நன்றி ‘பேசும் புதிய சக்தி’ ஜுலை இதழ்

ஒ லி யி ன்  நி ழ ல்

எஸ்.சங்கரநாராயணன்

 


பாதி ராத்திரியில் தற்செயலாக அப்பா விழித்துக் கொண்டார். நடை ஒட்டிய ரேழியில் அவனும் அப்பாவும் படுத்துக் கொள்வார்கள். பெளர்ணமி தினமா, அல்லது இரண்டொரு நாளில் பௌர்மணி வருகிறதா தெரியவில்லை. வெளியே பளீரென்று விபூதி கொட்டிக் கிடந்தது வெளிச்சம். பால் பாக்கெட் ஒழுகினாற் போல. அப்பா கண்திறந்து பார்த்தபோது அவன், திருவாசகம் எழுந்து உட்கார்ந்திருந்தான்.

“என்னடா?”

“என்னால தூங்க முடியல” என்றான் திருவாசகம்.

“என்ன பண்ணுது?” என அவரும் எழுந்து உட்கார்ந்தார். “நேத்து சாப்பிட்டது எதாவது ஒத்துக்கலையா?”

“அப்பிடியும் தெரிலயலப்பா… உள்ள எதோ மனசு குழப்பம் காட்டுது.”

“அப்பிடீன்னா?”

“எனக்கே அதைச் சொல்லத் தெரியல…”

“என்ன வெளிச்சம் பார்… சில சமயம் இந்த வெளிச்சமே ஒரு மாதிரி உள்ளே கொந்தளிக்கும்…” என்றார். “எங்கியோ பொங்கின பால் நம்ம வீட்டுக்குள்ள வழிஞ்சி பிசுபிசுன்னு உள்ள வந்தாமாதிரி…”

ஆனால் அது இத்தனை திகைக்கடிக்க வேண்டியது இல்லை. பௌர்ணமி இரவுகள் அழகானவை. ஒளிக்குளியல் நிகழ்த்தலாம். சில சமயம் இப்படிப் பொழுதுகளில் மொட்டைமாடியில் காற்றாட அவர் போய் சட்டையணியாமல் நிற்பார். ஏ/சி போட்டாற் போல மொத்த ஊருமே குளுகுளுவென்று இருக்கும். ஒரு ஜில்லிப்புடன் காற்று தெருநாய் போல நடமாடும். உலகத்துக்கு ஓர் ஓவியத்தன்மை வந்திருக்கும். நாமே அந்த ஓவியத்தின் உயிர் மிச்சம். இரவின் கரும் சாயம் விலகி, சற்று அடர்பச்சையாக மரங்கள் காணும். மாடி உயரத்துக்கு வளர்ந்திருக்கும் முருங்கைமரப் பூக்கள் கலகலவென்று சிரிக்கிறாற் போல இருக்கும். ஆனால் சத்தம் தான் கேட்காது. பூத்து விரிந்த குண்டு குண்டு முருங்கைப் பூக்கள் வெடித்த சீடைகள். மாட்டின் கழுத்துச் சதங்கை மணிகள்.. ஆனால் ஓசையிலலாமல் அவை அசைவது வேடிக்கைதான்.

திருவாசகம் எழுந்துபோய் மண்பானைத் தண்ணீரை ஒரு தம்ளர் எடுத்து வாயைத் திறந்து ஊற்றிக் கொண்டான். யாரோ குகைக்குள்ளே யிருந்து டார்ச் அடிக்கிற மாதிரி பற்கள் பளீரிட்டன. பௌர்ணமிக்கு எதிர் பௌர்ணமி. அவன் தொண்டை எலும்பு அசைவதைப் பார்த்தார். சரசரவென்று குளுமை ஒரு பாம்பென அவன் கழுத்துக்குள் இறங்கியது. திருநீலண்டன்… என நினைத்தார். ‘ஹ’ என்றான் திருவாசகம். திரும்பவும் வந்து படுத்துக் கொண்டான்.

“நீங்களும் தூங்குங்கப்பா…” என்று கால்களை விரித்து அகலமாய்ப் படுத்தான். அவன் தூங்கினானா தெரியாது. அவர் தூங்கி விட்டார்.

ஒண்ணும் பிரச்னை இராது, என நினைத்தார். அப்பாஅம்மாவுக்கு ஒரே பிள்ளை அவன். வெகுகாலம் கழித்துப் பிறந்தவன். கொண்டாடினார்கள் அவர்கள் அவனை. நல்ல புத்திசாலிப் பிள்ளை. நன்றாகப் படித்து பக்கத்து ஊர் வங்கியில் அவனுக்கு வேலையும் கிடைத்தது. அலுவலகம் போய்வர ஒரு இருசக்கர வாகனம், ஆக்டிவா வைத்திருந்தான். பையனையிட்டு அவர்களுக்கு திருப்தி. அடுத்து நல்ல பெண்ணாய்க் கிடைத்தால் அவர்கள் பாடு தீர்ந்தது… என்று இருந்தது.

காலை வெயிலேற திருவாசகம் விழித்துக் கொண்டான். அப்படி நட்டக் குத்தலாய் எழுந்து உட்கார்ந்தபோது இன்றைக்கு இரவு தூக்கம் அவ்வளவுதான், என நினைத்திருந்தான். அப்பா அவனிடம் மேலும் எதுவும் விசாரிக்கவில்லை. அவன்பாட்டுக்கு விறுவிறுவென்று குளித்து சாப்பிட்டு உடை மாற்றிக்கொண்டு அலுவலகம் கிளம்பி விட்டான். எதற்கோ தப்பித்து ஓடுகிறாற் போன்று இருந்தது அந்த வேகம்.

வாசல்வரை வந்து வழியனுப்பிவிட்டு உள்ளே வந்தார் அப்பா. அம்மாவுக்கு விஷயம் தெரியாது. அம்மா உள்ளறையில் படுத்துக் கொள்வாள். “நேத்திக்கு…” என்று ஆரம்பித்தார் அப்பா அம்மாவிடம். அம்மா கேட்டுக் கொண்டாள். “என்னன்னு தெரியலையே…” என்றாள் அவளும். “அவன் மனசுல எதையாவது வெச்சிக்கிட்டு வெளிய சொல்ல முடியாமத் தவிக்கறானா?” என்று கேட்டாள் அம்மா.

“அப்டின்னா என்ன அர்த்தம்?”

“அவன் வாழ்க்கையில் யாராவது பொண்ணு உள்ள வர்றாளா?...” என்று அம்மா புன்னகை செய்தாள்.

“அப்ப உன் அண்ணன் பொண்ணு தேவகிக்கு என்ன பதில் சொல்றது?” என்று கேட்டபடி அவரும் சிரித்தார். நடந்ததை அவர்கள் பெரிதுபடுத்திப் பார்க்க விரும்பவில்லை.

சில நாட்கள் இப்படி ஆகிப்போகும். அதுபற்றிக் கவலைப்பட ஏதும் இல்லை. மனசின் ஆழத்தில் ஒரு காது இருக்கிறது. ஐந்து புலன்கள், அவையும் இருக்கின்றன. சில இடங்களை மனசு நினைக்கையில் தன்னைப்போல வாசனை தட்டும். ஞாபகப் பேழை இருக்கிறது உள்ளே. சில சமயம் அது உள்ளே யிருந்து எதையாவது கிளறி மேலெடுத்து விடும்.

ஒலிகளுக்கும் நிழல் இருக்கிறது! பேசிக் கொண்டே யிருக்கும்போது சிலசமயம் எதாவது ஒரு பாடலின் நடு வரி பாடுவோம். அதுவரை அந்தப் பாடல் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது போல, என்று நமக்கே ஆச்சர்யமாய் இருக்கும். அல்லது, தெருவில் இறங்கி நடந்தால் வேறு வீட்டில் இருந்து அதே பாடல் ரேடியோவிலோ டிவியிலோ ஒலித்துக் கொண்டிருக்கும். அத்தனை தூரத்தில் ஒலிகேட்காத தூரத்தில் நாம் இருந்தாலும், அந்தப் பாடலின் ஒலிகளை உள்ளுணர்வு நமக்கு உணர்த்தி யிருக்கும் என்பது வியப்பானது தான்.

மௌனத்தின் அலையடிப்பு!

அப்பா வயலுக்குப் போயிருந்தார். மதியவாக்கில் திருவாசகத்தின் வாகனம் வீட்டுக்கு வந்து நிற்பது அம்மாவுக்குக் கேட்டது. தெரு முக்கில் வண்டி வரும்போதே அவளுக்கு அந்தச் சத்தம் தெரியும். அம்மா வாசலுக்கு வந்து கதவைத் திறந்தாள். “என்னடா?” என்று புன்னகையுடன் கேட்டாலும் அம்மாவுக்கு பயமாய் இருந்தது.

“ஒண்ணில்லம்மா…” என்றான். ஒண்ணில்லன்னா? பாதில ஆபிசை விட்டு வந்திட்டியே?... என்றாள் அம்மா. “நேத்து சரியா தூங்கலையில்லையா… அதான்… ஒருமாதிரி குழப்பமா இருக்கோ என்னமோ.” சரி… என்றாள் மேலும் கலவரப் படாமல். அதாவது அவனைக் கலவரப் படுத்தாமல். உள்ள போயி ஃபேனைப் போட்டுக்கிட்டு பேசாம தூங்கு. தலையாட்டியபடியே உள்ளேபோனவன் சட்டை பேன்ட்டை உரித்தெறிந்துவிட்டு லுங்கிக்கு மாறிக்கொண்டு அப்படியே கட்டிலில் படுத்து உறங்க ஆரம்பித்தான்.

கதவை வெளியே பூட்டிக்கொண்டு அம்மா அப்பாவைத் தேடிக்கொண்டு போனாள். அவளுக்கு பயம் வந்திருந்தது. ஹ அதெல்லாம் ஒண்ணில்ல. அவனுக்கே தோணி லீவு போட்டுட்டு வந்தானே. அது நல்ல விசயம்தானே?.. என்று அவர் ஆறுதல் சொல்வார், என நம்பி ஓடி வந்தாள் அவரிடம். தன் பயத்தை யாராவது கேலியடிக்க மாட்டார்களா? ஆமாம்.. நான் முட்டாள்தான், என்று ஒத்துக் கொள்ள முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்… என்று இருந்தது.

மோட்டார் ஓடிக் கொண்டிருந்தது. பாலதாண்டாயுதம் வாய்க்காலை சீர்ப் படுத்தி வயலுக்குள் தண்ணீர் ஒதுக்கிக் கொண்டிருந்தார். மதியம் தாண்டிய வெயில். குனிந்த அவரது வெற்று முதுகின் கருமை  பெரிய வௌவால் என வியர்த்துப் பளபளத்தது. சின்னப் பயல்கள் பச்சைக்குதிரை விளையாட யாரையாச்சும் இப்படிக் குனிய வைப்பார்கள்.

மோட்டார் ஓடும் நாராசச் சத்தத்தில் அவள் வருவது கேட்கவில்லை. அவர் தலைநிமிராமல் வேலைசெய்து கொண்டிருந்தார். “ஏம்ளா?” என்றபடி அவள், மங்களா ஓடிவந்தாள் அவரை நோக்கி. ஒருவேளை நாமதான் தேவையில்லாமல் பதறுகிறோமோ, என்றும் இருந்தது.

“இரு பதறாதே… என்னா விசயம்?” என்றபடியே தலை உருமாலை அவிழ்ததுத் துடைத்தபடி அவளைப் பார்க்க வந்தார் பாலா. “எதும் தந்தி கிந்தி வந்திச்சாடி?” என்று கேட்டார். அவளது பதட்டம் அவருக்குத் தொற்றிக் கொண்டது. “இல்லய்யா. நம்ம பிள்ளை…” என மேலே பேசுமுன் அவளுக்கு அழுகை வந்தது. “ஐயோ, அவனுக்கு என்னாச்சி?” என்று அவர் உடம்பு துடித்து முறுகியது. “இல்ல. பாதி வேலைல அப்பிடியே வீட்டுக்கு வந்து படுத்திட்டான்.”

ஹ்ம். விபரீதமாய் அவர் நினைத்த அளவு இல்லை விஷயம். “வா…” என அவளை அழைத்துக்கொண்டு மோட்டார் ரூம் நிழல்ப் பக்கமாகப் போனார். “ஏன்? அவனுக்கு உடம்டபு கிடம்பு சரியில்லையா? ஜுரம் அடிக்குதா? நீ உடம்பத் தொட்டுப் பாத்தியா?” என்று கேட்டார்.

“வந்தான். துணி மாத்திக்கிட்டு நல்லா தூங்கறான்…”

“தூங்கறான்ல. பின்ன என்ன…” என்றார் யோசனையாய். “என்னவோ அவனுக்கு ஆச்சிங்க. சொல்ல முடியாமல் தவிக்கறான்…”

“மருதமலை முருகா..” என்று கும்பிட்டார் பெரியவர். “வேற எதும் சொன்னானா உன்கிட்ட?” என்று கேட்டார். “ஒண்ணுமே பேசல்லங்க.”

அவருக்கும் யோசனையாய் இருந்தது. தொடர்ந்து மனம் வேலையில் ஈடுபாடு காட்ட மறுத்தது. மோட்டாரை அணைத்தார். அவளுடனேயே அவர் வீடு திரும்பினார்.

இருவருமே பயந்திருந்தார்கள். தங்களுக்கு எதுவும் வந்திருந்தால்கூட அவர்கள் இத்தனை பதறி யிருக்க மாட்டார்கள். விஷயம் பெரிதாகிறதோ? பெரிதாகி விடுமோ… என அவர்கள் கவலைப் பட்டார்கள்.

அவர்கள் வீடு திரும்பியபோது திருவாசகம் விழித்திருந்தான். இப்பதான் படுத்தான் போல இருந்தது. அரைமணியில் எழுந்து விட்டான். அம்மாவும் அப்பாவும் உள்ளே நுழைந்ததைப் பார்த்தான். “என்ன பண்ணுதுடா கண்ணு?” என்று கேட்டார் அப்பா உள்ளே வந்தபடி.

“அருவிச் சத்தம்…” என்றான் அவன்.

அப்பாவும் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“எப்பா எவ்ளோ தண்ணி… குளுகுளுன்னு குதிரைத் தாவலா கொட்டி நுரைச்சிக்கிட்டு…”

“கனவா?” என்றார் பெரியவர்.

“இல்ல” என்றான். “இப்பவும் காதுக்குள்ள அந்த நீரோசை கேட்குது… அருவி கொட்டும் சத்தம்.”

அப்பா கவலையுடன் அவனைப் பார்த்தபோது சிரித்தான். “வெறும் சத்தம் மாத்திரம் காதுல கேட்குது. ஆனா பயப்படற மாதிரி எதுவும் இல்ல…” என்றான். சிரித்தது சாதாரணமாய்த்தான் இருந்தது. “இது நம்ம வீடு. இங்க எங்க இருக்குது அருவி?” என்றான். “ஆனால் காதுக்குள்ள… சோன்னு ஒரு இரைச்சல்…” என்றவன் அவரைப் பார்த்துவிட்டு, “பயமாவெல்லாம் இல்லை ஐயா” என்கிறான்.

“மருதமலை முருகா…” என்று நெஞ்சில் கை வைத்துக் கொண்டார் பெரியவர். உள்ளே சாமியறைக்குப் போய் சம்புடத்தில் இருந்து விபூதி எடுத்துவந்து அவன் நெற்றியில் பூசினார். “காபி சாப்பிடறியா?” என்று அவனிடம் கேட்டுவிட்டு பதிலை எதிர்பாராமல் மனைவியைப் பார்த்தார். மங்களா காபி போடப்போனாள். அவளுக்கு அழுகை வந்திருந்தது. நல்லவேளை அவள் சமையல் அறைக்குள் புகுந்துகொள்ள முடிந்தது.

“சில ஊருங்கள்ல நதி ஓடும் இல்ல ஐயா? பகல் சத்தத்துல கேட்காத நதி ஓடும் சத்தம் ராத்திரி அமைதில கேட்கும் இல்லையா? அதுமாதிரி அப்பா… எதோ அருவி பக்கத்துல எங்கியோ இருக்கு போல… அப்பிடி ஒரு நுரைச்சல் இரைச்சல்…”

அவருக்கு என்ன பதில் சொல்ல தெரியவில்லை.  “சில சமயம் காதுல தண்ணி போயி ருய்ங்னு ஒரு சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும். அல்லது எதும் சின்னப் பூச்சி உள்ள போயிட்டதுன்னா… அது உள்ளபோயி சிறகு அதிர தவிக்கும். அந்தச் சத்தமா இருக்குமா?” என்றார்.

“அருவி ஐயா. பேரருவி. எப்பா எத்தனை உயரத்தில் இருந்து கொட்டுதோ. நீர் ஆவேசம்.” கண்ணை மூடிக் கொண்டிருந்தான். “ஒரு மலைப் பள்ளம். அம்பது அறுபது அடி உயரத்தில் இருந்து தண்ணீர் வழிஞ்சி இறங்குற சத்தம் அப்பா. அந்தமாதிரி ஒரு பெரும் சத்தம்.”

என்ன ஆயிற்று இவனுக்கு. திடீரென்று எதோ சத்தத்தைக் காதில் வாங்கிக் கொண்டு திண்டாடுகிறான். காதில் ஒலியாக உள்ளே நுழைந்து வெளியேற மறுக்கிறதா அந்தச் சத்தம்.

மறுநாளும் அதற்கு அடுத்த நாளும் கூட அவனுக்கு அந்தச் சத்தம் கேட்டபடி யிருந்தது. அருவியோசை. சில சமயம் அந்த ஓசைக்கு அவனுக்குக் குளிர் எடுத்தது. ஆனால் வேறு பிரச்னை எதுவும் இல்லை. எதும் கேள்வி கேட்டால் அந்தப் பேரிரைச்சலில் அது அவனுக்குக் கேட்கவில்லை போல. இரண்டாவது தடவை சுதாரித்து அவன் பதில் சொன்னான்.

நிகழ்காலம் அவனில், அவன் மனதில் சித்திரப்படாமல் வேறேதோ காட்சிகள் தெரிகிறதா என்ன? அப்பாவிடம் அவன் முறையிடுவதை நிறுத்தி விட்டான். ரொம்பவும் அப்பாவும் அம்மாவும் கவலைப் பட்டார்கள். இந்த இரைச்சல், ஒலி பிரம்மாண்டம். அதைத் தவிர அவனில் எந்தச் சிக்கலும் இல்லை. அது தன்னைப்போல அடங்கிவிடும் என அவன் நினைத்தான். அப்பா அம்மா, அவர்களும் நினைத்தார்கள். அடங்கவில்லை. நாலைந்து நாள் ஆகிவிட்டது. அந்தச் சத்தம்?... “இன்னும் கேட்குதும்மா..” என்றான் புன்னகையுடன்.

அன்றைக்கு அலுவலகம் விட்டு அவன் வந்ததும் அப்பா அவனை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துப் போனார். “ச்… எதுக்குப்பா?” என்றாலும் அவன் கூட வந்தான். அங்கே காத்திருக்கிற ஒவ்வொரு நோயாளியையும் பார்த்ததும் அவருக்கு, அப்பாவுக்குக் கவலை வந்தது. விஷயம் அத்தனை பெரிதாய் இராது, என அவர் நம்பினார். மனம் தன்னைப்போல, மருதமலை முருகா, என்றது.

“சத்தமா? என்ன சத்தம்?” என்று கேட்டார் மருத்துவர். எத்தனை விசித்திரமான விநோதமான கேஸ்களை யெல்லாம் இவர் கையாள்கிறார். ஒவ்வொரு நோயாளியும் ஒரு பெருந்துயர் சுமந்து அவரிடம் வருகிறார்கள். அத்தனையையும் அவர் கவனித்தால் வீட்டில் போய் அவரால் தூங்கவாவது முடியுமா? மருத்துவர் பாவம்தான் என நினைத்துக் கொண்டார் பாலதண்டாயுதபாணி.

“நல்லா ரிலாக்ஸ் பண்ணி நாற்காலில பின்சாய்ந்து உட்காரலாமே நீங்க?” என்றார் திருவாசகத்திடம். “என்ன மாதிரி சத்தம்?” என்று விசாரித்தார். “ஓகோ” என்றார் அக்கறையுடன். “உங்களுக்கு பயம் உண்டா? சமீபத்தில் எதையாவது பார்த்து பயந்துக்கிட்டீங்களா?” பிறகு சாதாரண ‘ஸ்வீட் நத்திங்ஸ்’ கேள்விகளும் இடையிடையே கேட்டார். முகத்தில் எல்லா பதில்களுக்கும் அவரின் புன்னகை மாறவே இல்லை. எங்க வேலை பாக்கறீங்க? கல்யாணம் ஆயிட்டதா? என்ன வயசாவுது உங்களுக்கு? இது… உங்க அப்பாவா?

பிறகு அவர் தன் நாற்காலியின் பின்சாய்ந்து அமர்ந்து கொண்டார். முகத்தில் அந்த புன்னகை ஸ்டிக்கர் அழியவே இல்லை. “நோ ஒரிஸ்…” என்றார் புன்னகையுடன். “சில சமயம் இப்படி ஒலிகள் காதுல கேட்கறது நடக்கத்தான் செய்யுது. சீசஃப்ரேனியாவா இது என்னன்னு பார்க்கலாம். சில சமயம் தானாகவே இது சரியாயிரும்…” என்றார் மருத்துவர்.

அப்ப ஃபீஸ் வேணாமா டாக்டர்?.. என்று கேட்கத் தோன்றியது.

“ஒரு பத்துநாள் மருந்து எழுதித் தரேன். விடாமல் எடுத்துக்கணும். நல்லா தூக்கம் வரும்…” என்று அப்பாவைப் பார்த்தார். “தூங்கிட்டிருந்தால் அவனை எழுப்பாதீங்க…” என்றார். அப்பா தலையாட்டினார். பையனை வெளியே இருக்கச் சொல்லிவிட்டு பெரியவரிடமும் அவர் சில கேள்விகள் கேட்டார். “மனம் ஒரு விசித்திரமான விஷயம்” என்று மாத்திரம் சொன்னார். “பையன் மருந்து ஒழுங்கா விடாமல் சாப்பிடறானான்னு பாத்துக்கோங்க. அவன் வேண்டான்னா விட்றக்கூடாது…”

“சரி” என்று அப்பா எழுந்து கொண்டார். கன்சல்டேஷனுக்கே அறுநூறு ரூபாய். மருத்துவருக்கு கார் போர்டிகோவுடன், மாடியெடுத்த பங்களா இருக்கும் என்று தோன்றியது.

அன்றைக்கு ராத்திரி ஞாபகமாக மருந்து எடுத்துக் கொண்டான் திரு. பெரும்பாலும் தூக்க மாத்திரைகள் தான் தருகிறார்கள். அதற்கு இத்தனை பில்ட் அப், என நினைத்துக் கொண்டான். காதுக்குள் அந்த அருவியோசை… நின்று விட்டதோ என நினைத்த கணம் ஒரு பெரும் அலையாக எழுந்து காதுச் சுவர்களில் மோதியது. கேரளக் கடல் பகுதியில் எங்கோ நிற்கிறான் போல இருந்தது.

சிறிது யோசித்தபடி ஆனால் பிடிவாதமாக உடல் தளர்ந்து உறக்கம் வந்தது. மருந்தின் வேலையாக இருக்கலாம். அப்பாவும் அம்மாவும் அவனைக் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “இப்பிடி ஆயிட்டதே…” என்று அழுதாள் மங்களா. “எப்பிடி ஆயிட்டது? நீ சித்த வாயை மூடுறியா?” என்று கத்தினார் ஐயா.

காலையில் எழுந்தபோது ஓரளவு அவனுக்குத் தெளிவு கிடைத்தாற் போலத்தான் இருந்தது. என்றாலும் அந்த ஓசை… அது இன்னும் கேட்டபடி இருந்தது. அதன் உக்கிரம் குறைந்திருக்கலாம். அல்லது அப்படி அவன் நினைத்திருக்கலாம். எல்லாம் சரியாக வந்துவிடும், என நினைத்தான் திருவாசகம். வேலைக்குப் போய்க் கொண்டிருந்தான். சிறிது சமாளித்து வேலை செய்யவேண்டி யிருந்தது. என்றாலும் வீடும் தன்மையும் இதைவிடக் கலவரப் படுத்துவதாய் இருந்தது. அப்பா அம்மாவின் முகங்கள் இருளடித்து பார்க்க சகிக்கவில்லை.

ஆ.. அதற்கு பயந்து ஓடி ஒளிவது என்பது நடக்காது. அவனுக்கு அது புரிந்தது. இதைத் தவிர்க்கவும், இதைவிட்டுத் தப்பியோடவும் அவன் ஏன் முயலவேண்டும்? என்ன இது என்று உள்ளே தேடிப் பார்த்தால்தான் என்ன? பயம். பயமாய்த்தான் இருந்தது. ஆனால்… வேறு வழியில்லை அல்லவா?

மறுநாள் காலை அவன் விழித்துக் கொண்டபோது அப்பா அவனிடம் வந்தார். “இப்ப எப்படி இருக்கு திரு?” என்று கேட்டார். “நேத்து ராத்திரி…” என அவன் புன்னகைத்தான். “கண்ணை மூடி அந்தத் தண்ணீர்ச் சத்தத்தில் குதிச்சிட்டேன் அப்பா.”

அப்பா அவனைக் கவலையுடன் பார்த்தார். “அந்த அருவி… அதைப் பார்த்தேன் அப்பா…” அவர் தலையாட்டினார். அவருக்கு பயமாய் இருந்தது. பிரச்னை வளர்கிறதோ, என நினைத்தார். “எத்தனை உயரமான அருவி தெரியுமா? கிழடடுத்தனமாய் நரைத்த நுரைத்த தண்ணீர். ஆ அதற்கா இத்தனை வேகம், சுழிப்பு? அந்த அருவியில் குளித்தால்… தலையில் யாரோ தபேலா வாசிக்கிறாப்போல இருக்கும். இல்லையா?” என புன்னகைக்கிறான். அவருக்கு அதில் சிரிப்பு வரவில்லை.

பாலதண்டாயுதபாணி மனநல மருத்துவரிடம் பேசினார்.  “சொல்லுங்க… பையன் எப்பிடி இருக்கான் இப்ப. மருந்து ஒழுங்கா எடுத்துக்கறானா?” என்று கேட்டார் மருத்துவர்.

‘‘ஆமாம். நாலைந்து நாளா அந்த அருவிச் சத்தம், அது குறையல. அவன் இப்ப என்னடான்னா அந்த அருவியைப் பார்த்தேன்னு ஆரம்பிச்சிட்டான்…”

“வெரிகுட்” என்றார் டாக்டர். “சில சமயம் விஷயம் ஒரு பொங்கு பொங்கி அடங்கும்… மருந்தை நிறுத்திற வேண்டாம்.”

அவர் அலைபேசியை அணைத்தார். நிலைமை இன்னும் எங்கெங்கெல்லாம் கொண்டுபோகுமோ என்று அவருக்கும், மங்களாவுக்கும் கவலையாய் இருந்தது. பிறகு மங்களாதான் அந்த யோசனை சொன்னது. “பேசாம அவனை விடுப்பு எடுத்துக்கச் சொல்லி நாம குலதெய்வம் கோவில் வரை போயிட்டு வரலாமாங்க?” என்று கேட்டாள் மங்களா. அவருக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது.

அவன் ஒத்துக்கொள்ள மாட்டான் என நினைத்தாள். ஒத்துக் கொண்டான். திருநெல்வேலி ரயிலில் முன்பதிவு செய்துகொண்டு கிளம்பினார்கள். அம்மா அப்பாவுக்கு உற்சாகமாய் இருந்தது. எப்பவுமே பிறந்தஊர்ப் பக்கம் போய் பழைய சிநேகிதர்களைச் சந்திப்பது சந்தோஷமானதுதான். அப்பா அம்மாவின் முகத்தின் சந்தோஷம் அவனுக்குப் பிடித்திருந்தது. அதற்காகவே ஒத்துக் கொள்ளலாம் போல இருந்தது. ரயிலில் ஒரு வேடிக்கை போல அவன் அம்மாமடியில் படுத்துக் கொண்டான். அவளும் சிரித்தபடி அவன் தலையைக் கோதி விட்டாள். அப்பா எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். “எல்லாம் நல்லபடியா முடியணுமே… முருகா” என அவர் முணுமுணுத்தார்.

இரவு எட்டு எட்டரை மணிவாக்கில் ரயில் ஒரு நிலையத்தில் நின்றபோது அவன் சட்டென பிரகாசமானான். “இது எந்த இடம் அப்பா?” அவர் சொன்னார். “இந்த இடம் எனக்குத் தெரியும் அப்பா…” என அவன் புன்னகைக்கிறான். “உனக்கு எப்பிடித் தெரியும்டா?” என அவர் சிரித்தார். அவன் பக்கத்து இருக்கை நபரிடம் விசாரித்தான். “இந்தப் பக்கம் எதுவும் அருவி இருக்கா சார்?”

பாலதண்டாயுதபாணியே எதிர்பாராமல் அவர் சொன்னார். “ஆமாம். ஒரு ரெண்டு கல் தொலைவுல இருக்கு. அதாவது இருந்தது… தேனருவின்னு ஒண்ணு…”

“அதான். அதேதான். அந்த இடம்… அப்பா நாம அங்க போகலாமா?”

“என்னடா சொல்றே?” என்றார் அப்பா. இவனுக்கு முற்றி விட்டதோ என நினைத்தார். அல்லது அவரோ அவளோ எதிர்பாராத நம்ப முடியாத எதோவொன்று நடக்கப் போகிறதா?

“நாம இங்க இறங்கிக்கலாம் அப்பா.”

“இந்த ராத்திரில… தெரியாத ஊர்ல…”

“எனக்குத் தெரியும் இந்த இடம்லாம்…” என்றான் அவன்.

“அந்த அருவில இப்ப தண்ணியே இல்ல” என்றார் அந்த அடுத்த இருக்கை நபர்.

“ஓ” என்றான்அவன் யோசனையாய். “எனக்கு அங்க போகணும்…” என்றான் அப்பாவிடம். விடமாட்டான் போல இருந்தது. “நாளைக்கு ஒரு கார் வெச்சிக்கிட்டு நாம இங்க வரலாம். நம்ம ஊர்லேர்ந்து ‘ஒரு அவர்’ பிரயாணம்… பகல்ல வரலாம்” என அவனை சமாதானப் படுத்தினார்.

ஊர் போய்ச் சேர்ந்து நண்பர்களைச் சந்தித்து அவர்களில் ஒருவர் வீட்டில் தங்கிக் கொண்டார்கள். என்றாலும் குலதெய்வம், பிரார்த்தனை என்ற அளவில் மட்டுமே சொன்னார்கள். அன்றைக்கு ராத்திரி அவன் படபடவென்று எழுந்து கொண்டான். அவர் உறங்கிக் கொண்டிருந்தார். “அப்பா… அப்பா…” என அவரை தட்டி உலுக்கினான் திருவாசகம். அவர் பதறி எழுந்துகொண்டார்.

“பத்தி எரியுது. பத்தி எரியுது…” என்று நடுங்கினான் அவன். “என்னடா சொல்ற? கனவு கினவு கண்டியா?” என்றார் அவனை அழுத்திப் பிடித்துக் கொண்டு. “நம்ம வீடு. அடுத்த வீடு… மொத்தத் தெருவுமே.”

 “என்னங்க சொல்றான் இவன்? முதல்ல தண்ணீன்னான். இப்ப நெருப்புன்றான்…” என மங்களா பதறினாள்.

“ஒண்ணுமே புரியலையேடி…” என்றார் அவர். அதற்குள் அவன் சமாதானம் ஆகிவிட்டான். “ஒண்ணில்லப்பா. நீங்க படுங்க…” என்று திரும்பவும் அவன் படுத்துக் கொண்டான்.

ஆனால் மறுநாள் ஞாபகமாய் அவன் தேனருவி பார்க்கப் போகலாம் என்றான். அப்பா அம்மாவைப் பார்த்தார். பிறகு சரி என்று ஒரு டாக்சி பிடித்துக் கிளம்பினார்கள். அவன் உற்சாகமாய் இருந்தான். அவனது பரபரப்பு அவர்களுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அந்த ரயில் நிலையத்திலேயே அந்த இடத்தை அவன் தெரிந்த இடமாக உணர்ந்திருந்தான் நேற்று. எப்படி தெரியவில்லை. அவன் பிறந்தது திருப்பாணாங்குடியில். அவர்கள் திருநெல்வேலியை விட்டு வந்திருந்தார்கள். அவனுக்கு திருநெல்வேலியே வேறு ஊர்தான்.

காரோட்டிக்கு ஆச்சர்யம். தேனருவியில் இப்போது தண்ணீர் இல்லை. வெறும் மொட்டைப் பாறைகள் தான் காண முடியும். அதைத் தேடி இந்த மூணு கூமுட்டைகள் போகிறார்கள். அதைப்பற்றி என்ன நமக்கு சவாரி கிடைத்தால் சரி, என நினைத்தான் அவன்.

அருவிக்கரையில் ஒரு பெருமர நிழலில் அவன் காரை நிறுத்தினான். அருவி நெருங்க நெருங்க அவனுக்கு, திருவாசகத்துக்கு தண்ணீர்ச் சத்தம் துல்லியப் பட்டிருந்தது. நேரா போயி இடதுபக்கம் வளைஞ்சி திரும்பணும் போல இருக்கே… என்றெல்லாம் உற்சாகமாக வழி சொல்லிக்கொண்டே வந்தான். காரோட்டிக்கு ஆச்சர்யம். பையனைப் பார்த்தால் புத்திசாலி போலவும், முட்டாள் போலவும் ஒரே சமயம் அவனுக்குப் பட்டது.

காரில் இருந்து இறங்கி அவன் அந்த அருவியை நோக்கி ஓடினான். நெடிதுயர்ந்த பெரும் மேடு. உட்குழிந்த பள்ளம் போன்ற பகுதி. ஒருகாலத்தில் அருவி இங்கு உருண்டு புரண்டு ஓடி யிருக்கலாம். இவனுக்கு இந்த இடம் எப்படி மனசில் தெரிந்தது தெரியவில்லை. குழந்தை போல அவன் அருவியை நோக்கி ஓடினான்.  அவன் கூட ஓட முடியாமல் பெற்றவரகள் பின்னால் மூச்சிறைக்க நடந்து போனார்கள்.

திடீரென்று அவன் நின்றான். நெஞ்சைப் பிடித்துக் கொண்டான். கண்ணை மூடி நெஞ்சு நிமிர்த்தி நின்றான். “நாந்தான்…” என்று கத்தினான். அவர்களுக்கு அவனைப் பார்க்கவே பயமாக இருந்தது. “மாணிக்கவேல்!” என்று கத்தினான் அவன். அவர்கள் திகைத்துப் போனார்கள்.

“இந்த மரத்தடியில் உட்காருவோம்…” அவர்களைச் சட்டை செய்யாமல் அவன் போய் அந்த மரத்தடியில் உட்கார்ந்தான். கண்மூடி அப்படியே சிறிது நேரம் எதுவும் பேசாமல் உட்கார்ந்தான். அவன் நெஞ்சு பரவசத்தில் விம்மியதை அவர்கள் பார்த்தார்கள். “இங்கயிருந்து நேரா போயி திரும்பி ஊருக்குள் போனால்… ஒரு கோவில் இருக்கு” என்றான் கண்ணைத் திறந்து. “இந்த இடம் உனக்குத் தெரியுமா திரு?” என்று கேட்டார் அப்பா பயத்துடன். அம்மா பேசவேயில்லை.அவள் நடுங்கிக் கொண்டிருந்தாள். “மாணிக்கவேல். என் பெயர்…” என்றான் அவன்.

“போகலாமா?” என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டாள் அம்மா. அவன் கண்ணைத் திறந்து அவளைப் பார்த்தான். காரோட்டி அருகில் இல்லை. அவன் கார்க் கதவைத் திறந்துகொண்டு காலை வெளியே நீட்டி உறங்க ஆரம்பித்திருந்தான். “இன்னுங் கொஞ்சநேரம் இருக்கலாம்…” என்றான் அவன்.

ஒரு நாடக நடிகன் போல அங்கேயே இப்படியும் அப்படியுமாக நடந்தான் திருவாசகம். மாணிக்கவேல்.. கைகளைக் குறுக்கே கட்டிக் கொண்டான். நின்றான். தலையாட்டிக் கொண்டான். பிறகு நடந்தான். “கொள்ளை…” என்றான். “ஊரே கொள்ளை போயிட்டது…”

அம்மா அப்பா அவனை பிரமிப்புடன் பார்த்தார்கள். “தீவட்டிகளை எறிந்தபடி குதிரைவீரர்கள். எத்தனை பேர் தெரியாது. பத்து இருபது… கொள்ளைக்காரர்கள் வந்தால்  இரவில் வருவார்கள். கூட்டமாக வருவார்கள்…”

சிறிது நிறுத்தினான். “அப்பா எதிர்த்தார். சண்டையிட்டார். ஓ…” என்றபடி அழுதான். “அவர் இடுப்பில் வாள் பாய்ந்து ஒரு ஊற்றுபோல ரத்தம் பீறிட்டு…” அழுதான். “என் முகத்தில் தெரித்தது…” அவன் மேலே பேச வேண்டாம், என தடுக்க நினைத்தார் அப்பா. பிறகு அது தானாக வெந்து தணியட்டும். அது நல்லது என்று இருந்தது.

ஒரு கனவைக் கலைப்பது போல தலையை உதறிக் கொண்டான். “கோவில் தாண்டி ஒரு காத தூரத்தில்… ஒரு குகையில்…” என்றான் அவன். “நல்ல முன்னேற்பாடு அப்பா” என்றான். “எங்கள் நகை, தானியம், சொத்துகள்… எல்லாவற்றையும் அப்பா ஒளித்து வைத்திருந்தார். அந்த வழி.. அந்த வழி…” என்று நெற்றியைத் தட்டிக் கொண்டான்.

அப்பா அம்மாவின் கண்கள் வியப்பில் விரிந்தன. “புதையலா?” என அம்மா வாயைப் பிளந்தாள். பயத்தை மீறி அவளில் பரவசம் வந்திருந்தது. அப்பாவுக்கோ தன் காதுகளையே நம்ப முடியவில்லை. என்ன சொல்கிறான் இவன்? இவன் சொல்வது உண்மை போலவும், கட்டுக் கதையாகவும் தோன்றுகிறது.

அவனுக்கு இப்போது பழைய எல்லா ஞாபகங்களையும் விட அந்த குகை… ஒரு காத தூரம் என்கிறான்… அது இருக்கும் இடம் நினைவு வந்தால் நல்லது…

பிறகு அவன் பேசவேயில்லை. அந்த குகை அதைப் பற்றித்தான் அவன் நினைத்துக் கொண்டிருக்கிறானோ என்னவோ? அவனுக்கு யோசிக்க வேண்டி யிருந்தது. அவன் அவரைப் பார்த்தபோது… “திரு?” என்று கூப்பிட்டார். ஒரு நிமிடம் வெறித்துவிட்டு தலையாட்டினான். “போகலாம்…” சரி என அவன் ஒத்துக்கொண்டது ஆச்சர்யமாய் இருந்தது.

காரோட்டியை எழுப்பினார்கள். அவர்கள் எதற்கு வந்தார்கள், என்ன பார்த்தார்கள், இப்போது என்ன காரியம் முடிந்தது என்று திரும்பக் கிளம்புகிறார்கள் தெரியவில்லை. “போலாம் சார்…” என்று வண்டியை எடுத்தான்.

மாலை நாலாகி விட்டது போய்ச் சேர. அவன் எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. வழியில் ஒரு ஓட்டலில் நிறுத்தி சாப்பிட்டார்கள். யாருக்கும் என்ன சாப்பிட்டோம் என்றே நினைவில் இல்லை. டிரைவருக்கும் நல்ல பசி. அப்பாவுக்குதான் குகை, புதையல்… என்று என்னென்னவோ யோசனைகள். திருவாசகம் மனதில் என்ன என்று யாராலும் யூகிக்க முடியவில்லை. அவன் அபார மௌனத்தில் இருந்தான். அவனில் அருவி காய்ந்து விட்டதா என்ன, என்று இருந்தது.

எங்கே போனோம், என்ன நடந்தது என்று யாரிடமும் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. புதையல் என்றெல்லாம் சொன்னால் அவர்கள் நம்புவார்களா என்பதே சந்தேகம்தான்.

“என்னவோ புதையல்ன்றானே…” என்றுகூட மங்களா அவரிடம் கேட்டாள்.

“ஷ்” என்று அவளை அடக்கினார் பாலதண்டாயுதபாணி. “சத்தமாப் பேசாதே. இங்க யாருக்கும் தெரியவேணாம்…” என்றார் அவர்.

அன்றைக்கு இரவு அவனே மாத்திரைகளைக் கேட்டு வாங்கிப் போட்டுக் கொண்டான். தூக்கம் இல்லாமல் அதுவரை தவித்துக் கொண்டிருந்தவன் முகத்தில் சிறிது தெளிவு வந்திருந்தது. இரவு எட்டு மணிக்கே படுத்து விட்டான். காலையில் அவர்கள் எழுந்து கொண்டார்கள். அவன் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான். அவர்கள் அவனை எழுப்பவில்லை. மதியம் வரை அவன் எழுந்து கொள்ளவில்லை.

மதியத்தில் அவன் எழுந்து முகம் கழுவி வந்தான். “ரொம்பப் பசிக்குது. சாப்பிட என்ன இருக்கு?” என்றான். தட்டு நிறைய சோற்றைப் போட்டுக்கொண்டு சாப்பிட்டான். அவன் தங்கியிருந்த வீட்டுக்காரர்கள் அவனை ஆச்சர்யமாய்ப் பார்த்தார்கள்.

இன்னும் தூங்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு. கை கழுவ எழுந்து நடக்கவே தள்ளாடினான். குடிகார நடை. “மணி என்ன?” என்றான். “அவ்வளவா?” என்றான். புன்னகை செய்தான். ஆனால் அந்தக் கண்களில் தெளிவு வந்திருந்தது. “நாம ஊருக்கே போலாம் அப்பா…” என்றான் திடீரென்று. அருவிச் சத்தம் பற்றி அவனிடம் கேட்க பயமாய் இருந்தது. அவனும் சொல்லவில்லை.

நேற்றைய சம்பவங்கள் எதுவும் அவன் நினைவில் இருந்ததா தெரியாது. திரும்பும் வழியில், தேனருவி அருகில் இருந்த ஸ்டேஷனில்… அவர் கவனித்தார். அவன் பரபரப்பு அடையவில்லை. அவனுக்கு எல்லாமே மறந்திருக்குமா?

குகை. புதையல்… நினைவு படுத்தலாமா?... என் நினைத்து தலையை உதறிக் கொண்டார். ரயில் கச்சக் புச்சக் என்று திரும்பக் கிளம்பியது.

•••

Comments

Popular posts from this blog