பறவைப்பாதம்

எஸ்.சங்கரநாராயணன்

குறுந்தொடர் / நன்றி லேடிஸ் ஸ்பெஷல்

பகுதி மூன்று

---

ராஜகோபால் சேஷாத்ரியை எதிர்பார்த்து மனம் படபடக்கக் காத்திருந்தார். மனசில் மப்பும் மந்தாரமுமான மழை மூட்டம். பிருந்தாவைப் பற்றி இவன் நேரில் வந்து சொல்லி யிருக்கலாம். அலுவலகத்தில் அப்படியா, என்கிறாற் போல கேட்டுக் கொண்டும் இருந்திருப்பார். தொலைபேசி உரையாடல், ஓர் கி’றுகிறுப்பு, இன்ப ஹிம்சை தந்துவிட்டது. நேரில் அவன் என் முன்னே இருந்தால் அவனுடனான இளமைக் காலத்தை அசை போட்டிருக்கும் அப்போது.

அதெல்லாம் சும்மா... பனி இல்லாத மார்கழியா, என்கிற மாதிரி பிருந்தா இல்லாத பள்ளி நாட்களா?

சேஷாத்ரி. என் தலையில் குட்டு வைக்கச் சொல்வார் வாத்தியார். என்னைக் குட்டிவிட்டு அவன் அழுவதைப் பார்த்து அவரே ஆச்சர்யப் படுவார். அந்த அழகான அருமையான கிடைத்தற்கரிய நிமிடங்ள் மேல் காலம் மழையும் வறட்சியுமாய் பருவங்கள் புரண்டு படுத்து செடியும் கொடியும் காடும் அடர்ந்து விட்டது.

சாரி நண்பனே. இன்று நீ நேரில் வரும்போது, பிருந்தாவைப் பற்றி அல்ல. நம்மைப் பற்றிப் பேசி கொண்டாடுவோம். உன் நலம், உன் குடும்ப நலம் பற்றி நான் விசாரிப்பேன். உன் பெரியபெண்ணுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது அல்லவா. அவளைப் பற்றிச் சொல். நம் கல்யாணக் கதை அது பழையது. அதற்கு முந்தைய பழைய கதை... அதைப்பற்றி என்ன?

அ. மனசு எத்தனை கூவி என்ன, உள் கன்றுக்குட்டி கயிற்றைத் தெறித்துவிட்டு பிருந்தாவிடம் போய்ப் போய் நிற்கிறது, கழுத்தைத் தடவிக் கொடுக்க வேறு நீட்டிக் காத்திருந்தது கன்று. வேறு வீட்டுக்கு விலைக்குப் போனாலும் சில மாடுகள் பழைய வீட்டுக்கே வந்து வந்து நிற்கும்.... அதைப்போல!

அட சேஷாத்ரியும் எத்தனை நல்ல மனுசன். பேசிய அந்தக் கொஞ்ச நேரத்திலும் தன் கதை பேசாமல், என் கதையும் கேட்காமல்... என்னிடம், பிருந்தா கதை பேசினான்!

இப்போது எப்படி இருப்பாள் என்று தெரியவில்லை. அந்தக்கால அழகின் மிச்சங்களைத் தேட வேண்டி யிருக்குமா? மிச்சம் இப்போது இருக்குமா? சாயம் பூசாமலே அந்த உதட்டுச் சிவப்பு கிர்றங்கடிக்கும். கடிக்கத் தூண்டும் வெறி வரும். சாந்துப் பொட்டு வைப்பாள். டவுண்பஸ்சில் நிற்கும் பயணிகளுக்கான கைப்பிடி போல் ஜடையை மடித்துக் கட்டியிருப்பாள். அத்தனை நீளக் கூந்தலே இந்நாட்களில் அரிதாகி விட்டது. ஒரு கவிஞன் சொன்னான்... அந்தக் காலப் பெண்களின் கூந்தல் அவிழித்துவிட்டால் தரைவரை வந்து விழும். இந்தக் காலப் பெண்ணுக்கோ அது தரையிலேயே அவிழ்ந்து விழும். சௌரிக் கேஸ்.

ஹா. காலம் எல்லாரையும் மாற்றி விடுகிறது. நானும் மாறி யிருக்கிறேன். நெற்றிக்குமேல் முன்மயிர் பின்வாங்கி யிருக்கிறது. கண்ணாடி போட்டே வாசிக்கிறேன். சட்டென எழுந்தால், முட்டியில் வலி. இருந்தாலும் என்ன, கனவுகளில் தொற்றியபடி ஃபுட்போர்டு பயணிகளாய் வளைய வருகிறோம் நாம் எல்லாரும். எனக்கு உன் முகமோ, இன்றைய பிருந்தாவோ முக்கியம் இல்லை. அவள் எனது கனவுரு. தேவதை. சனியனே, நாயே... என அவள் மருட்சியில் அலறுவது கெக் கெக் என சிரிப்பை வரவழைத்த காலம் அது. இவன் ஆம்பளை. மிடுக்கும் நிமிர்வும் கொண்டவன் என்ற எக்களித்த சிறு மிதப்பு. பெண் முன் ஆணின் பெருமிதம் அது. பெண்ணின் நாணல் வளைசல் ஆண் முன்னால்... அதுவும் இயல்பே. இதில் ஒசத்தி யார், எது இதெல்லாம் கதை. அழகியல் தெரியாமல் ரோஜாவைப் பிய்த்துப் போட்டு ரசிப்பதா?

“ஹல்லோ” என வந்தவரை அடையாளமே முதலில் தெரியவில்லை. இந்த ஐந்து வருடத்தில் முன் வழுக்கை வந்திருந்தது. கண்ணாடி ஃப்ரேமே தங்க நிறமாக மாறியிருந்தது. “நீ மாறவே இல்ல ராஜு” என்று கைநீட்டினார் சேஷாத்ரி. “அதாவது முகஜாடை...” என்று சிரித்தார் ராஜகோபால்.

“பிருந்தாவும் மாறவே இல்லை. அதே முகம். அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. நான்தான் கண்டுபிடிச்சிப் பேசினேன்.”

“எங்க பார்த்தே?” என்று கேட்டார் சிரிப்புடன்.

“ஆஸ்பத்திரியில்” என்றார் சேஷாத்ரி.

••

உள்நாக்கை யாரோ பிடித்து உள்ளே இழுத்தாற்போல விக்கித்துப் போனார் ராஜகோபால். “ஆஸ்பத்திரியிலா?” என்றார் கலவரத்துடன்.

“அவ வீட்டுக்காரருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி சேர்த்திருக்காங்க போல. பயந்துக்காதேடா...” என்று தோளைத் தொட்டார் சேஷாத்ரி.

“லிஃப்ட்டில் பார்த்தேன். அவ ஃபிளாஸ்க்கோட மாடி ஏர்றா. நான் இறங்கி வெளிய வர்றேன்.”

அவரையே பார்த்தார் ராஜகோபால் என்ன சொல்ல என்று தெரியாத சிறு திகைப்பு. ம், என்று தலையாட்டினார். திடுக்கிடத்தான் வேண்டி யிருக்கிறது. நெடுங்காலமாகத் தகவல் தெரியாத நபர்கள் திரும்ப நம் வாழ்க்கையில் வரும்போது நல்ல சேதிகள் அல்லாமல் இப்படிக் கேள்விப்பட்டால் என்ன செய்வது?

“வயசாயிட்டாலே இப்பிடி எதாவது வந்திருதே. ரயில் வரும் முதல் மணி, ரெண்டாவது மணின்றாப் போல...” என்று அவருக்கும் தனக்குமாகவே பேசினார்.

“ரயிலா ஆம்புலன்சா?” என்று சிரித்தார் சேஷாத்ரி.

“திரும்ப பயமுறுத்தறே!”

“சரி. ஒரு ஜோக். ஒரு வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ் நிக்குது. அதைப் பாத்துட்டு ரெண்டு பேர் பேசிக்கறாங்க. என்ன அந்த வீட்டு வாசல்ல ஆம்புலன்ஸ் நிக்குது?... அதுக்கு அடுத்தவர் சொல்றாரு. அந்த வீட்டுத் தாத்தாவுக்கு ஐம்புலன்சும் அடங்கிட்டதாம்.”

தாள மாட்டாமல் குலுங்கிச் சிரித்தபடியே எழுந்து கொண்டு “வா. சாப்பிடப் போகலாம்...” என்றார் ராஜகோபால்.

சேஷாத்ரி எதும் ஜோக் சொன்னால் அவன் சிரிக்காமல் சொல்லி மற்றவர்களைச் சிரிக்க வைப்பான்.

திருச்சி பெல்லில் உத்தியோகம். டென்டர் அது இதுவென்று ரயிலிலும், அவசரம் என்றால் பஸ்சிலும், யோகமிருந்தால் விமானத்திலும் சென்னை வருவார் சேஷாத்ரி. நேர்ல் சந்திக்க வருவார் வரமாட்டார், என்பதல்ல பிரச்னை. கட்டாயம் சென்னையில் இருந்து ஒருதரம் ஃபோனில் பேசி விடுவார். அருமையான நல்ல குணாம்சம் அது. எனக்கில்லையே, என்று வருத்தப் பட்டார் ராஜகோபால். சென்னை போல அன்றி திருச்சி போன்ற சிறு நகரத்துக்காரன் என்றால் நானும் அப்படி இருந்திருப்பேனோ என்னவோ.

திருச்சிக்கு நாம் போனால் கூட ஒரே சுத்தில் எட்டிப் பிடிக்கலாம் ஃபோனில். அவனே என்னைத் தேடி வந்துவிடுவான். காரில் தானே முன்னெடுத்து தன் வீட்டுக்கு அழைத்துப்போய்... அமர்க்களப் படுத்தி விடுவான். அதெல்லாம் ஒரு அம்சம். எல்லாருக்கும் வாய்க்குமா அந்த குணம்.

அட இங்கியே இப்போதே வெளியூர்த் தொடர்பு வசதியுடன் தொலைபேசி இருக்கத்தான் இருக்கிறது. என் பதவிக்கு, என் வசதிக்கு, நான் பேசினால் யார் கேட்கப் போகிறார்கள். மனம் அன்றாடப் பரபரப்புகளிலேயே தத்தளித்து நண்பர்களைப் புறந்தள்ளி விடுகிறது.

அன்பையும் உறவையும் எதிர்பார்க்கிற அளவு, வாங்கி நெகிழும் அளவு... வழங்கவும் வெளிப்படுத்தவும் பரிமாறவும் செயலூக்கம் இல்லை. சிறு தயக்கம். முன்கால் எடுத்து வைக்கக் கூச்சம். அட சோம்பேறித்தனம். எதுவோ ஒன்று தடையாகவே இருக்கிறதே.

பிருந்தா. அவளைப் பற்றிய சேதி கேட்ட கணம், உடனே சேஷாத்ரியைப் பார்க்க வரச்சொல்லி உரிமை கொண்டாடி விட்டது மனது! புன்னகை செய்து கொண்டார். மறக்காமல் மதுரையில் அவள் தொலைபேசியை வாங்கி வைத்துக் கொள்ள மனம் பரபரத்துக் கொண்டிருந்தது. அட சுயநலப் பிசாசே!

ஹோட்டலில் குளிர்சாதன அறையில் மணி பார்த்தபடியே ஆனால் உற்சாகமான பேச்சுடன் சேஷாத்ரி சாப்பிடுகிறார்.

சேஷாத்ரியிடம் ஒரு விசேஷம். உலகம் சார்ந்த அவரது பார்வை கூர்மையானது. மதிப்பீடுகளின் வேக வீச்சுடன் சற்று சோகம் உள்ளடக்கி அதையே அமெரிக்கையான நகைச்சுவை போல் பேசுவார் அவர்.

“நம்ம தமிழய்யா இளங்கோவை ஒருநாள் பார்த்தேன் ராஜகோபால். அவரது கடைசிப் பையன் சரியா வேலை கிடைக்காமல் தத்தளிக்கறாப்ல இருக்கு. மனனப்பாடம் சரியா ஒப்பிக்கலைன்னா தலைல குட்டச் சொல்லுவார்லியா? உனக்கு ஞாபகம் இருக்கா? மலையாளத்துல ஒரு பழமொழி சொல்லுவாங்களே. செத்தது நீயா உன் தம்பியான்னு கேட்டானாம். அண்ணன் தம்பி ரெண்டு பேரும் ஒண்ணுபோல இருந்தா என்ன பண்றது? அதுமாதிரி. இவர் பேர் இளங்கோ, நாம அவருக்கு சேரன் செங்குட்டுவன்னு பேர் வெச்சோம் இல்லியா?” என்று சிரிக்கிறார்.

“ம்” என்று தலையாட்டுறார். சாப்பிடுகிற வேகத்தில் வார்த்தைகளை வீசுகிறார். அது அந்த வேலையின் தன்மை. போய் அமர்ந்து எந்த வேலையானாலும் கையோடு முடித்துகொண்டு வருகிற சாமர்த்தியம். தளராத தன்னம்பிக்கை. குரல் எடுப்பு. இருந்த சூழலையே கலகலப்பாக்கி விடுகிற ஜால வித்தை.

“பையனுக்கு எதாவது வேலை கேட்டார். சரியாப் படிக்கலை போலருக்கு. ஏன் சார் எங்களை நாலு குட்டு குட்டினா, அவனை ரெண்டாவது குட்டியிருக்கலாமேன்னேன். சட்னு கண் கலங்கிட்டாரு. அடடா நீ இன்னும் குட்டைத்தான் ஞாபகம் வெச்சிருக்கியான்னாரு. இல்லய்யா இல்லய்யா. மனனப் பாடம், அதெல்லா இன்னும் ஞாபகம் இருக்கு. தண்டலை மயில்களாட தாமரை விளக்கம் தாங்க... கம்பராமாயணம். அதெல்லாம் மறக்குமா ஐயான்னேன்.”

“அவரால தானடா உனக்கு கவிதை எழுதற ஆர்வமே வந்தது?...”

“மொட்டைக்கவிதை...” என சிரித்தார் சேஷாத்ரி. “அதை வளத்துக்கவே இல்லை. பயத்தோட அதை அப்ப விட்டது...”

“உலகத்தில் காதல்னு ஒண்ணு இல்லைன்னா கவிதைன்றது இல்லையோ?” என்றார் ராஜகோபால்.

“காதல் இல்லைன்னா கவிதை இருந்திருக்கும். காதல் தர்ற பயத்தில் கவிதை செத்துருது, எனக்குப் போல...” என்று சிரிக்கிறார் சேஷாத்ரி.

மனம் எப்படியோ இழப்புகளையே அளைந்து அளைந்து வலம் வருகிறது. மொட்டை மாடி தானியத்தைக் காய வைத்தபடி பரசிப் பரசி நடக்கிறாற் போல. சுவையான காபிதான். அடிநாக்கில் தங்குவது கசப்பு தானே?

“குண்டடிச்சிட்டாளா?” என்றார் ரசத்தை சோற்றில் ஊற்றியபடியே.

“யாரு? டேய் பிருந்தாவா?” என்று புன்னகை செய்தார் சேஷாத்ரி. “நான் தமிழய்யா பத்திப் பேசிட்டிருக்கேன்...” என்றார்.

“என்னைப் பார்த்ததுமே முதல்ல உன்னைப் பத்திதான் விசாரிச்சா.”

“நாம ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்டு. இப்பவும் தொடர்பில் இருப்போம்னு அவ எதிர்பார்த்திருக்கா...” என்றார் ராஜகோபால்.

சேஷாத்ரி தன் உலகத்திலே இருந்தார் மேகம் கலையாமல். “அவரைப் பாத்து ரொம்ப நாளாச்சி. முடிஞ்சா அவரைப் பேசச் சொல்லுங்களேன்னு அலைபேசி எண் குடுத்தா...” என்றபடியே பாதி சாப்பாட்டில் தன் பேன்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டார்.

“முதல்ல சாப்பிடுறா...” என்றார் ராஜகோபால் நெகிழ்ச்சியுடன். அந்தக் காகிதம்... அது அவளையே பார்க்கிறாப் போல அல்லவா?

குண்டடிச்சிட்டாளா, என்று கேள்விக்கு சேஷாத்ரி பதில் சொல்லவில்லை!... என நினைவு வந்தது.

“இல்ல இருக்கட்டும். நீ சாப்பாட்டையும் கவனிக்க மாட்டேங்கற. என் பேச்சும் உனக்கு சுவாரஸ்யப் படல்ல...” என்று சிரித்தார் சேஷாத்ரி.

வெறும் காகிதம். அதில், அவள் கையெழுத்தில்... ஓர் எண். என்றாலும் என்ன, அதை அத்தனை பரவசத்துடன் வாங்கிக் கொண்டார்.

“இனியாவது நார்மலா பேசுவியாடா?”

“முன்னைவிட இப்போ...” என்று சொல்லவந்தவரைக் கையமர்த்தி “சரி சரி” என்கிறார் சேஷாத்ரி. வயது பின்னோக்கிப் பாயாத ஆட்கள் உண்டா உலகத்தில்?

••

மனசெனும் உறங்காக் கடல். பிருந்தா பற்றி இனி எதுவும் அவனிடம் கேட்கக் கூடாது, என்றிருந்தது. அத்தனை சங்கிலியும் மீறி மன நாய் தாவியது. தெருவில் நாயைக் கூட்டிக்கொண்டு நடைப்பயிற்சி செய்கிறவர்வகள்... பெரும்பாலும் அவர்களைத்தான் நாய்கள் இழுத்துச் செல்லும். ஐயோ இவர் இப்போது விழுத்தாட்டப் படுவார், என்று நமக்குத் பதட்டமாய் இருக்கும்.

பிருந்தாவின் நினைவுகள் என்னை விழுத்தாட்டி விடுமா?

அவளோடு இப்போது, இத்தனை நாட்களுக்குப் பிறகு பேசுதல்... சரியா?... என ஓர் உள் குரல் திடீரென்று கிளம்பியது. மொட்டைமாடியில் உலவிக் கொண்டிருந்தார். அலுவலக வேலைக்கும் அலுப்புக்கும் நடுவே அல்லாடி வீடு வந்தவுடன், சாப்பிட... அக்கடான்னு படுக்க என இயங்கும் மனம். இவளும் குழந்தைகளும் தொலைக்காட்சி பார்ப்பார்கள். எந்தச் சானல் பார்ப்பது என சிறு யுத்தம் நிகழும். அவர் மாடிக்குப் போவார். கால் மணி அரை மணியில் இறங்கி வந்து உறங்கப் போய்விடுவார்.

இது புதுக்கேள்வி. இப்படியொரு கேள்வி திடீரென்று உள்ளே யிருந்து முளைக்கும் என எதிர்பார்க்கவில்லை. நடந்துகொண்டிருந்தவர் சட்டென நிற்கிறாப் போல, திகைப்பாகி விட்டது.

ம். இவன் என் அலைபேசி எண்ணைத் தந்திருக்கலாம்... என்று யோசனை வந்தது. டேய் விட்டா ‘அவளையே தூக்கி பாக்கெட்ல போட்டு இவன் எடுத்து வந்திருக்க்லாம்னு சொல்வே போலுக்கே!

பெரிய சிந்தனை என்று ஒன்றும் இல்லை. உண்மையில் அவர் மனதை அலைய விடாமல் அடக்க முயன்றார். அலையெழும்ப அனுமதிக்காமல் இருக்க முயன்றார். சிறு மூச்சுப் பயிற்சி என்ற அளவிலேயே இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தார்.

ஏனோ யோசனைகளை நீளவிட திடீரென்று பயப்பட்டாற் போல.

“இன்னும் தூங்கலியா நீங்க?” என்றபடியே மாடியேறி வந்தாள் ஈஸ்வரி. மேலே ஏறி வர அவள் சிரமப்பட்டாள். மூட்டுகளை தாஜா பண்ணி மூச்சு வாங்கி அவள் திண்டாடியபடியே பேசினாள்.

“தூக்கம் வரல.”

“என்னாச்சி?” என்று கிட்டே வந்தாள் கவலையுடன். அவர் கன்னத்தை அழுத்தி “என்னாச்சி?” என்றாள்.

“ஒண்ணில்ல. பள்ளிக்கூட ஞாபகங்கள். சேஷாத்ரி இல்ல? ட்ரிச்சி பெல். அவன் வந்திருந்தான்.”

“பிருந்தாவைப் பற்றிப் பேசினானாக்கும்?” என்று அசிரத்தையாய்க் கொட்டாவி விட்டாள். தூக்கிவாரிப் போட்டது. எத்தனை சுலபமாய் என்னை அடையாளங் கண்டுகொள்கிறாள், என்று பிரமித்தார். அப்படியே அவளை வாரியணைத்துக்கொண்டு நெற்றியில் முத்தம் இட்டார். “மதுரைல இருக்கா போல. ஃபோன் நம்பர் தந்தான் சேஷாத்ரி.”

“அப்ப இன்னிக்கு தூங்கப் போறதில்ல. நான்போய்ப் படுக்கறேன்...”

“உன்னையும் தூங்க விடப் போறதில்லை. ஐ நீட் யூ...” என்றார்.

ஈஸ்வரி சிரித்தபடி “பசங்க இன்னும் தூங்கல” என்கிறாள்.

••

அந்த வயதில் உணர்வுகள் சட்டுச் சட்டென்று நிறம் மாறுகின்றன. எதோவொரு வேகத்தில் கவிதை எனக் கிறுக்கியதும், அதை பிருந்தாவிடம் நீட்டியதும், திகைத்துப் போனாள் அவள். அழுகை வந்தது.

சிகெரெட் உரையில் - ஸ்டாசூடரி வார்னிங். புகை பிடிப்பது உடல் நலத்துக்குத் தீங்கானது, என அச்சிடுவது போல, காதல் கடிதத்திலும் அச்சிடச் சொல்லும் சமூகம் இது. ஆத்திரம் சாத்திரம் பார்க்கவில்லை.

“என்ன இது?”

“லெட்டர்.”

“போஸ்ட் பண்ணணுமா?”

அவன் அவளைப் பார்த்தான். “உனக்குதான் பிருந்தா.”

“எனக்கா?”

“ம்” என்னும்போது லேசாய் கன்னப் பகுதிகள் இழுத்துக் கொண்டாற் போலிருந்தது. “கவிதை எழுதுன்னியே...”

“அதுக்கு?” என்னுமுன் அவளுக்கு அழுகை வந்துவிட்டது. சட்டென அவன் எதிர்பாராமல் அவள் கண் சிவந்தது. கொந்தளித்தாற் போல நேரே தலைமையாசிரியர் அறைக்கு ஓடினாள். அவன் என்ன நடக்கிறது என உணருமுன் அவர்முன் போய் மூச்சிறைக்க நின்றாள் பிருந்தா.

தலைமையாசரியர், பிருந்தாவின் அப்பா, இவன் அப்பா.... என்று விஷயம் அலை அலையாய்ப் பெருகுகிறது. அடுத்தநாள் பள்ளி கழிவறை சுவரில் யாரோ அவனையும் பிருந்தாவையும் பற்றி கெட்ட வசனம் எழுதியிருந்தார்கள். கெட்ட விஷயங்களுக்கு என்று தனி நோட்டிஸ் போர்டு அது.

சட்டென உப்பு பெறாத விஷயம் உயிர் பெற்றது. வைக்கோல் படப்பில் தீ, என்கிறாற் போல.

அப்பா அவனை அதுவரை பெல்ட்டால் அடித்ததே இல்லை. அடித்துவிட்டு அவர் அழுதார். திகைப்பாய் இருந்தது. சேஷாத்ரி மாத்திரம் கூட இருந்தான். “இன்னும் இவன் என்னென்ன பண்ணினான்? உனக்கு எதுவும் தெரியாம இருக்காதே?” என்று அவனிடம் கேட்டார் அப்பா. நண்பர்கள் விலகிப் போனார்கள். உலகமே மாறிப் போயிற்று. வகுப்பில் அவன் பெஞ்சில் கூட உட்கார்ந்திருந்தவர்கள் விலகிக் கொண்டார்கள். அவன் கூட நட்பு பாராட்டுவது தடை செய்யப்பட்டது. அவன் கெட்டவன்.

கிரகண இருள். அக்கா பார்த்தாளே ஒரு பார்வை...

பைத்தியம் பிடித்தாற் போல கழிந்த நாட்கள்.

தமிழ் விடைத்தாள் தரும்போது ஆசிரியரின் கிண்டல். மற்ற பையன்கள் ஹோவென்று சிரித்தார்கள்.

முதலில் சேஷாத்ரியின் மொட்டைக் கடிதம் வந்திருந்தது. இப்போது இவன்... என அவள் கொதிப்பேறிப் போயிருந்தாள். சட்டென விஷயம் பெரிதாகி விட்டிருந்தது.

இதையே ராஜகோபால் அவளை நேரில் பார்த்து “நான் உன்னை லவ் பண்றேன்டி...” என்றிருந்தால் ஒருவேளை அவள் “போடா லூசு” என விட்டிருப்பாள்.

பிருந்தா வசிக்கும் தெருப் பக்கம் போவதை அவன் தவிர்த்தான். ஒருநாள் அவன் எதிர்பாராமல் அவள் எதிரே வந்தாள். அவனுக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை. தலையைக் குனிந்து கொண்டான். “சாரி” என்றாள் அவள் துணிச்சலாய்.

“போடி” என்றான் ஆத்திரமாய். “எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு...”

“வேணா என்னை ரெண்டு அடி அடிச்சிருடா...”

அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் தாண்டிப்போனான் அவன். செய்யிறதெல்லாம் செஞ்சாச்சி. இப்ப சாரி பூரின்னுக்கிட்டு.

வகுப்பில் பாடம் நடந்து கொண்டிருக்கும் போது தற்செயலாக பெண்கள் பக்கம் பார்த்தான். பிருந்தா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுக்கானால் ஆத்திரமான ஆத்திரம். அவன் கண்கள் ஜிவ்வென்று சிவந்து விட்டன. அதைப் பார்த்து அழுகை வந்தது அவளுக்கு.

என்னத்தையாவது குண்டக்க மண்டக்க பண்ணிற வேண்டியது. அப்பறம் பொம்பளைங்களுக்கு அழுகை ஒரு சௌகர்யம்.

தானறியாமல் மொட்டைமாடியில் இங்கும் அங்குமான நடை. யாரையோ அடிக்கப் போகிறாற் போல. நிழல்களுக்கு இவ்வளவு உக்கிரமா? ராஜகோபால் உணர்வுகளால் இயக்கப் பட்டுக் கொண்டிருந்தார்.

“என்ன இது?”

“லெட்டர்...” என்றாள் பிருந்தா.

“போஸ்ட் பண்ணணுமா?”

“லெட்டர் உனகுத்தான்டா.”

“இதை இப்பவே கொண்டுபோயி ஹெச் எம் கிட்ட குடுக்கறேன்.”

“செய்யி. சந்தோஷம்” என்றாள் பிருந்தா.

அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“நேராப் போயித் திரும்பினா ரெண்டாவது அறை...”

“என்னது?”

“ஹெச் எம்.”

அவளையே பார்த்தான். பெருமூச்சு விட்டான்.

“பொம்பளைங்க கெட்டவங்க.”

“நான் நல்லவள்.”

“நீ பொண்ணு இல்லியா?”

“போதும். தாங்க முடியல. எனக்கு மூச்சு முட்டறதுடா...” என்று  நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள்.

“நீ கெட்டவன் இல்ல. ஆனால் முட்டாள்...” என்றாள். சிரித்தாள்.

அவனுக்கும் சிரிப்பு வந்தது. சீ என்ன கேடு கெட்ட தனம். இவளோடு சேர்ந்து சிரிப்பதாவது.

“சாரி” என்றாள்.

அப்போது ஒரு அரசியல்வாதியின் வாசகம் ரொம்ப பிரபலம். அதையே சொன்னான் சற்று விரைப்புடன்.

“ஐம் நாட் எ லாரி ட்டு கேரி யுவர் சாரி....”

“அவர் சொன்ன இன்னொரு வாக்கியம் தெரியுமாடா உனக்கு?”

அவன் பதில் சொல்லவில்லை. அவனுக்குத் தெரியாது.

“பிகாஸ் சேர்ந்தாப் போல மூணு தடவை சேர்ந்து வர்றாப்ல ஒரு வாக்கியம். நோ சென்ட்டன்ஸ் வில் என்ட் வித் பிகாஸ் பிகாஸ் பிகாஸ் இஸ் எ கன்ஜங்ஷன்.”

புதுசா இருக்கே, என நினைத்துக் கொண்டான். நெப்போலியன் சொன்னது உனக்குத் தெரியுமாடி, என கேட்க நினைத்து... சட்டென அந்தக் கடிதத்தைச் சுருட்டி அவள் முகத்தில் எறிந்தான்.

“போ. போயி நீயே ஹெச் எம் கிட்ட குடு...” என்றான்.

“அவருக்குக் கல்யாணம் ஆயிட்டதே...” என புன்னகைத்தாள். சட்டென அவன் சிரித்து விடுவான் என அவள் எதிர்பார்த்தாள். “ஐயோ என்னை விட்டுறேன்” என குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தான் அவன். பதறிப் போனாள். “என்னடா...” என அவன் பக்கம் குனிந்தாள் அவன் தோளைத் தொட்டபடியே.

சட்டென விலகித் துள்ளினான். “போ. போயிரு. என்னை நிம்மதியா விடு. இனியாவது நான் நிம்மதியா இருக்கேன்...”

திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே போனாள்.

அதையும் அந்த யாரோ பார்த்திருக்க வேண்டும்.

மறுநாள் பள்ளிக் கழிவறை சிறப்பு அறிவிப்புப் பலகையில் செய்தி. ராஜகோபால் பிருந்தா ஜல்சா!

மொட்டை மாடியில் சட்டென நடை நின்றது. ராஜகோபால் அழ ஆரம்பித்தார். இன்று இரவு தூங்க முடியுமா தெரியவில்லை. மன எரிமலை விழித்துக் கொண்டாற் போலிருந்தது.

இப்போது பிருந்தாவின் முறை. அடித்தது அவள் தந்தை.

“ஐம் சாரி சாரி...” என்று குலுங்குகிறார் ராஜகோபால் மனம் விட்டு. இங்கே இப்போது இத்தனை வருடம் கழித்து அந்த அறைகள்... அவள் வாங்கிய அறைகள்... அவருக்கு வலிக்கின்றன.

மனதில் சேஷாத்ரியின் குரல். உன் பிருந்தாவைப் பார்த்தேன்டா. அன்னிக்கு உன்னை வாத்தியார் கிட்ட மாட்டிவிட்டதுக்கு வருத்தப் பட்டா, இப்ப... இத்தனைநாள் கழிச்சி...

இப்ப... இத்தனைநாள் கழிச்சி... நான் அவளை நினைத்து அழவில்லையா? அதுபோல!

ஹா. இளமையின் அசட்டு வீம்புகளில் எத்தனை இழந்திருக்கிறேன். உன்னையே இழந்திருக்கிறேன் பிருந்தா.

ஒரு விலுக். ரெட்டைச் சடையைப் பின்தள்ளி பிருந்தா பேசுகிறாள். “நான் கெட்டவள்...” இல்லை, என்று தலையாட்டி மறுக்கிறார். பிறகு சிரிக்கிறார். “நாம ரெண்டு பேருமே கெட்டவர்கள்!”

உன்னைப் பார்க்கணும் பிருந்தா.

நானும்.

ஒருவிநாடி நிற்கிறார். எதற்கோ மேலே பார்க்கிறார். யானையின் அடிவயிற்றைப் பார்க்கிறாற் போல இருந்தது. இருளாய்க் கிடந்தது வானம்.

“சாரி” என்றார் பிருந்தாவை வழிமறித்து.

“இத ஹாஃப் சாரி” என்கிறாள் பிருந்தா.

சிரித்தான். அவளும் சிரித்தாள். பிறகு கேட்டாள். “ஜல்சான்னா என்னடா?”

“தெர்ல.... அப்டிதான் கெட்ட புக்ல வரும்.”

“டேய். அதெல்லாம் படிச்சிருக்கியா?”

“வேணுமா?” என்றான். “ச்சீ” என்றாள். சிரித்தார்கள்.

“நான் நல்லவன்.”

“எங்கப்பாவும் உங்கப்பாவும் கெட்டவங்க” என்றாள் பிருந்தா.

“ஏ அப்பா” என்றான் இரண்டு கையும் விரித்து. “உலகமே கெட்டது.”

“நாளைய தலைப்புச் செய்திகளில் சந்திப்போம்” என்றாள் பிருந்தா.

---

வெள்ளிதோறும் தொடர்கிறேன்

storysankar@gmail.com

mob 91 97899 87842 / 91 94450 16842

 

 

 

  

Comments

Popular posts from this blog