short story / Deepavali malar / Amudhasurabi / 2020

மௌனத்தின் குரல்

எஸ். சங்கரநாராயணன்

ர் நெருங்க நாலுமுக்கை பஸ் தாண்டும்போதே சனங்கள் கோபுர தரிசனத்துக்குத் தயாராகி விடுவார்கள். சிவ சிவ, என்று வௌவால் படபடப்பாய்க் கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். கண்டக்டரும் வணங்குவான். வெள்ரி வெள்ரி, என்று குரல்கள் புடைசூழ பயணிகள் இறங்குவார்கள். ஏற ஆட்கள் முண்டியடிப்பார்கள். அழகான ஊர். சற்று எட்டி வயல்வெளி வந்தாலே மலை தெரியும். மண்ணின் அலையெழுச்சி போல. மலையின் முகடுகள் குழந்தையை நினைத்துக்கொண்ட இளம் தாய்போல பனிமூடிக் கிடக்கும். அதைப் பார்த்தபடி வயல்வெளி வரப்புகளில் நடக்க புல்லில் பனி காலைக் குளிர வைக்கும். உலகம் விடிய பனி பின்வாங்க வெளிச்சம் உள்ளே நுழையும். காலைகள் மாலைகள் அலங்கரித்துக் கொள்ளும் ஊர். சிறு மழைக்கும் யானை பீய்ச்சியடித்த தண்ணீர் போல வானவில் தோன்றும் ஊர்.

ஊர் என்றால் அலைந்து திரியும் பெருச்சாளிகள் தெருநாய்கள் கழுதைகள் உண்டு. அவனும் உண்டு. அவன் உடைகள் கிழிந்து அழுக்கினால் கருத்து பிரி பிரியாய்த் தொங்கின. யார் அவன், எந்த ஊர் யாருக்கும் தெரியாது. வயல்வெளிகளில் தன்னைப்போல சுற்றித் திரிகிறவனாய் இருக்கலாம். மலையை வேடிக்கை பார்த்தபடி, மேலே, வேடிக்கை பார்க்கிறவனை வேடிக்கை பார்க்கிற நிலாவைப் பார்த்தபடியே அவன் ஊர் வந்து சேர்ந்திருக்கலாம். ஐய ராத்திரி வேளைகளில் கட்டற்ற சுதந்திரத்துடன் காவல் தெய்வம் போல நடமாடும் காற்றின் சிலுசிலு. கோவில்பக்க ஆலமரத்தில் காற்று புகுந்து புறப்பட்ட சலசலப்பு. ஒலிக்குளுமை. அந்த ஊர் அவனுக்குப் பிடித்து விட்டது. அந்த ஊரைப் பிடிக்காதவர் யார் இருக்க முடியும்?

என்ன சாப்பிடுவான் எங்கே உறங்குவான் அவன் தெரியாது. எப்படியோ அந்த ஊர் வரை வந்து அங்கேயே அவன் தங்கிவிட்டான். சில காலைகளில் அவர், தணிகாசலம் வயல் வேலையாய்ப் போனால் அந்தப் பக்கம் அவனைப் பார்க்கலாம். வரப்புகளில் காலில் குட்டிநாய் போலக் கொஞ்சும் பனித் துளிகளைப் பரசியபடி கண்ணுக்குள் மலையை நிறைத்துக் கொண்டபடி அவன் நடந்து போவான். பசி தாண்டிய ஒரு வாழ்க்கையை அவன் ஏற்றுக் கொண்டிருந்தான். முடியுமா? அவனால் முடிந்திருக்கிறது. பைத்தியக்காரன் தான். எத்தனை துல்லியமாக வாழ்க்கையை அருந்திக் களிக்கிறான் என்று தோன்றும்.

அந்தக் கோடை மிகக் கடுமையாக அமைந்தது. தணிகாசலத்தின் வயல் கிணறு மண்மேடாய்ப் போனது. எப்படி அத்தனை வறட்சி தெரியவில்லை. வெயில் சுட்டெரித்தது. தெருவில் கால் வைத்தவன் ஆ என்று தூக்கிக் கொண்டான். கால் கொதித்தது. ஊரில் எந்தக் கிணற்றிலும் தண்ணீர் இல்லை. காலை ஐந்தரைக்கே வெளிச்சம் பளீரென்று கிளம்பியது. இரவு ஆறேமுக்கால் வரை கூட வெளிச்சம் உள் பதுங்கவே இல்லை. என்ன கோடை இது? இந்த வெக்கைக்கு மரங்கள் இலையை யெல்லாம் உதிர்த்துப் போட்டுவிட்டு சட்டையில்லாத மனுசாளைப் போல நின்றன. இதன் கிளை சங்கமங்களில் கூடுகள் அப்படியே காய்ந்த புண்ணின் பொறுக்குகளாய் வெளியே தெரிந்தன. வயல்கள் வரப்புகள் வெடித்து காய்ந்து கிடந்தன. அங்கங்கே மல்லாக்க இறந்து கிடக்கும் நண்டுகள். கிணறுகள் பாதாள குகைகள்.

ஊர்ப் பொதுக்கிணறு என்று பெரிய வட்டக் கிணறு கோவில் பக்கமாய் இருந்தது. அதிலேயே தண்ணீர் இல்லை. சகதியாய்க் கிடந்தது. ஊற ஊற இரைத்துக் கொண்டார்கள். வயல் கிணறுகளிலும் அப்படித்தான். ஒருநாளைக்கு மதியம் ஒருமுறை, பின்னிரவில் ஒருமுறை என்று இரண்டுமுறை மோட்டார் போட்டு நீர் எடுத்தார்கள். மேலே மலையில் எத்தனை மரங்கள் தீய்ந்து விட்டன. ஒருமுறை தீ பற்றி யெரிந்து ஏராளமான ஏக்கர் காடு அழிந்து விட்டது. உள்ளே மாட்டிக்கொண்ட சிறு பெரு விலங்குகளுக்குக் கணக்கேயில்லை. வானம் அதற்கு அழவே இல்லை. சொட்டுக் கண்ணீர் விடவில்லை வானம்.

இனி இந்த ஊரில் என்ன இருக்கிறது? அவன், அந்தப் பைத்தியக்காரன் ஊரைவிட்டுப் போய்விடுவான் என்று நினைத்தார் தணிகாசலம். அவனிடம் ஒரு ஈயத் தட்டு இருந்தது. அதைக் கையில் ஏந்தியபடி ஆனால் யாரிடமும் அதை நீட்டாமல் தெருவில் வருவான். மகா மௌனி அவன். யாரிடமும் அவன் பேசியதே இல்லை. அவனுக்குள் சொற்களே உற்பத்தியாகவில்லை என்பது ஆச்சர்யம்தான். ஒருவேளை ஊமையோ தெரியவில்லை. அவனுள் புதையுண்டு ஆயிரம் ரகசியங்கள் இருக்கலாம். அட இங்க எங்களுக்கே சோறு தண்ணிக்குப் பாடா இருக்குது. இவனை யாரு கவனிப்பா, என்று தணிகாசலம் நினைத்துக் கொண்டார். இப்படிப் பைத்தியக்காரர்கள், தன் குடும்பத்தைச் சாராவிட்டாலும் எதாவது ஊரைச் சார்ந்து வாழ ஆரம்பித்து விடுகிறார்கள். யாராவது கரிசனப் படாவிட்டால் இரக்கப் படாவிட்டால் அவர்கள் எப்படி ஜீவிக்க முடியும்?

காற்றும் அசையாத இரவின் நிசப்த வெளி உம்மென்று கன்னம் வீங்கிக் கிடந்தது. எல்லாரும் வீட்டு வாசலில் அமர்ந்து பின்னிரவு வரை எதாவது கதை பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் மொட்டைமாடியில் போய்ப் படுத்துறங்கினார்கள். தணிகாசலம் எப்பவுமே மாடியில் தான் உறங்குவார். மாடியில் இருந்து சிவன் கோவில் கோபுரம் தெரியும். கோபுரத்தின் உச்சியில் சிறு விளக்கு ஒன்று தெரியும். சிவனின் கீற்று நிலா. நல்ல பக்தி சிரத்தையான ஆள் தணிகாசலம். சிவ சிவ, என்று எப்பவுமே அவர் வாய் சொல்லிக் கொண்டே யிருக்கும். காலையில் எழுந்து திருநீறு பூசாமல் வெளியிறங்க மாட்டார்.

எதுவும் விதைக்க வகையில்லை. தண்ணீர் இல்லை. இது இப்படியே போனால் என்ன செய்வது? சாப்பிட வேண்டாமா? ஊரே விவசாயத்தை நம்பி யிருந்தது. காலித் தட்டும் சூன்ய வயிறுமாய் அவன், அந்தப் பிச்சைக்காரன் ஊரைச் சுற்றி வருகிறான். சற்று அழுத்தமான அவனது நடை இப்போது தளர்ந்திருக்கிறது. ஒருபக்கம் பசி. மறுபக்கம்... தெருவில் சனங்கள் வாசலில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்தார்கள். அவர்கள் முகத்தின் கவலைக் குறிகள். அதுவே அவனுக்குக் கவலை யளித்ததோ என்னவோ. யாரிமும் அவன் வாய்விட்டுப் பேசினான் இல்லை. ஊரின் நாய்கள் அவனிடம் வாலாட்டுவது கூட இல்லை. அவன் வந்தால் சற்று தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு திரும்பக் கவிழ்ந்து கொண்டன.

மழைக்காலம் கடந்து விட்டது. சுட்டெரிக்’கும் இந்த வெயில். சூரியக் கோபம். இதைத் தணிக்க என்ன செவ்யது? எப்படி யிருந்த ஊர். எப்பவும் கலகலப்பான ஊர் அது. கோவில் பக்கம் திடலில் எதாவது சர்க்கஸோ வித்தைக்காரனோ வந்து தங்குவார்கள். மணணைக் கொத்திப்போட்டு இராத்திரி உயர உயரமான டியூப் லைட் வெளிச்சத்தில் கபடி விளையாடுவார்கள். கோவில் பக்கம் கிடக்கும் உருண்டையான மாப்பிள்ளைக் கல். யாரால் தூக்க முடியும் அதை? பத்திருபது வருடம் முன்னால் ஊர்த் திருவிழாவில் பக்கத்து ஊரில் இருந்து வந்த சாமிக்கண்ணு அதைத் தூக்கிக் காட்டியது கடைசி. இன்னும் அங்கேயே கிடக்கிறது, சீண்ட ஆளில்லாமல். யாரும் இல்லாத சமயங்களில் இளவட்டங்கள் வந்து அதை சிறிது நகர்த்திப் பார்ப்பார்கள். அதற்கே நாக்கு தள்ளி விடும். அந்தப் பைத்தியக்காரன் ஒருநாள் அதை அசைத்துப் பார்த்தான். தணிகாசலம் அதை கவனித்திருந்தார். அவருக்குச் சிரிப்பு.

இந்த வறட்சி, இது கடவுளின் கோபம், என்றார் ஊர்ப் பெரியவர். எல்லாரும் ஒருநாள் ஊர்ககோவில் திடலில் கூடினார்கள். தணிகாசலம் வீட்டில் இருந்து பானகம் கரைத்துக் கொடுத்தாள் அவரது மனைவி. தணிகாசலம்தான் ஊரைக் கூட்டியது. எல்லாருக்குள்ளும் அந்த யோசனை இருந்திருக்கலாம். ஒற்றுமையான ஒன்றுபட்ட பிரார்த்தனை, அது ஒன்றே வழி, என்றார் பெரியவர். பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்தனையில் நம்பிக்கை வைத்துப் பிரார்த்திக்கவேண்டும். அவர் காலத்தில் பஞ்சம் ஒன்று வந்தது, என்று அவர் பேசிக் கொண்டிருந்தார். தணிகாசலம் தலையை ஆட்டியபடியே தூரத்தில் பார்த்தார். ஆல மரத்தின் பக்கத்தில் ஒரு ஓரமாய் ஈயத் தட்டுடன், அந்தப் பைத்தியக்காரன். தணிகாசலம் மனைவியைப் பார்த்துத் தலையாட்டினார். அவனுக்கும் பானகம் கொடுக்க என்று எடுத்துப் போனாள் அவர் மனைவி.

ஆளுக்கு இவ்வளவு தலைவரி என்று பேசி சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். சிவன் மனதைக் குளிரச் செய்ய வேண்டும். அவன் கோபத்தைக் குறைக்க வேண்டும்... என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஊரில் எல்லாருக்கும் அரைச் செவிதான். யார்ட்ட காசு இருக்கு வரி கட்ட, என்று அவர்களில் யோசனை. பாட்டையா, வருமானத்துக்கு வழி சொல்லுங்கன்னா செலவுக்குச் சொல்றீங்களே, என ஒரு சிலர் ஆயாசப் பட்டிருக்கலாம். அதில் சில பேருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அவர்களுக்கு பெரியவரின் பேச்சு அலுப்பாய் இருந்தது. பிரார்த்தனை பண்ணிவிட்டால்? மழை வந்துவிடுமா?.. என்று அவர்கள் தங்களுக்குள் சிறு எள்ளலுடன் பேசிக் கொண்டதையும் தணிகாசலம் பார்த்தார். இதே நிலை நீடிக்கக் கூடாது. எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்றிருந்தது ஊர். மழை பெய்ய வேண்டும். மேகம் திரள வேண்டும்... அது எப்படியானால் என்ன என்றிருந்தது. சிவ சிவ, என தனக்குள் சொல்லிக் கொண்டார்.

அன்றைக்கு ராத்திரி மொட்டைமாடியில் உலவியபடி தணிகாசலம் எல்லாம் யோசித்துக் கொண்டிருந்தார். இத்தனை தூரத்தில் இருந்தே கோவில் தெரிந்தது. பிறைநிலா போல அதன் உச்சி விளக்கு. புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே... என மனதில் பதிகம் கிளம்பியது. இருந்த புழுக்கத்துக்கு மேல் துண்டை உதறி யிருந்தார். ஊரில் நிறைய வயல் காலியாய்க் கிடக்கிறது. எல்லாரும் ஆற்றுப் பாசனத்துக்குக் காத்திருந்து விதைக்கிறவர்கள். மணல் தெரியக் கிடந்தது ஆறு. மலையில் மழை பெய்தால் ஓடோடி வந்துவிடும் ஒரே நாளில். மழை இல்லை. அவரொத்த சில பேர்தான் கிணறு வைத்திருந்தார்கள். அதிலும் ஆழக் கிடந்தது கொஞ்சம் தண்ணீர். மோட்டார் எடுக்கிற அளவில் நீர் ஊற ஊற இறைக்க வேண்டி யிருந்தது. இரவு பகல் என்று பார்க்க முடியாது. பத்து பதினோரு மணிக்கு ஒருமுறை. பின்னிரவில் ஒருமுறை போய் நீர் இறைத்து வயலுக்குப் பாய்ச்சி வந்தார்.

கைக் கடிகாரத்தில் மணி பார்த்தார். கிழே இறங்கி வந்தார். நாலு செல் டார்ச் எடுத்துக் கொண்டார். கையில் சிறு கம்பு. பாம்பு கீம்பு வழியில் கிடக்கலாம். பயம் என்று இல்லை. ஒரு தற்காப்புக்கு. வாசலை வெளியே தாழிட்டுவிட்டு வயலை நோக்கி நடந்தார். வீடுகள் அமைதியாய்க் கிடந்தன. எல்லாரும் அரட்டையை முடித்து விட்டு உறங்கப் போயிருந்தார்கள். அநேகமாக தினசரி இந்த அமைதியில் தான் அவர் வெளியே இறங்குவார். ஆகவே அந்தக் காட்சி புதியது அல்ல. நேற்று மாலை கூட்டம் நடந்த கோவில் திடல் காலியாய்க் கிடந்தது. அந்த அமைதியின் நடுவே கோவில் வாசலில் எதோ மூட்டை கிடந்தாற் போல... என்ன அது? என்று சற்று நின்று கவனித்தார்.

அது அவன். பைத்தியக்காரன். என்ன செய்கிறான் அவன். அவருக்கு வியப்பு ஏற்பட்டது. என்ன இவன்? தூங்கவில்லையா? இருந்த இருட்டில் அந்த தூரத்தில் அவனை சரியாக கணிக்க முடியவில்லை. என்ன செய்கிறான் அவன், கோவில் வாசலில். அவன் எழுந்து நின்றான். மேலே கோபுரத்தைப் பார்த்தான். கைகள் இரண்டையும் தூக்கினான். உச்சி விளக்கின் வெளிச்சத்தின் சிறு திவலையை வாங்கிக் கொள்ள நினைக்கிறானா அவன்? திரும்ப அவன் குனிவதைப் பார்த்தார். அப்படியே தரையோடு விழுந்தான் அவன். நமஸ்கரிக்கறினா என்று தெரியவில்லை. அட கோட்டிக்காரப் பய புள்ள, என்று அதை ரசித்தார்.

கோவில் வளாகம் தாண்டி தன் வயலை அவர் நெருங்குமுன் காற்றில் மழைத் துளிகள் சிதற ஆரம்பித்தன.

 

---

அலைபேசி 9789987842 / வாட்சப் 9445016842 email storysankar@gmail.com

Comments

Popular posts from this blog