சிறுகதை / நன்றி அமுதசுரபி / ஆகஸ்டு 2021
ப ற வை வ ம் ச ம்
“பக்கத்துக்
கருங்குளம் கோவில்ல தேர்னாலே இங்க இருக்கற சனங்க எல்லாருமே நடந்தே கருங்குளம் போயிருவோம்
அம்மா. ஏழெட்டு கிலோமீட்டர். அப்ப பெரிசா பஸ்சும் இல்லை. எங்க கிட்ட சைக்கிளும் இல்லை…
தேவையும் இல்லைன்னு வெய்யி. மறுநாள் விசேஷத்துக்கு முந்தின்னாள் சாயங்காலமே இங்கருந்து
சனங்க புறப்பட்டு சாரி சாரியாப் போயிட்டே இருப்பாங்க. ஊர்ல திண்ணை வெச்சிக் கட்டாத
வீடே கிடையாது கருங்குளத்தில் ஒண்டிக்க. கிடைச்ச திண்ணை. யார் வீடுன்னு தெரியாது. போயித்
தங்கினால் ராத்திரி ஒரு அரிசிஉப்புமா அந்த வீட்டுக்காரர் எல்லாருக்கும் உபசரிப்பார்.
மொத்த ஊருக்கும் பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் ஒரு லன்ச் ஹோம்னு இருக்கும். வேறு ஓட்டல்
கிடையாது. இருந்தாலும் ஓடாது. ஆனா சனங்ளும் வேத்துமுகம் காட்டாமல் அதிதிகளை வரவேற்பாங்க.
அத்தனை பிரியமாய் எல்லாரும் பழகுவாங்க.”
ரவிக்கு
எல்லாம் தெரிந்த கதைதானே? இருந்தாலும் அவளிடம் சொல்கிறதாக மாமனார் தனக்குத் தானே ரசித்தபடி
பேசிக் கொண்டிருப்பார். அவரது உரையாடலில் பாதி தன் ஊர்ப் பெருமையாக இருந்தது. அவரது
பாதிப் பேச்சில் ரவி தூங்கி யிருப்பான். “நீ காலைல வேலைக்குப் போகணுமே அம்மா. வேணா
தூங்கு” என்பார் கரிசனத்துடன். இங்கிதமான மாமனார். ஒரு வருஷம் முந்தி மாமியார் தவறிப்போனதில்
இருந்து அவர் கொஞ்சம் ஷீணித்துத்தான் போனார். இந்த ஆண்கள் பாவம். ரொம்ப தைரியம், சாமர்த்தியம்
என்று வளையவரும் ஆண்கள் மனைவி இறந்தபின் சட்டென காற்று இறங்கிய டயர் போல ஆகிவிடுகிறார்கள்.
அவள் மாமனாருக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. காலையில் மாமனார் வெறும் கஞ்சிதான். மதியத்துக்கு
அவள் சமைத்து வைத்துவிட்டுப் போனால் தானே போட்டுக்கொண்டு சாப்பிடுவார். ஒரு மூணு நாலு
மணிக்கு தானே காபி தயாரித்துக் கொள்வார். டிவி பார்ப்பார். புராணத் தொடர்கள் அவருக்கு
இஷ்டம். ‘சங்கரா’வில் பஜன் சாம்ராட் பிடிக்கும்.
மாமனாரின்
குரல் ஒருமாதிரி மூக்கு வழியே ஒலியெழுப்பி வரும். சற்று கண கண. சும்மாவா சொல்றாங்க,
தெக்கத்திக் காரனுக்கு மூக்குல குத்தாலம்! தண்ணியப் பாத்தாலே ஒரு முழுக்கு போடத் துடிக்கிற
சனங்கள். மேலே எப்பவும் அவர் ஈரிழை குத்தாலத் துண்டு போட்டுக் கொண்டிருப்பார். அவருள்
எப்பவுமே எதாவது பாட்டு ஓடிக் கொண்டிருக்கிறாற் போலத் தோணும். உட்கார்ந்திருக்கையில்
தானே காலாட்டியபடி அமர்ந்திருப்பார். தன்னை எப்பவும் இளமை மாறாமல் துடிப்புடன் வைத்துக்
கொள்ளும் முனைப்பு அது என்று நினைத்துக் கொள்வாள்.
சுஜாதா முழுகாமல்
இருந்தாள். இப்போதுதான் போன மாதம் பெண்மருத்துவர் உறுதி செய்தாள். ரவிக்கு நாலு வருஷமாய்க்
குழந்தை இல்லை. இன்னும் வயது இருக்கிறது. நாம அவசரப் பட்டாப் போல எல்லாம் நடக்குமா,
என நினைத்துக் கொள்வார் அப்பா சிறு கவலையுடன். ரவி திருநவேலி அல்வாவுடன் வீட்டுக்குள்
நுழைந்தான். நல்ல சேதி சொல்லப் போகிறான், என்று அப்பாவுக்குப் புரிந்து விட்டது. செய்தி
கேட்டதும், சட்டென்று “இதைக் கேட்க உங்கம்மா…” என்றபோது அவர் சற்று மௌனமானார். ரவியும்
சுஜாதாவும் அப்படியே நின்றார்கள். என்ன செய்ய என்றே புரியாத திகைப்புடன். அப்புறம்
அப்பாவே சமாளித்துக் கொண்டார். சிரிப்புடன் அல்வாவை ஒரு விள்ளல் வாயில் போட்டுக் கொண்டார்.
”நம்ம ஊரு பெருமாளுக்கு ஒரு ஐந்நூறு ரூபாய் அனுப்சுருடா” என்றார் உற்சாகத்துடன்.
சட்டென அப்பா
அப்படி அம்மாநினைப்பில் உள்சுருங்கியதையே அவனும் நினைத்தபடி இருந்தான். படுக்கையில்
சுஜாதாவிடம் திரும்பி “அப்பாவை ஊருக்குக் கூட்டிட்டுப் போயிக் காட்டினாப்லயும் ஆச்சு.
கோவிலுக்குப் போனாப்லயும் ஆச்சு. ரயில்ல புக் பண்ணிறவா? உனக்கு உடம்பு சௌகர்யப் படுமா
இவளே?” என்று கேட்டான். மசக்கை மாதிரி அவஸ்தை எதுவும் இல்லை அவளுக்கு. அவள் சரி என்றாள்.
தான் பிறந்து
வளர்ந்த ஊருக்குக் கிளம்புதல் என்கிற விஷயமே அப்பாவைக் கிளர்ச்சியுறச் செய்து விட்டது.
அவர் முகம் ராத்திரி விளக்கு போட்டாற் போலப் பொலிந்தது- வீட்டில் இருந்தபடியே ரவி திருநவேலிக்கு
மூணு டிக்கெட் இணையத்தில் முன்பதிவு செய்துவிட்டான். உள்ளே அப்பா அவரது பால்ய சிநேகிதர்
உத்தண்டராமனுடன் பேசுவது கேட்டது. சரி. அப்பாவுக்கு அந்தப் பழைய உற்சாகம் மெல்ல மீள
ஆரம்பித்து விட்டது என்று புரிந்தது. சுஜாதா அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
நீரும் நிலமும்
செழித்த ஊர். ஒரே பள்ளிக்கூடம் குமரகுருபரர் பெயரில். அப்பா காலத்தில் இல்லாமல் இப்போது
பக்கத்தில் கல்லூரி வந்திருக்கிறது. ஊர் அத்தனைக்குப் பெரிய மாற்றங்கள் காணவில்லை ஆனால் அதுதான் அப்பாவுக்கு உவகை அளித்தது. தாமிரபரணி
நதிக்கு மேலே, பெண் பிள்ளைகளுக்கு ரெட்டை சடை போட்டு பிறை வடிவத்தில் பூச்சரம் வைத்தாற்
போல பாலம் ஒன்று வளைந்துயர்ந்து அடங்கியது. பாலத்தில் இருந்து நதியைப் பார்த்ததும்
அப்பா கன்னத்தில் போட்டுக் கொண்டார். ஊரின் ஒவ்வொரு செங்கலும் அவர் அறிந்தது தானே.
அதுவரை ஜன்னலோர சீட்டில் இருந்தவன் புன்னகையுடன் அப்பாவுக்கு தன் இருக்கையை விட்டு
கொடுத்தான். பஸ் நிலையத்தில் இருந்து இறங்கி அவர்களை முந்திக்கொண்டு முன்னே நடையை எட்டிப்போட்டு
நடந்தார் அப்பா. சுஜாதா புன்னகை செய்துகொண்டாள்.
உத்தண்டராமனுக்கு
தன் பால்ய சிநேகிதனைக் கண்ட குஷி. “ஏ வா வா… எப்டி இருக்கே?” என்று வீட்டு வாசலுக்கே
வந்து அப்பாவைத் தழுவிக் கொண்டார் உத்தண்டராமன். “உன்னைப் பார்த்துக் கொள்ளைக்காலம்
ஆச்சேடா…” என்றார். “நல்லவேளை நீ வர்றச்ச மழை பெய்து தாமிரபரணில தண்ணி ஓடுது. போன வருஷம்லாம்
வேட்டியா கோமணமா ஒடுங்கிக் கிடந்தது நதி…” என்றார். உத்தண்டராமனுக்கும் குரலில் அந்த
கண கண இருந்ததைப் புன்னகையுடன் கவனித்தாள் சுஜாதா.
அவரவர் பூர்விகம்
அவரவருக்கு சொர்க்கம் தான். இங்கேயே பிறந்த வளர்ந்து கால் புழுதிபட ஒடித் திரிந்து
களித்து விளையாடி… மாமனார் தன் பால்யத்தின் ஒரு பகுதியை நினைவுகளால் எட்டித் தொட்டிருக்கக்
கூடும். உத்தண்டராமனின் பார்யாள் வந்து சுஜாதாவைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டாள்.
“எல்லாம் நல்ல விசேஷந்தான் போல…” என்று அவள் கேட்டபோது சுஜாதாவுக்கு வெட்கமாய் இருந்தது.
சில மனிதர்கள் அன்றைக்குப் பார்த்தாற் போலவே இன்றும் அதே உடல்வாகுடன் இருக்கிறார்கள்.
அப்படியே குணம் மாறாமல் நடந்து கொள்கிறார்கள். கிராமத்தின் இலக்கணம் அது. அவசரம் இல்லாத
உலகம். அவசரம் காட்டாத உலகம்.
உத்தண்டராமன்
அந்த ஊர் போஸ்ட் மாஸ்டராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். அவர்அப்பா வழி சொந்த வீடு. அவர்
பிள்ளை பாஸ்கர் அதே போஸ்ட் ஆபிசில் போஸ்ட்மேன். எட்டு வருடம் ஆகிறது. இன்னும் பணி நிரந்தரம்
ஆகவில்லை. “வாங்கோ வாங்கோ எல்லாரும்… பிரயாணம் எல்லாம் நல்லபடியா இருந்ததோல்யோ” என்றபடியே
புன்னகையுடன் உள்ளே வந்தான் பாஸ்கர். அவன் கையில் காய்கறிப் பை.
“போய்த்
தாமிரபரணியில் ஒரு முழுக்கு போட்டுட்டு வரலாமா,” என்றார் அப்பா அவனிடம். அதுவரை சுஜாதா
அவர்களுடன் வந்தது இல்லை. மாமனாரின் துடிப்பு அவளுக்குப் பிடித்திருந்தது. “எங்க ஓடிப்
போறது நதி. இப்பதான் வந்திருக்கேள்… காபி பலகாரம் பண்ணலாமே. ராத்திரி எப்ப சாப்ட்டேளோ,”
என்றார் உத்தண்டராமன். “எல்லாம் வந்து பாத்துக்கலாம். வர்றச்சயே திருநவேலி ஸ்டாண்டில்
இவன் காபி வாங்கிக் கொடுத்தான்…” என்றார் அப்பா. ரவி அவளையும் குளிக்க அழைத்தான். அவளுக்கு
அப்படி எல்லார் முன்னாலும் வெறும்தோள் காட்டிக் குளிக்க வெட்கமாய் இருந்தது. அவர்கள்
ஊரில் நதி எதுவும் கிடையாது. பின்கட்டுக் கிணற்றில் தண்ணீர் சேந்தி எடுத்து குளியல்
அறைக்குக் கொண்டுபோய் கதவைச் சாத்திக்கொண்டு குளித்துப் பழக்கப் பட்டவள் அவள். இங்கே
புகுந்த வீட்டில் வாழ்க்கைப்பட்டு வந்தபின்னும் தும்பிக்கை யானைக்குப் போல வீட்டுக்குள்
ஷவரில் தலையைக் காட்டுவதுதான். “நீ அப்படியே புடவையோட குளி இவளே. அங்க வசதிப்படாட்டி
இங்க வந்து மாத்திக்கலாம்…” என்றான் ரவி.
அப்பாவும்
பிள்ளையுமாய் தோளில் துண்டுடன் குளிக்க என்று கிளம்பினார்கள். அவர்களுடைய உற்சாகம்
அவளுக்குப் பிடித்திருந்தது. அண்ணன் தம்பியாக அவர்கள் தெரிந்தார்கள் இப்போது. பரபரவென்று
ஓடிக் கொண்டிருக்கும் நகர வாழ்க்கையில் இருந்து இது ஒரு கட்டுத் தளர்ந்த நிலை சிலாள் சாப்பிடும்போது இடுப்பு வேட்டியை சற்று
நெகிழ்த்திக் கொண்டு உட்கார்வான், அதைப்போல! பத்து நிமிட நடை எட்டத்தில் இருந்தது நதிக்கரை.
நல்ல உயரத்தில் பாலசுப்பிரமணியர் கோவில். குளித்துவிட்டுக் கரையேறும் எல்லாரும் சந்நிதியில்
நின்று டைங் என்று மணி அடித்து கும்பிட்டுவிட்டு பிராகாரம் சுற்றிவிட்டுக் கிளம்பினார்கள்.
ஈர உடை சுற்றிய உடல். உதடுகளில் சுலோகமோ குளிரோ தந்தியடித்தது.
நல்ல வேகம்.
நுரைத்துச் சுழித்து ஓடியது நதி. புதுத் தண்ணீர். கன்றுக்குட்டியின் கும்மாளம் போல
இருந்தது அதைப் பார்க்க. ஆங்காங்கே மண் மேடும், சிறு பாறைத் திட்டுகளும் யாரோ முங்கிக்
குளித்துக் கொண்டிருந்தவர் தலைதூக்கினாற் போலத் தெரிந்தன. அந்த நீரோட்ட சலனத்தைப் பார்க்கிற
போதே உடல் சிலிர்க்கிறது மாமனாருக்கு. சற்று தள்ளி ஐம்பது அறுபதடி தூரத்தில் மேம்பாலத்தின்
கீழே ரெண்டாள் உயரச் சுவர்த்திட்டு. அதன் மேலேயிருந்து ஹைஜம்ப் பண்ணி பொங்கி வழிந்து கொண்டிருந்தது தாமிரபரணி. அது சலசலக்கும்
சத்தமே இனிமையாக இருந்தது. ராத்திரி அது பக்கத்து இரண்டு மூன்று தெருக்கள் வரை கேட்கும்
என்று தோன்றியது. இயற்கை தன் இருப்பை அறிவித்த கணங்கள். மனிதனோடு பேசும் கணங்கள் அவை.
இந்த ஊர்ப் பெருமக்கள் கொடுத்து வைத்தவர்கள் என நினைத்துக் கொண்டாள் சுஜாதா.
நதியோடேயே
நடந்தார் மாமனார். இழுவை வெள்ளம். ஆளைத் தள்ளாட்டிய வெள்ளம். இயற்கையே போதைதானே, என்று
இருந்தது அவருக்கு. நதி பூமிக்கு இறைவன் அளித்த கொடை. அவர் சற்று ஆழ வசத்துக்குப் போய்
அப்படியே “ஈஸ்வரா…” என்று சத்தங் கொடுத்து ஒரு முங்கு முங்கினார். ஓடும் நதியின் சிலீரென்ற
ஈரத் தழுவல் அவரைப் பரவசப்பட வைத்தது. “இந்த நதியின் வேகம் இருக்கு பாரும்மா…” என்றார்
அவர் அங்கிருந்தே. காலைல ஆறு மணிக்கு ஒரு முழுக்கு போட்டம்னா சாய்ந்தரம் வரை அப்படியொரு
உற்சாகமும் வேகமும் சக்தியும் சுறுசுறுப்பும் தருமாக்கும்” என்று மறுபடியும் மூழ்கினார்.
மேலே வந்து “அவளை ஜாக்கிரதையா ஆழம் பார்த்து அந்த அருவிக்கு அழைச்சிண்டு போ ரவி…”
சிற்றருவியாய்
அந்த உயரத் திண்டில் இருந்து விழும் நீரில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு தலையை நீட்டினால்
சீயக்காய் தேவையே இல்லை. நன்றாக எண்ணெயை வழித்தெடுத்து விடுகிறது தண்ணீர். நிறையப்
பேர் தண்ணீருக்குள் தலையை நீட்டி காணாமல் போனார்கள். நீரின் இரைச்சலை மீறி அவர்களின்
உற்சாக இரைச்சலும் கும்மாளமும் கேட்டது. தனி உலகமாய் இருந்தது அது. தண்ணீரில் இப்படி
ஆட்டம் போட உடனே பசி வந்துவிடும் என்று இருந்தது.
ரவி சிரித்தபடி
அவள் கையை வாங்கிக் கொண்டான். அவளை அப்படியே அருவியடியில் நகர்த்தி நிறுத்தினான். எப்பவுமே
வெளியிடங்களில் அவனுடன் புழங்க அவளுக்குப் பிடிக்கும். “நீங்களும் வாங்க…” என்றாள்
அவள் புன்னகையுடன். பளார் பளாரென்று நீர்ச் சாட்டை ஆக்ரோஷமாய்த் தலையில் அறைந்தது.
நீரின் பாச ஆவேச ஆசிர்வாதம். உச்சியில் குறுறுவென்று வலி யெடுத்தது அவளுக்கு. நீர்
என்று நினைக்கிறோம். அதன் சக்தி அது பாயும்போது, அல்லது மழையாய் விழுகையில் தான் தெரிகிறது.
மழையில் ட்டூ வீலரில் போனால் அப்போது தெரியும் மழையின் உக்கிர அறைகள். இந்த அருவி அதைவிட
மூர்க்கம். மூச்சை அடக்கி உள்ளே நின்றாள் சுஜாதா. உடலின், மனசின் அழுக்குகளை ஒருசேரக்
களைய வல்லது அருவி. சோப்பு போட்டுக் கொள்ளத் தேவையே இல்லை. அவள் மூச்சுத் திணறத் திணற
நீரின் பாய்ச்சலை விட்டு வெளியே வந்தபோது மாமனார் புன்னகை செய்கிறார்.
“இதாம்மா
எங்க ஊர் அருவி. தினசரி காலைல ஒருவாட்டி சாய்ந்தரம் ஒருவாட்டி குளிக்காம எங்களால இருக்கவே
முடியாது…” என்கிறார். அவர் முகமே குழந்தை போல மாறிவிட்டிருந்தது. தொடர்ந்து கிளர்ந்ழும்
நினைவு வானவில். “ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்னிக்கு இங்க கரைல ஊரே கூடிரும். விதவிதமா
சாதம் பண்ணி இங்க எடுத்துண்டு வந்து ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுவாங்க மொத்த ஊர்சனமும்.
வாலிபப் பசங்ளுக்கு நதிக் குளியல்ன்னா ராத்திரியாவது பகலாவது…” என்றார்.
“அப்பா எப்பிடியும்
ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவையாவது என்னையும் அம்மாவையும் இங்க கூட்டிட்டு வந்திருவாரு.
அரசாங்க வேலையாச்சே. ஹோம் ட்டௌன் எல் ட்டி சி உண்டு.” அதை அவன் சொல்லிக் கேட்டதில்
அப்பாவுக்கு ஒரு பெருமை. “நான் அனுபவிச்ச இந்த சுகம் சௌகர்யம் எல்லாம் அவனுக்கு இல்லாமல்
போச்சேன்றது என்னோட வருத்தம்...” என்றவர் ரவி பக்கம் திரும்பினார். “உனக்கு இதைப் பத்தி
வருத்தம் உண்டா ரவி?” என்று கேட்டார்.
ரவி புன்னகை
செய்தான். பின் “இல்லப்பா…” என்றான். அவருக்கு ஆச்சர்யமாய்ப் போயிற்று. “இல்லையா?”
என்றார் அவனைப் பார்த்து. “பின்ன நீங்க ஏன்ப்பா என்னைக் கூட்டிக்கிட்டு இந்த ஊரைவிட்டு
வெளிய வந்தீங்க?” என்று கேட்டான் ரவி.
அப்பா அந்தக்
கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஒரு விநாடி அவனைப் பார்த்தார். “உனக்காகத்தாண்டா…” என்றார்.
“உனக்கு நல்ல கல்வி தரணும். பெரிய காலேஜ் கிடைக்கணும்…னு எனக்கு ஒரு இது.”
“அது சரி.
வாஸ்தவம்…” என்றான் ரவி. “இந்த ஊர்ல காலேஜே இப்பதான் வந்திருக்குப்பா. நீங்க செஞ்சது
நல்ல காரியம்…” என்றான். “இப்ப நான் படிச்ச படிப்பு. நான் பார்க்கற வேலை… எல்லாம் எதனால?
நாம இந்த ஊரைவிட்டு வெளிய போனதுனாலதாம்ப்பா…” என்றான். சிரித்தபடி சொன்னான்.
“உங்க சிநேகிதர்
உத்தண்டராமன் பிள்ளை… என்ன பண்றான்? இங்கயே போஸ்டாபிஸ்ல போஸ்ட்மேன்.”
அப்பா தலையாட்டினார்.
“வேலை இன்னும் பெர்மனன்ட் ஆவல.”
“பெர்மனென்ட்லி
டெம்ப்ரரி…” என்றான் ரவி. இருவரும் சிரித்தார்கள். பிறகு ரவி சொன்னான். “இருக்கறதில்
திருப்திப் படறது இளமைக்கு அழகல்ல அப்பா…”
“ஆமாண்டா…”
என்றார் அப்பா.
“நீங்க உங்க இளமைல இந்த ஊர், இந்த தாமிரபரணின்னு
அனுபவிச்சீங்கப்பா. அருமையான விஷயம். அதேபோல என்னோட இளமைக்காலமும்… ஆனா வேற சில சந்தோஷங்களால
ஆனதுப்பா” என்றான்.
“அதை நீங்கதான்
குடுத்தீங்க…”
அப்பா ஒரு
நிமிஷம் அவனையே பார்த்தார். பின் தலையாட்டினார். இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்
சுஜாதா. மாமனார் திரும்ப அருவிக்குள் புகுந்தார். யாரோ புடவை நெசவு செய்கிறதில் நீர்த்
துகில் வெளியே வெளியே வந்து கொண்டிருந்தது போலிருந்தது. அப்பா திரும்ப அருவிக்குள்
நழைந்ததைப் பார்த்ததும் ரவிக்கும் திரும்ப தலைநீட்ட ஆசை வந்தது.
“நேரமாயாச்சி…”
என்றாள் சுஜாதா. ஓடும் தண்ணீரில் இடுப்பளவு ஆழத்தில் முங்கியபடியே.
மாமனார்
சமத்துக் குழந்தையாய் சொன்ன பேச்சைக் கேட்டார் வெளியே வந்தபடி அவளிடம் துண்டை வாங்கிக்
கொண்டே “உனக்கு எங்க ஊர் பிடிச்சிருக்காம்மா?” என்று கேட்டார்.
அவளுக்கு
என்ன பதில் சொல்ல தெரியவில்லை. ஆனால் என்னுடைய பூர்விகத்தையும் நான் இப்படியே உற்சாகத்துடன்
காட்டுவேன் அவருக்கு என்று தோன்றியது. புன்னகை செய்தாள் அவள்.
”நீங்க உங்க
குழந்தையோட படிப்பு எதிர்காலம்னு ஊரைவிட்டு வெளியே கிளம்பி வந்தீங்க அப்பா” என்றாள்
மாமனாரிடம் சுஜாதா.
ரவி இப்போது
இடைமறித்துப் பேசினான். “நாங்களும் அதேபோல எங்க குழந்தைக்கு வாகான எதிர்காலம் நோக்கி
நகர்வோம் அப்பா. எதிர்காலத்தில் அவன் மேற்படிப்பு என்று நன்றாகப் படித்துத் தேறினால்…”
என்று நிறுத்தியவன் “வெளிநாடு கூட அனுப்புவோம்…” என்றான்.
சுஜாதாவுக்கு
வெட்கமாய் இருந்தது. இன்னும் குழந்தையே பிறக்கவில்லை, அதற்குள் இவனது கனவுகள்… என நினைத்தாள்.
ஆனாலும் அவளுக்கு அது பிடித்திருந்தது.
“பெருமாள்
கோவில் நடை சாத்தறதுக்குள்ள போக வேண்டாமா?” என்று நினைவு படுத்தினாள் சுஜாதா.
அப்பா அருவியில்
இருந்து வர மனசே இல்லாமல் வெளியே வந்pதருந்தார். அதைப் பார்த்துவிட்டு ரவி “சாய்ந்தரம்
ஒருவாட்டி வருவோம் அப்பா” என்றான். படியேறி டைங் என மணி அடித்து சுப்ரமணிய சுவாமியை
வணங்கிவிட்டுக் கிளம்பினார்கள். ஈரப் புடவையுடன் சுஜாதா வாயில் குளிரின் நடுக்கமோ சுலோகமோ
உதடுகள் தந்தியடித்துக் கொண்டிருந்தன.
•••
storysankar@gmail.com
Mob 91 97899 87842 / whatsapp 94450 16842
Comments
Post a Comment