அத்தனை கவனக் குவிப்புடன் செய்வான் அவன். வழக்கத்தை விட அந்த வாசிப்பின் லயிப்பும் எடுப்பும் இன்னும் மெருகேறி கம்பீரமாய் இருந்தது. வீதியில் போவோரே நின்று ரசித்துவிட்டுப் போனார்கள்.
ராஜா அந்தப் பக்கம் வந்து கன காலம் ஆயிற்று. பக்கத்து ஊருக்கு வந்து இறங்கி யிருப்பதாகச் சொன்னார்கள். அப்போதே இந்த ஊர் சனங்கள் பாதிப்பேர் அங்கே வேடிக்கை பார்க்க என்று கிளம்பி விட்டிருந்தார்கள். ராஜா வருவதை ஒட்டி ஊரே தனி அலங்காரங்கள் கண்டது. வீதியோரத்து செடிகள் புல்லும் களைகளும் அகற்றப்பட்டன. மண்சாலைகள் தண்ணீர் தெளித்து பெருக்கிக் கோலம் போடப் பட்டன. ஊரில் எல்லாருமே ஒற்றுமையாய் வேலைகள் செய்தார்கள்.
தினசரி மாலைகளில் அரசரைப் புகழ்ந்து புலவர்கள் கவிதை பாடினார்கள். அவர் சோர்வாய் இருந்தால் விதூஷகர்கள் கொனஷ்டைகள் செய்தும், நகைச்சுவையாகப் பேசியும் அவரையும், அதை வேடிக்கை பார்க்கும் சனங்களையும் சிரிக்க வைத்தார்கள்.
எங்கோ மணம் வீசுதே... எங் கோமணம் வீசுதே!
ஒரு சித்த வைத்தியன் வந்தபோது அவனிடம் இரண்டு வேர்கள் இருந்தன. ஒருத்தன் அவனிடம் “அது?” என்று கேட்டான். வைத்தியன் “வேரு” என்றான். “அப்ப இது?” என்றான் வந்தவன் விடாமல். “இது வேறு” என்றான் வைத்தியன்.
விடிய விடிய கலை நிகழ்ச்சிகளும் சில சமயம் நடந்தன. தேவதாசிகளின் நடனம், பெரிய வித்வான்களின் கச்சேரிகள், என்றெல்லாங் கூட ராஜா விருப்பப்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சைவ வைணவ விவாதங்களையும் ராஜா முன்னிலையில் நிகழ்த்துவார்கள். விவாதத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசர் பட்டாடை போர்த்தி வெகுமதிகள் வழங்கினார்.
அன்று இரவு அப்பாவு சரியாகத் தூங்கினானா தெரியாது. உருண்டு அவன்பக்கமாய் வந்து அவள் அவனை அணைத்துக் கொண்டாள். “உனக்கும் தூக்கம் வரவில்லையா?” என்று கேட்டான் அப்பாவு. “போனமுறை ராஜா வந்தபோது சிறப்பாக வேத கோஷம் முழங்க வரவேற்பு தந்த சாஸ்திரிகளுக்கு காணியை எழுதிப் பட்டயம் தந்துவிட்டுப் போனார் ராஜா,” என்று சொன்னாள் கமலவல்லி. “இப்போது என் முறை!” என்று அப்பாவு புன்னகை செய்தான். “என்ன பரிசு வேண்டும்?... என்று ராஜா கேட்டால் நான் என்ன கேட்பது?” என்று கேட்டான். “நாளைய கதை நாளைக்கு. இன்றைய கதையைப் பார்க்கலாம் அல்லவா?” விளக்கு வெளிச்சத்தில் அவள் முகத்தின் புன்னகையால் முகம் வீங்கியதைப் பார்த்தான். திரும்பி விளக்கை ஊதி அணைத்தான் அப்பாவு. என்னவோர் முரண். நாதசுரம் உறையணிந்து கொண்டது. அப்பாவு உடைகளைக் களைந்தான்.
அரசர் வரும் வழியில் தீவட்டிகள் விடிய விடிய வெளிச்சம் ஊட்டியவண்ணம் இருந்தன. வைகறையிலேயே ஊர் சுறுசுறுப்படைந்து விட்டது. ஊர்த் தலையாரி பாவம் இரவு அவன் தூங்கவே யில்லை. ஊர் எல்லையில் ராஜாவை வரவேற்க பிராமணர்கள் நிற்கவைக்கப் பட்டார்கள். பூரண கும்ப மரியாதையுடன், யானையுடன், வேத கோஷத்துடன் வரவேற்பு தர சித்தமாய் இருந்தான் தலையாரி. அவர் வருவதை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டுச் சொல்ல ஒருத்தனை தூரதிருஷ்டிக் கண்ணாடி தந்து கோபுரத்தில் நிறுத்தி வைத்தார்கள். அந்தப் பரபரப்பு அப்பாவுவுக்கும் தொற்றிக் கொண்டது. அன்றைய நாளுக்கு அணிய என்று அவனுக்கு விசேஷ பட்டு உடைகள் எடுத்து வைத்திருந்தாள் கமலவல்லி.
இரவெல்லாம் அவன் என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தான். பாதியிலேயே அவள் தூங்கிவிட்டிருந்தாள். காலையில் கோவில் நந்தவனமே கூட புதர் எல்லாம் களையப்பட்டு, நன்கு பராமரிக்கப் பட்டு செடிகள் குளித்துவிட்டு நின்றன. ஆரியர்கள் மடியுடுத்தி நெற்றியில் திருநீறு துலங்க நடமாடினார்கள். பூஜை துவங்க ராஜா வர வேண்டும், என எல்லாரும் காத்திருந்தார்கள்.
கமலவல்லி குளித்துவிட்டு குளத்தின் படியேறுகையில் மேலே பரபரப்பாய் இருந்தது. ராஜா வந்துவிட்டார் போலிருந்தது. மேலேறிப் போவதா, அப்படியே இந்த சிறு இருளில் நிற்பதா என அவளுக்குக் குழப்பம். காத்திருப்பதே சரி, என பின்தங்கினாள். ராஜாவுடன் அமைச்சர்கள் சிலரும் கோவிலுக்குள் நுழைந்தார்கள். தீவட்டிகள் பிசிறுகள் நீக்கி நன்கு எண்ணெயிட்டு அபார ஒளியை உமிழ்ந்தன.
பூஜை ஆரம்பித்திருக்க வேண்டும். உள்ளே மணிகளும், தாரை தப்பட்டைகளும் அதிர்வுடன் முழங்கின. மற்ற நாட்களில் இத்தனை கோலாகலம் இல்லை. நல்ல கூட்டம் இருந்தது. சிலர் கோவிலில் சாமி பார்க்கவும், சிலர் ராஜாவைப் பார்க்கவுமாகக் கூடியிருக்கலாம். நிலச்சுவாந்தார்களுக்கு ராஜா பார்வையில் பட அத்தனை துடிப்பும் ஆர்வமும் இருந்தது. ராஜா தங்கள் ஊருக்கு வந்ததையே அவர்கள் பெருமையாய் உணர்ந்தார்கள்.
கமலவல்லி படியேறியபோது நாதசுர நாதம் கேட்டது. மொத்த சனமுமே அப்படியோர் அமைதி காத்தது. நாதம் மாத்திரம் பாம்பென மேலேறிப் படமெடுத்து நின்றாப் போலிருந்தது. யார்? நம்ம அப்பாவுவா இது?... என எல்லாருமே திகைப்பில் ஆழ்ந்தார்கள். அவளுக்கே அந்த வாசிப்பு திகட்டலாய் இருந்தது. பாவம், எத்தனை நாள் ஆதங்கத்தை இப்போது நெஞ்சில் இருந்து வெளியே எடுத்து வைக்கிறானோ... என அவள் நினைத்தாள். கோவிலுள் நுழைய அத்தனை கூட்டத்தைப் பார்க்க பிரமிப்பாய் இருந்தது. இந்தக் காலையில் இவ்வளவு தீவட்டிகள் ஒளிர்ந்ததே இல்லை அங்கே. மணியக்காரர் ராஜா பக்கத்தில் பவ்யமாய் நின்றார். தனது ஏற்பாடுகளில் எதும் குறை வந்துவிடக் கூடாது என்ற கவலை அவருக்கு. மனசுக்குப் பிடித்து விட்டால் பரிசு, பட்டம் என வாரி வழங்கவும் செய்வார் அரசர்.
அவள் பிராகாரத்தை ஒரு சுற்று வேகமாய்ச் சுற்றிவிட்டு சந்நிதிப் பக்கமாய் வந்தாள். அங்கேயிருந்தே அப்பாவுவைப் பார்க்க முடிந்தது. பட்டு ஆடைகள் அவனை இன்னும் எடுப்பாய்க் காட்டின. அவனுக்கு நேரே இருந்த விளக்கின் வெளிச்சம் அவன் முகத்தின் வியர்வையைப் பளபளக்கச் செய்தது. பெருமிதமாய் அவள் ராஜா இருந்த பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவருடன் கூட நிற்பவர் அமைச்சர் என அவளால் யூகிக்க முடிந்தது. அரசரின் முகம் மலர்ச்சியாய் இருந்தது. அவள் திருப்தியுடன் எல்லாவற்றையும் கவனித்தாள்.
அவள் எதிர்பார்த்து காத்திருந்த விஷயம்... நடக்கிறதா? ராஜா குனிந்து அமைச்சரிடம் எதோ கேட்குமுகமாக. அமைச்சர் வாய் பொத்தி அவர்முன் குனிந்து செவிமடுத்துக் கேட்பதையும் கவனித்தாள். அப்படியே அப்பாவுவைப் பார்த்துக் கையை நீட்டி அமைச்சர் எதோ பதில் சொன்னார். அந்த நேரம், முகூர்த்த நேரம்... வந்துவிட்டதா? அவளுக்குப் படபடப்பாய் இருந்தது. ஐயனே, இதுவும் உன் திருவிளையாடலா? அரசரின் கால்கள் மெல்ல சிறு தாளம் இடுவதை அவள் கவனித்தாள்.
அமைச்சர் தலையாட்டி விட்டு அப்பாவுவைப் பார்க்க வந்தார். அரசர் அவனை அழைப்பதாகச் சொன்னார். உடம்பெல்லாம் ஆன்ந்த அதிர்வுகளுடன் எழுந்து வந்தான் அப்பாவு. தன் கழுத்தில் இருந்த தங்க ஆரம் ஒன்றை எடுத்து அவனுக்கு அணிவித்தார் அரசர். மொத்த சனமும் ஹோ என அதிர்ந்தது. கண்ணில் நீர் மல்க அதைப் பெற்றுக் கொண்டான் அப்பாவு. கூட்டத்தில் திரும்பிப் பார்த்தான் அப்பாவு. தூரத்தில், அதோ கமலவல்லி. ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அவளை அருகே அழைத்தான்.
இருவருமாய் அரசரை விழுந்து வணங்கினார்கள்.
“கோவில் சந்நிதி இது. இங்கே இறைவன், அவனே பெரியவன்!” என கைகூப்பினார் அரசர். “வரும் பௌர்ணமி மாலையில் நீ என் அவையில் வாசிக்க வர வேண்டும்!” என்றார் அரசர். “உத்தரவு அரசே. தங்கள் கருணை எங்கள் பாக்கியம்!” என்றாள் கமலவல்லி.
அதற்குப் பிறகு ஊருக்குள் அவனுக்கு நல்ல மரியாதை வந்திருந்தது. “போய் நம் ஊருக்கே பேர் வாங்கிக் கொண்டு வா அப்பா” என மணியக்காரர் அவனுக்கு ஆசி வழங்கினார். வண்டிகட்டிக் கொண்டு ஒருநாள் முழுக்க போக வேண்டிய பயணம். ஊர் எல்லை வரை கமலவல்லியையும், அப்பாவுவையும் வழியனுப்பி வைத்தார்கள். அவனது உறவினர் சிலரும் கூடப் போனார்கள்.

அப்பாவு மாத்திரம் தனியே ஊர் திரும்பினான். பட்டம் கிடைக்கும் என்று போனவன். நூல் அறுந்த பட்டமாய்த் துவண்டு இருந்தான். கமலவல்லி? ஒரு வாரத்தில் அரசல் புரசலாகச் செய்தி வந்தது. கமலவல்லியை யாரோ அந்தப்புரத்தில் பார்த்ததாகச் சொன்னார்கள்.
----
91 97899 87842 storysankar@gmail.com

Comments

  1. இப்படித்தான் முடிப்பீர்கள் என்று நினைத்தேன். அரசர்களின் செல்வாக்குக்கு முன்னால் சாதாரணக் கலைஞன் தாக்குப்பிடிக்க முடியுமா?

    - இராய செல்லப்பா (on tour) நியூ ஆர்லியன்ஸ்

    ReplyDelete
  2. தில்லானா மோகனாம்பாளை நினைத்துக் கொண்டு படித்தேன். முடிவு சரிதான். கதை சொல்ல


    ப்பட்ட சூழல் எங்களூர் விழாவை ஞாபகப்படுத்தியது.நன்று.

    ReplyDelete
  3. தில்லானா மோகனாம்பாளை நினைத்துக் கொண்டு படித்தேன். முடிவு சரிதான். கதை சொல்லப்பட்ட சூழல் எங்களூர் விழாவை ஞாபகப் படுத்தியது. நன்று


    ப்பட்ட சூழல் எங்களூர் விழாவை ஞாபகப்படுத்தியது.நன்று.

    ReplyDelete
  4. இதெல்லாமும் சகஜம். ஜில்லிடலின் ஸ்பரிசத்தில் துவங்கும் சரடு விவரிப்பு முறை அங்கங்கே கட் பண்ணி ஒரு எதிர்பார்ப்பும் அதற்கு கிடைத்த நசிக்கப்பட்ட வாழ்வும். உறை ஆடையுண்ட நாகஸ்வரம் அவிழ்ந்த அவிழப்போகிற அப்பாவு. யதார்த்தம் ஸாரே....
    Svn குறிஞ்சிச்செல்வன்.

    ReplyDelete
  5. வேரு ... வேறுதான் .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog