தமிழக அரசு பரிசு பெற்ற - 2006ம் ஆண்டின் சிறந்த நாவல்

 


நீர்வலை

எஸ்.சங்கரநாராயணன்

5

பெண்களை அறியாதவன் அவன். அவன் அறிந்திருக்கக் கூடிய ஒரு பெண் - அம்மா... அவன் பிறந்தபோதே இறந்து போனாள்.

ஆண்களைத்தான் தெரியும். அவர்கள் - ஒன்று வீரர்கள்.... அப்பா. அல்லது, முரடர்கள்.... அவனை வேலை வாங்கிய சிலர். இல்லாவிட்டால் ரௌடிகள்... அவனுடன் சுற்றும் சிலர். வீட்டில் தங்காமல், வீட்டுக்கு அடங்காமல் அவர்கள் சுற்றித் திரிந்தார்கள். அன்பு அவர்களை வளைக்க முடியாதிருந்தது. வார்ப்பு-இரும்புகள். மேலே தண்ணியூற்றினால் நொறுங்கிப் போகும். வளையாது.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்று பழமொழி. வளையும்!

அஞ்சு டிகிரி பனியில் வளைக்க முடியாத இரூம்பு ஐம்பது டிகிரி உஷ்ணத்தில், அதாவது மேல்வெப்பநிலையில், வ ளை யு ம்!

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சொல்வார்கள். விளையும். என்னது? கன்னத்தில் முடி. முற்பகல் ஷேவ் செய்தால் பிற்பகலிலேயே கன்ன மழுமழுப்பு இராது!

ஏல நீ ராஜாவும் இல்லை. பிச்சையும் இல்லை... என்கிறான் கிருட்டினமணி.

நீ வீரன். தைரியசாலி. உனக்கு நான் பேர் வைக்கிறேன்... என்கிறான். அவன் திரும்பிப் பார்த்தான் ஆச்சர்யமாய். தலையாட்டினான்.

இன்னிலேர்ந்து நீ புது ஆள். எங்க வீட்ல ஒருத்தன். அதனால்... இன்னிலேர்ந்து பேரும் புதுப் பேர்... சரியா? நீ வீரன். உன் பேர் சிவாஜி! வீர சிவாஜி... சிவாஜி யார் தெரியுமா?

தெரியாது, எனச் சொல்ல வெட்கமாய் இருந்தது. பாடத்ல வந்தாப்ல ஞாபகம். சட்டென்று... 'உங்க வீட்ல ஒருத்தன் சிவாஜி. அது தெரியும்ணே...' என்றான்.

'நீ பள்ளிக்கூடம் போயிருக்கலாம்டா...' என்கிறான் கிருட்டினமணி.

'நீங்களும்!' என்கிறான் சிவாஜி கிண்டலாய். 'தங்கச்சியை நல்லபடியாப் படிக்க வைப்பம் ணே...' என்கிறான் பிறகு.

'அண்ணே நீங்க ஒரு உதவி செய்யணும்...'

'நானா?'

'ம்'

'உனக்கா?'

'ஏன்?'

'உன் கேள்வியே ஆச்சர்யமா இருக்குடா. இந்த ஊர் தெரிஞ்சாப்ல, என்னவோ பேசறே...'

'தெரியும். இது... இது எங்க அண்ணன் ஊர்.'

'ஏல ப்ளீஸ்டா. தயவுசெஞ்சிடா - உங்க அண்ணன் வீட்டுக்கு என்னியக் கூட்ட்டுப் போவியா?'

அன்பின் நெகிழ்ந்த, கனவில் மிதந்த கணங்கள். அப்பா போனபின், அவன் பேசியே எத்தனை காலம் ஆனது. யார் அவன்பேசிக் கேட்கக் காத்திருக்கிறார்கள். டீக்கடையில் டீ கிளாஸ் கழுவிக் கொண்டு ராவா பகலா பார்க்க இயலாத வேலை. பஸ் நிறுத்தம் பக்கம் பஸ் வந்தால் ஓடிப் போய் டீ டீ டீ டீ... என்று கத்திக் கொண்டே ஒவ்வொரு முகமாய்ப் பார்த்துக்கொண்டே அலைவான்.

கிளிகள் கீ கீ கீ என்று திரிவதைப் போல, இவன் டீ டீ டீ என அலைகிறான்!

சற்று தள்ளி லாரிகள் வந்து நின்றுவிட்டுப் போகும். லாலாக்கடை மைசூர்பாகுக் கட்டிகள் போல வரிசையாய் அடுக்கி நிற்கும் லாரிகள். ராத்திரி முற்றினால் லோடு ஏற்றும் பஜார்ப் பக்கம் போய் டீ குடிக்க ஆள்ப் பிடிக்க வேண்டும்...

'அண்ணே டீ வேணுமா?'

'என்னது?'

'டீ அண்ணே... டீ. சாயா'

'என் காதுல குட்-டீன்னு கேட்டுது...' என்பார்கள். காமாந்தகர்கள்!

அதற்குள் பாதி வழி வந்திருந்தார்கள். நல்ல அகலமான தெருக்கள், பஸ் ஸ்டாணடு, பஜார் மெய்ன் பக்கம் போகாமல் ஒதுங்கி ரோடு சர்ரென்று இறங்கியது. சைக்கிளில் போக ஜாலியான தெரு. ஏறுகையில் மூச்சு வாங்கிரும்!...

வழி பார்த்துக் கொண்டே வந்தான். தெருக்கள் பாம்புவால்ப் பகுதி போல சிறுத்து வந்தன. கல் கட்டடங்கள். காரைக் கட்டடங்கள். மாடிவீடுகள் தாண்டி தனித் தனிச் சிறு வீடுகள். வாசலில் வாகனங்கள் நிறுத்திய வீடுகள். மாட்டுத் தொழுவம் சேர்ந்த வீடுகளில் மாடுகள் வெளியே கட்டப்பட்டு தொழுவம் உள்ளே சுத்தம் செய்யப் பட்டிருந்தது. அதற்குள் வெளித்திடலை மூத்திரம்போய் சாணிபோட்டு அலங்கோலப் படுத்தியிருந்தன மாடுகள்.

உலகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தெருவோர அடிகுழாயில் துள்ளித் துள்ளி ஒரு ஆள் தண்ணீர் அடிக்கும் சத்தம். தெரு திரும்பவும் குறுகலாகிப் போனது... எதிரில் வரும் ஆட்களிடம் அண்ணன் புன்னகை காட்டி எதும் பேச்சு கொடுத்துக் கொண்டே வந்தான். அண்ணன் வீடு இந்தப் பக்கம்தான் என யூகிப்பது கடினமாய் இல்லை... சொன்னாப்போல அண்ணன்வீட்டை நாமளே கண்டு பிடிப்பம்!... ஒரு சவால் போல ஏற்றுக் கொண்டான்.

சட்டென்று கிருட்டினமணியே எதிர்பார்க்காமல் 'கமலா?' என்று கூப்பிட்டான். ஓடும் குடிசையுமாய்க் குறுகலான தெருவின் இருமருங்கும் வீடுகள். திடீரென சேவல்கள் கோழிகள் உச்சியில் இருந்து இறங்கிக் குறுக்கே பறந்தன. வாசல் பக்கம் தோசைக்கல்லைக் குப்புறப் போட்டு கரிபோக வெறுங் காலால் மண்ணைத்தள்ளி தேய்த்துக் கொண்டிருந்தவள் ஆச்சர்யப்பட்டு 'கூப்ட்டியாப்பா?' என்கிறாள். அண்ணன் சிரிக்கிறான்.

'கமலா பள்ளிக்கூடம் போயிருக்கும்டா...' என்றவன் திரும்பி 'ஜோதி?' என்று கூப்பிட்டான்.

ரெண்டு வீடு தள்ளி இருந்தது அண்ணன் வீடு. சிறிய எளிய வீடுதான். வாசல் துப்புரவாகத் தெளிக்கப்பட்டு சிறிய கோலம். நிழலுக்கு என வேப்ப மரம் இருந்தது. வாசக்கால் மஞ்சள் பூசியிருந்தது. சந்தன குங்குமம். திருஷ்டிக் கயிறு. சவுக்காரக் கல் கட்டித் தொங்கியது.

கண்ணைப் பார் சிரி, என மஞ்சளாய் ஓர் அசுர வம்ச முகம். என்னத்தைச் சிரிக்க... பயந்து கெடக்கு!

சிவஜோதி வந்து கதவைத் திறக்கிறாள். குளித்த நெற்றியில் குங்குமம் வைத்திருக்கிறாள். உள்ளேயிருந்து மீன் வேகும் வாசனை. அண்ணனோடு அத்தனை இயல்பாய்ப் பேசிக்கொண்டு வந்தவனில் அவளைக் கண்டதும் தாங்கொணாத கூச்சம். பயமும் மரியாதையுமான கூச்சம் அது. அவன் தன் தாயைக் கூட அறிந்தவன் இல்லை...

சொந்தம் என்றும், அவள் அறியாத முகமான நண்பர்களையும் கிருட்டினமணி திடுதிப்பென்று கூட்டி வருவது உண்டுதான். வந்து சாப்பிட்டுவிட்டுப் போவார்கள் என்றாலும் ராத்தங்க மாட்டார்கள். தங்கவேண்டி நேர்ந்தால் லாரிஷெட்பக்கம் என எங்காவது ஏற்பாடு செய்துகொடுத்து விடுவான் கிருட் டினமணி.

'வாங்க...' என கதவைத் திறந்தாள். இவனை முன்பே அறிந்தாற்போலத் தலையை மாத்திரம் ஆட்டி வரவேற்றாள். 'சாப்பாடு... கொஞ்சம் லேட்டாவும்...' எனத் தயங்கினாள்.

'ஆவட்டும் ஆவட்டும். அவசரம் ஒண்ணில்ல... நாங்க வரும்போதே நாஷ்தா பண்ணியாச்சி... கொஞ்சம் படுத்து எந்திரிக்கணும்...' என்று முடிக்கையிலேயே குரலில் அலுப்பு காட்டினான்.

'தம்பி பேர் ராஜா...'

'சிவாஜி!'

'ம் ம்' என்று தலையாட்டிக் கொண்டவன், 'பாவம். அப்பா அம்மா உறவு சுத்தம் யாரும் இல்லை. சுத்தமா இல்லை!... ஒதுங்க இடம் கிடையாது... பாத்தா நல்ல பிள்ளையாட் டம் தெரிது...' எனத் தயங்கினான்.

'இங்கியே இருக்கட்டும்!'

அவள் சிவாஜியைப் பார்த்துப் புன்னகைத்தபோது அழுகை வந்துவிட்டது.

என்ன தோணியதோ, அப்படியே அவள் காலில் விழுந்தான். அண்ணன் பார்க்கிறான். 'நம்ப பையன்.... உயிரோட இருந்திருந்தான்னா.... கிட்டத்தட்ட இவன் வயசுதானே இருக்கும்?' என்கிறான் மெதுவாக.

'ம்' என அவள் தலையாட்டினாள்.

வருத்தமாய் இருந்தது. இழப்புகளே இல்லாத, துக்கமே இல்லாத உயிரே இல்லையா உலகத்தில்? அவரவர் சோகம் அவரவர்க்கு...

உங்க பிள்ளை... அவன் பேர் என்ன? - என்று கேட்க வந்தவன்... 'அவன் பேர் நான் சொல்லவா?' என்கிறான். ஆச்சர்யமாய் அவனைப் பார்த்தாள் அவள். தலையாட்டினாள்.

'சிவாஜி?' என்கிறான் புன்னகையுடன்.

ஆமாம்... என்கிறாப் போல கிருட்டினமணி தலையாட்டினான். 'வீர சிவாஜி!'

>>> 

அண்ணனின் பர்ஸ் புகைப்படத்தில் பார்த்ததை விட சிவஜோதி இளமையாய்த் தோற்றம் தந்தாள். ஒரு வேளை திருவிழா சந்தை என வேற்றூர் வெளியூர்ச் சமயம் படம் எடுத்திருக்கலாம். புதிய ஊரில் காலாற நடந்துவிட்டு திடுதிப்பென்று ஸ்டூடியோ என்று பார்த்து விட்டு ஊக்கமாகி உள்ளே நுழைந்து படம் எடுத்துக் கொண்டிருக்கலாம்.

அண்ணன் பாய் விரித்துப் படுத்தவன்தான். தூக்கம் அவனை அப்படியே ஆரத் தழுவிக் கொண்டது. வாயில் சாளவாய் வழிந்து ஈ சுற்றியது. அதுகூடத் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தான். ஓட்டு வெப்பத்துக்கு வெயில் தெரியாதபடிக்கு உள்ளே மரச்சட்டம் போட்டு பாய்போட்டு மூடியிருந்தார்கள். அந்தப்பக்க வீடுகளில் அது, கொஞ்சம் பெரிசாயும் உயர எடுப்பாயும் இருந்தது. புறம்போக்கு நிலத்தை வளைத்துக்கட்டிய வீடாய் இருக்கும்...

சொந்தமோ, வாடகையோ.

புது இடம் என்று சிவாஜிக்குத் தூங்க முடியவில்லை. மனம் மிதந்து திரிந்த லகரி. இதயம் நாக்கு போல மெலிசாகிக் கிடந்தது. உள்ளே ஏதோ அலைத் தாலாட்டு போல இருந்தது. அன்பின் தாலாட்டு அது.

வீடு! எனது வீடு! என் அம்மா!... அ ம் மா ! - மயக்கத் திகட்டலாய் இருந்தது.

கண்ட கண்ட இடங்களில் கிடைத்ததை உண்டு கிடைத்த இடத்தில் படுத்து அனுமதிக்கப்பட்ட நேரம் வரை தூங்குவான். இரவெல்லாம் சில சமயம் படுக்க இடம் அமையாது. திண்டாடிப் போகும். எங்கே போனாலும் விரட்டி விரட்டி விட்டுவிடுவார்கள். பொதுக்கூட்ட மேடை எப்போதும் அவன் உறங்கும் இடம். வெயில் காலம் என்றால் அதற்கும் போட்டியாகி விடும். வீட்டுக்குள் படுக்க இயலாத வெக்கை. அனல். ஜனங்கள் பாயைச் சுருட்டிக்கொண்டு மேடைக்கு வந்துவிடுவார்கள். அவனை விரட் டி விடுவார்கள்.

தூக்கம் வராத வாலிபப் பயல்கள் தெருப்புழுதியில் விளையாடும். தூரத்தில் இருந்தே பார்ப்பான். கூடச் சேர்ந்து கொள்ள ஆசையாய் இருக்கும். சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

பள்ளிக்கூடப் பக்கத்திலேயே எத்தனை நாள் பாஸ்கெட்பால், வாலிபால், கிரிக்கெட் பந்து... என வெளி எல்லையில் இருந்து பந்து எடுத்துப் போட்டிருக்கிறான்.

பகலில் அந்தப் பகுதி, ரௌடிகள் சாம்ராஜ்யம்... அவனே போக மாட்டான். ஆடு புலி ஆட்டம். தாயம். சீட்டாட்டம் எதாவது நடக்கும்.

சிரித்தபடி விளையாடுகிறாப் போல இருக்கும். திடீரென்று ஒருத்தன் உச்சிமயிரை ஒருத்தன் பிடிக்க, சட்டையைக் கிழிக்க, என யுத்தக் களரி ஆகிப்போகும்.

ஏல, பீடி வாங்கியா...

'காசு கொடுங்கண்ணாச்சி...'

போய் வாங்கியால தரேன்.

கைத்துட்டைப் போட்டு வாங்கி வந்தால் - அவர்களுக்கு அவனையிட்டு ஒரே சிரிப்பு. ஏல இங்க பார்றா, காசு கேக்கான்... விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ஏல ஏன்ட்ட காசு இருந்தால் ஒன்னிய ஏண்டா பீடிவாங்க அனுப்பப் போறேன்...

காசு தாங்கண்ணே... வெளையாடாதீங்க...

ஏல சீட்டு வெளையாட வேணாங்கியா? - விழுந்து விழுந்து அவர்கள் சிரிக்கும்போது அவனுக்கு அழுகை வரும். இருந்த சொற்பக் காசை ரொம்பப் பசிக்கும்போது எதும் பன்னோ பழமோ, பழம்பன்னோ!... வாங்கலாம் என்று வைத்திருந்தான். பீடியாகி ஆவியாய்ப் புகையாய்ப் போகிறது...

ஏல நீ ரயில் பாத்திருக்கியா? கூகூகூ, என சத்தங் கொடுத்து, கிச் கிச் கிச் என்பார்கள். பிறகு புகை விடுவார்கள்.

ஏல நீ கழுதை பாத்திருக்கியா? - என்று சொல்லி ஒரு உதைவிட உள் ஆவேசம் வரும்.

தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டே நகர வேண்டி வரும்.

மனுசாளுக்குள்ளேயே வக்ரம் உறங்கிக் கொண்டிருக்கிறது... பேசாமல் படுத்துச் சுருண்டிருக்கிற நாய்மேல் டீக்கடைக்காரன் வெந்நீரை ஊற்றி விரட்டிவிட்டுச் சிரிக்கிறான்!

படுக்க இடம் தேடி அலைதல் நித்தியப்படி வாடிக்கை. ஓரிடத்தில் படுத்துக் கிடப்பான். பசி என்றோ, ஒண்ணுக்குப் போக என்றோ எழுந்து, போய்வருமுன் அந்த இடத்துக்கு யாராவது வந்து விடுவார்கள். சில சமயம் நாய் வந்து சுருண்டு கிடக்கும். நாய் என்றால் விரட்டலாம். பெரியாம்பளைகள் என்றால் என்ன செய்வது?

டீக்கடை ஆள்கள் டீ மிச்சம் நின்று விட்டால் கிராக்கி பிடிக்க என்று அவனை எழுப்பி அனுப்புவதும் உண்டு. ஓசி டீ கிடைக்கும் அவனுக்கு.

பார்க்கும் ஜனங்களிலும் ஆயிரம் ரகம். ஒருமுறை ரொம்பப் பசி. சாப்பிட எதும் கிடைக்கவில்லை. நல்ல நல்ல நாட்டு வாழைப்பழங்கள் கடையில் தொங்கின. கெட்டித்தோல் பழங்கள். ருசி அபாரமாய் இருக்கும். பையில் சுத்தமாய்க் காசு இல்லை. என்ன செய்வது எனத் திகைத்தபடி நின்றிருந்தான். யாரோ ஒருவன், அவன் பெண்டாட்டி - ரெண்டு பேராய் நின்றபடி பழம் வாங்கித் தின்றார்கள். பசி. தன்னை மறந்து அப்படியே அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்தபடி நின்றுவிட்டான்.

நிற்கவே மாட்டான் சாதாரணமாய். அதைவிடக் கேவலமாய் ஒரு காரியம் செய்துவிட்டான். அந்த ஆண் சாப்பிட்டபின் தோலை கடையில் நின்றிருந்த ஆட்டுக்குப் போட என வீசி... தானறியாமல் கைநீட்டி விட்டான்.

சட்டென அந்த ஆணின் கை நின்றது. ஒரு வேடிக்கைபோல அவன் இவனை அலட்சியம் செய்து அந்தத் தோலை ஆட்டுக்குப் போட்டான். சர்வாங்கமும் கூனிக் குறுகிப் போயிற்று. அழுகை வந்துவிட்டது. கூட வந்திருந்த அந்தப்பெண் பதறி, ச்சீ, பாவங்க... என்றபடி தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த பழத்தின் பாதியை அப்படியே அவனிடம் தோலோடு நீட்டினாள். இவன் தலையை ஆட்டி மறுத்தபடியே அவர்களிடம் இருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டு நடந்துபோனான்...

பிச்சைக்காரனுக்குத் திமிரைப் பாத்தியாடி... என அந்த ஆண் சொல்கிறான்.

பிச்சை அல்ல நான்...

நான் ராஜா.

ஆ பிச்சையெடுக்கும் ராஜா! -அழுகை வந்தது.

பிச்சை எப்போது தூங்கினான் தெரியாது. பள்ளிக்கூடம் விட்டு கமலா வந்திருந்தது போலும். கீச் கீச் என்று சத்தங் கேட்டது. நாலு வகுப்பு வந்தும் மழலை விலகாத கமலா. அப்பாவின் தொப்பையில் உட்கார்ந்து எழுப்பிக் கொண்டிருந்தாள்.

இவனுக்கு முழிப்பு வந்தது.

---

சனிக்கிழமை தோறும் தொடர்கிறேன்

storysankar@gmail.com

91 9789987842 / 91 94450 16842

 

Comments

Popular posts from this blog