விகல்பம்

எஸ்.சங்கரநாராயணன்



*

ஒரு குடும்பத்தில் பெண் என்பவளுக்கு சர்வ சகஜமாக அஜென்டாவில் இல்லாத புது பொறுப்புகள் அமைந்து விடுகின்றன. மாமியாருடன் அவளுக்கு இருந்த உறவைப் பற்றியும், நாத்தனார் மச்சினர்களிடம் அவளுக்கான புரிதல் பற்றியும் அவள் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும். யாரையும் யாரிடமும் விட்டுக் கொடுத்துவிட முடியாது. காட்டிக் கொடுத்துவிட முடியாது. தற்காத்து தற்கொண்டாற் பேணி… வள்ளுவர் அசத்துகிறார்.

*

ண்களை விட பெண்கள் சூட்சுமமானவர்கள். உள் விழிப்பு அதிகம் கொண்டவர்கள். வயதுக்கு வந்த ஆணின் விளையாட்டுகள், குறும்புகளை விட, பூப்படைந்த பெண்ணின் சூட்சும விழிப்பு அபாரமானது. வயது ஏற ஏற பெண்களின் இந்த உள் கவனம் அதிகமாகத்தான் ஆகிறது. பெண்மையின் இயல்பே அதுதான். வித்யாவதிக்கு மகனின் நடவடிக்கைகளில் திடீரென்று ஒரு வித்தியாசம் தெரிந்தது. அந்தக் கணம் உள்ளே தூக்கிவாரிப் போட்டது. இதை எத்தனை நாளாய் நான் கவனிக்காமல் விட்டேன், என்று சிறு படபடப்பு வந்தது.

அவனைச் சின்னப் பையனாகத்தான் நினைத்திருந்தாள். என் வயிற்றில் பிறந்து என் மடியில் வளர்ந்த பிள்ளை. இப்போது எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பது போகிறான் மனோகர். கிடுகிடுவென்று அவன் உயரங் கொடுக்க ஆரம்பித்திருந்தான். சிறு பூனைமயிர் சிவந்த முகத்தில் முளைப்பாரி போல. அவனது பனியன் மேலேறி தொப்புள் தெரிந்தது. இழுத்து இழுத்து கீழே தள்ளிக் கொண்டான்.

உலகம் அடுத்த சுற்றுக்குத் தயாராகி விட்டது, என நினைத்துக் கொண்டாள் வித்யாவதி. அதை இந்நாட்களில் நான் உணர்ந்திருக்க வேண்டும். அலட்சியப் படுத்தி யிருக்கக் கூடாது. எப்படி கவனிக்காமல் விட்டேன், என்பதைவிட எப்படி கவனிப்பதை கவனிக்காமல் விட்டேன், என்று யோசிக்க வைக்கிறது.

என் வாழ்வில் பிரச்னையே வராது, என… என்னவொரு அசட்டுத்தனம்!

அவள், அவள் கணவன் பிரசாத், மற்றும் மனோகர் என மூவரின் உலகம் அது. மனோகருக்கு எது தேவை என்றாலும் அம்மாவிடம் தான் வந்து நிற்பான். அவள்போய் அப்பாவிடம் பேச வேண்டும். “ஏன் உன் பிள்ளை அவர் பேச மாட்டாராமா?” என்றபடியே அப்பா பணம் எடுத்துத் தருவார். “பிராக்ரஸ் ரிப்போர்ட்ல கூட உன்கிட்டயே கையெழுத்து வாங்கிட்டுப் போயிர்றான்…” என அவருக்கு வருத்தம் இருந்தது. ஆனால் ஓரளவு நல்ல மதிப்பெண்களே வாங்கினான். அதைப்பற்றி அவர் குறைப்பட எதுவும் இல்லை. எப்படியும் ‘பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு’ என்றால் அவள்தான் போகிறாள். அவருக்கு நேரங் கிடையாது.

வித்யாவதி வேலைக்குப் போகவில்லை. என்றாலும் வீட்டில் அவளுக்கு வேலை சரியாய் இருந்தது. வீட்டைப் பெருக்கித் துடைக்க, பாத்திரங் கழுவ என்று அவள் வேலைக்காரி வைத்துக் கொள்ளவில்லை. பெரும்பாலான வேலைக்காரிகள் வம்பு பேசுகிறார்கள். தகவல் ஒலிபரப்புத் துறையைக் கையில் எடுத்துக் கொண்ட மாதிரி நடமாடுகிறார்கள். வாஷிங் மிஷினில் துவைத்து வெளியே எடுத்துக் காயப்போட்ட துணிகளை, பிரசாத்தின் மனோகரின் உடைகளை அவளே இஸ்திரி போட்டுக் கொடுத்தாள். அவனது புத்தகங்களுக்கு நோட்டுகளுக்கு அவள்தான் அட்டை போடுவாள். மார்க்கெட் வரை போய் தேவையான காய்கறிகளை வாங்கி வருவதும் அவள்தான்.

மகன் தன்னைச் சுற்றிச் சுற்றி வருவது சார்ந்து அவளுக்குப் பெருமை உண்டு. தினசரி படுக்கப் போகுமுன் அவனது உச்சியில் சின்னதாய் ஒரு முத்தம் கொடுப்பாள். மனோகர் சிரிக்கும்போது அவன் கண்ணும் கூடச் சிரிக்கும். பட்டவர்த்தனமான கண்கள். அவற்றால் எதையும் ஒளிக்க முடியாது. கண்ணின் இந்த வெள்ளந்தித்தனம் தான் அவனது அழகு என்று நினைத்திருந்தாள். அது தவிர அவனது உடையுடுத்தும் தரம். ட்ரௌசர் போட்டிருந்தாலும் மனோகர் சட்டையை ‘இன்’ பண்ணிக் கொண்டான். பள்ளிக் கூட யூனிஃபார்மிலேயே ‘டை’ சேர்த்தி. முழங்காலுக்கு சற்று கீழ்வரை தழுவிய வெள்ளை சாக்ஸ். ஷு. என் பையன் அழகுதான்… என நினைத்துக் கொண்டாள். பின்னே? அவன் என் பிள்ளை அல்லவா?... என்கிற கர்வம் வந்தது.

வீடு. அவளது வீடு. சர்வ சுதந்திரமாக அவள் புழங்கும் வீடு அது. ஒரு ஞாயிறு மதியம். கடும் வெயிலாக இருந்தது வெளியே. மனோகர் சிறு தூக்கம் போட்டான். காலையில் நண்பர்களுடன் போய் கிரிக்கெட் ஆடிவிட்டு வந்திருந்தான். கூடத்தில் அமர்ந்து இவர் டிவி பார்க்கிறார். எல்லாருமே வீட்டில் இருப்பதால் அன்றைக்கு மெதுவடை போடலாம். மாலை எல்லாருக்குமான சிறு ஸ்நாக், என நினைத்தாள். சூரியனின் இறங்கு வெயில் யானை தும்பிக்கை தூக்கினாற் போல ஆக்ரோஷம் கொண்டிருந்தது. மேற்கில் இருந்து ஜன்னலைத் தாண்டி உள்ளே சூடாய் விழுந்தது. ஜன்னல் உள்கம்பிகள் எல்லாம் கொதித்தது.

சூடு தாங்காமல் அவள் நைட்டி மட்டும் போட்டுக் கொண்டிருந்தாள். உள்ளாடை அணியவில்லை. அது சகஜம்தான். அன்றைக்கு வீட்டுக்கு விருந்தாளி என்று யாரும் வருவதாகவும் இல்லை. இருந்த வெயிலுக்கு படுக்கப் போகுமுன் ஒருதரம் குளித்துவிட்டால் கூட நல்லது, என்றிருந்தது.

மனோகர் எழுந்து கொண்டிருந்தான். சற்று தள்ளாடிய தூக்கக் கலக்க நடையுடன் போய் வாஷ்பேசினில் கண் கழுவியவன் திரும்பி அவளைப் பார்த்தான். சற்று ஆழமான பார்வைதான் அது. ஓர் ஊடுருவும் பார்வை. ஆ அந்தப் பார்வையின் வித்தியாசத்தை அவள் கண்டுகொண்டாள். தான் பிரா அணியாமல் நைட்டி மாத்திரம் அணிந்திருப்பதை அவன் உணர்ந்துகொண்டு விட்டான்… அத்தனை தூரத்தில் இருந்தே… எக்ஸ் ரே கண்கள். தானறியாமல் கைப் பகுதி இடுக்கு வழியே அக்குள் தெரிகிறதா எனத் தேடுவானோ? அதுநாள் வரை தன் மார்பகங்களையிட்டு அவளுக்கு ஒரு திகட்டலான பெருமை இருந்தது. லேஸ் வைத்த அலங்காரமான பிராவும், அதே வண்ணத்தில் மேட்சான ஜெட்டியும் அணிவாள் அவள். அவளது அந்த நேர்ததி பிரசாத்துக்கு விருப்பமானது.

திடுக்கென்றிருந்தது. மனோ இன்னும் சின்னப் பிள்ளை அல்ல, என உணர்ந்த கணம் அது. அவளுக்கு ஆகா, என்று திகைப்பு காட்டியது. நெஞ்சு படபடத்தது. அவனிடம் அவள் மாட்டிக் கொண்டாற் போன்ற திகைப்பு அது. கடகடவென்று ஓடிக் கொண்டிருந்தது கிரைண்டர், அவள் மனதைப் போல. விழுதாய் அரைபட்டுக் கொண்டிருந்தது உளுந்து.

மனோகர் பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டபோது விறுவிறுவென்று தன்னறைக்குப் போனாள். ஞாபகமாகக் கதவைச் சார்த்திக் கொண்டாள். உள் தாளிட்டாள். கறுப்பு கலர் பிரா எடுத்து அணிந்து கொண்டு திரும்ப வந்தாள். மனசுக்கு கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது. இப்போது மனோகர் சிறு பிள்ளை அல்ல. இனியும் சிறு பிள்ளை அல்ல. வளர்ந்த பிள்ளையின் பாவனைகள் அவனுக்கு வந்து விட்டன. இனி நாம்தான் அதிக கவனமாய் நடந்துகொள்ள வேண்டும், என நினைத்துக் கொண்டாள்.

அந்த பளீர் கண்கள்… அதன் சிரிப்பு, இனி மெல்ல ஒளிமங்கி விடலாம்… என நினைக்க கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. என்றாலும் கால மாற்றங்கள், வளர்ச்சியின் அடையாளங்களாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டும், என்று தோன்றியது.

வடைக்கு அரைத்து முடித்து பொன்முறுவலாய் சூடாய் அப்பாவுக்கும் அவனுக்கும் பரிமாறினாள். கைசூட்டுடன் வடையைப் பிய்த்து ஊதி ஊதித் தின்கிறார்கள். அப்படிப் பியித்தபோது வடைக் கதுப்பில் இருந்சத வெங்காயம் நகம் போல பளபளத்தது…

என்றாலும் அவனிடம், மனோகரிடம் புகுந்துவிட்ட அந்தக் கள்ளத்தனம் அவளுக்குத் தோன்றிக்கொண்டே யிருந்தது.

அப்பாவுக்கு அவனைப் பற்றி அதிகம் தெரியாது. அவர் அவனைப் பற்றிக் கவலை காட்டுவது இல்லை. எல்லாம் அவள் பொறுப்பாய் விட்டுவிட்டார். அதில் அவள் சோடைபோகும்வரை அவர் தலையிட மாட்டார்.

இதில் ஒரு முக்கிய அம்சம் இருந்தது. இந்த விவகாரம், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ரகசியம் போல பரிமாறப்படும் விஷயம். உணரக் கூடிய விஷயம். வெளிப்படையான விஷயம் அல்ல இது. வெளிப்படையாய் இதைப்பற்றி பிரஸ்தாபிக்க முடியாது. சம்பந்தப்பட்டவர்களோடு கூடவும் விவாதம் செய்ய இயலாது. காரணம் இந்தக் கற்பிதங்களை அவர்கள் சட்டென்று சமாளித்து “அப்டில்லாம் இல்ல..” என பொய் சொல்லி முடித்து விடலாம். குறிப்பாக கணவனிடம் இதை எப்படிப் பேச... அவனும் ஓர் ஆண். அவளுக்கு மாத்திரமேயான, அவளே சமாளிக்க வேண்டிய விஷயம் இது. இதற்கு யார் உதவிக்கு வர முடியும்?

மனோகரைப் பற்றி இனி அதிக ஜாக்கிரதை காட்ட வேண்டும். அவனது மனம் எப்படியெல்லாம் கொந்தளித்துப் பரிணமிக்கும் என்பதைக் கண்காணிக்க வேண்டும். அது அவளது பொறுப்பு. ஆனால் அவள் பின்னாலேயே அவள் முதுகுக்குப் பின் அவனது கண்கள் இனி நடமாடும்… அது அவளுக்குத் தெரியும். அவன் பார்க்கிறான். அவள் கண்காணிக்கிறாள். வார்த்தைதான் வித்தியாசம். செயல் ஒன்றுதான்.

அடுக்ககத்தில் முதல் மாடியில் அவர்கள் குடி யிருந்தார்கள். இரண்டு படுக்கையறைகள். சமையல் அறை. பிரதான கூடத்தில் டிவி. ஒரு பக்கமாக உணவு மேசை. குளியல் அறை கழிவறை ஒரே அறையாக இருக்கிறது. அதே அறைக்குள்ளேயே ஒரு ஓரமாக வாஷிங் மிஷின். குடுகுடுப்பைக் காரனாட்டம் அது ஓடி யடங்கியது. குளியல் அறையின் ஜலதாரை வழியே துணி துவைத்த சோப்புத் தண்ணீரும் வெளியேறியது. கவனமாகக் கால் வைக்கா விட்டால் வழுக்கி விடக் கூடும்.

மனோகருக்குள் மாத்திரமல்ல. எனக்குள்ளும் மாற்றங்கள். இது எதுவும் பிரசாத் அறியமாட்டான். ஒரு குடும்பத்தில் பெண் என்பவளுக்கு சர்வ சகஜமாக அஜென்டாவில் இல்லாத புது பொறுப்புகள் அமைந்து விடுகின்றன. மாமியாருடன் அவளுக்கு இருந்த உறவைப் பற்றியும், நாத்தனார் மச்சினர்களிடம் அவளுக்கான புரிதல் பற்றியும் அவள் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும். யாரையும் யாரிடமும் விட்டுக் கொடுத்துவிட முடியாது. காட்டிக் கொடுத்துவிட முடியாது. தற்காத்து தற்கொண்டாற் பேணி… வள்ளுவர் அசத்துகிறார்.

மனோகரின் பேச்சிலேயே நிதானம் வந்திருந்தது. சிறு எச்சரிக்கை என அதைச் சொல்லலாமா தெரியவில்லை. அதை நான் புரிந்து கொண்டேன் அப்பனே... என நினைத்துக் கொண்டாள் அம்மா. நான் உனக்கு முன்னே பிறந்தவள்.தவிரவும் இதுசார்ந்து அவனுக்குக் குற்ற உணர்வு தேவையில்லை. உணர்வு எழுச்சி என்பது மனதின் இயல்புதான். அதிலும் பாலுணர்வு, அதன் தூண்டுதல்கள்… காதல் என அது கொண்டாடப் படுவதும், காமம் என்று சற்று குறைப்பட்டாற் போலச் சொல்லப்படுவதும் நிகழ்கிறது இங்கே. இதுகுறித்து நான் அவனைக் குழப்பவோ கலவரப் படுத்தவோ கூடாது, என நினைத்துக் கொண்டாள்.

பாலின உணர்வுகள் அழகான விஷயம் தான்.

என்னை ஒரு பெண்ணாகப் பார்க்கும் அவனது அலையெடுப்புகள் அடங்க வேண்டும். அம்மா நான் அவனுக்கு. தான் பெண் என்று அவன் உணர்கிற அளவிலான கிளர்ச்சிகளை அவள் அலையடக்க வேண்டும். தான் சார்ந்த எந்த கவன ஈர்ப்புகளையும் அவனில் அவள் நிகழ்த்தக் கூடாது, என தானாகத் தவிர்த்தாள். என்றாலும் அது, அவனது அலை தானாக அடங்குமா? அதுபற்றித் தெரியவில்லை. ஆனால் தன் சார்ந்த வியூகங்களை அவனிடம் தவிர்க்க வேண்டும். அது முக்கியம் என்று தோன்றியது. கொலுசு போட்டுக்கொண்டு அதுவரை சிலுங் சிலுங் என்று வளைய வந்து கொண்டிருந்தவள், கழற்றி விட்டாள். சிறிய வீடு, அதிலும் வீட்டுக்குள்ளேயே குளியல் அறை என்ற நிலை. அவள் உள்ளறையில் குளிக்கும் சத்தத்துக்கு அவன் செவிகள் கூர்மையடையலாம்.

அதை அவள் கட்டாயம் தவிர்க்க வேண்டும், என்று சொல்லிக் கொண்டாள். அவன் செவியெல்லாம் கண்ணாக உச்சபட்ச கவனத்தில் இருக்கிறான். இப்போதெல்லாம் அவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் அவள் குளிக்கப் போவது இல்லை. தினசரி அவன் பள்ளிக்குக் கிளம்பிப் போனபின் கதவை அடைத்துக் கொண்டு வந்து குளித்தாள். அந்த அறைக்குள் நுழைந்தாலே சத்தமாய் ‘எக்ஸாஸ்ட் ஃபேன்’ போட்டுக் கொண்டாள்.

சில நாட்களில் அவள் தலையில் ஈரத் துண்டு சுற்றிக்கொண்டு அப்படியே வெறும் பாவாடையை நெஞ்சுக்கு மேல் கட்டிக்கொண்டு குளியல் அறையில் இருந்து வெளியே வருவாள். உள்ளறைக்குப் போய் மாற்றுடை எடுத்துக் கொள்வாள். இப்போது குளித்து முடித்து குளியல் அறைக்குள் வைத்தே மாற்றுடைகளை அணிந்துகொண்டு வெளியே வந்தாள்.

இடுப்பு வலி என்றோ, உடலில்  எண்ணெயோ தைலமோ தேய்த்துக்கொள்ள நேர்ந்தால் கதவை கவனமாய்ச் சார்த்திக் கொண்டாள். வீட்டில் மனோகர் இருப்பதை ஒவ்வொரு கணமும் அவள் யோசித்தபடியே நடமாடினாற் போல இருந்தது.

மனோகரிடம் என்ன விதமான மாற்றங்கள் தென்படுகின்றன எனவும் அவள் தேடிப் பார்க்க வேண்டி யிருந்தது. வளர்ந்த பையனாக அவனது பாவனை சில சமயம் கூடப் படிக்கிற பையன்களுடன் பேசும்போது, அரட்டை அடிக்கும்போது வந்திருக்கவும் வாய்ப்பு உண்டு. அவனது நண்பர்கள் பற்றியும் தெரிந்துகொள்ள முடிந்தால் நல்லது.

மலிவு விலை செக்ஸ் புத்தகங்கள் எதுவும் வாசிக்கிறானா? அவன் புத்தகப் பையில் அப்படி யெதுவும் கிடைக்கவில்லை. ஒரு நோட்டுப் புத்தகத்துக்குள் நடிகன் அஜித் படம் இருந்தது. அது பரவாயில்லை. செக்ஸ் புத்தகம் எதுவும் கிடைக்கவில்லை… என்றாலும் வெளியே நண்பர்களுடன் வாசித்தால் அவளால் கண்டுபிடிக்க முடியாது. அவரவர் பையன்களை, பெண்களை ஓரளவுதான் நாம் கண்காணிக்க முடியும். ரொம்ப பின்தொடரவும் அவளுக்குப் பிடிக்கவில்லை. ச்சீ, நம்ம பிள்ளைகளை நாமே சந்தேகப் படுவதா… என்றும் இருந்தது.

அப்பாவாவது பேசலாம். அம்மாவாக அவனுடன் இதையெல்லாம் அவள் பேசவும் முடியவில்லை. பிரசாத் அவளை நெருங்கி வரும் சந்தர்ப்பங்களிலும், பையன் வீட்டில் இருந்தால் நோ… என அவன் கையை விலக்கி விட்டாள். அவளது அதித எச்சரிக்கை அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

மொட்டைமாடியில் கொண்டுபோய் துணிகளை உலர்த்தி விட்டு வந்தாள். உள்ளாடைளை மனோகர் கண்ணில் படும்படி காயப் போடுவதை அவள் தவிர்த்தாள். ஐயோ என் பையனை நானே இப்படி நடத்த வேண்டுமா… என அவ்வப்போது யோசனை வரும். சிறிது காலம் இந்த கண்டிப்பான நியதிகளைப் பின்பற்றியே ஆக வேண்டும்… என தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

அதற்குப் பலன் இருந்தாற் போலத்தான் இருந்தது. பள்ளியில் இருந்து மனோகர் வாசல் கதவை மோதுகிற மாதிரி தள்ளிக்கொண்டு கலகலப்பாய் வீட்டுக்குள் நுழைந்தான். இத்தனை வேகமும் பரபரப்பும் அவனிடம் பார்த்து வெகு நாட்கள் ஆகியிருந்தது. “என்னடா?” என்றாள் சிரிப்புடன். “பிராக்ரஸ் ரிப்போர்ட், டட்ட டட்ட டாய்ங்…” என நீட்டினான். “மேத்ஸ்ல சென்டம் அம்மா…” என்றான் முகம் கொள்ளாத சிரிப்புடன்.   

அவளிடம் உச்சியில் முத்தம் பெற்றுக்கொள்ளத் தயாராய் அவன் இருந்தற் போல இருந்தது. கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டாள். அவனது அந்தக் கண்கள் அதில் குழந்தைமையான ஒளி மீண்டிருந்தது. இந்த ஐந்தாறு நாட்களில் அவன் தன்னிலை மீண்டிருக்கக் கூடும். அம்மாவை இப்படிப் பார்ப்பது தவறு என தனக்கே உறைத்திருக்கலாம்.

தவிரவும்…

ஆமாம். தன் வயதொத்த வேறு பெண்ணிடம் அவன் கவனம், கிளர்ச்சி மாறிவிட்டிருக்கவும் கூடும். என நினைக்கச் சிரிப்பு வந்தது. பொறுமையே உள் கவனமே பெண்ணின் ஆயுதம். கால காலமாக அவர்கள் அப்படித்தான ஜெயித்துக் காட்டுகிறார்கள், என நினைத்துக் கொண்டாள் வித்யாவதி.

“கை கால் கழுவிட்டு வா. தோசை வார்க்கறேன்…” என்றபடியே வித்யாவதி எழுந்து கொண்டாள். 

 • • •

S. Sankaranarayanan storysankar@gmail.com

91 97899 87842 / whatsApp 91 94450 16842

Comments

  1. பாலியல் குறித்த ஒரு தாய் மற்றும் வயதுக்கு வந்துள்ள எதிர் பாலின மகன் இடையே ஒரு தாயின் மனவோட்டம் அருமையாக சொல்லி உள்ளார்.மீண்டும் ஒரு தடவை படிக்கவேண்டும்.பொறுமையுடன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog