May 2022 / பேசும் புதிய சக்தி இதழுக்கு நேர்காணல்

உரையாடல் – நா. விச்வநாதன்

பதில்கள் எஸ்.சங்கரநாராயணன்

 


Ø “எழுத்து என்பதே வாசகன் மீது

Ø நிகழ்த்தப்படும் சிறிய வன்முறை.”

-----

நிறைய நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள், கவிதைகள், கட்டுரைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகள் எனப் போட்டிருக்கிறீர்கள். எல்லாமே வாசக கவனம் பெற்றவையாகவே இருக்கின்றன. இது ஒருவகையில் வெற்றி என்றாலும் எழுத்தின் நோக்கம் பூர்த்தியானதா? சாதனை எனக் கொள்ளலாமா?

• என்னைப் பேட்டி என்று அழைத்ததற்கு நன்றியும் மகிழ்ச்சியும். ஆமாம். ஒருவேளை நிறையத்தான். எல்லாமாக ஒரு நூறு நூல்கள் இருக்கலாம். திரும்பிப் பார்த்தால் எனக்கே இது ஆச்சர்யம் தான். வாசகர்கள் மாத்திரம் அல்ல, என் பதிப்பாளர்களே (ஏறத்தாழ ஒரு டஜன்) எனது சிறந்த ரசிகர்கள், எனது முதல் வாசகர்கள் அவர்களே. இது என் அதிர்ஷ்டம் என்றே கொள்ளலாம்.

கவனம் பெற்றவையாகவே இருக்கின்றன என் எல்லாப் படைப்புகளும், என நீங்களே அங்கீகாரம் அளித்தபின் வேறு யோசனை எதுவும் இந்தப் படைப்புகள் பற்றி எனக்குத் தேவை என்ன இருக்கிறது?

 

என் எழுத்தின் நோக்கம் பூர்த்தியானதா, என்றால், எழுத்தின் ஒரே நோக்கம் அதுதான்… வாசகனை வெற்றிகரமாகச் சென்றடைவது. அது பூர்த்தியாகி விட்டது.

எல்லாருக்கும் எழுத்தின் ‘நோக்கம்’ என்று ஒன்று, எழுத ஆரம்பித்தவுடனே அல்ல, காலப்போக்கில் எழுத்துடன் இணையும். தான் அறியாத தன்னை எழுத்தில் அந்த எழுத்தாளன் அடையாளம் காண முடியும். எழுத்தின் அற்புதம் அது. அதற்கும் பூர்த்தி என்பது இல்லை. அது பல அளவுகளில் பரிமாணம் அடைந்தபடியே கூட வரும் ஒன்று. வயதும் எழுத்தின், வாழ்க்கையின் அனுபவமும் சேரச் சேர அது மாறும் அல்லது புதிய திசைகளில் பயணிக்கும். அதுவே வளர்ச்சி நிலை. அதற்கும் பூர்த்தி என்பது… உண்டா என்ன?

---

எதற்கும் முன்மாதிரி தேவை இல்லை தான். ஆனாலும் ஒரு முன்மாதிரி இருந்தால் ஒரு நூலிழை நுனியைப் பிடித்துக் கொண்டு சரசரவென்று போக முடியும். செய்யும் காரியம் சுலபமாகும். அநேகர் இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு இராமாயணம், மகாபாரதம் முதலில் முன்மாதிரிகளாக இருக்கின்றன. படைப்பாளி விரும்பியோ விரும்பாமலோ  மனதிற்குள் இவை வந்து உட்கார்ந்து விடுகின்றன. உங்கள் எழுத்தை எப்படிச் சொல்லலாம்? அவற்றின் தொடர்ச்சியா அல்லது வெற்றிடத்தில் இருந்து புதிதாகத் தொடர விடுவதா?

·       நீங்களே ஓர் எழுத்தாளர் என்ற அளவில் படைப்புத் தளத்துக்கு ஒரு ‘வியூகம்’ தரப் பார்க்கிறீர்கள். அவற்றில் உங்கள் ‘யூகம்’ அதிகமாய் இருக்கிறது. கால காலமாக நமக்குள் பழக்கப் படுத்தப்பட்ட மரபுகள், மதிப்பீடுகள் சார்ந்து நம் மனமும், அதன் வழி சிந்தனைகளும் இயங்குகின்றன. இதில் ‘கலை’ எங்கே பிறக்கிறது? கலை ஒரு முரண் அம்சத்தில் இருந்து பிறக்கிறது. பொதுக் கருத்தில் இருந்து மாறுபட்ட அல்லது விலகிய சுயம்புவான ஒரு கருத்து, அல்லது மாற்றம் எழுத்தின், கலையின் ஆதார சுருதி. ஒத்த கருத்தில் இருந்து விலகிய ஒரு குரல் அது. தனிக் குரல். உங்களில் தனிக் குரலாக அது துவங்கி வாசகனிடம் பரிமாறப் படுகிறது.

 மாற்றங்களே வாழ்வின் ஆதாரம். சுவாரஸ்யம். மாற்றமே அடுத்த கட்டத்துக்கு நகர, முன்னேற வழி தரும் அல்லவா?

 அதாவது… முன்மாதிரி எதற்கு? அதைப் போலச் செய்யாமல் இருப்பதற்கே. ஏற்கனவே சொல்லப்பட்டதற்கு நகல் எடுக்கத் தேவை என்ன இருக்கிறது?

 எனக்கு முன் எழுதிய படைப்புகளை கணக்கில் கொண்டு அதன் தோளில் ஏறி உலகைப் பார்க்கிறேன் நான்.

 கதையின் களம் என்ற அளவில் கூறிய களமாக இருந்தாலும் அதன் கூறும் முறையிலாவது ஒரு புது அம்சம் என் கதைகளில் இருக்கும்.படி நான் பார்த்துக் கொள்வேன்.

---

குபரா, தி.ஜானகிராமன், எம்விவி, ஜி.நாகராஜன், புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா போன்ற காத்திரமான எழுத்து வரிசை இருக்கிறது. இவர்களை இலக்கிய குருமார்கள் என சிலர் சொல்கிறார்கள். எழுத்துக்கு ‘எக்ஸ்ப்ரி டேட்’ உண்டா?

• சர்வ நிச்சயமாக உண்டு. மேற்சொன்னவர்கள் அந்தந்த காலத்தின் அடையாளங்கள். அந்தக் கால யதார்த்த உலகம், அதன் லொளகிகம் எப்படி இருந்தது, என அவர்கள் மூலம்தான் நாம் அறிய வேண்டும். அவர்கள் என்று இல்லை. எல்லாருமே, நான் உட்பட, எழுத்தில் நிகழ்காலத்தின் சூட்சுமங்களை எட்டிப்பிடிக்கவும் சுட்டிக் காட்டவும் பிரயத்தனம் செய்கிறோம். நிகழ்காலம்தான் வாழ்வின் ’சுவாரஸ்யம். இறந்த காலமோ, எதிர்காலமோ பெரிதும் பொருட்டன்று, என்றே சொல்கிறது வாழ்க்கை. தோல்வி அல்ல, தோல்விக்குப் பின், வெற்றி மாத்திரம் அல்ல, வெற்றிக்குப் பின்னான பெரிய விஸ்திரணம் வாழக் கிடக்கிறது. அதை ஒவ்வொரு துளியாக, நிகழ் அம்சங்களுடனேயே தான் நாம் கடக்க முடியும்.

நீங்கள் அடையாளம் காட்டிய இந்த எழுத்து குருமார்கள், அவர்களும் தங்கள் இறந்த காலத்தில் இருந்து விடுபட்டு நிகழ்காலத்தின் தரிசனங்களில் தான் படைப்புகளைத் தந்தார்கள். 

 காலம் காலமான மதிப்பீடுகளை ஒரு கதையில் ஜெயகாந்தன் மாற்றிப் பார்க்க முயல்கிறார். ஓர் உதாரணத்துக்கு இந்தக் கதையைச் சொல்கிறேன்.

கணவன் இல்லாத சமயம் அவன் மனைவியை அவளது சிநேகிதன் ஒருவன், அவளைப் பார்க்க வீட்டுக்கு வருகிறான். பக்கத்து, எதிர்வீட்டு மனிதர்கள் அதை ரசாபாசமாய் உணர்கிறார்கள். அவர்களில் ஒருத்தர் கணவன் வீடு வந்ததும் “உன் மனைவியைப் பார்க்க யாரோ ஒரு ஆம்பளை வந்து போனான். அவள் தனியாக அவனை உள்ளே அழைத்துப் பேசிக் கொண்டிருந்தாள்” என்று சொல்கிறார்கள்.

 உடனே அந்தக் கணவபன் பேச வந்தவனிடம் கோபப் படுகிறான். “என் வீட்டில் நடந்த நிகழ்ச்சி. நீங்கள் எதற்கு இத்தனை ஆர்வம் காட்ட வேண்டும்? என் மனைவியைப் பற்றி எனக்குத் தெரியும். உங்கள் வேலை வேவு பார்ப்பது அல்ல. இனி இப்படிப் புரளிகளைக் கிளப்பிக் கொண்டு அலையாதீர்கள்” என அந்த வதந்தி கிளம்புமுன் அதற்கு முற்றுப் புள்ளி வைக்கிறான்.

ஜெயகாந்தன் தன் காலத்தைத் தாண்டி எப்படி முன் நிற்கிறார் என்று நான் வியக்க முடிகிறது.

 (புன்சிரிப்பு.) அந்தக் கதைக்கும் முன்மாதிரி தேட முயல வேண்டாம். நல்ல கதை என்றால் முன்மாதிரி இருக்காது.

 ஒரு கதையில் சொல்லப்பட்ட விஷயம் புதியதாய் இல்லாத பட்சம், அது ஏற்கனவே எக்பயர் ஆகி விடுகிறது ஸ்வாமி!

 காலம் தோறும் மாற்றங்கள் நிகழும்போது கலை வழி சொல்லப்படும் சேதிகளும் ‘அவ்ட்டேட்’ ஆவது இயல்புதான் அல்லவா? இதுகுறித்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க இயலாது. கலையின் விதி இது.

எழுத்துக்கும் ஃபேஷன் உண்டு.

---

நடுத்தர வர்க்கத்துப் பிரச்னைகளை மையமாக வைத்தே இன்றுவரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. முழக்கம் சார்ந்ததோ, புரட்சியை நோக்கிய எழுத்து என்ற வகைப்பாடும் இருக்கிறது. மனோவியல் சார்ந்த எழுத்தே வாசகனை உடனடியாகச் சேர்கிறது. உங்கள் எழுத்துவகை என்ன?

• ஓர் எழுத்தாளன் என்ற முமைறயில் புனைவு சார்ந்த உங்கள் கருத்துகளோடு என்னிடம் கேள்விகள் நீட்டப் படுவதாக உணர்கிறேன். பரவாயில்லை. எழுத்தின் அத்தனை வகைமையும் எனக்கு சம்மதம். நான் எல்லா விதங்களிலும் முயன்று பார்க்க பெரு விருப்பு உள்ளவன். உண்மையைச் சொல்லப்போனால், நீங்கள் இப்படி, உங்கள் எழுத்து இப்படித்தான், என்று வரையறுக்க முடியாத அளவில் நான் விதவிதமாக முயல விரும்புகிறேன்.

---

படைப்புகளுக்கான கருப்பொருள் அன்றிலிருந்து இன்றுவரை ஒன்றுதான். வேறு வேறு வடிவங்களில் சொல்லப் படுகிறது. எழுத்துக் கலைஞனின் சாமர்த்தியம் சார்ந்தது இது. வாசகனிடம் கொண்டுசேர்க்க இது சிறந்த உபாயம். மனிதனின் புற மாற்றங்களை எழுதுவதே கூட இவ்வகைதான். இன்றைய படைப்புகளை ‘பிரதிலிபி’ என்று அழைக்கலாமா? எழுத்து என்ற என் சொல் பயன்பாடு, உங்கள் எழுத்தையும் சேர்த்ததான்

• இந்த உலகம், அதன் தாத்பரியங்கள், காரண காரியங்கள்… என்ற பெரும் அலைக்கழிப்புகளில் தளும்புகிறது வாழ்க்கை. ஒரே விஷயத்தைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறோம், என்று சொல்லத் தெரியவில்லை. நம் ஒவ்வொருவரின் உலகமும் சிறியது. சுயநலமானது. எழுத்து எல்லாருக்குமான தளத்தில் இயங்கினால் நல்லது. அது அத்தனை சுலபம்அல்ல.

 உலகப்  பெரும் இலக்கியங்கள் காட்டும் மனிதன் பொது மனிதன். எல்லாருக்கும் விளங்கும்படி, எல்லாருக்கும் பொருந்தும்படியான பாத்திரங்கள் அவை. அப்படியான படைப்பாளிகளே உலகை வழிகாட்ட வல்லவர்கள். கடும் பயிற்சியும், மனதில் தேக்கிய வானளாவிய அன்பும் கொண்டு எழுதப்பட்ட படைப்புகள் அவை. மனதின் நேர்மை எழுத்தில் வெற்றிகளை அழைத்துக் கொண்டு வந்து சேர்க்கும். இதில் கலைத்திறன் என்பது தனி சமாச்சாரம்.

 அத்தோடு எழுத்தில் களமாக புற உலகம், அக உலகம் என்பது எல்லாம் அவரவர் தேர்வு அலலவா?

---

அறிவியல் மாற்றங்கள் கூட  எழுத்தை அசைத்துப் பார்க்கவில்லை. மனதைப் புரிந்துகொள்ளும் கலையை எழுத்தால் கற்பிக்க முடியுமா? அது சிரமமானதா?

• வாழ்வின் மாற்றங்கள் எழுத்தில் வராமல் எப்படி? எழுத்து தன்னியல்பாக நிகழ் காலத்தைப் பிரதிபலிக்க வல்லது. அந்தந்தக் காலத்து விஷயங்களை அது கட்டாயம் அடையாளப் படுத்திய வண்ணமே வெளிப்படும்.

மனதின் எண்ணவோட்டங்களை எழுத்து முன்வைக்க முயல்கிறது. அது சாத்தியமா, என்றால் எழுத்தின் இயல்பே அது. எழுத்தின் தாத்பர்யமே அது அல்லவா?

அதற்கான முயற்சி அது. அது சிரமமானதா என்றால், எனக்குத் தெரியாது. முயற்சியில் உங்கள் கவனக்குவிப்பு சார்ந்த விஷயம் அது.

---

தங்கள் கவலைகளை நேசிக்கும் மக்களும் இருக்கிறார்கள். கொண்டாட்ட மனநிலையை சட்டெனப் பிடித்துக்கொள்ள முடியவில்லை. பழைய இலக்கியங்கிளலாவது போரையும் காதலையும் தாண்டிய நுட்பமான விஷயங்கள் விவரிக்கப் படுகின்றன. இங்கோ எழுத்து அழுமூஞ்சி எழுத்தாகவே இருக்கிறது. இது மிகை இல்லை. எப்போது பார்த்தாலும் வாழ்தல் கொடிது, என்பதுதான்…

• சட்டென பிசிறடிக்கிறீர்கள் நா. விச்வநாதன். நாம் வாசித்த உலகம் சிறியது. உலக இலக்கிய வளாகம் மாணப் பெரியது. இந்தப் பேட்டியின் தொடக்கத்தில் என்ன சொன்னீர்கள்? நம் முன்னோடிகள், என ஒரு வரிசை தந்தீர்கள்… அவர்கள் எல்லாரும் அழுமூஞ்சிகளா? பழையகால எழுத்தில் தான் வறுமையில் செம்மை கொண்டாடப் பட்டது. வறுமையில் செம்மை என்பது வாழ்வின் ஒழுக்கங்கள் என்று பெருமிதம் சொன்னார்கள். அவை சமூகத்தில் வரையறுக்கப் பட்ட ஒழுக்கங்கள் தான். இல்லாதவன் தனக்குத் தானே பெருமை கொள்ள காரணங்கள் தேடி, கண்டடைந்து தன்னளவில் தானே புளகாங்கிதம் அடைவது தான்.

 அவரவருக்கு அமைந்த வாழ்க்கைச் சூழல், அது சார்ந்த மதிப்பீடுகள் நபருக்கு நபர் மாறுகிறது. எத்தனை மனிதர் உள்ளாரோ அத்தனை வித்தியாசம் உ ண்டு இவ்வுலகில். இதில் நம் கண்ணில் பட்டதை வைத்து உலகத்தை எடை போடுவதையே நான் மறுக்கிறேன்.

 புதிய எழுத்தைத் தேடிக் கண்டடைய வேண்டும். வேறு வழியில்லை.

தற்கால இலக்கியச் சூழல் முற்றிலும் அவநம்பிக்கை தருகிற நிலையில் எனக்குப் படவில்லை. தற்போது கூட, ஓரு மாதம் முன்னால், தற்காலச் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து, ‘மாசறு பொன்’ என நான் வெளியிட்டேன். எல்லாரும் சமகால எழுத்தாளர்கள். பத்து கதைகள். அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை. (பதிப்பாளர் உதயகண்ணன் அலைபேசி 94446 40986)

 அவ்வப்போது சமகால எழுத்துகளில் என்னைக் கவர்ந்தவற்றை நான் இப்படி தனித் தொகுதிகளாக வெளியிட்டு வருகிறேன்.

 முதல் தொகுதி ‘ஆகாயப் பந்தல்.’ பிறகு பரிவாரம், யானைச்சவாரி, வேலைசூழுலகு, தருணம், என முயற்சிகள் தொடர்கின்றன.

இவற்றில் முழுக்க இசை சார்ந்த கதைகள் தொகுக்கப்பட்ட ‘ஜுகல்பந்தி’ தனிச் சிறப்பு வாய்ந்ததாக எனக்குப் பேர் தந்தது.

---

எழுத்து உபதேசகமா? எழுத்தாளர் உபதேசியா? ஏனெனில் தமிழ்ச்சூழலே தர்ம சாஸ்திரங்களை  போதிக்கும் களமாகவே இருக்கிறது. தமிழகம் போல் அறநூல்கள் பெருக்கம் வேறெங்கும் இல்லை. உங்கள் படைப்புகளில் அற உணர்வுகளை எப்படிக் கையாள்கிறீர்கள்? அறங்களின் விவரிப்பு, அதன் பாஷ்யங்கள் இலக்கிய வகை சார்ந்ததா?

• அப்படியா? அறநூல்கள் ஒரு காலச் சூழலில் பெருகியவையாகவே நான் நினைக்கிறேன். நான் பிறந்ததே ஸ்ரீவைகுண்டம். ‘நீதிநெறி விளக்கம்’ தந்த குமரகுருபரர் பிறந்த ஊர். இப்போது யார் அறநூல் எழுதுகிறார்கள்? எழுதினால் யார் வாசிப்பார்கள்? பள்ளிக்கூட ஆசிரியராலேயே மாணவர்களைக் கண்டிக்க முடியவில்லை. அறமே வெல்லும், என்பது பொய், என்று எல்லாரும் நினைக்க ஆரம்பித்த காலம் இது. சுஜாதா ‘வாய்மையே (சிலசமயம்) வெல்லும்’ என தொடர்கதை எழுதினார்.

 யோக்கியன் வரான், சொம்ப எடுத்து உள்ள வை, என்கிற பழமொழி புழக்கத்தில் உள்ள பூமி இது.

 இது ஒருபுறம் இருக்க, எழுத்தாளன் உபதேசி அல்ல, என்று சொல்லவே விருப்பம். ஆனால் அதில் உண்மை இல்லை. மாற்றுக் கருத்தை அல்லது ஒரு கதையில் ஒரு சம்பவத்தை நாம் எடுத்துக் காட்டும்போதே அது மறைமுகமாக உபதேச நெடி பெற்று விடுகிறது.

 எழுத்து என்பதே வாசகன் மீது நிகழ்த்தப்படும் சிறிய வன்முறை, என்றுகூடச் சொல்லலாம். எழுத்தாளன் ஓடக் கற்றுத் தருகிற நொண்டி, என்பார்கள். பெரும்பாலான உபதெசிகள் வாழ்வில் தோற்றுப் போனவர்கள்தாம். வெற்றி பெற்றவன் உபதேசம் எல்லாம் பண்ணிக்கொண்டிருக்க மாட்டான். அவனுக்கு அடுத்த வேலை இருக்கும். அவன் அதற்குப் போய்விடுவான்.

 இன்றைய சமூகத்தில் வாழ்க்கைமுறைகளே மாறிப் போயின அல்லவா? கூட்டுக் குடும்பம் என்கிற ஐடியாலஜியே, கான்சப்டே தேய்ந்து வருகிறது. தம்பதிகள் குழந்தைகள் பிறப்பதைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள். தள்ளிப் போடப் பார்க்கிறார்கள். அப்படியும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள். இதெல்லாம் பண்பாட்டைச் சிதறடிக்கவே செய்கிறது. நிறையக் குழந்தைகள் இருந்த வீடுகளில் பாசமும், அன்புப் பரிமாறலும் சகஜமாய் இருந்தது. உடன்பிறப்புகள் இல்லாமல் வளரும் குழந்தைகளிடம் சுயநலமே, அதிகார பாவனைகளே வளரும் அல்லவா?

 இப்போது முன்பத்திகளில் பேசிய விவரங்களைக் கோர்த்துக் கொள்ளலாம். காலந்தோறுமான மாற்றங்களில் மதிப்பீடுகள் மாறி விடுகின்றன. ஆகவே அமர இலக்கியம் என்று ஒன்று இருக்க வாய்ப்பே இல்லாமல் போகிறது.

அறங்கள் உபதேசமும் அற நூல்களும் ஒரு பக்கம் இயங்கியபடியே இருக்கும். இப்போது தன்னம்பிக்கை நூல்கள் அதிகம் விற்பனை ஆவதாகத் தெரிகிறது. (அதற்கு முன் தாயத்து விற்றார்கள்.) இவையெல்லாம் கட்டிக்கொடுத்த சோறு தான். அவரவர் தம்மளவில் எழுந்து கொண்டால்தான் உண்டு. இவை உதவுமா, என்று தெரியாது. தோல்விகளும் நெருக்கடிகளும் கற்றுத்தரும் பாடம், அது புத்தகங்களில் கிடைக்காது.

---

அனுதாபப்பட வேண்டியவர்களைப் பாத்திரங்களாக மாற்றுவது ஒருவகை யுக்திதான். என்ற பேச்சு இருக்கிறது. அனுதாபம் கவனத்தை ஈர்க்கும், என்ற மனோவியல் பிழையானது. அதை எழுத்திற்குள் கொண்டுவருவது எழுத்துப் பயிற்சி இல்லாதவர்களின் வேலை. இன்று பெரும்பாலான எழுத்துக்கள் இப்படித்தான். அவர்கள் தனித்தனி குழுக்களாக இயங்குகிறார்கள். தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். பாராட்டிக் கொள்கிறார்கள். அடிப்படை நோக்கம் கவன ஈர்ப்பே. எழுத்தின் பலவீனத்தை இட்டு நிரப்ப எனலாம். இலக்கியக் கூட்டங்கள் பயிற்சிப் பட்டறைகளாக இருக்க வேண்டும். நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள். உங்களுக்கு நடப்பு புரிந்திருக்கும். உங்கள் பதில் சரியாக இருக்கும். தீர்வு நோக்கியதாக இருக்கும்…

• எல்லாக் காலத்திலும் எல்லா விதமான இலக்கிய கோஷங்களும், வேடிக்கைளும் இருக்கின்றன. நீங்கள் நிறைய முன் தீர்மானங்களுடன் உரையாடுகிறீர்கள். எனக்கு உவப்பு இல்லாத இலக்கிய சர்ச்சைகளையோ, குழு மனப்பான்மையையோ நான் சட்டை செய்வதில்லை. அலட்டிக் கொள்வதும் இல்லை. ‘‘இலக்கியக் கூட்டங்கள் பயிற்சிப் பட்டறைகளாக இருக்க வேண்டும்” என்று சொல்கிறீர்கள். யாருக்குப் பயிற்சி? வாசகனுக்கா? எழுத்தாளனுக்கா? விமிரிசகனுக்கா? இதுதான் சட்டாம்பிள்ளைத் தனம்., ஒருவகை குழு மனப்பான்மை என இதையும் சொல்லக் கூடாதா?

நண்பர் நா. விச்வநாதன், பரந்த உலகம் இது. இங்கே எல்லாவற்றுக்கும் இடம் இருக்கிறது. இருக்க வேண்டும். அதுதான் நியாயம்.

---

இந்தக் குழுக்களின் பேரிரைச்சலில் இருந்து உங்கள் எழுத்தும் நீங்களும் ஒதுங்கி இருக்கிறீர்கள்.  தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். அசல் எழுத்தும் வைத்திருக்கிறீர்கள். இந்த இலக்கிய ‘தாலிபான்கள்’ உங்கள் எழுத்தை எப்படிப் பார்க்கிறார்கள்? கருத்து வந்ததா? சாதுவான எழுத்து என்ற ஒரு வாக்கியமாக – அதுவே விமரிசனமாக  இருக்கிறது. ஓர் உரையாடலில் கேட்டது. சாதுவான எழுத்து என்பது சரிதானா?

• தவறல்ல. அது அவர் கருத்து. அவர் கருத்துக்கு நான் கருத்து சொல்வது முறையும் அல்ல. ஆனால் எந்த விமரிசனத்தையும் உடைக்கிற அளவில் வேறு புதிய தளங்களில் நான் இயங்க பிரியப் படுவேன்.

சமீபத்திய தொற்று பரவல் காலத்தில் நான் எழுதிய கதைகள் அனைத்தும், உறவுகளை வலுப்படுதத்துவதாகவே அமைத்துக் கொண்டேன். வேலையை வீட்டில் இருந்தபடியே செய்கிற வாழ்க்கை அமைப்பு. கணவன் மனைவி வேலைக்குப் போகாமல் ஒரே வீட்டில் அலுவலகப் பணி செய்கிற சூழல். குழந்தைகளுக்கும் கல்விக் கூடங்கள் திறந்திருக்கவில்லை. இந்நிலையில் பிணக்குகளைக் கணக்குச் சொல்லாமல், இணக்கஙகளை என் கதைகளில் நான் பதிவு செய்ய நினைத்தேன்.

பொதுவாகவே இன்றைய காலகட்டத்தில் அன்புசார்ந்த உலகத்தை மீண்டும் ஸ்தாபிக்க வேண்டி யிருப்பதாக நினைக்கிறேன். கூட்டுக் குடும்ப அமைப்புகள் கட்டு தளர்ந்து விட்டன. பெரியவர்களே தங்கள் பிள்ளைகளை, பெண்களை தனிக்குடித்தனம் என்று வைத்துவிடுகிறார்கள். ஒரு குழந்தை, இரு குழந்தை என்ற அளவில் பெற்றுக் கொள்கிறார்கள். தான் தன் சுகயநலம் சார்ந்த இந்த உலகத்தில் விட்டுக் கொடுக்கும் பண்பு குறைந்து வருவதான கவலை எனக்கு உண்டு. அதேபோல வேலைக்குப் போகும் பெண்களிடத்தில், பெண்மை சார்ந்த கனவுகள் சார்ந்த அழகியலை நான் திரும்ப அடையாளப் படுத்தவும் முயல்கிறேன்.

குழந்தை பிறப்பதை  தள்ளிப்போட்ட ஒரு தம்பதி. பக்கத்து வீட்டில் வாடகைக்கு வரும் இன்னொரு தம்பதி. அவர்களின் சிறு பெண் குழந்தை ஒன்று கொலுசு சப்திக்க இங்குமங்கும் ஓடித் திரிகையில் அந்த வளாகமே கலகலாப்பாகி விடுகிறது. இந்த தம்பதிகள், குறிப்பாக மனைவி தானும் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதாக ஒரு கதை.

(புன்சிரிப்பு) சாதுவான கதைதான்…. இல்லையா?

அன்புசார்ந்த உலகை மீண்டும் கட்டமைக்க வேண்டியிருக்கிறது. அதை வன்முறையால் கொண்டுவர முடியுமா என்ன?

---

வெளியே எவ்வாறு வேடிக்கை பார்க்கிறீர்களோ அவ்வாறே உலகில் நிகழ்வதை வேடிக்கை பார்க்கப் பழகிவிட்டால் எழுத்தாளனே சாட்சியாக நிற்கிறான். எழுத்து – எழுதுவது மகத்தானது என்ற கருத்தும் இருக்கிறது. எழுத்தாளன் ஒரு சாட்சிதானா? உடலுழைப்புத்தொழில் தாண்டி மனவுழைப்புத் தொழில் எனலாமா?

• எழுத்து என்பதே வாழ்க்கை பற்றிய அவதானிப்பு தான். அதை வேடிக்கை பார்ப்பது என்கிறீர்கள். வேறு வார்த்தை என்றாலும், அத்தனை அலட்சியம் தேவையா? எழுத்து என்பதே அவனது, எழுத்தாளனது மனசாட்சி தானே? பார்த்ததில் பகிர்வதில் அவனது பங்கு அதுவே அவனது குரல். அவனது பார்வை. அவனது விமரிசனம். வாசகனின் மனதில் ஒரு நிகழ்வை அவன் கற்பனையாகவோ, நடந்ததையோ தற்குறிப்புடன் நிகழ்த்திக் காட்டுகிறான். எதை அவன் முன்னிறுத்துகிறான் என்பதில் அவனது அடையாளமும் இருக்கத்தான் செய்கிறது.

---

எழுத்தாளனின் படைப்பு எண்ணிக்கை கூடக் கூட அவர்கள் சிறந்த எழுத்தாளர் என்ற ஒரு கணக்கு இருக்கிறது. தலையணை சைஸ் நூல்கள் எழுத்தாளரை தர நிர்ணயம் செய்கின்றன. இதில் ‘கன்டென்ட்’ பின்னுக்குப் போய்விடுகிறது. மௌனியும் ப.சிங்காரமும் கூட இன்றும் கொண்டாடப் படுகிறார்கள், என்பது ஏன் மறந்து போனது? எழுத்துப் பெருக்கம் வளர்ச்சியின் அளவீடா?

• நிறைய தடாலடிகள் பேசுகிறீர்கள். இது விமரிசனமோ, கரிசனமோ அல்ல. உங்கள் பார்வை.  அதிகப் படைப்புகள் தந்தால் சிறந்த எழுத்தாளர் என்ற கணக்கு யார் தந்தது? தலையணை சைஸ் நூல்கள், என அலட்சியமாய் ஓர் எள்ளல். ஒருமுறை திரைப்பட இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆத்திரத்துடன் பாரதிராஜாவுக்கு “உங்களால் கருப்பு வெள்ளையில் என்னைப்போல வெற்றிப்படம் தர முடியுமா?” என சவால் விட்டார். பாரதிராஜா ஏன் கருப்பு வெள்ளையில் திரைப்படம் எடுக்க வேண்டும்?

நாவலின் அளவு சிறியது என்ன பெரியது என்ன? அதன் தரம் பார்த்து நாம் பேசலாம். தலையணை சைஸ் என்றெல்லாம் பொத்தம் பொதுவாகச் சொன்னால், அதுவும் அவற்றை வாசிக்காமல் பேசினால் முறையல்ல அது.

மௌனி, சிங்காரம் இன்னும் கொண்டாடப் படுகிறார்கள்… சரி. அதற்கென்ன?

விவாதங்கள் செய்யலாம். பெரும்போக்கான கருத்துகளுக்கு அரட்டைக்கான மரியாதையே கிடைக்கும். ஆரோக்கியமானது அல்ல இது. திண்ணையில் கூடச்சேர்ந்து கும்மியடிக்க நான் தயாரில்லை.

---

கிட்டத்தட்ட நூறு தொகுதிகளைக் கொடுத்திருக்கிறீர்கள். நன்கு கவனம் பெற்றவையாகவே இருக்கின்றன.  உங்கள் எழுத்து வெற்றிகரமானது என்று சொன்னாலும் வாசகன் அப்படிக் கருதினாலும் உங்கள் எழுத்தின் சுயம் குறித்து உங்கள் கருத்தே முக்கியமானது. பாஷ்யங்களின் கருத்து முடிவுகளை விட மூலம் கூறும் கருத்து சிறந்தது. அசலானது. உங்கள் எழுத்தில் ஓர் அலட்சியம் இருக்கிறது, என்று உங்கள் நண்பர் ஒருவர் சொன்னார். எனக்கும் அவர் நண்பரே. அலட்சியம் என்பதை கர்வம் எனலாமா? எழுத்தாள கர்வம் என்று இருக்கிறது. இருக்க வேண்டும். இது கூடுதல் தகுதிதான். என்ன சொல்ல வருகிறீர்கள்? கர்வம் பெருமைதான்…

• நண்பர் சொன்னார்… என்றெல்லாம் சுற்றி வளைப்பானேன்? நான் கர்வி என்று சொல்ல வருகிறீர்கள். சரி.

---

சுற்றிலும் எவ்வளவோ நடக்கின்றன நல்லதும் கெட்டதுமாய். அப்படியே மிகை அலங்காரம் ஏதுமின்றி, மிகை விவரணங்கள் ஏதுமின்றி பதிவு செய்வதே உத்தமமானது , என்ற கருத்தும் இருக்கின்றது. கலைஞன் அவ்வாறு இருந்தால் அவன் எழுத்தும் தட்டையாகத்தானே இருக்கும்? அலங்காரங்கள் இயற்கையானவை. இதில் முற்போக்கு, பிற்போக்கு என்ற வாதத்தை முன்வைப்பதே செயற்கை. அபுனைவு எழுத்து குற்றமுடியதா? புனைனவு தூய்மையானதா?

• (புன்சிரிப்பு) அலங்காரங்கள் இயற்கையானவை – என்ன சொல்லாடல் இது. முதற் சொல்லுக்கும் அடுத்த சொல்லுக்கும் ஒட்டாத, இரண்டே சொல் வாக்கியம். மற்றபடி உங்களுக்கு எழுத்து பற்றி சில பிரத்யேகக் கருத்துருவாக்கம் வைத்துக்கொண்டு பேச வந்திருக்கிறீர்கள்.

தூய்மை, குற்றம்… இதெல்லாம் என்ன பார்வை…

----

உங்கள் கதைகளில் ஒரு தர்க்கம் இருக்கிறது. நம் மரபே தர்க்கம் சார்ந்தது. நான் அந்த மரபில் இல்லை. என் வழி தனி மரபில் இருப்பது, என்று உங்கள் எழுத்தின் வழி மென்மையாகச் சொல்கிறீர்கள். நாட்டார் புனைவுகளில் இருந்தே இந்த மிகைபடக் கூறல், தர்க்கம் எல்லாம் வந்துவிட்டது. அவ்வளவு விஷயங்களையும் வாசகன் பிரித்துப் பிரித்துப் புரிந்துகொள்ள வேண்டுமா, என்ற கேள்வி என்னிடம் இருக்கிறது. வாசகனை சிரமப்படுத்தக் கூடாது, என்பது முக்கியம்.

• தர்க்கம் கூடாது என்கிறீர்களா? தர்க்கம்தான் கதையின் ஆதார சுருதி. முன்பு சொன்னேன் அல்லவா? வாசகன் மீதான சிறு வன்முறை, அது இந்த தர்க்க அம்சம்தான். தர்க்கம் என்பது ஒரு கதையின் நேர்கோட்டுப் பாதை. கதையின் நிகழ்ச்சிகள் காரண காரியம் அற்று இயங்குமா என்ன- (வாசகனை சிரமப்படுத்தக் கூடாது என்பது முக்கியம்.) என் வாசகர் அறிவாளிகள். அவர்கள் சிரமப்பட மாட்டார்கள். கும்பகோணம் டிகிரி காபி, வேணுமானால் நாலு எட்டு நடந்து போனால்தான் கிடைக்குங் காணும்…

----

உங்கள் ‘நந்தவனத்துப் பறவைகள்’ விடாமல் வாசித்துக் கொண்டிருப்பவன் நான். உங்கள் எழுத்தின் வழி உங்களை தரிசிக்க என்னால் முடிகிறது. சிறுகதைகளிலும் கட்டுரைகளிலும் கூட என்னால் முடிகிறது. எனக்குப் பிடித்தமாயிருப்பதாலா – இந்த மதிப்பீடு சரியானதுதானா? என் ருசி அனைத்து வாசகருக்குமான ருசி இல்லை. உங்கள் ருசியும் அதுவாக இருக்க முடியாது தானே?

• ஆ, நந்தவனத்துப் பறவைகள், என் முதல் நாவல். அதன் நாயகன் பெருமாள்சாமி. ஒரு அப்பாவி. தன்னம்பிக்கை குறைவான பாத்திரம். நம் எல்லாரிடமும் நாம் மட்டுமே அறிந்த அசட்டுத்தனங்கள் உண்டு. அதை அந்தப் பாத்திரம் மூலம் நான் சொன்னபோது அது ரசிக்கப் பட்டது. அது ஒரு ‘யுனிவர்சல்’ கதாபாத்திரம். அதன் வெற்றியும் தோல்வியும் நம்மில் அடையாளப்பட வல்லது… என எழுதும்போதே நான் அறிவேன். 

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் முதுகலை மாணவர்களுக்கு அது, வெளிவந்த ஜோரில் பாடமாக்கப் பட்டது. எத்தனை பெரிய மரியாதை அது. அச்சில் வந்த என் முதல் நாவல் அது. நான் அதே பல்கலைக் கழகத்தில் இளங்கலை வேதியியல் படித்தவன். இந்த கௌரவம் நான் எதிர்பார்த்திருக்க வாய்ப்பே இல்லை

அது மத்த 99 புத்தகம் பற்றிப் பேசாமல் முதல் நாவல் பற்றி உற்சாகமாய்ப் பேசுகிறீர்கள்…

 பரவாயில்லை. பேசிய அளவு சந்தோஷம்.

---

எல்லா மூலை முடுக்குகளில் இருந்தும் சமூகம் நம்மை ஒருவித சிறைக்குள் தள்ளி விடுகிறது. அது நரகம். இந்த நரகத்தில் இருந்து விடுதலைக்கான வழியை எழுத்து காட்டுமா?... என்ற கனவு முக்கியமானது தானே?

• கனவு காண்பவனுக்கானது அல்ல எழுத்து. என் கதாபாத்திரங்களும் பாயைப் பிறாண்டுகிறவர்களுக்கானது அல்ல. ஆண்மைக்குறைவு உள்ளவன் லேகியம் வாங்கித் தின்னலாம். பீமபுஷ்டி அல்வா அல்ல எழுத்து.

வாசகன் கூர்மையானவன் ஐயா. அவன் அறிவுரை யாசித்து, எழுத்தாளன் வீட்டுவாசலில் நிற்கிறவன் அல்ல.

---

ஒரு நேர்காணலில் சொல்லி யிருக்கிறீர்கள். “எதனால் எழுதுகிறேன்… என்றால என் இருப்பை நியாயப் படுத்திக்கொள்ள. ஒழுங்குகள் முக்கியமானவை. ஒழுங்குகள் சார்ந்த விஷயத்தில் மரணபயம் இல்லை. ஏன் ஒழுங்குகள் கவர்ச்சிகரமானவை. மரணத்தை மீறி வாழ்க்கையில் நெடுந்தூரப் பயணம் இருக்கிறது. வாழ்க்கை அற்புதமானது.” இந்தக் கலையைத்தான் வாசகனுக்குக் கடத்துகிறீர்களா?

• அன்பும் எளிமையும் திறந்த மனதும் நேர்மையும் போதும். மானுடம் வெல்லும். வெல்ல வேண்டும், என்று நான் எழுதுகிறேன். பேட்டிக்கு நன்றி. உங்கள் கேள்விகளால் ஊர் உலகம் சுற்றிவிட்டு என் படைப்புகளைப் பற்றிப் பேசவே இல்லை. எனக்கும் அது கூச்சமாய் அமைந்திருக்கும்.

முன்அனுமானங்களும் மதிப்பீடுகளுமாய் உரையாடினீர்கள். என்னளவில் நிறைய உங்களிடம் நான் முரண்படுகிறேன். என்றாலும் உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி. வணக்கம்.

• • •

  

Comments

Popular posts from this blog