சத்தியப்பிரியனின் ‘காற்றின் திசை’ சிறுகதைத் தொகுதிக்கு அளித்த முன்னுரை

 

அட்சதைத் தூறல்

எஸ்.சங்கரநாராயணன்

 **

சத்தியப்பிரியனின் இந்தச் சிறுகதைக் கொத்து நூலுக்குத் தோரணம் கட்டி வாழ்த்தி உங்களை வரவேற்பது என் பணி. சத்தியப்பிரியன் நமது சமூகத்தின் மத்தியதரக் குடும்பங்களின் சாட்சியான பாத்திரங்களை அழுந்தப் பதிக்கிறார். அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் பிரியமும் வெறுப்பும் ஒருசேரக் கொண்டவர்களாக அமைகிறார்கள். கதாபாத்திரங்களுடன் இன்னொரு மறைமுகப் பாத்திரமாக விதி அமைகிறது. அதன் இரு பரிமாணங்களாக குடும்பத்திற்குள்ளேயே தியாகமும் சுயநலமும் வேறு வேறு பாத்திரங்களில் அடையாளப் படுகிறது. அவர்கள் வாழ்க்கைசார்ந்த முணுமுணுப்புடன் எல்லாவற்றையும் சகித்துப் போகிறார்கள். வேறு வழி இல்லை எனத் தெளிந்தவர்களாய் அவர்கள் இருக்கிறார்கள். எதிர்பாராத அதிர்ச்சிகள் பற்றிய எதிர்பார்ப்பும் பயமும் அவர்களுக்கு இருக்கிறது. சம்பவங்களின் நீர்ச்சுழிப்பில் தப்பிப் பிழைப்பது அதிர்ஷ்டம் சார்ந்த விஷயம்.

மொழி இறுக்கமான கதைகளை எழுத சத்தியப்பிரியன் அவாவுறுகிறார் சில முன்மாதிரி எழுத்தாளர்களின் அடையாளங்களுடன். அது ஒரு சமூகத்தின் எழுத்து என்ற அளவிலும் அமைந்து விடுகிறது. கடைசிவரை கீழே வைக்க முடியாத வாசிப்பனுபவம் தர வல்லவை இக் கதைகள். இறுக்கமாக ரவிக்கை போட்ட பெண் போல இருக்கிறது அவற்றை வாசிக்க. அது ஒரு கவர்ச்சி அம்சம்தான்.

ஒரு சிறுகதை என்பது அதன் இயங்கு தளத்தை பரத்தி விரித்துக் காட்ட வல்லதாய் இருப்பது சிறப்பு என்பது என் துணிபு. ஒரு சம்பவம் அதில் சொல்லப்படலாம், எனினும் அடிநாதமாய் அது சமூகத்தளத்தில் வேறொரு மதிப்பீட்டை தானே அறியாமல் சூட்சும வலுவுடன் விளக்க வல்லதாய் வாழ்க்கையின் மாய முடிச்சு அதில் வைக்கப் பட முடியுமானால், அது அந்தக் கற்பனையிலேயே அமைய வேண்டும்... அது உயர்தரம். அப்படியான தரிசனங்கள் எனக்கு இந்த நூலில் அமைந்தன, இரு முறை.

வேறு உதாரணம் சொல்லி இவருக்கு வர நினைக்கிறேன். வைக்கம் முகம்மது பஷீரின் ‘மதிலுகள்’ எனக்குப் பிடித்த கதை. ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் சிறை செல்கிறார். தனிமை அவரை வாட்டுகிறது. உயர உயரமான சிறை மதில்களுக்குள் அவர். அங்கே அவருக்கு ரோஜாச் செடிகள் நட்டு வளர்க்கிற வேலை தருகிறார்கள். பெரிய மதில்ச்சுவர் அருகே அவர் ரோஜாச் செடி நட்டு நீரூற்றிக் கொண்டிருக்கும்போது, அந்த மதிலின் மறுபுறம், அது பெண்கள் சிறையின் பகுதியாக இருக்கிறது. அந்தப் பக்கமிருந்து பெண் ஒருத்தியின் சிணுங்கிய குரல் கேட்டு சிலிர்க்கிறார். அந்தக் குரலோடு அவர் உரையாடத் துவங்குகிறார். பெரிய மதில்களுக்குள்ளான இந்த சிறைப்பட்ட வாழ்க்கையில் அந்தப் பெண்ணுக்கும் இந்த சிநேகம் புது அம்சமாய், ஒரு விடுதலை அம்சமாய் ஆர்வப்படுகிறது. அவளும் அவருமாய் மெல்ல மெல்ல காதல் வயப்பட்டு உரையாடிக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே... முகம் அறியாக் காதல். மிக ஆபாசமான உடல் கொந்தளிப்பான உரையாடல்களை அவர்கள் கூச்ச நாச்சமின்றிப் பரிமாறிக் கொள்கிறார்கள்... இப்படி நகர்கிறது கதை.

இது ஒரு முக்கியமான விஷயத்தை, தத்துவார்த்த பதிலைத் தருவதாக நான் எடுத்துக் கொள்கிறேன். காதல் என்பது உடல் சார்ந்ததா, மனம் சார்ந்ததா என்கிற பெரும் முரண் அம்சத்தில், அது உடல் சார்ந்தது என்று இந்தக் கதை வாதம் சொல்கிறது. ஒரு கதை, அதன் சம்பவம்... ஆனால் அது இயங்கும் தளத்தில் நாம் கவனப்பட வேறொன்று வாய்க்கிறது... என்கிற அளவில் சிறந்த கதைகள் நமக்குப் பரிசளிக்கப் படுகின்றன.

இந்த நூலில் ‘ஆடு’ என்று ஒரு கதை. மற்றொன்று ‘நவீன சுயம்வரம்.’

ஆடு, என்ன கதை? ஒரு பெண். தனி வீடும், அதற்கு முன்னும் பின்னுமாகத் தோட்டம் போட்டு செடி கொடி காய்கறி பூமரங்கள் பராமரித்து வாழப் பிரியம் கொண்டவள் அவள். தினமும் அவற்றுக்குப் போதுமான நீரூற்றி அது வாடினால் தான் வாடும் ஆதுரம் கொண்டவள்.  அவளது செடிகள் இடுப்பளவு வளர்ந்து பயன்தரும் சமயத்தில் அந்தப் பகுதியில் புதிதாய் ஆடு ஒன்று நடமாட ஆரம்பிக்கிறது. எத்தனை ஜாக்கிரதை காத்தாலும் புதுப் புது முறைகளில் ஏமாற்றி அது தோட்டத்துக்குள் புகுந்து செடி கொடிகளை உண்டுவிட்டு, நாசம் செய்துவிட்டு வெளியேறி விடுகிறது. இந்தக் கதை எப்படி முடிகிறது? அந்த ஆட்டை அதன் எஜமானன், உணவுக்கு என்று அதை யாரோ கேட்டு வரும்போது, விற்றுவிடுகிறான். அதுவரை அந்தப் பெண்ணின் எதிரியான ஆடு அது. அது இப்போது உணவாகப் போய்விட்டது, என்ற அளவில், மரம் செடி கொடிகளையே உயிராக நேசித்தவள் அவள், அவை நாசமாகும் போது பதறியவள்... அந்த ஆட்டின் மரணத்தில் கலங்கி நிற்கிறாள். தாய்மை பரிபூரணமான ஒரு பெருந்தளத்தில் அங்கே அறிமுகம் ஆகிறது அல்லவா?

நவீன சுயம்வரம், கதையைப் பார்க்கலாம். ஒரேஜாதிப் பையனும் பெண்ணும் காதலித்தாலும் பெற்றோர் அவர்களின் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர்களை மீறி தாங்களாகவே கல்யாணம் பண்ணிக்கொள்கிற தைரியம் இருவருக்கும் இல்லை. இந்த நிலையில் ஊரில் ஒருஜாதி மக்களை ஒன்று திரட்டி ஒரு ‘நவீன சுயம்வரம்’ ஏற்பாடு ஆகிறது. காதலர் இருவரும் எப்படியாவது தங்கள் குடும்பத்தை அந்த சுயம்வரத்தில் கலந்துகொள்ள சம்மதிக்க வைத்து, காதலர் இருவரும் சுயம்வரத்தில் சந்தித்து, ஒருவரை ஒருவர் பிடித்திருப்பதாக எல்லார் முன்னாலும் அறிவித்து விடலாம்... என திட்டம் தீட்டுகிறார்கள். என்ன நடக்கிறது? வரன் தேர்வில் அவனுக்கு வேறொரு பெண்ணும், அவளுக்கு வேறொரு பையனும் மனசளவில் தேர்வாகி விடுகிறது. ஒரு நகைச்சுவை போலத் தெரிகிற இந்தக் கதை, காதல் என்பதன் அவசரத்தை, அதைவிட நல்ல முடிவுகளைப் பிற்காலத்தில் தர முடிகிற தருணத்தை எடுத்துக் காட்டுவதாகவே நான் நம்புகிறேன். மனைவி என்பதான நிதானமான தேர்வு, காதலி என்பதன் தவிப்பான தேர்வில் இல்லை, காதல் உடல் சூட்டின் ஒரு மயக்கநிலை என்று இதைப் புரிந்துகொள்ளலாம் அல்லவா?

வெல்டன் சத்யா.

சத்தியப்பிரியனுக்கு கதையின் முடிவு கச்சிதமான வார்த்தை வீச்சுடன் அமைய வேண்டும். அந்த வரிகள் வாசக மனதில் கொஞ்சநேரமாவது தளும்ப வேண்டும். அதற்காக அவர் மெனக்கெடுகிறார். தன் அடையாளம் அது என அவர் கைக்கொள்கிறார்.

தாண்டவம், சங்கரன், வாசல்வரை போன்ற கதைகள் புராணச் சாயல் தொட்டு, அதை ஒட்டி அல்லது மறுதலித்து சட்டென ஆவேச முகம் காட்டுகின்றன. ஆனால் தமிழில் இப்படி ஆவேச வசனம் வரும் இடங்கள் எல்லாம் தோற்றப் போனவரின் மொழியாக அமைவது முரண். ஆயினும் இப்படிக் கதைகளில் தமிழில் வெற்றி பெற்றிருக்கின்றன. கர்நாடக சங்கீத ராகங்கள் அடிப்படையில் புதிய பாடல்கள் வருவது இல்லையா, நாமும் அதை ரசிப்பது இல்லையா என்ன?

புத்தகம் முழுக்க கடிதங்கள் வருகின்றன. நான் என்ற அம்சத்துடன் அதிகக் கதைகள் கவனப்படுத்தப் படுகின்றன. டீச்சர் என்றால் கணக்கு தான் சொல்லிக் கொடுக்கிறார்கள். பேங்க் வேலை பார்க்கிறவர்கள் நிறையத் தலை காட்டுகிறார்கள். வறுமை மனிதர்களைப் பாடாய்ப் படுத்துகிறது. யாருக்காவது உடம்பு முடியாமல் போய்க்கொண்டே யிருக்கிறது. மத்தியதரக் குடும்பங்களின் அன்றாட வாழ்வியல் அம்சங்கள் இவை. அழுத்தமான சோகத்தை ஒரு உச்ச ஸ்தாயி வயலின் போல சத்தியப்பிரியன் மீட்டுகிறார்.

பயம் என ஒரு சிறுகதை. குழந்தைகளுக்கு அம்மை தடுப்பூசி போட வருகிறார்கள். பயந்துகொண்டு அப்பாவின் அறையில் ஒளிந்துகொள்ளும் சிறுவன். கடன்காரனுக்கு  பயந்துகொண்டு அதே அறையில் ஒதுங்கும் அப்பா, என ஒரு முடிச்சு.

பாதாம் மாமி இந்தத் தொகுப்பின் வித்தியாசமான கதை. மற்ற கதைகளில் பாத்திரங்கள் விதியின் விரட்டலில் வீழ்ந்து படுகிறார்கள். மாமி நிமிர்ந்து விரைத்து நிற்கிறாள். மோசமான வாய்ப்புகள் வருவதைப் போலவே வாழ்க்கை என்பது நல் வாய்ப்புகளையும் கொண்டு வரும். அதை சட்டென்று பிடித்துக் கொள்ளத் தெரிய வேண்டும். மாமி அதை அறிந்திருக்கிறாள். மேன்மக்கள் மேன்மக்களே. மாமி ஒரு பழைய ஜரிகைப் பட்டுப் புடவை.

சத்தியப்பிரியனின் நடையோட்டத்துக்கு சில உதாரணங்கள் காட்டலாம்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து போலிஸ்காரர் ஒருவர் அலைபேசுகிறார்.

“மெடிக்கல் காலேஜ் ஜுனியர் பசங்களுக்கு இன்னிக்கு ஓசில போஸ்ட்மார்ட்டம் ட்ரெய்னிங்...” (சிறுகதை, படிக்கப்படாத கடிதம்.)

(குழந்தை) ஆர்த்தி போட்டுக்கொண்டிருந்த ஷிம்மி விலகப் படுத்துக் கொண்டிருந்தது. சிவந்த நிறத்தில் கை விரல்களும் கால் விரல்களும் தேன்குழல்கள் போலிருந்தன. (அம்மா போயாச்சு.)

பேச்சு என்றுதான் ஏழைக்கு சாதகமாக நின்றிருக்கிறது? (பிள்ளை மனம்)

தீய்ந்துபோன காப்பிக் கொட்டையைப் போல் கிடந்த ஆட்டுப் புழுக்கை. (ஆடு)

அந்தக் காலகட்டத்தில் நாற்பது வயது கடந்து கண்களின் கீழ் கோழிச்சதை தெரியும் வயதான கதாநாயகர்களே கல்லூரி மாணவர்களாக நடித்துக் கொண்டிருந்தனர். (வாசல் வரை)

முதல் இன்னிங்ஸ் முடிந்து சில காலம் எழுதாமல் இருந்த சத்தியப்பிரியன் திரும்ப உறக்கம் கலைத்திருக்கிறார். இரண்டாவது இன்னிங்ஸ் அவரை மேலும் மெருகேற்றி பட்டை தீட்டியிருக்கிறது. இரு இன்னிங்ஸ் கதைகளும் இந்த நூல் அடையாளப் பட்டிருக்கின்றன.

சத்தியப்பிரியன் கதையுலா வருகிறார். ஆரத்தி கரைத்து வரவேற்கலாம்.

**

 

Comments

  1. படைப்பாளியின் இரண்டாவது இன்னிங்ஸிற்கு சிறப்பான திறப்பு - சிறப்பு .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog