நன்றி

பேசும் புதிய சக்தி ஆகஸ்டு 2021 இதழ்


அரசனும் குடிமக்களும்

எஸ்.சங்கரநாராயணன்

 தாத்தா இந்த வீட்டுக்கு செக்யூரிட்டி வேலைக்கு என்று சேர்ந்து இரண்டு மாதம் ஆகப் போகிறது. 12 மணி நேர வேலை. சம்பளம் என்று நாலாயிரம் தருகிறார்கள். முதலில் என்ன இது, அவ்வளவுதானா… என்று இருந்தது. அங்கேயே தங்கிக் கொள்ளலாம், என்பது சம்பளத்தை விட பெரிய விஷயமாய் கணபதிக்கு இருந்தது. மற்றபடி இரண்டு வேளை தேநீர், மூணு வேளை உணவு அங்கேயே தந்து விடுவது பெரிய உபகாரம். ஒரு பையன் அவருக்கு. தானே ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்தான். பின் பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கொண்டு அவரை வேறு வீடு, வேறு வேலை பார்த்துக்கொள்ளக் கூசாமல் சொல்லிவிட்டான். பெத்தவர்கள்தான் பையனை, கல்யாணம் ஆனதும் தனியே போகச் சொல்வார்கள். இங்கே தலைகீழ்க் கதை. யாரையும் எதிர்த்துப் பேசாதவர் அவர். தன்பக்க நியாயத்தைக் கூடக் கேட்கத் தெரியாது. எங்கே போக, என்ன செய்ய என்று திகைப்பான நிலையில் இந்த செக்யூரிட்டி வேலை வரப் பிரசாதம் அல்லவா? வயதான காலத்தில் வாழ்வதே கடவுளின் சித்தம் என்றாகி விட்ட நிலை.

பெரிய காம்பவுண்டு வளாகம். தள்ளி பின்னே கார் நிறுத்த இடம் உண்டு. பின்கட்டில் சிறு அறை. அதில் அவர் தங்கிக்கொண்டார். யாரும் தேடி வீட்டுக்கு வந்தால் மாடியில் முதலாளி வீட்டை அழைத்து தகவல் சொல்ல இன்டர்காம் இருக்கிறது. அவர் கட்டளைகளுக்குக் காத்திருந்தார். கட்டளைகளுக்குப் பணியக் காத்திருந்தார். சிறு குழந்தை என்றாலும் அவரை வேலை வாங்கலாம். யாரும் அவரைத் திட்டலாம். மிரட்டலாம். கேள்வி கேட்கலாம். கணபதிக்கு பதில் சொல்லத் தெரியாது. எந்தக் கேள்விக்குமே பதில் சொல்ல அவருக்குத் திகைப்பாய் இருந்தது. தன் வாழ்க்கையில் அவர் யாரையும் எதிர்த்துப் பேசிய ஞாபகம் இல்லை.

இப்படியே தாத்தாவாகவும் ஆகி விட்டார்.

மகன் சித்தாள் வேலை பார்க்கிறான். நிலையான வருமானம் என்று இல்லை. அவனும் கையில் காசிருந்தால் வேலைக்குப் போவது இல்லை. பணம் எவ்வளவு வந்தாலும் குடிக்கக் கற்றுக் கொண்டால் பத்தாது தான். அவனே எதிர்பார்க்காமல் அப்பா இப்போது நல்ல வேலையில் அமர்ந்து விட்டதாக அவனுக்கு ஆச்சர்யம். இதே மாதிரி அவனும் சின்ன வேலையில் உட்காரலாம். அடங்கிப்போக மாட்டான். குடிக்காமல் இருக்க முடியாது. மாசம் ஒருமுறை அப்பாவிடம் வந்து ஐந்நூறு ஆயிரம் வாங்கிச் செல்கிறான். “தனி ஆளுத்தானே நீரு? உமக்கு எதுக்கு இத்தனை பணம்?” என்று கேட்கிற அவனை என்ன செய்வது? குளி சோப்பு, தலைக்கு எண்ணெய், துணி துவைக்கிற சவுக்காரம் என்றாவது எனக்குச் செலவு இருக்காதா என்ன? கைல பத்து காசு இருந்தாதானே… உடம்பு அசௌகர்யம் என்று வந்தால் பாடு பார்க்க வேண்டியிருக்காதா?  அவருக்குக் கேட்கத் தெரியாது. பணத்தைத் தந்தபடியே அவன் மனைவி, “அனுசூயா எப்பிடி இருக்கா?” என்று விசாரிப்பார்.

பகல் பூராவும் இராத்திரி எட்டு மணி வரை வாசல் காவல். அதே இடம். மெல்ல சிறிது எழுந்து நடந்தால் காலே அயர்ச்சி காட்டும். ஒரே மாதிர் ஒரு பத்து நிமிடம் வைத்திருந்தால் மரத்து விடுகிறது. யாராவது வாசலில் கூப்பிட்டால் சட்டென எழுந்து கொள்ள முடியாமல் சண்டித்தனம் செய்கிறது. “வரேன்… வரேன்…” என்று கத்திக்கொண்டே நொண்டியபடி பூமி தட்டாமாலை சுற்ற வாசலுக்குப் போனார். தனியே உட்கார்ந்திருக்கையில், நல்லவேளை அவர்கள் வீட்டில் நாய் வளர்க்கவில்லை என்று நினைப்பார். காவலுக்கு எனநாய் இருந்தால் அவருக்கு ஒருவேளை வேலை கிடைத்திருக்காது. ஆனால் நாய் இருந்தால் வர்றாட்களை விசாரித்து அது இன்டர்காமில் பேசாது. அதற்காகத்தான் ஆள் போட்டிருக்கிறார்கள்…

வாத மரத்தடியில் பிள்ளையாராட்டம் உட்ர்ந்திருப்பதாகத் தோணும். அவர் பேரே கணபதி. தெருக்குத்து இருந்தால் வாஸ்துப்படி பிள்ளையார் வைப்பார்கள். இந்த வீட்டுக்கு அவரே பிள்ளையார். அவரைப் பார்த்துக் கொள்ளவே ஆள் இல்லை, என்ற  நிலையில் இந்த வீட்டை அவர் பார்த்துக் கொண்டார். கண்ணாடி இல்லாமல் கண் சுத்தமாத் தெரியாது. அசுத்தமாய் கலங்கலாய்த் தெரியும். இந்த வயதுக்கு சரியான தூக்கம் கிடையாது. உடம்பும் அத்தனை நிதானத்தில் இல்லை என்ற அளவில் சரியான விழிப்பு நிலையும் இல்லை. சட்டென எழுந்துகொண்டால் லாத்திவிட்டு தலை சுற்றி விடும். பின்னறையில் வாசல் காம்பவுண்டில் இருந்து யாராவது மணி அழுத்தினாலும் கேட்கும். மாடியில் இருந்தும் சில சமயம் அவரை அழைப்பு மணி ஒலி எழுப்பிக் கூப்பிடுவார்கள். அரைகுறைத் தூக்க மயக்கத்தில் உடம்பைப் பிடிவாதமாய் எழுப்பிக் கொண்டு எழுந்து வருவார்.

எப்படியும் காலை வெளிச்சம் கண்ணில்  பட்டாலே விழிப்பு வந்து விடுகிறது. அதுவரை நல்லா தூங்கினார் என்பது அல்ல. தினசரி காலை ஆறு மணி வாக்கில் வாசல் வளாகத்துக்கு வந்து உதிர்ந்து கிடக்கும் வாத இலைகளைப் பெருக்கி ஒதுக்குவார். குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பற்காக. பெண் வேலைக்காரி இருந்தால் தண்ணீர் தெளித்து கோலம் போடும். மாடியில் முதலாளியின் மனைவி, முதலாளி, மற்றும் அவர்களின் ஒரு பையன் மூன்றே பேர்தான். சமையல் மற்றும் வீட்டு ஒத்தாசைக்கு ஒரு பெண் இருக்கிறாள். புண்ணியவதி அவள்தான் அவருக்கு அன்னபூரணி. எங்காவது முதலாளியின் மனைவி வெளியே போனால் கையில் கூடையுடன் பின்னால் கூடவே போவாள். முதலாளியாவது கணபதியுடன் ஓரிரு வார்த்தை பேசுவார். “கணபதி?” ஐயா என்று ஓடிவருவார் கணபதி. “இந்த மரம், தோ பூச்செடி… எல்லாத்துக்கும் தண்ணி ஊத்தறதில்லையா?” சரிங்க மொதலாளி. நான் பாத்துக்கறேன்… என்பார். வாசலை குப்பை செத்தை இன்றி சுத்தமாக வைத்திருக்க அவர் முயன்றார். அதன்பலன், மேலும் வேலைகள் தந்தார்கள். அதைக்கூட அந்தம்மா பேசியதே இல்லை. அவளது தகுதிக்கு அது, அவருடன் உரையாடுவது, அதிகம் என அவள் நினைத்தாளோ என்னவோ. அதைப் பற்றி என்ன? எதுவும் பேசாமல் ஆளைவிட்டாலே அதுவே நலல விசயம்தான்.

நகரத்தில் பெரிய ஜவுளிக்கடை வைத்திருக்கிறார்கள். கடை என்பதை அடித்து கடல் என்று போட்டிருப்பார்கள். கடல்ல துணியெல்லாம் நனைஞ்சிராதா. நான்கு மாடிகள் எடுத்த கடை. நெரிசலான நகரப் பகுதி. கடை உயரவாக்கில் வளர்ந்தது. அப்பாவுடன் சண்டை போட்டுக்கொண்டு இவர் பிரிந்துவந்து தனியே கடை போட்டார். எப்படியும் குடும்பப் பெயரின் சிறு சிதர் ஒட்டிய அளவில் கடைப்பெயர் இருந்தது கடைக்கு. அத்துடன் கடையும் ஊர் மத்தியில் நல்ல இடம். வியாபாரத்துக்குக் குறைவு இல்லை. கடை சிப்பந்திகளுக்குப் போலவே அவருக்கும் கெட்டித் துணியில் சீருடை தைத்துத் தந்தார்கள். அதுவும் நல்லதாச்சு.

முதலாளியின் அப்பா எப்பவாவது மகனைப் பார்க்க என்று இந்த வீட்டுக்கு வருவார். அந்தக் காரின் ஹாரன் சத்தம் கணபதி அறிவார். ஓடோடி வந்து கதவுகளை விரியத் திறப்பார். வணக்கம் சொல்வார். சினிமாவில் அதற்குத் தனியே இசை ஆர்ப்பரிப்பு இருக்கும். மகனிடம் பிரியம் காட்டும் அப்பா. எத்தனை சண்டை போட்டாலும் அவரால் மகனை விட்டுக்கொடுக்க முடியவில்லை பாத்தியா, என நினைத்துக் கொள்வார் தாத்தா. மகனைவிட பேரனிடம் அவருக்கு ஒட்டுதல் இருந்தாற் போலிருந்தது. மருமகள் சரியாகப் பேசுவாளா தெரியவில்லை ஒருவேளை அவளால்தான் மகன் பிரிந்து வந்தானோ என்னவோ. என் மருமகள் போல… இதெல்லாம் எனக்குத் தேவையில்லாத விஷயம் என நினைத்தார்.

அந்தப் பேரப்பிள்ளை பெயர் பிரசாத். பேருக்கேத்தாற் போல கடவுள் பிரசாதம் தான். என்னவோர் தேஜஸ் அவன் முகத்தில். பணக்காரக் களை என்பது இதுதான். ஒண்ணாம் வகுப்போ இரண்டாவதோ படிக்கிறான் போல. சில சமயம் காலையில் சீக்கிரம் எழுந்துகொண்டால் கையில் பெரிய பந்துடன் கிழே இறங்கி வருவான். அவருடன் வந்து விளையாடுவான் அவன். மேலே விழுந்தாலும் அந்தப் பந்து மெத்தென்று இருக்கும். அவன் கைக்கு வாகாக அவர் தூக்கிப் போட வேண்டும். சரியாக அவரைப் பார்க்க அவனுக்கு எறியத் தெரியாது. அவர் காட்ச் பிடிக்கத் தவற விட்டுவிட்டால் அதில் அவனுக்கு ஒரு சிரிப்பு.

சிறிது நேரத்தில் விளையாட்டு அலுத்துவிடும் அவனுக்கு. அதுவரை மேலேயிருந்து யாரும் அவனைக் கூப்பிடாவிட்டால் அவரிடம் தன் பள்ளிக் கதைகள் சொல்வான் அவன். எல்லாம் ஆங்கில ரைம்ஸ். ஆங்கிலக் கதைகள். அவருக்குத் தெரியாது. ஒன் ட்டூ பக்கிள் மை ஷு, பாடுங்க தாத்தா, என்பான். அவர் என்னத்தைக் கண்டார். அவன் பேச அவர் கேட்டுக் கொண்டிருப்பார். அதையெல்லாம் உட்கார்ந்து பொறுமையுடன் கேட்க அவனுக்கு யாருமே இல்லை என்று புரிந்து கொண்டார் கணபதி. அவன் தாத்தா கூட இருந்தால் கேட்டிருப்பார்… கணபதியுடன் சரி சமதையாக அவன் பேசிச் சிரித்து விளையாடுவதை முதலாளியம்மா எப்படி எடுத்துக் கொள்ளும் தெரியாது. அவருக்கு யோசனையாகி விடும். பயமாகி விடும். தனியே கொட்டுக் கொட்டென்று இப்படி வாசலில் உட்கார்ந்திருக்கிறதுக்கு அவனது பிரியத்தை வாங்கிக் கொள்ளவும் அவர் விரும்பினார். தனக்கு யாரும் இல்லை என்று தான் நினைப்பபதைப்போலவே அவனும் உறவுக்குத் திகைப்பதாகத் தோன்றும். உடனே தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்வார்.

தாத்தா உங்க வீடு எங்க, என்று கேட்பான். வெறுமனே சிரிப்பார். உங்க வீட்டுக்கு நீங்க போறதே இல்லியா, என்று கேட்பான். உங்களை யாரும் தேட மாட்டாங்களா தாத்தா? அவனது கேள்விகள் அவரைத் திகைக்க வைத்தன. ஏன் தாத்தா நீங்க இங்க இருக்கீங்க? உங்க பசங்க கூட நீங்க ஏன் இல்லை, என்று கேட்டான் ஒருதரம். இங்க என்ன வேலை உங்களுக்கு?

உங்க வீட்டுக்குக் காவல்காரன், என்று சிரித்தார் அவர். வீட்டை எதுக்குக் காவல் காக்கணும், என்று கேட்டான் அவன். அவருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அப்ப உங்க வீடு? அதை யார் காவல் காப்பா தாத்தா, என்பது அவனது அடுத்த கேள்வியாக இருந்தது.

அவனோடு ஓடியாட முடியாதபோது தாத்தா அவனுக்குக் கதைகள் சொல்ல ஆரம்பித்தார். ஜோரான குட்டி குட்டிக் கதைகள். ஆங்கில வழி பாடங்கள் படிக்கிறான் அவன். தமிழ் பேசுகிற அளவில் அவனுக்கு அந்தக் கதைகள் பரவசப் படுத்தின. தெனாலிராமன், மரியாதைராமன் என்று தமிழில் குட்டிக் கதைளுக்குப் பஞ்சம் இல்லை. விடுகதைகள், வேடிக்கையான பழமொழிகள் எல்லாம் அவனுக்குச் சொல்வார். அதில் எத்தனை புரிந்ததோ அவனுக்கு. ஆனால் தாத்தா பேசப் பேச அவன் எதிரே உட்கார்ந்து கேட்டுக் கொண்டே யிருப்பான்.

அரண்மனையில் குத்து விளக்கு ஒன்று திருடு போய்விட்டது. வேலைக்காரர்களில் யாரோதான் திருடி யிருக்க வேண்டும். எப்படிக் கண்டுபிடிப்பது? தெனாலிராமன் ஒரு உபாயம் சொன்னான். அரண்மனை வேலைக்காரர்கள் எல்லாரிடமும் ஒரு அடி நீள குச்சியைக் கொடுத்து மறுநாள் எடுத்துவந்து காட்டச் சொன்னான்.

“அங்குலம்னா தெரியுமா தம்பி?” என்று கேட்டார் தாத்தா. தெரியும் என்று தலையாட்டினான். “ஏன் அப்பிடிப் பண்ணினான் தாத்தா?”

யார் உண்மையான திருடனோ அவனது குச்சி ஒரு அங்குலம் வளர்ந்திருக்கும்… னு சொல்லிக் குடுத்தான் அந்தக் குச்சிகளை. அவர் சொன்ன கதைகளை அவன் ரசித்தான். மேலும் அவர் கதைசொல்ல என அவன் காத்திருந்தான். அவன் புருவங்கள் யோசனையில் நெறிபட்டன.

அந்தத் திருட்டுப் பயல், யார் விளக்கை எடுத்தானோ, அவனுக்கு பயமாகி விட்டது. நாளைக்கு அரண்மனைக்குப் போனால் நம்ம குச்சியின் நீளம்… என்னாயிருக்கும்? (ஒரு அங்குலம் வளர்ந்திருக்கும்.) ஆமா. அதுனால இப்பவே நாம நம்ம குச்சியை ஒரு அங்குலம் வெட்டிறலாம். காலைல நம்ம குச்சி ஒரு அங்குலம் வளர்ந்தாலும் அது அதே நீளத்துல தானே இருக்கும்னு சொல்லி… குச்சியை வெட்டி நீளத்தைக் குறைச்சிட்டான்.

மறுநாள் அரண்மனைக்குப் போனால்… எல்லா வேலையாட்களும் குச்சியைக் காட்டறாங்க. ஏய் குச்சி தானா வளருமா தம்பி? (வளராது, என்றான் பிரசாத்.) ஒவ்வொரு குச்சியா வாங்கிப் பார்த்தார் ராஜா. அந்தத் திருட்டுப் பயல், அவன் தான் குச்சியை வெட்டி நீளத்தைக் குறைச்சிட்டானே? அவன் குச்சியை அளந்து பார்த்தார் ராஜா.  அது நீளம் குறைவா இருந்தது. டக்குனு திருடன் இவன்தான்..னு பிடிச்சிட்டாரு!

“சூப்பர் ஐடியா தாத்தா!” என்று சிரித்தான் அவன். பிறகு சொன்னான். “என்னன்னாலும் திருடறது தப்பு தாத்தா.” ஆமா தம்பி, என்றார் அன்புடன். ஒருதரம் அப்படியே அவன் மடியில் படுத்து விட்டான் அவன். சிலிர்த்து விட்டார். உடனே பயமாகி விட்டது. நல்லவேளை யாரும் பார்க்கவில்லை. “தூக்கம் வருதா ராசா?” என்றார். இல்ல, என்று தலையாட்டினான். மடிதான் வேண்டும் போலிருக்கிறது. அதற்குள் மேலேயிருந்து பிரசாத்?... என்று அழைப்பு வந்துவிட்டது. வரேன் தாத்தா, என்று எழுந்து ஓடினான் பிரசாத்.

அவன் இல்லாத நேரத்தில் கூட அவனைப் பற்றிய யோசனைகள் வந்தன கணபதிக்கு. அவனிடம் சொல்ல என்று நிறையக் குட்டிக் கதைகள் யோசித்தார். என்ன இல்லை பிள்ளைக்கு. என்றாலும் அவன் தேடுவது, அந்தப் பிரியம், அது மாத்திரம் அவனுக்குக் கிடைக்காமல் ஆயிற்று என நினைத்தார். அவன்மேல் பிரியம் செலுத்துகிற தாத்தா அவன்கூட இருக்க முடியவில்லை. வேலைக்காரி ஊட்டுகிற உணவும் கவனிப்புமாய் வளர்கிறான். காலை பள்ளிக்கூடம் எட்டு எட்டுபத்து அளவில் அவன் கிளம்பினால் அவன் மாடி யிறங்கி வருவதைப் பார்க்க என்று காத்திருப்பார். பளிச்சென்று வருவான். கூட அவன் புத்தகப் பையைத் தூக்கிக்கொண்டு வேலைக்காரி. கார் ரிவர்சில் வர காம்மபவுண்டு பெரிய கதவைத் திறந்து விடுவார். அதை பிரம்மாண்டமாய்க் காட்ட சினிமாவானால் இசை ஆர்ப்பரிப்பு இருக்கும்..கார் டிரைவர் காலை எட்டு மணிக்கு வருவான். பிள்ளையைப் பள்ளியில் விடுவதில் இருந்து அவன் வேலைகள் ஆரம்பிக்கும். முதாலாளியின் சூட்கேசைத் தூக்கிக்கொண்டு கீழே வருவான்.அவரோடு அலுவலகம் போய்விடுவான். பிறகு அவர் எப்போது வீடு திரும்புவாரோ ஒன்பதோ பத்து மணியோ கூட ஆகிவிடும். காரை விட்டுவிட்டு அவன் சைக்கிளில் தன் வீடு போகவேண்டி யிருக்கும்.

பிரசாத் அடிக்கடி வந்து அவரிடம் கதைகள் கேட்க ஆரம்பித்திருந்தான். அவரது கதைகள் அவனுக்கு சுவாரஸ்யமாய் இருந்தன. குறிப்பாக ராஜா கதைகளை அவன் விரும்பினான். தெனாலிராமன் பக்கத்து வீட்டில் கத்திக்காய் திருடிய கதையை ஒருநாள் சொன்னார். ஹோ ஹோவென்று விகல்பம் இல்லாமல் சிரித்தான் பிரசாத். விடுகதை மாதரியான கேள்விகளை நிறைய அவனிடம் அவர் கேட்டார். பாதாளக் கிணத்திலே முத்துக்கள் 32 என்பார். நம்ம வாய், என அவன் சட்டென கண்டுபிடித்தால் பாராட்டுவார். “என் கிளாஸ்லயே நான்தான் தாத்தா முதல் ரேங்க்” என்றான் ஒருநாள். ரொம்ப சந்தோஷமாய் இருந்தது.

திரும்பவும் மகன் பச்சைமுத்து வந்து பணம் கேட்டான். இல்லை என மறுக்கவும் முடியாத இம்சை அது. “அனுசுயா முழுகாம இருக்கா அப்பா” என்றான் அவன். அவருக்கு ரொம்ப சந்தோசம். “நல்லபடியா பாத்துக்கப்பா…” என்று பணம் கொடுத்தார். வாங்கிக் கொண்டான். “வீட்டுக்கு வாங்கப்பா…”  என்று கூப்பிடுவான் என எதிர்பார்த்தார். அவருக்கு லீவு கிடைக்குமா தெரியவில்லை. என்றாலும் அவன் கூப்பிடவே இல்லை. இந்தப் பணமே நேரே வீடு வரை போகிறதோ வழியிலேயே சாராயம் வாங்கி ஊத்திக்குவானோ தெரியாது.

அடாடா, முதலாளியின் அப்பாவுக்கும் முதலாளிக்கும் என்னவோ வாக்குவாதம் வந்துவிட்டது. என்ன பிரச்னை தெரியவில்லை. பணப் பிரச்சினையாய்த்தான் இருக்கும். முதலில் சின்ன அளவில் துவங்கிய சத்தம் மாடியில் அதிகரித்தது. அவருக்கு என்ன செய்ய என்று புரியவில்லை. இது மாதிரி இந்த இரண்டு மாதத்தில் பெரிய அளவில் அப்பாவும் பையனும் சச்சரவிட்டதே இல்லை.

மாடியில் இருந்து விறுவிறுவென்று இறங்கி வந்தார் முதலாளியின் அப்பா. டிரைவர் ஓடோடி வந்து அவர்காரின் கதவைத் திறந்தான். முதலாளி மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். பெரிய முதலாளி மாடியைப் பார்த்து “இனிமே நான் இங்க வரமாட்டேன். பேரனுக்காக வந்திட்டிருந்தேன்… இனி அதுவும் இல்லை” என்றார். மாடியில் இருந்து மகன், “உங்களை யாரும் இங்க அழைக்கல்லியே..” என்றான். கணபதிக்கு வருத்தமாய் இருந்தது. அவரால் என்ன செய்ய முடியும்? கதவை விரியத் திறந்து அந்தக் கார் வெளியே போக வழி விட்டார். சினிமா இசை ஆர்ப்பரிப்புடன் பின்னணிச் சத்தம் கேட்கவில்லை இப்போது. அவருக்கு வருத்தமாய் இருந்தது.

மறுநாள் அந்தப் பையன் பிரசாத் கீழே இறங்கி வந்தான். “தாத்தா? கதை சொல்லுங்க தாத்தா” என்று அவர் தொடையைத் தொட்டபடி உட்கார்ந்து கொண்டான். “ச். போ என்ன கதை சொல்றது. ஒண்ணும் வேணாம்” என்றார். “ராஜா கதை எதாவது சொல்லுங்க தாத்தா” என்றான் பிரசாத்.

“ராஜா கதையா…” என்று யோசித்தார். “சரி… ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு. அவரு நாட்டுல பெரும் பஞ்சம் வந்தது. பஞ்சம்னா என்னன்னு தெரியுமா உனக்கு?” தெரியாது, என்று தலையசைத்தான் பிரசாத். “குடிக்க தண்ணி கிடைக்கல்ல. வயல்ல பயிர் எதுவும் விளையல்ல. நாடெங்கும் மக்களுக்குச் சாப்பிட எதுவும் கிடைக்காமல் போயிட்டது.” ஐயோ, என்றான் பிரசாத்.

ராஜா பாத்தாரு. நாடு இருக்கற நிலைமைல வயசான பெரியவர்கள்.. தாத்தா பாட்டிகள், அவங்களால எதுவும் நாட்டுக்கு பிரயோசனம் கிடையாது. அவங்களையெல்லாம் எல்லா வீட்டிலும் கொன்னுறணும்னு ஆணை போட்டான்…

“ச்சீ. ரொம்ப பயங்கரமான கதை தாத்தா.” அந்த ஊர்ல ஒரு நல்ல பையன். பிரசாத் மாதிரின்னு வெய்யி… என்று அவர் புன்னகை செய்தார். அவன் என்ன பண்ணினான், தன்னோட தாத்தாவை தன் வீட்டு பாதாள அறையில் போய் தங்கச் சொன்னான். அவன் தாத்தாவைக் கொல்லவில்லை. இரகசியமா அவருக்குப் போயி சாப்பாடு கொடுத்திட்டு வந்தான்.

பையன் தலையாட்டினான். அப்ப அந்த ஊருக்கு ஒரு பெரிய அறிவாளி வந்திருந்தான். அவன் ராஜாகிட்ட போயி, தன்னைவிட அறிவாளி இந்த நாட்டில் இருக்கானா? இருந்தால் தன்னோட கேள்விகளுக்கு வந்து பதில்சொல்லச் சொல்லுங்கன்னு சவால் விட்டான்.

“சரி..” கதை மெல்ல உருவாக ஆரம்பிப்பதாக பிரசாத் உணர்ந்தான். தாத்தாவின் கதைசொல்லும் பாணி அவனுக்கு ரொம்ப இஷ்டம். தாத்தா தொடர்ந்து பேசினார். “முதல் சவால்! பானைக்குள்ள ஒரு பூசணிக்காயை வைக்க முடியுமா!” ராஜாவுக்கு பயமாகி விட்டது. இதென்ன இவன் இப்பிடி ஒரு காரியம் சொல்கிறான். பானையின் வாய் சின்னது. பூசணி என்பது உருண்டையாக பெரியதாக இருக்கும். பானைக்குள் பூசணியை எப்படி நுழைப்பது?

“முடியவே முடியாது தாத்தா” என்றான் பிரசாத். ராஜா நாடெங்கும அறிவிப்பு செய்தார். இந்தக் கேள்விக்கு பதில் சொன்னால் ஆயிரம் பொற்காசுகள்… யாருக்கும் அதற்கு பதில் தெரியவில்லை.  அப்ப அந்தப் பேரன் இருக்கான் இல்லியா? நம்ம பிரசாத் மாதிரி… நல்ல பையன் அவன் என்ன பண்ணினான். ரகசியமா மறைச்சி வைச்சிருக்கற தன்னோட தாத்தாகிட்ட போயி அந்தக் கேள்வியைக் கேட்டான். தாத்தா, பானைக்குள்ள பூசணியை நுழைக்க முடியுமா?

முடியும்னாரு அவரு. பிரசாத்துக்கு ஆச்சர்யம். “முடியுமா?” என்று வாயைப் பிளந்தான். கணபதி தலையாட்டினார். ஒரு பூசணிக் காயைப் பிஞ்சா இருக்கும்போதே பானைக்கு உள்ள வெச்சிறணும். அது பெரிசானா அப்புறம் பானைக்கு உள்ளேதானே இருக்கும்?

பிரசாத் தலையாட்டிச் சிரித்தான். கணபதி கதையைத் தொடர்ந்தார். ராஜாவிடம் அந்தப் பேரன் போய் அந்த விஷயத்தைச் சொன்னதும் , சரியான பதில், என்று ராஜா மகிழ்ந்தார். உடனே அவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளித்து மகிழ்ந்தார்.

அந்த முதல் கேள்வி கேட்டானே, அவனுக்கு ரொம்ப ஏமாத்தமா ஆயிட்டது. அவன் அடுத்த கேள்வி கேட்டான். “தானாகவே அடிக்கிற மத்தளம் செய்ய முடியுமா?” பிரசாத்துக்கு கதை ரொம்ப சுவாரஸ்யமாகி விட்டது. மத்தளத்தை யாராவது தட்டினால் தானே சத்தம் வரும் தாத்தா? ஆமாம். ஆனால் தானாகவே அடிக்கற மத்தளம் செய்து காட்டணும். அதானே கேள்வி.

பிரசாத் அவரை நெருங்கி அமர்ந்தான். அதுக்கு அந்தப் பையனோட தாத்தா ஐடியா குடுத்தாரா தாத்தா?... கணபதிக்கு அவன் ஈடுபாட்டோடு கதை கேட்பதில் ரொம்ப திருப்தி. பின்னே?... என்றார். ஒரு மத்தளத்தைப் பிரித்து அதுக்குள்ள நாலைந்து வண்டுகளை வைத்து மூடிறணும். பின்ன உள்ள இருக்கற வண்டுகள் மோதி மோதி மத்தளம் சத்தம் போடுமா இல்லியா?

பையன் கை தட்டினான். கதை சூப்பரா இருக்கு தாத்தா… என்றவன் ராஜா பரிசு குடுத்தாரா?.. “பின்னே?” என்றார் கணபதி. அந்த அறிவாளிக்கு இந்த முறையும் ஏமாற்றம் வந்தது. சரி, மூணாவது கேள்வி..ன்னான் அவன்.

“அதெல்லாம் நம்ம பையன்ட்ட நடக்காது ” என்று கத்தினான் பிரசாத். “பையன்கூட தாத்தா இருக்காரே” என்றான். “சரி தாத்தா. அந்த மூணாவது கேள்வி என்ன?”

மணலைக் கயிறாத் திரிக்கணும்!

“அது எப்பிடி முடியும்?” என்று யோசித்தான் பிரசாத். முடியணும்… அதான் கேள்வி, என்றார் தாத்தா. சரி, என தலையாட்டிக் கொண்டான் பிரசாத். பையன் போயி அவன் தாத்தாகிட்ட யோசனை கேட்டானா…என வேண்டுமென்றே இடைவெளி விட்டார்.

“தாத்தாவுக்கே பதில் தெரியல்லியா?” அவருக்கா தெரியாது… என்று சிரித்தார் கணபதி. பிரசாத்தும் சிரித்தான். எப்பிடி தாத்தா மணலைக் கயிறா திரிக்கறது? “ஒரு கயிறை எடுத்து பத்த வெச்சா அதுபாட்டுக்கு நிதானமா நெருப்புவிட்டு எரியும். அப்பறம் அப்படியேயே அதன் சாம்பல் தங்கிரும். அதைக் கையால் எடுத்தால் அந்தச் சாம்பல் கலைஞ்சிரும். அதைக் கலைக்காமல் ஒரு தட்டைப் போட்டு மூடி எடுத்திட்டுப் போயி ராஜகிட்ட காட்டு.. அதுதான் மணல்கயிறு..ன்னார் அந்தத் தாத்தா.

“வெரி குட்” என்று துள்ளிக் குதித்தான் பையன். ராஜா அவனுக்குப் பரிசுகள் வழங்கி அவனைக் கட்டிக்கிட்டார். சவால் விட்ட அந்த அறிவாளி ராத்திரியோட ராத்திரியா நாட்டை விட்டே ஓடிப்போனான்.

ராஜா கேட்டாரு. எப்பிடி யாராலயும் பதில் சொல்ல முடியாத கேள்விக்கு எல்லாம் உன்னால பதில் சொல்ல முடிஞ்சது? அப்ப அவன் சொன்னான். “எங்க தாத்தாதான் இந்தக் கேள்விக்கு எல்லாம் பதில் சொன்னாரு. வயசானவங்ளை நாம ஒதுக்கி வைக்கிறோம். அலட்சியப் படுத்தறோம். ஆனா ஆபத்து அவசரம்னால் அவங்க அனுபவமும் அறிவும் சமயோசித புத்தியும் தான் நமக்ககு வழிகாட்டுது. வயசானவங்களை நாம நல்லபடியா வெச்சிக் காப்பாத்தணும்..

உடனே அந்த ராஜா, முதல்ல ஒரு ஆணை போட்டாரே, நாட்ல உள்ள வயசானவங்ளை யெல்லாம் கொன்னுருங்கன்னு சொன்னாரே, அந்த ஆணையை விலக்கிக்கிட்டாரு… வாபஸ்… என்றபோது தாத்தா அழ ஆரம்பித்திருந்தார்.

“தாத்தா நல்ல முடிவுதானே? ஏன் அழறீங்க?” என்று கேட்டான் பிரசாத்.

•••

storysankar@gmail.com

91 97899 87842 / whatsapp 9445016842

Comments

Popular posts from this blog