நன்றி தமிழ்ப் பல்லவி ஜுலை 2022

தம்புரா

எஸ்.சங்கரநாராயணன்

 


ரு ராட்சச கரண்டி டிசைனில் இருந்தது அது. தம்புரா. எனக்கு சங்கீதம் அவ்வளவு தெரியாது. அவ்வளவு என்ன, தெரியாது என்றே சொல்லலாம். இது குறித்து என் அம்மாவுக்கு வருத்தம் இருந்தது. “நல்லா ஆச்சி, ஒரு பொண்குழந்தையாப் பிறந்துவிட்டு…” என அவள் அலுத்துக் கொள்ளலாம். சங்கீதம் தெரியாதது மாத்திரம் அல்ல. அம்மாவுக்கு என்னையிட்டு மேலும் நிறைய வருத்தங்கள் இருந்தன. அதில் பிரதான வருத்தம் நான் அவளை சட்டை செய்யவில்லை என்பதாக இருக்கலாம்.

இதுகுறித்து ஒன்றும் செய்வதற்கு இல்லை. நான் சட்டை செய்வது அவளுடைய ஆர்வக் கனலைக் கிளர்த்தி எரியவிட்டு அம்மா எனக்கு சங்கீத ஞானத்தைப் புகட்ட உக்கிரமான பரபரப்பு காட்ட நேரிடலாம். பொதுவாக ஒரு திறமை தனக்கு இருக்கிறது என உணர்ந்தவர்கள் அதைப் பிறருக்குப் பகிரவும் போதிக்கவும் தினவு அடைகிறார்கள். அது தங்கள் கடமை என அவர்கள் நினைக்கிறார்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம், என்பது கோட்பாடு. வையகம் அதை வேண்டாம் என மறுக்கக் கூடாது. ஆயினும் அது நீ பெற்ற இன்பம், யாம் பெற்ற துன்பம் என ஆகிவிடுவதும் உண்டு.

அது அம்மாவின் தம்புரா. அம்மா இப்போது இல்லை. அந்த ராட்சச கரண்டி, அது மாத்திரம் இன்னும் வீட்டில் இருக்கிறது. இது நகரம். நகரத்து இரண்டு படுக்கை கொண்ட அடுக்ககம். இரண்டாவது மாடி. சிந்துபாத் முதுகில் கிழவன் போல இங்கே ஒருத்தர் மேல் ஒருத்தர் வசித்தாகிறது. தேவையான சாமான்கள் போடவே இங்கே இடம் இல்லை. இதில் கலைவாழ்க்கை என்பது ஒவ்வாதது. ஒட்டாதது. கிழவிக்கு மேக் அப் போடும் சமாச்சாரம். எங்கள் வீட்டில் நாங்கள் தவிர விருந்தாளிகள் யாராவது வர நேர்ந்தால் அந்த பிரதான கூடத்தில் தான் படுத்துக்கொள்ள வேண்டி யிருந்தது. அப்போது அந்தத் தம்புராவை, என்ன கனம், வேறு இடம் தேடி கண்டுபிடித்து நகர்த்தி வைத்துவிட்டு அவர்கள் படுக்க படுக்கை விரித்துத் தர வேண்டி யிருக்கும். வாசல்பக்கம் பார்க்க ஒரு ‘சிட் அவ்ட்’ செவ்வகம். அநேகமாக அங்கேதான் தம்புரா இடம் மாறும். “தம்புரா பூஜை அறையில் இருக்க வேண்டிய சாமான்டி” என்பாள் அம்மா. நாங்கள் என்ன பதில் சொல்வது?

ரொம்பப் பெரிய பெரிய அறைகள் இல்லை எங்கள் வீடு. சிறிய சமையல் ஒதுக்கத்தில் பலசரக்கு சாமான்கள், பாட்டில்களுடன் அதே அலமாரியில் ஒரு தட்டு கடவுள் படங்கள் வைக்க என்று அமைத்துக் கொண்டிருக்கிறோம். நான் காலை மடக்கிக்கறேன். நீ நீட்டிக்கோ… மாதிரியான வீடு. ஒவ்வொருத்தன் இதைவிடச் சிறிய வீட்டில் வசிக்கிறதை இங்கே பார்க்க முடியும். சிறு சம்பளம் வாங்குகிற அநேகர் பத்து பதினைந்து பேரெல்லாம் ஒரே அறையில் வசிக்கிறார்கள். பகலெல்லாம் அவர்கள் வெளியே திரிந்துவிட்டு உணவெடுக்க, இரவு படுக்க என்று மாத்திரம் வீடு வருவார்கள். நீண்ட சந்துகளில் இரவு பத்து மணிக்குமேல் தெருவையே அடைத்து டூ வீலர்கள் நிற்கின்றன. நடுவாந்திரமாய் ஒராள் நடக்க வகிட்டுப் பாதை. இடையிடையே வாசலில் கோலம் போட்ட மாதிரி மனிதர்கள் தெருவிலேயே படுத்துக் கிடப்பதும் உண்டு. அலங்கோலம்.

எல்லாரும் இப்படி வெளியே திரிந்தலைவதனால் நகரம் எப்பவுமே ஒரு பரபரப்பான முகம் கொண்டிருக்கிறது. தெருவில் பஸ் ஓடினால் ஃப்ளாட் பதறி நடுங்குகிறது.  சாத்திய ஜன்னல் வழியே தெரு விளக்கின் வெளிச்சம், தான் பாட்டுக்கு உள்ளே நுழைந்தது. நல்லிருட்டில் தூங்க வாய்ப்பதே இல்லை.  தெருவின் ஒவ்வொரு வீட்டு மனிதர்களும், ஆணோ பெண்ணோ, இப்போது இரு பாலருமே வேலை நிமித்தம் வெளியே கிளம்புகிறவர்கள்தாம்… வீடுதிரும்ப ஒவ்வொரு நேரம் ஆகிறது. சிலர் முதல் ‘நைட்-ஷிஃப்ட்’ முடித்துவிட்டு இரவு இரண்டு மணி மூணு மணிக்கு வீடு திரும்புகிறார்கள். அவர்கள் வீட்டு கிரில் கதவுகள் முனகுகின்றன. நைட்-ஷிஃப்ட் என்று நேரங்கெட்ட நேரத்தில் கிளம்பி அலுவலகம் போகிறாட்களும் உண்டு. தெருவில் சன நடமாட்டச் சத்தங்களுக்கு ஓய்வே இல்லை. அது நகரத்தின் மூச்சுச் சத்தம். அது அடங்க முடியாது.

சனங்களின் தூக்க நேரம் மாறுவது போலவே, எழுந்துகொள்ளும் நேரமும் மாறி மாறி அமைகிறது. அதிகாலை நாலு மணிக்கு எழுந்து வீடு வீடாக பால் பாக்கெட் போடும் ஒருவன். வேளைகெட்டு தூக்கம் கலைந்த ஒரு குழந்தை அகாலத்தில் அழுகிறது. அதன் அம்மாக்காரி அந்த அகாலத்தில் எழுந்துகொண்டு அதற்கு பால் கரைக்கிறாள். தெருநாய்கள் எதற்கோ பரிதவித்து பெருங்குரல் எடுக்கின்றன. விடிய விடிய ஆவேசமாய் ஒரு வீட்டில் டிவி ஓடுகிறது. அவர்கள் பார்க்கிறார்களா அல்லது அவர்கள் செய்யும் காரியம் வெளியே சத்தம் கேட்காதவாறு உள்ளே யாராவது அந்தரங்க வேலை செய்கிறார்களா தெரியவில்லை. நகரத்துப் பிள்கைள ஆண்களோ பெண்களோ, டிவி அல்லது எஃப் எம் கேட்டுக்கொண்டே, பார்த்துக் கொண்டே பாடம் படித்து ஆச்சர்யப் படுத்துகிறார்கள். ரெண்டைப் பற்றியும் அவர்களிட ம் கேள்வி கேட்கலாம்.

சத்தம். சத்த களேபரம். சத்தப் பிரளயம். அதுதான் நகரம். அ,து அபத்தங்களின் குப்பைச் சேகர ஸ்தலம். குடோன் அல்லது கிடங்கு. இங்கே அமைதி தடைசெய்யப் பட்டுள்ளது. விலைமாதர் பற்றி நா.காமராஜன் சொல்வாரே… “நாங்கள் நிர்வாணத்தை விற்கிறோம் ஆடை வாங்குவதற்காக. எங்களுடைய நீதிமன்றத்தில் ஒழுக்கம் தண்டிக்கப் படுகிறது.” அதே கதைதான். இங்கே உன்னதங்களுக்கு இடம் இல்லை. ஒத்திசைவு சிறிதும் அற்ற நகரம். இங்கே ஒலிகள்தான். இசை கிடையவே கிடையாது. ஒரு வீட்டில் டிவி ஓடும் சத்தம். இன்னொரு வீட்டில் குக்கர், தொப்பி தூக்கி சத்தம் எடுக்கிறது. ஒருவீட்டு சுவர்க் கடிகாரத்தின் நடைச் சத்தம் டிக் டிக் டிக். இருந்த இடத்தில் இருந்தே… டிரில் பயிற்சி போல.

இந்த மனிதக் கும்பலில் இசைக்கு இடம் இருக்கிறதா அம்மா? நின்று நல்லிசை கேட்க யாருக்காவது முடியுமா? மனசு ஒட்டுமா? நாங்கள் அல்ல. நீதான் பாவம் அம்மா… இதை நான் அம்மாவிடம் சொல்ல முடியுமா? உங்கள் அபத்தமான தத்துவங்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், என்பாள் அம்மா. கோபமாக அல்ல, வருத்தமாக. சோகமாக. உன்னதர்கள் இங்கே துக்கப்பட நேர்ந்து விடுகிறது. இது நகரம். உன்னதர்களுக்கானது அல்ல இது. கிராமத்துப் பெரிய வீடுகளில், தனியே வீட்டில் இருந்த பூஜையறையில் அதிகாலை கண்விழித்து வெளிச்சம் வர வர கண்மலர்த்தி அதை வரவேற்கு முகமனாக ஸ்வரங்கள் காற்றில் சிதற கூடவே ஊதுபத்தி மணமாக சுருதியின் ரும்ம் ரம்மியமானது. ரும்மியமானது. அம்மா அது கிராமம். சூரியன் பின்வாங்க ஒளி அடங்க ஊரே அடங்கிவிடும்.

இது நகரம். சாம்பிராணி புகை வந்தால் பக்கத்து வீடுகளில் இருந்து பதறி ஓடி வருகிறார்கள். அவர்கள் வீட்டு எமர்ஜென்சி அலார்ம் தீ விபத்தை அறிவித்து இரைய ஆரம்பித்து விடுகிறது. இங்கே ஒலி அடங்குவதே இல்லை. இருட்டுவதே இல்லை. நகரத்தில். பகலிலேயே அறைகளில் விளக்கு போட்டுக் கொள்கிறார்கள். அட ஸ்டேடியத்தில் பகலிரவாக கிரிக்கெட் ஆட்டம். பகல்போல வெளிச்ச வெள்ளம்.  இருட்டைத் துரத்தி யடித்து விடுகிறார்கள். இது கிராமம் அல்ல அம்மா. இது வேருலகம். இதுவும் அதுவும் இரு வேறுலகம்.

எனக்கும் நடராஜனுக்கும் கல்யாணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகிறது. எங்களுக்குக் குழந்தை இல்லை, என்பதில் அம்மாவுக்கு வருத்தம். எங்களுக்கு வருத்தம் இல்லை. குழந்தை இல்லற வாழ்க்கையின் இடைஞ்சல். இது நகரத்தின் கோட்பாடு. நாங்கள் குழந்தையைத் தள்ளிப் போட்டு வருகிறோம், என அம்மாவிடம் சொல்ல முடியாது. இசை என்ன, குழந்தை என்ன, நகரத்தின் அதிதங்கள் இவை. இல்லறத்தின் சுகங்களை, வசதிகளை இப்படியாக கம்பார்ட்மென்டலைஸ் பண்ணி வாழ நகரம் பயிற்றுவிக்கிறது. இதற்கு மாற்று உண்டா?

நகரத்து வாழ்க்கை ஒருபோதும் எளிமையாய் இல்லை. அது எப்போதுமே நம்மைத் துரத்துவதாகவோ நம்மால் துரத்தப் படுவதாகவோ இருக்கிறது. இதில் இருநிலைகளிலும் ஓய்வு என்பதே இல்லை. காலை பத்துமணி அலுவலகத்துக்கு புறநகரில் இருந்து ஏழு ஏழரை மணிக்கு மின்சார ரயில் பிடிக்கும் வாழ்க்கை. அதற்கு அடுத்த அடுத்த ரயில்களில் கூட்டம் எகிறிவிடும். நிறையப்பேர் உள்ளே இடம் இல்லாமலோ, ஸ்டைலுக்காகவோ கதவருகே தொங்கிக்கொண்டு பயணிப்பார்கள். உள்ளே இளம் பெண்கள் யாராவது பார்க்கிறார்களா, என அவர்கள் அக்கறைப் படுகிறார்கள். அத்தனை சீக்கிரம் கிளம்பியும் வழியில் எவனாவது ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுவிட ரயில் அப்படியே ‘டடக்’ என்று நின்றுவிடும். நேரத்தில் அலுவலகம் போய்விட முடியுமா என்ற யோசனையுடன் வாட்ச்யைசையோ மொபைலில் நேரத்தையோ பார்த்துக்கொண்டே எல்லாரும் என்ன ஆச்சு, என்று வெளியே எட்டிப் பார்ப்பார்கள். பத்து மணி அலுவலகத்துக்கு பத்தரைக்குள் வந்துவிட்டால் கூட அது தாமதக் கணக்கு ஆகாது. யாரும் கேட்பது இல்லை.

எனக்கு இங்கே நகரத்தில் வேலை கிடைத்தது. அதுவரை, கல்லூரிப் படிப்பு என்றுகூட நான் நகரத்தை அறிந்தது இல்லை. நகரம் இளைஞர்களின் இளம் பெண்களின் கனவாக இருக்கிறது. நகரத்துப் பெண்களின் உடை உடுத்தலும், தலைமுடியின் முன்கொத்தை அவர்கள், நகரப் பெண்டிர், தனியே ஒரு சுருளாக விடுவதும்… என அவர்களை நான் ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கிறேன். டி என் பி எஸ் சி எழுதியதில் எனக்கு நகரத்தில் பணி. அப்பாவுக்கு அதில் ரொம்ப சந்தோஷம். “பத்மா எப்பவுமே அதிர்ஷ்டக்காரிதான்” என்பார் அப்பா. குழந்தைக்காக எதையும் விட்டுத்தருகிற, தியாகம் செய்கிற அப்பா. எனக்கு அப்பாவைப் பிடிக்கும். “இவ வெளியூர் போயி தனியா எப்படி இருப்பா?” என்று அம்மா கவலைப் பட்டாள். அம்மாக்கள் கவலைப்படப் பிறந்தவர்கள். “அவ போயி வாழக் கத்துக்கட்டும். எத்தனை நாள் நாம அவளை மடில கட்டி வெச்சிக்க முடியும்?” என்றார் அப்பா.

முதலில் ஒரு, லேலைக்குப் போகும் பெண்கள் ஹாஸ்டலில் இருந்தேன். பிறகு ஓரிரு வருடங்களில் நடராஜனைக் கைப்பிடித்தேன். நடராஜன் அவனது சொற்ப சம்பளத்தில் ஒரு சிறு ஃப்ளாளட் வாங்கிவிட்டான். அதில் அவனுக்குப் பெருமை இருந்தது. அதுவே அவன் என் கைப்பிடிக்க பெரும் தகுதியாகவும் அமைந்தது. கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வைக்க அம்மா வந்திருந்தாள். குறுகிய மாடிப்படிகள். இரண்டாம் மாடியில் எங்கள் அடுக்ககம். சின்னப் பிள்ளைங்க விளையாடறாப் போலல்லடி இங்க வீடே கட்டறாங்க, என்றாள் அம்மா. வீட்டுக்குள்ளேயே கழிவறை, குளியல் அறை என்பதே அவளுக்குப் பழக்கம் இல்லாத விஷயம்.

அப்பா இறந்து போனார். அலைபேசியில் அடுத்த வீட்டு லெட்சுமணன் பேசினார். ஹா, என்று நெஞ்சை ஒருகணம் அடைத்து விட்டது. அலுவலகத்தில் இருந்து பாதியில் கிளம்பி ஊருக்கு ஓடினோம். நான் உடனே அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லி வீடு வந்து அவசரமாக துணிமணிகள் எடுத்துப் பையில் அடைத்துக் கொண்டேன். ஒண்ணரைக்கு ரயில். விட்டால் ராத்திரிதான். நடராஜன் நேரே ஸ்டேஷனுக்கே வந்து, டிக்கெட் வாங்கிவைத்துக் கொண்டு காத்திருந்தான். போய்ச்சேர ராத்திரி பத்து. ஆட்டோ பிடித்துக்கொண்டு வீடு வந்தால் அம்மா ஓடிவந்து என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள். நான் அவள் தோளில் இருந்து தூர பார்த்தேன். முக்காடு போட்டுக்கொண்டு மூலையில் தம்புரா. அதுவும் அழுதுகொண்டிருப்பதாகத் தோன்றியது.

காலையில் பந்தல் போட்டு, அப்பாவை எடுக்கும்போது தெரு பூரா வந்திருந்தது. நடராஜன்தான் கொள்ளி போட்டது. முதல்நாள் கொள்ளி வைத்து மறுநாள் சாம்பல் எடுத்துக் கரைத்தான் நடராஜ.ன். அதிகம் அவன் லீவு எடுக்க முடியாது. மற்ற சடங்குகளை நம்ம ஊரில் போய் வைத்துக் கொள்ளலாம், என்றான் அவன். வேறு வழியும் இல்லை. அம்மாவையும் கூட்டிக்கொண்டு ரயில் ஏறினோம்.

“இது என்ன?”

“தம்புரா…” என்றாள் அம்மா தயக்கத்துடன்.

“அம்மாவுக்கு அது வலது கை போல” என்று நான் சிரித்தேன்.

நகரத்தில் இதற்கெல்லாம் இடமே கிடையாது. இங்கே குழந்தை பெறவே நாங்கள் தள்ளிப் போடுகிறோம். இதையெல்லாம் அம்மாவிடம் சொல்ல முடியாது. இது அல்ல நேரம்… எங்கள் வீட்டுக்கு வந்து எங்களுடன் தங்கவே அவள் யோசித்தாள். எங்கள் வீடே அம்மாவுக்கு ஒட்டவில்லை. என்றாலும் வேறு வழி இல்லை அவளுக்கு. மாடியேறி எங்களுடன் வந்தாள் அம்மா. அந்தக்கால பழைய அடுக்ககம். லிஃப்ட் இல்லை. செகண்ட் ஹேன்டாக அதை நடராஜன் வாங்கி யிருக்கிறான். அவன் ஜாதகத்தில் நாலில் சனி. அம்மா முன்னே செல்ல பின்னே நடராஜன். கையில் அந்த ராட்சச கரண்டி. தம்புரா. “பாத்து இடிக்காம…” என்று எச்சரிக்கை செய்தபடி மாடியேறினாள். ஒடுகலான படிகள். சுவரில் தம்புராவுக்குக் காயம் பட்டுவிடுமோ என அவள் பயந்தாள்.

அம்மா பாவம். அவள் தன் வாழ்வில் ஏமாற்றங்களையே சந்தித்து வந்ததாக நான் நினைத்தேன். இருப்பதில் திருப்தி காணப் பழகியவர் நாங்கள். அம்மா இல்லாததில் அதிருப்தி கொள்கிறாள். எனக்கு எதிர்பார்ப்புகள் இல்லை. இது நகரம். இழப்புகளை நினைத்து வருத்தப்படுவது எங்களுக்குக் கட்டுப்படி ஆகாது. இத்தனை ஆண்டுகளாக அம்மா கிராமத்தில் தன்னியல்பாய் இருந்தாள். கொல்லைத் தோட்டத்தில் தங்கரளி பூத்துக் கிடந்தது. போய் ஒரு கூடை பறித்து வருவாள்.  சுவாமி படத்தில் ஒரு கை பூ போட்டுவிட்டு தம்புரா வைத்துக்கொண்டு எதாவது மனசில் வந்த பாட்டு பாடுவாள்.

எனக்கு அது பற்றித் தெரியாது. ஆனால் அம்மா சிறப்பாகப் பாடுவதாக நான் உணர்ந்தது இல்லை. மேல் ஸ்தாயி பிடிக்க அம்மா சிரமப்பட்டாள். பட்டம் காற்றுக்கு சற்று தணிந்து பறக்கிற மாதிரி அப்போது குரல் பம்மி அம்மா சமாளித்துப் பாடினாள். அம்மாவிடம் குறை சொல்ல நான் விரும்பவில்லை. அம்மாவின் உலகம் அது.

ஆனால் இங்கே சென்னையில் ஆசுவாசமாக உட்கார்ந்து பாட அம்மாவுக்கு வாய்க்குமா? அம்மாவின் தம்புரா கித்தான் அவிழ்க்கப் படவே இல்லை.  கூடத்தின் ஒரு மூலையில் அது இருந்தது. மழைக்கோட்டு போட்டுக்கொண்டாற் போல இருந்தது தம்புரா. இங்கே அடுக்ககத்தில் அம்மா காற்றாட மொட்டைமாடியில் உட்கார்ந்து கொள்வாள். வலதுபுறம் வேறு சுவர் மறைக்கும். என்றாலும் கிழக்கு பக்கம் இருந்து சிறு காற்று வரும். நகரத்தின் சில தெருக்கள் போலவே வீடுகளுக்குள்ளும் புக காற்றுக்கு ‘ஒன்வே’ ஆகிப் போகிறது.

என்ன மாதிரி நினைவுகள் அவளுக்கு ஓடும் தெரியவில்லை. வயதாகிவிட்டால், அல்லது வயதான பாவனை அல்லது உணர்வு வந்துவிட்டால் நகரத்தில் தாக்கு பிடிப்பது கடினம். அதற்கு இளமை பாவனை, ஓட்ட பாவனை வேண்டி யிருக்கிறது. இங்கே பெரியவர்கள் டிவியில் கிரிக்கெட் பார்க்கிறார்கள், முட்டியில் பளபளவென்று அயோடெக்ஸ் தேய்த்தபடியே. சூப்பர் சிங்கர் கொண்டாட்டங்கள். வாழ்க்கை ஒரே ஜாலிதான் போங்க, என மகா இரைச்சல் போடுகின்றன டிவி நிகழ்ச்சிகள். காற்றடைத்த பலூன் போல கனமற்ற நிகழ்ச்சிகள்.  நிகழ்ச்சி முடிவில் புத்திசாலித்தனமற்ற வினாக்கள். கணவனிடம் தேவயானி இரவில் தாமதமாக வந்ததற்கு என்ன காரணம் சொன்னாள்? இந்த இழவுக்கு பதில் ஆப்ஷன் ஏ பி சி டி - இதற்கான பதிலை இத்தனை நாட்களுக்குள் இந்த முகவரிக்கு அனுப்பவும். சரியான பதில் சொன்னவர்களில் பத்து பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டு… அட போங்கடா. நீங்களும் உங்க சீரியலும்…

இந்த நிகழ்ச்சிகளை யெல்லாம் அம்மா பார்ப்பாளா தெரியாது. அவள் ஒருவேளை சங்கரா டிவி, எஸ்விபிசி பார்ப்பாளாய் இருக்கும்.  அப்பா இறந்த பிறகே அம்மாவின் சுருதி இறங்கி விட்டது. நகரம் அவளுக்கு ஒட்டவில்லை. அம்மா தன்னளவில் மௌனம் சுமக்க ஆரம்பித்து விட்டாள். காலை சீக்கிரமே கிளம்பி நாங்கள் அலுலலகம் போய்விட்டால் பிறகு அவளுக்கு பொழுதே போகவில்லை. இங்கே கோவில்களே சின்னச் சின்னதாய் இருந்தன. ஒரே அறையில் கடவுளுக்கே வியர்த்து வழிகிறது. பாடிகார்ட் முனிஸ்வரன், என்று கடவுள் பெயர்களே இங்கே அவளுக்கு விசித்திரமாய் இருந்தது.

மிக அபூர்வமாக அம்மா அந்தத் தம்புராவை எடுத்து உறை அவிழ்த்து எதும் பாடினாள். சில நாட்கள் நாங்கள் இரவில் வீடு திரும்பி தம்புரா உறை அவிழ்த்திருப்பதைப் பார்ப்போம். நான் அம்மாவின் முகத்தைப் பார்ப்பேன். அதில் ஓர் இளக்கம் இருக்கும். நடராஜன் கூட “என்ன பாட்டு பாடினீங்க?” என்று விசாரிப்பான். சில சமயம் அந்தத் தம்புரா பற்றிப் பேசுவாள் அம்மா. அவள் கல்யாணம் ஆகி வந்தபோது அந்தத் தம்புராவும் கூடவே வந்தது. அதன் கம்பிகளை முறுக்கி சுருதி சேர்க்கக் கற்றுக் கொள்ளவே தனி பயிற்சி வேண்டி யிருந்தது. அதில் இருந்து ஒரு நரம்பைச் சுண்டினாள் அம்மா. அந்த ரும்ம் சுருதி அவளுக்கு சிலிர்ப்பைத் தந்தது. 

ஒவ்வொரு குரலுக்கும் ஒரு சுருதி உண்டு மாப்ளை, என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். ஆம்பளைகளுக்கு ஒரு கட்டை, இரண்டு கட்டை என்று சுருதி அளவு. பெண்களுக்கு குரல் அமைப்பு பாத்திருக்கீங்களா? இன்னும் கீச்சென்று இருக்கும். நாலு, நாலரைக் கட்டை, அஞ்சு கட்டை… இப்படி.

மணி பத்தரை ஆகி யிருந்தது. நடராஜன் அம்மா உற்சாகமாய்ப் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான். எனக்கு லேசாய் கொட்டாவி வந்தது. நடராஜன் மாமியாரைத் திருப்திப் படுத்த நாலு வார்த்தை பேசிக் கொண்டிருக்கிறான், என்று தெரிந்தது. ரேடியோவோ டிவியோ போட்டுக்கொண்டு ஒருநாள் கூட அவன் பாட்டு கேட்டது கிடையாது.

“நீங்க எத்தனை கட்டைல பாடுவீங்க மாமி?” என்று திடீரென்று கேட்டான் நடராஜ.ன. எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. பேசி முடித்து அம்மா படுத்துக் கொண்டதும் நாங்கள் எங்கள் அறைக்குப் போனபின் அவனிடம் கேட்டேன். “என்ன அப்பிடி திடீர்னு கேட்டீங்க?”

“இல்ல. அவங்க பாடற சுதில அரை கட்டை குறைச்சிப் பாடினா மேல் ஸ்தாயி எட்டுமே…ன்னு இருந்தது. ஆனா அவங்ககிட்டட சொல்லல நான்” என்றான் நடராஜன்.

ஊர்போய் தான் இருந்த வீட்டை ஒரு பார்வை பார்த்துவிட்டு வந்தாள் அம்மா. அங்கேபோய் தொண்டை விரியப் பாடியிருப்பாள் என்று தோன்றியது. என்ன இருந்தாலும் இத்தனைநாள் பழகிய ஊர் என்பது பிரியமான ஒன்றுதான். அப்பா அவளைக் குறையில்லாமல் வைத்துக் கொண்டிருந்தார். அவளுக்கும் தேவைகள் அதிகம் இல்லை. அதையும்  சொல்ல வேண்டும். இங்கே இருப்பதை விட ஊரில் அம்மா இன்னும் கொஞ்சம் தன்னியல்பாய் இருப்பாள்தான். என்றாலும் தனியே எப்படி இருப்பது? அம்மாவை அப்படி விட்டுவிட முடியுமா?... என எங்களுக்கு இருந்தது..

அம்மா திரும்பி வந்தபோது சோர்வாக இருந்தாள். அப்புறமுமே கூட ஒரு மாதம், அவ்வளவே அம்மா இருந்தாள். அத்தோடு அவள் காலம் ஆகிவிட்டது. ஸ்வரம் பாடுகையில் முதல் காலம் பாடு, ரெண்டாம் காலம் பாடு, என்பார்கள். அம்மா வாழ்க்கை முதலில் ரெண்டாம் காலமாக ஓடி, முதல் காலமாக அடங்கி விட்டதாகச் சொல்லத் தோன்றுகிறது. உடம்பில் சர்க்கரை அளவு வற்றிவிட்டதாகத் தெரிந்து கொண்டோம். அம்மா கவனிக்காமல் விட்டிருந்தாள். தன்னைப் பார்த்துக் கொள்ளும் ஆவலே அவளுக்கு இல்லை. அம்மா மூன்று நாள் ஆஸ்பத்திரியில் இருந்துவிட்டு இறந்து போனாள்.

அப்பாவைப் போலவே அம்மாவுக்கும் இவன், நடராஜனே கொள்ளி வைக்கும்படி ஆகிப் போனது. அப்பாவுக்கு ஊரில் தெருவில் ஷாமியானா போட்டு காரியம் நடந்தது. நிறையப் தெரிந்தவர்கள் நண்பர்கள் வந்தார்கள். இங்கே இந்தக் காலனியிலேயே பாதிபேரை எங்களுக்கே தெரியாது. இங்கே அம்மாவை ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வரவே யோசனையாகி விட்டது. ஒடுகலான இந்த மாடிப்படிகளில் ஏற்ற வேண்டும். அம்மாவை வைக்க இடம் வேண்டும்… நடராஜன் மின்மேடை ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, அதுவரை அம்மாவை ஆஸ்பத்திரியிலேயே குளிர்அறையில் வைத்திருந்தான்.

அப்பாவை ஊரில் எரியூட்டினோம். முதல்நாள் எரியூட்டி, சிதை எரிந்தபின் மறுநாள் சாம்பல் கரைக்கிற மாதிரி இருந்தது. இது நகரம். அம்மாவை எரிமேடைக்குள் அனுப்பிவிட்டு ஒருமணி நேரம் காத்திருந்து, மின்மயானத்தில் அப்போதே சாம்பலை வாங்கிக்கொண்டு சமுத்திரத்தில் கரைத்தாகி விட்டது.

இங்கே வந்து அம்மா சிறைப் பறவை போல ஆகிவிட்டதாகவே எங்கள் இருவருக்கும் இருந்தது. பல இரவுகளில் அம்மா காற்றாட மொட்டைமாடியில் படுத்துக் கொண்டிருக்கிறாள். பெரிதும் இந்த வீட்டோடு மாத்திரம் அல்ல, எங்களோடும் அவள் ஒட்டாமல் போனாள், என்பதில் எனக்கு வருத்தமாய் இருந்தது. தினசரி அலுவலகம் முடிந்து கதவைத் திறந்து கொண்டு நான் உள்ளே வரும்போது கூடத்தில் நேர் எதிரே அந்தத் தம்புரா கண்ணில் படும். அம்மாவின் ஆசைக்காகவாவது அவளிடம் நான் பாட்டு கற்றுக் கொண்டிருக்கலாம். அவளிடம் கூட இல்லை. யாரிடமாவது பாட்டு சொல்லிக் கொண்டிருக்கலாம், என்று தோன்றும். அதைப் பற்றி இப்போது கவலைப்பட ஏதும் இல்லை.

இப்போது எனக்கு வேறு கவலை இருந்தது. இதுநாள் வரை அம்மா இருந்தாள். கூடவே அந்த ராட்சச கரண்டி இருந்தது. இப்போது, இனி அதன் தேவை என்ன? இங்கே அது நல்ல நாளிலேயே இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதாகத்தான் இருந்தது.

நானும் நடராஜனும் ஒரு அலுவலக நண்பனின் வீட்டுக்குப் போயிருந்தோம். நண்பனுக்கு நாங்கள் வந்ததில் ரொம்ப சந்தோஷம். மயிலாப்பூர் வரை தேடி வந்தீங்களே, என மனசாரச் சொல்லி மகிழ்ந்தான். பேச்சுவாக்கில் நடராஜன் அவனிடம், “உம் பொண்ணு பாட்டு கத்துக்கறான்னு சொன்னியே?” என்று கேட்டான். நடராஜன் அப்படி அக்கறையாய் விசாரிப்பது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. நண்பனுக்கோ உற்சாகமாகி விட்டது. பெண்ணை அழைத்து “இவதான் தர்ஷினி… சுமாராப் பாடுவா. இப்பதான் கத்துக்கறா…” என்றுவிட்டு அவளிடம் ஒரு பாட்டு பாடச் சொன்னான்.

நடராஜன் அவள் பாடி முடிக்கும் வரை பொறுமையாய்க் கேட்டுக் கொண்டிருந்தது எனக்கு ஆச்சர்யமாகி விட்டது. இத்தனைக்கும் அந்தப்பெண் சுமாராகத்தான் பாடியது. “நல்லாதான் பாடறா. இருந்தாலும் சுருதியோட பாடிப் பழகணும்…” என்றபடி நடராஜன் என்னைப் பார்த்தான். நான் உற்சாகமாகி, “எங்ககிட்ட ஒரு தம்புரா இருக்கு…” என்றேன்.

• • •

Comments

Popular posts from this blog