2006ம் ஆண்டு தமிழக அரசு பரிசு பெற்ற நாவல்
நீர்வலை
எஸ்.சங்கரநாராயணன்
7
சிவாஜி வாங்கிவந்ததாகப்
புத்தாடைகளைக் கமலாவுக்குத் தரவேண்டும் என கிருட்டினமணி மனசுக்குள் யோசனை வைத்திருந்தான்.
சிவாஜியோ அதைவிட சுலபமாக குழந்தை மனசைப் படித்துவிட்டான்... கிருட் டினமணிக்கு அதில்
ரொம்ப சந்தோஷம்.
பரபஸ்பர நம்பிக்கையும்
புரிந்துகொள்ளலுமான உலகம் எளிமையானது. அழகுகள் வந்தமரும் பிரதேசங்கள். சமவெளிப் புல்வெளி,
குளிர் தென்றல், நிலா, சிந்திக் கிடக்கும் பூக்களின் வண்ணக் கொலு. காலில் சிறு குளிர்
தடவத் தடவ நடந்து போகிறாப் போல... வாழ்க்கை சிக்கலற்று உனக்குக் கிடைக்கிறது.
பிரச்னைகள் அற்றது
வாழ்க்கை என்பதல்ல. அதை வெல்ல ஒரு துணை, பிரியப்பட்ட ஒரு வட்டம்... அது ஒவ்வொரு மனிதனுக்கும்
கட்டாயம் தேவையோ தேவை.
கமலாவை உட்காரவைத்து
வாசல் பூவரச மரத்தடியில் ஊஞ்சல் கட்டி ஆட்டிவிட்டான் சிவாஜி. சிறு உயரம் எழும்ப அடிவயிற்றில்
குளிராய் ஒரு பயம். மடல்கள் சிலிர்க்கின்றன. சட்டென்று அலை பின்வாங்கினாப் போல ஊஞ்சல்
கீழிறங்குகிறது. காலால் உந்தி தானே ஆடமுடியாத உயரம்.
வேகம் இன்னும்
வேகம், என்கிறது குழந்தை...
வேணாம், நீ பயந்துக்குவே....
வேணும்- என்றது
குழந்தை.
''வேணாம்''
வேணும்... என்றது
அழுத்தமாய்.
வேகத்தை வேறு
வழியில்லாமல் அதிகரித்தான் சிவாஜி. பயந்துதான் கிடக்கிறது அதற்கு. என்றாலும் ஒத்துக்கொள்ள
முடியாத வீம்பு. குறைத்து விடச் சொல்லலாமா என உள்ப்பக்கம் எச்சரிக்கை.
'குறைச்சி ஆட்டவா?'
- என்கிற அவன் கேள்விக்கு ''இன்னும் வேகம்!'' - என்கிறது வாய் தன்னை அறியாமல்!
விர்ரென்று காற்றில்
சீறியது ஊஞ்சல். வெறிபிடித்த வேகம். ஐயோ, என பயத்தில் கயிற்றில் பற்றியிருந்த கையை
விட்டுவிட்டது குழந்தை. அப்படியே ஊஞ்சல் அவளை சண்டிக்குதிரையாய் உதறி வீசியது.
ரேஷன் கடையில்
சர்க்கரை நிறுத்துப் போட்டாப் போல!
கமலா கண்ணைத்
திறந்து பார்த்தால்...
சிவாஜியின் கைத்தாங்கலில்!
பயந்திட்டியா?
நீ இருக்கியே...
சிரித்தபடி அவன் மார்பில் சொகுசாய்ச் சாய்ந்துகொண்டது குழந்தை.
அப்ப திருப்பியும்
ஆடுவமா?
வேணாம்! - என்றது
குழந்தை!
பயம் இல்லைன்னு
சொன்னியே?
பயம் இல்லை!
அப்ப ஏன் வேணாம்?...
அவனும் விடவில்லை.
உனக்குக் கை
வலிக்குமே அண்ணே...
தனியே நினைத்து
நினைத்து சிரித்தபடியே அழுகிறான் சிவாஜி!
சிவஜோதி அரிசியைக்
களைந்து சமையல் பானையில் போட்டபடி எல்லாம் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு
சீக்கிரம் அவனோடு ஒட்டிக் கொண்டாள் இவள், என சிவஜோதிக்கு ஆச்சர்யம்.
அண்ணன் என்கிற
உறவும் அந்த வயசும்... இப்போதெல்லாம் போதும் ஒரு குழந்தை, என்று நிறுத்திக் கொள்கிறார்கள்.
அன்புப் பரிமாற்றம் என்கிற விஷயமே இல்லாமல் வளரும் குழந்தைகள்... பொறுப்பு சுமக்காத
குழந்தைகள்... தாய் தந்தையரிடமே கூட காலாவட்டத்தில் ஒட்டுதல் குறைந்து விடாதா?
கமலாவுக்கு அண்ணனை
முகநினைவு இருக்குமா தெரியவில்லை. ஆனால் சட்டென்று உள்ளே பூத்து இவனை ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.
அது தெரிகிறது!
கிருட்டினமணி
வெளியே போயிருந்தான். தினசரி லோடு என வேலை இருக்கும் என்று சொல்ல முடியாது அவனுக்கு.
சில சமயம் பெரிய பயணமாய் வட இந்தியா என்று கூட அமைந்துவிடும். ரெண்டு நாள் என லாரியில்
இருந்து இறங்காமல் போகிறாப்போல ஆகிப்போகும். தனிப் பயணம். கூட வேலைக்கென சிறு பையனும்
வைத்துக் கொள்ளவில்லை. பழைய சினிமாப் பாடல் களும், ரொம்ப ஏக்கமாய் இருந்தால் பர்சில்
கிடக்கும் குடும்பப் புகைப்படமும் பார்த்து ஆறுதல் கொள்ள வேண்டிதான்.
மனசு வேடிக்கை
பண்ணிக் கொண்டே வரும். தன்னைத் தானே உற்சாகப் படுத்திக் கொள்வான்...
நீ இல்லாத மாளிகையைப்
பார் மகளே பார்!...
ஏய்யா அவதான்
இல்லியே. என்னாத்தப் பாக்குறது? யார் பாக்குறது!... தூங்கறவனைப் பார்த்து தூங்கறியான்னு
கேட்ட கதையாட்டம்!
தங்கத்திலே ஒரு
குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ?
பாடிட்டாரு ஐயா.
செம்பு அதிகம் கலந்துட்டா, இவரு அதேவிலை குடுத்து வாங்கிட்டு வருவாராக்கும்.
பாவாடை தாவணியில்
''பார்த்த'' உருவமா... இவள் பூவாடை வீசிவர பூத்த பருவமா?
பாவி மாத்தி
எழுதறியே... பாவாடை தாவணி எப்படா போடும், பருவம் பூத்த பிறகு தானேடா?
மதுரையில் பறந்த
மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே...
கூடவே கோட்டை
அரண்மனைல்லாம் தெரியுதா பாரப்போவ்? செமினி கணேசா...
சாதாரணமாகப்
பேப்பர் செய்திகள் வாசிக்கிற பழக்கமே கிடையாது. டீக்கடையில் ஒதுங்கினால் காற்றுக்கு
பெஞ்சிமேல் விரிந்தும் சுருங்கியும் கிடக்கும். எடுக்கத் தோணுவதே இல்லை. யாராவது எடுத்து
விரிச்சிப் படிக்க ஆரம்பித்ததும் போய் எட்டிப் பார்க்கத் தோணுகிறது. அந்த ஆர்வத்தை
அடக்க முடிகிறதேயில்லை.
ஏன் அப்படி?
மனிதனின் விசித்திர குணங்கள். ஓட்டல் வாசலில் வாழைப்பழம் விற்கிறவன் வண்டி கட்டிக்
காத்திருப்பான். எவனும் வாங்க மாட்டான். திடுதிப்பென்று ஒருத்தன் வாங்கிறணும். தயங்கி
நின்னு வேடிக்கை பார்க்கிற ஆள் தன்னைப்போல பைத்துட்டை எடுத்து நீட்டி ஒரு பழம் வாங்கி
உரிச்சி வாய்ல போட்டுக்கறானப்பா. ஏல நீ சொந்தமாத்தான் சிந்திக்கப்டாதா?
ரோட்டோரத்தில்
எவனாவது குத்திட்டு உக்காந்திறப்டாது. நாட்ல அவனவனுக்கு பரபரங்கும். சின்ன முள், பெரிய
முள்ளாயிரும். ரெண்டு நிமிஷத்ல ஆறாப் பெருகி தெருவுக்கே ஓடி வந்துருது!
நாட்ல மழையே
பெய்யல்லியே, தெருவுல ஆறாப் பெருகி ஓடி வருதப்பான்னு அவனவனுக்கு ஆச்சர்யம்!
கேரளாவில் ஒருமுறை....
கிருட்டினமணிக்கு மலையாளம் தெரியாது. சும்மா ஊர் பார்க்க என்று காலாற ஊர்க்குள்ளே நடந்து
போய்க்கொண்டிருந்தான். பலூன் வியாபாரி ஒருவனிடம் நிறையக் குழந்தைகள், சுற்றிவளைத்து
பலூன் வாங்கிக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் ஒளிந்துகொண்டு பயந்து பயந்து ஒரு பிராந்தன்
(கிறுக்கன்) அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
வேடிக்கை என்னவென்றால்
அந்தப் பிராந்தன், எல்லாக் குழந்தைகளும் வாங்கிச் செல்வதைப் பார்த்ததும் தானும் ஒண்ணு
வாங்க நினைத்தான் உடனே. பைக்குள் சில்லரை கிடந்தது. எல்லாக் குழந்தைகளும் போகும்வரை
கூச்சத்துடன் காத்திருந்தான். சுற்று முற்றும் யாரும் இல்லையே என்று பார்த்தபடி அவன்
பலூன்காரனிடம் போய்க் காசை நீட்டினான்.
ஊதிய பெரிய பலூன்.
பைத்தியத்துக்கு
ஆனந்தம். குதியோட்டம் ஓடி தனியே... என்ன நடக்கிறது என்கிற சுவாரஸ்யத்தில் கிருட்டினமணி
அப்படியே நின்று விட்டான்.
அந்தப் பைத்தியம்
என்ன நினைத்தது... குழந்தைகள் எல்லாரும் விரும்பி வாங்கும் சாமான்... ஆகவே இது நல்லதொரு
தின்பண்டம்!
யாரும் பங்கு
கேட்டு விடுவார்களோ என்ற பயத்தில்...
தனியே போய்...
சந்தோஷமாய் பலூனை
ஒரு கடி...
படார் என்று
வெடித்தது பார் வெடி!
பைத்தியம் பயந்தலறி
ஓட ஆரம்பித்தது!
ஒருதரம் பின்னிரவில்
வீடுதிரும்பிக் கொண்டிருந்தான் கிருட்டினமணி. ரெண்டாவது திருப்பத்தில் கம்பியழி போட்ட
வீடு. சின்னக் குழந்தை ஒண்ணு. ஆறேழு வயசிருக்கும். மூச்சா அடிக்க என்று முழித்துக்
கொண்டிருந்தது. வாசல் கம்பியழி வழியாக ரோட்டுக்கு சர்ர் அடித்துக் கொண்டிருந்தது. அவன்
கடந்து போனான் அந்தக் குழந்தையை. ''டேய் மேல அடிச்சிறாதே!''
''அந்தப் பக்கம்
போகாதே...'' என்றது குழந்தை.
''எந்தப் பக்கம்?''
''அதோ புளிய
மரம்... அந்தப் பக்கம்...''
''ஏன்?''
''அங்க பேய்
இருக்கு...''
''யார் சொன்னா?''
''எனக்கே தெரியும்!''
அவனுக்குச் சிரிப்பு
வந்து விட்டது.
''பேயை நீ பாத்திருக்கியா?''
''இல்ல...''
''என்னைப் பாத்திருக்கியா?''
''இல்ல''
''பேயை உனக்குக்
காட்டவா...''
''ம்''
''பேயைப் பார்க்க
உனக்கு ஆசையா?''
''ம்''
''பார். நாந்தான்
பேய்! ப்ரூ-ஊஊஊ'' என்றான் கிருட்டினமணி.
அ...ம்...மா...
குழந்தை உள்ளே குடுகுடுவென்று ஓடியது.
கிருட்டினமணிக்கு
பதிலாக இப்போது சிவாஜி குழந்தை கமலாவைப் பள்ளிக்கூடம் அழைத்துச் சென்று விட்டுவிட்டு
கூட்டி வருகிறான். காலையில் அதன் உடைகளைத் தயாராய் எடுத்து வைக்கிறான். தண்ணீர் பாட்டிலை
நிரப்பி வைக்கிறான். சில அவசரங்களில், கொஞ்சிக் கொஞ்சி ஊட்டிவிடவும் அதற்கு வேண்டியிருந்தது.
என்ன அதிகாரம் செய்கிறது அவனை!...
தூக்கம் இமைகளை
அழுத்த வீடுவந்து சேரும் கிருட்டினமணியை 'அப்பா என்னைப் பள்ளிக்கூடம் கொண்டுவிடு...'
எனப் பிடிவாதம் பண்ணி மேலேறிக் கொள்வாள் கமலா. மறுக்க முடியாது. வாடி, அம்மா கொண்டு
விடறேன்... வர மாட்டாள். பரவால்ல குழந்தை ஆசைப்படுது, என கிருட்டினமணி குழந்தையைத்
தூக்கிக்கொள்வான்.
என்னமாச்சும்
குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டுக்கொண்டே வருவாள் கமலா. பதில் சொல்லி மாளாது.
அப்பா, கடல்
தண்ணி எப்பிடி உப்பாச்சுது?
தெர்ல.
அதுல யார் உப்பைக்
கொண்டு போட்டா? அதும் அவ்ள உப்பை?
எதும் உப்பு
லாரிக்காரன் குடி வெறில கடல்க்குள்ள விட்டுட்டாப்லியா... என்று தனக்கே தோன்றும்...
சிரித்தபடி, இதெல்லாம் உங்க வாத்தியார்ட்டக் கேளு புள்ள. பள்ளிக்கூடத்துக்கு துட்டு
கட்டறோம்ல? அவர் சொல்லட்டும் பதில் ... என்பான்.
சிவஜோதி சிரிப்பாணி
காட்டும் பாணி வேறுமாதிரி. பள்ளிக்கூடம் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்து பெருமையாய்ப்
பேசுவான் அவளிடம்.
நம்ம புள்ளைக்கு
ரொம்ப அறிவுடி...
ஆமா, நாந்தான்
கடனாக் குடுத்தேன், என்பாள்.
அப்டிக் குடுத்திட்டுத்தான்
நீ இப்பிடித் திண்டாடுறியாக்கும்?
என்ன பண்றது
உங்ககிட்ட வாங்கிக்கலாம்னா, உமக்கே பத்தல...
நான் ஒரு தப்புதான்
பண்ணினேன்... உன்னைக் கல்யாணம் முடிச்சது - என்பான். மத்தபடி நான் அறிவாளிதான்!
அப்ப அவ கேள்விக்கு
பதில் சொல்லுங்க பின்ன... என்பாள் விடாமல்.
தெக்கத்திக்காராளுக்கு
வாய்ச் சவடாலுக்கு வஞ்சனை கிடையாது! இத்தனைக்கும் பள்ளிக்கூடம்போய் பாடம்படித்து வந்த
அறிவு அல்ல அது. மண்ணின் சாராம்சம். தாம்பிரவருணி கிளர்த்திய உற்சாக ஊற்று. சதா சிரித்துக்
கிடக்கும் உள்மனப் பிரகாசம்.
ஒரு விசயம்டா
மாப்ளே. நீ கேள்விப்பட்டியா?
இல்லிங்க நான்
கோவில்பட்டி... என்பார்கள் இடக்காக.
தம்பிக்கு சொந்த
ஊர் இதா?
நான் அவ்ள பெரியாள்
இல்லிங்க, நமக்கு சொந்தமா வீடுதான்!
ஆஸ்பத்திரிக்கு
எப்பிடிங்க போவணும்?
வியாதியோடதான்...
என்பார்கள்.
வார்த்தைக்கு
வார்த்தை உவமை யெடுப்பும் பழமொழிகளும் கிண்டல் கேலிகளும் என வீடு சிரிப்பால் நிறைந்து
கிடந்தது.
ஜவுளிக்கடை நஷ்டப்பட்டால்
தினசரி முதலாளி பட்டுவேட்டி மாட்டித் திரிவான்!... என பழமொழி.
சிவாஜிக்கு ஆச்சர்யமாய்
இருந்தது. பெரும் எதிர்பார்ப்போ அதிர்ச்சியோ காணாத வாழ்க்கை... அப்படிக்கூட சொல்ல முடியாது.
அன்பைப் பிரதானப்படுத்தி, சகஜீவிகளை நேசிக்கிற எளிய வாழ்க்கை.
அண்ணா... என
நம்ப கமலா கையைப் பிடித்துக் கொள்கிறது எவ்வளவு மனசொட்டுதலாய் இருக்கிறது. வீட்டுவாசல்
பூவரச மரத்தில் ஒரு இலையைக் கிள்ளிச் சுருட்டி ஊதல் செய்துகொடுத்தான். ப்பீப்பீ....
என விடாத சத்தம். என்ன சத்தம் இது - அடிபட்ட பன்னி மாதிரி. வெகு சுவாரஸ்யமாய் ஊதினாள்
கமலா. மூச்சை அனுசரித்து, அதில் கீழ்ஸ்தாயி, மேல்ஸ்தாயி எல்லாம் எட்டிப்பிடித்து சினிமாப்
பாட்டின் சாயல் காட்டிக் கொடுத்தான்.
ஆச்சர்யம். காலில்
செருப்பில்லாமல் ஒருநாள் பள்ளிக்கூடம் போனாள் குழந்தை. இருந்த செருப்பு பிய்ந்து விட்டது.
டிரைவர் அண்ணன் ஊரில் இல்லை. அவன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடம்வரை போனான்....
அதுவரை மேல்ச்சட்டை கூட இல்லாமல் திரிந்தவன். தன் காலில் செருப்புக்குக் கவலைப்படாதவன்.
அதெல்லாம் எட்டாக் கனி என சட்டென மறந்தவன்... குழந்தை வெறுங்காலுடன் நிற்பதைப் பார்த்துவிட்டு,
பள்ளிக்கூடம் கொண்டுபோய் விட்டுவிட்டு, வரும் வழியில்... அழுதான்!
அழத்தெரியாது
எனக்கு - எனக்கு அழுகை வராது, என அதுவரை தனக்குள் நினைத்திருந்தவன்.
அண்ணன் இந்நாட்களில்
அவனை மணி மெக்கானிக்கிடம் வேலைக்குச் சேர்த்து விட்டிருந்தான்.
8
கிருட்டிணமணியைப்
பார்த்ததும் அவருக்கு உற்சாகம். ஏல எங்க உன்னை ஆளையே காணம் என்றார் மணி. வயதாகி விட்டதால்
இப்போது அவர் மேற்பார்வையோடு சரி. பவுன் கண்ணாடி. தூய கதர்ச்சட்டை, கதர்வேட்டி. மீசையெடுப்பு
ஓரங்களில் நரை கண்டிருந்தது. சிவப்புக்கல் மோதிரம் போட்ட விரலை ஆட்டி ஆட்டிப் பேசுவது
தர்பாராய்த்தான் இருந்தது.
'ஐயா ஒரு விண்ணப்பம்...'
என்கிறான் கிருட்டினமணி பவ்யமாய்.
'என்னடா புதிர்
போடறே... தம்பி ஆரு?'
டேய் வணக்கம்
சொல்லுடா... என்று முழங்கையால் இடித்தான் கிருட்டினமணி. 'நம்ப பையன்தாங்க. 'திக்கு
திசை தெரியாமல் திண்டாடிட்டிருந்தாப்டி. கூட்டி வந்திட்டேங்க'
'எந்தூர்டா ஒனக்கு?'
'அரசம்பட்டி...'
'அப்பா அம்மா
இல்லிங்க...' என்று கிருட்டினமணி எடுத்துத் தருமுன், 'நீ சும்மார்றா. அவன் பேசட்டும்...'
'அப்பா அம்மா
இல்லிங்க...' என்றான் சிவாஜி. 'அண்ணன்தான் உண்டு...'
'அண்ணன் என்ன
செய்யிறாரு...'
'லாரிடிரைவர்'
என்றான் நெகிழ்ச்சியுடன்.
'எலேய் நம்ப
கிருட்டினனைச் சொல்றியாக்கும்...'
'ஆமங்க ''மு
த லா ளி''...' என்றான் மேலடியாய்.
'எலேய் என்னைச்
சொல்றியா...' என்று சிரித்தபோது மீசையின் அடர்த்திக்குள்ளிருந்து பல் தெரிகிறது.
'சரியான ஆளைத்தான்
கூட்டியாந்திருக்கே... கையைக் காலைக் கழுவிட்டுச் சாப்பிட வாங்க... ஏலேய் கூட ரெண்டாளுக்குச்
சோறு கிடக்குமா?' என்கிறார் உட்பக்கம் திரும்பி.
'ஐய அதுக்கென்னங்க...
பத்தாட்டி வெச்சிக்குவம். சாம்பார் சோறு உண்ணுங்குள்ளாற ஆக்கி இறக்கிக்கலாம்...' என்று
உள்ளிருந்து சொன்னவர் சமையல்காரர் போலிருந்தது.
பெரிய ஷெட்தான்.
நிறையப் பேர் பெருகியிருந்தார்கள். சின்னவரும் பெரியவருமாய். லாரிகள் பஸ்கள் என நாலைந்து
நின்றன.
'வா. கை கால்
கழுவிக்கலாம்...' என கிருட்டினமணி உள்ளே கூட்டிப் போனான். வேலை திகைந்த மாதிரித்தான்
அப்பவே சாயல் தட்டியது. 'ஐயாகிட்ட வந்திட்டா சாப்பிடாமப் போகக் கூடாது. அவருக்குக்
கோபம் வந்துரும்...' என்றான் கையைக் குழாய்த் தண்ணீரில் நீட்டியபடியே.
- கூடிய விரைவில்
தேர்தல் கீர்தல் எனக் கனவுகள் முதலாளிக்குக் கிளைக்கலாம்... என்று தோன்றியது சிவாஜிக்கு.
எதும் சொல்லவில்லை.
கிருட்டினமணிக்கு
அங்கே நல்ல மதிப்பு இருந்தது. எல்லாரும், அவன் அழைத்துவந்த ஆள், என்று இவனிடம் பிரியத்துடன்
நடந்து கொண்டார்கள். எல்லாரும் இயல்பாகவும் சுதந்திரமாகவும் நடமாடினாப் போலத்தான் தெரிந்தது.
ஆனால் முதலாளியின் கண் அவர்கள் முதுகில் தொடர்ந்தாப்போலவே அடக்கமாய் அங்கே வளையவந்தது
பிடித்திருந்தது. ஒரு சிறு அநாவசியச் சத்தம் கிடையாது. நடுவில் பள்ளம் விட்டு தண்ணீர்க்
குழாய். ஜேக். பஸ்ஸை நிறுத்தி அடிப்பாகத்தில் கழுவ முடிந்தது... ஸ்கூல்ப் பிள்ளைகள்
செட்டா வானத்தைப் பார்க்க தூ-ஊ-க்கி ஒண்ணுக்கு அடித்து விளையாடும். அதுபோல... கீழ்ப்பக்கம்
இருந்து விளக்கு வெளிச்சம் பாய்ச்சி மராமத்து வேலைகள் பார்க்க முடிந்தது.
ஒரு பஸ் விபத்தாகி
வந்திருந்தது போல. சப்பிய அதன் 'பாடி'யை நெளிசல் எடுத்திருந்தார்கள். டிங்கரிங் என்ற
பேரே அவன் அதுவரை கேள்விப் படாதது. பெயின்ட் உரிந்து சொறி பிடித்த தோலாய்த் தெரிந்தது
பார்க்க. ஸ்பிரே முறையில் அதில் பெயின்ட் பீய்ச்சியடித்துக் கொண்டிருந்தான் ஒருவன்.
அவனைப் பார்த்து சிநேகிதமாய்ச் சிரித்தான். கூட நின்றிருந்த இன்னொரு பையன், 'டேய் இவனை
நம்பாதே...' என்று விரலால் மற்றவனைக் காட்டினான்.
'உன்னை நம்ப
மாட்டேன்...' என்று சிரித்தான் சிவாஜி.
'அப்டிப் போடு
அருவாளை...' என்றான் முதலாமவன்.
ஆனால் மெல்லிய
குரலிலேயே அதிரடியாய் இல்லாமல் அவர்கள் பேசிக் கொண்டார்கள்.
ஆவி பறக்க சூடான
சாப்பாடு. வேலை கேட்டு வந்தவனுக்கு இந்த மரியாதை ரொம்ப அதிகம். ஒரு வேளை கிருட்டினமணி
அண்ணனுடன் வந்திரா விட்டால் இவரைப் பார்த்திருக்கவும் முடியாது. வேலை எனக் கேட்டிருக்கக்
கூட தனக்கு தைரியம் இராது, என்று தோன்றியது.
இந்த மதிப்பும்
கௌரவமும் மரியாதை எடுப்பும் கூட கிருட்டினமணி அண்ணன் எடுத்த நற்பெயர் அல்லவா?
'நானே உன்னை
இங்க சேர்த்து விடத்தான் யோசனை வெச்சிருந்தேன்டா. நீயும் அதே சொல்லிட்டே... பரவால்ல.
உழைச்சி நல்லா முன்னுக்கு வா. பொய் பித்தலாட்டம் எதும் நம்ப முதலாளிக்குப் பிடிக்காது.
நேர்மையா விசுவாசமா இருந்தா மனசார நமக்குக் கைகாட்டி விடுவாரு...' என்றபடி ரசத்தை படமெடுத்த
நாகமாய் உட்குழித்த கையில் வாங்கி உறிஞ்சிக் குடித்தான். பாம்பு சீறினாப்போல சத்தம்
வந்தது.
இன்றைக்குச்
சிரிப்பாய் சுமுகமாய் மரியாதையாய்ப் பேசுகிறார் மணி. வேலைக்குச் சேர்ந்த அன்று பார்க்க
எவ்வளவு பயமாய் இருந்தது. நல்லாப் பேசிட்டே இருக்காப்ல இருக்கும். திடுதிப்னு கோபம்
வந்திரும். வாய்ல இன்ன வார்த்தைன்னு வராது. இவரா இப்பிடிப் பேசறார்னு திகைச்சுப்போகும்.
உடம்பே நடுங்கும். சில சமயம் கிருட்டினமணி அடி கூட வாங்கியிருக்கிறான்.
எலேய் எதோ ஞாபகத்துல
வேலைய அரைகுறையா முடிச்சி, சரியா முடுக்காமல் கொள்ளாமல் வண்டிய அனுப்பிட்டம்னா டேஞ்ஜர்டா.
பாவி எம் பேர் அம்பேல்! அதும் மட்டுமில்ல நம்மளை நம்பி வண்டில ஏறி உக்கார்றானே டிரைவர்...
அவனுக்கு நாம பண்ற துரோகம் அது, என்பார்.
என் பேர் அம்பேல்!...
நல்லாத்தான் இருக்கு இந்தப் பேரு!
பிரேக் இருக்கான்னு
அவன் செக் பண்றான்னு வையி... எப்பிடி செக் பண்ணுவான்?... ஓட்டிப்பார்த்துத்தானே? ஓட்டிப்
பார்த்து பிரேக் இல்லைன்னா என்னாவுறது? - என்பார்.
அவன் முதுகு
எலும்பு பிரேக் ஆயிருமே!
அவனிடம் நிறைய
விசயங்கள் முதலாளிக்குப் பிடித்திருந்தன. குறிப்பாக இவனது சுத்தம். எப்பவும் சுத்தமாய்
தலையில் எண்ணெய் போட்டுச் சீவி யிருப்பான். நெத்தியில் சிறு குங்குமம் சந்தனம் வைத்திருப்பான்.
அடிக்கடி கை கழுவுவான். கடைல போயி எதும் உதிரிசாமான் வாங்க அனுப்பினால், சட்டை மாட்டிக்
கொண்டு போய்வருவான்...
வேலைமுடித்துக்
கிளம்புமுன் அங்கேயே குளித்துவிட்டு - அப்போதுதான் வேலைக்குப் போகிற அளவில் சுத்தமாய்க்
கிளம்பிப் போகிற அவனை அவர் ஆச்சர்யத்துடன் மதித்தார். அந்த சுத்தம், உடம்பு அலுப்பை
மறந்த உற்சாகம் தந்தது அவனுக்கு.
அவன் முன்னால்
தன்னை அழுக்காய் உணர்ந்தார் மணி. சின்னப்பையன்... இருந்தால் என்ன? அவனது நல்ல விஷயங்களைத்
தாமும் கைக்கொள்ள விரும்பினார். வேலைமுடித்து, அங்கேயே மீன் வறுவல் மேய்ந்தபடி பாட்டில்
உடைப்பது - சாராயம்! - பையன்களை ஏவி பாட்டில் வாங்கிவரச் செய்வது... என அவரது நடவடிக்கைகள்
இப்போது மாறி விட்டன.
கோபம்கூட அடங்கி
சிறு நிதானம் வந்தது. வாக்கினிலே இனிமை கூடிவந்தது. கடைவாசலில் மல்லிப்பூ வைத்த பெண்கள்
வந்து வந்து நிற்பார்கள். அதெல்லாம் இல்லை என்பதல்ல - பையன்கள் முன்னால் தன்னைப்போலத்
தவிர்த்தார்.
வண்டியைச் சரிசெய்ததும்,
மேலேறி அவரே வெள்ளோட்டம் பார்த்துக் கொண்டிருந்தார். ஒருநாள் கிருட்டினமணியைக் கூப்பிட்டார்.
'எலேய் பாக்கறியா?' என்று கேட்டார். அசந்து விட்டான். சரிங்க முதலாளி, என்று ஏறி உட்கார்ந்தான்.
பஸ் டிரைவரிடம்,
தம்பிக்கு எல்லாஞ் சொல்லிக் குடு, என ஒரு வார்த்தை சொன்னார்.
அடுத்த முறை
பஸ்சில் இராப்பயணம் கூடவே அனுப்பினார். லாரிடிரைவர் செந்தில் என ஒருவன். அவனுடன் இராப்பயணம்
போய்வந்தான் கிருட்டினமணி. ரெண்டு ட்ரிப் ஆனபின் இரவில் பயந்து பயந்து தனியாக டிரைவராகி
வண்டி ஓட்டிப் போனான். மெதுவாகவே ஓட்டிப் போனான். ஒருமணிநேரம் ஓட்டிப் போனதும், தைரியம்
அதிகமானது. தன்னைப் போல வேகம் வந்தது.
வாயில் அப்போது
பாட்டு வந்தது, என்பதைச் சொல்ல வேண்டியதில்லை!
ஊர் தாண்டி ரஸ்தாக்களில்
எருமை மாடுகள் நின்றிருக்கும். திரும்பிய வேகத்தில் அடித்துவிட நேரலாம். அலட்சியமாய்
மனிதர்கள் ரோட்டைக் கடப்பார்கள். பஸ்ஸை முந்த என்று ராங் சைடில் அசுரவேகத்தில் வருவார்கள்.
நேரா முகத்துக்கு முகம் மோதுகிறாப் போல ஆகிப்போகும்... ஆனால் கிருட்டினமணி நிதானமானவன்.
எளிதில் அவனை ஆத்திரப் படுத்திவிட முடியாது.
லாரி ஒன்று விபத்தாகி
வந்தது. டிங்கரிங். பழுதான பகுதிகளைச் சீர் செய்வது, மாற்றுவது, புதிதாய் என்ன பெயின்ட்
அடிக்கலாம்... எல்லா வேலைகளையும் அவனிடமே விட்டுவிட்டார் மணி. வண்டிய புதுக் கல்யாணப்பொண்ணு
போல அலங்கரிக்கணும்டா... என்றார் உற்சாகமாய்.
அதுவரை முழுவேலையும்
ஒரேஆளை நம்பி அவர் ஒப்படைத்ததே கிடையாது.
தன் பேர் கெட்டு
விடக் கூடாது எனக் கவனங் காட்டி வந்தார்.
அவன் வந்தபின்
மெல்ல கடையில் தன்நேரத்தையே கூட அவர் குறைத்துக் கொண்டார். வீடு, வாசல் எனப் பெருகிய
வாழ்க்கை. பெரியவன் மீனாட்சிசுந்தரம். பெரியவனைப் பட்டணத்துக்குப் படிக்க அனுப்பினார்.
அடுத்தவன் ரத்னசபாபதி. படிப்பில் அத்தனை சூட்டிகையாய் இல்லை... அச்சகம் வைக்கிறேன்,
என்றான். சரி, என்று வைத்துக் கொடுத்தார்.
அடுத்தவாரம்
அவரது பிறந்த நாள் வந்தது - ரெண்டாமவன் /இன்று பிறந்தநாள் காணும் எங்கள் தந்தை வைகறைவாசல்
மணி அவர்களை வாழ்த்த வயதில்லை! வணங்குகிறோம்!!/ என்று பெரிதாய் நோட்டிஸ் அடித்து வீட்டு
வாசலில் ஒட்டினான்.
நன்றாய்த்தான்
இருந்தது அவருக்கு!
வைகறைவாசல் மணி!
பேர்கூட நல்லாத்தான்
இருக்கு...
இப்போது லேசாய்
அரசியலில் அவரைச் சுற்றிவளைக்க ஆட்கள் வியூகம் திரள்கிறார்கள். கூட்டங்களில் தலைமை,
என அழைக்கிறார்கள். பேசக் கூப்பிடுகிறார்கள். அவர் பேரும் மாறியிருக்கிறது -
வை க றை யா ர்!
அதுவும் நல்லாத்தான்
இருக்கு!
ரெண்டு பையன்
ஒரு பெண் அவருக்கு. சுலோச்சனாவை அரசியல் பிரமுகர் ஒருவர் வீட்டில் கொடுத்திருக்கிறார்.
'அது சரி அண்ணே,
நீங்க வேறஎதோ சொல்ல வந்தீங்க?' என்கிறான் சிவாஜி.
'ஆமாமா, கதையை
எங்க விட்டேன்?' என்று கேட்டான் கிருட்டினமணி.
எலே வண்டி சூப்பர்டா,
சொன்னாப்ல புதுப் பெண்ணாட்டமா ஆக்கிட்ட, என்றவர் - கல்யாணங் கட்டிக்கிறியா?... என்று
சிரிக்கிறார் முதலாளி.
புரியலங்க முதலாளி.
வண்டி உனக்குதான்...
உனக்குதான்...னா?...
எடுத்துக்க.
சல்லிசா விலைக்கு வந்தது, வாங்கிட்டேன்...
அப்டிங்களா,
ரொம்ப சந்தோசம் முதலாளி.
உன்னிய நம்பிதான்
வாங்கியிருக்கேன் பாத்துக்க. பணம் போட்டது நான். பேருக்குதான் நான் முதலாளி. வண்டி
உன்னிது...
அழுகை வந்து
விட்டது அதைக் கேட்க.
அவர் அவனையே
பார்த்துக் கொண்டிருந்தார். கை தன்னைப்போல மீசையை நீவி விட்டது.
எலேய் நல்ல முகூர்த்தம்
பாரு. தாலி கட்டிரு... என முதலாளி சிரிக்கிறார்.
'ஐய உங்களை நல்லவர்னு
நினைச்சேனே...' என்கிறான் சிவாஜி.
'ஏன்?'
'இப்ப உங்களுக்கு
ரெண்டு பொண்டாட்டி!' என்று சிரிக்கிறான்.
சற்று துணிச்சலாய்
அப்புறம் கேட்கிறான் -
'ரெண்டுதானா?
ஒருவேளை மூணா?
••
சனிக்கிழமை தோறும் தொடர்கிறேன்
storysankar@gmail.com
91 97899 87842 / 91 94450 16842
Comments
Post a Comment