art kamal koria
கிணறு
எஸ். சங்கரநாராயணன்
ஊர் எல்லை சிவன் கோவில். வெளி வளாகத்தில் அணிவகுத்த மரங்கள்.
ஊர்ப் பொதுக் கிணறு. ஒரு சுமைதாங்கிக் கல். சரளை பாவிய செம்மண் ரஸ்தாவில் புராதன ஜனங்கள்
தலைச்சுமையுடன் வருகையில் சுமையிறக்கி வைத்துவிட்டு ஆசுவாசப்பட கோவில் வெளி முற்றமும்,
தாக சாந்திக்குக் கிணறுமாக இருந்திருக்கலாம். அறுவடைக்குப் பின் போர் அடிக்கும் களமாக
இப்பவும் அது பயன்படத்தான் செய்கிறது. தேவாரம் பாடப்பட்ட திருத்தலம். இன்னொரு சிறப்பு
அந்தக் கோவில் உள் பிராகாரத்தில் மன்மதன் சிற்பம். முடுக்கிய அம்பும் விரைத்த வில்லுமான
கோலம். எதிர்வாடையில் நாணி நிற்கும் ஸ்திரீ ஒருத்தி. பெண்கள் பிராகாரத்தில் அங்கே அந்தச்
சிற்பத்தைத் தாண்டிப் போகையில் கால் தடுமாற தலை குனிந்து சிறு குறுகுறுப்புடன் விரைந்து
கடப்பார்கள்.
வயல்களுக்கு நடுவே ஒரு சதுரத் துண்டாய்க் கிடந்தது ஊர். இப்போது
வயலும் அத்தனைக்கு இல்லை. நீர் வற்றி விட்டது. விளைச்சலே குறைந்து விட்டது. கோவிலுக்கும்
பழைய எடுப்பு இல்லை. நிற்க வைத்த சிவப்பு வெள்ளைப் பட்டைகளாக மதில்சுவரில் சுண்ணம்
பொலிவிழந்து விட்டது. சனங்கள் நடமாட்டமும் அத்தனைக்கு இல்லை. கிணற்று நீர் நல்ல சுவை,
என்று ஊர் மக்கள் அங்கே வந்து தண்ணீர் சேந்திச் செல்வார்கள். குடிக்க, சமையலுக்கு மொத்த
ஊருக்கும் அதுதான்... சாமந்தி அதில் குதித்து தற்கொலை செய்துகொள்ளும் வரை.
மன்மதனுக்கு சிற்பம் எடுத்த ஊர். என்றாலும் சனங்கள் அத்தனைக்கு
மாறிவிடவில்லை என்றுதான் தோன்றுகிறது. அவள் கிணற்றில் குதித்த அன்றைக்கு மன்மதனின்
முகம் சற்று வாட்டமாய் இருந்ததாக இளைஞர்கள் சொன்னார்கள். ஊரில் அத்தனை இளசுகளுக்கும்
அது தங்கள் சாவாகவே உள்ளே எதிரொலி தந்திருக்கலாம். சாமந்தி உரில் நிறையப் பேருக்கு,
இளைஞர்களுக்கு ‘கனவுக் கன்னி’யாக இருந்திருக்கலாம். வாலிபம்... அது கனவுகளோடு சிறிது
பயத்துடன் நடமாடவேண்டியதாய் இருந்தது. ஊர் அப்படி. காதலுக்கு இடம் இல்லை அங்கே. அந்தப்
பெரியவர்களும் ஒரு காலத்தில், அவர்களது வாலிபத்தில் காதல் கீதல் என்று மனசில் கிளர்ச்சி
அடையாமலா இருந்திருப்பார்கள். அதுவும் மன்மதனின் ஊரில்?
ஒரு துக்கத்தின் மௌன சாட்சியாகக் கிடந்தது அந்த வளாகம்.
போதாக்குறைக்கு அந்த வளாகத்துக்கு அவன் ஒரு அடையாளமாக வந்து
சேர்ந்திருந்தான். அந்த ஊர்க்காரப் பையன் தான். என்றாலும் அவளது மரணம் மற்ற யாரையும்
விட அவனை அதிகம் பாதித்ததாக இருந்தது, என்று தெரிகிறது. சாதி அறியாத இளசுகள், சாதி
சார்ந்த பெருசுகளால் வேட்டையாடப் படுகிறார்கள். எல்லாமே சரியாக நன்றாக அழகாகப் போய்க்
கொண்டிருக்கிறது அவர்களுக்கு. இளைஞர்களுக்கு.
ஒரு பருவகாலம், ஈசல்களுக்கு முளைக்கின்றன சிறகுகள்.
காதல் அவர்களுக்குள், இளவயசுக் காரர்களுக்குள் வானவில் பூத்த
தருணங்களைத் தருகிறது. கண்ணை மூடினாலும், திறந்திருந்தாலும் கூட ஒரு மகாராணியின் மகாராஜாவின்
முதுகுப் படுதா போல அவர்களுக்குக் கூடவே வானவில் வருகிறது. ஆனால் காலம் அவர்களுக்கு
வேட்டைக் குழி வைத்திருப்பது அவர்களுக்குத் தெரியாது. அது ஒரு கிணற்றின் வடிவமாக இருந்தது
அவளுக்கு, சாமந்திக்கு பாவம்.
ராசையா உற்சாகமான பையன் தான். நடையில் ஒரு துள்ளலும் துறுதுறுப்புமானவன்.
ஊரில் அவனைப் பிடிக்காதவர் உண்டா. கோவிலுக்குள் சிற்பம், மன்மதன். ஊரில் அவன். அவனைப்
போல விசில் அடிக்கத் தெரிந்தவர் ஊரில் இல்லை. உல்லாச விசிலில் முழுப் பாட்டுமே அவனால்
பாட முடியும். இரவில் தனிமையில் ஊரே அடங்கி ஒடுங்கிக் கிடக்கையில் அந்த இருளில் தனியே
உட் கலந்து பரவும் ஊதுபத்திப் புகை போல அவனது விசில் கேட்கும். தனிமையும் இருளும் ஒரு
மாதிரியான போதையாய் இருந்தது அவனுக்கு. சிறிது நிலா வெளிச்சமும் இருந்து விட்டால்,
ஹையோ, இயற்கையை விட பெரிய போதை உண்டா?
ஏழை சம்சாரிக் குடும்பம். கல்லூரி வரை படித்துவிடடு இங்கேயே
விவசாயம் பார்க்க என்று தன்னை நிறுத்திக் கொண்டவன். வாழ்க்கையை எத்தனை எளிமையாக அணுகுகிறோமோ
அத்தனைக்கு அது அழகாக, மகா அழகாக அல்லவா ஆகி விடுகிறது. தேன் ஊறும் பூ போன்றது வாழ்க்கை.
நடு விகிடெடுத்து வாரிக் கொள்வான். பென்சில் கோடு போன்ற நாகேஸ்வர ராவ் மீசை. வயலில்
வேலை எதுவும் இருந்தால் செய்வான். சாரைப்பாம்புகள் தட்டுப்பட்டால் சட்டென்று பிடித்து
வீசுவான். கீச் என அவை தள்ளிப்போய் விழுந்து ஓட்டம் எடுக்கும்.
ஓய்வு நேரங்கள் பிடிக்கும். வாழ்க்கை சரி பாதி உழைக்கவும்,
சரி பாதி அனுபவிக்கவும் என அவன் நினைத்தான். சைக்கிளில் அவன் போகையில், வந்த நாள் முதல்
இந்த நாள் வரை... என தன்னைப் போல பாட்டு கிளம்பும் அவனுக்கு. விசில்ப் பாட்டு. உற்சாகத்துக்குப்
பாடுவான். சோகத்துக்குப் பாடுவான். உற்சாகப் படுத்திக் கொள்ளப் பாடுவான். உணர்ச்சிகளுக்கு
சிலர் ஓவிய உரு கொடுக்கிறார்கள். சிலர் எழுதிக் காட்டுகிறார்கள். அவன் குரலில் பீறிட்டு
குபீரிட்டுப் புறப்பட்டது அவனது உணர்ச்சிகள். சந்தோஷ ரயில்.
சற்று பணக்கார வீட்டுப் பெண் தான் அவள். சாமந்தி. என்ன அழகான
பெயர். பெண்களுக்கு பூக்களின் பெயர் தான் எத்தனை பொருத்தமாக இருக்கிறது. அவள் பெயரை
அறிந்து கொண்டதுமே அவனில் ஒரு பரவசம் வந்தது. பள்ளியில் அவனுக்கு இளையவளாக சிறு வகுப்பில்
அவள் இருந்திருக்கலாம். அவன் கவனித்திருக்க வாய்ப்பு இல்லாமல் போயிருக்கலாம். அப்பவே,
ஒன்பது பத்து வகுப்புகளிலேயே குறுங் கவிதைகள், குறும்புக் கவிதைகள் புனைவான் அவன்.
ராசையா.
எட்டிப் பார்த்தாள் கிணற்றுக்குள்
அட கிணற்றில்
இரு நிலவுகள்!
சாமமும் அந்தியும் சந்திக்கும் அந்த முன்னிரவுப் பொழுதில்
அவள் வந்தாள் ஒருநாள். வீட்டில் குடிநீர் தீர்ந்திருக்கலாம். பொதுக் கிணறு வரை அந்த
மெல்லிருளில் அவள் வந்த தைரியத்தைப் பாராட்ட வேண்டும். துணை என யாரும் இல்லாமல் தனியே
வந்தாள் பணக்கார வீட்டுப் பெண். என்ன ஆகிவிடும், என அவளுக்கே தெம்பு இருக்கலாம். தலையில்
பூ சூடியிருந்தாள். என்ன வாசனை. இரவு விழித்துக் கொண்டாற் போலிருந்தது- உறங்கும் இரவை
மலர்கள் தட்டி யெழுப்பிவிட்டு விடுகின்றன.
அவனது விசில் சத்தம். கூடவே வந்தது விசில் சத்தம். நீர் கோரினாள்
அவள். ஜகடையின் உருளல் அந்த இரவில் தெளிவாகக் கேட்டது. அந்த விசிலுக்குச் சம்பந்தம்
இல்லாத ஜகடைச் சத்தம். அவளுக்கே அது சகிக்கவில்லை. குடத்தில் நீரை ஊற்றிக் கொண்டு திரும்பினாள்
அவள். திரும்பு முன்பே சூட்சுமம் சொல்லியது. ஆமாம், வழியில் அவன் நின்றிருந்தான். புன்னகை
வள்ளல். எப்பவும் சிரித்த முகம் அது, என்பது முதல் பார்வையிலேயே அவளுக்குத் தெரிந்தது.
எப்படி அவளுக்கு அதுவும் அந்த இருளில் தெரிந்துகொள்ள முடிந்தது, என அவளுக்கே ஆச்சர்யம்.
ஆகவே, அது மன்மதன் அம்பு பூட்டிய வேளை என்று அவளுக்குத் திடீரென்று தோன்றியது. கோவில்
பிராகாரத்து அந்த மன்மதன் சிலை அப்போது ஏன் அவளுக்கு ஞாபகம் வர வேண்டும்.
அடுத்த முறை போகும் போது அந்த மன்மதன் சிலையை இன்னும் நன்றாகப்
பார்க்க வேண்டும் என்று தோன்றிய கணம்!
சீச்சி இது தவறு. என தலையை உதறிக் கொண்டு இடுப்பில் குடத்தை
ஏற்றிக் கொண்டாள். குனிந்த தலை நிமிராமல் அவனைத் தாண்டிப் போகுமுன் இதயம் துள்ளி மேல்
விலாவில் முட்டியது போலிருந்தது. அவள் மனம் போலவே சளப் சளப் என தளும்பியது குடம்.
“பேசாமல் போகிறாள் - பேசுகிறது கொலுசு...”
என்றான் அவன். துடுக்குக்காரப் பையன். என்ன சொன்னான்? என்ன சொன்னான்?... என்று
படபடத்தது அவளுக்கு. உண்மையில் அவன் ஏதோ சொல்வான், சொல்ல வேண்டும் என அவள் எதிர்பார்த்திருந்தாளோ
என்னமோ.
படித்தவள் அவள். பள்ளி இறுதி வகுப்போடு, ஊரில் உள்ள அளவு
வாசித்திருக்கிறாள். பத்திரிகைகள் அவளது தனிமையைப் போக்க வல்லதாய் இருந்தன. என்ன சொன்னான்
அவன்? குறுங்கவிதைகள் வாசித்த பழக்கம் உண்டு. இந்த தபூ சங்கர், என்னவெல்லாம் எழுதுகிறான்.
பேசாமல் போகிறாள்
பேசியது கொலுசு. **
ஆகா, என்றிருந்தது அவளுக்கு. என்ன தைரியம் இவனுக்கு, என்று
கோபம் இல்லாமல் நினைத்துக் கொண்டாள். ஏன் கோபமே வரவில்லை எனக்கு? அவளுக்கு ஆச்சர்யமாய்
இருந்தது.
இந்தக் காதல் என்பதே, சிரிப்புகளும் ஆச்சர்யங்களும் நிறைந்ததாக
அல்லவா இருக்கிறது. ஆ அப்படியா காதலா இதுவா... இதுதானா? எனக்கா? காதலா? இவன்... இவர்
மேலா!
எந்நேரமும் அவனை அந்த சுமைதாங்கிக் கல்லுடன் பார்த்தார்கள்
ஊர்க்காரர்கள். குளிக்காத உடல். மழிக்காத மீசை தாடி. ஒரு காலத்தில் உற்சாக வெள்ளமாய்
ஊருக்குள் திரிந்தவனா அவன். சிரிப்பையே பேச்சையே நிறுத்தி விட்டிருந்தான் அவன். எத்தனை
முறை வீட்டுக்குள் வைத்து அடைத்துப் போட்டாலும் அசந்த சந்தர்ப்பத்தில் வெளியே ஓடி விட்டான்.
பிறகு அப்பா அம்மா அவனை வெளியே விட்டு விட்டார்கள். இந்த சுதந்திரம் அவனுக்கு ஏதோ ஓரளவில்
ஆறுதல் அளிப்பதாய் இருந்தது போலும்.
யாருடனும் எதைப் பற்றியும் அவன் பேசுவதே இல்லை. அவன் பேச்சு
நின்று போயிருந்தது. உண்மையில் சாமந்தி கிணற்றில் குதித்த அந்த சம்பவத்திற்குப் பிறகு
அவனை ஊரில் எங்குமே பார்க்க முடியவில்லை. எங்கே போனான் அவன், யாருக்குமே தெரியாது.
பிள்ளை இப்படிக் கலவரப்பட்டு விக்கித்துப் போன துக்கம் ஒரு புறம், என்றால் அவனை ஆளையே
காணவில்லை என்கிற சோகம் இன்னும் அதிகமாய் இருந்தது. அழவெல்லாம் இல்லை அவன். உண்மையில்
அவனுக்கு அழுகை வரத்தான் இல்லை. உள்ளே வீட்டில் அப்படியே படுத்துக் கிடந்தான். யாரோடும்
பேசவே இல்லை அவன். பேசத்தான் என்ன இருக்கிறது? அந்த இரவு அவனைக் காணவில்லை.
பிறகு தன்னைப் போல ஓரிரு மாதத்தில் திரும்பியும் வந்திருந்தான்.
ஏன் போனான், இப்போது என் திரும்பி வந்தான்? அவனைப் பற்றிய எந்த விவரமும் யாருக்கும்
தெரியாது. அவனுக்கே அதெல்லாம் சொல்லத் தெரியாது. ஒருநாள் வயல் வேலை முடித்து அவன்அப்பா
கோவில் வழியாக வரும்போது அவனைக் கவனித்தார். சுமைதாங்கிக் கல் மேல படுத்திருப்பது,
யாரது, நம்ம ராசையாவா? “ராசா?” என அவனை நோக்கி ஓடினார். அவன் அவரைப் பார்த்த பார்வை...
அவரை அவன் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. வலுக் கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து வந்தார்.
நல்ல உடை மாற்றி விட்டார். குளிப்பாட்டி விட்டார். அன்றைய இரவு, அவன் அறுத்துக் கொண்டு
ஓடும் மாடுபோல வெளியேறி விட்டான். அவனை வீட்டில் அடைத்துவைக்க முடியவில்லை. பெத்தவள்
கண்ணீர் விட்டழுகிறாள். நான் அவளைப் பார்க்கிறதா, இவனைப் பார்க்கிறதா, என அப்பாவுக்குத்
திகைப்பானது.
என்னவோ சொல்லி யாரோ அவனை மிரட்டி யிருக்கலாம். கொஞ்ச நாளாகவே
அவன் சுரத்தாக இல்லை. மோட்டு வளையைப் பார்த்தபடி இருந்தான். அவருக்கு ஓரளவு விஷயம்
தெரிந்திருந்தது. “நமக்கு அதெல்லா வேணாம்டா” என்று இதமாய் அவன் கையைப் பிடித்தபடி சொல்லித்தான்
பார்த்தார் அவர். “அது பொண்ணு இல்லடா. அந்த வயசுல ஆம்பி9ளங்களைப் பிடிக்கிற மோகினிப்
பிசாசு..” அவர் கையை விலக்கி விட்டான். இரவுகளில் வெளியே போவதே இல்லை அவன். விசில்
அடிப்பதே இல்லை. தனக்குள் முடங்கிக் கொண்டிருந்தான்.
அவள்? என்ன ஆயிற்று அவளுக்கு? அவனிடம் அவள் சொல்லி யிருக்கலாம்.
அவனே அவள் வராமல் புரிந்து கொண்டும் இருக்கலாம். அவளுக்குக் காவல் அதிகரித்திருக்கலாம்.
அவள் இருந்த இடத்தில் ஒரு வாசனை இருக்கும். சாமந்தி என்றால் வாசனை இல்லாமல் எப்படி?
சிறு சப்தக் கொஞ்சல் இருக்கும். கொலுசின் ணிக் ணிக். அவள் நிற்பதும் நடப்பதும் கொண்டாடப்
பட்ட வீடு அது. அத்தனை பிரியமான பெண்ணிடம் தான், பெற்றோர்கள் சாதி என்று வருகையில்
எப்படி வேற்று முகம் காட்டும் அளவு வெறியேறிப் போகிறார்கள். அவர்களைப் பார்க்கவே, அந்தக்
கண்களின் ஆவேசம், பல் கடிப்பு, முகத்தின் கடூரம்! ஆனால்... மென்மையான அவளை அது மேலும்
பிடிவாதமாய், மூர்க்கமாய் ஆக்கி யிருந்தது. நான் இந்த வீட்டுப் பெண். உங்களுக்கு இருக்கிற
பிடிவாதம் எனக்கும் இல்லாமல் போகுமா? யாரோடும் பேசுவதே இல்லை அவள். அழுகை அல்ல. மௌனம்
கெட்டிப்பட்ட உறைவு, கோபாவேசம் அது. தன்னில் உக்கிரமேறி யிருந்தாள். வஜ்ரப் பட்டிருந்தாள்.
நிமிர்வு கண்டிருந்தாள். அவளை வளைக்க முடியாமல், என் பெண்ணா இது, என திகைத்தார்கள்
வீட்டில்.
அவளை அடக்குவதை விட, அவனை, ராசையாவை அமர்த்துவது எளிது போல
இருந்தது. எரியறதைப் பிடுங்கினா கொதிக்கறது அடங்கிரும். நேரடியான மீசை முறுக்கல் தான்.
அவன் வயலில் வேலை செய்து கொண்டிருந்தான். திடுமென்று ஆட்கள் மழைமேகம் பொலத் திரண்டார்கள்.
“அடி வாங்கற உடம்பு இல்லடா உன்னது. கோளாறா நடந்துக்க.” “இனிமே உன்னை சாமந்தியோட பேச்சு
சிரிப்புன்னு பாத்தம்னா...” என்று கை துருத்தியபடி, “பேச மாட்டோம். செஞ்சிருவோம்.”
அவன் அப்பா ஓடி வந்தார். “விடுங்க மவராசங்களா. சின்னப் புள்ளை அவன். நான் சொல்லி வைக்கிறேன்”
என்றார் அவர்.
“காதலிக்கறது தப்பா ஐயா?”
“சாதி விட்டு சாதி காதலிக்கறது, அதும் ஏழை பாழை காதலிக்கறது
சரி இல்லை ராசா.”
ஊரில் எல்லாருக்குமே கொஞ்சம் கொஞ்சம் தெரியும். முழுமையாக
அறிந்தவர் யாரும் இல்லை. அவனுக்கு என்ன என அவளும், அவள் நிலை என்ன என அவனுமோ அறிய வாய்ப்பே
இல்லை. எய்த அம்பு தன் மேலேயே பாய்ந்தாப் போல சுருண்டு விழுந்தான் அவன். ராசையா. மரவட்டையாய்
தனக்குள் சுருண்டு கொண்டான்... என் காதல், ஓர் ஈசலின் கற்பனை. அவ்வளவே. ஆனால் காதல்...
எப்பேர்ப்பட்ட வாழ்க்கை அனுபவம் அது. கனவும் நனவும் சந்திக்கும் தொடுவானம் அல்லவா அது.
வாழ்க்கை என் அமைந்தவன், காதலிக்காமல், வாழ்க்கை வாழ்ந்து தான் என்ன பயன்?... என்று
திகைப்பாய் இருந்தது அவனுக்கு. இந்தக் கிடுக்கிக்குள் மாட்டிக் கொண்டபின் விடுவித்துக்
கொள்ளுதல், மீட்சி சாத்தியமா என்ன? நான் தனியன். எனக்கு யாருமே இல்லை. என் குடும்பம்
உட்பட... கண்கள் வெறித்துப் பார்த்தன எங்கோ. தனக்குள் யோசிக்கிறான். தனி மனிதனாய்ச்
சுத்தமான ஊர். சாதி ஊர் நடுவே ஓடு சாக்கடை.
அவள் மனதின் எண்ணங்கள் யாரும் அறியவே இல்லை. தனது துக்கங்களைச்
சுமையிறக்க அவளுக்கு வாய்ப்பு தரப்படவே இல்லை. ஓரிரவில் தண்ணீர் எடுக்கப் போனாப் போல
அவள், என்ன தோணியதோ, அந்தக் கிணற்றில் குதித்திருந்தாள். யாருக்குமே தெரியாது என்ன
நடந்தது என்று. அவள் வீடு திரும்பவில்லை. நேரம் ஆக ஆக அவளது வீட்டில் களேபரம் ஆகிப்
போனது. ஆகா, என்னவோ விபரீதம், என அவர்கள் வாரிச் சுருட்டி எழுந்து கொண்டார்கள். உயர்ந்தெழுந்த
அரிவாள்கள். பெரும் பரிவாரமே அவளைத் தேடிக் கிளம்பியது. ராசையா வீட்டு வாசலில் நின்று
கூச்சல் போட்டார்கள். ராசையா, அவன் வீட்டில் இருக்க மாட்டான், என நினைத்து ஆவேசமாய்
வந்திருக்கலாம் அவர்கள். வெளியே வந்தது ராசையா தான். “என்னாச்சி?” என்று வந்து நின்றவன்
அவன்தான்.
“என் பிள்ளைக்கு என்னமும் ஆச்சி, மவனே நான் சும்மா இருக்க
மாட்டேன்” என்று கத்தும் அவளது தந்தையிடம் அவன் கேட்டான். “சாமந்தியைக் காணமா?” அவனை
அப்படியே விட்டுவிட்டு எல்லாரும் சாமந்தியைத் தேடிக் கலைந்தார்கள். நாலு திசைக்கும்
ஆள் பிரிந்தார்கள். பெத்தவள் மயங்கி விழுந்தாள். அவளைப் பாடு பார்க்க வேண்டி யிருந்தது.
அவள் அப்பாவுக்கு நெஞ்சு வலிக்கிறாப் போல அப்படியொரு மூச்சிறைப்பு. வெளியே ஓடப் போனவனை,
ராசையாவை, அவன் அப்பாவும் அம்மாவும் அமுக்கி வீட்டுக்குள் வைத்துக் கொண்டார்கள். “எலேய்
இப்படி யெல்லாம் ஆவும்னு தானடா நான் உனக்குப் படிச்சிப் படிச்சிச் சொன்னே...” என்றார்
அப்பா. அப்பா அழுது அவன் பார்த்தது அன்றைக்குத் தான். அதை கவனிக்க நேரமில்லை. “சாமந்திக்கு
என்னவோ ஆயிட்டதுப்பா...” என்று கத்தினான் அவன். அவனை உள்ளறையில் அடைத்து தாள் போட்டிருந்தார்கள்.
தட் தட்டென்று கதவை உடைக்கிறாப் போல தட்டிக் குமுறினான் அவன்.
சாமந்தி கிணற்றில் மிதந்து கொண்டிருந்தாள். கிணற்றில் இரு
நிலவுகள். குதித்ததில் தலை உள் உறையில் முட்டி யிருக்கலாம். அவள் கிடந்த அலங்கோலம்.
பார்த்த கணத்திலேயே அவளுக்கு உயிர் இல்லை என்று தோன்றிவிட்டது. ஓவென்று தலையில் அடித்துக்கொண்டு
அலறினார் சாமந்தியின் அப்பா. அவரை அழுத்திப் பிடித்து தூர நகர்த்திக் கொண்டு போனார்கள்.
“அவளுக்கு என் மகன் எதோ பண்ணிட்டான்னு ஓடி வந்தானுங்க. படுபாவிங்க..
அவங்கதான் அவளைக் கொன்னுட்டாங்க” என்றார் ராசையாவின் அப்பா. இப்ப இவனை பத்திரமாய்ப்
பாத்துக்கணுமே என்பது அவரது கவலை. அந்த இரவு அவன் வெளியேறி யிருந்தான். ராசையா. கதவைத்
திறந்து சாப்பாடு போட வந்த அம்மாவை ஒரு தள்ளு தள்ளிவிட்டு வெளியே ஓடினான். “பிடிங்க,
பிடிங்க அவனை...” என அம்மா கத்தினாள். அப்பா சுதாரித்து எழுந்து வருமுன் ராசையா வெளியேறி
யிருந்தான்.
வெயில் வரும்வரை ராசையா அந்த சுமைதாங்கிக் கல்லில் படுத்துக்
கிடப்பான். அருகில் இருபதடி தூரத்தில் கிணறு. சாமந்தி குதித்துத் தற்கொலை செய்துகொண்ட
கிணறு. அதன் அருகில் இருக்க விரும்பினானா தெரியாது. வெயில் வந்துவிட்டால், சூடு பொறுக்க
முடியாத அளவு உக்கிரமாகி விட்டால் எழுந்து கோவில் மதில்ச்சுவர்ப் பக்கமாக நிழலுக்கு
ஒதுங்கிக் கொண்டான். என்ன செய்கிறான். பசிக்காதா அவனுக்கு. என்ன சாப்பிடுகிறான். உடலே
மெலிந்து முகமே புதர் மண்டி அவனை ஒரு பார்வைக்கு, நம்ம ராசையாவா, என நம்ப முடியாது
இருந்தது. நடைப்பிணம்.
அந்தக் கிணற்றில் இப்போது யாரும் வந்து தண்ணீர் சேந்திப்
போவது இல்லை. வயசுப் பெண்கள் அங்கே வந்து கிணற்றைப் பார்க்கவே பயப்படும்படி ஆகிவிட்டது.
அந்த ஜகடை உருள்வதை நிறுத்தி விட்டது. சாமந்தியின் மரணத்தோடு காலம் நின்று விட்டது
கிணற்றைப் பொருத்தவரை. இராவானால் அங்கே நடமாட்டம் குறைந்து போனது. ஆண்கள் கூட அங்கே
வருவதைத் தவிர்த்தார்கள். சாமந்தி வெள்ளாடை உடுத்தி ஜல் ஜல் என நடமாடுவதாக ஊரில் கதைகளும்
உண்டு. அவன் அப்படியே அந்த வளாகத்தில் இரா பகலாகக் காத்துக் கிடந்தாப் போல படுத்துக்
கிடந்தான். ஒருவேளை அவளை அவன் பார்க்க விரும்பினானா? எதற்கு, யாருக்கு அவன் காத்திருக்கிறான்.
திடீரென்ற இருட்டில் அவன் மோதித் திகைத்து அப்படியே நின்று விட்டாப் போலிருந்தது. ராசையா.
ஊரில் யாரையும் அவனுக்கு அடையாளமும் தெரியவில்லை.
இக்காலங்களில் வயல்களும் வறண்டு, கிணறுகளும் வற்றிப் போக
ஆரம்பித்திருந்தன. நல்லவர்கள் அருகி வரும் ஊர். மழை எப்பிடிய்யா பெய்யும், என்றெல்லாம்
சனங்கள் அலுத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். ஊரில் கெட்டவர்கள் யார், அதை யாரும் பேசவில்லை.
தான் பாட்டுக்குச் சிரித்துப் பேசியபடி, உல்லாசமாய் வளைய வந்த ஆசாமி. ராசையா. அவனைப்
பைத்தியமாய் அடித்த ஊர் அல்லவா இது? அந்தப் பாவம் சும்மா விடுமா? எல்லாருக்கும் சத்தமாய்
எதுவும் பேச பயம். சமுதாயம் என்பதே இப்படி பயங்களால் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. சற்று
மாறாக நடக்கிறவன், எதிர்க்கிறவன் கதி என்ன? அவர்களுக்கு உதாரணம் ராசையாவாக இருந்தான்.
அவனைப் பார்த்து அவர்கள் பயப்பட்டார்கள். அவனைப் பார்த்து அவர்கள், தங்களையிட்டு பயப்பட்டார்கள்.
அந்த சுமைதாங்கிக் கல், அவனது சுமையையும் தாங்கிக் கொண்டதாய் ஆயிற்று. எங்கிருந்தோ
எப்படியோ துண்டு பீடிகள் பொறுக்கி வந்தான் ராசையா. நாலு இழுப்பு கூட வராது அது. அத்தோடு
அதைச் சுண்டி யெறிவான். காறித் துப்புவான். அப்படியொரு கமறலும் எரிச்சலும் வெறுப்புமாய்
ஆகி யிருந்தான் அவன்.
வீட்டுக் கிணறுகள் வற்றினாலும் கோவில்ப் பக்கப் பொதுக் கிணறு
நீர் இறைக்க இறைக்க ஊறுவதாய் இருந்தது. அதை இப்போது பயன்படுத்துவது இல்லை. இருக்கிற
வறட்சியில் அதைத் தூர் வாரித் திரும்பப் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்தார்கள்.
வேறு வழியில்லை. எட்டிப் பார்த்தால், ஆழத்தில் சிறிது தண்ணீர் பளபளவென்று கிடக்கிறது.
ஒரு அடி ரெண்டு அடி இருக்கலாம். இதை இறைத்து ஒரு வருடத்துக்கு மேல் ஆயிற்று. தூர் எடுத்து
ஆழப் படுத்தினால் மேலும் ஒரு ஆள் மட்டத்துக்கு நீர் சுரக்கலாம். வீட்டுக் கிணறுகளில்
இந்த ருசியான தண்ணீர் கிடைக்கவில்லை. இதில் குதித்து ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள்.
அது உண்மைதான். அது ஆயிற்று, ஒரு வருடம் முன்னால். அவனுக்கு, ராசையாவுக்கு உள்ளே உறைந்துபோன
கதை. ஆனால் ஊர் சனங்களுக்கு அது பழைய கதை. அத்தோடு இராத்திரிகளில் அந்தப் பக்கம் போக
வர சனங்கள் பயப்பட்டார்கள். சாமந்தியின் ஆவி பற்றிய கதைகள் கிளர்ந்து படர்ந்த வண்ணம்
இருந்தன. யாரையாவது அது வந்து பிடித்துக் கொள்ளும், என்று பயந்து கிடந்தது. எல்லாவற்றுக்கும்
முடிவு கட்டுவோம், என்றால் தூர் எடுத்து கிணற்றை மீண்டும் குடி தண்ணீராய்ப் பயன்படுத்த
ஆரம்பிக்கலாம். அவரவர் வீட்டில் கிணறை ஆழப் படுத்துவதை விட, பொதுக் கிணறு, எல்லாருக்கும்
உதவும் அல்லவா?
ராசையா பார்த்துக் கொண்டிருந்தான். ஆட்கள் அந்தப் பக்கமாக
நடமாடியதே அவனுக்குப் பிடிக்கவில்லை. எழுந்து அந்தப் பக்கமாக நகர்ந்தான். மனிதர்களைச்
சந்திப்பதே அவனுக்கு வெறுத்துப் போயிருக்கலாம். மனிதர்களில் நல்லவர்கள் இல்லை, என அவன்
முடிவுக்கு வந்திருக்கலாம். உறவு. சுற்றம். நட்பு... எல்லாருமே சுயநல வாதிகள். அவர்களுக்கு
கேடு வந்தால், இடைஞ்சல் வருமானால் நம்மை அவர்கள் கைவிட்டு விடுவார்கள். மனிதரில் நல்லவர்
இல்லை. எழுந்து போனான் அவன்.
அண்ணாமலைதான் கிணற்றில் இறங்கியது. முன்பு சாமந்தியை அவன்தான்
உள்ளே இறங்கி மேலே கொண்டு வந்தது. இறங்கும் போது அவனுக்கு சாமந்தி நினைவு வந்திருக்கலாம்.
அவன் கால்கள் லேசாய் உதறல் கண்டது. பிரமைகளை உதறித் தள்ள முடிந்தால் நல்லது. வரி வரியாய்க்
கிடந்தது கிணறு. ஒரு செங்கல் அளவு பிறைகள். கால் வைத்து இறங்கத் தோதாய். பிறகு உறைகள்
வரிவரியாய்க் கிடந்தன. அதன் இடுக்குகளில் கவனமாய்க் கால் வைக்க வேண்டும். குருவிகள்
கூடு கட்டியிருக்கும். விர்ர்றென்று எழுந்து பறக்கும். பயந்து விடக் கூடாது. தவளைகள்
காலை உரசி வெளியே குதிக்கும். சில சமயம் ஓணானோ பாம்போ கூட அடைக்கலப் பட்டிருக்கலாம்.
எல்லாவற்றையும் தயாராய் எதிர்பார்த்திருக்க வேண்டும். இறங்க இறங்க இருட்டாய்க் கிடந்தது.
டார்ச் வைத்திருந்தான். இடுப்பில் கட்டி எடுத்து வந்திருந்தான்.
சாமந்தி மிதந்தபோது ரெண்டு ஆள் மட்டத்துக்குத் தண்ணீர் கிடந்த
ஞாபகம். இப்போது இறங்கினால் முட்டு நனையவில்லை. அத்தனைக்கு ஊரே வறண்டு கிடக்கிறது.
மேடு தட்டிக் கிடந்தது கிணறு. ரெண்டு அடிமூணு அடி வரை தூர் வாறலாம். மேலும் சிறு உறைகள்
இறக்க வேண்டியிருக்குமா, அதைப் பிறகு பார்க்கலாம். மேலேயிருந்து கயிறும் வாளியும் இறங்கியது.
மேலே அண்ணாமலையின் தம்பி சிகாமணி காத்திருந்தான். மண்ணைக் கோரக் கோர வாளி நிரம்பியதும்
அண்ணாமலை மேலே அனுப்புவான். அதைக் கொட்டிவிட்டு சிகாமணி திரும்பவும் வாளியைக் கிணற்றுக்குள்
அனுப்பினான். சிறு சிறு கல் கட்டிகளாக வந்தன. என்னென்னவோ வந்தன. பீங்கான். இலை தழை
செத்தைகள் வந்தன. நெகிழ்ந்த மண். நனைந்த மண்ணின் அழுத்தமான பழுப்பு வண்ணம். அதில் இருந்து
ஒரு வாடை வந்தது. அள்ளி அள்ளிக் கொட்டினார்கள் வெளியே.
தள்ளி விலகிப் போயிருந்தான் ராசையா. அவனுக்கு என்னவோ படபடப்பாக
இருந்திருக்க வேண்டும். அழுது விடுவான் போலிருந்தது. இப்படித்தானே அன்றைக்கு அவளை,
சாமந்தியை வெளியே எடுத்திருப்பார்கள் என அவன் தனக்குள் குமுறிக் கொந்தளித்தானோ? அவனுக்குச்
சொந்தமான கிணறாய் அதை அவன் உணர்ந்தானோ என்னவோ. அவனது சொத்து அது. ஐஸ்வர்யம். அதில்
இவர்களுக்கு என்ன வேலை என ஆத்திரப் பட்டானோ.
வாளி வாளியாய் உள்ளே யிருந்து மண் எடுக்கிறார்கள். முட்டளவு
ஆழத்தில் நின்றிருந்த அண்ணாமலை இப்போது இடுப்பு அளவு ஆழத்தில் வந்திருந்தான். அடைப்புகள்
எதுவும் திறந்திருக்கலாம். ஊற்று வர ஆரம்பித்திருக்கலாம், என்றிருந்தது அவனுக்கு. ஊற்றுக்
கண்களை மணல் மேடாகி மூடிக் கொண்டிருந்திருக்கலாம். மணலை ஒரு முங்கு முங்கி வாளியில்
அள்ளி நிரப்ப வேண்டி வந்தது. கழுத்து வரை அவன் அப்படியே உட்கார்ந்து மண்ணை அள்ள ஆரம்பித்திருந்தான்.
இப்படியே ஊற ஆரம்பித்துவிட்டால், உறை எதுவும் இறக்க வேண்டாமாய்க் கூட இருக்கும், என்று
அண்ணாமலைக்குத் தோன்றியது.
மேலே வந்து அம்பாரமாய்க் குமித்த மண்ணில் பளபளவென்று பூரானாய்
என்ன இது?
வெள்ளிக் கொலுசு ஒன்று. அதை எடுத்து சூரிய ஒளியில் காட்டியபடி
சிகாமணி உரக்கச் சொன்னான். “கொலுசாட்டம் இருக்கு...” எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள்.
ராசையா. அவனும் திரும்பி அவர்களைப் பார்த்தான். கொலுசுதான். சூரிய ஒளியில் என்னமாய்...
பளபளவென்று.... ஓஓஓ... வென்று ஒரு அலையைப் போல எழுச்சி கொண்டு அவர்களை நோக்கி வந்தான்
ராசையா. கொலுசு கொலுசு கொலுசு... என அவன் மனம் படபடத்ததோ என்னவோ. சட்டென்று சிகாமணி
கையில் இருந்து அந்தக் கொலுசைப் பிடுங்கிக் கொண்டான்.
என்ன நடக்கிறது என்று பார்க்க, சற்று தள்ளி நின்றிருந்த சாமந்தியின்
அப்பா எழுந்து அவர்களை நோக்கி வந்தார். இப்பவெல்லாம்அவருக்கு காதும் கண்ணும் அத்தனை
சுரத்தாக இல்லை. ராசையா அவரை கவனிக்கவில்லை. அண்ணாமலை ஈர டவுசருடன் மேலேறி வந்தான்.
அவனையும் ராசையா கவனிக்கவில்லை. அதுவரை யாரோடும் ஒரு வார்த்தை பேசாதவன். பெருங் கேவலொன்று
வெளிப்பட்டது அவனிடம் இருந்து. சாமந்தியின் அப்பாவிடம் அண்ணாமலை “தண்ணி விறுவிறுன்னு
வேகமா ஊறுது ஐயா. அடைப்பை எடுத்திட்டேன். ஒருமணி ரெண்டுமணி நேரத்தில் எட்டடி பத்தடி
மட்டம் வந்துரும். நம்ம சனங்க தண்ணி தெளிஞ்சதும்
எடுத்துக்கலாம்” என்று எதோ பேசிக் கொண்டிருந்தான். யாரும் ராசையாவை கவனிக்கவில்லை.
திடுமென்று ராசையா ஒரு காரியம் செய்தான். அந்தக் கொலுசைக்
கையில் எடுத்துக்கொண்டு கிணற்றுக்குள் குதித்தான்.
•
** கவிதை - பா. உதயகண்ணன்
*
*
*
நன்றி இருவாட்சி பொங்கல் 2019 மலர்
91 9789987842 / 91 9445016842
இருவாட்சியில் ஒரு ஓ ஹென்றி .
ReplyDelete