நிசப்த ரீங்காரம் • சிந்தனைத் தொடர் / பகுதி 9

உருமல்

ஞானவள்ளல்



 

வினைகள் எதிர்வினைகளைத் தூண்டுகின்றன. வினை இன்றி எதிர்வினை இல்லை. எதிர்வினைகளுக்காகவே வினைகள் நிகழ்வதும், நிகழ்த்தப் படுவதும் இயல்பானதுதான். நாணயம் என்றால் இரு பக்கங்கள். நல்வினை இருந்தால் தீவினை. கடவுள் இருந்தால் சாத்தானும் இருக்கவே செய்யும். புண்ணியம் உள்ள வரை பாவமும் ஜீவிக்கும். ஒளி இருந்தால் நிழல் இருக்கிறது… அதைப் போல.

  இருள்சேர் இருவினை, என்று வள்ளுவர் குறிப்பிடுவதை கவனிக்கலாம். இருவினை என்றால், நல்வினை தீவினை,.. இரண்டும். தீவினை மாத்திரம் அல்ல, நல்வினையும் இருள் சேர்க்கும் என்கிறார் வள்ளுவ ஆசான். பாவத்தின் பலன்கள் தொடர்வது போலவே, புண்ணியம் செய்தால் சுப பலன்கள் தொடர்கின்றன. இது ஒரு தொடர் நிகழ்வாகி விடுகிறது.

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும். முதலில் உன்னைக் கெடுத்து பின் பிறரைக் கெடுக்கிறது தீயவை. இதை நம்ம எழுத்தாளர் ஒருவர் அறியாதவரா? நெருப்பு என்று சொன்னால் நா சுட வேண்டும். எழுதினால் காகிதம் பொசுங்க வேண்டும்… என்கிறார்.

நெருப்பு… என்று சொல்லிவிட்டு ‘பெப்பே’ எனத் திரிய எனக்குச் சம்மதம் இல்லை.

தீயவை தீய பயக்கும். சரி. நல்லவை? அவையும் தீய பயக்குமா?... என்றால், ம்.

அறத்துக்கே அன்புசார்பு என்பர். அறியார் அவர். மறத்துக்கும் அஃதே துணை, என்கிறார் ஆசான். அன்பு என்பது ஒரு நெருக்க உணர்வில் அதன் சுயநலத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறது. நமக்கு இஷ்டமானவர்களை யாராவது குறை சொன்னால் நமக்குப் பிடிப்பது இல்லை. அதேசமயம்… குறை சொல்கிறார்களே, அவர்களைப் பிடிக்காமல் போகிறது! ஆகவேதான் மறத்துக்கும் அந்த அன்பு, அஃதே ஆதார சுருதி என்கிறார் ஆசான். நோ அப்பீல் ஆசான்.

ஒரு நகைச்சுவை சொல்வார்கள்.

“ஏண்டி, அவகிட்ட சொல்லாதேன்னு நான் உங்கிட்ட சொன்ன விஷயத்தை நீ அவகிட்ட சொல்லிட்டியா?”

“அடாடா, உங்கிட்ட சொல்லாதேன்னு சொல்லி. நான் அவகிட்ட சொன்னதை அவ உங்கிட்ட சொல்லிட்டாளா?”

மனிதனும் ஒரு மிருகம்தான். ஆறறிவு மிருகம். மிருக உணர்ச்சிகள், உந்துதல்கள் அவனுக்கும் இல்லாமல் இல்லை. அவை இருப்பதை உணர்ந்து, அவற்றைத் தாண்டிய ஒரு நிதானத்தை, பக்குவத்தை அவன் தன் வாழ்வில் எட்ட முயற்சி செய்கிறான். மிருகங்கள் தங்கள் உணர்ச்சிகளை அப்படியே இயல்பாக வெளிப்படுத்துகின்றன, கொப்பளித்துத் துப்புவது போல.

எனினும், மிருக உணர்வுகள் நம்மில் இருந்து, நாம் அடக்க முயன்றாலும் அடங்குவதே இல்லை. அதை அடக்க முயல்வது தவிர, அது வெளியானால் தான் மனது அமைதியுறுகிறது. உணர்ச்சிகள் அடுப்புப் பால் போல பொங்கி அடங்குகின்றன. சூடாகாத பால் ருசிப்பது இல்லை.

நன்கு படித்த மக்களே சட்டென்று கோபப்பட்டு வசைச் சொற்களை தயங்காமல் பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறாரகள். வசைகள் இயல்பாகவே அவர்களுக்கு மூளையில் உற்பத்தியாகி, காத்திருக்கின்றன. அவை ஒருகாலம் இல்லாவிட்டாலும் வேறு சந்தர்ப்பத்தில் வெளிப்பட்டாக வேண்டும். வசைச் சொற்கள் ஆவேசத்தின், உணர்ச்சிக் கொந்தளிப்பின் உக்கிர வெளிப்பாடுகள். உணர்ச்சி என்று கிளர்ந்ததும் அது பொங்கி வெளிவர தொண்டையை முட்டுகிறது. உணர்ச்சி வேகத்தில் அவனால் அதை வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. கட்டுப் படுத்திக் கொள்வது உள்ளே விஷம்போல இறுகி கெட்டித்து மேலும் உடல்நல ரீதியான தொந்தரவுகளைத் தந்துவிடும். அவை அப்படி உக்கிர ரூபத்தில் வெளியேறுவதே ஓர் உடல்ரீதியான தொந்தரவு தான், என்றும் சொல்லலாம். உற்பத்தியானபின், அவை வெளியேறுவது நல்லது, என்று ஆகிப் போகிறது.

வசை ஒரு வாந்திபோல வெளியேறிய பின், எத்தனை அமைதி வருகிறது உள்ளே. நிறையப் பேர், வசையாடிய பிறகு மகா சாந்தியாகி விடுகிறார்கள். இவர்களா சற்று முன் இப்படி ஆவேசமாய்ப் பேசினார்கள், என்று ஆச்சர்யமாகி விடுகிறது.

வசைபாடுதல் மிருக நிலை. இயல்பு நிலை தான் அது. மனிதன் என்பவன் மேம்பட்டவன் என்று நினைத்துக் கொண்டாலும் சமய சந்தர்ப்பங்களில் அவனில் இருந்து மிருகம் வெளியே வந்து உருமி அடங்குகிறது. வாழ்க்கை எப்பவுமே நம் மனம் போல, ஆசைகள் போல, விருப்பங்கள் போல அமைவது இல்லை. நல்லதும் அல்லதும் கலந்ததான அனுபவக் கலவையே வாழ்க்கை. ஆகவே வாழ நமக்குப் பிடித்தும் பிடிக்காமலும் மாறி மாறி அமைகிறது. பள்ளியில் மதிப்பெண் குறைந்த பையனைப் பார்த்து, “போய் நலலாப் படிக்கிற பையனின் மூத்திரத்தைக் குடி” என்று திட்டுவதைப் பார்க்க முடியும்.

நமக்குப் பிடிக்காத விஷயங்கள், சம்பவங்களை, ஏமாற்றங்களை நாம் எதிர்கொள்ள நேர்கையில் மனது சோர்வடைகிறது. அல்லது ஆத்திரப்பட்டு குமுறுகிறது. வசைகள் தன்னைப்போல ஊற்றெடுத்து வெளிச் சிதறுகின்றன. கிராமப் பக்கங்களில் வசைகள் சரளமாக இயல்பாகவே புழங்குகின்றன. திருப்புகழைப் பாடப்பாட… என்பது போல, நிறையப் பேருக்கு வசையில் வாய் மணக்கிறது. ரொம்ப ரசித்து அனுபவித்து கெட்ட வார்த்தை பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். கோபம் என்று இல்லாவிட்டாலும் கேலியாகக் கூட வசைகள் புழங்குகின்றன. உறவுநிலை சார்ந்த ஆபாச வசைகள் சகஜமாக சிலர் வாயில் புகுந்து புறப்படுவதை கவனிக்க முடிகிறது. “போடா விருந்தாளிக்குப் பொறந்தவனே…” என்பார்கள். தாயின் கற்பைக் கொச்சைப் படுத்தும் வசைகள். ஒருவனின் பிறப்பை எள்ளி நகையாடும் வசைகள். மூத்தா பத்தினி, என்பன போன்ற சொலவடைகள்.

பக்கத்து வீடுகளோடு சண்டை போடும் ஆத்திரத்தில் உக்கிரப் படும் வசைகள். அதை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடுவதும் உண்டு. “உன்னைப் பத்தித் தெரியாதா?” என இவள் துவங்க, கூட்டம் கூடி, ஆவலுடன் தாங்கள் தெரிந்துகொள்ளக் காத்திருக்கும்.

ஆத்திரப்படும் போது மனசின் அடியாழத்தில் கிடக்கும் வக்கிரங்களும், சில போது உண்மைகளும் வெளிப்படுகின்றன. உண்மையில் அந்த உண்மைகளே ரகசியமாக உள்ளே தங்க முடியாமல் முட்டிமோதி ஒரு குமுறலுடன் காத்திருந்து, முடியாமல், வசையென வெளியே பீறிடுகிறது, என்பதும் மறுப்பதற்கு இல்லை.

கிராமங்களில் சிலரை ‘கருநாக்கு’ என்று பயப்படுவார்கள். அவர்கள் எதாவது சொன்னால், யாரையாவது திட்டினால் அது பலித்து விடும், என்று நம்பினார்கள். அவற்றில் ஒன்றிரண்டு தற்செயல் போல பலித்தும் இருக்கும். அது பலிப்பது என்பது, அந்த நாக்கினால் என்பது சரியா தெரியாது. ஆனால் அதனால் பாதிக்கப் பட்டவர் மனநிலை சீர் குலைந்து அவரே ஒடுங்கிப் போயிருக்கலாம். யாராலும் இவற்றை விளக்கிப் பேச இயலாது.

இப்படி வசைகள் சில சமயம் புகழ் போல பரிமாறப் படும். என்றாலும் அதை வெளிப்படுத்திய விதம், அதைச் சொல்லும்போதான ஆத்திரம், பல் கடிப்பு அவர்களின் நோக்கத்தைக் காட்டித் தந்துவிடும்.

என்மேல் கோபப் பட்ட ஓர் பெண் அதிகாரி நினைவு வருகிறது. அப்படி அவர் வெளிப்படுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவரது கோபத்தை சாந்தப் படுத்த நான் முயன்றேன். ஆனால் அவர் நேரே என்னிடம், “உங்க பொறுமை யாருக்கும் வராது. உங்க மேல புத்து வைக்கும்…” என்றாரே பார்க்க வேண்டும். என்ன ஆத்திரமான ஆவேசமான வெளிப்பாடு.

நான் அடுத்த கணமே அங்கிருந்து நகர நேர்ந்து விட்டது. சிலர் சமாதானம் ஆக மாட்டார்கள். அவரை சமாதானப் படுத்துவது, படுத்த முயற்சி செய்வது கால விரயம். மாத்திரமல்ல, அந்த சந்தர்ப்பத்தில் நாம் வசைகளை வாங்கிவர வேண்டும். இது தேவையற்றது.

நசைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு அவர்கள் தான் ஆத்திரப் படும்படி தன்னிடம் யாராவது நடந்து கொண்டால், “நீ நல்லா இரு. நல்லா இரு” என்று கையை உயர்த்தி ஆசிர்வதிப்பாராம். தன் வாயில் இருந்து ஆத்திரமூட்டும் சொற்கள் வராமல் அவர் பார்த்துக் கொள்ள கடைப்பிடிக்கும் உத்தி இது.

வசைகளை மனசளவில் உள்வாங்காமல் அதைக் கேட்டுத் திகைக்காமல் கடந்து போவது சிரமம்தான். என்றாலும் வேறு வழி இல்லை. அவை தீயவை. தீய பயக்க வல்லவை. அதற்கு இடங் கொடுக்கக் கூடாது.

வசைகளைப் பாவிக்கிறவர்கள் அறியாமல் செய்கிறார்கள் என்பதல்ல. அவர்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் அவற்றை வெளிப்படுத்துகிறார்கள். என்பதற்காக அது மன்னிக்கத் தக்கதாக ஆகிவிடாது.

சமூக வலைத்தளங்களில், முகநூல், டெலிகிராம், இன்ஸ்டாகிராம, டிவிட்டர் போன்றவற்றில் ஒரு கருத்து பகிரப்பட்டால் அதை ஒரு குழுவாக ஆபாசமாக எதிர்க்கருத்தை அதன் கீழேயே பகிர்கிறார்கள். அப்படிப் பகிர என்று அவர்களுக்குச் சம்பளம் என்றெல்லாம் கூட நடக்கிறது. (நம்ம நல்ல விஷயம் சொன்னாலே துட்டு கிடையாது. நம்ம ராசி அதுன்னு வைங்க.) எதிராளியை அவனது கருத்தின் கூர்மையை மழுங்கடிக்க வேண்டும், அவனது செயல்பாடுகளை, இயக்கத்தை முடக்க வேண்டும் என்கிற புத்தி அது.

பலமுறை முகநூலில் என் சாதி பற்றிய கெக்கலிகளை நான் சந்தித்து இருக்கிறேன். உருவக் கேலிகளை எதிர் கொண்டிருக்கிறேன். அரசியல் கருத்துகளை எதுவும் பதிந்தால் உடனே ஓர் எதிரலை ஆவேசமாகப் புறப்படுவதை முகநூலில் காண முடிகிறது. இப்படித்தான் இருக்கிறது வெளி உலகம்.

வசை பாடுதல் இலக்கியத்தையும் விட்டு வைக்கவில்லை. வஞ்சப் புகழ்ச்சி அணி என்கிற இலக்கிய வகையே இருக்கிறது. காளமேகப் புலவரின் ஒரு பாடல் நினைவு வருகிறது. காளமேகம் நாகைப்பட்டினம் என்ற ஊரில் போய் அங்கேயுள்ள சத்திரத்தில் தங்குகிறார். அதன் உரிமையாளர் பெயர் சாத்தான். கஞ்சன். சத்திரத்தில் தங்குகிற யாருக்கும் உணவு அளிக்காமல் அந்தப் பணத்தைத் தானே எடுத்துக் கொள்ளும் கெடுமதியாளன். காளமேகம் வந்தபின்னும் சத்திரத்தில் உணவு தயாரிக்கும் வேலையே துவங்கவில்லை. காத்திருந்து பார்த்துவிட்டு காளமேகம் கிளம்பி விடுவார், என அவன் எதிர்பார்த்திருக்கலாம்.

காளமேகம் கிளம்புவதாய் இல்லை. பிறகு வேண்டா வெறுப்பாகச் சமையல் செய்து, காலம் தாழ்த்தி அவருக்கு உணவு படைக்கிறான் காத்தான். அதுகுறித்து கோபமாய் காளமேகம் ஒரு பாடல் எழுதுகிறார்.

“கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்

அத்தமிக்கும் போதில் அரிசிவரும் குத்தி

உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்

இலையிலிட வெள்ளி எழும்.”

இந்தப் பாடலைக் கேட்ட மாத்திரத்தில் சத்திரக்காரன் நடுநடுங்கிப் போனான். வந்திருப்பது ஆசுகவி காளமேகம் என்று அவனுக்குப் புரிந்துவிட்டது. “ஐயா உங்கள் மகத்துவம் அறியாமல் பிழை செய்து விட்டேன். என்னை மன்னிக்க வேண்டும். தயவுசெய்து என்னைத் தூற்றாமல் நல்ல வார்த்தையில் பாடிவிட்டுப் போக வேண்டும்” என வேண்டிக்கொண்டான்.

காளமேகம் சிரித்துக் கொண்டே, “உன்னை வாழ்த்திப் பாடியதாகவே இதை வைத்துக் கொள்,” என்றாராம். பிறகு அதற்கு இப்படியொரு மாற்று விளக்கமும் சொன்னார் என்று செவிவழிக் கதை உண்டு.

சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் அரிசு வரும் – என்றால், ஊரே பஞ்சத்தில் அத்தமித்து இருந்தாலும் அங்கே அரிசு வரும், என்று பொருள். குத்தி உலையிலிட ஊர் அடங்கும் – என்றால் ஊர் பசி அடங்கும், என்று பொருள். ஓரகப்பை அன்னம் இலையிலிட வெள்ளி எழும் – என்றால் அந்த அன்னத்தின் வெண்மைப் பளீருக்கு வெட்கப்பட்டு சூரியனே பதுங்கிக் கொள்ளும், என்று பொருள் விளக்கம் தந்தாராம் காளமேகம்.

என்னுடன் வேலை பார்த்த ஓர் அன்பர். அந்தக் கால டி. லிட் படித்தவர். இதே பாடலுக்கு இப்படியொரு விளக்கம் சொன்னது நினைவு வருகிறது.

எல்லாச் சொற்களுக்கும் இதே இகழ்ச்சிப் பொருள்தான். ஆனால் கவிதைக்கு “அந்தச் சத்திரத்தில் 24 மணி நேரமும் உணவுப் பந்தி உண்டு” என்று விளக்கம் சொன்னார். அழகு!

முகநூலிலோ வேறு பொதுத்தளங்களிலோ பின்னூட்டங்கள் சில சமயம் நிலைகுலையச் செய்கின்றன. அதை ஒன்றும் செய்வதற்கு இல்லைதான். தரக் குறைவாகப் பேசுகிறவர்களிடம் வாதம் செய்ய எதுவும் இல்லை. நமக்கு வேறு வேலைகள் உள்ளன.

பிறிது மொழிதல் அணி, வேற்றுப் பொருள் வைப்பணி, வஞ்சப் புகழ்ச்சி அணி… இவை போலவே முக்கியமான ஓர் இலக்கிய வகைமையாக ‘அறம் பாடுதல்’ என பிரிவு ஒன்று இருக்கிறது. எப்போதிருந்து இது புழக்கத்துக்கு வந்தது தெரியவில்லை. புலவர்கள் அறம் பாடினால் பலிக்கும் என்கிற பயம் எப்போதும் என்றென்றைக்கும் உண்டு.

அறம் பாடும் வகைமையை ‘கலம்பகம்’ என இலக்கியத்தில் குறிப்பிடுகிறார்கள். வளவ.துரையன் தன் ‘திண்ணை’ இதழ்க் கட்டுரையில் கலம்பக வகைமை பற்றி எழுதி யிருக்கிறார்.

‘‘கலம்பக நூலில் தேவர்க்கு நூறும், மறையோருக்குத் தொண்ணூற்றைந்தும், அரசர்க்குத் தொண்ணூறும், அமைச்சர்க்கு எழுபதும், வணிகர்க்கு ஐம்பதும், வேளாளர்க்கு முப்பதும் பாடுவது மரபாகும். கலம்பக நூலின் இலக்கணத்தைப் பன்னிரு பாட்டியல், வச்சணந்திமாலை, இலக்கண விளக்கம் முதலிய நூல்களில் பார்க்கலாம். நந்திக் கலம்பகம் கலம்பக நூல்களுக்கு முதல் நூலாகக் கருதப் படுகிறாது. எனவேதான் இந்நூலில் ஒரு சில உறுப்புகளே அமைந்துள்ளன.” (வளவ.துரையன்.)

நந்திக் கலம்பகத்தை எழுதிய புலவர் பெயர் தெரியவில்லை. பல்லவ மன்னனான நந்திவர்மனை நிந்தித்து, அவர் ஆட்சிக்கு வந்த முறைமையில் அதிருப்தியடைந்து இந்நூல் பாடப் பட்டதாகத் தெரிகிறது. துறவி ஒருவர் இயற்றி, அவர் வீதிவழி போகையில் பாடிக்கொண்டே போக அதில் மனதைப் பறிகொடுத்த தாசி ஒருத்தி அடிக்கடி நந்திக் கலம்பகப் பாடல்களைப் பாடிவந்ததாகவும், அதன் மொழியழகில் மனதைப் பறிகொடுத்த அரசன் நந்திவர்மன் அந்த தாசிமூலம் விசாரித்தறிந்து துறவியை அழைத்து அவரைத் தன் காதுபட ‘கலம்பகம்’ பாடச் சொன்னதாகவும் கதை உலவுகிறது.

தென்னையோலைப் படுக்கையில் படுத்தபடி மன்னன் தன்னைப்பற்றிய கலம்பகப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே, அவர் பாடப்பாட ஓலை தீப்பற்றி யெரிய இன்னுயிர் ஈந்தான்.

நந்திக் கலம்பகத்தின் பின்பகுதிப் பாடல்கள் கேட்க நமக்கே பதற்றம் ஏற்படுகிறது. அதில் ஒரு பிரபலமான பாடல் இது.

“வானுறு மதியை அடைந்ததுன் வதனம்

மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி     

கானுறு புலியை அடைந்ததுன் வீரம்

கற்பகம் அடைந்ததுன் கரங்கள்

தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்

செந்தழல் அடைந்ததுன் தேகம்

நானுமென் கலியும் எவ்விடம் புகுவேம்

நந்தியே நந்தயா பரனே.”

 

இதன் பிற்காலப் பாடல்களில் நந்திவர்மன் தென்னையோலை தீப்பற்றி எரிய இறந்த வரலாற்றுக் குறிப்புகளும் கிடைக்கின்றன. ஆனால் நந்திக் கலம்பகம் எழுதியவர் பெயர் தெரியவில்லை. தான்சேன் பாடல் பாடி விளக்கில் தீபத்தை ஏற்றிய கதை அறிந்திருக்கிறோம். இது ஒரு மனிதனையே, அரசனையே எரியூட்டுவது… என்பது துணுக்குற வைப்பதுதான்.

சொல் விளையாட்டுச் சித்தர்கள், லா.ச.ரா.வும, தி.ஜானகிராமனும் அறம் பாடியது பற்றியோ, வார்த்தைஅக்னியைக் கொட்டியோ கதைகள் தந்திருக்கிறார்களா? கடுமையான உரையாடல்கள் பார்க்க முடியும். பொறாமையில் முழு அண்டா பாயசத்தைக் கல்யாண வீட்டில் கவிழ்த்தலாம். அவை தன்நெஞ்சின் வேக்காட்டைச் சொல்கிறவை. ஆனால் அறம் பாடினார்களா?

ஒருவேளை அவர்கள் யோசித்து, தவிர்த்திருக்கலாம்.

இந்தக் காலத்தில் அறம் பாடிய சம்பவம் ஒன்று நடந்ததாக ஜெயமோகன் ஒரு சிறுகதையில் சொல்கிறார். அது நடந்த சம்பவம் என்று அந்தக் கதையை ஜெயமோகனுக்கு அந்த எழுத்தாளரே, அது தன் கதையாகவே சொல்கிறார். ஊர் அடையாளங்களும், அந்தக் கதையில் பெயர் வரும் பிற எழுத்தாளர்ளும் சொந்தப் பெயரிலேயே வருகிறார்கள். சரிச்சான்குஞ்சு, வெங்கட் சாமிநாதன்… இப்படி.

கதையின் பெயர் ‘அறம்.’ அவர் போய்ச் சந்தித்த எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராம். எம்.வி. வெங்கட்ராம், தான் அறம் பாடிய கதையைச் சொல்வதாகக் கதையமைப்பு. சமீபத்திய கதைதான். சுவாரஸ்யமான கதை. இணையத்தில் கூட வாசிக்கக் கிடைக்கிற கதைதான். தஞ்சைப் பின்னணியிலான கதை என்பதால், எம்.வி. வெங்கட்ராம் பேச்சில் இடையிடையே காம ரசனை, சுய கிளுகிளுப்பு வெளிப்படுகிறது. சக எழுத்தாளர்களே அதில் கெட்ட வார்த்தைகளுடன் புழங்கிப் போகிறார்கள்.

சூடு ஒரு ருஜி. சிவப்பு ஒரு அழகு, என்பது தஞ்சைப் பக்கத்துச் சொலவடை.

ஜெயமோகனிடம் முதலில் அவர் தான் அறம் பாடிய கதையைச் சொல்லவில்லை. கூட இருக்கிற அவரது சிநேகிதர் சாமிநாது (வெங்கட் சாமிநாதனாக இருக்கலாம்.) அதைச் சொல்லச் சொல்கிறார். ஜெயமோகனிடம் அதைப் பரிமாற இவர், சாமிநாது ஏன் நினைக்க வேண்டும், தெரியவில்லை.

வறுமையின் கொடும் பிடியில் இருக்கும் எழுத்தாளர், ஒரே ஆண்டில் பாடப் புத்தக வகையாக 100 புத்தகங்கள், பல வேறு புத்தகங்களை வாசித்து விவரங்களைக் கோர்த்து எழுதித்தர வேண்டும், 

புத்தகம் ஒன்றுக்கு அந்தக்கால மதிப்பில் 50 ரூபாய் சம்பளம். சன்மானம் அல்ல, சம்பளம். இருந்த வறுமையில் எழுத்தாளர் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றி விடுகிறார். மொத்தப் பணமும் என்னிடம் இப்போது தர வேண்டாம். சின்னச் சின்னச் செலவுக்கு என்று அவ்வப்போது வாங்கிக் கொள்கிறேன், பணம் பதிப்பாளரிடமே இருக்கட்டும், என்று வேண்டிக் கொள்கிறார் எழுத்தாளர். அப்பாவி. நல்ல மனிதர்.

சில்லறை சில்லறையாக வரவேண்டிய ஐந்தாயிரத்தில் இரண்டாயிரம் வாங்கி யிருக்கிறார். பாக்கித்தொகை மூவாயிரம் பதிப்பாளரிடம் உள்ளது.

பெண்ணுக்குக் கல்யாணம். பணம் தேவைப் படுகிறது. பதிப்பாளரைப் பார்த்துப் பணம் கேட்கிறார் எழுத்தாளர்.

இந்நாட்களில் அவர் எழுதிக் கொடுத்த புத்தகங்கள் மீண்டும் மீண்டுமாக பல பதிப்புகள் கண்டுவிட்டன. பதிப்பாளரின் அலுவலக அறை முழுசும் கட்டு கட்டாகப் புத்தகங்கள் அடுக்கிக் கிடக்கின்றன. மேலும் மேலும் கடன் வாங்கி முதலீடு செய்து புத்தக வெளியீட்டை பல மடங்கு பெருக்கி விட்டார் பதிப்பாளர். வீடு வாசல் பெருகி யிருக்கிறது பதிப்பாளருக்கு.

பதிப்பாளர் இதுநாள் வரை எழுத்தாளர் வரும் போதெல்லாம் சிறு தொகை, கிள்ளிக் கொடுத்தாற் போலக் கொடுத்து வந்தவர். இப்போது பெருந்தொகை, அதுவும் ஒரே தவணையாகக் கேட்கிறபோது, பணருசி அனுபவித்து விட்ட பதிப்பாளருக்கு அதைத் தர மனம் இல்லை. ஒரே தவணையாகத் தரவும் அவரிடம் பணம் இல்லை.

“இவ்வளவு பாக்கியா நான் தர வேண்டும்? இல்லவே இல்லை. வேணுமானால் எழுநூறு தருகிறேன். மொத்தக் கணக்குக்கு வாங்கிட்டுப் போங்க” என்கிறார். அவர் இந்தத் தொழிலை நம்பி ஏராளமாய்க் கடன் வாங்கி யிருக்கிறார். அவருக்கு தான் போட்ட முதல் தான் மனதில் தெரிகிறது. அந்த வருமானத்தின் அடிப்படை இந்தப் புத்தகங்கள் என்று மனதில் தோன்றவே இல்லை.

தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக எழுத்தாளர் திகைத்துப் போகிறார். கல்யாணம் நடக்கக் காத்திருக்கிறது. இந்நேரம் பணம் வேண்டும். அவசரமாக, அவசியமாக வேண்டும். எழுத்தாளர் இந்தப் பணத்தையே நம்பி யிருந்தார். இப்போது அத்தனை பணம் தருவதற்கு இல்லை, என பதிப்பாளர் மறுக்கிறார். தன்னை ஏமாற்றுகிறார் பதிப்பாளர், என்று நினைக்க அவருக்கு ஆத்திரம் வருகிறது.

வெட்கத்தை விட்டு கைகூப்பிக் கெஞ்சியும், காலில் விழுந்துமே கூட முதலாளி மனம் இரங்கவில்லை. அவரது கல் நெஞ்சு கரையவே இல்லை. காதுகூசும் வசைகளை வீசுகிறார் பதிப்பாளர். ஒருநாள், மறுநாள் என்று திரும்பத் திரும்ப எழுத்தாளர் பதிப்பக அலுவலகம் நோக்கி நடையாய் நடக்கிறார். பயன் இல்லை. மனம் பேதலித்த நிலையில் செய்வதறியாமல் அவர் பதிப்பாளர் வீட்டை நோக்கி நடக்கிறார்.

அங்கே பதிப்பாளரின் மனைவி, ஆச்சி தன் இடுப்புக் குழந்தைக்கு (அது பக்கத்து வீட்டுக் குழந்தை என்கிறார் எழுத்தாளர்.) இட்டிலி ஊட்டிக் கொண்டிருக்கிறார். கண்கள் நிரம்பி வழிய கைகூப்பி நிற்கிறார் எழுத்தாளர்.

“என்ன புலவரே…” என்று கேட்கிறார் ஆச்சி.

இனி ஜெயமோகன் கதை வார்த்தைகள் இவை…

அவளுக்குப் பெரிசா ஒண்ணும் தெரியாது. எழுத்து கூட்டத் தெரியும். அவ்ளவுதான். நான் கைகூப்பிட்டு இந்தமாதிரின்னு சொன்னேன். அவசிட்ட சொல்லி செட்டியார்கிட்ட சொல்ல வைக்கணும்னுதான் போனேன். ஆனா சொல்லச் சொல்ல எங்கிருந்தோ ஒரு வேகம் வந்திச்சு. உடம்பே தீயா எரியறது மாதிரி. கைகால்லாம் அப்டியே தழலா நெளியற மாதிரி… ‘நான் சரஸ்வதி கடாட்சம் உள்ளவன்’னு சொன்னப்ப அப்டியே சன்னதம் வந்திட்டது. என் குரல் மேலே போயிடுச்சு. அதுக்கும் மேலே நான் செஞ்சதெல்லாம் எப்டி செஞ்சேன்னு இன்னிக்கும் எனக்கு ஆச்சரியம்தான். ‘என் வயித்திலே அடிச்ச நீயும் உன் பிள்ளைகுட்டிகளும் வாழ்ந்திடுமா… வாழ்ந்தா சரஸ்வதி தேவ்டியான்னு அர்த்தம்’னு சொல்லிட்டே சட்டுன்னு பேனாவ எடுத்து ஒரு வெண்பாவை எழுதி அவ தட்டிலே இருந்த இட்டிலியை எடுத்து பூசி அவ வீட்டு கதவிலே ஒட்டிட்டு வந்திட்டேன்.

அந்தக் கவிதை வரிகள் இப்போது எழுத்தாளருக்கு நினைவு இல்லை. அறம் பாடிய வெண்பாவின் கடைசி இரண்டு வரிகள் மாத்திரம் இப்போது எழுத்தாளருக்கு ஜெயமோகனிடம் சொல்ல நினைவு வருகிறது.

‘செட்டி குலமறுத்து செம்மண்ணின் மேடாக்கி எட்டி எழுக வென்றறம்.’

பிறகு அந்த அம்மாள் பாத்திரம் விஸ்வரூபம் எடுக்கிறது. அவள் ஆவேசமாக செட்டியாரிடம் போய் எழுத்தாளர் சார்பாக அழுத்தம் தருகிறார். அந்தத் தீர்மானம், பிடிவாதம், செட்டியாரைப் பிடித்த பிடி வலுவானது. செட்டியார் பயந்து போய்ப் பணிகிறார். பொதுவாகவே செட்டியார் குலத்தில் பெண்கள் சற்று அதிக சூட்சுமமாகவும் வீரியமாகவும் செயல்படுவதைக் காண முடியும். அதை சரியான அளவில் ஜெயமோகன் சுட்டிக் காட்டுகிறார்.

எழுத்தாளருக்கு பாக்கித்தொகை பைசல் பண்ணப் படும்வரை அந்த அம்மாளின் சத்தியாகிரகம், பிடிவாதம் விலகவில்லை.

எழுத்தாளரின் மகள் திருமணத்துக்கும் பதிப்பாளர் வந்திருந்து வாழ்த்தி சிறப்பு செய்துவிட்டுப் போகிறார்.

ஆச்சி கல்யாணத்துக்கு வந்தாரா, விவரங்கள் கதையில் இல்லை.

கதை மெல்ல படத்தைக் கீழே போட, எழுத்தாளர் ஆச்சியைத் திரும்பப் போய் சந்திக்கிறார். அந்தப் பகுதி, மீண்டும் ஜெயமோகனின் வரிகளில்…

வீட்டுக்குள்ள நுழைஞ்சதுமே கையைக் கூப்பிட்டு என் பக்கத்துல வந்து நின்னா ஆச்சி. ‘புலவரே உங்க வாயாலே என் குலத்த வாழ்த்தி ஒரு பாட்டு பாடிட்டு போகணும். என்ன தப்பு பண்ணியிருந்தாலும் மன்னிக்கணும். லட்சுமி வருவா போவா… சரஸ்வதி ஏழு சென்மம் பாத்துத்தான் கண்ணு பாப்பான்னு சொல்லுவாங்க… நீங்க பெரியவரு… என் வீட்டு முற்றத்திலே நிண்ணு கண்ணீர் விட்டுட்டீங்க… அந்த பாவம் எங்க மேலே ஒட்டாம உங்க சொல்லுதான் காக்கணும்‘னு சொன்னா. என்னா ஒரு சொல்லு. தங்கக்காசுகளை எண்ணி எண்ணி வைக்கிறா மாதிரி… முத்துச்சரம் மாதிரி… நாமளும்தான் ஒருபாரா எழுதறதுக்கு நாலுவாட்டி எழுதி எழுதி பாக்கோம். நிக்க மாட்டேங்குது. சரஸ்வதி கடாட்சம்னா என்ன? மனசிலே தீயிருந்தா அதுவந்து உக்காந்தாகணும். அதான் அவளோட விதி… மத்ததெல்லாம் சும்மா… என்ன சொல்லிட்டிருந்தேன்? எனக்கு கைகால் ஓஞ்சு போச்சு. நாக்கு உள்ள தள்ளியாச்சு. அப்டியே நாக்காலியிலே தலைகுனிஞ்சு ஒக்காந்திருக்கேன். அவளை ஏறிட்டு பாக்க முடியலை. அவ காலையே பாக்கிறேன். காலிலே மெட்டி. அதுக்கு ஒரு ஐஸ்வரியம் இருக்கு. அது வீட்டுக்குள்ள இருக்கிற பெண்களின் ஐஸ்வரியம். நாடாளறதுக்குதான் தர்மம்னு எவன் சொன்னான்? தர்மம் இருக்கிறது வீட்டிலே அய்யா. தர்மபத்தினின்னு சும்மாவா சொன்னாங்க. சட்டுன்னு வெண்பா வந்துட்டுது. சடசடன்னு பேப்பரை எடுத்து எட்டு பாட்டு எழுதிட்டேன். அத ஆச்சி கையிலே குடுத்தேன். ரெண்டு கையாலே வாங்கி கண்ணுலே ஒத்திக்கிட்டா.

வாழ்த்திப் பாடிய வெண்பாக்கள், அவையும் மனசில் இல்லை இப்போது எழுத்தாளருக்கு என்றாலும் முதல் வரி, அது நினைவில் உள்ளது.

“மெட்டிஒளிசிதற மெய்யெல்லாம் பொன்விரிய செட்டி குலவிளக்கு செய்த தவம்.”

அறம் பாடிய பாடலின் ஈற்று வரிகளும், வாழ்த்தின் முதல் வரிகளும் நினைவில் நின்ற மாயம் என்னவோ.

கதையை எழுத்தாளர் ஒரு சகஜ உரையாடலின் போது ஜெயமோகனிடம் சொல்கிறார். இந்தக் கதை எழுதப்படும் போது எழுத்தாளர் உயிருடன் இல்லை. தன் வாழ்வின் இந்த சம்பவத்தை ஜெயமோகன் கதையாக அமைக்க எழுத்தாளர் சம்மதம் தெரிவித்தாரா தெரியவில்லை. ஏனெனில் தன் வாழ்வின் திருப்புமுனை என எழுத்தாளர் விவரிக்கிற இந்த சம்பவத்தை அவரே கதையாக எழுதவில்லை.

புதுமைப்பித்தன் காலமான பிறகு தொகுப்பில் வெளிவராத அவரது கதைகளையும் சேர்த்து புத்தகம் வெளியிட்டார்கள். அந்தக் கதைகளை புதுமைப்பித்தன் தானே, தொகுப்புக்கு வேண்டாம், என தவிர்த்திருக்கலாம் அல்லவா? அவற்றை இப்போது தொகுத்து வெளியிடுவது அவருக்கு எவ்வகையிலும் பெருமை சேர்க்காதே என்று நினைக்க வைத்தது அந்தச் செயல்.

அறம் பாடத் தெரியாத கண்ணகி சீற்றம் தணியாமல் இடது முலை திருகி மதுரையை எரிக்கிறாள்.

எப்படி யெல்லாம் புனைவு செய்கிறார்கள்!

நான் கவிஞன் அல்ல, என்றுவிட்டு எம்விவி அறம் பாடுகிறார். அதுவரை வெண்பா இலக்கணம் பற்றி அவரும் கரிச்சான்குஞ்சுவும் பேசிக் கொள்வார்களாம். அவ்வளவே. இகழ்ந்து ஒரு வெண்பா. வாழ்த்தி எட்டு. அந்த நல்ல மனம் வாழ்க.

ஆச்சியைப் பார்க்கப் போனவர், தற்செயலாக சட்டைப்பையில் பேனா வைத்திருந்திருக்கலாம். ஆனால் வெண்பா எழுதி வீட்டுக் கதவில் ஒட்ட, காகிதம் எப்படிக் கிடைத்ததோ?

கதையின் வேகப் பாய்ச்சலில் இதை நியாயப் படுத்துவதை கதையாசிரியர் தவிர்த்திருக்கலாம்.

ரகசிய போலிஸ் 115, என்று எம்ஜியார் படம். அதன் முதல் காட்சியில் எதிரி நாட்டுக்குள் உளவு பார்க்கப் புகுந்து, எதிரிகள் துரத்த மாட்டிக் கொள்ளாமல் காடு மலை ஏரி என போக்கு காட்டி தப்பித்து, ஒரு வேலி தாண்டிக் குதிப்பார் எம்ஜியார். அங்கே சுவரில் ‘இந்திய எல்லை’ என்று “தமிழில்” எழுதி யிருக்கும்.

படம் பார்க்கிறவனுக்கு புரிஞ்சாப் போதுமே. அதுக்கு மேல எதுக்கு ரொம்ப லாஜிக்? தேவை இல்லை.

எழுதப் படிக்கத் தெரியாத ஆச்சியிடம் இப்படி வீராவேசம் சரிதானா?

அந்த அம்மா இவரைக் கண்டு கொள்ளாமல் விட்டு, பதிப்பாளர் வீடு திரும்பி சுவரில் கவிதையைப் பார்த்தால், எழுத்தாளரின் கதி என்ன?

கதையில் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு இட்டிலி ஊட்டுகிறார் ஆச்சி. அவருக்குக் குழந்தை இல்லை, என்று குறிப்பால் சொல்கிறாரா ஆசிரியர்?

கதையில் ஆச்சி பெறும் தர்மாவேசம்… எம்விவி கதை போலவே உள்ளதே காட்சியமைப்பு.

அறம் பாடுதல், பற்றிய சுவாரஸ்யமான கதை. நாகர்கோவிலில் இருந்து, கும்பகோணம் டிகிரி காபி.

 

Comments

Popular posts from this blog