உறைவு

எஸ்.சங்கரநாராயணன்

(published in kanayazhi monthly)

யாரோ நடமாடுவதுபோல் இருந்தது. சட்டெனத் திரும்பிப்£ர்த்தாள் மாதங்கி. ஒருவேளை பிரமையோ? அப்படி ஓர் உணர்வு அடிக்கடி¢ அவளுக்கு வந்துகொண்டே யிருந்தது. யாரோ பார்க்கிறார்கள். யாரோ நம்மை உற்றுக் கண்காணிக்கிறார்கள். யாரோ கூட நடமாடுகிறார்கள். ஏன் இப்படி தெரியவில்லை. நினைவுதெரிந்த நாளில் இருந்தே இந்த பிரமை அவளுக்கு இருந்துவந்தது.

      பெண்கள் அப்படியொரு சூட்சும மோப்பத்துடனேயே வளர்க்கப் படுகிறார்கள். அம்மாவுக்கு எப்பவுமே தன்னையிட்டு அல்ல, இவளையிட்டு பயம் அதிகம். தன்சார்ந்த பயங்கள் இயல்பாகவே அவளுள் விதைக்கப்பட்டவை. ஆண் குழந்தை பெற்றால் அது, அந்த பய உணர்ச்சி, கொஞ்சம் மேடு தட்டியும், பெண் குழந்தை என்றால் மேலும் பள்ளம் பாரித்தும் போகிறது. அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு. பெண்ணின் முதல் இலக்கணம் பயம். ஆண் அச்சம் மடம் ரெண்டையுமே சேர்த்து எள்ளுகிறான். அச்சம் என்பது மடமையடா.

      யாரோ பார்க்கிறார்கள், என்பதற்கும் யாரோ பார்க்கக் கூடும் என்று உள்ளே ஒலிக்கிற எச்சரிக்கைக்கும் பேதமில்லையோ என்னவோ?

      குறிப்பாக அவள் தனியாக இருக்கும் கணங்கள். அவள் தனியாக இருக்கும் கணங்களில் அவள் தனியாக இல்லை போல் ஓர் உணர்வு. இதை யாரிடம் சொல்வது? சொல்லவும் அப்போது அங்கே யாரும் இல்லை. நம் இச்சை இல்லாமல் மனமே தன்னால் பிரிந்து இயங்குகிறதா என்ன? ஏய் நீ யார்? என்ன வேண்டும் உனக்கு? குரல் மௌனமாய் தொண்டைக்குள்ளேயே எதிரொலித்தது. மௌனத்தின் நாக்கு உட்சுருட்டி உள்ளே இழுத்து அமுக்கிக்கொண்டது சப்தங்களை.

      சாத்விக கணங்களில் பிரச்னை ஏதும் இல்லை. ஆகா, அலுவலகத்துக்கு நேரமாகி விட்டது.... என்று பஸ் பிடிக்க ஓடுகிறாள் அன்றைக்கு. கூடவே யாரோ பரபரத்து வருகிற பிரமை. பிரமையேதான். என்ன இது? அவன், அல்லது அவள், அல்லது அது... என்ன? கூட ஓடி வருகிறது என்றால், இடப்பக்கமா வலப்பக்கமா, முன்னேயே பின்னேயா, தலைக்கு மேலேயா? சீச்சி, என்று பஸ்சுக்குள் தாவியேறினாள். எனக்குத் தான் அவசரம் என்றால், கூட வருகிற நபரும் நம்மைப் போல உணர்கிறது விநோத அனுபவம்.

      அவள் ஒன்றை கவனித்தாள். நினைவு தெரிந்த நாள்முதல் இந்த குறுகுறுப்பு நமக்கு இருக்கிறது, என்றால், நாளிது வரை, பத்து வயதில் அவளது சூட்சும அறிவு விழித்துக் கொண்டது என்று வைத்துக்கொண்டாலுங் கூட... இப்போது அவளுக்கு இருபத்திமூணு... இதுநாள் வரை அந்த நபரை நாம் நேரில் சந்திக்கவில்லை என்றாகிற போது... அவள் முடிவு செய்தாள்... அது ஓர் உணர்வு. நாம் ஓடும்போது அந்த உணர்வு பரபரக்கிறது. நாம் நின்றால், அது நிற்கிறதா தெரியாது. அந்த உணர்வு நமது சூட்சுமத்தில், ஆழத்தில் எங்கேயோ இருந்து கொண்டிருக்கிறது. நம்முடன் அது வாழ்கிறது. நம்மால் அதை உணர முடியும். உதற முடியாது. முடியாது என்று புரிந்தபின் பயந்து அர்த்தம் இல்லை. நாம் அந்த உணர்வோடு பழகிக்கொள்வோம்.

      நண்பனே, அல்லது தோழியே நான் உன்னை நேசிக்கிறேன். வா நாம் கைகுலுக்கிக் கொள்வோம். பன்னீர்ப் பூ மரம் ஒன்று சிலிர்த்து காற்றில் உதறிக்கொண்டதில் அவள்மேல் உதிர்த்துப் போட்டது பூக்களை. சிரித்துக் கொண்டாள்.

      பிறகு அந்த பயம் போய்விட்டது. மடம் போனால் பயம் போய்விடும் போலிருக்கிறது. பயிர்ப்பு போனால் நாணமும் போய்விடுகிறது அல்லவா? அதைப்போல! பயிர்ப்பு என்றால் அந்நிய ஆடவர் ஸ்பரிசத்தை விலக்குவது என்கிறதாக அவள் கேட்டறிந்திருந்தாள்.

      அந்த 'பா'வம் எப்போது  மாதங்கியின் பிரக்ஞைக்குள் புகுந்தது தெரியாது. முன்பே இருந்திருக்கலாம். அவள் அறிவு தன்முனைப்பாக செயல்படும் போது தன்னைப்போல இந்த பிரக்ஞை விழித்துக் கொண்டிருக்கிறது. குழந்தைப்  பருவத்தில் இந்த, யாரோ பார்க்கிறார்கள், இல்லை. பயம் இல்லை. இருட்டைக் கண்டு பயம். யாரும் பார்க்கா விட்டால் பயம். யாரும் பார்த்தால் புன்னகை தான், ஒரு பாதுகாப்பு உணர்ச்சிதான் வந்திருக்கிறது. பார்த்தால், புன்னகைத்தால் அவர்கள் கிட்டே வருவார்கள். கன்னத்தைக் கிள்ளுவார்கள். தூக்கிக் கொஞ்சுவார்கள். சந்தோஷ கணங்கள் அவை.

      ஆ தனிமையில், அவள் தனித்திருக்கவில்லை என்ற உணர்வு ஆழமானது. என்றால் அவளிடமிருந்து பகிர்ந்துகொள்ள, அவளுக்கு அளிக்கவோ அவள்  அளிக்கவோ, எதுவும் வாய்ப்பே இல்லை என்பது தான் விநோதமாய் இருந்தது. அவன் அல்ல அவள் அல்ல அதுவும் அல்ல. அது ஓர் உணர்வு. மனசின் தாக்கம் அது. சரி, அதற்கு என்ன பெயர்? தன் கூடவே நடமாடும், தன்னைத் தாண்டியும் போக்குகாட்டும் அது. தனக்குப் பின்தங்கியதே இல்லை, என்பதுதான் ஆச்சர்யம்.

      அம்மா இறந்து போனாள். ஹாவென பாரம் மேலேறிய திகைப்பு ஏற்பட்டது அவளுக்கு. துக்கம் தானா அது? அதில் துக்கமும் இருந்தது. ஆனால் முழுசாய் அது துக்கம் என்று கூறல் தகாது. அது ஓர் உணர்ச்சிக் கலவை. துக்கமும் அதில் கண்டது. ஒரு திகைப்பு. துக்கம். பயம். இனி என்ன, என்கிற திணறல். இதுநாள் வரை கூட இருந்தாள் அம்மா. அவளது தனிமைக்கு நான் அரண். என் தனிமைக்கு அவள் அரண். அப்பா காலமாகி விட்டார். அவளும் அம்மாவும் தான். அவள் வேலைக்கு வந்தபின் குடும்பம் கொஞ்சம் வசதி கண்டது. அம்மா தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்தாள். கோவில் குளம் என்று பவித்ர பாவனைகள் மீண்டும் கைக்கொண்டாள். இன்னிக்கி  ராஜராஜேச்வரிக்கு அலங்காரம் ரொம்ப விசேஷம், யார் மண்டகப்படியோ தெரியல, என்றாள். இதையெல்லாம் அவள் கவனித்ததே இல்லை. அப்பா இறந்த திகைப்பு அவள் நரம்புகளை மழுங்கடித்து விட்டது. கோவிலுக்குப் போகையில் பெண்ணுக்கு வேண்டிக்கொள்வாள். வீட்டு வேலைகளைக் கடமைசிரத்தையாய்ச் செய்வாள். அவள், மாதங்கி வேலைக்குப் போனதும் அம்மா மழைக்குத் துளிர்த்தாப் போலானாள். முகத்தில் கானல் வரிகள் குறைந்து புன்னகை சேர்ந்தது. அப்பா பார்த்த வேலையே அவளுக்குக் கிடைத்தது. வேலைக்குக் கிளம்பும் நாளில் அம்மா அவளுடன் கோவிலுக்கு வந்தாள். அப்போது தான் சொன்னாள் இப்படி.

      ''இன்னிக்கு ராஜராஜேச்வரிக்கு அலங்காரம் ... ...'' அப்படியே திரும்பி அவளைப் பார்த்தாள். ''என் கண்ணே பட்டுடும் போலருக்குடி...'' என்றபடி மல்லிகைப் பூவை, அவளைத் திரும்பச் சொல்லி தலையில் சூட்டினாள். அம்மாவின் உற்சாகம் அவளுக்குப் பிடித்திருந்தது. அவளுக்கு உற்சாகம் இல்லையா? இருந்தது, ஆனால் முன்பு, வேலை கிடைக்கு முன்பு, அவள் ஒன்றும் விளக்கணைத்தது போல் இல்லை, என்பது உண்மைதானே?

      இனி என்ன? அப்பா இறந்துபோனது பரவாயில்லை. கூட அம்மா இருந்தாள். அதில் துக்கம் இருந்தது. திகைப்பு இல்லை. திகைப்பு இத்தனைக்கு இல்லை. இனி என்ன என்ற கேள்வி பிறக்கவில்லை. அம்மாவின் அண்ணா வந்திருந்தான். கூட கொஞ்ச நாள் இருந்தான். ''ச், உங்கம்மா உனக்கு கல்யாணத்தைப் பண்ணிப் பார்க்கக் கொடுப்பினை இல்லாமல் ஆச்சே...'' என்றான். ''அப்பாவே பண்ணியிருக்கணும். அவர் காலம் முடிஞ்சது. அம்மாவாவது எதும் பார்த்து ஏற்பாடு பண்ணியிருக்கலாம்...'' அவன் பேசுவது பாதி புரிந்தும் பாதி புரியாமலும் இருந்தது. ஆனால் மனசில் ஒட்டத்தான் இல்லை. தலையாட்டினாள் குழப்பத்துடன். ஆ அவளுக்கு அம்மா அரண், அம்மாவுக்கு அவள் அரண். அம்மாவுக்கு அவள் அருகாமை வேண்டியிருந்தது. அவள் அருகில் இருக்கையில், இந்த அண்ணாவே தேவைப்படவில்லை. கூட இருந்தாள் மாதங்கி. அவளிடம், மாதங்கியிடம் அம்மா அந்த ஆதுரத்தை, அண்ணாவிடம் பெறாத அருகாமையை எதிர்பார்த்தால் என்ன தவறு? அவள் மடியில் அம்மா படுத்துக்கொண்டால் என்ன? எனக்கு வேலை கிடைத்து விடடது. எனக்கு தெம்பு அது. உள்ளே என் ஊற்றைப் பழையபடி திறக்க வல்லதாய் அது அமைந்தது. அம்மாவின் அடைபட்ட ஊற்று திரும்ப ஊறுமா?

      அம்மாவே இறந்துபோனாள். கடைசி நிமிடங்களில் அவள் மாதங்கியின் கல்யாணம் காணாமல், பொறுப்பைத் தீர்க்காமல் இறந்து போவதை நினைத்துப் பார்த்திருப்பாளா? அல்லது தன் காலம் அமைதியாய் முடிந்ததையிட்டு ஆறுதல் பட்டாளா? அப்படித்தான் என்றால் அது தப்பும் இல்லை. நானும் அவள் மரணத்தில் என்னைப் பற்றித்தான் முதலில் யோசிக்கிறேன். அது தப்பு என்றால், எல்லாருமே தப்பு செய்கிறார்கள் என்று அர்த்தம். அதாவது அது தப்பு இல்லை என்று அர்த்தம்.

      அம்மா நெடுஞ்சாண் கிடையாய் மல்லாக்கக் கிடந்தாள். அப்பா இப்படிக் கிடந்தது ஞாபகம் வந்தது. அப்போது பக்கத்தில் அம்மா. தலைமாட்டில் விளக்கு ஏற்றி வைத்திருந்தது. தள்ளி அவள், மாதங்கி உட்கார்ந்திருந்தாள். ஏனோ அப்போது தலைக்குமேல் இருந்த சாமி படத்தின் மேல் பார்வை சென்றது. மகாவிஷ்ணு படுத்திருக்க கால்மாட்டில் லக்ஷ்மி தேவி. எந்தப் பெண் தெய்வமும் இப்படி படுத்துக்கொண்டு அருள் பாலிக்குமா, என்று அப்போது தோன்றியது.

      ராத்திரிகளில் அம்மா முழிப்பு வந்து உருண்டு அவளைக் கட்டிக்கொள்வாள். ''என்னம்மா?'' ஒண்ணில்ல, என்பாள். தன்னைவிடப் படித்தவள் என்பதால் தன்னைவிட விவரம் தெரிந்தவளாக அவளை அம்மா வரித்தாள், மரியாதை தந்தாள் என்று தெரிந்தது. அம்மா அப்பாவின் நிழல். அப்பாவே அவளுக்கு நிழல் அளித்தார். அப்பா காலம் ஆனதும் மாதங்கியின் அடியில் அவள் ஒதுங்கியதாகப் பட்டது.

      இது என்ன உணர்வு தெரியவில்லை. நான் அப்படி யாரைச் சார்ந்தும் இயங்கவில்லையோ என்பதே புது அடையாளமாய் இருந்தது. அம்மா மரணம் அவளுக்கு ஒரு திகிலைக் கிளப்பும் என்று நினைத்திருந்தாள். அது கிளப்பவும் செய்தது. ஆனால் புயல் ஓய்ந்தாப் போல, உடனே எல்லாமே அடங்கிவிட்டது. எதுவுமே நிகழவில்லை போல ஆகிவிடும் போலிருந்தது.

      ஒரு பயணத்தில் நான் திடுமென நிற்கிறேன். அழுகிறேன். என்னை நினைத்து அழுகிறேனா, அம்மாவை நினைத்து அழுகிறேனா தெரியவில்லை. அழுகிறேன். நினைவுகளைக் கழுவி விடுகிறாப்போலக் கூட நான் அழுதிருக்கலாம். ஆனால் இந்த மேன்மை நிலை, நான் அம்மாவின் மடி என்கிற நிலை, அதுவே ஒரு பிரமைதான். நிச்சயம் பிரமைதான். மடி அளித்தலே நம்மையும் அவர்களோடு பிணைத்து விடுகிறது. நாம் விடுபட்டவர் அல்லர். மேம்பட்டவரும் அல்லர். இழப்பு, அதை உணர்த்தி விடும். அந்தக் கண்ணி விடுபடும் போது நமக்கு அது தெரிய வருகிறது.

      அவளுக்கு ஞாபகம் வந்தது, அம்மா இப்போது இல்லை என்று தெரிந்தபோது, அது ஆஸ்பத்திரி வார்டு. திடீரென்று அம்மா நெஞ்சடைக்கிறாப் போல இருக்குடி, என்று தவித்து, ஆஸ்பத்திரிக்குப் போனால் நிலைமை மோசம் என்று மருத்துவர் அவநம்பிக்கை தந்தார். அப்போது ஆச்சர்யமாய் இருந்தது. ஒரு நபர் மரணத்தை யாரால் நிர்ணயிக்க முடீயும்? என்ன சொல்கிறார் இவர், என்றிருந்தது. கெடு தந்துவிட்டார். உறவுக்காரர்களுக்குச் சொல்லிவிடுங்கள், என்றார் மருத்துவர். அவள் அண்ணாவுக்கு தகவல் போனது...

      இறந்திருந்தாள் அம்மா. என்ன நினைத்தாளோ? நினைவு திரும்பவில்லை. அவள் வெளியே காத்திருந்த போது, தாதி வெளியே வந்தாள். தவகல் கேட்டு அவள் உள்ளே போகிறாள். அந்த கடைசி நிமிட வெறிப்பு, உயிர் கண்வழியே வெளியேறும் என்பார்கள்... அவள் கேள்விப்பட்டிருந்தாள். அது வலியின் சாட்சி, என்று நினைத்தாள் மாதங்கி. அம்மா கண்மூடிக் கிடந்தாள். அம்மா செத்ததற்கு சாட்சி இல்லை.

      சற்றுமுன் மூச்சு விட்டபடி இருந்த அம்மா இப்போது இல்லை. அம்மா இறந்துவிட்டாள். என்ன அபத்தம் இது. நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? போய் மருத்துவருக்கு நன்றி சொல்லலாமா? நீங்கள் முடிந்ததைச் செய்தீர்கள், ஆனாலும்..... என்று நிறுத்திவிட்டு, நன்றி, சொல்லலாமா? சரியாய் யூகித்தீர்கள். அம்மா நீங்கள் சொன்னபடி இறந்துவிட்டாள், என்று பாராட்டலாமா?

      வெளியே வந்தாள். தூங்கும்போது அவள்மேல் காலைப் போட்டுக்கொள்ளும் அம்மா இல்லை. அவள் அப்படியே அந்த நாற்காலியில் போய் அமர்ந்தாள். சற்று ஆசுவாசப்பட வேண்டுமாய் இருந்தது. மார் ஏன் இப்படித் துடிக்கிறது தெரியவில்லை. ஒரு காபி சாப்பிட்டால் நல்லது. அம்மா இருந்தால், கேட்டால், உடனே போட்டுக் கொண்டுதருவாள் தலையைக் கிலையை வலிக்கறதாடி கோந்தே?... என்பாள். அவள் அன்புக்குப் பின்னே ஒரு பயம், அவள்சார்ந்த பயம், தன்பயம் ரெண்டும் இருந்தது. நான்? அடி வீரி. உன் வீரம் நாசமாய்ப் போக.

      அப்போதும் அந்த உணர்வு ஏற்பட்டது அவளுக்கு. யாரோ பார்க்கிறார்கள். உற்று என்னை யாரோ கண்காணிக்கிறார்கள். யார்? யார் அது, நண்பனா எதிரியா? எனக்கு எதிரிகள் இல்லை. நான் யாருக்கும் எதிரி இல்லை. எனக்கு எதிரிகள் இருக்க வாய்ப்பே இல்லை. நண்பனே, தோழியே...

      மாமா கைத் தொலைபேசியில் அழைத்து ''வந்திட்டே இருக்கேன். ஐயோ என்னாச்சி?'' என்றான். ஒரு மரணத்தை விவரிப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. மரணம் விவரிக்க ஏற்ற விஷயம் அல்ல. நீட்டிக்ககப்பட்ட மரணம் ஆபாசமானது. அபத்தமானது. அது சாகும் மனிதனைக் கொச்சைப்படுத்தி விடுகிறது. அம்மா, வெல்டன், என்று .... ''நேர்ல வா மாமா'' என்றாள். ''தனியா இருக்கே, பயமா இருக்கா?'' என்று அவன் கேட்டபோது பதில் சொல்லாமல் தொடர்பைத் துண்டித்தாள்.

      தனியாகவா இருக்கிறேன்? கலத்தல் என்பது ஓர் உணர்வு. அதேபோல தனிமை என்பதும் பாவனையேதான். பாவனையற்று உலகில் என்ன மிஞ்சும்? எதுவும் மிஞ்சுமா என்ன? தனியே இருக்கிறேன். இனிமேல் நான் தனி தான். அம்மா இல்லை. மாமாகூடப் போய் இருக்க முடியுமா? அப்படி யோசனையே என்னிடம் இல்லை. பயம்? பயம் அப்போது இருந்தது. இப்போது இல்லை.

      அப்போது தான் அந்த உணர்வு கிளர்ந்தது. நான் தனியே இல்லவே இல்லை. யாரோடு தான் நாம் பிணைக்கப் பட்டிருக்கிறோம். அது அம்மா அப்பா அண்ணன் தம்பி சித்தப்பா மாமன்... இப்படி உறவு தாண்டிய ஓர் உயிர்ப் பிணைப்பு. ஒருவேளை கற்பனை. ஆகா, பெரும் இயற்கையோடு, நியதிகளோடு பிணைப்பா இது? அம்மா சாவில் வேறு நினைவுகள் கிளரக் கிளர நான் நடந்துகொண்டிருக்கிறேன். இந்த வராந்தா இந்தப் பக்கம் பதினெட்டு தப்படி. அந்தப் பக்கம் தெரியவில்லை. திரும்பி பதினெட்டு தப்படி வைக்கிறேன்...

      ஆம், இது பழகிவிடும். பழகிக்கொள்ளாமல் முடியாது, என்று குரல். தெளிவாகக் கேட்டது அந்தக் குரல்... அவள் அறிவாள். அந்தக் குரலுக்கு ஒரு வாசனை இருந்தது. குரலுக்கு வாசனை இருக்கிறதா என்ன? இல்லாமல்? வாசனை என்பது ஒரு 'முன்பே அறிந்த' நிலை. ஒருமுறை அந்த வாசனையை நுகர்ந்து விட்டால், பிறகு அதை மறப்பது என்பது இல்லை. பிறகு அந்த வாசனை கமழும் போதெல்லாம் அது அடையாளப்பட்டு விடும், துல்லியமாக. அந்தக் குரல், என்ன குரல் அது? மௌனம் பேசுமா? ஓருவேளை... ஆம் அதுவேதான். அந்த நபர், என்னுடன் கூடவே வரும் அந்த நபரின் குரல். பரிச்சயப்பட்ட பாவனை கொண்டாடும் குரல் தான் அது. எனக்கு அதை இப்போது நன்றாக அடையாளம் புரிகிறது.

      யார் நீ?

      நீயே சொல்...

      நான் அறிந்தேன், என்றாள் நெஞ்சு நிமிர்த்தி. நீ காலம்... என்றாள். காலமே, நான் ஒரு கழைக் கூத்தாடி கம்பிமேல் நடக்கிறதைப்போல, உன்னில் பாதம் பதித்து நடக்கிறேன்.

      நல்லது, என்றது காலம். நான் ஓடிக்கொண்டே யிருக்கிறேன். ஓடிக்கொண்டே யிருப்பது என் இயல்பு. நாய்ப் பிறவி நான். ஏன் ஓடுகிறேன் தெரியாது. ஏன் ஓடுகிறாய், என்று நாயிடம் கேட்டால் தெரியாது. அதனால் சும்மா இருக்க முடியாது.

      ஆனால் நான் நிற்கிறேன். உன்னோடு நான் கூட வரவில்லை, என்றாள் மாதங்கி. நீ ஓடிக்கொண்டிருக்கிறாய். நான் உன்னோடு கூட வரவில்லை. என் அம்மா இறந்து விட்டாள். நான் அப்படியே நிற்கிறேன்...

      இது ஒரு நிலை, என்றது காலம். பொருள்களுக்கு மூன்று பௌதிக நிலைகள் இருக்கிறது என்று புரிந்து கொண்டவர் தாமே நீங்கள்... மனிதர்கள்? இது ஆன்மிகத்தின் பௌதிக நிலை. திரவப்பொருள் ஒரு தட்பத்தில் உறைவு காண்கிறது. அதுபோன்ற நிலை இப்போது உனக்கு, என்றது காலம். நீ மீண்டும் உருகிக் கரைவாய். ஓடுவாய். இது நியதி, என்று புன்னகைத்தது.

      ஆம், சம்பவங்களின் முடிச்சுகள், தாமே இறுகி, கட்டுகள் தாமே அவிழவும் செய்கின்றன.... என்றாள் அவள். எல்லாமே பாவனைகள், ம்... சரிதான், என்று தலையாட்டினாள்.

      மீண்டும் வேலைக்குப் போக ஆரம்பித்திருந்தாள். அம்மாவின் கண்ணி விடுபட்டதும், எப்படியோ தாமே வேறு கண்ணிகள் உற்பத்தியாகி பிணைப்பு கொண்டாடி விடுகின்றன. கொடிகள் சுருள் சுருளான தாவரக் கம்பிகளை நீட்டி, கிடைத்ததைப் பற்றிக் கொள்கின்றன.

      மகா அலுப்பு கண்ட கணங்கள், அவையே மறு எல்லையைக் காட்டித் தருகின்றன. முடிவு என்பது இல்லை. முடிவு என்கிற நிலைக்கு மனம் வரும்போது புதிய வாசல்கள், கதவுகள் கண்ணில் படுகின்றன. அதுவரை அந்த வாசல்களை, கதவுகளை அறிந்தவர் எவரும் இலர். ஹா, சாகும்போது வாழ்க்கையின் வாசலும், வாழ்கையில் மரணத்தின் வாசலும் கண்ணில் படுகிற விந்தை. மனிதனுக்கும், ஒன்று இருக்கும்போது இல்லாததில் கவனம் போவது ஏன் தெரியவில்லை.

      உறவினர் வீட்டுக்கு அம்மா போனால், மாதங்கி வரலையா, என்று கேட்பார்கள். மாதங்கி போனால் கட்டாயம் கேட்பார்கள். அம்மா வரலையா?

      மறுகரையில் வாழ்கிறார்கள் எல்லாரும். காலடி பூமி தெரிகிறதே இல்லை... என்று ஆச்சர்யத்துடன் மாதங்கி நினைத்துக் கொண்டாள்.

      பையில் இருந்து செலவாகிப் போன பணத்தை யாரும் நினைத்துக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் நினைத்துப் பார்க்கிறதும் இல்லை. கையிருப்பில் உள்ள பணத்தைக் கணக்குப் பார்த்து அவர்கள் வாழ ஆரம்பித்து வீடுகிறார்கள்.

      வாழ அலுத்தவர்களை காலம் நெட்டித் தள்ளி முன்னே விடுகிறது. கூட ஓடுவதே பெரும்பாலும் நடக்கிறது. ஆனால் உணர்ச்சிகள், அவையே காலத்தைக் கண்டுகொண்டன. காலம் எப்போது மனித மனத்தில் அடையாளப் பட்டது? மரணம் என்பது அறியப்பட்ட போது, மரணத்தை மனிதன் கண்டுகொண்ட போது காலம் என்கிற அம்சத்தை அவன் புதிதாய் அறிய நேர்ந்தது. காலில் தட்டிய மூலிகை.

      மரணத்துக்கு முன், மரணத்துக்குப் பின்... பிறப்பின் நேர் எதிர்வாசல் மரணம். வாழ்க்கை என்பது என்ன? இந்த ஜனனத்துக்கும் மரணத்துக்கும் இடைப்பட்ட கால அளவு... என்னென்ன வியாக்யானங்கள்.

      மாற்றங்களின் அடிப்படையில் நிர்ணயம் கொள்கிறது காலம். இது அல்ல காலம். அதுவும் அல்ல. இதற்கும் அதற்கும் இடைப்பட்டது காலம். அதற்குத் தனியே விளக்கம் கிடையாது. இரட்டைக் கிளவி என்று சிறு வயசில் இலக்கணம் வாசித்திருக்கிறாள். அது ஞாபகம் வந்தது.

      அவள் ஜெயராமனைத் திருமணம் செய்துகொண்டாள். சிவப்பான, மீசையில்லாத ஜெயராமன். காலத்தின் அலையடிப்பில் அவள்பக்கமாக ஜெயராமன் ஒதுங்கினான். பைக் ஓட்டாமல் ஸ்கூட்டர் ஓட்டும் ஜெயராமன். அரைக்கை சட்டை தவிர்த்து உடம்பை முழுக்க மூடிய முழுக்கை சட்டைகள் அணிந்தான். நீறில்லா நெற்றி பாழ், என விபூதி பூசினான். கோவிலுக்குப் போய் தவறாமல் வெள்ளிக்கிழமைகளை அலங்காரம் பண்ணினான். வயசில் பெரியவர் பேசினால் பவ்யமாய்க் கேட்டுக்கொண்டான். ஆராவாரங்கள் தெரியாத ஜெயராமனை அவள் கல்யாணம் செய்துகொண்டாள். சாத்விக ஜெயராமன். ரௌத்திரம் பழகறதா, ஐயையோ, பாரதியார்... என்ன ஸ்வாமி இது, என்று பதறினான்.

      அத்தோடு அவளை மதிக்கத் தெரிந்த ஜெயராமன். நீ அழகா இருக்கே, என்று அவள் நெற்றியில் முத்தமிட்ட ஜெயராமன். என்னைப் பிடிச்சிருக்கா, என்று கேட்கிற ஆம்பளையை அவளுக்குப் பிடிக்காமல் என்ன? அழகு முக்கியமா, என்றுஅவள் கேட்டாள். அவன் ஒருவிநாடி அவளைப் பார்த்தான். பின் ஆமாம், என்கிறான் எளிமையாய். அழகு முக்கியம்தான், என்றாள். ஆனால் எல்லாவற்றிலும் அழகு இருக்கிறதே, என்றாள். உலகில் அழகற்றது எது சொல்லுங்கள், என்றும் கேட்டாள் மாதங்கி.

      நீ அழகானவள், என்றான் அவள் மார்பில் சாய்ந்து. உன்னைப் பார்த்தபின் உலகைப் பார்க்கிறேன், உலகம் அழகாய் இருக்கிறது, என்கிற ஆம்பளையை அவளுக்குப் பிடிக்காமல் என்ன? ரட்சிப்பு மனோபாவத்தை தன்னில் இருந்து அவள் கழற்றி யெறிய விரும்பினாள். அப்போது அம்மா. இப்போது ஜெயராமன். பெண்களே ரட்சகர்களா என்ன? அவளுக்குத் தெரியவில்லை.

      சற்றே கால்பாவாமல் பறந்த காலங்கள் அவை. வாசல் கோலமாய்ப் பொழுதுகள் அலங்கரித்துக் கொண்டன. சோழிகள் சிதறினாப்போல அவள் சிதறிச் சிரித்தாள். வாழ்க்கை அழகாய் இருந்தது. அம்மா, நான் சந்தோஷமா இருக்கேம்மா, என்றாள் மனசுக்குள். ஒருவேளை அம்மா இருந்திருந்தால் சந்தோஷப் பட்டிருப்பாள். இந்த ஜெயராமன், நான் அம்மாவைக் கூடவைத்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னால் மறுத்திருப்பானா? மாட்டான் என்று தான் நம்ப வேண்டும். நம்பாமல் முடியாது. ஒருவேளை என் அம்மாவின் பக்கத்தில் நானும் இவனிடம் வந்திருந்தால், அவன் வாழ்க்கையை இத்தனை அழகாய் உணர்வானா, அதுவும் தெரியவில்லை. அட, நானே அதை எப்படி உணர்வேனோ, அதுக்கே உத்திரவாதம் இல்லை. புதிர்களை விடுவித்தபடி, புதிர்களைப் போட்டபடி நகர்கிறது காலம்.

      புதிரே வாழ்க்கையின் சுவாரஸ்யம், இன்னும் மிச்சம் இருக்கிற பாவனையே சுவாரஸ்யம், என்று நினைத்துக்கொண்டாள்.

      காலம் அவளைப் பார்த்துப் புன்னகைத்தது. அன்றைக்கு, திகைத்த ஒருபொழுதில், உனது உறைவு நிலையில், கையறு நிலையில் நான் உன்னைச் சந்தித்தேன். இது கடந்துவிடும் என்றேன்... என்றது காலம். கடக்க வேண்டுமாய் நீ காத்திருந்தாய், என்றது.

      இப்போது இந்தப் பொழுதுகளை நீ போஷிக்கிறாய். இந்த உறைவு, இது கடக்க வேண்டாமாய் நீ அவாவுறுகிறாய்.... ஆனால், ஆனால் இதுவும் கடந்து விடும், என்றது காலம். பயமாய் இருக்கிறதா?

      இல்லை, என்றவள், வேறு வழியில்லை அல்லவா, என்றாள் மாதங்கி.

      காலப் பிரக்ஞை இல்லாமல் நாம் வாழ்ந்திருக்கலாம். இப்போதே கூட அது நம்மிடம் தான் இருக்கிறது. சாத்தியம் தான் அது. ஆனால் நடைமுறையில் நாம் பின்னிக்கொண்ட சிக்கல்கள், அதை அனுமதிக்குமா என்ன? எப்பவாவது வெயிலில் இருந்து நிழலைக் கண்டதும் ஒதுங்குவது போல நிகழ்கிறது இந்த உறைதல். மகா ஓட்டம் ஓடி அலுத்தால் ஓய்வில் கிடைக்கிறது இந்த உறைவு.

      ஹா, காலமே, என நெஞ்சு நிமிர்த்தினாள். நான் உன்னோடு கூட ஓடி, ஆனால் அதேசமயம் நின்று சுவாசிக்க வல்லமை கொண்டவள். அவ்வகையில் நான் உன்னைக் கடக்க முயல்கிறவள்.

      நல்லது, மானுடத்தின் யத்தனம் அது, என்றது காலம்.

      உணர்வு ரீதியான கடத்தல்கள் மங்கி பிற்பாடு மத்தாப்பூக்களாய் கரிக்கட்டையாகிப் போகும். ஆனால் நான் ஹா, கலையை நான் கண்டேன். மனிதன் கண்டான். காலத்தைச் சிறை வைத்தான். காலத்தை உறையச் செய்தான் மனிதன். கலை என்பது பெட்டகம், என்று நினைத்துக்கொண்டாள்.

      ஓவியம், சங்கீதம். புகைப்படம். ஆ, எழுத்து.

      காலமே நான் உன்னை வென்றேன், என்றாள்.

      சிறிய அளவு, என்றது காலம். புன்னகையுடன்.

      கையில் கடிகாரத்தை மாட்டிக்கொண்டு விடுவிடுவென்று வாசலுக்கு வந்தாள். ஒன்பது பஸ் போயிருக்குமா, தெரியவில்லை. தெருவில் நடக்கும்போது தன்னைப்போல நடையின் தாளகதி கூடியிருந்தது.

 ***

storysankar@gmail.com

91 97899 87842 / 91 94450 16842 whatsapp

 

Comments

  1. மானுடம் மட்டும் அல்லாது , ஒரு பெண்ணின் உணர்வுகளை , உளப் பாதுகாப்பு குறித்த உளவியல் சிக்கல்களையும் பேசுகிறது கதை. உண்மையாகவே ஞானம் பிறந்ததையும் பதிவு செய்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog